Thursday, January 14, 2010

எம்.ஜி.ஆர் க்யூவும்(சிபிசிஐடி) கலைஞர் மக்களும்

உலகில் இன்று வரையிலும் நாம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களையும், குழுக்களையும் நாம் பார்த்து கேட்டு படித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் வளர்ச்சி என்பது முறைப்படியான நாடுகளைக்கூட திடுக்கிட வைத்தன என்றால் அது முற்றிலும் உண்மை.  அசுர வளர்ச்சி என்பதை விட அச்சப்படுத்தும் வளர்ச்சி என்பது தான் முற்றிலும் உண்மை.  பிரபாகரன் ஆளுமை ஒரு பக்கம்.    மக்களின் ஒத்துழைப்பு மறுபக்கம், உள்ளே இயக்கத்தில் இருந்தவர்களை ஒருங்கிணைப்பு என்பதற்கு மேலான "மொத்த அர்பணிப்பு" என்ற நிலைமையில் கடைசி வரைக்கும் வைத்திருந்தது என்று ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிக்கொண்டே போகலாம்.
தமிழன் என்பவனுக்கு உண்டான இயல்பான தனிப்பட்ட குணாதிசியங்கள் இல்லாத இளையர் பட்டாளங்களை ஆண் பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த " உயிர் இனி உங்களிடம்" என்று ஒப்படைத்த ஒவ்வொரு விடுதலைப்புலி வீரர்களின், ஆதரவுக்கரம் ஒவ்வொரு கால கட்டத்திலும் நீண்ட போதெல்லாம் தலைவனுக்குரிய " தன்னுடைய நலம்" என்பதை கருத்தில் கொள்ளலாமல், வாழ்வில் தன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட தேவையில்லை என்பதாக வாழ்ந்த பிரபாகரன் வாழ்க்கை முழுமையும் உணர்ந்தவர் எத்தனை பேர்கள்?

மன்னர்கள் வாழ்ந்த போது தங்களுடைய பதவியை, ஆட்சியை, ஆளுமையை நிலைநாட்ட அவர்களுடைய வீரம் ஒன்றே போதுமானதாக இருந்தது.  படையெடுத்துச் சென்று வென்றுவிட்டால் வென்றவர் மாமன்னர்.  போர் என்பதை வெறுத்து எவரோ ஒருவருக்கு அடிமையாய் இருந்து ஒழுங்காக கப்பம் கட்டி ஒழுக்கமற்ற மாமா மன்னர்களுக்கு அவர்களுடைய உல்லாச வாழ்க்கையே போதுமானதாக இருந்தது.   காலங்கள் பல பாடங்களை கற்றுக்கொடுத்தாலும் படையெடுப்பாளர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதை சுகமாக கருதியவர்கள் எவ்வாறு தன்னை, தன் மக்களை, தங்களுடைய சக்தியை உணர்ந்து இருக்க முடியும்?

நாங்கள் அடிமை இல்லை?  ஆண்ட பூமி இது?  பூர்வகுடி நாங்கள்?  இணைந்து வாழ்வது என்பது சாத்யமே இல்லாதது?  தனி ஈழம் ஒன்று மட்டுமே சாத்யமானது என்று ஒவ்வொரு பூவும் கோர்த்து உருவான மாலை இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிதைந்தாக காட்சியளிக்கிறது.  கோர்த்து வைத்திருந்த கைகள் சில சோரம் போய்விட்டது. சில புதிராக இருக்கிறது.  சில வினாக்குறியாய் இருக்கிறது,
எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் மன்னர்கள் பெற்ற போர் வெற்றிகள் என்பது இன்று கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.  அதற்குச் சமமாக பிரபாகரன் ஆளுமையும்.  ஆனால் அத்தனை தமிழ் மன்னர்களின் எச்சமும் சொச்சமாக இன்று அங்கங்கே சில ஆலயங்கள் மட்டுமே நமக்கு காட்சியாய் இருக்கிறது.  முமுமையான ஆவணங்கள் இல்லை.  புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இடைச் செருகல் என்பதைப் போலவே இன்றும் இலங்கைப் பிரச்சனையும், பிரபாகரன் குறித்த செய்திகளும்?   ஏன்?

சர்வாதிகாரம் என்று எங்கு ஜெயித்து இருக்கிறது? மேலாதிக்க சக்திகளின் தந்திரங்களை எதிர்கொள்ள தெரியாத அரசியல் ஞானம் பெற்றவரை எப்படி தலைவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? ஒழுக்கம் என்பதே புதிராகப் போன உலகில் ஓழுக்கத்தை மட்டும் முன்னிறுத்திக் கண்டவன் வாழ்க்கை ஓங்காரமாய் முடிந்தது ஏன்?  கடையாணி கழட்டப்பட்ட கட்டை வண்டி பயணத்தில் ஏறி எந்த ஊர் சென்று அடைய முடியும்?

கோவணம் உடுத்துவதே அரசியலில் அசிங்கம் என்று வாழ்ந்து கொண்டுருக்கும் உலக தலைவர்களின் அலங்கோல வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் உலக அரங்கில் தமிழனை உள்வாங்க வைத்தவரின் வாழ்க்கை இன்று உலகமெங்கம் விவாதமாகி வீணர்கள் வாயில் மெல்லும் அவலாகி விட்டது.

ஒற்றுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத ஒரே இனமான தமிழனத்தில், மொத்த விமர்சனங்களையும் எதிர்கொண்டு தமிழர்களை தன் இரும்புக் கரங்களுக்குள் வைத்திருந்த  பிரபாகரன் இறுதிவரைக்கும் எடுத்த கொள்கையில் தோற்கவில்லை.  ஆனால் சூழ்நிலை?

நெருக்கடியான சூழ்நிலைகள் பல சமயம் மனித மனதை பாறையாக மாற்றி விடும்.  ஆனால் அந்த பாறையில் கூட விதை முளைத்து வரும் என்பதற்கு பிரபாகரன் தவிர தற்போதைய உலகில் வேறு உதாரணம் இருப்பதாக தெரியவில்லை.  எதிர்ப்பை மீறி வெளிச்சத்தை பார்த்த மரங்களின் வேர்கள் என்பது அசைக்க முடியாத எதிர்ப்புச் சக்தியை உள்ளே பாதுகாத்தாலும் கூட இன்றைய நவீன விஞ்ஞானம் தந்த பாகாசுர குண்டுகள் பஸ்மாக்கி விட்டதே?

ஏன் இப்படி முடிந்ததாக காட்டப்படுகிறது என்பதை விட எதனால் இது நிகழ்ந்தது என்பதை யோசிப்பது தான் விவேகம்.  கொள்கைகள் தவறென்றால் உலகமெங்கும் வாழும் அத்தனை இலங்கை தமிழர்களும் தனிஈழம் தான் இறுதி தீர்வு என்று என்று ஓட்டெடுப்பு மூலம் வாக்களிக்க மாட்டார்களே?  அவர்களிடம் பிரபாகரன் குறித்த அச்சம் இல்லை.  வேறு எந்த நிர்ப்பந்தமும் இல்லை.  வாக்களித்த அத்தனை பேர்களும் சுயசிந்தனைகளினால் தன்னை உரசிப் பார்த்து உள் மனம் சொன்னதை உலகிற்கு உரைத்தவர்கள்.  அப்படி என்றால் வெகுஜனம் விரும்பிய தனி ஈழம் தான் இனி ஒரே தீர்வு என்ற பிரபாகரன் கொள்கை சரிதானே?

எத்தனை எத்தனை மண்ணில் உறங்கும் மாவீரர்கள். போராட்டங்கள், போர்கள்.

அறுநூறுக்கும் மேற்பட்ட இயக்கத்திற்கான உலகமெங்கும் உள்ள வங்கிக்கணக்குகள் இயக்கத்தைப் போலவே இன்று நிர்கதியாய் இருக்கிறது.  வாங்கிய கப்பல்கள், ஓடிக்கொண்டுருக்கும் கப்பல்கள், காமதேனுவான நிதி ஆதாரங்கள் அத்தனைக்கும் இனி யார் பொறுப்பு?  வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நிலைமை கிண்டலுக்கும், அச்சத்திற்கும் இடையே நின்று இரு அணிகளாக பிரிந்து இனி எழுமா? என்பதில் வந்து நிற்கிறது.  கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் கூட களவாணிகளின் கையில் சிக்கியதைப் போலவே பராரி பாகிஸ்தானிடம் விற்று தங்களுடைய வங்கிக் கணக்கில் விற்று ஏப்பம் விட்டவர்கள் அவர்கள் விரும்பும் சிங்கள மக்களுக்கு நல்வாழ்வு தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உங்களுக்கு இருக்கிறதா?  இலங்கை வாழ்வுரிமை போராட்டம் இன்று எளிதான திரைப்பட விமர்சனத்தைப் போல நல்லோர், தீயோர் பார்வை பட்டு பஸ்மாக அணைந்த நெருப்பு போல் காட்சியளிக்கின்றது.

அமெரிக்கா விரும்பும் திருகோணமலை தளம், சீனா விரும்பும் தனக்கான எளிதான நடை மேடை, பாகிஸ்தான் மனதில் நிணைக்கும் " எதிர்கால அழிவுக்கு இப்போதே இந்த எங்களின் பங்களிப்பு" என்று ஒவ்வொன்றும் சேர்ந்து சேர்ந்து விடுதலைப்புலிகளை விட இந்தியாவை  இனி வரும் எதிர்கால ஒவ்வொரு தினப் பொழுதுகளையும் ஆயாசப் பெருமூச்சு விட வைத்துக்கொண்டுருக்கிறது. ஆங்கிலேயர்களை விரட்ட திரட்டப்பட்ட போராட்டங்களை விட இனி இந்தியாவின் பாதுகாப்புக்கென்று கொட்டப்போகும் இராணுவ நிதி ஆதாரம் ஒவ்வொரு பைசாவும் இங்குள்ள சமான்ய மக்களுக்கு வாழ்ந்து கொண்டுருப்பதை விட அதிகபட்ச சங்கட வாழ்க்கையை பரிசாக தரப்போகின்றது?

அமெரிக்காவின் உளவு என்பது தொடக்கமும் முடிவும் ஒரே நேர்கோட்டில்.  அழிப்பு, பொம்மை அரசு.  சீனாவுக்கு பொம்மை அரசை விட எவர் வந்தாலும் தனக்குண்டான பாக்யதை எந்த காலத்திலும் மாற்ற முடியாத சூழ்நிலையை இப்போதே உருவாக்கி வைத்திருக்க வேண்டிய அவஸ்யத்தை ஒவ்வொரு நொடியிலும் திட்டமிட்டு செய்துக்கொண்டுருக்கும் ஒவ்வொரு திருட்டுத்தனமும்.  இவை இப்போது எவருக்கும் புரியாது தெரியாது.  எதிர்கால சிங்கள வாரிகளுக்குப் மொத்தமாக புரியும் நாடு சிங்கள நாடாக இருக்காது. சிங்கம் அசிங்கமாக நிற்கும் போது அப்போது அவர்கள் கத்தும் கதறல் நாம் கேட்கும் சூழ்நிலையில் நம்முடைய இந்தியாவின் பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று கற்பணை செய்து பார்க்கக்கூட முடியவில்லை.
ஜெ.என்.தீட்சித் - எம்.கே. நாராயணன் என்ற இரட்டையர்கள்தான், ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்புவதில் ‘மூளையாக’ இருந்து செயல்பட்டவர்கள். என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ‘சவுத் ஆசியா’ எனும் இணையதளத்தில் இதுபற்றி பல விரிவான ஆய்வுகள் வெளியிடப்பட்டன.

“1987 இல் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியது. இரண்டு தனி மனிதர்கள்தான். அவர்கள் ஜெ.என். தீட்சித்தும், எம்.கே.நாராயணனும் ஆவர்” என்று ‘சவுத் ஆசியா’ செய்தியாளர் சுதா ராமச்சந்திரன் தனது ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார்.


"கனவு காணுங்கள்.  2020 வல்லரசு " என்று எத்தனை தன்முனைப்பு வாசகங்கள் ஒவ்வொரு தனிமனிதனை உசுப்பிக்கொண்டே இருக்க,  அதிகாரத்தில் இருக்கும் உறங்கும் கோட்டான்கள் உள்மனதில் என்ன இருக்கிறது?  எதை நோக்கி இந்த நாட்டை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை முழுமையாக உணர்ந்து கொள்ள மறுபடியும் உலாவிக்கொண்டுருக்கும் அழியாத சித்தர்கள் வந்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது?

இயக்கத்தை அழித்து, முறைப்படியான போரை எதிர்கொள்ள லாயக்கு இல்லாத பொம்மை அரசையும், புணுகு மனதை வைத்துக்கொண்டு வந்து போன அத்தனை இலங்கை ஆட்சியாளர்கள் மனதில் விடுதலைப்புலிகள் உண்மையிலேயே அழிந்து போயிருப்பார்களா?  இல்லை எப்போது தாக்குவது என்று உள் மன ஒத்திகை பார்த்துக்கொண்டுருக்கிறார்களா? என்பதைத்தான் யோசித்துக்கொண்டுருக்கிறார்களா? என்று அவர்களே பயந்து சாகும் அளவிற்கு பிரபாகரன் ஆளுமை என்பது மொத்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டது.

தொடக்கம் முதல் கலைஞர் மு.கருணாநிதி உருவாக்கிய பாதை என்பது அலாதியானது.  மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் தூக்கத்தை தொலைத்த இரவுகள்.  திரட்டிய மக்கள், காட்டிய கூட்டம், ஒன்றிணைத்த இந்திய தலைவர்களை மேடையில் முழக்கமிடவைத்த ஆச்சரியப்பட வைத்த அர்ப்பணிப்பு, என்று ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் தமிழகம் முழுமையும் இந்த இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளின் மொத்த பரிணாமத்தை உணர வைத்தவர் கலைஞர் என்றால் அது முற்றிலும் சரியானது தான்.

இந்திரா காந்தி அம்மையார் எவ்வாறு புதிதாக உருவாக்கிய " ரா "  உளவுத்துறையை களம் இருக்கினாரோ அதே போல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருக்கும் போது தன்னை விட அதிகம் நம்பியது " க்யூ"  தமிழ்நாட்டு உளவுத்துறையைத் தான்.  ஒவ்வொரு அசைவும், நிகழ்வும், முன்னேற்பாடுகளும், முட்டுக்கட்டைகளும் அவர்கள் மூலம் நடந்தது.  வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எம்ஜிஆரின் ஆளுமை மட்டும் தெரிந்த அளவிற்கு அவருக்கும் பின்னால் இருந்த காவல் துறை அதிகாரிகள் தேவாரம், அலெக்ஸாண்டர் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்த மோகன் தாஸ் போன்றவர்கள் உருவாக்கிய நாடகங்கள் எதுவும் தெரியாது.

இவர்களைப் போலவே உருவாக்கப்பட்ட " ரா "  உளவுத்துறையும்.  தொடக்கத்தில் பதவியில் அமர்ந்தவர் கே.வி. உன்னிகிருஷ்ணன்.  " வாழ்க்கை என்பது வட்டம் "  என்று இன்று வரையிலும் நாம் அணைவரும் உச்சரித்துக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால் இந்திய உளவுத்துறை என்பது ஒரே நேர்கோடு என்பதற்கு இன்று வரையிலும் ராஜிவ் நம்பியார், சிவசங்கர மேனன், நாராயணன் என்று ஒரே பாதையில் தான் பயணித்து கொண்டுருக்கிறது.  வறண்ட தமிழ்நாட்டு ஏதோவொரு மாவட்டத்தில் பீகாரில் இருந்த வந்த உயர்காவல்துறை அதிகாரியும், உ.பி யில் இருந்து வந்து பதவியேற்ற மாவட்ட ஆட்சியாளரின் பங்களிப்பும் எவ்வாறு முன்னேற்பாடுகளையும் உருவாக்கி முன்னேற வைக்க முடியும்?  தமிழர்களைப் பற்றிய பிரச்சனைகளை தமிழர்கள் அல்லாதவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் முழுமையான பரிணாமத்தை உணர முடியுமா? என்பதை உணராத ஆட்சியாளர்கள் மத்தியில் தான் விதி என்ற ரூபத்தில் இந்தியா இந்த பிரச்சனை இன்று வரையிலும் கையாண்டு கொண்டுருக்கிறது.  இனவாதம், பிரிவினைவாதம் என்பதையெல்லாம் ஒரு பக்கம் புறம் தள்ளி வைத்தாலும் கூட்டிக் கழித்துப் பாருங்கள்.  ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஒரு தனி மனித வக்கிரம் தான் துருத்திக்கொண்டு இருக்கிறது.  அதுவே மொத்த அரசாங்க கொள்கைகளையும் வெளியே இருப்பவர்களால் விமர்சன பார்வையில் வைக்கப்படுகின்றது.

இன்று வரையிலும் பிரபாகரன் மேல் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் வைக்கும் மொத்தமான குற்றச்சாட்டு சகோதர இயக்கங்களை அழித்து ரத்தவெறி பிடித்தவர் என்பது.  இந்திய ரா என்று உள்ளே நுழைந்ததோ  குளறுபடிகளை உருவாக்க தொடங்கியதோ அப்போது ஆரம்பித்தது தான் இந்த நிலமெல்லாம் ரத்தம்,

தங்களுக்கு கீழே படிந்தவர்களை வேறு பாதைக்கு மாற்ற ரா முயற்சித்த போது,  அதன் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள், பலவீனமடைந்து கொண்டுருக்கும் போராட்ட பாதைகள் என்று தொடக்கம் பெற, விடுத்த மொத்த எச்சரிக்கையையும் மீறியவர்கள் பத்தில் ஆறு பேர்கள் தங்களின் தவறுகளுக்காக பிரபாகரனின் குண்டுகளுக்கு பலியானவர்கள்.  மீதி நான்கு பேர்கள் மட்டுமே "இயக்கம் என்றால் இப்போதும் எப்போதும் விடுதலைப்புலிகள் மட்டும் தான் " என்ற மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நடந்த சகோதரயுத்தங்கள்.  இங்கு ஒய்வுக்கே ஓய்வு கொடுத்து வாழ்ந்து கொண்டுருக்கும் கலைஞர் போலவே பலவீனத்திற்கே பயம் காட்டி வாழ்ந்தவர் பிரபாகரன்.  கண்டிப்பு வாத்தியார் என்பவர்கள் அத்தனை பேர்களும் கருணை இல்லாத வாழ்க்கையை பெற்றவர்கள் தான்.

உண்மையான உரிமைகள் சரியான முறையில் வழங்கப்படாத வரையில்,  உள்ளே அணைக்கவே முடியாத வெடித்துக் கிளம்ப தயாராய் இருக்கும் கங்கு ஜுவாலையைக் குறித்து இங்கு யாருக்கும் அக்கறையில்லை.  அடித்து நொறுக்கிவிட்டோம் என்று மார் தட்டி மண்னை வணங்கி முத்தமிட்டவர்கள் கூட இன்னமும் இராணுவ படைபலத்தை அதிகப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.  அவசர அவசரமான அறிக்கைகள், சேர்த்த சொத்துக்களை கடத்துதல் என்று தோற்றவர்களின் வலியை விட தங்களின் எதிர்கால வழியை நிணைத்து அவர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் தூக்கமில்லா இரவுகள் யாருக்குப் புரியும்?

வே. பிரபாகரன் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் அஞ்சலி.

அவர் குடும்பத்தார்கள் உருவாக்கிய ஆலயத்தில் வாழும் அத்தனை தெய்வங்களும் அவருடையை ஆன்மாவை அமைதி பெற உதவட்டும். தமிழர்களின் திருநாளான இந்த தை மாதமும், சுவை கூட்டும் பொங்கல் பண்டிகையும் தமிழர்களின் வாழ்க்கையில் நல்ல வழிகளை உருவாக்கட்டும்.

11 comments:

ஜோதிஜி said...

அணைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். வலி போய் வழி உருவாகட்டும்.

ஆ.ஞானசேகரன் said...

சரியான பகிர்வு.... நன்றிமா

இனிய திருநாள் வாழ்த்துகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

அன்புடன் நான் said...

வீரத்தலைமகனை தந்த அய்யாவிற்கு எமது வீரவனக்கம்.......

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வாழ்த்துகள் ஞானசேகரன்.

ஜோதிஜி said...

பொங்கல் வாழ்த்துகள் கருணா

Unknown said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

ஜோதிஜி said...

வாழ்த்துகள் மின்னல்.

:) said...

be my blog follower please
thnx

:) said...

be my blog follower please
thnx

பின்னோக்கி said...

பிற குழுக்களை அழித்த வேகம் பயங்கரமானது.

ஜோதிஜி said...

நன்றி பின்னோக்கி.

சகோதர யுத்தங்கள் 1 மற்றும் 2 படிக்கும் போது இன்னும் பல புரிதல்கள் கிடைக்கும்