Showing posts with label வலைத்தமிழ். Show all posts
Showing posts with label வலைத்தமிழ். Show all posts

Friday, September 12, 2014

உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே!

பணம் தான் ஒவ்வொருவரையும் இயக்குகின்றது. பணம் தான் வாழ வேண்டும் என்ற ஆசையையும் வளர்க்கின்றது. பணம் இருந்தால் எல்லாமே கிடைத்து விடும் என்ற எண்ணத்திற்குச் சமூகம் மாறி வெகு நாளாகிவிட்டது. மற்ற அனைத்தும் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது.

தொழில் சமூகம் என்பதன் கொடூரமான உலகத்தில் ரசனைகள் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியாது. அப்படி ரசனையுடன் வாழ விரும்புவர்களைத் தயவு தாட்சண்மின்றி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடும் என்பதால் அவரவர் சுயபாதுகாப்பு கருதி முகமூடிகளைப் போட்டுக் கொண்டு தான் வாழ விரும்புகின்றார்கள்.
இவனுடன் ஏன் பேச வேண்டும்? இவன் எதற்கு நம்மை அழைக்கின்றான்? என்று அலைபேசியில் எண் வரும் பொழுதே பார்த்து எடுக்காமல் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும். "உனக்குப் பணம் என்பது தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு அது தான் முக்கியத் தேவையாக இருக்கின்றது. உன் எண்ணம் என்னிடம் வந்தாலும் அந்தப் பணம் வந்து என்னிடம் சேராது" என்று முகத்திற்கு நேராகச் சொன்னவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். 
பணம் என்பதை வாசலில் மாக்கோலம் போட்டு பந்தல் கட்டி வரவேற்க காத்திருப்பவர்கள் போலத்தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 


Saturday, September 06, 2014

என் பெயர் மாடசாமி.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..........

ஆறாவது அத்தியாயம்.

என் பெயர் மாடசாமி.

மாடசாமியை முதல்முறையாக சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது.  ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன். 

அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம். சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது. இது போன்ற நிறுவனங்களை திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள். 


இது போல திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது. இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும். இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  

மனித வாழ்க்கை மட்டுமல்ல.  தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதை கூர்மையாக கவனித்தால் தெரியும். ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக  இருக்கும். 



அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது. 



Saturday, August 30, 2014

யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு!

4. து.மு  -  து.பி

என் அறையை விட்டு வெளியே வந்தேன். 25000  சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக  இருந்தன.  பல எந்திரங்களில் தொழிலாளர்கள்  (TAILORS)இல்லை. 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  

தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த  உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது. எந்திரங்களின் சப்தமும்,  தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. 

STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது. 

மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன.  SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது. அங்கிருந்த சிலர் என்னை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர். 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை.

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது. அந்த நாட்டிற்கு ஒரு மன்னர், ஒரு மந்திரி, ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும். அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள். அவற்றை நாம் படிப்படியாக பார்க்கலாம்


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.......

அத்தியாயம் 5  யோசிக்காதே?  ஓடிக் கொண்டேயிரு!

அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.


தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர். 

ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே.  கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது.  

இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


Sunday, July 27, 2014

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......

அமெரிக்காவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்....."என்ற எனது தொடர் வெளிவரப்போகின்றது. 

ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் வெளிவரப்போகின்ற இந்தத் தொடருக்கு உங்கள் அனைவரின் ஆதரவைக் கோருகின்றேன். 

இந்தத் தொடர் எதைப் பற்றியது என்பதற்காக வலைதத்தமிழ் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் எழுதிய அறிமுகக் கட்டுரை இது. உங்கள் பார்வைக்கு. 

ணவு, உடை, உறைவிடம் என இந்த மூன்றையும் மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்று சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆதி காலத்து மனித சமூகத்தில் இந்த மூன்றுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மூன்றுமே அவரவர் அன்றாட வாழ்வில் இயல்பான அங்கமாகவே இருந்தது. காட்டில் கிடைத்த கிழங்கு வகைகளே உணவாக மாறியது. இலைகளே ஆடையாக இருந்தது.

மலைக்குகைகளே வசிக்கப் போதுமானதாக இருந்தது. காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறியது. இன்றைய சூழ்நிலையில் உணவு என்பது ருசியின் அடிப்படையிலும், ஆடைகள் நாகரிகத்தின் வெளிப்பாடாகவும், உறைவிடம் அந்தஸ்தின் அங்கமாகவும் மாறியுள்ளது. ஆனால் இந்த இடத்தில் நாம் யோசிக்கவேண்டிய ஒன்று உண்டு. இன்னமும் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழைகள் பட்டினியுடன் தூங்கப் போவதும், சாலையோர குடிசைகளையே தங்கள் உறைவிடமாகக் கருதி வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.

ஆணோ, பெண்ணோ, ஏழையோ, பரமஏழையோ எவராயினும் உடைகள் இல்லாமல் வாழ முடிகின்றதா? மானத்தை மறைக்க என்கிற ரீதியில் ஒட்டுத்துணியாவது தங்கள் உடம்போடு ஒட்டிக் கொண்டு வாழ்பவர்களைத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மொத்தத்தில் மூன்று வேளை பசியோடு வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுக்கத் தங்களுக்கென்று தங்க இடமில்லாமல் வாழ்ந்த போதிலும் அத்தனை பேர்களுக்கும் உடைகள் என்பது அவசியமானதாகத்தானே இருக்கின்றது. அந்த உடைகளைப் பற்றித் தான் இந்தத் தொடரில் பேசப் போகின்றோம். 

நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம். 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலைகளிலும் இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட நவீன வளர்ச்சி வந்துள்ளது. மனித ஆற்றல் அதிக அளவு தேவைப்படாமல் எந்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் நமக்குப் பல வசதிகளைத் தந்துள்ளது. ஆனால் பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இன்றும் மூன்று வேளை ரொட்டிக்காக மட்டுமே பணிபுரிபவர் லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். மனித மாண்புகளை உடைத்து எந்திரமாக மாற்றப்பட்ட மனிதக்கூட்டம் தான் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.

தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலையின் சுவற்றில் காது வைத்துக் கேட்டால் நாம் விக்கித்துப் போய் நிற்கும் அளவிற்கு ஏராளமான சோகக்கதைகள் உண்டு. 

ஏனிந்த அவலம் என்பதனை நான் இருக்கும் சூழ்நிலையில், நான் பணிபுரிந்த திருப்பூர் நிறுவனங்கள் வாயிலாக உங்களுக்குச் சொல்லப்போகின்றேன். ஆடைகளை மட்டும் பேசப்போவதில்லை. ஆடைகளோடு பின்னிப்பிணைந்த நூலிழைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். நான் கடந்து வந்த பாதையை, பார்த்த, பழகிய, பாதித்த மனிதர்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

காதல், காமம்,ஏக்கம், இயலாமை, வன்மம், குரோதம்,பித்தலாட்டம் எனக் கலந்து கட்டி கதம்பம் போல் உள்ள இந்தக் கவுச்சி வாடையைத்தாண்டி கண்ணாடி ஷோரூம் வரைக்கும் பயணித்து வரும் இந்த ஆடைகளைப்பற்றிப் பேசப் போகின்றோம். 

எந்தத் தினத்தில் இருந்து இந்தத் தொடர் தொடங்கும் என்று கேட்கின்றீர்களா? வரும் ஆகஸ்ட் 1 முதல் வலைத்தமிழில் இணையத் தளத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும். உங்கள் ஆதரவை, விமர்சனத்தில் வாயிலாகத் தெரியப்படுத்தலாமே? என்னை உழைக்கத் தூண்டும் அல்லவா? உங்கள் ஆதரவினைக் கோரும். 

-ஜோதிஜி திருப்பூர். 

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் தொடரை படிக்க :

(ஒவ்வொரு வாரமும் இதே பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்)


சென்ற பதிவான ஐந்தாம் வருட நிறைவு நாளுக்காக நான் எழுதிய பதிவுக்கு விமர்சனத்தின் மூலம் ஊக்கமும், நிறை குறைகளைச் சுட்டிக் காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. எழுதுவதும் ஒரு பயிற்சியே. நான் எழுத்துலகில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது என்பதை உணர்ந்தே வைத்துள்ளேன். 

நான் சார்ந்துள்ள ஏற்றுமதி தொழில் வாழ்க்கை கொஞ்சம் எழுத்து வாழ்க்கை கொஞ்சம் என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பதால் என் எழுத்து நடையில், சொல்லவரக் கூடிய கருத்துக்களில் பல சமயம் குழப்பம் கும்மியடிக்கத் தான் செய்கின்றது. நிச்சயம் இந்தத் தவற்றைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கின்றேன். இதன் காரணமாக இந்தத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆய்த்த ஆடைத்துறையில் பல வருடங்கள் இருந்து விட்டுத் தற்போது வேறு துறைக்கு மாறிவிட்ட என் நெருங்கிய நண்பர் திருத்தி தர சம்மதம் தந்துள்ளார். இதன் மூலம் மேலும் மெருகூட்டும் என்றே நம்புகின்றேன். 

ஒவ்வொரு சமயத்திலும் விமர்சனத்தின் வாயிலாக நண்பர்கள் சுட்டிக் காட்டியுள்ள பல குறைகளை இந்தத் தொடர் மூலம் சரி செய்து சரியான முறையில் எழுத முடியும் என்றே நம்புகின்றேன். 

வலைத்தமிழ் நிர்வாகத்தில் உள்ள அனைத்து அங்கத்தினர்களுக்கும் நண்பர் பார்த்தசாரதிக்கும் என் அன்பு கலந்த நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

Wednesday, January 29, 2014

மேலும் சில செய்திகள்

வ்வொரு வருடங்களும் நம் வாழ்வில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. எப்பொழுதும் போல 2014 என்று எண்கள் மாறியுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் இந்த நாள் எனக்கு புதிய திசையின் ஆரம்பம்.

ணையம் என்பதனை நீங்கள் எப்படிப் புரிந்து வைத்து உள்ளீர்கள்? "கட்டுப்பாடற்ற சுதந்திரம்" என்ற ஒரு வார்த்தைக்குள் வைத்திருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை அதிகாரவர்க்கம் படிப்படியாகச் செய்து கொண்டே தான் வருகின்றார்கள். ஒரு அளவுக்கு மேல் உங்களைச் செயல்பட முடியாத அளவுக்கு அவர்களால் மாற்றி விட முடியும் அல்லது நீங்களே ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு உங்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட முடியும். இணையம் என்பது "திறந்த வெளி மைதானம்" என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் எங்கு நின்றாலும் ஏதோவொரு வழியில் தெரிவீர்கள். ரகசியங்கள் எதையும் காக்கமுடியாத பெருவெளி. பெரும்புள்ளியாக, சிறுபுள்ளியாக அல்லது கரும்புள்ளியாக. ஏதோவொன்றாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.

ந்த நிலையில் இருந்தாலும் நல்லவிதமாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஏராளமான பிரச்சனைகள் இங்கே உண்டு.தினந்தோறும் எண்ணிக்கையில் அடக்க முடியாத கூட்டம் வந்து போய்க் கொண்டே இருப்பதால் உங்களை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகளை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பலசமயம் எதிர்விளைவுகளை உருவாக்கலாம். போட்டி, பொறாமை, வன்மம், குரோதம், எரிச்சல் என்று ஏதோவொன்று ஒன்று உங்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். அனைத்தையும் கடந்து வந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

தொடர்ந்து செயல்படமுடியாதவர்கள், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்கள், மற்றவர்கள் வளர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று ஏராளமான பட்டியல் இங்கே உண்டு. கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். உங்களைத் தடை செய்யும் பட்டியலில் சிலர் காரணமின்றி வைத்திருப்பர். அதன் மூலம் அவர்களின் மனதிற்கு அல்ப சந்தோஷம் கிடைக்கக்கூடும். இவர் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றாரா? என்ற எண்ணத்தில் எட்டிப்பார்ப்பவர்களும், எப்படி இவரால் செயல்பட முடிகின்றது என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும் என ஏராளமான "செயல்பாடுகளை" நாள்தோறும் செய்து கொண்டிருப்பவர்களைத் தாண்டி உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ருபது வருடங்களுக்கு முன் இருந்த பத்திரிக்கை உலக ஆளுமைகள் இன்று அடங்கி விட்டனர். அவர்களின் சட்டங்கள் அனைத்தையும் சமானியன்கள் இன்று தவிடுபொடியாக மாற்றிவிட்டனர். ஏராளமான புதுப்புதுச் சிந்தனைகள், கற்பனைகள், எண்ணங்கள் என்று ஏதோவொரு வழியில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், இதன் மூலம் அடையாளப்படுத்திக் கொண்டவர்களைக் கடந்த ஐந்து வருடங்களில் நாம் ஏராளமான நபர்களை அடையாளம் கண்டு உள்ளோம்.

காரணம் இணையம் என்பது "திறந்த வெளி" மைதானமாக இருப்பதால் உங்களின் திறமைகளும் அதற்கான உழைப்பும் மட்டுமே இங்கே முக்கியமானதாக பேசப்படுகின்றது. உணர்ந்தவர்கள் வளர்கின்றார்கள். உணராதவர்கள் "வருத்தப்படாத வாலிப சங்க"த்தில் சேர்ந்து திரைப்பட விமர்சனங்களை எழுதி நாங்களும் இங்கே இருக்கின்றோம் என்று தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ன்று எந்தக் குறிச்சொல் கொடுத்து தேடினாலும் தமிழ் கட்டுரைகளைக் கூகுளில் நம்மால் பெற்று விட முடியும். எல்லோரும் அங்கீகாரத்தை மட்டுமே ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த மாறுதல்கள் நடந்து இருக்காது. அந்தச் சமயத்தில் அவரவர் வேலைகளை அவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்து விட நமக்கு எளிதாகக் கிடைக்கின்றது. எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடலாம். எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு விடலாம்.

ளமிறங்கியவர்கள் அத்தனை பேர்களும் மெத்தப்படித்தவர்களோ பெரிய வாசிப்பு அனுபவம் கொண்டவர்களோ, சமூகத்தில் பெரிய அளவு பின்புலம் கொண்டவர்களும் அல்ல. "இவருடன் பழக்கம் இருந்தால் தான் நமக்கு அங்கீகாரம் கிடைக்க வழி பிறக்கும்" போன்ற  எண்ணங்களைக் கூட தொழில் நுட்ப வசதிகள் மாற்றி விட்டது. இன்றைய இணையம் என்பது புதிய இளைஞர்களின் சிந்தனைகள் நிரம்பிய களமாக மாறியுள்ளது.

வர் தகுதியானவர், தரமானவர் என்று கருதும் எவரும் எதனையும் இங்கே ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் பெயரை முன்னிறுத்த என்ன செய்ய வேண்டும்? என்பதற்காகவும், தனக்கு என்ன ஆதாயம் என்பதைப் பார்த்து செயல்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே செயல்பட காலம் அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றது. காலப்போக்கில் அதுவே பின்னுக்கு தள்ளியும் வைத்து விடுகின்றது. இந்த களம் திறந்த வெளி மைதானமாக இருப்பதால் எதையும் மறைக்க முடியாது.  மாற்றவும் முடியாது.

காரணம் இங்கே ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருப்பவர் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். மதம், சாதி, அதிகாரம், அரசியல் போன்ற எந்த லாபியும் இங்கே வேலை செய்யாது. அவரவர் வைத்திருக்கும் "கூட்டணி தத்துவம்" கூட குப்பைக்கூடைக்கு போய்விடும். உணர்ந்தவர்கள் அமைதியாக செயல்படக்கூடியவர்கள்.

நான் கடந்த நாலரை வருட இணைய அனுபவத்தில் "கற்றதும் பெற்றதும்" ஏராளம். எழுத்துப்பயிற்சி எவரும் கற்றுத் தர முடியாதது. இவர் என் ஆசான் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் கைப்பிடித்து எழுதி கற்றுத் தரமுடியாத எழுத்துப் பயிற்சியை எழுதுவதன் மூலம் மட்டுமே படிப்படியாக நம்மால் பெற முடியும். நானும் உணர்ந்துள்ளேன். சில படிகள் ஏறியுள்ளேன். கடந்த 2013 தொடக்கத்தில் புத்தக உலகம் அறிமுகமாகி 4 தமிழ்மீடியா படைப்பாய்வகம் வெளியிட்டுள்ள  "டாலர் நகரம்" என்ற என் முதல் நூல் வெளிவந்தது. 2014 ல் மின் நூல் உலகம் அறிமுகமாகி "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளிவந்துள்ளது.

இரண்டுமே வெற்றியையும் அங்கீகாரத்தையும் தந்துள்ளது.

டந்த டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட என் முதல் மின் நூல் ஒரு மாத காலத்திற்குள் நான் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக அதிகமான பேர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது.

9000 +
ஒரு தமிழ்ப் புத்தகம் வெளியிட்ட ஒரு மாதத்தில் 9000 பிரதிகள் விற்பனையானால் என்னவாகும்? பல எழுத்தாளர்களின் ராயல்டி பிரச்சனைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து இருக்கும். பதிப்பகங்கள் இன்று கோடீஸ்வரனாக மாறி இருப்பார்கள்.  இந்த அளவுக்கு ஒரு எழுத்தாளரின் புத்தகம் இங்கே விற்க வேண்டும் என்றால் அவர் தன் வாழ்நாளில் பாதி நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ணையம் என்பது நம் கற்பனைக்கு எட்டாத ஆச்சரியம் நிறைந்த ஒன்று. இது இலவசம் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் ஈழம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள் உலகம் முழுக்க இன்னமும் அதிகமான பேர்கள் இருக்கின்றார்கள் என்பதோடு வாசிப்பவர்களின் சூழலும் மாறிக் கொண்டே வருகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஈழம் பற்றி அடிப்படை எதுவும் தெரியாதவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும் என்கிற வகையில் எனக்குத் திருப்தியே.

உதவிய சீனிவாசன், ரவிசங்கர், வினோத்,தனபாலன், அவர்கள் உண்மைகள், ஞானசேகரன், துளசிதரன் போன்றோருக்கு நன்றி.

அட்டைப்படம் வடிவமைப்பு வீடு சுரேஷ்குமார்.

"இதுவும் கடந்து போகும்".

0o0

சென்ற ஜனவரி 4ந் தேதி சென்னையில் நடந்த எழுத்தாளர் ஞாநி அவர்களின் 60 வது பிறந்த நாள் விழாவுக்காகச் சென்னை சென்றிருந்த போது FREE EBOOK.COM தளத்தில் எனது முதல் மின் புத்தகமான "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளியிட்ட பின்பு முதல் முறையாக சீனிவாசனை சந்தித்தேன். அவர் கொண்டு வந்திருந்த ஈ ரீடர் என்ற கையடக்கக் கருவியில் என் மின் நூலை படிக்க வாய்ப்பு கிடைத்த நேரம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். இது போன்ற தளத்திற்குச் சர்வர் வாங்கி அதற்கு முதலீடு செய்து தொடர்ந்து கொண்டு செல்வது என்பது நாம் நினைப்பது போலச் சாதாரண விசயமல்ல. எவரிடமும் எவ்வித பொருளாதார உதவிகளையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் தன்னலமற்ற சேவைக்கும் மற்றும் இவரைச் சார்ந்த குழுவினருக்கு என் வணக்கமும் வாழ்த்துகளையும் இங்கே எழுதி வைக்கின்றேன்.

டந்த இரண்டு வருடங்களில் இணையதளங்களில், வார இதழில், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அச்சு வடிவத்தில் என் படைப்புகளைப் பார்த்த போதிலும் இந்தக் கருவியில் இருந்த வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். இதுவரையிலும் கணினியில் பிடிஎஃப் கோப்பாகப் பலவற்றைப் படித்து இருந்த போதிலும் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் வசதிகளும், மகிழ்ச்சியும் வந்ததே இல்லை என்ற கருத்துக் கொண்ட என் எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. சீனிவாசன் என்னுடன் பேசும் போது "இதை விட இன்னும் மேம்பட்ட பலதரப்பட்ட வசதிகள் உடைய கருவிகள் வந்து விட்டது" என்றார்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலமும் சூழ்நிலையும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியினால் எங்கேயோ நம்மை இழுத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன். 

"காசுக்கேத்த பணியாரம்".

0o0




chrome plugin http://readium.org/

Desktop application - http://fbreader.org/

Use these apps to read epub 





"வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்படுவது".

0o0

"வந்தார்கள் வென்றார்கள்" என்ற தலைப்பு ஏற்கனவே மதன் அவர்களால் எழுதப்பட்ட சரித்திர தொடருக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு ஆகும். 

காரணம் ஈழ வரலாற்றில் அங்குச் சென்ற ஸ்பானிஷ், போர்த்துகீசியர்கள், டச்சுப்படைகள் தொடர்ந்து கடைசியாகச் சென்ற ஆங்கிலேயப் படைகள் என்று அனைவருமே கொள்கை ரீதியாகவும், அவர்கள் நினைத்தபடியே பொருளாதார ரீதியாகவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்தார்கள் வென்றார்கள். இதைப்போலவே குறுகிய இனமாக இருந்த சிங்களர்களும் படிப்படியாக வளர்ந்து இறுதியில் இன்று இலங்கை என்பது பௌத்தர்களின் நாடு என்று வென்று சாதித்துக் காட்டியுள்ளனர். இதை மனதில் கொண்டே இந்த மின் நூல் பேசுவதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.  மூத்த பத்திரிக்கையாளர் திரு மதன் அவர்களுக்கு நன்றி.

"வளரும் பொழுது கடன் வாங்குவது தவறல்ல".

0o0

முதல் மின் புத்தகத்திற்குக் கிடைத்த ஆதரவு "அடுத்த உழைப்பையும் கொடுத்து விடு" என்பது போலவே இருந்தது. இது என் இரண்டாவது மின் புத்தகம். 

முதல் பகுதியில் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் ஒவ்வொரு சமயத்திலும் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களைப் பற்றிப் பேசும் தொகுப்பு இது. இரண்டாவது பகுதியில் இன்று பாரதப் பிரதமராக உள்ள மன்மோகன் சிங் கொள்கைகள் உருவாக்கிய மறைமுக அடிமைத்தனத்தையும் பேசுகின்றது. 


தரவிறக்கம் செய்ய

"கடமை என்பது செய்தே ஆக வேண்டியது. பலன் என்பது கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த முயற்சி".

0o0

நான் வலைதளத்தில் பார்த்த வரைக்கும் மிகக்குறுகிய காலத்தில் தன் திறமைகளை உணர்ந்து, தெளிவான பாதையில் நடைபோட்டு முன்னேறியவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவரின் முதல் புத்தகம் வெளியாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு உள்ளார்கள்.


வார இதழ்களில் அவரின் கட்டுரைகளைப் படிக்கும் பொழுதும் சரி, அவர் தேர்ந்தெடுக்கும் விசயங்களும், நேர்த்தியான நடையும் அவருக்குள் இத்தனை நாளும் உள்ளேயிருந்த பத்திரிக்கையாளர் தற்பொழுது வெளியே வந்துள்ளது என்பதாகத்தான் நான் நினைத்துக் கொள்வதுண்டு. கடந்து போன நாட்களில் இவர் பங்குக்கு எனக்கு விவேகத்தை இன்னமும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளார். மூத்தோர் சொல் முதலில் கசக்கும். பிறகு நெல்லி போல இனிக்கும். வாழ்த்துகள் ரஞ்சனி நாராயணன்.

பெண்ணுரிமை என்பது அடக்கத்தில் தொடங்குவது. அறிவால் வெல்வது.

0o0


திர்காலத்தில் தமிழ் மொழியை வளர்க்க என்பதாக சமீப காலங்களில் பலதரப்பட்ட மேடைப் பேச்சுக்கள், கொள்கைகள், விளக்கங்கள், மாநாடுகள் போன்றவற்றை நீங்கள் செய்தித் தாள்களில் படித்து இருக்கக்கூடும். ஆனால் எதனைச் செய்யவேண்டும்? என்பதை உணர்ந்து உருப்படியாக ஒருவர் தன் சொந்த முயற்சினால் தன் முகம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், விளம்பரங்கள் எதுவுமின்றி, இணைய தளம் வாயிலாக சாதித்து காட்டிக் கொண்டிருக்கின்றார்.  இதில் என் சொந்த அனுபவமும் ஒன்று என்பதை இங்கே குறிப்பிட்டு எழுத வேண்டும்.  நான் சென்னையில் இருந்த போது என் மகள் குறிப்பிட்ட மருத்துவ பலன் உள்ள செடிக்கு ஆங்கிலப் பெயர் என்ன என்று கேட்டார்? உடனே நினைவுக்கு வந்தது வலைத்தமிழ் என்ற தளமே.  


"இங்கே சிலர் மட்டுமே நம் அடையாளம் தேவையில்லை என்று தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே அடையாளப்படுத்திவிட்டு மறைந்து விடுகின்றார்கள். இறுதியில் அவர்கள் மட்டுமே காலத்தை வென்றவர்களாக காட்சியளிக்கின்றார்கள்".
0o0

வலைத்தமிழ் குறித்து ஒரு குறிப்பு:

v 1,70,000 வார்த்தைகள் கொண்ட தமிழ் அகராதி (http://www.valaitamil.com/tamil_dictionary.php)
v   4900+ மேற்பட்ட தமிழ் இலக்கியங்களின் தொகுப்பு  (http://www.valaitamil.com/literature)
v      105000+ குழந்தைப் பெயர்கள் (http://www.valaitamil.com/baby_names.php)
v  4800+ தமிழ் திரைப்படங்களின் விபரம் (http://www.valaitamil.com/movies/index.php)
v      8000+ தமிழ் இணையதளங்கள் (http://www.valaitamil.com/tamilsites/index.php)
v      2000+ தமிழ் சமையல் குறிப்புகள் (http://www.valaitamil.com/recipes)
v 1300 தமிழக கோயில்களின் தகவல் தொகுப்பு (http://www.valaitamil.com/temples.php)
v      900 + மருத்துவக் குறிப்புகள் (http://www.valaitamil.com/medicine)
v      100 தமிழகக் கலைகள் (http://www.valaitamil.com/kids_tamilnadu-arts)
v      200 சுட்டிக் கதைகள் (http://www.valaitamil.com/kids_kids-stories)
v      அறிய புகைப்படத் தொகுப்பு  (http://www.valaitamil.com/photo_home.php)
v      காணொளித்தொகுப்பு (http://www.valaitamil.com/video_home.php)
v   இரண்டு கைபேசி மென்பொருள்களை iphone & Androiid –ல் உருவாக்கி அதை ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு மேல்  பயன்படுத்துகின்றார்கள். (http://www.valaitamil.com/app)

"வெளிநாட்டில் வாழும் குறிப்பிடத்தக்க தமிழர்களால் மட்டுமே வரும் காலத்தில் தமிழ் என்றொரு மொழி இருந்தது என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெரிய வரக்கூடும்".

0o0

இணையத்தின் வாயிலாக (மட்டுமே) அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் எண்ணத்தில் வைத்துள்ள (நான்கு) தலைப்புகள் முதலில் மின் புத்தகமாக மாற்றப்பட்டு ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும்  நண்பர் சீனிவாசன் அவர்களால் வெளியிடப்படும். பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதால் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் பேசுவோம்.

வல்லமை இணைய இதழில் டாலர் நகரம் மதிப்புரை

பயணங்கள் முடிவதில்லை.

நன்றி.