Monday, September 13, 2010

அதிசியம் ஆனால் உண்மை -- நியூசிலாந்து

திருமதி துளசிகோபால் எழுதிய நியூசிலாந்து புத்தக விமர்சனம் இரண்டாவது பகுதி....

இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமுள்ள ஒரு தேசமென்றால் இந்தியாவைத் தவிர வேறு எதையும் உதாரணம் காட்ட முடியாது.  மனித வளமும் இயற்கை வளமும் தேசமெங்கும் நிறைந்து இருந்தாலும் மிகக் குறைவான சதவிகிதத்தில் இருக்கும் அரசியல் வியாதிகளிடம் சிக்கி சின்னா பின்னாபட்டுக்கொண்டுப்பது நம் நாட்டைத்தவிர வேறு எங்கும் உண்டா?  

ஆப்பிரிக்கா நாடுகளின் கோரங்கள் வெளியே எளிதாக தெரிகின்றது.  ஆனால்
இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்ற போர்வையில் எதுவும் அவ்வளவு சீக்கீரம் வெளியே தெரியாமல் விளம்பரங்களும் ஊடகங்களும் நம்மை மயக்கத்தில் வைத்துள்ளது. ஜனநாயகம் என்ற அமைப்பே மெதுவாக செல்லரித்துக் கொண்டுருப்பது அத்தனை சீக்கீரம் வெளியே தெரிவதில்லை. 

இப்போது வாங்கும் சக்தி அனைவரிடத்திலும் வந்து விட்டது என்ற நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.  இன்றும் தினமும் மொத்த ஜனத்தொகையில் 60  சதவிகித மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்க கஷ்டப்பட்டுக் கொண்டுருக்கும் அவல நிலையை நாம் அணைவருமே எளிதாக மறந்து  இந்தியா ஒளிர்கிறது வளர்கிறது என்று வியாதிகள் காட்டும் பம்மாத்து விளம்பரங்களைக் கண்டு வல்லரசு கனவு கண்டு கொண்டுருக்கிறோம்.

திருவாளர் சகிப்புத்தன்மை அதிகம் உள்ள மக்களைப் பெற்றது தான் இந்த இந்தியா.  அதனால் தான் இந்த நாடு இன்று வரைக்கும் இயல்பான பாதையில் போய்க் கொண்டுருக்கிறது. எந்த போராட்டங்களும் தேவையில்லை.  நம்ம .........................கழுவிக்கிட்டா போதும்ங்ற மாதிரி ஒவ்வொருவரும் நகர்ந்து போய்க் கிட்டே இருக்கோம். 

ஒவ்வொரு நாட்டிலும் கேள்விக்குறி, கேலிக்குறி மற்றும் ஆச்சரியக்குறிகள் என்று எத்தனையோ குறிகள் இருக்கும். வெகு அருகில் இருக்கும் மலேசியா சிங்கப்பூர் இன்றுவரைக்கும் நமக்கு ஆச்சரியக்குறிகள்.  

ஆனால் துளசி கோபால் எழுதியுள்ள நியூசிலாந்து என்ற நாட்டைப் பற்றி ஒவ்வொன்றாக படிக்கப் படிக்க நூறாயிரம் ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத இவரின் பயணக்கட்டுரைகள் அதிகம் அடங்கிய இவரின் வலைப்பூவைப் போலவே இவரின் வெளித்தொடர்பின் வட்டமும் அதிகம்.  ஆனால் எதுவும் வெளியே தெரியாது.  எழுத்தாளர் சுஜாதா கூட இவரின் எழுத்து நடையை சிலாகித்துப் பேசியுள்ளார். 

ஆச்சரியமான நியூசிலாந்து பற்றி சில விசயங்களைப் பார்க்கலாம். ஓட்டுப் போடுவதும், அதன் மூலம் தேர்ந்தெடுப்பதும் தேர்தலுக்கு மட்டுமல்ல.  கடிகாரத்தின் முள்ளை நடக்கும் பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ஒரு மணிநேரம் அதிகமாக மாற்றி வைத்துக் கொள்வது தொடங்கி பள்ளிக்கூட நடைமுறை மாற்றங்கள் வரைக்கும் அத்தனை இடங்களிலும் இந்த பொது கருத்துக் கணிப்பு மூலம் தான் செயல்படுகிறார்கள்.

தனிமனித உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கின்றார்களோ அந்த அளவிற்கு சீதோஷ்ண பருவ மாற்றத்தால் கரையில் ஒதுங்கும் மீன்களை பாதுகாப்புது வரைக்கும் அநியாயத்திற்கு பல இன்ப அதிர்ச்சிகளை படிக்கும் போது நெஞ்சம் தாங்குமா? என்று பயமாயிருக்கு. 

அரசாங்கமும் சரி தனி மனிதர்களும் சரி அநியாயத்திற்கு நல்ல விதமாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். முதல்வன் படத்தில் வந்த ஒரு நாள் முதல்வன் போல் இங்குள்ள பள்ளிக்கூடத்தில் மாணவர்களை ஒரு நாள் மேயராக இருக்கச்செய்வது அடுத்த ஆச்சரியம்.

 இவ்வளவு தூரம் போய்விட்டோம்.  நம்ம தமிழ் சாப்பாடு கிடைக்குமா? என்கிற அச்சம்படத் தேவையே இல்லை.  வட தென் இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்த்து விட்டு இரண்டு கைகளையும் தூக்கி சேவித்துவிட்டு வர எல்லா
கோவில்களும் இங்குண்டு. 


யோவ் உன் சாப்பாட்டு புராணத்தை நிப்பாடு?  போனா சுற்றிப் பார்க்க என்னப்பா இருக்கு? என்று நீங்க கேட்டால் போனால் திரும்பி வரமுடியாத அளவிற்கு எங்கெங்கு காணினும் இன்பமடாங்ற மாதிரி நியூசிலாந்து நாடு முழுக்க கண்களே பச்சையாக மாறிவிடுமோ என்கிற அளவிற்குத்தான் இந்த நாடே சுற்றுலா பிரியர்களுக்கு சொர்க்கமாயிருக்கு,

வேல் வாட்ச் என்கிற திமிங்கில கடல்வாழ் உயிர் பூங்கா இருக்கு.  ஸீல் காலனிங்ற இட்த்துக்கு போன காட்டுக்குள்ளே சென்று சிங்கங்களை ராவா பார்க்கிற அனுபவமும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஓமரு என்கிற பகுதியில் பெங்குவின் பறவைகளையும் பார்க்கலாம். 

அதுகளின் நடனங்களையும் பார்த்துவிட்டு நியூசிலாந்து மக்கள் அக்கறையாக பறவைகளுக்கு கடற்கரை ஓரமாக செய்து வைத்துள்ள கூடுகளைப் பார்க்கும் போது  உங்களுக்கு திரும்பி வர மனசு இருக்குமாங்றது சந்தேகம் தான். 

இதையெல்லாம் விட இந்த நாட்டின் நிர்வாக பரிபாலணத்திற்கு வேறொரு வகையில் சிறப்பு உண்டு. அந்த கூடுதல் சிறப்பு இங்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மூன்று முறை மேயராக இருந்தது.  அதைவிட அக்கிரமம் " நான் மூணு முறை இருந்துட்டேன். என்னை இனி தொந்தரவு செய்யாதீங்கன்னு " ஒதுங்க அவருக்கு அடுத்து வந்தவர் சீனர். வீல்சேர் தலைவர்களெல்லாம் அங்கு வர வாய்பே இருக்காது போலிருக்கு,

 யாராவது பக்கத்துல இருக்கிற ராஜபக்ஷேவை சீனாவுக்கு போயிட்டு வரும் போது அப்படியே நியூசிலாந்துக்கு போயிட்டு வரச்சொன்னா ஏதாவது
மாறித் தொலைப்பாரன்னு முயற்சி செஞ்சு பார்க்கலாம்.

நீங்க விஜய் ரசிகரா? அப்படின்னா கட்டாயம் இங்குள்ள "பஞ்சி ஜம்ப" என்ற மிக உயரத்தில் இருந்து கட்டிக் கொண்டு குதிக்கும் விளையாட்டுக்காவது ஒரு முறை போயிட்டு வரலாம்.  மூக்கு முழியோட உங்க வயிறும் இருக்க
வேண்டிய இடத்துக்குள்ளே இருந்துச்சுன்னா உங்களுக்கு ஒரு சான்றிதழ் வேறு கொடுப்பாங்க. ஊருக்கு கொண்டு வந்து காட்டி மற்றவங்க வயித்தெரிச்சலை சம்பாரிக்க வசதியாய் இருக்கும் தானே.  

நூலாசிரியர் துளசி கோபால் இருந்த கிரைஸ்ட் சர்ச் நகரம் என்பதை சொர்க்கம் என்று கூட சொல்ல முடியும்.  காரணம் அதற்கு மற்றொரு பெயர் தோட்ட
நகரம்.  நாம வீட்டுக்குள் பூஜை அறையை மட்டும் சுத்தமா வச்சுக்கிட்டு கக்கூஸ் சமாச்சாரத்தை கசுமாசலக் கணக்கா வச்சுருப்பதைப் போல உள்ள வேலையெல்லாம் அங்கு இல்லை. 

 பாபிலோனின் தொங்கும தோட்ட ரசனையைப் போல இந்த நகரில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் இந்த தோட்ட அலங்காரத்திற்காக நாயா பேயா உழைக்கிறாங்க.  இதில் எந்த தோட்டம் சிறப்பா இருங்குங்ற மாதிரியெல்லாம் போட்டி வேறு உண்டு. இந்த வீடுகளை சுற்றிகாட்ட சுற்றுலா மக்கள் வேறு
தனியாக சம்பாரித்துக் கொண்டுருக்கிறார்கள்.  நகராட்சி வசூலிக்கும் வரியில் பெரும்பாலான பணம் ஊரில் உள்ள தோட்ட பராமரிப்புக்கே போய்விடும் என்றால் நீங்க நம்புவீங்களா?  

பயபுள்ளைங்களை ஒரு நாளைக்கு திருப்பூர் பூங்காவுக்கு வரவழைத்து தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் போலிருக்கு.

வீட்டுக்கு வரும் இலவச செய்தி தாள்கள், நாள் முழுக்க பேரூந்தில் சுற்றினா லும் பத்து டாலர் அட்டையை வைத்துக் கொண்டு சுற்றிவரக்கூடிய அதிசயம், எந்த இடத்துக்குப் போனாலும் அங்கங்கே இருக்கும் இந்திய உணவகங்கள், என்று ஒவ்வொன்றையும் படிக்க படிக்க பயம் தான் மிஞ்சுகிறது. இது நாடா?  இல்லை ஷங்கர் படத்தில் வரக்கூடிய செட்டிங் சமாச்சாரமா என்று ஏக்கம்
வருவதை தவிர்க்க முடியவில்லை.  இந்த இடத்தில் ஒரு இடைச் செருகலை
பார்த்தே தான் ஆகவேண்டும். கவிஞர் வைரமுத்து தான் சென்ற நாட்டில் (லண்டன் அருகே என்று நினைவு) நடந்த நிகழ்வுகளை ஒரு கட்டுரையின் மூலம் வெகுஜன ஊடகத்தில் எழுதி இருந்தார், 

ஒரு கிராமத்தின் அருகே ஏரியின் அருகே ஓய்வாக உட்கார்ந்து இருந்த ஒரு பெரியவர் தூண்டில் மூலமாக பிடித்த மீன்களை மறுபடியும் ஆற்றிலே விட்டு மீண்டும் தூண்டிலை போட்டு அடுத்த மீனுக்காக காத்துக்கொண்டுருந்தாரம். வைரமுத்துவுக்கு ஆச்சரியம். அவர் அருகில் போய் விசயத்தை கேட்டதும் அவர் சொன்ன பதில் உச்சக்கட்ட ஆச்சரியம்.

"சிறிய மீன்களை பிடிக்கக்கூடாது என்பது சட்டமாம்.  அதற்காக பெரிய மீனுக்காக காத்துக் கொண்டுருக்கின்றேன்"  என்றாராம்.  ஒவ்வொரு வளர்ந்த நாடுகளின் தனி மனித அக்கறை என்பது நமக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.  இதைப் போலவே அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களும், மக்களுக்காக உருவாக்கப்படும் நலத்திட்டங்களும் அதைவிட மகத்தான ஆச்சரியம்.  ஹாங்காங்கில் இருந்து நண்பர் அழைத்து இருந்தார். வங்கியில் பணிபுரிகின்றார். " எவரும் வங்கிக்கு வருவதில்லை. வந்தாலும் குறைவு. எல்லாமே திட்டமிட்ட கணினி சார்ந்த நடைமுறைகள். அடுத்து சொன்ன உச்சக்கட்ட ஆச்சரியம் சாப்பாடு நேரத்தில் கைபேசியில் வங்கி ஊழியர்களுக்கு  எந்த அழைப்பும் வராது..............................................."  பேசிக் கொண்டே செல்லச் செல்ல இங்குள்ள செல்லரித்துப் போன செல்லாக்காசின் நிர்வாக லட்சணங்கள் உறுத்தலாய் தெரிந்தது.

இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டுருக்கிற மண்ணு போயி அடுத்த ஆளு வந்தாக்கூட இங்கே உருவாகுமாங்றத நீங்க தூங்கும் போது கனவில் கொண்டு வந்துக்கத் தான் வேண்டும். 

ஆனால் வளர்ந்த நாடுகளின் அரசியல் கொள்கைகள் என்பது கொள்ளைக் கூட்டத் தலைவன் படங்களில் சொல்லும் வசனம் போலத்தான் இருக்கு. வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளை பலவிதங்களில் தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை முன் நிறுத்துதல். ஆனால் நியூசிலாந்து சிங்கப்பூர் போலவே எந்த வம்பு தும்புக்கும் போனதா தெரியவில்லை. நூலாசிரியர் தான் இது குறித்து தெரிவக்க வேண்டும். 

ஆனால் நம்நாட்டுத் தலைவர்கள் நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் என்று உச்சரித்த வில்லன் வசனத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து கொண்டுருக்க நியூசிலாந்து அரசியல் தலைவர்கள் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டுருப்பதை இந்த புத்தகம் முழுக்க பல விசயங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

உலகத்திலே பெண்களுக்கு ஓட்டு உரிமை கொடுத்த முதல் நாடு நியூசிலாந்து
தான்.  ஆனால் இதற்காக போராடிய பெண்மணியை இன்று நியூலாந்தில் இருக்கும் கரன்சியில் புகைப்படமாக பார்க்கும் அளவிற்கு அரசாங்கம் சிறப்பான மரியாதை கொடுத்து இருந்தாலும் அந்தம்மா பட்ட பாடுகளைப் பார்த்தால் நம்ம காந்தி தாத்தா தான் ஞாபகத்திற்கு வருது.  ஆனால் இதை விட சென்ற வாரத்தில் ஒரு கொடுமை நடந்தது.  எதிர்க்கட்சி ஆளுங்கட்சி ரெண்டு தலைவர்களும் நடந்த பூகம்பத்திற்கு ஒன்றாக சேர்ந்து கொண்டு மக்களுக்கு உதவுற அதிசயத்தை இங்கே நீங்க காண முடியுமா?  முதலில் கோயமுத்தூர் மாநாட்டுக்கு பதில் காட்டியாச்ச. இப்ப திருச்சி மாநாட்டை வெற்றிகரமா முடிச்சாச்சு.  அடுத்து மதுர வேலையை பார்க்க வேண்டும் என்ற ஜனநாயக கவலையெல்லாம் அங்கு இல்லை.  தேர்தலின் போது வீட்டு உரிமையாளர்களின் அனுமதி பெற்று தொந்தரவு இல்லாமல் ப்ளக்ஸ் போர்டு வைத்து விட்டு அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கழட்டி எடுத்துக் கொண்டு போகும் கண்ணியவான்கள் நிறைந்த பூமி தான் நியூசிலாந்து என்ற அதிசய நாடு. அதனால் தான் அங்குள்ள தலைவர்கள் பொண்டாட்டி புள்ள குட்டிகளோட கடைத்தெருவுக்கு வந்து சாமான்களை வாங்க பழகியிருக்காங்க. நாம தான் சாமான்ய நாதாரிகளை சரித்திர புருஷரா நம்பி ஏமாந்துகிட்டு இருக்கோம்.

இந்த இடத்தில் மற்றொரு இடைச் சொருகலை நுழைத்தே ஆகவேண்டும். நாட்டைப் பற்றி படிக்கும் நமக்கே ஒரு ஏக்கம் வரும் போது தன்னுடைய பெரும்பாலான வாழ்க்கைப் பகுதியை நியூசிலாந்தில் கழித்த நூலாசிரியர் எப்படி நிறைகுறைகளுடன் இருக்கும் இந்தியாவில் இங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது முதல் ஆச்சரியம். எழுதும் எழுத்துக்களில் கூட எந்த பந்தாவையும் காட்டாமல் இருக்கிறார் என்று அடுத்த மகத்தான அதிசயம்..  காரணம் அண்டா குண்டா அடகு வைத்து கொத்தனார் வேலைக்கு போய்விட்டு கடனைக் கூட அடைக்க முடியாமல் வந்து இங்கே இறங்குபவர்கள் பேசும் நடிகர் வடிவேல் டயலாக்கை கேட்கும் போது இவர் மட்டும் எப்படி ஊர் ஊராக உலகம் சுற்றும் வாலிபியாக இருந்து கொண்டுருக்கிறார்?. 


ஆனால் இங்கே என்ன இல்லைன்னு கேட்டீங்கன்னா ஒரு ஆச்சரிய சமாச்சாரம் உண்டு.

இந்த நாட்டில் எருமை மாடு,தேள்,கரப்பான் பூச்சி,பல்லி,கொசு, எறும்பு போன்ற நம் நெருங்கிய நண்பர்கள் .பல இடங்களில் கிடையாது. என்ன அக்கிரமம் இது.?  அப்புறம் எப்படி வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்க, மருந்தடிக்க என்று டெண்டர் விட்டு கொள்ளை அடிக்க முடியும்?

பொழைக்கத் தெரியாத நியூசிலாந்து அரசியல்வாதிகளைப் பார்த்தால் பொசு பொசுன்னு இங்குள்ள டாஸ்மார்க மருந்தை அவங்க மேலே அடிக்கலாம் போலிருக்கு.

இறுதியாக மொத்த நூலக விமர்சனம் அடுத்து............................

நூலாசிரியர் வலைதளம்

சந்தியா பதிப்பகத்தின் வலைதளம்.


விமர்சனத்தின் முதல் பகுதி

வெளியீட்டாளர்கள் 

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

23 comments:

ஹேமா said...

ஜோதிஜி...வெளிநாடுகளோடு நம்ம நாடுகளைச் சமப்படுத்திப் பாக்காதீங்க.எங்களுக்குத்தான் வெட்கக்கேடு !

தனிமனித உரிமை ,அக்கறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பூச்சியம்தாம்.

உதாரணத்திற்க்கு சாதாரண உள்ளூர் பேரூந்துச் சேவையில் எப்போதும் பரிசோதகர்கள் வரமாட்டார்கள்.திடீரென்று வந்தால் மட்டுமே குற்றப்பணம் கட்டவேண்டும்.தானியங்கியில் பயணச்சீட்டு அடித்தே பயணம் செய்யவேண்டும்.
இங்குள்ளவர்கள் அவசரமாக ஏறிவிட்டாலும் பேரூந்தால் இறங்கும்போது அந்த இடத்தில் பயணச்சீட்டை தானியங்கியில் அடித்து எடுத்துப் பிறகு குப்பைக்குள் போட்டுவிட்டுப் போவதைப் பார்க்கலாம்.

அதேபோல ஒரு முதியவர் ஒரு சிறுகுப்பை தெருவில் கிடந்தாலும் தன் கைத்தடியால் தட்டித் தட்டி அதை குப்பைத் தொட்டியில் சேர்த்துவிட்டுத்தான் போவார் !

இதைப்போல நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

a said...

ஜோதிஜி : மிக அழகாக தொகுத்து உள்ளீர்கள்...........

துளசி கோபால் said...

நீங்கள் எழுதனதைப் படிச்சுட்டு, இவ்வளோ நல்ல இடத்தை விட்டுட்டு, ஏன் இங்கே வந்து உக்க்கார்ந்துருக்கேன்னு எம்மேலேயே கோவமா வருது ஜோதிஜி.

ஆனால்...இவ்வளவு புகழ்ச்சி கூடிப் போச்சோன்னும் இருக்கு எனக்கு.

கடைசியில் இருக்கும் முடிவுரையையும் வாசிச்சுட்டுக் கருத்து சொல்லுங்க.

அதுவும் போனவாரம் நடந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சில வேண்டாத செய்திகளைக் கேள்விப்பட்டுக்கிட்டு இருக்கேன். நம்பகமான ஆள்தான் செய்திகளின் சுட்டிகளை அனுப்பிக்கிட்டே இருக்காங்க.

ஆபத்து காலங்களில் மனிதன் இருவிதமாகச் செயல்படுகிறான். ஒன்னு பொதுநலம். இன்னொன்னு சுயநலம். சிலசமயம் விகிதாச்சாரம் மாறுபட்டு தராசின் தட்டு எந்தப்பக்கம் தாழுதுன்னு ........ஹூம்...இதுவும் ஒரு கவலைதான்.

மூணாம் பகுதிக்குக் காத்திருக்கேன்.

உங்கள் நேரத்தையெல்லாம் எடுத்துக்கிட்டேனோன்னு ஒரு சின்னக் குறுகுறுப்பு மனதின் ஆழத்தில் ஓடுது!

பின்னோக்கி said...

ஜோதிஜி.. இந்தப் பதிப்பகம் எங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ளது. ஒரு முறை போய் சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.

மீண்டும் போக வைக்கிறீர்கள்.

Chitra said...

இந்த நாட்டில் எருமை மாடு,தேள்,கரப்பான் பூச்சி,பல்லி,கொசு, எறும்பு போன்ற நம் நெருங்கிய நண்பர்கள் .பல இடங்களில் கிடையாது. என்ன அக்கிரமம் இது.? அப்புறம் எப்படி வெளிநாட்டில் இருந்து மருந்து வாங்க, மருந்தடிக்க என்று டெண்டர் விட்டு கொள்ளை அடிக்க முடியும்?

பொழைக்கத் தெரியாத நியூசிலாந்து அரசியல்வாதிகளைப் பார்த்தால் பொசு பொசுன்னு இங்குள்ள டாஸ்மார்க மருந்தை அவங்க மேலே அடிக்கலாம் போலிருக்கு.


......அதானே. என்ன "கொடுமை" சார் இது? ஹா,ஹா,ஹா,....

Bibiliobibuli said...

இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கம் இல்லாதிருந்தால் ஒரு வேளை சிறப்பாக இருந்திருக்குமோ தெரியவில்லை. அப்போ, நிச்சயம் இந்தியா, இலங்கை என்ற இரண்டு நாடுகள் தோற்றம் பெற்றிருக்குமா என்றும் தோன்றாமலில்லை!!!

இப்படி இல்லாததை நினைத்து வெற்றுக்கற்பனை வளர்ப்பதே வரவர எனக்கு பிழைப்பாகிப் போய்விட்டது. :)))

தேசியம், தேசியம் என்று பேசிப்பேசியே தலைவர்கள் சுகவாழ்வு வாழ குடிமக்களின் சிந்தனை சிதைக்கப்பட்டுவிட்டது. தேசம், தேசியம் என்றால் அதன் குறியீடுகள் தலைவர்கள் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் என்றான பின் தேர்தலில் வாக்களிப்பதே ஓர் குடிமன் தன் தேசத்திற்கு செய்யும் கடமை என்றாகிவிட்டது. பிறகு எது வாழும்?

சீ.பிரபாகரன் said...

சிறந்த பதிவு.

இதுபோன்ற நல்ல நாடுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இப்படிப்பட்ட சூழல் நமது நாட்டிலும் நிலவவேண்டும் என்பதே எனது அவா. அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. என்னைப்போன்ற சாதாரண இந்திய குடிமகனுக்கு ஏக்கப்பெருமூச்சுதான் மிச்சம்...

வல்லிசிம்ஹன் said...

படிக்கும் போது கிடைத்த மகிழ்ச்சியை ,நீங்கள் விமர்சிக்கும்விதம் இன்னும் கூட்டுகிறது.அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள் ஜோதிஜி. மிகவும் நன்றி,.

Unknown said...

சிறப்பான தொகுப்பு.
பயனுள்ள பதிவு.

பவள சங்கரி said...

அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

பயனுள்ள பகிர்வுங்க... ஒவ்வொரு இடுகையும் அலசி எழுதும் பாங்கு பிரமிப்பாகவும் இருக்கிறது...

சிங்கக்குட்டி said...

யப்பா நீளமான பதிவு என்றாலும் விடாமல் படித்து விட்டேன், இதுவே நான் சென்று வந்ததை போல ஒரு அனுபவத்தை கொடுத்தது.

இந்த "பஞ்சி ஜம்ப" க்காகவே வரவேண்டும் என்று நினைக்கிறேன் :-)

பகிர்வுக்கு நன்றி, நிறைய இது போல எழுதுங்கள்.

ஜோதிஜி said...

சிங்கக்குட்டி

நீளமான பதிவா? என்னங்க இதுக்கு முன்னால உள்ள வேர்ட் ப்ரஸ் பதிவுகளை படித்தது இல்லை போலிருக்கு. நான் இப்ப ரொம்ப திருந்திவிட்டேன்ங்க.........

நன்றி பாலாசி,

நித்திலம் சிப்பிக்குள் முத்து. நன்றிங்க. பெயரே ரொம்ப கலக்கலாயிருக்கு.

வல்லிசிம்ஹன், அபுல்பசர் உங்கள் தொடர்வாசிப்புக்கு நன்றிங்க.

ரொம்ப நாளைக்குப்பிறகு...... வாங்க பிரபாகரன். நன்றிங்க.

சித்ரா

ஹா ஹா நாஞ்சொன்னது உண்மைதானுங்கோ............

ஜோதிஜி said...

ரதி பிரிட்டானியா ஆதிக்கம் சில நல்ல விசயங்களையும் பலப்பல மறைவான சுயநல நோக்கங்களையும் கொண்டு இருந்தாலும் நாம் தான் கெட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு இன்று அவஸ்த்தை பட்டுக் கொண்டுருக்கிறோம்.

கல்வி முதல் மற்ற சட்டதிட்டங்கள் வரைக்கும் இன்று வரைக்கும் இநதியாவில் பின்பற்றப்படும் நடைமுறை அலுவல் சார்ந்த விசயங்கள் வரைக்கும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள்.

எதன் மூலம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்குதோ அதை நம் வியாதிகள் கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டு பின்பற்றிக் கொண்டுருக்கிறாரகள்.

ஜோதிஜி said...

பின்னோக்கி

ஒரு தகவல் தந்து உள்ளீர்கள். விரைவில் உண்டு ஒரு வேடிக்கை.

வாங்க யோகேஷ். ரசித்தமைக்கு நன்றி.

ஹேமா உங்கள் நிறைவான விமர்சனப் பார்வை ரொம்பவே கவர்வதாய் இருந்தது.

அப்படா........ எப்படியே டீச்சர்க்கிட்ட பாஸ் மார்க் வாங்கியாச்சு. நன்றி குருஜீ.

http://thavaru.blogspot.com/ said...

மற்றநாட்டோடு ஒப்பிடுதலே வேண்டாங்க.இங்க ஒவ்வொருத்தரும் ராஜாவாக பார்க்குறாங்க ..இதுல பொது கருத்துப்படி செயல் என்பது ரொம்ப கஷ்டம்.
வருத்தபடுவறங்க ஏதோ அவங்களால முடிஞ்சத செஞ்சுபுட வேண்டியது தான்.

Bibiliobibuli said...

ஜோதிஜி,

முதலில் பிரித்தானியா பற்றி நான் சொன்னது என் ஈழம் சார்ந்த வருத்தம். I have a dream...... (Tamil Eezham) அப்படி!!!

//எதன் மூலம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்குதோ அதை நம் வியாதிகள் கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டு பின்பற்றிக் கொண்டுருக்கிறாரகள்//

இதே, இதே, இதே நான் சொன்னது தேசத்தை கூறு போட்டு விற்றுவிட்டு மேடைப்பேச்சில் தேசியத்தை கட்டிக்காப்போம், தேசத்தை வளர்ப்போம் என்று சுமக்க முடியா வரிச்சுமையை சுமக்க வைப்பார்கள்.

அருந்ததி ராய் எழுதிய, "The Ordinary Person's Guide to Empire" படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஜோதிஜி said...

நீங்கள் வலைச்சரத்தில் ஈழம் சார்ந்த புத்தகம் குறித்து எழுதியிருந்த போது நீங்கள் எழுதிய விமர்சனம் நீயுமா? என்று எழுதி இருந்தீர்கள்.

நீங்கள் கொடுத்த முதல் விமர்சனம் ஆங்கிலேயர்கள் ஈழத்தில் சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை முழுமையாக புரிய வைக்கும். பல ஆச்சரியங்கள். நியூசிலாந்து போல் இல்லாமல் அத்தனையும் அக்கிரமங்கள்.

நண்பர் இராஜராஜன் அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டுருப்பதாக சொன்னார். அவர் கசங்கி கசக்கி பிறகு தருவார். நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் இங்கு கிடைக்க வாய்ப்பு இருக்காது.

ஜோதிஜி said...

மற்ற நாட்டோடு ஒப்பிடுதலே வேண்டாங்க.இங்க ஒவ்வொருத்தரும் ராஜாவாக பார்க்குறாங்க ..இதுல பொது கருத்துப்படி செயல் என்பது ரொம்ப கஷ்டம்.

பெயர் மட்டும் தான் தவறு. ஆனால் மிகச் சரியான விமர்சனம்.

Bibiliobibuli said...

//நீங்கள் வலைச்சரத்தில் ஈழம் சார்ந்த புத்தகம் குறித்து எழுதியிருந்த போது நீங்கள் எழுதிய விமர்சனம் நீயுமா? என்று எழுதி இருந்தீர்கள்.//

மறுக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக உங்கள் புத்தகத்தை படிக்க ஆவலாயுள்ளேன். இதையும் மறுக்கவில்லை.

// நீயுமா?// இதைப் படித்தபோது என் தவறை உணர்ந்துகொண்டேன். No hard feelings என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். :)

நீங்கள் கொடுத்த முதல் விமர்சனம் ஆங்கிலேயர்கள் ஈழத்தில் சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை முழுமையாக புரிய வைக்கும். பல ஆச்சரியங்கள். நியூசிலாந்து போல் இல்லாமல் அத்தனையும் அக்கிரமங்கள்.//

இது புரியவில்லை, ஜோதிஜி.

//நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் இங்கு கிடைக்க வாய்ப்பு இருக்காது.//

நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் ஏதாவது அங்கு கிடைக்காவிட்டால், நான் இங்கு கிடைத்தால் வாங்கி அனுப்பி வைக்கிறேன்.

ஜோதிஜி said...

நீங்கள் கொடுத்த முதல் விமர்சனம் ஆங்கிலேயர்கள் ஈழத்தில் சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை முழுமையாக புரிய வைக்கும். பல ஆச்சரியங்கள். நியூசிலாந்து போல் இல்லாமல் அத்தனையும் அக்கிரமங்கள்.//

நீங்கள் மேலே ஏற்கனவே சொன்னபடி ஆங்கிலேயர்கள் வந்தார்கள் வென்றார்கள். சிங்களர்கள புரிந்தவர்கள். ஜெயித்தவர்கள். தமிழ் தலைவர்கள் ???

மின் அஞ்சல் சோதிக்க.

Aravinthan said...

தனிமனித உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கின்றார்களோ அந்த அளவிற்கு சீதோஷ்ண பருவ மாற்றத்தால் கரையில் ஒதுங்கும் மீன்களை பாதுகாப்புது வரைக்கும் அநியாயத்திற்கு பல இன்ப அதிர்ச்சிகளை படிக்கும் போது நெஞ்சம் தாங்குமா? என்று பயமாயிருக்கு.
--------------------------------------
நியூசிலாந்தில் நான் டனிடன் நகருக்கு சென்ற போது சில இடங்களுக்கு(Otago Peninsula )செல்ல மனிதர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அறிந்தேன். காரணம் அங்கு வாழும் பென்குயின்களின் இன விருத்தத்தை பாதிக்கும் என்பதினால் தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் என்பதினால் அழிக்கப்படுகிறார்கள்.

CS. Mohan Kumar said...

சக பதிவர் எழுத்தை சிலாகித்து எழுதியது அருமை