Showing posts with label திண்டுக்கல் தனபாலன். Show all posts
Showing posts with label திண்டுக்கல் தனபாலன். Show all posts

Tuesday, October 08, 2024

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்களும் உதவலாம்.

ஜனவரி 2024 க்குப் பிறகு இன்று தான் இங்கே உள்ளே வந்துள்ளேன். வலைபதிவில் எழுதியது போதும் என்ற மனநிலை உருவானது.  2009 ஜுலையில் வலைபதிவு எழுத்துப் பயணத்தை தொடங்கினேன். முழுமையாக 15 வருடங்கள். மனதில் இருந்த, உருவான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டு வந்தேன்.  மே 4  2024 அன்று கடைசியாக எழுதினேன்.  மே 5 அதிகாலை செய்தி வந்தது.  அம்மா காலமாகிவிட்டார்.  ஃபேஸ்புக்கில் எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.  எழுத்துலகில் இருந்து முழுமையாக 150 நாட்களாக என்னை துண்டித்துக் கொண்டு விட்டேன்.

சென்ற வாரம் வரை பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து ஊருக்கு பயணம் செய்வதில் முக்கால்வாசி நேரம் முழுங்கி விடுகின்றது. மே தொடங்கி நேற்று வரை எங்கும் எதிலும் எதைப்பற்றியும் எழுதவில்லை. எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விட்டேன். மிக நெருக்கமானவர்கள் அழைத்துக் கேட்ட போதும் கூட இங்கு இப்போது எழுதும் தகவல்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  காரணம் எல்லாவற்றிலும் இருந்து விலகியிருக்க விரும்பினேன்.  அடுத்த ஒரு வருடம் இப்படியே இருந்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக.

கடந்த 15 வருடங்களை பின்னோக்கி திரும்பிப் பார்க்கையில் உணர்ச்சி, உணர்வு, அறிவு இவை மூன்றும் என்னை வழி நடத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.  நான் சார்ந்துள்ள தொழில் வாழ்க்கையில் கிடைக்காத நண்பர்கள் அனைவரும் என் எழுத்துலக வாழ்க்கையின் மூலம் தான் கிடைத்தார்கள்.  அதில் ஒருவர் திண்டுக்கல் தனபாலன்.

உலகம் முழுக்க குறைந்த பட்சம் 5000 க்கும் மேற்பட்ட வலைபதிவர்களின் வாழ்க்கையோடு, அவர்களின் நம்பிக்கையோடு, எழுத்துலக வளர்ச்சியோடு தொடர்புடையவர். அசாத்தியமான திறமைசாலி. எதையும் எவரிடமிருந்து எதிர்பார்க்காத தன்னலம் கருதாத யோகி.  அதனால் தான் அவரை வலையுலக சித்தர் என்று அனைவரும் அழைத்தனர். பொருத்தமான பட்டமிது.

சமூகவலைதளங்கள் பக்கம் அதிகம் செல்லாமல் இருந்த எனக்கு நண்பர் ஒருவர் முரளி அவர்கள் திண்டுக்கல் தனபாலன் குறித்து எழுதியிருந்த கடித வடிவத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.  தனபாலன் கடைசியாக என்னிடம் பேசியது என் அம்மா இறந்த அதே மே மாதம். வீடு கட்டியிருந்தார். புதுமனைபுகுவிழாவிற்கு வாட்ஸ் அப் வாயிலாக அழைத்து இருந்தார். அப்போதே பேச முடியாத நிலையில் இருந்தார் என்பதனை சென்ற வாரம் தான் உணர்ந்து கொண்டேன். 

அப்போது கூட அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

திண்டுக்கல்லுக்கு குடும்பத்தோடு செல்ல தயாராக இருந்தோம்.  அம்மா இறந்த செய்தி வர அவரிடம் தெரிவித்து விட்டு மறந்து விட்டோம்.  முரளி கடிதம் பார்த்து தனபாலனை அழைத்து பேசினேன்.  கோவை  மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இதயம் சார்ந்த சிகிட்சை எடுத்து சில மாதங்களாக முழு ஓய்வில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  அவரே என்னிடம் சொன்னது.  ஒரு நிமிடம் கூட என்னால் பேச முடியாத நிலையில் இருந்தேன்.  உங்களுடன் இவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்றார்.  அந்த அளவுக்கு உடல் பலகீனப்பட்டு உள்ளதை உணர்ந்து கொண்டேன்.

அவர் செய்து கொண்டு இருந்த தொழிலை இனி தொடர முடியாது.  தறி மூலம் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள் தொடங்கி பலவிதமான சேலைகள் வரைக்கும் தமிழகம் எங்கும் பெரிய மற்றும் சிறிய ஜவுளிக்கடைகளுக்கு வழங்கிக் கொண்டு இருந்தார்.  சிறிய முதலீடு என்ற போதிலும் அவருக்கு ஏற்கனவே நிரந்தரமாக இருந்த சர்க்கரை நோய் காரணமாக தொழிலை சுருக்கி வேலையாட்கள் மூலம் செய்து கொண்டு இருந்தார்.  

ஓரே மகள் பொறியியல் படிப்பு முடித்து பெங்களூரில் பணியாற்றிவிட்டு இப்போது பணிமாறுதல் கேட்டு கோவையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். இப்போது தான் பணியைத் தொடங்கியிருப்பதால் இயல்பான சம்பளம் தான்.  நிச்சயம் தனபாலன் போன்றவர்களுக்கு வாழும் போதே வலையுலகம் அவரை அங்கீகரிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். காரணம் அவர் வலையுலகத்திற்கு செய்துள்ள பணி என்பது தமிழ்த்தாத்தா உவேசா போன்றதற்கு சமமானதாகவே நான் கருதுகிறேன்.  அவர் ஐம்பெரும் காப்பியங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்.

தனபாலன் ஆயிரக்கணக்கான பேர்களை நம்பிக்கையூட்டி வலையுலகத்தில் பயணிக்க வைத்தார். அவர்கள் கேட்ட தொழில் நுட்ப பிரச்சனைகளை தீர்த்து உதவினார்.  புதுப்புது வலையுலக ரகசியங்களை வெளியுலகத்திற்கு அப்படியே வெளிப்படையாக எழுதி புரிய வைத்தார். தன்னுடைய பொன்னான நேரத்தை பின்னூட்டம் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதி எழுதியவருக்கு உற்சாகத்தை உருவாக்கி தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க வைத்த பெருமை தனபாலன் ஒருவருக்கே உண்டு என்றால் அது மிகையல்ல.

பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளார் என்பதனை உணர்ந்து கொண்டேன்.  கடந்த சில மாதங்களில் அவர் மருத்துவமனைகளில் செலவளித்த தொகை என்பது மிகவும் பெரியது.  தொடர்ந்து தொழிலில் இருந்து தேக்கம் என்பது அவரை கடந்த சில வருடங்களாக திக்குமுக்காட வைத்துக் கொண்டு இருந்தது என்பதனை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.  அவர் எதையும் என்னைப் போல தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுவெளியில் வைப்பதில்லை.

அண்ணே எங்கேயாவது உட்கார்ந்து வேலை செய்யும்படி ஒரு வேலை அமைந்தால் கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று அவர் சொன்னபோது திட்டி அலைபேசியை துண்டித்தேன்.  அவர் உடல்நிலை இனி ஒத்துழைக்காது. அடுத்த வருடம் நிச்சயம் மகளுக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளார். தொடர்ந்து செய்தே ஆக வேண்டிய மருத்துவ செலவுகள் ஒரு பக்கம். மற்றொருபுறம் அடிப்படை வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் விசயங்கள் என்று இரண்டு பக்கமும் அவரை இனி வரும் காலம் துரத்தும்.

அவரால் தொடர்ந்து பேச முடியாது. மூச்சு இழைப்பு, தடுமாற்றம் வரலாம். அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம். 

அவர் எந்த உதவியையும் யாரிடமும் கேட்கவில்லை. நான் இப்போது இங்கு எழுதுவதும் அவருக்குத் தெரியாது. அவர் அனுமதியில்லாமல் என் விருப்பத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன். அவருடைய இரண்டு  அலைபேசி எண்களை இங்கே எழுதியுள்ளேன்.  இரண்டிலும் ஜிபே வழியாக பணம் அனுப்ப வசதியுள்ளது என்பதனை உணர்ந்து கொண்டேன்.  

வெளிநாட்டில் வாழ்கின்ற நண்பர்கள் நிச்சயம் இந்த பணியை உங்களை சார்பாக தொடங்கலாம். தொடரலாம். அனுப்பியவர்களை வாட்ஸ்அப் வழியாக தகவல் தெரிவிக்கலாம்.  நீங்கள் செய்யக்கூடிய உதவி என்பது மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவரக்கூடும்.  மனச்சிக்கலில் அதிகமாக இருப்பது பணச்சிக்கல் தான்.  இது தீர்ந்து போனால் உளச் சிக்கலில் எவ்வித பிரச்சனைகளும் உருவாகாது என்று நம்புகின்றேன்.

இந்தப் பதிவு எத்தனை பேர்களின் பார்வைக்குச் சென்று சேரும் என்பது எனக்குத் தெரியாது.  நான் ஏன் நீண்ட காலம் எழுதாமல் இருந்த காரணத்தை வலைபதிவு மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்?  இனி இவர் எழுதவே மாட்டார் என்று கேட்பதையும் நிறுத்திவிட்டார்கள். எனவே இதை வாசித்து முடித்தவர்கள் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கலாம். அதுவும் ஒரு உதவி தான்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் எழுதவிரும்பவில்லை. காரணம் அவ்வுலகம் வேறு. மனிதர்களை அரசியல் ரீதியாக பிரித்து வைத்து இருப்பதும் அநாகரிகத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதே அதன் முதன்மை நோக்கமாக உள்ளது.  உணர்வுகள் மழுங்கிப் போய் வன்மத்தை வகைதொகையில்லாமல் வளர்த்து வைத்திருப்பவர்களிடம் என்ன பேசினாலும் எடுபடாது. வலையுலகம் வேறு. மற்ற சமூக ஊடகங்கள் உலகம் வேறு.

ஏன் திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் உருவானால் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் வெவ்வேறு காலகட்டத்தில் தன் குடும்பம் தங்கள் வசதி என்பதனையும் கடந்து அவர்களுக்குத் தெரிந்த வகையில் சமூகத்தின் ஏதோவொரு அசைவில் அடுத்த அடி நகர பலரும் முன்னேற காரணமாக இருந்து உள்ளனர் என்பதனை உங்கள் இதயம் உணரட்டும்.  உங்கள் உதவிகள் மூலம் பலவீனப்பட்டு இருக்கும் தனபாலன் இதயத்தில் மலர்ச்சி உருவாகட்டும்.  

எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு யூபிஐ வழியாக அனுப்ப விரும்பினால் கீழ்கண்ட அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

99443 45233   90439 30051

 வங்கி பரிவர்த்தனை மூலம் அனுப்ப முடியும் என்பவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற நண்பர்களை அனுப்பச் செய்து அவர்களுக்கு நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்.  அவர் தற்போது இருக்கும் சூழலில் அதிக நேரம் பேச இயலாது என்பதால், இப்படியொரு ஒரு காரியம் செய்யப்போகின்றேன் என்று சொன்னால் நிச்சயம் மறுப்பார் என்பதால் நான் எதையும் கேட்கவில்லை.

(இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். சிறிய உதவி என்று யோசித்துக் கொண்டு இருக்காமல் தயங்காமல் உதவுங்கள்)

Wednesday, December 28, 2016

திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?


ஏழாண்டுகள் முடியப் போகின்றது. இணைய உலகில் எட்டாவது ஆண்டை நெருங்கப் போகும் எனக்கு ஒவ்வொரு ஆங்கில வருடப் புத்தாண்டு சமயத்திலும் "கற்றதும் பெற்றதும்" என மனதில் தோன்றுவதை ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புவதுண்டு. காரணம் சென்ற மாதம் நடந்தது என்ன? என்பது மறந்துவிடும் அளவிற்குத் தொழில் வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் உந்தித்தள்ளினாலும் என் வலைப்பதிவில் எழுதும் எழுத்து என்பது ஒவ்வொரு சமயத்திலும் என்னை என் வாழ்க்கையை, என் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டே வந்துள்ளது. 

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்தாலும் உருவான அன்றைய நெருக்கடிகளை எழுத்துக்களைச் சமூகப் பார்வையாக மாற்றி வைத்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் என் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வதுண்டு. 

பல வருடங்கள் கழித்துப் பழைய குப்பைகளைக் கிளறிப் பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருந்து இன்று எந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளோம்? என்பதனை புரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மற்றபடி இணைய உலகில் மகுடம் சூட்டியவர்களையும், மகுடத்தை இன்னமும் கழட்ட விரும்பாதவர்களையும் வேடிக்கை பார்ப்பதோடு சரி. 

இந்த வருடம் என்ன எழுதலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது எப்போதும் அவரிடம் இருந்து அவரின் புதிய பதிவு குறித்து மின் அஞ்சல் வந்தது. அதே சமயத்தில் என் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குழுவில் அவர் என்னை இணைத்து இருந்தார். 

சரியாகக் கடந்த 12 மாதங்களாகத்தான் வாட்ஸ்அப் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். அதற்கு முன்னால் இந்த வாட்ஸ் அப் என்ற வசதி இல்லாத காரணத்தால் பல இன்னல்களையும் சந்தித்த போதும் கூட விடாப்பிடியாக அதனைப் புறக்கணித்தே வந்துள்ளேன். நம் நேரத்தைக் கொன்று விடும் என்பதே முக்கியக் காரணமாக இருந்தது. நண்பர் ராஜராஜன் தான் புதிய அலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு? எதற்கு? எந்தச் சமயத்தில்? கையாள வேண்டும் என்பதற்கு வரையறை வைத்துள்ள காரணத்தால் கடந்த ஒரு ஆண்டில் இந்த வாட்ஸ் அப் மூலமாகப் பல உன்னதச் செயல்பாடுகள் என் வாழ்வில் நடந்துள்ளது. 

மிக அழகான தொழில் நுட்பம். எந்தக் குழுவையும் உள்ளே அனுமதிப்பதே இல்லை. முக்கியக் காரணம் ஒரு தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதனை நம் தமிழர்கள் கற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படும். குப்பைகளைப் பகிர்வதே பெருமையாகக் கருதுவதால் நேரவிரயமும் மன உளைச்சலும் தான் நமக்குப் பரிசாகக் கிடைக்கும். 

ஆனால் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னையும் வாட்ஸ் அப் (தமிழ் வலைப்பதிவகம்) குழுமத்தில் சேர்த்து இருந்தார். 

அவரின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் சென்று வாசித்து விடுவதுண்டு. காரணம் அவரின் வலைப்பதிவு என்பது ஒரு கலைக்களஞ்சியம். புரிந்தவர்களுக்குப் பொக்கிஷம். கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்குப் பல்கலைக்கழகம். கற்றுக் கொடுத்தாலும் காசு வாங்காத ஆசான். 

பதிவு வெளியிட்ட பத்து நிமிடத்திற்குள் போக்குவரத்து நெரிசல் போன்ற கூட்டத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவர். வாசிக்கும் அத்தனை பேர்களும் ஒட்டளித்து விடுவார்கள். விமர்சனம் செய்து விடுகின்றார்கள். காரணம் ஏதோவொருவகையில் அவருக்கு நன்றி கூற விரும்பும் ஏராளமான நண்பர்களைப் பெற்றுள்ளார். அவருக்கு வலையுலக நண்பர்கள் "வலைச்சித்தர்" என்று பெயர் வைத்துள்ளனர். 

திண்டுக்கல் என்றாலே பூட்டு என்பதனைத் தாண்டி இன்று உலகம் முழுக்க வாழும் தமிழ் வலையுலகம் அறிந்த ஒரே பெயர் என்றால் அது திண்டுக்கல் தனபாலன் தான் என்பதனை என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். அவரைக் கிண்டலடித்த பலரும் கிண்டி கிளங்கெடுத்த அத்தனை பேர்களும் இருந்த இடம் இல்லாமல் மறைந்து விட்டனர். ஆனால் இவரோ நாளுக்கு நாள் வாலிப மிடுக்கோடு அதே வேகத்தோடு தான் செயல்பட்டு வருகின்றார். 

எல்லோருக்கும் உள்ளதைப் போல அவருக்கும் தொழில் சார்ந்த நெருக்கடிகள் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் அதனையும் தாண்டி அவர் கற்றதையும் பெற்றதையும் பலருக்கும் பலன் அளிக்கும் வகையில் தன் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

நான் எழுதுவது என்பது என் தேவைகளின் பொருட்டே. என்னை இறக்கி வைக்க, சற்று இளைப்பாற, சற்று எழுதக் கற்றுக் கொள்ள என்பது போன்ற எதுவும் அவரிடம் இல்லை. ஆனால் அவர் எழுத்து என்பதோடு நின்று விடாமல் ஒவ்வொருவரின் திறமைகளைக் கடத்தும் சாதனமாகவும் இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல. 

எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. இவரைக் கிண்டல் செய்யாத நபர்களே இல்லை என்கிற அளவிற்குப் பல இடங்களில் இவர் செயல்பாடுகளைப் பற்றிப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். தனிப்பட்ட குழுமங்களின் வாயிலாக இதைத்தவிரச் சந்திக்கும் போது என்று பல இடங்களில் இவர் பெயர் அடிபடும். நானே பல இடங்களில் கேட்டுள்ளேன். பல சமயங்களில் வாசித்துள்ளேன். ஒவ்வொருவரும் நக்கல் கலந்த பாணியில் விமர்சனம் செய்வர். அப்போது வரைக்கும் அவர் பெயர் தெரியுமே தவிர நேரில் சந்தித்தது இல்லை. அவரின் செயல்பாடுகளை எப்போதும் போல அமைதியாகக் கவனித்துக் கொண்டு தான் வந்துள்ளேன். 

எந்த வலைப்பதிவு என்றாலும் எவர் என்ற பாரபட்சம் இல்லாத இவரின் விமர்சனம் தான் முதலில் இருக்கும். எனக்கே சற்றுக் குழப்பமாக இருந்தது. எப்படி இது சாத்தியம்? இதையே கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? அடிப்படையான அன்றாட வாழ்க்கையை இவரால் வாழ முடியுமா? என்று பலவிதங்களில் யோசித்துள்ளேன். எனது முதல் புத்தகம் "டாலர் நகரம்" புத்தக விழாவில் கலந்து கொள்ளத் திருப்பூர் வந்தவரை அப்போது தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அன்று முதல் மனதுக்கு இனியவராக மாறினார். தோழமையுடன் தொடர்ந்த நட்பு குடும்ப ரீதியான உறவாக மாறினார். 

அதன் பிறகு ஒரு நாளில் வெளியாகும் ஒவ்வொரு வலைப்பதிவுகளையும் எளிதாகக் குறுகிய நேரத்தில் அடையாளம் காண்பது என்பது பற்றி எனக்குப் புரியவைத்தார். அவர் சார்ந்த தொழில் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். எங்கள் ஏற்றுமதி துறை சார்ந்த பல விசயங்களில் நேரிடையாக மறைமுகமாகப் பணிபுரிந்ததையும் கண்டு கொண்டேன். நேரிடையாக அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்ற போது முழுமையாகப் புரிந்து கொண்டேன். 

அவரின் தற்போதைய போராடும் தொழில் வாழ்க்கை முதல் தோற்றுப் போன அவரின் கடந்த காலக் காலடித்தடம் போன்ற அனைத்தையும் புரிந்து கொண்ட எனக்குள் உருவான ஆச்சரியம் என்னவெனில் இத்தனையும் கடந்து அவருக்குள் இருக்கும் "பகிர்தல்" என்பது வெறும் பழக்கமாக இல்லாமல் இது பிறவி குணமாக உள்ளது என்பதனையும் தெரிந்து கொண்டேன். 

தனக்குத் தெரிந்த வலைப்பதிவு தொழில் நுட்ப சமாச்சாரங்களை அடுத்தவருக்குக் கற்றுக் கொடுப்பது என்பதனை தனது அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஒரு தவம் போலவே கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்.  வலையுலகத்தில் புதிய நபர்களின் வருகை மற்றும் தொடர்ந்து செயல்பட ஆர்வமும் இவரால் தான் உருவாகின்றது.

அழியப் போகும் பட்டியில் தமிழ் மொழி உள்ளது என்றார்கள். ஆனால் இன்று எவருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உலகமெங்கும் வலைமொழியாகி உள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் தன்னால் பணியைத் தன்னலம் கருதாமல் செய்த காரணத்தால் இன்று தமிழ் மொழி உலக மொழியாகி உலகத்தில் பல பகுதிகளில் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக மாறியுள்ளது. 

என் பார்வையில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள மூவர் உண்டு. 

தமிழ்மணம் என்ற திரட்டியை உருவாக்கக் காரணமாக இருந்த காசி ஆறுமுகம். தமிழ் சந்திப்பிழை திருத்தி, தமிழ் எழுத்துப்பிழை திருத்தி முதல் தமிழ் மொழி சார்ந்த பல மென்பொருள் சமாச்சாரங்களை இன்று வரையிலும் ஒவ்வொன்றாகப் படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நீச்சல்காரன் என்ற பெயரில் உள்ள ராஜாராமன் வரிசையில் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் உள்ளார் என்பதனை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். 

வலைப்பதிவு உலகத்தில், உலகம் முழுக்க உள்ள வலைப்பதிவர் மத்தியில் காலம் கடந்து நிற்கும் பெயர் திண்டுக்கல் தனபாலன். 

வலைப்பதிவில் உள்ள தொழில் நுட்பம் சார்ந்த விசயமாக இருக்கட்டும்?, வலைப்பதிவில் சிறப்பான எவரும் அறியாத தொழில் நுட்பங்கள் மூலம் புதுமையாகப் பதிவுகளை உருவாக்கிப் பல ஆச்சரியங்களையும் உருவாக்குவதாக இருக்கட்டும்? வலைப்பதிவுகளைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் தனி நபர்கள் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வது, விளக்கவுரை மூலம் சிறப்புச் செய்வது என்று இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் எனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. 

தற்போது வாசிக்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த என்ன செய்யலாம் என்று யோசிப்பதோடு நின்று விடாமல் திரட்டி மற்றும் திரட்டியைப் போன்ற பல வடிவங்களில் உள்ள அத்தனை நவீன தொழில் நுட்ப வசதிகளையும் அறிமுகம் செய்வதோடு அதனைப் பகிர்ந்து பலரின் பார்வைக்குக் கொண்டு செல்வது சிறப்பல்ல. உங்களுக்கு இது குறித்து ஏதும் சந்தேகம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று சொல்லும் இவரின் பணியென்பது பெருமைப்படக்கூடிய விசயமாகும். 

2016 ஆம் ஆண்டின் தன்னலம் கருதாத "வலையுலகச் சாதனை மனிதர் "திண்டுக்கல் தனபாலன் அவர்களை வாழ்த்துகிறேன்.