Friday, October 29, 2010

மது மாது சூது

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்க்கை சீரழிந்து போய்க் கொண்டுருப்பதற்கு இந்த மூன்றையும் தான் உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் இன்று சூது எந்த இடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை என்று கொண்டு வந்த பிறகு கிராமங்களைச் சார்ந்த சிறு நகரங்களில் மட்டும் இன்றும் கூட மறைமுகமாக விற்றுக் கொண்டுருக்கிறார்கள். 

தொடக்கத்தில் கிராமப்புறங்களில் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி பெரிய மனிதர்கள் என்ற கௌரவத்தோடு குஷலாக பணம் வைத்து சீட்டாடிக் கொண்டுருந்தார்கள். இன்று எந்த இடத்திலும் கிளப்புமில்லை.  ஆட்டம் காட்டிய பெரிசுகளுமில்லை.. 


இன்று பெரிய நகரங்களில் கிளப் என்பது மனமகிழ் மன்றமாக மாறி நடுத்தர மக்களின் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டுருக்கிறது. அதுவும் பெயர் மாற்றமாகி காபரே டான்ஸ் என்கிற ரீதியில் வளர்ந்துள்ளது. இதுவே குறிப்பிட்ட விசேடங்களை குறி வைத்து உயர்தர நட்சத்திர விடுதி கல்லா கட்டும் கலாச்சார நடனம் வரைக்குமாய் திமிலோகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிறிய விடுதிகளில் நடந்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்.  அதுவே உயர்தர விடுதிகளிலும், அரசியல் அதிகாரவர்க்கத்தின் பினாமிகள் நடத்தும் இடங்களில் நடந்தால் பெரிய தலைகள் கூடுமிடமாக விசேஷ அந்தஸ்த்தும் பெற்று விடுகிறது. குறிப்பாக அரசியல் விளையாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கும் பவர் புரோக்கர்கள் கூடும் இடமாக இருப்பதால் சீட்டு என்பது மறைமுகமாகவும் விபச்சாரம் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.

தாசி குலம், தேவரடியார், பொட்டு கட்டுதல் என்று ஒவ்வொரு காலமாற்றத்திலும் மாறி மாறி இன்று அங்கிகரிக்கப்பட்ட விபச்சாரம் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. நுகர்வோர் கலாச்சாரத்தின் இதுவுமொரு அங்கமாகி விட்டது.  "எதுவும் தவறில்லை"  என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் இன்று காசு இருந்தால் எல்லாமே எளிது என்ற கலாச்சார மாற்றத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் தமிழர்களின் வாழ்க்கையில் பொதுப்படையான பெண்கள் பழககமென்பது எப்போதுமே எட்டாக்கனி.

கள்ளக்காதல், முறையற்ற காதல், பொருந்தாக் காதல், உணராத காதல் என்று பிரிந்து இன்று பத்தாவது படிக்கும் மாணவர்கள் கூட இந்த காதலைக்குறித்தே அதிகம் யோசிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டுருக்கிறார்கள். எல்லாவிதமான ஊடகங்களும் தங்களது சேவையை சிறப்பான முறையில் செய்து கொண்டுருக்கிறது. காதலைப்பற்றி தெரியாமலும், கடைசி வரைக்கும் காமத்தையும் புரிந்து கொள்ளா முடியாமலும் பெரும்பாலானவர்கள் தங்கள் காதல் எண்ணங்களை பெருமூச்சில் கரைத்து விடுகிறார்கள். 

சமகாலத்தில் இந்த மாது விவகாரம் பண்டமாற்று முறை போல் இயல்பாக மாறிவிடும் போலிருக்கு. வாழ்க்கையை போராட்டமாக கடனே என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு பெரிதான ஈடுபாடு இல்லாமல் கிடைக்காத வாய்ப்பை நினைத்துக் கொண்டு திரை அரங்க இருட்டுக்குள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் என்றுமே மேல்தட்டு மக்களுக்கு இதுவொரு இயல்பான கலாச்சாரம். 

ஆனால் மூவாயிரம் வருட மூத்த குடி தமிழர்களின் வாழ்க்கையில் எப்போதும் போல இந்த குடி மட்டும் முதல் இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டுருக்கிறது.  சோமபானம் என்பதில் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் மாறி வந்துள்ளது. கள்ளச்சாராயம்,  நல்ல சாராயம் என்று இயற்கையான பெயரில் அழைக்கப்படட இந்த குடிபானத்துக்கு இன்று எத்தனை எத்தனை பெயர்கள்.? 

வெவ்வேறு நிறுவன முத்திரையுடன் அரசாங்க முத்திரையும் சேர்ந்து இன்று ஒரு தலைமுறையையே மறைமுகமாக அழிவுப் பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கிறது. 

அரசியல்வாதிகள் முதல் திடீர் பணக்காரர்கள் வரைக்கும் உள்ள  சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் ஆயுத தரகர்களுக்கு அடுத்து இந்த மது தயாரிப்பாளர்கள் தான் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.  ஆட்சியை விலைக்கு வாங்குவதும், மாற்றுவதும் என்று ஜனநாயகவாதிகளையும் பணநாயாக மாற்றுபவர்களாக இருக்கிறார்கள். எந்த அரசியல் தலைகளும் இவர்களை பகைத்துக் கொள்வதுமில்லை. 

என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்னால் சாராயம் காய்ச்சுவது தான் முக்கிய தொழிலாக இருந்தது.  ஒவ்வொரு குடும்பத்தினரும் இதை குடிசைத் தொழில் போலவே நடத்திக் கொண்டுருந்தார்கள். முன்னால் காவல் துறை அதிகாரி தேவாரம் போட்ட அதிரடி ஆட்டத்தில் அத்தனையும் காணாமல் போய்விட்டது.  

சைக்கிள் டயர் தொடங்கி, வயிற்றுக்குள் பாட்டிலை வைத்துக் கொண்டு  கடத்துவதை வியப்புடன் பார்த்து இருக்கின்றேன். அதிகாலையில் பல் விளக்காமல் நடந்தே சென்று அடித்து விட்டு உருண்டு கிடந்தவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. "இவன் சாரயம் குடிக்கிறவன்", "இவன் அப்பா மகா குடிகாரர்".  என்று பெண கொடுக்க மறுத்த. சமூக அமைப்பு இன்று மாறிவிட்டது. 

" மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் " என்கிற ரீதியில் மது என்பதை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றி விட்டனர்.  தொடக்கத்தில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒளிந்து கொண்டு புகைத்தனர். ஆனால் இன்று?  

லஞ்சம் வாங்காதவர் பிழைக்கத் தெரியாதவன் போலவே குடிப் பழக்கம் இல்லாதவர்கள் அரசியல், வியாபார, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக தெரிகின்றனர்.  

இன்று அந்த சிறிய கிராமத்திற்குள் மூன்று டாஸ்மார்க் கடைகள் இருக்கின்றது. தினந்தோறும் கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.  அருகருகே வீடுகள். எவருக்கும் அச்சமில்லை. குடிமகன்களுக்கு தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்தும் பயமுமில்லை. 


அதே கிராமத்தில் விற்கப்படும் கள் என்பதற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதான மரியாதை இல்லை.  தொடக்கத்தில் கள் குடிப்பதை நாட்டு மருந்து போலவே பயன் படுத்திக் கொண்டுருந்தனர். ஆனால் அரசாங்கம் அதற்கும் பெரிய ஆப்பு வைத்து விட்ட காரணத்தால் அத்தனை மரங்களும் அனாதையாய் நிற்கிறது.  வானம் பார்த்த பூமியில் வளரும் மரம் செடிகள் கூட ஏக்கத்துடன் மல்லாந்து பார்க்கும் மனிதர்களைப் போலவே தான் இருக்கின்றது.

ஆனால் இன்று டாஸ்மார்க் என்ற கலாச்சாரம் எங்கெங்கும் வியாபித்து குறிப்பாக நகர்புறங்களில் தொழிலாளர், பணியாளர், முதலாளி என்ற பாரபட்சம் இல்லாமல் பாடைக்கு இந்த உடம்பை கொண்டு போக மறைமுக வழிகாட்டியாய் இருக்கிறது. அரசு அங்கீகாரம், ஆள்வோர்களின் உத்தரவாதம் என்று முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இந்த சாரய வியாபாரம் மாறிவிட்டது, 

வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பயந்து கொள்ளும் ஒவ்வொரு அரசாங்கமும் இறுதியில் இத்ந குடிமகன்களை நம்பித்தான் தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை எந்த பெரிய தலைகளும் பொருட்படுத்துவதே இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்தி மறந்து விடுகின்றது. இதனாலேயே இன்று அரசாங்கமே குடிமகன்களுக்கு விரைவில் சொர்க்கத்தை சென்றடையும் வழியையும் காட்டிக் கொண்டுருக்கிறது. ஆனால் ஒவ்வொரு குடிமகன்களின் குடும்பம் மட்டும் நிரந்தர நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது

38 comments:

Unknown said...

//அதே கிராமத்தில் விற்கப்படும் கள் என்பதற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதான மரியாதை இல்லை. தொடக்கத்தில் கள் குடிப்பதை நாட்டு மருந்து போலவே பயன் படுத்திக் கொண்டுருந்தனர். ஆனால் அரசாங்கம் அதற்கும் பெரிய ஆப்பு வைத்து விட்ட காரணத்தால் அத்தனை மரங்களும் அனாதையாய் நிற்கிறது. வானம் பார்த்த பூமியில் வளரும் மரம் செடிகள் கூட ஏக்கத்துடன் மல்லாந்து பார்க்கும் மனிதர்களைப் போலவே தான் இருக்கின்றது.//

இதப் பத்தி இப்பத்தான் ஒரு பதிவு போட்டேன்!
http://thanjavuraan.blogspot.com/2010/10/blog-post_29.html

இந்த டாஸ்மாக் கருமங்களுக்குக் கள் எவ்வளவோ மேல்..

sivakumar said...

சமூகப் பொறுப்புடன் ஒரு பதிவு ! புகை, மது, மாது என்பதெல்லாம் "கெட்டபழக்கம்" என்ற நிலை போய் பொதுவான விடயமாகிவிட்டது. இப்பழக்கங்கள் இல்லாதவர்கள் என்று இகழப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். மக்களை மப்பில் வைத்திருப்பதுதான் அரசாங்கத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கிறது.

THOPPITHOPPI said...

எப்பா எப்படித்தான் இவ்வளவு பெரிய பதிவு போடுரின்களோ அதுக்காகவே ஒரு ஒட்டு உங்களுக்கு நண்பரே

Thenammai Lakshmanan said...

உண்மை ஜோதிஜி.. நரகத்தைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது பெண்கள் வாழ்வில்..

Unknown said...

இந்த டாஸ்மாக் கலாச்சாரம் தமிழ் பிடித்த பெரும் பிணி

Unknown said...

இந்த டாஸ்மாக் கலாச்சாரம் தமிழகத்தை பிடித்த பெரும் பிணி

தமிழ் உதயம் said...

மது, மாது, சூது. காலமாற்றத்திற்கேற்ப எல்லாமே ஏதாவதொரு வடிவில் வலம் வந்து கொண்டு தான் உள்ளது. இதை வென்றவர் வாழ்க்கையை வெல்கிறார்.

Anonymous said...

இந்த டாஸ்மாக் கருமங்களுக்குக் கள் எவ்வளவோ மேல்..//ஆமண்ணே -;)) ரெண்டு பானை குடிச்சா கும்முன்னு இருக்கும்..டூப்ளிகேட் குடிச்சிநாக்கு செத்து போச்சு குடலும் செத்து போச்சு-;))

அன்பரசன் said...

சமூக அக்கறையுடன் ஒரு நல்ல பதிவு நண்பரே...

தமிழ் அஞ்சல் said...

ம்...காலம் செய்த கோலம்..

நசரேயன் said...

கள்ளு கடைய திறக்க சொல்லணும்

முகுந்த்; Amma said...

நானும் இதனை பற்றி ஒரு இடுகை எழுதி இருக்கிறேன் அய்யா, ஆனாலும், என்ன பயன் இருக்க போகிறது. பெரிய பெரிய எழுத்தாளர்கள் சிலரே, தண்ணி அடிப்பதை பற்றி சிலாகித்து எழுதுகிறார்கள். வருத்தம் தரும் செய்தி. இடுகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

சமூக அக்கறையுடன் ஒரு பதிவு. என்ன செய்ய கர்நாடகாவோட காவிரி... மலையாளத்தானோட முல்லை... என்றால் குடும்ப உறுப்பினருக்கு பதவி வாங்க அல்லாடும் அரசியல்... இப்ப இதெல்லாம் பெரிய விசயமில்லை... இப்ப தீபாவளிக்கு டாஸ்மாக்ல விற்பனை உச்சவரம்ப நிர்ணயம் பண்ணியிருக்கு அரசு... எப்படியிருக்கு நம்ம நாடு... அரசு கூட குடி மக்களை மட்டுமே நினைக்கிறது.

லெமூரியன்... said...

சொல்வதெல்லாம் உண்மை நண்பா.
குடிப்பது இப்பொழுது ஒரு சமூக அடையாளமாக மாறியிருக்கிறது...
ஆனால் மேல் தட்டு வர்க்கம் எல்லாம் குடியை குடியாக மட்டுமே பார்க்கிறார்கள்...
ஆனால் தான் கெட்டதலாமல் தன் குடியையும் சேர்த்து கெடுத்து கொள்கிறது அடித் தட்டு வர்க்கம்.
மக்கள் போதையில் இருக்கும் வரைதான் ஜனநாயகம் தழைத்தோங்கும்..
போதை தெளிந்தால் புரட்சி துவங்கும்...
அரசாங்கங்கள் வெறுக்கும் வார்த்தை புரட்சி..
:)

Chitra said...

வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பயந்து கொள்ளும் ஒவ்வொரு அரசாங்கமும் இறுதியில் இத்ந குடிமகன்களை நம்பித்தான் தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை எந்த பெரிய தலைகளும் பொருட்படுத்துவதே இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்தி மறந்து விடுகின்றது. இதனாலேயே இன்று அரசாங்கமே குடிமகன்களுக்கு விரைவில் சொர்க்கத்தை சென்றடையும் வழியையும் காட்டிக் கொண்டுருக்கிறது. ஆனால் ஒவ்வொரு குடிமகன்களின் குடும்பம் மட்டும் நிரந்தர நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது


.....நிறைய வேதனையும் கோபமும் ஆதங்கமும் வருகிறது.... ஆனால், அதனால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. :-(

ரோஸ்விக் said...

நல்லெண்ண நோக்கில் சமூகத்திற்கான கட்டுரை இது. வாழ்த்துகள் அண்ணே!

ரோஸ்விக் said...

ஆமா எல்லாம் "து" -னு முடியுதே "த்தூ"-ன்னு துப்புறதுக்கா? :-)

மொக்கராசா said...

இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 350 கோடி என்று தமிழ் நாடு கவர்மெண்ட் இலக்கு நிர்ணயம் செய்யதுள்ளது.

நாம் பிறந்த தாய் மண்ணிற்க்கு சேவை செய்ய அனைவரும் டாஸ்மாக் போவோம் ,குடித்து மகிழ்வோம்.

இது குடிமக்களின் கடமை.

மாப்பு பார்த்தியா...தமிழ் நாடு 3 வது இடமாம்,
கொய்யாலுலுலு எங்க் கிட்டயேவா , இந்த பொங்கலுக்குள்ள எப்படியும் முத இடத்தை பிடிக்க வச்சுபுடம்னும்டொய்ய்ய்.......

a said...

//
Chitra said...
.....நிறைய வேதனையும் கோபமும் ஆதங்கமும் வருகிறது.... ஆனால், அதனால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. :-(
//
வழி மொழிகிறேன்............

vasan said...

லாட்ட‌ரி சீட்டு கொண்டுவந்த‌து திமுக‌ நிறுவ‌னர் அண்ணாதுரை. (விழுந்தால் உங்க‌ளுக்கு, விழா விட்டால் நாட்டுக்கு), ம‌துக்க‌டையை முத‌ன் முத‌லாய் த‌மிழ‌கத்தில் திற‌ந்து வைத்த‌வ‌ர் ஐந்துமுறை முத‌ல்வ‌ரான முக‌. எய்த‌வ‌னை விட்டு, விட்டு அம்புக‌ளையும், அத‌னால் காய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிற‌து, தமிழ்ச் ச‌முதாய‌ம்.

karthikkumar said...

மொக்கராசா said...
இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 350 கோடி என்று தமிழ் நாடு கவர்மெண்ட் இலக்கு நிர்ணயம் செய்யதுள்ளது.

நாம் பிறந்த தாய் மண்ணிற்க்கு சேவை செய்ய அனைவரும் டாஸ்மாக் போவோம் ,குடித்து மகிழ்வோம்.

இது குடிமக்களின் கடமை.

மாப்பு பார்த்தியா...தமிழ் நாடு 3 வது இடமாம்,
கொய்யாலுலுலு எங்க் கிட்டயேவா , இந்த பொங்கலுக்குள்ள எப்படியும் முத இடத்தை பிடிக்க வச்சுபுடம்னும்டொய்ய்ய்......///
விரைவிலேயே முதல் இடத்திற்கு வந்து விடுவோம்

vinthaimanithan said...

நல்லாத்தான் இருக்கு... அரசாங்கம் பேசாம கள்ளுக்கடைகளுக்கு அனுமதி கொடுக்கலாம். ஏன்னா ஒரு சமூகம் எதிலிருந்து விலக்கி வைக்கப் படுகின்றதோ, அதனாலேயே கிறுக்குப் பிடித்து மனநோய்க்கூறு கொண்டு அலையும்.

ஆனால் அரசுக்கும் அரசியல்வியாதிகளுக்கும் மதுபான முதலாளிகள் நிச்சயம் தேவை. என்ன செய்வது?

சோழன் said...

கள்ளை மது என்ற பொருளில் எழுத்தாதீர்கள். ஒரு வயது குழந்தைக்கு கூட கொடுப்பார்கள் .கள்ளுக்கடை மறியல்/கள்ளு தடை சட்டம் எல்லாம் அதிகார வர்க்கத்தின் குழு விளம்பரமாகவே நாம் பார்க்கவேண்டும் .என்னை பொறுத்தவரை ஆவின் பலகங்களில் தரப்படுத்தப் பட்ட கள் விற்பனை செய்யப்பட வேண்டிய ஒன்று .
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .
கடந்த முப்பது வருடங்களில் அரசுத்தடையால் எத்தனை கோடி நட்டம் ? அத்தனை இனக்குழுக்கள் புலம் பெயர்ந்து நாதியற்று போகின்றது தெரியுமா ?

ஜோதிஜி said...

தஞ்சாவூர்காரன் மிக அற்புதமாக தெளிவாக கள் குறித்து எழுதியிருக்கீங்க.

தமிழ் வினை ஆச்சரியப்படுத்திட்டீங்க. உங்கள் இடுகை போன்றே பல இடுகைகள் சரியான முறையில் வெளியே தெரியாமல் இருக்குது. நண்பர்கள் போன்ற பகுதியை உருவாக்குங்க.

அதென்ன நண்பா தொப்பிதொப்பி

தேனம்மை பாதிக்கபடுவது இறுதியில் பெண்கள் தான் அதிகம்.

நந்தா இது ஒரு நிரந்தர பணி போலவே மக்கள் காலை முதல் மாலை வரைக்கும் ரவுண்டு கட்டி அடிச்சுக்கிட்டு இருக்காங்க.

தமிழ் உதயம். நான் பார்த்தவரைக்கும் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

ஜோதிஜி said...

சதிஷ் பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இந்த தொழிலில் நீங்கள் சொல்வது போல போலிகள் தான் மிகஅதிகமாக இருக்கிறது.

அன்பரசன் தொடர் வருகைக்கு நன்றி.

திருப்பூர் மணி உங்கள் அக்கறை வியக்க வைத்தது.

நாசரேய்ன் முகுந்த் அம்மா வணக்கம் கவிஞரே. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

குமார், அரசைப் பொறுத்தவரையிலும் மக்கள் என்னவானால் என்ன? கல்லா நிறைந்தால் போதும் என்று யோசிக்கும் போலிருக்கு.

ஜோதிஜி said...

அட லெமூரியன்

கிச்சு கிச்சு மூட்டாதீங்க.

தொ காட்சி டாஸ்மார்க் இலவசம்

புரட்சியாய் புரட்சி. சும்மாயிருங்க பாஸ்

ஜோதிஜி said...

சித்ரா யோகேஷ் உண்மையும் தானே,

ரோஸ்விக் தூ தூ உங்கள் விமர்சனம் ரொம்பவே ஆச்சிரியப்பட யோசிக்கவும் வைத்தது. கலக்கிட்டீங்க நண்பா. பேசலாம்.

உண்மைதான் சோழன். முதல் விமர்சனத்திற்கு நன்றி.

ராசா மல்லையா பற்றி எழுதலாமே?

கார்த்திக்குமார் நீங்க மொக்க ராசா சொல்வது சிரிப்பை வரவழைத்தாலும் உண்மையாக மாறி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாசன் சவுக்கடி. நல்ல தெளிவான பார்வை.

Bibiliobibuli said...

மது, மாது, சூது என்று ஏதோ எதுகை மோனையாக நீண்டநாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சரிதான். இதெல்லாம் இல்லக்கியங்களிளிருந்து தொடரும் கதைகள் தானே. ஆனாலும் சமூகத்தில் பெண்ணுக்குரிய இடமும், வரையறையும் பொருளியல் வாழ்வாதாரத்திற்கேற்ப காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. போதை என்றவுடன் பெண் கூட குறியீடாகப் பார்க்கப்படும் அவலமும், அநாகரீகமும் மட்டும் மாறவில்லை.

மது, சிகரெட், கடவுள் இது மூன்றும் அரசுக்கு வருமானம் பெற்றுத்தரும் வரையில் அது பற்றிய கற்பிதங்களை கூட மாற்றமுடியாது. பிறகெங்கே ஒழிப்பது.

தனிமனித சிந்தனைகளை மழுங்கடிக்கும் இதுபோன்ற விடயங்களை, சிதனைகளை நாங்களாகவே மாற்றிக்கொண்டால் தான் என்ன, யோசிக்கலாமே!!!!

(ஸ்ஸ்ஸ்ஸ்..... நாங்களும் பதிவராயிட்டதால இப்போ ரொம்ப பிசியாயிட்டமில்ல.... சரி....சரி....சரி... அரைகுறையாய் முக்காலே அரைக்கால் பதிவிற்கு இந்த அலட்டலான்னு நீங்க சிரிச்சு அதன் அதிர்வலைகள் கனடா வரை அதிருதில்ல).

ப.கந்தசாமி said...

" மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் "

இல்லைன்னா மாமனாருக்கு யாருங்க துணை?

தாராபுரத்தான் said...

கிராமங்களில்..பல குடும்பங்ளில் பெண்கள் ஒவ்வொரு இரவையும் போராடி கடத்துகிறார்கள்..

Unknown said...

டாஸ்மாக் சரக்குகள் எல்லாமே வெறும் ஆல்கஹாலும், தண்ணீரும் கலந்த கலவைதான், இதனைகுடித்தால் கண்டிப்பாக சீக்கிரம் பரலோகம்தான். கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தராததுக்கு காரணம் அதனால் கிடைக்கும் சொற்ப வரியும். அது வந்தால் டாஸ்மாக் விற்பனை பாதிக்கபடும் என்பதாலும் .

ஜோதிஜி said...

ரதி போகிற போக்கை பார்த்தால் நாங்கெல்லாம் பின்னங்கால் பிடறிதெரிக்க ஓட வைத்து விடுவீர்கள் போலிருக்கும். உங்கள் தாக்கம் உருவாக்கப்போகும் வரிகளை வாசிக்க ஆசையாய் இருக்கின்றேன்.

இல்லைங்க கந்தசாமி ஐயா, இப்ப உள்ள கலாச்சாரமே வெளியில் குடித்து மல்லாந்து கிடக்காமலிருக்க எம் புருஷனை வீட்டுக்குள்ள தண்ணி அடிக்க அனுமதிக்கின்றேன் என்று மனைவிமார்கள் சொல்லும் அளவிற்கு நவநாகரிக கலாச்சாரத்தில் நாம் முன்னேறி போய்க்கொண்டுருக்கின்றோம்.

உண்மைதான் தாராபுரத்தான் ஐயா. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்பது வளைந்து போன தட்டு போலத்தான் ஆகிக் கொண்டுருக்கின்றது.

உண்மைதான் செந்தில். ஏறக்குறைய சர்பத் போலத்தான் இருக்கிறது என்கிறார்கள். வாழ்க மிடாஸ். வளர்க் சசிகலா கூட்டணி.

ஜெயந்தி said...

இன்றைய சூழ்நிலையை அருமையா சொல்லியிருக்கீங்க. இந்த மது நம்மள எங்க கொண்டுபோய் சேர்க்கும் நினைத்தாலே பயமாத்தான் இருக்கு. நம் அடுத்த சந்ததிகள் இதன் பயனை அனுபவிப்பார்கள்.

ஜோதிஜி said...

நம் அடுத்த சந்ததிகள் இதன் பயனை அனுபவிப்பார்கள்.

தெளிவாய் சொல்லியுள்ள ஜெயந்தி உங்களுக்கு வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

பின்னூட்டம் ஒன்னு அனுப்பினேன். வந்ததா?

Unknown said...

டாஸ்மாக் சரக்குகள் எல்லாமே வெறும் ஆல்கஹாலும், தண்ணீரும் கலந்த கலவைதான், இதனைகுடித்தால் கண்டிப்பாக சீக்கிரம் பரலோகம்தான். கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தராததுக்கு காரணம் அதனால் கிடைக்கும் சொற்ப வரியும். அது வந்தால் டாஸ்மாக் விற்பனை பாதிக்கபடும் என்பதாலும் .

Unknown said...

இந்த டாஸ்மாக் கலாச்சாரம் தமிழ் பிடித்த பெரும் பிணி

தெம்மாங்குப் பாட்டு....!! said...

மூன்று வருடங்களுக்கு முந்தையப் பதிவு.. இப்போதுதான் படிக்கிறேன். இப்போது நாகரிகம் மிக வளர்ந்து, எனது பெண் குடிப்பவர்.. வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அமையவில்லை என்கிறார்கள் ஐயா..!! பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக செல்கிறது..!!