Friday, February 14, 2014

என்றென்றும் சுஜாதா

நான் ஆறாவது படிக்கும் போது பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புத் தொடங்கியது. கல்லூரிக்குச் சென்ற போது அறிமுகமாகியிருந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களைத் தாண்டி இறுதியில் பாலகுமாரன் மற்றும் சுஜாதா மட்டுமே என்னுடைய விருப்பமான எழுத்தாளராக இருந்தார்கள். 

வெளியுலகம் குறித்து எதுவுமே தெரியாத நிலையில், வாழ்க்கை குறித்த புரிதல்கள், தேடல்கள் என்று இருவருமே வெவ்வேறு பார்வையில் மாறி மாறி எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திருப்பூர் வந்து சேர்ந்து முதல் வருடம் முழுக்கப் பாலகுமாரன் தான் என்னை ஆக்ரமித்திருந்தார். அவர் சொல்லுவதே வேதம் என்கிற நிலையில் தான் இருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கை சவுக்கடி போலத் தாக்கத் தொடங்க கற்பனைகளைத் தாண்டிய நிஜங்களைக் கண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டு தினசரி வாழ்க்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினேன். 

அதன் பிறகே எழுத்தாளர்களின் எழுத்துக்களைத்தாண்டி ஒவ்வொரு எழுத்தாளர்களின் நிஜமுகத்தைப் பலதரப்பட்ட பத்திரிக்கைகள் மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

தொடர்ந்து வந்த 15 ஆண்டுகளில் புத்தகங்களை விடத் தினசரி பத்திரிக்கைகள், பலதரப்பட்ட கட்டுரைகள் என மாறி மாறி குழப்பத்துடன் பலரின் அடையாளங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. அரசியல், திரைப்படம், எழுத்தாளர்கள் என்று சகலரும் சொல்லும் கருத்துக்களுக்கும், அவர்களின் நிஜ வாழ்க்கைக்கும் உண்டான வேறுபாடுகளையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர்களை மிஞ்சியவர்களாக இருந்தார்கள். 

ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் எழுத்தாளர் சுஜாதா மேல் நான் கொண்டிருந்த மரியாதை, அபிமானம் மாறவில்லை. பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் வாங்கிச் சேகரித்த சுஜாதாவின் பல புத்தகங்கள் இன்னமும் என்னிடம் உண்டு. மற்ற எழுத்தாளர்கள் போல் இல்லாமல் கதையோ, கட்டுரையோ, புனைவோ, அறிவியல் சிந்தனைகளான ஏன் எதற்கு எப்படி? போன்ற எந்தப் புத்தகமாக இருந்தாலும் அவர் நேற்று எழுதியது போலவே உள்ளது. 

காலமாற்ற இடைவெளி எதுவும் தெரியாத அளவுக்கு எந்தக் காலத்திலும் வாசிப்பவனுக்குப் பொருந்தக்கூடிய, விரும்பக்கூடிய எழுத்தாற்றல் மிக்க சுஜாதாவை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது. 

சில வாரங்களுக்கு முன் விகடன் வெளியீடாக வந்துள்ள எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ள என்றென்றும் சுஜாதா என்ற புத்தகத்தை வாசித்த போது நான் மனதில் வைத்திருந்த சுஜாதா என்ற பிம்பம் எனக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்த மரியாதைக்குரிய ஆசானாகவே தெரிந்தார். 

நான் புரிந்து வைத்துள்ள சுஜாதாவை விட அமுதவன் அவருடன் ஏறக்குறைய 38 ஆண்டுகள் பழகி அந்த அனுபவத்தை எழுத்தாக்கி கொடுத்துள்ளதை படித்து முடித்த போது உருவான தாக்கம் அடுத்த இரண்டு நாட்கள் என்னுடனே இருந்தது. கூடவே சுஜாதா மேல் நான் வைத்திருந்த மரியாதையில் ஒரு துளி கூடச் சேதாரமின்றி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

அமுதவனின் வலைபதிவு எனக்குத் தனிப்பட்ட முறையில் எப்படி எழுத வேண்டும்? என்பதை கற்றுக் கொடுக்கும் வலைபதிவாகும். காரணம் எளிமையும், முக்கியமாக எழுத்துப்பிழையுமின்றிச் சொல்ல வந்த விசயத்தை வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கூட ஒரு முறை வாசித்தவுடன் உள்வாங்கிக் கொள்ள வைக்கும் நேர்த்தியுமாய் எழுதும் அவரின் எழுத்து நடை என்பது என்னைப் போல பலருக்கும் உதவக்கூடியது.  

இந்தப் பாணியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை இரவு ஒன்பது மணிக்கு வாங்கி வந்து நள்ளிரவு வரைக்கும் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒரே மூச்சில் வாசிக்க வைத்த அமுதவனின் எழுத்தாற்றலுக்கு மிக்க நன்றி. அத்துடன் நல்ல குணம் படைத்த மனிதர்கள் இயற்கையோடு கலந்த நிகழ்வை மரணம் என்று சொன்னாலும் அவர் காலம் கடந்து நிற்பார் என்பதற்கு அத்தாட்சியாக அமுதவனின் எழுத்து சுஜாதாவுக்கு உண்மையான மானசீகமான நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்தி உள்ளது. 

முதன் முதலாக அமுதவன் சுஜாதாவை சந்திக்க அவர் பெங்களூருக்கு வந்த சில நாட்களில் அவர் முன்னால் போய் நின்ற போது உருவான அறிமுகத்தில் இருந்து இந்தப் புத்தகம் தொடங்குகின்றது. 

சுஜாதா வார்த்தைகளில் "என்னய்யா நான் பெங்களூருக்கு வந்து இன்னும் உட்காரக்கூட ஆரம்பிக்கலை. அதற்குள் வீட்டை கண்டுபிடித்து வந்து நிற்குறீங்க?" என்று (1970) தொடங்குகின்றது. அமுதவன் ஒரு வாசகனாகச் சுஜாதாவை சந்திக்கச் சென்றாலும் அப்போது இவரும் ஒரு எழுத்தாளர் தான். 

இவருடைய படைப்புகளும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரின் நட்பு என்பது வாசகன், எழுத்தாளர் என்பதைத் தாண்டி பலதரப்பட்ட நிகழ்வுகளில் பயணிக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பலதரப்பட்ட சம்பவங்கள். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் சுஜாதாவின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவரின் வெள்ளை மனதை அழகாக வெளிப்படுத்துகின்றது. 

ஏறக்குறைய சுஜாதா இறந்த 28.2.2008 வரைக்கும். இது போன்ற நட்பு, பரஸ்பரம் அக்கறை என்பது அமுதவன் போல எத்தனை பேர்களுக்குக் கிடைக்கும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் இதுவும் ஒரு கொடுப்பினை. அல்லது அமுதவனின் அடிப்படை குணாதிசியங்கள். 

பிரபல்யங்களோடு பழகுவது என்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். சிறிது விலகினாலும் பிரச்சனை தான். ஆனால் இன்று வரையிலும் அமுதவன் அந்தக் கலையில் மிக்கத் தேர்ச்சியுடையவராக இருக்கின்றார். முக்கியக் காரணம் இவர் நெருக்கமாகப் பழகிய அத்தனை பேர்களும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாதவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நெருக்கமான நட்பு என்பது இரண்டு பக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே உருவாகும் விளைவு.

வலைபதிவுகளில் 'பிரபல' என்ற வார்த்தையும் 'தோழர்' என்ற வார்த்தையும் ரூபாய்க்கு இத்தனை என்கிற ரீதியில் சர்வசாதாரணமாகப் புழங்கும் வார்த்தை. ஆனால் இந்தப் புத்தகத்தில் அமுதவனின் நட்பு என்பது வெறுமனே சுஜாதாவுடன் மட்டுமல்ல. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபல்யங்கள் அத்தனை பேர்களுடனும் இப்படித்தான் இருந்ததுள்ளது. 

எந்த அத்தியாயத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், சந்தித்த நிகழ்வுகளை மட்டும் விவரித்து விட்டுச் சர்வசாதாரணமாகக் கடந்து சென்று கொண்டேயிருக்கின்றார். படிக்கின்றவர்களுக்கு மூச்சு முட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைத் தீயை மூட்டும். 

இன்று ஒரு பிரபல்யத்துடன் சந்திப்பு நடந்து விட்டால் அவருடன் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டுக் கொண்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் இளையர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் போலத் திகழ்ந்த சுஜாதாவின் குழந்தைத்தனத்தையும், சுஜாதா போலப் பல ஸ்டார்களுடன் பழகிய அமுதவனின் "இதுவும் கடந்து போகும்" என்ற இயல்பான மனோ நிலையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஒவ்வொரு பக்கத்திலும் இவர் சொல்லிக் கொண்டு வரும் பிரபல்யங்களைப் பற்றியும். இவர் நாகரிகம் கருதி நைஸாக நழுவி கொண்டே சென்ற வார்த்தைகளின் ஊடாகப் பலவற்றையும் என்னால் நன்றாக யூகித்துக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் நாகரித்தை மையில் தோய்த்து எழுதியுள்ளார். பலவற்றை வாசிப்பவனை யூகிக்க வைத்து விடுகின்றார். 

இளையராசா, பாரதிராஜா என்று திரைப்படப் பிரபல்யங்கள் தொடங்கிச் சாவி முதல் சிவக்குமார் வரைக்கும் ஒவ்வொரு பெரிய ஆளுமைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் வந்து போனாலும் தான் சொல்ல வந்த சுஜாதா குறித்த தகவல்களுக்குப் பஞ்சமில்லை. 

இதில் குறிப்பிட்டுள்ள சுஜாதா வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட கால் வாசி தகவல்களை அவ்வப்போது நான் பத்திரிக்கையில் படித்து வந்திருந்த போதிலும், நான் கேள்விப்பட்டிராத அவரின் அப்பாவி முகத்தை, நேர்மையான மனிதரின் ஏமாளித்தனத்தைச் சரியான வார்த்தைகளில் சமயம் பார்த்துச் சொல்லியிருக்கின்றார். 

எனக்குத் தெரிந்தவரையிலும் எழுத்தாளர் சுஜாதா கடவுள் குறித்த கொள்கையில் தொடக்கத்தில் மிகப் பெரிய ஆர்வமே அக்கறையின்று தான் இருந்தார். அதைப்போலவே சாதி குறித்த எண்ணமும் அவருக்கு பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. ஆனால் தன்னுடைய கடைசிக் காலத்தில் இரண்டும் குறித்து விரும்பியோ அல்லது நிர்ப்பந்தம் அடிப்படையில் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டிருந்தார். சுஜாதா தன் வாழ்நாளின் கடைசிச் சில வருடங்கள் தன் உடலோடு மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தியவர். 

நேர்மை என்பதைத் தன் உயிர்மூச்சாகக் கருதியவர் சுஜாதா என்பதனை தன் மகனுக்குத் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் கிடைக்கவிருந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டு மற்றொரு பையனுக்குக் கொடுத்த அவரின் தைரியத்தையும், அவர் மனைவி புலம்பிய புலம்பலையும் வாசித்த போது மற்றொரு 'கர்மவீரர்' போலத்தான் சுஜாதா தெரிகின்றார். 

கர்வம், அகம்பாவம் என்ற வார்த்தைகள் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களிடம் அதிகம் பார்க்கலாம். தன்னைச் சந்திக்க வருபவனைத் துச்சமாக மதிப்பது என்று தொடங்கி உனக்கு ஒன்றுமே தெரியவில்லை? என்று வாழ்த்துவது வரைக்கும். ஆனால் சுஜாதா தனது வாழ்நாள் முழுக்க அடுத்தவரை வளர்ப்பதில் தான் குறியாக இருந்துள்ளார். ஆனால் தனக்கான அங்கீகாரத்தைத் தன் உழைப்பின் மூலமே அடைந்துள்ளார். 

ஏணிப்படிகள் தேவையில்லாது தன்னையே பிறருக்கு ஏணிப்படியாகவே மாற்றிக் கொண்டவர். இதுவே மற்றவர்கள் பார்வையில் ஏமாளியாகத் தெரிந்தது ஆச்சரியமல்ல. தன்னைக்குறித்து எந்தக் கர்வமின்றி, தான் கற்றதை, தெரிந்து வைத்துள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக இருக்கட்டும், தொடக்க நிலையில் எழுதுபவர்கள் எப்படித் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும் இனி சுஜாதா போல ஒருவரை தமிழ் எழுத்துலகம் காண்பது அரிது. 

இவரால் அடையாளம் காணப்பட்டவர்களும், வளர்ந்தவர்களும், உயர்ந்தவர்களும் இன்று வரையிலும் பண ரீதியான உறவில் மட்டுமே சுஜாதாவை பார்த்துத் தங்களை வளர்த்துக் கொண்டே போதிலும் பரவாயில்லைப்பா...... என்று கடந்து போக எத்தனை பேர்களால் முடியும்? 

ஆனால் அவரை வைத்து வளர்ந்தவர்கள் எவரும் செய்யாத சாதனையை அமுதவன் மட்டுமே தன்னை நேசித்த ஒரு நல்ல ஆத்மாவின் உண்மையான பண்புகளை, குணாதிசியங்களை, வெளியே தெரியாத பல சம்பவங்களை அவர் வாழ்ககை நிகழ்வுகளை வைத்து அடையாளப்படுத்தி எழுதியுள்ளார்.  

சுஜாதாவின் நெருக்கடியான பயண வேகத்தில் அமுதவன் திருமணத்தில் (1982) வந்து கலந்து கொண்ட விதத்தின் மூலம் இருவருக்கும் உண்டான ஆழ்ந்த நட்பைச் சொல்லுகின்றது. அமுதவனின் மனைவியிடம் "நீங்க அமுதவன் எழுத்தை வாசித்துள்ளீர்களா?" என்று சுஜாதா கேட்ட போது அவர் மையமாகப் புன்னகைத்த போது "அப்பாடா எதிரெதிர் துருவம். நிச்சயம் நல்ல ஜோடி. வாழ்த்துகள்" என்று வெளிப்படையாக மணமேடையில் அவர்களை வாழ்த்தியதில் தொங்கிய சுஜாதாவின் ஒவ்வொரு நிகழ்வும் அமுதவனின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. 

அதே போலக் கடைசி வரைக்கும் சுஜாதா அமுதவன் மேல் கொண்டுள்ள மரியாதை என்பது "கணையாழியில் என்னுடன் பழகிய அததனை பேர்களைப் பற்றியும் எழுதி விட்டேன். அமுதவன் பற்றி மட்டும் இன்னும் எழுதவில்லை. அடுத்த வாரம் எழுதி விடுவேன் என்று அவரிடம் சொல்லிடுங்கோ" என்று தன்னைச் சந்திக்க வந்த நண்பரிடம் சொன்ன போது சுஜாதாவின் உடல் நிலைமை என்பது மிகச் சிக்கலான காலகட்டத்தில் இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவர் நட்பை எந்த அளவுக்கு மதித்துள்ளார் என்பதையும் மனித உறவுகளுக்கு எப்பேற்பட்ட மரியாதை கொடுத்துள்ளார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

இன்றைய பிரபல பாடகர் ஹரிகரன் திரைப்படத்திற்கு வர முக்கியக் காரணங்களில் ஒன்று அமுதவன், கமலஹாசன் சுஜாதாவை சந்திக்கப் பயன்படுத்திக் கொண்டவர் அமுதவன் என்பது போன்ற பல எண்ணற்ற ஆச்சரியமான தகவல்களைப் படிக்கும் போது நான் என்ற அகங்காரம் எந்த இடத்திலும் இல்லாமல் நழுவி கொண்டே செல்லும் வார்த்தைகளில் பலவற்றை நாசூக்காகக் குறிப்பிட்டுக் கொண்டே செல்கின்றார். 

வலைபதிவுகள், முகநூல் மூலம் அங்கீகாரம் தேடும் இளையர் கூட்டமும், ஓட்டு, லைக் காய்ச்சலில் அலையும் நண்பர்களுக்கும் இதில் ஒரு செய்தி உண்டு. 

குமுதம் சிறப்பாசிரியராக நடிகர் சிவகுமார் இருந்த போது சுஜாதவை ஒரு பேட்டி எடுத்தார். அந்த வரிகள் ஒன்றே போதும். நாம் சுஜாதாவை புரிந்து கொள்ள. 

"கதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?" என்று கேட்ட போது சுஜாதா சொன்ன பதில் 

"இன்று கூட அந்த ஆற்றல் எனக்கு இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம். அதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்"

தமிழ் எழுத்துலகில் காலத்தை வென்றவர்கள் இலக்கியவாதிகள் அல்ல. வாசிப்பவனை வெளியே துரத்தாமல் வாஞ்சையோடு அனைத்துக் கொண்டு தொடர்ந்து வாசிக்க வைப்பனே. 

அந்த வகையில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் சுஜாதா எழுத்துலகில் மார்கெட் இழக்காத கதாநாயகன் போலத்தான் இருப்பார். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது இரண்டு விசயங்கள் மனதில் தோன்றியது. 

சுஜாதா போல வேறொருவர் வாழ்ந்து விட முடியுமா என்று? அதைப் போல அமுதவன் போலத் தான் பழகிய பிரபல்யங்களை வைத்து தனக்கென்று எதையும் ஆதாய நோக்கில் எதையும் அடையவிரும்பாமல் தன்னடக்கத்தோடு இயல்பாக வாழ முடியுமா? என்று யோசிக்க வைத்து விட்டார். தான் கற்றதையும் பெற்றதையும் சொல்லியுள்ள அமுதவன் இதே போல மற்றொரு பாகம் எழுத முடியும். 

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இவர் எதையெல்லாம் தவிர்த்து நகர்ந்துள்ளார் (அல்லது) வெளியிட்டுள்ள நிறுவனம் எதையெல்லாம் தவிர்த்துள்ளது என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடியும். 

அமுதவன் இதில் நாகரிகம் கருதி சொல்லாத விசயங்கள் ஏராளமாக உண்டு. இன்று வரையிலும் இவரின் மென்மையான எழுத்து நடைக்கே இணையத்தில் ஏராளமான எதிரிகள் உண்டென்பதே ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக இளையராஜா குறித்து இவர் வைக்கும் விமர்சனங்கள் என்பது பலருக்கும் தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக இருக்கின்றது. இன்று வரையிலும் இவர் தளத்தில் இளையராஜாவை விமர்சிக்க நீ யார்? என்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் குஞ்சாமாமா மணி ரசிகப்பட்டாளங்கள் என்று ஏராளமானோர் உண்டு. ஆனாலும் தலைவர் அசருவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாகரிக பாணியில் ராஜபாட்டை நடை போட்டுக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றார். 

நமக்குள் அகங்காரமும் ஆணவமும் தலைதூக்கும் போது இந்தப் புத்தகத்தை வாசிக்க முடிந்தால் உங்களின் சப்தநாடியும் அடங்கிப் பிரபல்யம் என்பது 'கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு' என்பதை நம்மால் உணர முடியும். 

இதைதான் சுஜாதா என்ற ஆளுமையின் மூலம் அமுதவன் என்றொரு தன்னடக்க மனிதர் ஒவ்வொரு வரியிலும் உணர்த்தியுள்ளார்.


தொடர்புடைய பதிவுகள்

வல்லமை விமர்சனம்- டாலர் நகரம்

வாசிக்க பகிர

(இலவச) மின் நூல் தரவிறக்கம் செய்ய

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்

( ஈழம் பற்றி அடிப்படை வரலாறு, அரசியல் வரலாற்றை தெரிந்து கொள்ள)

வெள்ளை அடிமைகள் 

( தமிழர்கள் வலியோடு புலம் பெயர்ந்த கதையைச் சொல்லும்)

Tuesday, February 11, 2014

வல்லமை விமர்சனம்

மதிப்பு​ரை – ரஞ்சனி நாராயணன்

(மூன்றாவது பரிசு வாங்கிய விமர்சனம். அது குறித்து அடுத்த பதிவில்)

டாலர் நகரம்

எழுதியவர்: ஜோதிஜி

பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

விலை: ரூ. 190

பக்கங்கள் : 247

வெளியான ஆண்டு: 2013

Dollar Nagaram

ஆசிரியர் குறிப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள் சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 10,000 + தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

புத்தகம்: டாலர் நகரம்

டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்?  இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.

26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். 

ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?



மின் நூல்


Wednesday, January 29, 2014

மேலும் சில செய்திகள்

வ்வொரு வருடங்களும் நம் வாழ்வில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. எப்பொழுதும் போல 2014 என்று எண்கள் மாறியுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் இந்த நாள் எனக்கு புதிய திசையின் ஆரம்பம்.

ணையம் என்பதனை நீங்கள் எப்படிப் புரிந்து வைத்து உள்ளீர்கள்? "கட்டுப்பாடற்ற சுதந்திரம்" என்ற ஒரு வார்த்தைக்குள் வைத்திருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை அதிகாரவர்க்கம் படிப்படியாகச் செய்து கொண்டே தான் வருகின்றார்கள். ஒரு அளவுக்கு மேல் உங்களைச் செயல்பட முடியாத அளவுக்கு அவர்களால் மாற்றி விட முடியும் அல்லது நீங்களே ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு உங்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட முடியும். இணையம் என்பது "திறந்த வெளி மைதானம்" என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் எங்கு நின்றாலும் ஏதோவொரு வழியில் தெரிவீர்கள். ரகசியங்கள் எதையும் காக்கமுடியாத பெருவெளி. பெரும்புள்ளியாக, சிறுபுள்ளியாக அல்லது கரும்புள்ளியாக. ஏதோவொன்றாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.

ந்த நிலையில் இருந்தாலும் நல்லவிதமாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஏராளமான பிரச்சனைகள் இங்கே உண்டு.தினந்தோறும் எண்ணிக்கையில் அடக்க முடியாத கூட்டம் வந்து போய்க் கொண்டே இருப்பதால் உங்களை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகளை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பலசமயம் எதிர்விளைவுகளை உருவாக்கலாம். போட்டி, பொறாமை, வன்மம், குரோதம், எரிச்சல் என்று ஏதோவொன்று ஒன்று உங்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். அனைத்தையும் கடந்து வந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

தொடர்ந்து செயல்படமுடியாதவர்கள், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்கள், மற்றவர்கள் வளர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று ஏராளமான பட்டியல் இங்கே உண்டு. கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். உங்களைத் தடை செய்யும் பட்டியலில் சிலர் காரணமின்றி வைத்திருப்பர். அதன் மூலம் அவர்களின் மனதிற்கு அல்ப சந்தோஷம் கிடைக்கக்கூடும். இவர் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றாரா? என்ற எண்ணத்தில் எட்டிப்பார்ப்பவர்களும், எப்படி இவரால் செயல்பட முடிகின்றது என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும் என ஏராளமான "செயல்பாடுகளை" நாள்தோறும் செய்து கொண்டிருப்பவர்களைத் தாண்டி உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ருபது வருடங்களுக்கு முன் இருந்த பத்திரிக்கை உலக ஆளுமைகள் இன்று அடங்கி விட்டனர். அவர்களின் சட்டங்கள் அனைத்தையும் சமானியன்கள் இன்று தவிடுபொடியாக மாற்றிவிட்டனர். ஏராளமான புதுப்புதுச் சிந்தனைகள், கற்பனைகள், எண்ணங்கள் என்று ஏதோவொரு வழியில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், இதன் மூலம் அடையாளப்படுத்திக் கொண்டவர்களைக் கடந்த ஐந்து வருடங்களில் நாம் ஏராளமான நபர்களை அடையாளம் கண்டு உள்ளோம்.

காரணம் இணையம் என்பது "திறந்த வெளி" மைதானமாக இருப்பதால் உங்களின் திறமைகளும் அதற்கான உழைப்பும் மட்டுமே இங்கே முக்கியமானதாக பேசப்படுகின்றது. உணர்ந்தவர்கள் வளர்கின்றார்கள். உணராதவர்கள் "வருத்தப்படாத வாலிப சங்க"த்தில் சேர்ந்து திரைப்பட விமர்சனங்களை எழுதி நாங்களும் இங்கே இருக்கின்றோம் என்று தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ன்று எந்தக் குறிச்சொல் கொடுத்து தேடினாலும் தமிழ் கட்டுரைகளைக் கூகுளில் நம்மால் பெற்று விட முடியும். எல்லோரும் அங்கீகாரத்தை மட்டுமே ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த மாறுதல்கள் நடந்து இருக்காது. அந்தச் சமயத்தில் அவரவர் வேலைகளை அவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்து விட நமக்கு எளிதாகக் கிடைக்கின்றது. எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடலாம். எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு விடலாம்.

ளமிறங்கியவர்கள் அத்தனை பேர்களும் மெத்தப்படித்தவர்களோ பெரிய வாசிப்பு அனுபவம் கொண்டவர்களோ, சமூகத்தில் பெரிய அளவு பின்புலம் கொண்டவர்களும் அல்ல. "இவருடன் பழக்கம் இருந்தால் தான் நமக்கு அங்கீகாரம் கிடைக்க வழி பிறக்கும்" போன்ற  எண்ணங்களைக் கூட தொழில் நுட்ப வசதிகள் மாற்றி விட்டது. இன்றைய இணையம் என்பது புதிய இளைஞர்களின் சிந்தனைகள் நிரம்பிய களமாக மாறியுள்ளது.

வர் தகுதியானவர், தரமானவர் என்று கருதும் எவரும் எதனையும் இங்கே ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் பெயரை முன்னிறுத்த என்ன செய்ய வேண்டும்? என்பதற்காகவும், தனக்கு என்ன ஆதாயம் என்பதைப் பார்த்து செயல்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே செயல்பட காலம் அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றது. காலப்போக்கில் அதுவே பின்னுக்கு தள்ளியும் வைத்து விடுகின்றது. இந்த களம் திறந்த வெளி மைதானமாக இருப்பதால் எதையும் மறைக்க முடியாது.  மாற்றவும் முடியாது.

காரணம் இங்கே ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருப்பவர் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். மதம், சாதி, அதிகாரம், அரசியல் போன்ற எந்த லாபியும் இங்கே வேலை செய்யாது. அவரவர் வைத்திருக்கும் "கூட்டணி தத்துவம்" கூட குப்பைக்கூடைக்கு போய்விடும். உணர்ந்தவர்கள் அமைதியாக செயல்படக்கூடியவர்கள்.

நான் கடந்த நாலரை வருட இணைய அனுபவத்தில் "கற்றதும் பெற்றதும்" ஏராளம். எழுத்துப்பயிற்சி எவரும் கற்றுத் தர முடியாதது. இவர் என் ஆசான் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் கைப்பிடித்து எழுதி கற்றுத் தரமுடியாத எழுத்துப் பயிற்சியை எழுதுவதன் மூலம் மட்டுமே படிப்படியாக நம்மால் பெற முடியும். நானும் உணர்ந்துள்ளேன். சில படிகள் ஏறியுள்ளேன். கடந்த 2013 தொடக்கத்தில் புத்தக உலகம் அறிமுகமாகி 4 தமிழ்மீடியா படைப்பாய்வகம் வெளியிட்டுள்ள  "டாலர் நகரம்" என்ற என் முதல் நூல் வெளிவந்தது. 2014 ல் மின் நூல் உலகம் அறிமுகமாகி "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளிவந்துள்ளது.

இரண்டுமே வெற்றியையும் அங்கீகாரத்தையும் தந்துள்ளது.

டந்த டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட என் முதல் மின் நூல் ஒரு மாத காலத்திற்குள் நான் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக அதிகமான பேர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது.

9000 +
ஒரு தமிழ்ப் புத்தகம் வெளியிட்ட ஒரு மாதத்தில் 9000 பிரதிகள் விற்பனையானால் என்னவாகும்? பல எழுத்தாளர்களின் ராயல்டி பிரச்சனைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து இருக்கும். பதிப்பகங்கள் இன்று கோடீஸ்வரனாக மாறி இருப்பார்கள்.  இந்த அளவுக்கு ஒரு எழுத்தாளரின் புத்தகம் இங்கே விற்க வேண்டும் என்றால் அவர் தன் வாழ்நாளில் பாதி நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ணையம் என்பது நம் கற்பனைக்கு எட்டாத ஆச்சரியம் நிறைந்த ஒன்று. இது இலவசம் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் ஈழம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள் உலகம் முழுக்க இன்னமும் அதிகமான பேர்கள் இருக்கின்றார்கள் என்பதோடு வாசிப்பவர்களின் சூழலும் மாறிக் கொண்டே வருகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஈழம் பற்றி அடிப்படை எதுவும் தெரியாதவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும் என்கிற வகையில் எனக்குத் திருப்தியே.

உதவிய சீனிவாசன், ரவிசங்கர், வினோத்,தனபாலன், அவர்கள் உண்மைகள், ஞானசேகரன், துளசிதரன் போன்றோருக்கு நன்றி.

அட்டைப்படம் வடிவமைப்பு வீடு சுரேஷ்குமார்.

"இதுவும் கடந்து போகும்".

0o0

சென்ற ஜனவரி 4ந் தேதி சென்னையில் நடந்த எழுத்தாளர் ஞாநி அவர்களின் 60 வது பிறந்த நாள் விழாவுக்காகச் சென்னை சென்றிருந்த போது FREE EBOOK.COM தளத்தில் எனது முதல் மின் புத்தகமான "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளியிட்ட பின்பு முதல் முறையாக சீனிவாசனை சந்தித்தேன். அவர் கொண்டு வந்திருந்த ஈ ரீடர் என்ற கையடக்கக் கருவியில் என் மின் நூலை படிக்க வாய்ப்பு கிடைத்த நேரம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். இது போன்ற தளத்திற்குச் சர்வர் வாங்கி அதற்கு முதலீடு செய்து தொடர்ந்து கொண்டு செல்வது என்பது நாம் நினைப்பது போலச் சாதாரண விசயமல்ல. எவரிடமும் எவ்வித பொருளாதார உதவிகளையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் தன்னலமற்ற சேவைக்கும் மற்றும் இவரைச் சார்ந்த குழுவினருக்கு என் வணக்கமும் வாழ்த்துகளையும் இங்கே எழுதி வைக்கின்றேன்.

டந்த இரண்டு வருடங்களில் இணையதளங்களில், வார இதழில், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அச்சு வடிவத்தில் என் படைப்புகளைப் பார்த்த போதிலும் இந்தக் கருவியில் இருந்த வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். இதுவரையிலும் கணினியில் பிடிஎஃப் கோப்பாகப் பலவற்றைப் படித்து இருந்த போதிலும் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் வசதிகளும், மகிழ்ச்சியும் வந்ததே இல்லை என்ற கருத்துக் கொண்ட என் எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. சீனிவாசன் என்னுடன் பேசும் போது "இதை விட இன்னும் மேம்பட்ட பலதரப்பட்ட வசதிகள் உடைய கருவிகள் வந்து விட்டது" என்றார்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலமும் சூழ்நிலையும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியினால் எங்கேயோ நம்மை இழுத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன். 

"காசுக்கேத்த பணியாரம்".

0o0




chrome plugin http://readium.org/

Desktop application - http://fbreader.org/

Use these apps to read epub 





"வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்படுவது".

0o0

"வந்தார்கள் வென்றார்கள்" என்ற தலைப்பு ஏற்கனவே மதன் அவர்களால் எழுதப்பட்ட சரித்திர தொடருக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு ஆகும். 

காரணம் ஈழ வரலாற்றில் அங்குச் சென்ற ஸ்பானிஷ், போர்த்துகீசியர்கள், டச்சுப்படைகள் தொடர்ந்து கடைசியாகச் சென்ற ஆங்கிலேயப் படைகள் என்று அனைவருமே கொள்கை ரீதியாகவும், அவர்கள் நினைத்தபடியே பொருளாதார ரீதியாகவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்தார்கள் வென்றார்கள். இதைப்போலவே குறுகிய இனமாக இருந்த சிங்களர்களும் படிப்படியாக வளர்ந்து இறுதியில் இன்று இலங்கை என்பது பௌத்தர்களின் நாடு என்று வென்று சாதித்துக் காட்டியுள்ளனர். இதை மனதில் கொண்டே இந்த மின் நூல் பேசுவதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.  மூத்த பத்திரிக்கையாளர் திரு மதன் அவர்களுக்கு நன்றி.

"வளரும் பொழுது கடன் வாங்குவது தவறல்ல".

0o0

முதல் மின் புத்தகத்திற்குக் கிடைத்த ஆதரவு "அடுத்த உழைப்பையும் கொடுத்து விடு" என்பது போலவே இருந்தது. இது என் இரண்டாவது மின் புத்தகம். 

முதல் பகுதியில் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் ஒவ்வொரு சமயத்திலும் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களைப் பற்றிப் பேசும் தொகுப்பு இது. இரண்டாவது பகுதியில் இன்று பாரதப் பிரதமராக உள்ள மன்மோகன் சிங் கொள்கைகள் உருவாக்கிய மறைமுக அடிமைத்தனத்தையும் பேசுகின்றது. 


தரவிறக்கம் செய்ய

"கடமை என்பது செய்தே ஆக வேண்டியது. பலன் என்பது கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த முயற்சி".

0o0

நான் வலைதளத்தில் பார்த்த வரைக்கும் மிகக்குறுகிய காலத்தில் தன் திறமைகளை உணர்ந்து, தெளிவான பாதையில் நடைபோட்டு முன்னேறியவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவரின் முதல் புத்தகம் வெளியாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு உள்ளார்கள்.


வார இதழ்களில் அவரின் கட்டுரைகளைப் படிக்கும் பொழுதும் சரி, அவர் தேர்ந்தெடுக்கும் விசயங்களும், நேர்த்தியான நடையும் அவருக்குள் இத்தனை நாளும் உள்ளேயிருந்த பத்திரிக்கையாளர் தற்பொழுது வெளியே வந்துள்ளது என்பதாகத்தான் நான் நினைத்துக் கொள்வதுண்டு. கடந்து போன நாட்களில் இவர் பங்குக்கு எனக்கு விவேகத்தை இன்னமும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளார். மூத்தோர் சொல் முதலில் கசக்கும். பிறகு நெல்லி போல இனிக்கும். வாழ்த்துகள் ரஞ்சனி நாராயணன்.

பெண்ணுரிமை என்பது அடக்கத்தில் தொடங்குவது. அறிவால் வெல்வது.

0o0


திர்காலத்தில் தமிழ் மொழியை வளர்க்க என்பதாக சமீப காலங்களில் பலதரப்பட்ட மேடைப் பேச்சுக்கள், கொள்கைகள், விளக்கங்கள், மாநாடுகள் போன்றவற்றை நீங்கள் செய்தித் தாள்களில் படித்து இருக்கக்கூடும். ஆனால் எதனைச் செய்யவேண்டும்? என்பதை உணர்ந்து உருப்படியாக ஒருவர் தன் சொந்த முயற்சினால் தன் முகம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், விளம்பரங்கள் எதுவுமின்றி, இணைய தளம் வாயிலாக சாதித்து காட்டிக் கொண்டிருக்கின்றார்.  இதில் என் சொந்த அனுபவமும் ஒன்று என்பதை இங்கே குறிப்பிட்டு எழுத வேண்டும்.  நான் சென்னையில் இருந்த போது என் மகள் குறிப்பிட்ட மருத்துவ பலன் உள்ள செடிக்கு ஆங்கிலப் பெயர் என்ன என்று கேட்டார்? உடனே நினைவுக்கு வந்தது வலைத்தமிழ் என்ற தளமே.  


"இங்கே சிலர் மட்டுமே நம் அடையாளம் தேவையில்லை என்று தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே அடையாளப்படுத்திவிட்டு மறைந்து விடுகின்றார்கள். இறுதியில் அவர்கள் மட்டுமே காலத்தை வென்றவர்களாக காட்சியளிக்கின்றார்கள்".
0o0

வலைத்தமிழ் குறித்து ஒரு குறிப்பு:

v 1,70,000 வார்த்தைகள் கொண்ட தமிழ் அகராதி (http://www.valaitamil.com/tamil_dictionary.php)
v   4900+ மேற்பட்ட தமிழ் இலக்கியங்களின் தொகுப்பு  (http://www.valaitamil.com/literature)
v      105000+ குழந்தைப் பெயர்கள் (http://www.valaitamil.com/baby_names.php)
v  4800+ தமிழ் திரைப்படங்களின் விபரம் (http://www.valaitamil.com/movies/index.php)
v      8000+ தமிழ் இணையதளங்கள் (http://www.valaitamil.com/tamilsites/index.php)
v      2000+ தமிழ் சமையல் குறிப்புகள் (http://www.valaitamil.com/recipes)
v 1300 தமிழக கோயில்களின் தகவல் தொகுப்பு (http://www.valaitamil.com/temples.php)
v      900 + மருத்துவக் குறிப்புகள் (http://www.valaitamil.com/medicine)
v      100 தமிழகக் கலைகள் (http://www.valaitamil.com/kids_tamilnadu-arts)
v      200 சுட்டிக் கதைகள் (http://www.valaitamil.com/kids_kids-stories)
v      அறிய புகைப்படத் தொகுப்பு  (http://www.valaitamil.com/photo_home.php)
v      காணொளித்தொகுப்பு (http://www.valaitamil.com/video_home.php)
v   இரண்டு கைபேசி மென்பொருள்களை iphone & Androiid –ல் உருவாக்கி அதை ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு மேல்  பயன்படுத்துகின்றார்கள். (http://www.valaitamil.com/app)

"வெளிநாட்டில் வாழும் குறிப்பிடத்தக்க தமிழர்களால் மட்டுமே வரும் காலத்தில் தமிழ் என்றொரு மொழி இருந்தது என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெரிய வரக்கூடும்".

0o0

இணையத்தின் வாயிலாக (மட்டுமே) அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் எண்ணத்தில் வைத்துள்ள (நான்கு) தலைப்புகள் முதலில் மின் புத்தகமாக மாற்றப்பட்டு ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும்  நண்பர் சீனிவாசன் அவர்களால் வெளியிடப்படும். பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதால் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் பேசுவோம்.

வல்லமை இணைய இதழில் டாலர் நகரம் மதிப்புரை

பயணங்கள் முடிவதில்லை.

நன்றி.