Saturday, December 19, 2009

திருப்புமுனை தி.நகர்

"மக்கள் இயக்கம்"  என்று மாறவேண்டிய அவஸ்யத்தை உமா மகேஸ்வரன் சொன்ன போது "அது காலப்போக்கில் வெறும் அரசியல் கூச்சல் இயக்கமாக மாறிவிடும்" என்று வாதப் பிரதிவாதிகளைத் தொடர்ந்து பிரபாகரன் மொத்தமாக ஆயுதங்களை ஓப்படைத்து விட்டு வெளியேறிய நேரம்.  "முடிவு ஒருவர் மட்டுமே எடுக்க வேண்டும்.  செயலில் மட்டுமே இயக்கப் போராளிகள் பங்கெடுக்க வேண்டும்"  என்ற நோக்கமுள்ள பிரபாகரன் தனியாக புதிய நிர்மாணம் செய்ய முயற்சித்துக்கொண்டுருந்தார்.  இதே சமயத்தில் அமிர்தலிங்கம் உருவாக்கிய சமாதானமும் எடுபடவில்லை.

வெளியே வந்தவரை டெலோ இயக்கத்தில் தங்கதுரை இணைத்துக்கொள்ள, இயக்கத்தில் இருந்த குட்டிமணி பிரபாகரனை இயக்கத்தின் பயிற்சி பொறுப்பாளாராக நியமித்து தனியாக ஆயுதங்கள் கொடுத்தார். இதன் தொடர்பாக போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதற்காக (1980)  திருச்சியிலும் மதுரையிலும் முகாம் அமைக்கப்பட்டது. " மற்றொரு இயக்கத்திற்கு அதன் வலிமைக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறோம்" என்று மனதிற்குள் இருந்த ஆதங்கம் "தான் தன்னுடைய" என்ற சிந்தனைக்கு வித்திட்டது.

அப்போது இருந்த பொருளாதார நெருக்கடியில் தோன்றியது தான் "இனி ஆயுதங்கள் வாங்க செலவழிக்கக்கூடாது.  எதிரிகளிடம் இருந்தே கைப்பற்றவேண்டும்".

தொடர்ச்சியான அரசாங்கத்தின் தேடலின் காரணமாக குட்டிமணியும் தங்க துரையும் இந்தியாவிற்கு தப்பி வர முயற்சிக்க பருத்திதுறைக்கு அருகே உள்ள மணல்காடு என்ற இடத்தில் வைத்து ஆட்சியாளர்களால் கைது செய்யப் பட்டனர்.  கொண்டு வந்த விட்டவர் சீறீ சபாரெத்தினம்.   படகு ஏற்பாடு செய்து இருந்தது பிரபாகரன்.  இவர்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்து இந்த விசயம் காவல்துறைக்கு தெரிந்த காரணத்தால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனி விமானத்தில் இருவரையும் கொழும்பு கொண்டு சென்றனர். பின்னாளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீட்டு காரணமாக சிறையில் இருந்தவர்களை உருவான கலவரத்தில் உள்ளே இருந்த சிங்கள கைதிகள் 53 பேர்களை கொன்று , தமிழீழத்தை என் கண்களாவது பார்க்க வேண்டும் என்று சொன்ன கண்களை நோண்டி எடுத்து காலில் போட்டு மிதித்ததும் நடந்தது.

ஜெயவர்த்னே மொத்த இயக்க தடைகளையும் தீவிரமாக கண்காணித்துக்கொண்டுருந்த தருணம் அது.   டெலோ இயக்கத்தில் இருந்த மற்றவர்களும் பிடிபட மொத்தமாக இயக்கம் முடங்கிப்போயிருந்தது.  தேடலும், துரத்தலும் அதிகமாக பிரபாகரன் சென்னைக்கு வந்து (1981) வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார்.  அப்போது  பிரபாகரன் கொள்ளைகையை மீறீ உமா மகேஸ்வரன் PLOTE என்ற தனி இயக்கம் (1980) தொடங்க, அப்போது தோன்றிய மற்ற இயக்கம் EROS.  இதில் இருந்து விலகிய பத்பநாபா,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உருவாக்கிய இயக்கம் EPRLF (Ealem People Revolutionary Left Front).
இயக்கத்தின் கொள்கைகளை அறிக்கையாக்க தட்டெழுத்துப் பயிலகத்திற்கு வரும் உமா மகேஸ்வரன் அங்கு இருந்த ஊர்மிளா என்ற பெண்ணுடன் தொடர்பு உண்டாக, அதுவே உறவு வரைக்கும் தொடர, அதை பலரும் பார்க்க வேண்டிய சூழ்ந்லையில் சந்தர்ப்பங்கள் அமைந்து விட மொத்தமாக பிரச்சனை வெடித்தது.  ஊர்மிளா விதவைப்பெண்.  உமா மகேஸ்வரன் ஏற்கனவே உறவு பெண்ணுடன் திருமணம் என்ற தொடக்க முயற்சியில் இருக்க ஒன்றுடன் ஒன்று இயக்கத்திற்குள் பல கேள்விகளை எழுப்பியது.

பிரபாகரனின் இயக்க கொள்கையான ஓழுக்கம் என்பதை விட ஓழுக்கக்கேடாக மாற்றம் பெற உண்டானது அடுத்த மோதல்.  ஆன்டன் பாலசிங்கம் சமாதானம் எடுபடவில்லை. விலக்கப்பட்ட உமா மகஸ்வரன் தனியாக PLOTE என்ற இயக்கம் பிரபாகரன் எதிர்ப்பையும் மீறி தொடங்கப்பட்டது.  பிரபாகரனின் கொள்கை "இயக்கத்தில் இருந்து வெளியேறினால் புதிய இயக்கம் தொடங்கக்கூடாது".

வெளியே வந்த உமா மகேஸ்வரன், தனியாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  அப்போது பிரபாகரன் டெலோ இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுருந்தார்.  வெளியே செயல்பட்டுக்கொண்டுருந்த உமா மகேஸ்வரனுடன் இருந்த  சுந்தரத்தை, பிரபாகரன் உத்தரவின்படி சத்தியசீலன் சுட்டுக்கொன்றார்.  காரணம் வெளியேறியவர்கள் தாங்கள் தொடங்கிய "புதிய பாதை" என்ற செய்திதாளின் மூலம் அப்போது பிரபாகரன் உருவாக்கிக்கொண்டுருந்த விடுதலைப் புலிகளைப்பற்றியும், பிரபாகரன் பற்றியும் வசைமாறி பொழிந்து கொண்டுருந்தனர்.

இது போக பிரபாகரன் பிரிந்த சமயத்தில் மொத்த ஆயுதங்களையும் தனியாக எடுத்து பதுக்கியவர் இந்த சுந்தரம்.  டெலோ முடங்கி விட்டது என்று உமா மகேஸ்வரன் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டுருந்த போது இறந்த சுந்தரத்தைப் பார்த்து தன்னையும் இனி சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று தமிழ்நாட்டில் வ்நது தஞ்சம் புகுந்தார்.  பிரபாகரனும் அதி முக்கிய குற்றவாளி என்ற அரசாங்கத்தின் தேடல் தீவிரமானதைத் தொடர்ந்து தப்பித்து வந்து வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார்.

ஏற்கனவே இலங்கையில் நடந்து சமாதான உடன்படிக்கை பிரபாகரன் உமா மகேஸ்வரன் இருவரிடத்திலும் சரியான புரிந்துணர்வை உருவாக்காத காரணத்தால் ஆன்டன் பாலசிங்கம் இந்த முறை இருவரும் சென்னையில் இருப்பதால் நேரிடையாக தன்னுடைய மனைவி அடேலுடன் வந்து உருவாக்கிய போதும் பிரபாகரன் அசைந்து கொடுக்கவில்லை.  ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்வதில்லை என்று பிரிந்தனர். அப்போது உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி நான் LTTE யை சொந்தம் கொண்டாட மாட்டேன் என்று உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதி.

பிரபாகரன் ஒதுங்கினாலும் சுந்தரம் கொலைக்குப்பிறகு தானும் சாகடிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருந்த உமா மகேஸ்வரன் , பிரபாகரனை தீர்த்துக்கட்ட சமயம் எதிர்பார்த்து காத்துருக்க வேறொரு புதிய சூழ்நிலை உருவானது.

சென்னை தி.நகரில் உணவகத்தில் இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரன் அவருடன் இருந்த கண்ண்ன், சாலையில் நடந்து வந்து கொண்டுருந்த பிரபாகரனை பார்த்து விட தன்னை கொல்லவருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு உமா மகேஸ்வரன் துப்பாக்கியை எடுக்க அதற்குள் பிரபாகரனின் தோட்டா சீறிப்பாய்ந்தது.  குனிந்து தப்பிக்க இருவரும் (மே 19 1982) பாண்டிபஜார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  எதிர்காலத்தில் பிரபாகரன் என்ற பெயர் எந்த அளவிற்கு உலகம் முழுக்க பரவும் என்பதை அன்று உணர்ந்திராத காவல் துறையிடம் (இன்ஸ்பெக்டர் நந்தகுமார்) தன்னுடைய பெயராக பிரபாகரன் சொன்னது தான் கரிகாலன்.

அன்று வாங்கிய கைரேகை மற்ற அடையாளம் ஒன்று மட்டுமே பிரபாகரன் இறப்பு என்ற சொல்லப்படுகின்ற கடைசி வரைக்கும் ஒப்பிட பயன்பட்டது.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அக்கறையாக இந்த கைரேகைகளை இலங்கைக்கு எடுத்துக்கொண்டு பயணித்தார் ஒரு தனி அதிகாரி.
அப்போது அரசாங்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். பார்வைபட்டதும், வள்ளல் பெயரை நீரூபித்ததும், ஆதரவுக்கரம் கொடுத்ததும், ஜெயவர்த்னே அமெரிக்க ஆதரவு போக்கை மட்டுப்படுத்தி பயமுறுத்த உருவாக்கி இருந்த RAW (Research and analysis Wing) அமைப்பு மூலம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலமாக இந்தியாவில் போராளிகளுக்கு பயிற்சி முகாம் ஏற்படுத்திக்கொடுத்ததும் இதன் தொடர்ச்சியாக.
காரணம் அன்றைய தினம் பிரபாகரன் தலைக்கு இலங்கை அரசாங்கம் வைத்திருந்த விலை 10 லட்சம்.  மேலும் 1973 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது இதேபோல் குட்டிமணியை இலங்கை அரசாங்கத்திடம் கலைஞர் ஒப்படைத்தது போல் வீணான பிரச்சனைகளை எம்.ஜி.ஆர் உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

காரணம் தமிழ்நாட்டில் அப்போது ஈழ ஆதரவு கொளுந்து விட்டு எறிந்து கொண்டுருந்த தருணம் அது.

காவல்துறையின் கட்டளையின்படி ஏழுமாதங்கள் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்ததும், அப்போது உருவான பழ.நெடுமாறன் உதவியும் பிரபாகரனுக்கு எல்லாவிதங்களிலும் வளர உதவியது. மற்ற இயக்கங்கள் மறைந்து   செயல்படாமல் முடங்கிக் கொண்டுருந்தது. தனித்தன்மையாக LTTE புதிய நிர்மாணம் தொடங்கிய காலம்.  "தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும்" என்ற பிரபாகரன் கொண்டுருந்த கொள்கைக்கு மக்கள் ஆதரவு கிடைக்க ஆண்டு கொண்டுருந்த ஜெயவர்த்னே மற்றொரு காரியம் செய்தார்.  இவர்களின் உள் குழப்பங்களைப் போலவே உலகமே காறித்துப்பும் உலகப் புகழ்பெற்ற யாழ்பாண நூலகத்தை தீயிட்டு மகிழ்ந்தார்.

3 comments:

geethappriyan said...

பல அரிய தகவல்களின் தொகுப்பு

geethappriyan said...

பல அரிய தகவல்களின் தொகுப்பு, ஓட்டூக்கள் போட்டாச்சு

ஜோதிஜி said...

உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி அறிவுத்தேடல்