Saturday, January 23, 2010

பிரபாகரன் சமாதானத்தை விரும்பாதவர்

பிரபாகரன் உருவாக்கிய " முதல் கரும்புலி தாக்குதலினால் " அதிர்ந்த இலங்கை ராணுவம் " யாழ்பாண முற்றுகை "  யை பாதியில் பரிதாபமாய் நிறுத்த வேண்டிய சூழ்நிலை. மறுபக்கம் ரா கொடுத்த அழுத்தங்கள் கொடுத்த பாதிப்புகள் ஜெயவர்த்னேவுக்கு முழி பிதுங்கி இந்தியா எதிர்பார்க்கும் ஒப்பந்தத்திற்கு தலையாட்ட வேண்டிய பரிதாபம்.
நரி ஞானி ஜெயவர்த்னே ஊசிப்போன பிரியாணி போல் நாறிக்கொண்டுருந்த நேரமது.  வல்லரசு தனது நெற்றிப்பொட்டில் வேகமாக தட்டிக்கொண்டுருந்தது.  ஒருவரை வழிக்கு கொண்டு வந்தாகி விட்டது.  அடுத்தது?  பிரபாகரன் பழி எடுத்துக்கொண்டுருக்கிறார்.  என்ன செய்வது?

பூடான் நாட்டில் நடந்த திம்பு பேச்சு வார்த்தை முதல் பெங்களூர் மாநாடு வரைக்கும் விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  காரணம் சமாதானத்திற்கான கதவுதகள் திறந்து இருந்த போதிலும் பிரபாகரன் என்ற ஆளுமை தன்னுடைய சுயநலத்துக்காக அத்தனையும் புறக்கணித்தார் என்பது இன்று வரையிலும் வைக்கப்படும் மொத்த குற்றச்சாட்டு.  அது உண்மையா?

1.  தமிழ் மக்கள் தனித்தன்மையான தேசிய இனக்கட்டமைப்பு உள்ளவர்கள்.  கடந்த கால நிகழ்வுகள், போராட்டங்கள், ஒப்பந்தங்கள், சிங்கள ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட உரிமைகள் என்று மொத்தத்திலும் சிங்கள தமிழ் இனம் என்பது சேர்ந்து வாழமுடியாத சூழ்நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

காரணம் இதற்கு முன்னால் நடந்த கேலிக்கூத்தான ஒப்பந்தங்கள்.  ட்டலி சேனநாயகா, பண்டாரா நாயகா ஒப்பந்தம், சீறீமாவோ பண்டாரா நாயகா ஒப்பந்தங்கள் என மொத்தமும் வெறும் தீப்பந்தமாகத் தான் போய் திருட்டுத்தனத்தின் உச்சமாக இருந்ததும், அதை தலைவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பதும் தான் நடந்தது.

2.  தமிழர்கள் வந்தேறிகள் அல்ல.  பூர்வகுடியான அவர்களுக்கு மொத்தமான உரிமைகளும், அத்தனை பாக்யதைகளும் உண்டு என்பதை உணர வேண்டும். சிங்களர்களைப் போல தமிழர்களும் தனித் தன்மையான தாயகம் உண்டும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

காரணம் இராணுவம் போர் தொடுக்கின்றது என்றால் முதலில் குறிவைத்து தாக்கப்படுவது தமிழர்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடுதல், வழிபாட்டுத்தலங்களை, நூலகங்களை குறிபார்த்து அழிப்பது என்று கனஜோராக நடந்து கொண்டே இருந்தது.

3.  உருவாக்கும் தமிழர்களின் உரிமையும், எதிர்பார்க்கும் தனித்தன்மையாக தேசத்திற்கும் எந்த காலத்திலும் சிங்களர்களால் தீர்மானிக்கமுடியாத அரசியல் சட்ட முன்வரைவு வேண்டும்.  வடக்கு கிழக்கு என்று தமிழர்களின் தாயகத்தை இணைத்து மொத்த தமிழர் தேசமாக உருவாக்கப்பட வேண்டும்.  தமிழர், முஸ்லிம், சிங்களர்கள் என்று பிரிக்கும் பட்சத்தில் எதிர்கால அமைதிக்கு என்றும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

காரணம் தந்தை செல்வா ஆட்சியாளர்களிடம் கேட்ட தமிழர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?  சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை, அது போல தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை என்ற இந்த இரண்டு பகுதிகளையும் சுயாட்சி மாநிலமாக அதே சமயத்தில் இரண்டையும் இணைத்து இந்தியாவில் உள்ள மத்திய அரசு போல மொத்த இலங்கைக்கும் ஒரு கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் அவரவர் வாழ்க்கையும் தனித்தன்மையுடன் பாதுகாத்துக் கொண்டு செல்லுதல்.  அமைதிக்கு அமைதியும் ஆச்சு.  இதற்குப் பிறகு எப்படி பிரச்சனைகள் வரும்?  ஆனால் எவர் கேட்டார்கள்?

4.  தமிழர்களின் வாழ்விடங்களில் இலங்கை இராணுவத்தின் ஆளுமையும், அக்கறையும், காவல்பணியிடங்களும் இருக்கும் பட்சத்தில் அதுவே அமைதியை கெடுக்கும் சூழ்நிலையைத்தான் உருவாக்கும். ஆகவே  நீக்கப்படவேண்டும்?

காரணம் சிங்களர்கள் வாழும் பகுதியில் தேவையான எல்லைக் காவல் படை முதல் அத்தனை பாதுகாப்பு சமாச்சாரங்களும் எப்போதும் தயாராய் இருக்கும்..  ஆனால் தமிழர்கள் பகுதியில் கலவரம் என்று தொடங்கினால் முதலில் கைது செய்யப்படுவதே தமிழர்களைத்தான்.  அது போக ஜாமீன் என்பதோ, சம்மந்தப்பட்டவர்களை பார்க்க முடியும் என்பதே நினைத்தே பார்க்க முடியாது?  நேராக பரலோகம் தான்.

5.  சகல தமிழ் மக்களுக்கும் சமமான உரிமைகளும், குடியுரிமைகளும் வேண்டும்.  தமிழர்களின் மொழியான தமிழ்மொழியே ஆட்சி மொழியாக, அரசாங்க மொழியாக இருக்க வேண்டும்.

காரணம் சிங்கள தலைவர்கள் கொண்டு வந்த ஆட்சி மொழி சிங்களம் என்பது மொத்த அரசாங்கத்திலும், நீதிமன்றத்திலும் சிங்களம் இருந்தால் மட்டும், தெரிந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.  மெதுமெதுவாக தமிழை மறந்தே ஆக வேண்டும். சரி கல்வி பாடசாலை முதல் மற்ற அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் சிங்களம் தெரிந்த போதிலும் தமிழர்களுக்கு ஒரு சட்டம்.  சிங்களர்களுக்கு ஒரு சட்டம்?  இடதும் குற்றம்.  வலது திரும்பினாலும் குற்றம்????

தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகத்திற்கு முன்னால் போராடிக்கொண்டுருந்த இனவாத தலைவர்கள் அத்தனை பேரும் தமிழர்களின் நலன் என்பதை விட மொத்தமாக சிங்கள -தமிழர்கள் நலன் என்றும், இலங்கை என்பதை அமைதியாக அணைவரும் ஒன்றாக சேர்ந்து, ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேயர்களை விரட்டி விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அவஸ்யம் என்பதாக கருத்தில் கொண்டு போராடிப் பார்த்தவர்கள்.


பின்னால் வந்த தந்தை செல்வா காந்திய வழியான போராட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அத்தனை சிங்கள தலைவர்களுக்கும் காவடி தூக்குபவராக இருந்த போதிலும், உரிமைக்கான போராட்டங்களை முன் எடுத்து போராடிப்பார்த்த போதும் ஆண்டு கொண்டுருந்த எந்த தலைவர்களும், எவரும் அசைந்து கொடுக்கக்கூட தயாராய் இல்லை.  காரியம் ஆகும் வரைக்கும் பசப்பு வார்த்தைகள். அதுவே ஒரு அளவிற்கு மேல் போனதும் கை கழுவுதல் என்ற கண் எதிரே அத்தனை அக்கிரமங்களையும் அட்டகாசமாக நிறைவேற்றிக்கொண்டுருந்தனர்.  ஆதரவுக்கு ஆதரவும் ஆச்சு.  பெற்ற தமிழர்களின் ஆதரவை வைத்துக் கொண்டு தான் நிணைத்த சிங்கள மக்களுக்குத் தேவையான அத்தனை முன்னேற்பாடுகளையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது?    எப்பூடீ???????

அப்படியென்றால் நம்முடைய தமிழ் தலைவர்கள்.  " தயை கூர்ந்து தமிழ் மக்களே அமைதியாய் இருங்கள்.  நமக்கான விடிவு இன்னும் வரவில்லை.  நம்பிக்கை இழக்காதீர்கள்.  காந்திய வழி என்பது இறுதி தீர்வு.  ஆனால் காலம் நாம் அடைய வேண்டிய கரையை காட்டும்.  அது வரைக்கும் நாம் பொறுமையை இழக்கக்கூடாது?"    என்று மக்களின் ஆற்றாமையை அமைதிப்படுத்தினார்கள்?????

பின்னால் வந்த அமிர்தலிங்கத்தை ஜெயவர்த்னே ஏறக்குறைய புழுவுக்குச் சமமாக மிதித்ததும், பாராளுமன்ற கூட்டத்தில் சொல்ல முடியாத அளவிற்கு கேவலத்தின் உச்சகட்டமாய் நடத்திய போதும் அவரால் மீறவும் முடியவில்லை.  மாறவும் முடியவில்லை.   இந்திரா காந்தி, கலைஞர் என்று காவடி எடுத்தாரே தவிர இறுதியில் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த தமிழர்கள் கூட ஒரு அளவிற்கு நம்பிக்கை இழக்கும் சூழ்நிலைதான் உருவானது.

இன்றைய பிரபாகரன் என்பவர் கூட அமிர்தலிங்கம் பார்க்க வளர்ந்தவர். இடையில் இயக்கப் போராளிகளுக்குள் பிரச்சனை உருவான போது நல்ல புரிதல்களை உருவாக்கியவர்.  ஒரு அளவிற்கு மேல் இளையர் கூட்டம் வெகுண்டு எழுந்த போது அமைதிப்படுத்த முடியாமல் தடுமாறி நின்றவர்.  அவரே பூனைக்கும் பாலுக்கும் காவலாக இருந்தவர்.  தன்னுடைய உயிர் சிங்களர்களால் பறிக்கப்படுமா?  இல்லை போராளிகளால் போக்கப்படுமா? என்று நாளொரு வண்ணமும் பொழுதொரு அவஸ்த்தையுமாக மரண வாழ்க்கை வாழ்ந்தவர்.  இறுதியில் விடுதலைப்புலிகளினால் மேலோகம் அனுப்பப்பட்டவர். ஆனால் விடுதலைப்புலிகள் நாங்கள் இல்லை என்று எப்போதும் போல அறிக்கை விட்டனர்.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்த்து, கேட்டு, உணர்ந்து வந்த பிரபாகரன் இனி எந்த காலத்திலும் இவர்களை மாற்ற முடியாது.  இனி வாயால் பேசினால் உரிமைகள் கிடைக்காது. இவர்களை உதைத்தால் தான் உண்மையான உரிமைகளை தமிழர்கள் பெற முடியும் என்பதை உணர்ந்த காரணத்தினால் மட்டுமே தான் தேர்ந்தெடுத்த ஆயுதப்பாதை தவறு என்று உணரும் சூழ்நிலை உருவாகாமல் கடந்து போய்க்கொண்டே இருந்தது.  அதுவும் ஜெயவர்த்னே ஆளத் தொடங்கிய போதும் இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதிலும் அளவு கடந்த அவரின் தமிழர் வெறுப்பு என்பது சாதாரண அப்பாவி தமிழ் மக்களுக்கே பேரிடியாக இருந்தது.

நம்மவர் பிரபாகரன்.  சொல்லவா வேண்டும்.  கண்ணுக்கு கண்.  பல்லுக்கு பல்.  ஆனால் இதிலும் ஒரு ஆச்சரியம்.  சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்கள் என்பவர்கள் அத்தனை பேர்களுமே போராளிக்குழு தான்.  ஆனால் விடுதலைப்புலிகள் சிங்கள அப்பாவி மக்கள் மேல் தாக்குதல் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இறுதி வரையிலும் போர் தர்மம் என்பது கடைபிடிக்கப்பட்டது.  முள்ளிவாய்க்கால் வரைக்கும்.  வேறுவழி இல்லை என்ற சூழ்நிலையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போரில் மொத்த வாழ்வாதாரமான அணை மட்டும் உடைக்கப்பட்டுருக்குமேயானால் இன்று தேர்தலும் இருக்காது?  பொது வேட்பாளர் பிழைத்து இருப்பாரா என்பதும் சந்தேகம்?   சிங்கள பெரும்பான்மை என்பது இன்றைய சூழ்நிலையில் சிறுபான்மையாகி சிறுத்த குட்டிப்படையாய் பக்கியாய் மாறியிருக்கும்.

பிராந்திய நலனை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் இந்தியாவின் எறிகணை பார்வையை வேறு வழியே இல்லாமல் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு ஒரமாக பார்வையாளனாக அமர்ந்து பார்க்க வேண்டிய தர்மசங்கட நிலைமை பிரபாகரனுக்கு.

வரவில்லை என்றாலும் குற்றம்.  வந்து எதிர்த்தாலும் குற்றம். அது தான் திம்பு தொடங்கி பெங்களூர் வரைக்கும் நடந்தது.  இந்த பிரச்சனையை முழுமையாக புரிந்து கொண்டவர் தீட்சித் என்ற போதிலும்,  இந்த புதிர் பிரச்சனையை நாங்கள் அவிழ்த்துக் காட்டுகிறோம் என்று ராஜீவ் உருவாக்கிக் கொண்டுருக்கும் வீண் பிடிவாதங்களும், அவருக்குப் பினனால் இருக்கும் வானளாவிய அதிகார வர்க்கத்தினரையும் எப்படி எதிர்கொள்வது?

சிங்களர்கள் என்றால் சிரத்சேதம் செய்துவிடலாம்.  இது இந்தியா?  தாய் தந்தையர் நாடு.  தலைமுறைகளும், நம்மை இப்போது வளர்ப்பவர்களும், வளர்த்தவர்களும், ஆதரிப்பவர்களும் என் மொத்தமாக தமிழ்நாட்டின் உள்ளே இருக்க எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது?
இடது வலது இரண்டு பக்கத்திலும் பிரச்சனை?   யோசனை என்பதோ பேச்சு என்பதோ தேவையில்லை என்று கருதுபவர் பிரபாகரன்.  காரணம் இது அரசியல் கட்சி அல்ல.  செயல் ஆமாம் செயல் மட்டுமே முக்கியம் என்று அனைவருக்கும் உணர்த்தி வாழ்ந்து கொண்டுருப்பவர். சாத்யமில்லாத சமாதான பேச்சுவார்த்தைகளை விரும்பாத பிரபாகரனை கொழும்புவில் இருந்த இந்திய தூதரகத்தில் அரசியல் பிரிவில் செயல்பட்டுக்கொண்டுருந்த அதிகாரி ஹர்தீப் பூரி யாழ்பாணத்திற்கு வருகை தந்து (1987 ஜுலை 19) பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார்.  அவருடைய அலுவலகத்தில் சந்தித்த பிரபாகரனுக்கு புதுடெல்லியின் அழைப்பு கொடுக்கப்பட்டது.

காரணங்கள் எதுவும் விளக்கப்படவில்லை.  தமிழர்களுக்கு உண்டான தீர்வு உடன்படிக்கைகள் ராஜீவ் காந்தி மூலம் உருவாக்கப்பட்டவைகளை விளக்கும் பொருட்டு என்று சொன்ன போதிலும் வேறு வழி எதுவுமில்லாத பிரபாகரன் அந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலைமை.  அனுப்பி வைக்கப்பட்ட இந்திய ராணுவ விமானத்தின் (1987 ஜுலை 23 யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகம்) மூலம் உடன் யோகரெத்தினம், தீலிபனுடன் சென்னையை நோக்கி பயணித்தார்.  அப்போது சென்னையில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்திடம் தமிழ்நாட்டு காவல்துறையினர் பிரபாகரன் வருகையை மட்டும் தெரிவிக்க, விமான நிலையத்தில் இணைந்து கொண்டவர் மொத்தமாக புதுடெல்லியை நோக்கி பயணம் செய்தனர்.  விமான நிலையத்தில் அதிகாரி பூரியிடம் என்ன வகையான தீர்வு என்று கேட்ட போதிலும் பிரபாகரனிடம் சொன்ன அதே பதில் தான் சொல்லப்பட்டது.

"உங்களுக்கு மொத்த விசயங்களும் டெல்லியில் அதிகாரி தீட்சித் தெரிவிப்பார்".

தந்திரமென்றாலும் மந்திரம் போல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டுருந்தது.  டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசோகா நட்சத்திர உணவு விடுதியின் மேல்தளம் வரைக்கும் கருப்பு பூனை பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டனர்.  ஏற்கனவே செய்திருந்தபடி மொத்த வெளியுலக தொடர்பும் துண்டிக்கப்பட்ட நாகரிக சிறைவாசம் தொடங்கியது.
திரைப்பட(ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம்) கதாநாயகன் போல் அதிகாரி தீட்சித் வந்து அமர்ந்தார்.  பற்ற வைத்த சுருட்டு புகையை மீறி வெளிவந்த அவருடைய வார்த்தைகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது போலிருந்து.  இறுதியில் " நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும் " என்று ஒரு ஆங்கிலத்தில் அடிக்கப்பட்ட ஒரு கத்தை தாள்களை முன்னால் வைத்தார்.  பாலசிங்கம் படித்து முடித்து சொன்ன போது பிரபாகரன் முகம் வெளிறியது மட்டுமல்லாமல் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வெறியையும் உருவாக்கியிருந்தது.

ஜெயவர்த்னே உருவாக்கிய அதே திட்டம்.  தமிழர்கள் வாழும் பகுதியை மூன்று கூறுகளாக பிரித்து, தமிழர், சிங்களர், முஸ்லீம் என்று துண்டாடி இருந்தது மட்டுமல்லாமல் திருகோணமலை பகுதியும், சிங்களர்களுக்கான தனிப்புரிதலுடன்.

நரித்தனமாக தன்னுடைய வேலையை காட்டியிருந்த ஜெயவர்த்னே ஜெயிக்கத் தொடங்கிய முதல் அடி அது.  முதல் கோணல் முற்றிலும் கோணல்.  அதனால் என்ன?  வெற்றிகரமாக ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தனது பயணத்தை தொடங்கியது

6 comments:

Hai said...

இவ்வளவும் வரலாறாய் போய் விட்டதே

M.Thevesh said...

இலங்கைப்பிரச்சனையில் ஈழத்தமிழரின் வரலாறு, அவர்களின் உரிமைகள், பற்றிமுழுவதும் அறிந்தவர்
திரு.பார்த்தசாரதி ஒருவர் மட்டுமே.தீஷ்ஷிற் க்குத் தெரிந்தது 50 வீதத்துக்கும் குறைவே.இந்தப்பிரச்சினை
யைத்தவறாகக்கையாண்டு குழிதோண்டிப்புதைத்ததே
இந்த தீஷ்ஷிற் தான்.வைசிராய் மாதிரிநடந்து எல்லார்
வெறுப்பையும் சம்பாதித்தவர்.

ஜோதிஜி said...

முற்றிலும் உண்மை.

Anonymous said...

why srilanka should not conect with india. why ltte was not try for this earlier...?

மாறன் said...

இறுதிப் போர் 2009ல் முடியும் என்பது பிரபாகரன் முன்னேற அளித்திருந்தார்.

ஜோதிஜி said...

இது குறித்து மேலாதிக்க தகவல் இருந்தால் இங்கே எழுதுங்க மாறன்.