இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளை அதில் சிலவற்றை மட்டும் இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் பதிவு செய்து விடுகின்றேன்.
நான் சென்ற பயணத்தில், கலந்து கொண்ட விழாக்களில், தனிப்பட்ட உறவு சார்ந்த நிகழ்ச்சிகளில், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நான் தவறாமல் பார்த்த ஒரு முக்கிய நிகழ்வு அலைபேசி சேவைகளின் பயன்பாடு.
ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் அலைபேசியைத் தேவை இருக்கின்றதோ இல்லையோ? அதனை நோண்டிக் கொண்டே இருப்பது என்பது ஒரு பழக்கமாகவே மாறியுள்ளது. மற்றொரு ஆச்சரியம் இந்தப் பழக்கம் இயல்பான பழக்கம் போலவே மாறியுள்ளது.
காரணம் தாங்கள் வைத்திருக்கும் அலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆகா இது நல்லது தானே? நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் தானே? என்று உங்களுக்கு எண்ணம் வரக்கூடும். ஆனால் நான் பார்த்த வரைக்கும் 90 சதவிகிதம் பொழுது போக்கிற்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
இந்த முதல் தலைமுறையின் இணைய செயல்பாடுகள் அடுத்து வரும் தலைமுறைக்கு மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புவோம். அப்போது தான் நான் படித்த பத்திரிக்கை செய்திகள் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி
2013 - 14 ஆம் ஆண்டுக் காலாண்டு (ஏப்ரல் முதல் ஜுன் வரை) ஒட்டுமொத்தமாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 89 சதவிகிதம் அதிகம். தனியார் வழங்கும் அலைபேசி சேவை வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இது
பாரதி ஏர்டெல் 26.16 சதவிகிதம்
வோடபோன் 23.34 சதவிகிதம்
ஐடியா செல்லுலார் 18.94 சதவிகிதம்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் 16.25 சதவிகிதம்.
போட்டியில் உள்ள மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்களிப்பும் ஒற்றை இலக்க எண்ணில் தான் உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் கேபிள் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் இன்று வரையிலும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் 60.13 சதவிகிதத்தை மற்ற எந்தத் தனியார் நிறுவனமும் தொட, தொடர முடியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் 11.86 சதவிகிதத்தோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏனைய மற்ற நிறுவனங்கள் இந்தச் சேவையில் ஒற்றை இலக்க எண்ணில் மட்டுமே உள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக வீட்டில் பி.எஸ்.என்.எல் சேவையைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகின்றேன். தொடக்கத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக அற்புதமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கால கட்டத்தில் தனியார் சேவையை நான் பயன்படுத்தியிருந்தால் என் பாதிச் சொத்தை எழுதி வைத்திருக்க வேண்டியிருக்கும்.
இன்று வரையிலும் அலைபேசி சேவையின் மூலம் இணையத்தை அணுகியதில்லை. அதற்கான தேவையும் வந்ததும் இல்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும் "பொருளாதார மேதைகள்" நிரம்பிய அரசு எப்படி நசுக்கியது? என்பதை இந்தக் காணொளி காட்சியைப் பார்த்து புரிந்து கொள்ளுங்களேன்.
ரௌத்திரம் பழகு காணொளி காட்சியின் மொத்த தொகுப்பு இது. சொடுக்க உங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை,அவர்கள் படும் பாடுகளை உணர்த்தும்.