Wednesday, December 02, 2009

ஆயுதமொழியின் தந்தை அமைதிமொழி

தொடக்கம் முதல் சிங்கள தலைவர்கள் தமிழர்கள் மேல் காட்டிய "அக்கறை" அத்தனையும் வியப்புக்குரியது.  மொத்தத்தில் தீர்ககதரிசனம்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள்.
கலவரத்தின் மூலம் அடித்து துரத்தப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் சிங்கள குடியேற்றங்கள்.  காரணம் தேர்தலில் நிற்கும் சிங்கள தலைவர்கள் வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு.  தமிழர்களின் எண்ணிக்கை குறைய குறைய சிங்கள மக்கள் ஆதிக்கம் அதிகமானால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  தேர்தல் வெற்றி.  சிங்கள மக்கள் ஆதரவு.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மறைமுகமாக தமிழர் பகுதியை அபகரித்தல்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா (Gal Oya) மதுர ஓயா (Madura Oya), திருகோணமலை பகுதியில் அல்லாய், கந்தளாய்,யான் ஓயா.

அதேபோல் மகாவலி வளர்ச்சித்திட்டம்.

1946ல் தொடங்கி 1981 வரைக்கும் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு என்று சுருங்கி விட்டது.  சுருக்கமாக சொன்னால் மொத்தமாக வாழ்ந்த தமிழர்களின் பரப்பளவு 8000 சதுரமைல் 3000 ஆக மாற்றம் பெற்றது.
தமிழர்கள் தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகள் சிங்களர்கள் போட்டியிடும் தொகுதியாக மாற்றம் பெறும் அளவிற்கு.
              தந்தை செல்வா அவர்களுடன் தந்தை பெரியார்
ஓட்டு உரிமையை பறித்து இந்திய தேயிலைதோட்டத்தொழிலாளர்களை  ஓட்டத்தொழிலாளர்களாக உருவாக்கியதன் பின்னால் மொத்த தமிழர்களின் சதவிகிதத்தை குறைக்க வேண்டும்.  வெற்றி.  மைனாரிட்டி தமிழர் கட்சியை ஆதரவைப் பெற்றுக்கொண்டு மெஜாரிட்டி சிங்கள மக்களின் குடியேற்றங்களை தமிழர் பகுதியில் உருவாக்க வேண்டும்.    

அதுவும் வெற்றி.  தமிழர்களின் பாராளுமன்ற தொகுதிகளை சிங்கள மக்களின் எண்ணிக்கை வைத்து சிங்கள தலைவர்கள் போட்டியிடும் அளவிற்கு மாற்றம் செய்ய வேண்டும்.  மகா வெற்றி. கையை, காலை உடைத்தப்பிறகு மீதி ஒன்று மிச்சம் உள்ளது.  மண்டை அதற்குள் உள்ள மூளை.

ஆமாம்.  தீர்க்கதரிசனமாய் அதற்கும் 1971 முதல் "தரப்படுத்துதல்" (Standardisation).

சிங்கள தலைவர்கள் உருவாக்கிய மொத்த திட்டங்களிலும் இது தான் சிறப்பானது. முதன்மையானது.  என்ன செய்தாலும் இவர்கள் மீண்டு வந்து ஆட்சி அதிகாரத்தில் வந்து அமர்ந்து விடுகிறார்கள்.  கால் வயித்துக்கு கஞ்சி இல்லாவிட்டாலும், தங்க வீடு இல்லாவிட்டாலும் எப்படியும் படித்து தொலைத்து நம்மை வந்து தொல்லைபடுத்துகிறார்கள். இனி என்ன செய்வது?

பள்ளி கல்லூரிகளில் சிங்கள தமிழ் மாணவர்களுக்கு தனித்தனியாக சட்டங்கள்.

உரிமைகள்.  வாய்ப்புகள்.

மொத்த தமிழ் மாணவர்களும் அந்தர ஆத்மா போல் ஆகத் தொடங்கினர்.  பாதியில் வெளியேற்றம், முதுகலை போக முடியாமை, கல்லூரிக்கே செல்ல முடியாமை, படித்து முடித்தாலும் நேர்முகத் தேர்வில் உருவான மாற்றங்கள் ஆக மொத்தமும் கூமுட்டைகள் அத்தனையும் கூவும் முட்டையாக மாற்றம் பெற்றது.  உருவான கோழிக்குஞ்சு அத்தனையும் இறந்து பிறந்தது.  அல்லது முடமாகி ஒதுங்கியது.

மருத்துவக்கல்லூரியில் நுழைந்த (1981) சிங்கள மாணவர்கள் 81 சதவிகிதம்.  தமிழ் மாணவர்கள் 20 சதவிகிதம்.  பொறியியல் கல்லூரியில் சிங்களர் 70 தமிழர்கள் 49 சதவிகிதம்.

சிங்கள மொழி மட்டும் ஆட்சி மொழி என்று கொண்டு வந்த போது அரசாங்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் கடைநிலை ஊழியர் முதல் மேல்மட்ட சிவில் சர்வீஸ் வரைக்கும் இடையில் புகுத்தப்பட்ட ஒரு விதியானது, சிங்கள மொழியை நன்கு பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும்.  இது போக ஏற்கனவே பணி புரிந்து கொண்டுருக்கும் தமிழ் ஊழியர்கள் சிங்கள மொழி கற்றல் அடிப்படையில் பதவி உயர்வு போன்ற பல விசயங்கள்.

இவை ஒவ்வொன்றும் கோர்த்த மாலையாக ஆன போது சிங்கள அரசாங்கத்தில் அன்று இலங்கைக்குள் மொத்தமாய் வாழ்ந்த 25 சதவிகித தமிழ்மக்கள், அரசாங்க பதவிகளில் ஐந்து சதவிகிதமாக மாற்றம் பெற்றனர். தென்னாப்பிரிக்காவில் கடைபிடித்த "இன ஒதுக்கல்" (Racial Discrimination) என்ற கொள்கையை சிங்கள தலைவர்கள், ஆட்சியாளர்கள் அப்பட்டமாக கடைபிடித்தனர்

மேலே சொன்னவைகள் தமிழன் என்று பிறந்த காரணத்தால் அவனின் தனி மனித வாழ்க்கையில் நடந்த கொடுமைகள்.  இனி தமிழ் மனித பொருளாதார  கொடூரங்கள்.

1948 ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட காங்கேசன்துறையில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை, பரந்தனில் உள்ள இரசாயனத் தொழிற்சாலை, வாழ்ச்சேனையில் உள்ள காகித தொழிற்சாலை.  இவை மூன்றும் தான் பெரியது.

சிங்கள மூதலீட்டாளர்களால் உருவாக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட எந்த தொழிற்சாலையும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளுக்குள் உருவாக்கப்படவில்லை. முதல் 25 வருடத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த சீனர்கள் உருவாக்கிய "பிரைமா மாவு அறைவு ஆலை" என்பது மட்டும் திருகோணமலையில் உருவானது.  ஆனால் பணியாளர்களில் சிங்களர்களை தேர்ந்தெடுத்த பிறகு தான் தமிழர்கள்.  எல்லா இடங்களிலும் எழுதப்படாத சட்டம் இது.

கூமுட்டைகளின் அறிவு சார்ந்த முன்னேற்பாடுகளை கவனித்தால் புரியும். அன்றைய அதிகார வர்க்கம் முதல் ஆட்சியாளர்கள் வரைக்கும் தமிழர் எதிர்ப்பு என்பதில் எத்தனை தூரம் அக்கறையாய் இருந்தது இருக்கிறார்கள்.

அக்கறையான்குளம் என்ற பகுதியில் தொடங்க வேண்டிய சர்க்கரை ஆலை சென்ற இடம் கல்லோயா (Galloya)
மிகச்சிறந்த உப்பள பகுதியான ஆனை இறவு (Elephant Pass) என்ற பகுதியை புறந்தள்ளிவிட்டு அம்பாந்தட்டையில்.
மொத்த பருத்திவிளைச்சலுக்கு சிறப்பான பகுதியான பூனாகரி (Poonahri)யை புறந்தள்ளிவிட்டு மாற்று சிங்களப் பகுதியில்.

இதில் ஒரு ஆச்சரியம்.  இவர்கள் மாற்று இடமாக தேர்ந்தெடுக்கும் அத்தனை இடங்களும் வல்லுனர் குழுவால் நிராகரிக்கப்பட்ட இடங்கள்.

தமிழர்கள் விளைவிக்கும் அத்தனை பணப்பயிர் தொடங்கி, காய்கறிகள் வரைக்கும் விலையை குறைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சூறையாக்கும் பொருட்டு அவ்வப்போது இறக்குமதி என்று தனியாக.

மீன்பிடி தொழிலில் ஈடுபடும் தமிழர்கள் வாழும் இடங்களில் சிங்களர்களை குடியேற்றுவதுடன் மட்டுமல்லாமல் அவர்களுக்கு வங்கிக்கடன் மூலம் அத்தனை முன்னேற்பாடுகளை உருவாக்கி தமிழ் மீனவர்களின் வாழ்க்கையும் தத்திங்கிணத்தோம் போடச்செய்வது.

இன்றைய முள்ளிவாய்க்கால் "முற்றுகை" என்பது அன்றே தொடக்கம் பெற்றதாய் இருந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒரே அடி.  அடி ஒவ்வொன்றும் இடியாய் தமிழர்களின் தலையில் இறங்கியது.

முதல் 25 வருடத்தில் சிங்கள பகுதியில் நிறைவேற்றப்பட்ட மிகப்பெரிய திட்டங்கள்.  மகாவலி நீர்ப்பாசன திட்டம் (300 கோடி) , கொழும்பு நகர வளர்ச்சி (100 கோடி), கட்டுநாயகா விமான தளத்தில் Free Trade Commiercial Zone  என்ற வணிக வளாகத்திற்கு 100 கோடி என்று மொத்த கோடிகளை சிங்களர்கள் வாழ்ந்த பகுதியில் கொண்டு போய் கொட்டிக்கொட்டி மொத்த தமிழர்களையும் தெருக்கோடிக்கொண்டு வந்தார்கள்.

அப்போது ஐ.நா சபையில் பொருளாதார வல்லுனராக இருந்த Mr. Lee சொன்ன வாசகம் இது.

"1948 முதல் 1970க்கும் இடையே மொத்த இலங்கை பொருளாதாரதாரத்தில் வளர்ச்சி அடைந்த சிங்களர்ளர்களின் சதவிதிகம் நூற்றுக்கு 28 சதவிகிதமும் தமிழர்கள் மைனஸ் 25 சதவிகிதம் (பச்சையாக சொல்லப்போனால் பராரி)
மாற்றம் பெற்றுள்ளது".

அமைதி வழி தான் எப்போதும் சிறந்தது என்று சொன்னவர் தந்தை செல்வா. செல்வநாயகம் நீதிமன்றத்தில் (1947) வாதப்புலி என்று பெயர் பெற்றவர்.  அன்றைய செல்வக்குடி மகன். பின்னாளில் அரசரின் வழக்குறைஞர் (King's counsel) என்று மாறி கடைசியாக அரசியின் வழக்கறிஞர் (Queen's Counsel) என்று மொத்த இன்றைய இலங்கை தமிழர்களின் வரலாற்றில் அப்பழுக்கற்ற அரசியல் ஞான குரு.

ஜீஜீ பொன்னம்பலத்தின் நம்பிக்கை துரோக்கத்தின் காரணமாக "இலங்கை தமிழர் காங்கிரஸ்" கட்சியில் தூணாக இருந்தவர் 1949 டிசம்பர் 18 அன்று "இலங்கை தமிழரசு கட்சி"யை உருவாக்கியவர்.

தந்தை செல்வா அறிவுரையின் மூலம் அன்றைய இளைஞர்களை அமைதிப்படுத்தி வைத்து இருந்தவரால் படிப்பிலும் கை வைத்த சிங்கள ஆதிக்க சக்தியினால் ஒன்றிணைந்து கொண்டுருந்த இளைய சமூகத்தின் கனன்ற நெருப்பை அணைக்க முடியாமல் தடுமாறினார்.

சிங்களர்களுக்கு உங்கள் "அமைதி மொழி" புரியாது.  எங்கள் "ஆயுத மொழி" தான் புரியும் என்று மட்டும் தான் அன்றைய இளைஞர்கள் சொன்னார்கள். எவரும் செயல்படுத்த நினைக்கவில்லை?  ஆனால் அடுத்துப் பார்க்கப்போகும் கடந்த 25 வருடங்களில் சிங்களர்களால் நடத்தப்பட்ட "கோரத்தாண்டவங்கள்" அத்தனையும் ஏன் இன்னும் தாமதம்? என்று அவர்களின் சிந்தனைகளில் "மாற்றத்தை" உருவாக்கியது.

4 comments:

புலவன் புலிகேசி said...

கொதிக்க செய்யும் ஈழப்பதிவு...

ஜோதிஜி said...

எந்த பாகுபாடும் இல்லாத நோக்கத்தில் வாசிக்கும் என்னை அத்தனை படாய் படுத்துகிறது? வாழ்ந்தவர்களுக்கும், விடியல் வராதா என்றவர்களுக்கும் என்ன மாதிரி இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பதுண்டு. நன்றி புலவன் புலிகேசி.

தங்க முகுந்தன் said...

//கால் வயித்துக்கு கஞ்சி இல்லாவிட்டாலும், தங்க வீடு இல்லாவிட்டாலும் எப்படியும் படித்து தொலைத்து நம்மை வந்து தொல்லைபடுத்துகிறார்கள்//

அருமையான உண்மையான வரிகள்! இன்றைக்கு இவ்வளவு அல்லற்பட்ட நிலையில் தத்ரூபமாக - நிரூபிக்கப்பட்ட ஆதாரமான சம்பவம்!

ஜோதிஜி said...

வாங்க முகுந்தன்

இந்திய சுதந்திர வரலாற்றில் மொத்த இந்தியாவாகத்தான் அதிக பதிவும் வாசிப்பு அனுபவம் கிடைத்தது. தமிழர்களைப் பற்றி இப்போது ஆராய்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ஆனால் இலங்கையில் தொடக்கத்தில் முதல் 25 வருடத்தில் தந்தை செல்வா வரைக்கும் உள்ளவர்களின் திறமை கல்வி மற்ற தகுதிகள் அத்தனையும் வார்த்தைகளில் எழுத முடியாத அளவிற்கு மிக ஆச்சரியமாக சிறப்பாக இருக்கிறது.

வியந்து வியந்து போகின்றேன். ஆனால் அன்று இழந்தவைகளை "எண்ணி" கவிழ்ந்தும் போகின்றேன்.