Showing posts with label மின்சார சட்டம். Show all posts
Showing posts with label மின்சார சட்டம். Show all posts

Tuesday, November 06, 2012

மின்சாரக் கனவு - 2 மின்சாரச் சட்டம்





மின்சாரம் -புரிந்து கொள்வதற்கு மட்டும்  இனி பயன்படுத்த அல்ல. 

கடந்த நூற்றாண்டின்  தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரம் மக்கள் மத்தியிலும் பெரும் வற்வேற்பு கிடைத்தது.  இந்த நிலையில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசானது மின்சார உற்பத்தி, அதனைக் கொண்டு செல்லுதல் மற்றும் வழங்குதல் குறித்து ஒரு சட்டத்தை இயற்றியது. 

1910 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அந்த சட்டம் பின்னாளில் இந்திய மின்சாரச் சட்டம் 1910 என்று அழைக்கப்படுகின்றது.

சுதந்திர இந்தியாவின் அரசானது, மின்சாரம் அனைத்துத் தரப்பு மக்களுக்கு அவர்களால் வாங்க முடிகின்ற விலையில் வழங்கபட வேண்டும் என்ற கொள்கை முடிவை 1948 ஆம் ஆண்டில் எடுத்தது.  மின்சார வழங்கல் சட்டம் 1948 என்பது அதன் வெளிப்பாடாக அமைந்தது.  மேலும், சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மின்சாரம் குறித்த செயல்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டுமே கையாள வேண்டும் என்று கூறியது.  

இதன் காரணமே மின்சாரம் என்பது பொது பட்டியலில் வைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் மின்சார வழங்கல் சட்டமானது, மினசாரத்தின் விலையைப் பொருளாதாரத்தில் வலிமை பெற்ற பிரிவினருக்கு அதிகமாகவும், ஏழை மக்களுக்குக் குறைவாகவும் நிர்ணயிக்க வழிவகை செய்தது.  இதுவே CROSS SUBSIDY  என்றழைக்கப்பட்டது.  1948 ஆம் ஆண்டின் மின் வழங்கல் சட்டத்தின் அச்சாணியாக இந்த CROSS SUBSIDY  என்ற கருத்தாக்கமாக அமைந்தது.  இந்த சட்டத்தால் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட முக்கிய பங்களிப்பாகவும் பின்னாளில் காலங்களில் போற்றப்ட்டது.

திட்டமிடுதல் விரிவாக்கம் முதலியவற்றை அரசின் நேரடித் தலையீடு இல்லாமல் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக முடிவெடுக்க கூடிய  செமி அட்டானமஸ் தன்மை கொண்ட மின் வாரியங்களை உருவாக்க இந்த சட்டம் வழிவகை செய்தது.

இந்த சட்டமே இந்தியாவின் பெரும்பகுதி கிராமங்களுக்கு  மின்சாரத்தைக் கொண்டு செல்லவும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் பெரும் மறு மலர்ச்சி ஏற்படவும் வழி வகை செய்தது.  இந்த சட்டமே இந்தியாவின் மின்சாரம் தொடர்பான அனைத்து அடிப்படை மேம்பாட்டுப் பணிகளையும் 2003 ஆம் ஆண்டு வரை வழி நடத்திச் சென்றது.


1991 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையானது தனது முதல் தாக்குதலை மின்சாரத் துறையில் தொடங்கியது.  மின்சார துறையின் புனரமைப்பு என்ற பெயரில் அந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களில் முதன்மையானது மின்சாரமே.  ஏனெனில் அது நாட்டின் அனைத்துத் துறைகளுடன் உள்ளூரத் தொடர்பு கொண்ட ஒன்றாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டதாகவும் இருக்கிறது.  மாபெரும் நிதி முதலீடுகளுக்கும், கனரக எந்திரங்களின் வணிகத்திற்கும், நிரந்தரத் தேவையுள்ள உற்பத்திற்கும், லாபம் கொழிக்கும் சந்தைக்கும் மையப்புள்ளியாக மின்சாரத் துறை அமைந்திருக்கிறது.  இவையே மின்சாரத் துறையானது புதிய பொருளாதாரக் கொள்கையின் முதல் இலக்கானதற்கான காரணமாகும்.

இந்த காரணங்களுக்காகவே, மின் உற்பத்தி முதலில் தனியாருக்குத் திறந்து விடப்பட்டது. அவர்களின் உற்பத்திற்கும், வணிகத்திற்கும் உதவும் வகையில் மின்சாரத் துறையினை இதுவரை வழிநடத்தி வந்த மாநில அரசின் அதிகாரம் மாற்றப்பட்டது.  இந்த அதிகாரமானது சட்டமன்றங்களுக்கும், மாநில அரசுக்கும் பதில் சொல்ல அவசியமில்லாத, ஆனால் அதே நேரத்தில் தனியார் துறையினாரால் எளிதில் கையாள முடிகினற் நிர்வாக அமைபு ஒன்றிடம் கைமாற்றி அளிக்கப்பட்டது.  1998 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் மூலமாக இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நிர்வாக அமைப்பானது மின ஒழுங்குமுறை ஆணையம் என்று அழைக்கப்பட்டது.  இந்த அமைப்பிறகு ஓரளவு நீதிபரிபாலனை  அதிகாரமும் வழங்கப்பட்டது.

இதன் பிறகும் தனியார் துறையின் வசதிக்கேற்ப மின்சாரத் துறையினை மேலும் புனரமைக்க மத்திய அரசு முற்றிலும் புதிய சட்ட வரைவு ஒன்றினை  2000 ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் முக்கியக் குறிக்கோள 1948 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மின் வழங்கல் சட்டத்தின் உயிரான CROSS SUBSIDY  கருத்தாக்கத்தைப படிப்படியாக நீக்குவது தான்.  மின்வாரியத்தின் கட்டமைப்புகளை தனியாரின் பயன்பாடுகளுக்கு ஏதுவாகத் திறந்து விடுவது தான் இந்த சட்டவரைவின் அடுத்த முக்கிய குறிக்கோளாகும்.  இதுவே பின்னர் 1998 ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தினை உள்ளடக்கிய மின்சார சட்டம் 2003 ஆக நிறைவேப்பட்டது.

மின்சாரச் சட்டத்தில் (2003) உள்ள முக்கிய அம்சங்கள்.

மின் உற்பத்திக்கு உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை. 

க்ராஸ் சப்சிடி என்பது விலக்கிக் கொள்ளப்படும் என்று தொடங்கி கடைசியில் 2007 ல் க்ராஸ் சப்சிடி குறைக்கபடும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

மின்சாரத்தினை வணிக ரீதியில் விற்க வேண்டும். அதாவது சேவைப் பொருள் என்பது லாபமீட்டுவதற்கான ஒரு பொருளாக மாற்றப்பட்டது.

மின்சாரத்தினை இனி எவரும் வணிகம் செய்யலாம்.

மின்வாரியத்தின் மாநிலம் தழுவிய மின் கட்டமைப்பினை மின் வணிகர்களும், தனியார் மின் உற்பத்தியாளர்களும் தங்களின் வணிகத்திற்காக இனி பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் மின்சாரச் சட்டத்தினை இயக்கும் மைய அச்சாணியாகும்.

ஒரே நிறுவனமாக இதுவரை இருந்த வந்த மின்வாரியமானது இனி மின் உற்பத்தி, மின் தொடர், மின் விநியோகம் என்ற நிறுவனங்களாகப் பிரிக்கப்படும்.

மின்சாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமையானது மாநில அரசிடமிருந்து கைமாற்றப்பட்டடு மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கபடும். இதன் செயல்பாட்டில் மாநில அரசால் தலையிட முடியாது.

மின்சார விநியோகம், வணிகம் மின் தொடர் அமைப்புகளுக்கான  உரிமங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே வழங்கும்.

மின்சாரக் கட்டணங்கள், கொள்முதல் விலை, விற்பனை விலை ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையமே நிர்ணயிக்கும்.

இனி ஒழுங்குமுறை ஆணையமே மின்சார உற்பத்தியாளர்களும், மின் துறையின் இதர செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு உரிமைகளைப் பெற்றவர்களுக்கும் இடையில் ஏற்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதி பரிபாலன அதிகாரத்தினை பெற்ற அமைப்பாகச் செயல்படும்.

இந்த வழக்குகளுக்கான மேல் முறையீடுகளை விரைவில் தீர்ப்பதற்காக தனி பாதையாக தேசிய அளவில் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் இருக்கும்.

மாநிலங்களுக்கிடையோன மின்சாரம் தொடர்பான செயல்பாடுகளை மத்திய மின்சார ஆணையமே நிர்வகிக்கும்.


இதை முழுமையாக படித்தவர்களுக்கு ஒன்று புரியவேண்டும்.  இனி மின்சாரம் என்பது வணிகம் சார்ந்த விற்பனை பொருள்.  மாநில அரசாங்கத்திற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை.  

இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வீரமாய் பேசியதன் நோக்கத்தையும், ஆனால் உண்மை நிலவரங்களையும் நம்மால் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும்.

இனி கை நிறைய காசு இருந்தாலும் கரண்டு  மத்திய அரசாங்கம் நினைத்தால் மட்டும் தான் சாத்தியம். இது தவிர மாநில அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்....................... ..