Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Monday, September 03, 2012

முகமூடி- விமர்சனமல்ல


 திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கர்க் தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  பதவியேற்று நான்கு மாதங்கள் கூட முடியவில்லை. இந்த குறுகிய காலத்திற்குள் பலரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிவிட்டார்.  இதற்கு முன்பு இருந்த அருண், பாலகிருஷ்ணன், அஸ்ரா கர்க் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த விதமும், உடற்பயிற்சிகளில் உள்ள ஆர்வமும் என பலருக்கும் முன் உதாரணமாக இருந்தார்கள். ஊருக்குள் நடக்கும் அத்தனை கல்லூரி, பள்ளி கலந்துரையாடல்களிலும் பாரபட்சமின்றி கலந்து கொண்டு ஊக்குவித்தார்கள். பார்ப்பதற்கு கல்லூரி செல்லும் மாணவர்களைப் போலத் தான் இருப்பார்கள்.


திருப்பூர் மாவட்டமாக மாறிய பின்பும் அதற்குண்டான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் போக்குவரத்து முதல் குற்றச்செயல்கள் வரைக்கும் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால் எந்த நேர்மையான காவல்துறை அதிகாரியும் சமீப காலத்தில் இங்கே தொடர்ந்து மூன்று வருடங்கள் இருக்க முடிவதில்லை. ஆனாலும் இங்கேயே பட்டறை போட்டுக் கொண்டு பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அருண் எஸ்.பியாக இருந்த போது இங்குள்ள ஒரு திமுக பிரபல்யத்தின கைத்தடிக்கு கும்மாங்குத்து விழுந்தது. அந்த பிரபல்யத்தின் எதிரே முகத்தில் அறையும் விழுந்தது. 'இங்கேயே எண்கவுண்டரில் போட்டுத் தள்ளிட்டு போயிக்கிட்டே இருப்பேன்' என்றதும் சிபாரிக்கு வந்த பிரபல்யத்திற்கு சப்தநாடியும் அடங்கிவிட்டது. கலைஞர் ஆட்சியில் பிரபல்யமும் முதல் மேயராகவே வலம் வந்தார். குறி வைத்தார்கள். முடித்தே விட்டார்கள். அடுத்து வந்த பாலகிருஷ்ணன் கூட சிறப்பாகவே செயல்பட்டார். கடைசியாக அஸ்ரா கர்க். 

இவர் மதுரையிலிருந்து இங்கு மாற்றலாகி வருகின்றார் என்றதும் பாதிப்பேர்களுக்கு தூக்கமே போய்விட்டது.  மணல் மாஃபியாக்களை முழுமையாக ஒழிக்க முடியா விட்டாலும் கூட திருப்பூர் மாவட்டத்திற்குள் இருந்த அத்தனை மூகமுடிகளின் தூக்கத்தையும் கெடுத்தவர்.  காவல் துறை சார்ந்த கருங்காலிகளுக்கு ஆப்பு, ரிவீட்டு என்று மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தார். திருப்பூர் மாவட்ட மக்களுக்கு காவல்துறை என்றால் ஒரு மரியாதையை உருவாக்கியது தான் இவர் செய்த முக்கிய பணியாக இருந்தது. இதைவிட பிரச்சனைகளை கொண்ட தர்மபுரி மக்களுக்கு இவரின் சேவை இன்னும் எத்தனை நாளுக்கோ?

ஆட்சிகள் மாறினால் என்ன?  மூகமூடிகள் தான் ஒவ்வொரு சமயத்திலும் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறார்கள். 
.............................................................................................. 
வெற்றிகரமாக டாமின் நிறுவன ஊழல் பூதம் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டுருக்கிறது. முக்கிய மூன்று அதிகாரிகளை கைது செய்து பூஜையை தொடங்கியுள்ளார்கள். மூவரும் முகமூடி போல் துண்டை வைத்து தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வந்தாலும் ஊடகத்துறை அவர்களின் முகதரிசனத்தை பார்க்க வைத்து விட்டது.  பி.ஆர்.பி போல சிக்காமல் வாழ்க்கையின் எல்லைக்கே மத்திய அமைச்சர் அழகிரி மகன் துரைதயாநிதி ஓடிக் கொண்டுருக்கிறார் போலும். 

இவரின் முகமூடி வாழ்க்கை இன்னும் எத்தனை நாளுக்கோ தெரியவில்லை?.

தங்கள் முகத்தினை துண்டுகளை வைத்து மறைத்து கொண்டு வந்த அதிகாரிகள் இதற்கு முன்பு பலரும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு இதே போல ஊடகத்தில் வந்த அதிகாரிகளை வந்திருந்ததை பார்த்திருப்பார்கள் தானே?  அப்போது நாமும் இதைப் போல ஒரு நாள் மாட்டத்தான் போகின்றோம் என்று நினைத்துருப்பார்களா? குறைந்தபட்சம் தங்கள் குடும்பம் சார்ந்த அத்தனை உறவுகளின் மத்தியில் அவர்களுக்குண்டான மரியாதை எப்படியிருக்கும்? "திருடத் தெரியனும்.  ஆனால் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சிந்தனையை பயன்படுத்த வேண்டும்" என்று சமூகம் அறிவுரை வழங்குமோ? 

இந்த முகமூடி அதிகாரிகளைப் பார்த்து தற்போது வெளியே வராமல் ஊழலில் சம்பாரித்துக் கொண்டுருக்கும் மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளின் மனோநிலையில் மாற்றம் வருமா? 

............................................................................................ 
வீட்டுக்குள் வரும் முகமூடி கொள்ளைக்காரர்கள் கூட ஓர் அளவுக்குத் தான் கொள்ளையடிக்கிறார்கள்.  ஆனால் இன்றைய நிலையில் நாட்டுக்குள் செய்து கொண்டுருக்கும் அரசியல்வியாதிகளின் கொள்ளைகள் ஆயிரம் கோடிகளை தாண்டினாலும் கூட எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. எது குறித்தும் அஞ்சுவதும் இல்லை. வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றத்திற்கு வரும் போது எவரும் தன் முகத்தை முகமூடி போட்டு மறைத்துக் கொள்வதும் இல்லை. கையாட்டிக் கொண்டு புன்சிரிப்போடு தான வருகிறார்கள்.

ஆட்சியில் இருப்பவர்கள் "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்களோ "சட்டத்தின் துணையால் வெல்வோம்" என்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு சட்டமான்களும் ஓய்வு பெற்று போனபின்பும் கூட சட்டம் என்பது இந்த முகமூடிகளுக்கு பின்னால் உள்ள உண்மையான முகத்தை காட்ட முடியாமல் கடைசி வரைக்கும் தேங்காய் மூடியாகத்தான் இருக்கிறது.  கடைசியில் நோய்கள் தான் இவர்களின் வாழ்க்கையை முடித்து வைக்கின்றது.  அடுக்கி வைத்த கேஸ் கட்டுகள் ஆவண காப்பத்திற்குள் போய்விடுகின்றது.
............................................................................................... 

தொழிலாளர், பணியாளர், முதலாளி மூவருக்குமே திருப்பூர் வாழ்க்கை என்பது முகமூடி வாழ்க்கைதான். உண்மையான முகத்தை எந்த இடத்திலும் காட்ட முடியாது.  எப்போது எது நடக்கும் என்பதே தெரியாது. பெருநகரங்களில் வாழ்பவர்கள் அனுபவிக்கும் இயல்பான விசயம் தான் இது. எதனால் இந்த வீழ்ச்சி என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்து பல படிகள் நம்மைவிட்டு கடந்து போயிருக்கும்.

அது போன்ற ஒரு சமயத்தில் தான் இநத் வலைபதிவு உலகம் எனக்கு அறிமுகமானது. மன அழுத்தத்திற்கு தேவைப்படும் மருந்து குடிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இந்த எழுத்துப் பழக்கம் உருவானது. நான் சிறுவயதில் கற்றுக் கொண்ட மிதிவண்டி முதல் சிறிய ரக லாரி வரைக்கும் கற்றுக் கொளள ஒவ்வொரு சமயத்திலும் எவரோ ஒருவர் உதவி இருக்கிறார். நான் இதுவரையிலும் கற்றுக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் அடுத்தவர் பங்கும் அதிகமாக உண்டு. அடுத்தடுத்து வாழ்வில் உயர்ந்த போதும் கூட பலரும் உதவியாய் இருந்து இருக்கிறார்கள். 

ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றிய போது அப்போது முதன் முதலாக என் கண்ணில் பட்டது வேர்ட்ப்ரஸ் தளமே. மூன்று வாரங்கள் போராடி ஒரு உருவத்திற்கு கொண்டு வந்தேன்.  மேற்கொண்டு நானே கற்றுக் கொண்டேன் என்கிற விதத்தில் இந்த ஒரு செயல்பாடு மட்டுமே வாழ்வில் சாதித்ததாக உணர முடிகின்றது.  வலைபதிவில் அடிப்படை செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயத்தில் அறிமுகமானது.  இந்த ப்ளாக் என்ற தளம் கூட நாகா தான் உருவாக்கி கொடுத்தார்.  

ப்ளாக் பக்கம் எழுத வந்த பிறகு வேர்ட்ப்ரஸ் தளம் கவனிக்காத சவலைக்குழந்தை போல தேமே என்று கேட்பாரற்று கிடந்தது. அது அரிச்சுவடி கற்றுத்தந்த பள்ளிக்கூடம் அல்லவா? உள்ளூற வருத்தமாக இருந்தது. ஓர் அளவுக்கு மேல் வேர்ட்ப்ரஸ் தொழில் நுட்பத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக நாம் நினைக்கும் அளவுக்கு அதில் பல சிறப்பு அம்சங்களை கொண்டு வரமுடியவில்லை. எனக்கு அறிமுகமான வகையில் கிரி, தமிழ்மணம் செல்வராஜ், வெயிலான் இந்த மூன்று பேர்களின் வேர்ட்ப்ரஸ் தளங்களின் வடிவமைப்பு ஆச்சரியத்தை தந்துள்ளது. ஆனால் வெயிலான் பழைய அற்புத வடிவமைப்பு தற்போது மாற்றி விட்டார்.  என்ன காரணம் என்று தெரியவில்லை. இவர்களின் தளங்களைப் போல உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருந்தேன்.

கோடம்பாக்கத்தில் "பிலிம் நியூஸ்" ஆனந்தன் என்றால் அனைவருக்கும் தெரியும்.  திரைப்படம் சம்மந்தப்பட்ட அத்தனை விபரங்களையும் ஆவணமாக, கருத்துக்களாக விரல் நுனியில் வைத்திருப்பார்.  அவரைப் போல தமிழ் வலைபதிவுகளுக்கென்று ஒரு ஆனந்தன் இருக்கிறார்.  இவரின் பெயர் ரமேஷ்.  ஆனால் வலைபதிவில் வெயிலான். இவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார். திருப்பூரில் சேர்தளம்என்ற அமைப்பை பொறுப்பாக நிர்வகித்து வருகின்றார்.

குறைவாக எழுதினாலும் வலைபதிவு உலகில் இவரை தெரியாதவர்கள் குறைவு. ஒத்த வயதாக இருந்தாலும் வலைபதிவில் எனக்கு அண்ணன். இந்த வலைபதிவின் தொழில் நுட்பங்களை நன்றாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.  நான் வேர்ட்ப்ரஸ் தளத்தை இழக்க விரும்பவில்லை. நான் தொடக்கப்பள்ளியில் படித்த பாடங்களைப் போல இந்த தளத்தில் தான் எழுதவே கற்றுக் கொண்டேன்.


வெயிலானுக்கு தேவியர் இல்லத்தின் நன்றிகள். 
............................................................................................................................
எழுதத் தொடங்கிய போதும், தொடர்ந்து வந்த வருடங்களிலும் ஒரு வகையில் நானும் முகமூடியாகத் தான் இருந்துள்ளேன்.  இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி வைத்துக் கொண்டுருக்கின்றேன்.

தொடக்கத்தில் எழுதும் போது மனதில் பட்டதை அப்படியே எழுதியிருக்கின்றேன்.  அது எத்தனை பெரிதான கட்டுரையாக இருந்தாலும் கவலைப்பட்டதில்லை. சுருக்க முயற்சிப்பதில்லை. எழுத்துப் பிழைகளை கண்டுகொண்டதில்லை. விமர்சனமாக எவர் எது சொன்னாலும் கேட்டதே இல்லை. ஒரு வாக்கியம் என்பதை பத்து வரிகளுக்குச் சென்று பிறகு முடித்து படிப்பவரை பயமுறுத்தி இருக்கின்றேன். ஆனால் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றும் எனக்கு பல விதங்களில் இன்று உதவியாக இருக்கிறது. இன்று எனது எழுத்து நடையை ஒவ்வொரு விதமாக மாற்றி மாற்றி பல விதங்களிலும் முயற்சித்து பார்த்துக் கொண்டுருக்கின்றேன். 

குறிப்பாக பத்திரிக்கை உலக வடிவம் என்பது வலைபதிவுகளுக்கு சம்மந்தம் இல்லாதது.  ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கு ஒவ்வொரு விதமான நடையழகு.  சில நமக்கு பிடிக்கும். பலவற்றை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஆனாலும் சுருக்கம் என்பது சுகமானது என்பதை எழுத்துப் பயணம் உணர வைத்துள்ளது.  துறை சார்ந்த விசயங்களை சுருக்கும் போது அதுவொரு சுருக்கு கயிறு போலத்தான் இருக்கிறது. எவரும் உணருவதே இல்லை.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பர் கேட்ட தற்போதைய திருப்பூர் நிலைமை குறித்து "டல்லடிக்கும் டாலர் நகரம்" என்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தேன்.  அடிப்படை கட்டுமானம், தெளிவான நடை, கூடவே புள்ளிவிபரங்கள், அளவான கட்டுரை என்று விமர்சனம் செய்து இருந்தார்.  சாதித்த மகிழ்ச்சியில் அதே பாணியில் சமீப நாலைந்து கட்டுரைகள் எழுத முடிந்தது. கற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம் தான் நம்மை அடுத்தபடிக்கு அழைத்துச் செல்கின்றது. வரும் ஆக்கபூர்வமான எந்த விமர்சங்களையும் பார்த்து முகம் சுளிப்பதே இல்லை.  கதவுகளை தைரியமாக திறந்து வைக்க முடிந்தது.  இதுவரையிலும் எந்த குப்பை கூளமும் இல்லத்தை தாக்கவில்லை. முகமூடியாக இருந்து கொண்டு எழுத்தில் மட்டும் கவனம் செலுத்தியதால் இன்று எழுத்துக்கலை சற்று கைகூடி வந்துள்ளது. 400 பதிவுக்கு மிக அருகில் வந்துள்ளேன். 
.............................................................................................................. 
இந்த தளத்திலும் வேர்ட்ப்ரஸ் தளத்திற்கும் பேனர் வடிவமைத்து கொடுத்த மற்றொரு முகமூடி மனிதர் மதுரை தமிழ்ன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். (உங்க பெயரைக் கூட தெரிந்து கொள்ள முடியல நண்பா?)

இந்த தளத்தில் உள்ள பேனர் போல ஒன்றை வடிவமைத்து திடீர் என்று ஒரு நாள் மின் அஞ்சல் வாயிலாக நான் கேட்காமலேயே அனுப்பி இருந்தார்.  சற்று மாறுதலாகி இப்போதைய வடிவமைப்பு உருவானது.  வேர்ட்ப்ரஸ் தளத்திற்கும் அவரே வடிவமைத்து கொடுத்துள்ளார். அவர்கள் உண்மைகள் என்ற தளத்தில் எழுதிக் கொண்டுருக்கிறார். தனக்கு முகமூடி போட்டுக் கொண்டுருந்தாலும் நம்ம மேல ரொம்ப பாசக்கார பயபுள்ளையாட்டம் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கு. எனக்கு தனிப்பட்ட முறையில் எனது எழுத்தின் மூலம் அறிமுகமாகும் பெரும்பாலன நண்பர்கள் அணைவரும் பக்காவான வாசிப்பு புலிகளாகவே இருக்கிறார்கள். வலைபதிவுகளுக்கு அப்பாற்பட்டு கரை கண்ட வேந்தர்களாகவே இருக்கிறார்கள். பலருடன் பேசி முடிக்கும் மனதில் பயம் வருகின்றது. அந்த பயமே ஒவ்வொரு முறையும் எழுதும் போது இந்த முறையாவது ஒழுங்காக எழுத வேண்டுமென்ற தூண்டு கோலாக இருக்கிறது. 

Thursday, March 31, 2011

நான் வேட்பாளர்? -- ஒரு டைரிக்குறிப்புகள்

கடந்த சில பதிவுகளில் நண்பர்களின் பின்னோட்டங்களுக்கு பதில் அளிக்காமல் விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தமைக்கு முக்கிய காரணம் இந்த பதிவில் மொத்தமாய் பதில் அளிக்கலாம் என்பதே ஆகும். மொத்த விசயங்களையும் ஒரே பதிவில் அடக்க வேண்டிய சூழ்நிலையினால் இந்த நீள்பதிவின் இம்சையை பொறுத்தருள்க.


இந்த கட்டுரையின் நோக்கம் என் சுயபுராணம் என்பதைவிட ஒரு வலிமைவாய்ந்த மீடியா ஒரு கட்சியின் கையில் இருந்தால் அதுவே ஆளுங்கட்சியாக இருக்கும்பட்சத்தில் என்ன மாறுதல்கள் உருவாகும்? ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையுடைய தொழில் அதிபர்களின் போக்கு எப்படி ஒரு போராட்டத்தை திசை திருப்பிவிடும்? அதுவே பல்வேறு கூறுகளாக ஒற்றுமையற்று இருந்தால் வெகுஜன போராட்டமென்பது எத்தனை கேலிக்குறியதாக மாறிவிடும்? ஒரு பகுதியில் நடந்த உண்மையான விசயங்களுக்கும் வெகுஜன மக்களுக்கு ஊடகம் கொண்டு வந்து சேர்க்கும் விசயங்களும் எத்தனை மாறுபாடுகள் என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும்?

நடைபெறப்போகின்ற ( 2011 ஏப்ரல் 13 ) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ப்ளாஷ் நியூஸ் என்று சொல்லப்படும் முக்கியத்துவம் பெற்ற ஒரு செய்தி திருப்பூர் வடக்குத் தொகுதி. இப்போது திருப்பூர் நகரம் என்பது மாவட்டம் என்ற அந்தஸ்த்துக்கு வந்துள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உருவானது.  ஒன்று தெற்கு. மற்றொன்று வடக்கு. இந்த வடக்கு தொகுதியில் தான் மா.கம்யூ ல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து இப்போது உடன்பிறப்பாக மாறிய கோவிந்தசாமி திமுக வின் சார்பாக களமிறங்கியுள்ளார். தெற்கு தொகுதியில் திமுகவின் கூட்டாளியான காங்கிரஸ்க்கு (கட்டக்கடேசியாக) ஒதுக்கப் பட்டுள்ளது.

இங்கு வெளியே காட்டிக் கொள்ளமுடியாத திமுக எதிர்ப்பு பல விதங்களிலும் உண்டு. அதற்கு மேலாக வடக்கு தொகுதி வேட்பாளரான கோவிந்தசாமியின் தனிப்பட்ட 'நடவடிக்கை'களின் காரணமாக திருப்பூர் வடக்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 141 பேர்கள் களமிறங்கி மொத்த ஊடகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார்கள்.  யார்? ஏன்? எப்படி?

18.03.2011  காலைப்பொழுது

கடந்த இரண்டு மாதமாக வெற்றிகரமாக செயல்படுத்தியபடி வீட்டில் முதல் நபராக மூத்தவள் காலை செய்திதாளை சப்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தார்.  கால்பக்கம் அளவிற்கு 'வாக்காளர் எழுச்சிப் பேரவை' என்ற பெயரில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. வடக்கு கிழக்கு இரண்டு தொகுதிக்கும் தலா ஆயிரம் பேர்களை களமிறக்குவதாக அந்த அறிவிப்பு சொல்ல கேட்டுக் கொண்டிருந்த நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டு நகர்ந்து போய்விட்டேன்.

19.03.2011 நள்ளிரவு

நள்ளிரவில் நண்பரின் அலைபேசி அழைப்பு என்னை விழிக்க வைத்தது. குறிப்பிட்ட சாயப்பட்டறையில் உயர்பதவியில் இருப்பவர். இவருடன் எப்போதும் என்னுடன் தொடர்பிலிருக்கும் மற்ற நான்கு பேர்களுகளுக்குள் நடந்த உரையாடலின்படி என்னை அழைத்துப் பேசினார்.


'நடைபெறப்போகும் தேர்தலில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும்' என்றார்.  சப்தம் போட்டு சிரித்து விட்டு காரணத்தைக் கேட்டேன்.  முழு விபரங்களை கேட்டு விட்டு மனதில் சிரித்துக் கொண்டு அவரை கலாய்த்து விட்டு பேசிய விசயங்களை மறந்து விட்டேன்.  அவர் பேசியபோது கேட்ட வேட்புமனுவுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் என்னிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.

20.03.2011 பகல்பொழுது

இரண்டு முறை நண்பரும் அவரைச் சார்ந்தவர்களும் என்னுடன் உரையாடிய போது இது குறித்து பரஸ்பரம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் சாயப்பட்டறை சங்கங்களில் பிரிந்துள்ள அரசியல் நிலைபாடுகளையும், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள பொறுப்பில் இருக்கும் தனிப்பட்ட மனிதர்களின் சுயநல குணாதிசியங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக வரப்போகும் சென்னை நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது விரைவில் நாங்களும் ஊர்ப்பகம் செல்லக்கூடிய சூழ்நிலை வந்துவிடும் போலிருக்கு என்றார்.

என்னால் பதிலளிக்க முடியவில்லை. 

21.03.2011  அதிகாலை.

நண்பர் தூக்கத்தில் இருந்த எழுப்பி வாக்களர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தாலூகா அலுவகத்திற்கு காலை 11 மணிக்கு வரச் சொன்னபோது வியர்த்துப் போனேன். விளையாட்டு வார்த்தைகள் விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அப்போது தான் உணர ஆரம்பித்தேன்.  


பரபரப்பான வேலைகளுக்கிடையே நான் மறந்து விடுவேன் என்று மற்ற நண்பர்களும் அழைத்துச் சொன்ன போது தான் இது ஏற்கனவே 'திட்டமிட்ட பரிபூரண உணவு' என்பதை உணர்ந்து கொண்டேன்.வீட்டில் உள்ள நிதிமந்திரியிடம் எது குறித்தும் எப்போதும் எல்லாவிசயங்களையும் நான் சொல்லிவிடுவது வழக்கம்.  இதையும் சொன்ன போது 'உங்கள் பத்து வருட நட்பு கெட்ப் போகின்றது.  உங்க தனிப்பட்ட குணாதிசியமும் முழுமையாக அவருக்குத் தெரியாது' என்றார் சிரித்துக்கொண்டே.

21.03.2011 மதியம்

திருப்பூர் தாலூகா அலுவலகத்திற்கு அருகே வங்கிகளும் இருப்பதால் பல விதங்களில் எனக்கு வசதியாக இருந்தது.  நான் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் நண்பர்கள் ஒவ்வொருவரும் அலைபேசி மூலம் என்னை தொடர்ந்து கொண்டிருந்தனர். நான் திருப்பூர் தாலூகா அலுவலகத்தில் உள்ளே நுழைந்த போது முன்னால் இருந்த ஒரு கூரையின் கீழ் ஏராளமான நண்பர்கள் கூடியிருந்தனர்.  பக்கத்தில் ஒரு நீண்ட வரிசையும் நின்று கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர் அவர் கையில் வைத்திருந்த விண்ணப்ப படிவத்தை என் கையில் கொடுத்து பூர்த்தி செய்து தாருங்கள் என்றார்.

சரிபார்த்துவிட்டு மீண்டும் என்னிடம் தந்தவர் 'அந்த வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி வாருங்கள்' என்று அனுப்பினார்.

என்னைப் போலவே முப்பத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். என் பொறுமையின்மை கொண்டு செலுத்த முன்னேறிச் சென்றேன். உள்ளே என்ன நடக்கின்றது? என்று பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு அநத நீண்ட வரண்டாவில் மேலேறி நின்றபோதுதான் வரிசையில் நின்று கொண்டிருந்த நபர்களை உற்று கவனிக்கத் தொடங்கினேன். 

அத்தனைபேர்களும் 24 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். பல்வேறு சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.குறிப்பாக தென்மாவட்டத்தை சேர்த்தவர்கள். நான் போன வேலையை மறந்து விட்டு அந்த ஓங்குதாங்கான உடல்வாகை ரசித்துக் கொண்டு அந்த புஜபலசாலிகளை சிநேகம் பிடித்து பேசிக் கொண்டிருக்க அந்த கருத்த உடல் இளைஞர்களின் மனம் சுத்த வெள்ளையாக இருந்தது. வெறும் அம்பாக உள்ளே வந்து வரிசையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அத்தனை பேர்களும் கடந்த அறுபது நாட்களாக ஒவ்வொரு சாயப்பட்டறைகளின் உள்ளே இருக்கும் உணவகங்களில் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் மற்றும் கிராமத்து விளையாட்டுக்களை பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

பலசமயம் வீடியோ பார்த்து காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள்.  

'ஏனப்பா ஊருக்கு போனாலாவது விவசாயத்தை பார்க்கலாமே'? என்றேன்.

'விவசாயம் பார்க்க நிலம் இருந்தாத்தானே போகமுடியும்?' என்று திருப்பிக் கேட்டு சிரித்தனர்.

பெரும்பாலானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களுமே திருப்பூருக்குள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதை அவர்களின் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன்.


என் முறை வந்த உள்ளே நுழைந்து பெற்ற வேட்பு மனு விண்ணப்ப படிவத்தை பெற்று கையெழுத்து போட்டு நிமிர்ந்த போது சுவற்றில் மாட்டியிருந்த காந்தி படம் என்னைப் பார்த்து சிரித்தது. அந்த விண்ணப்ப படிவத்தை முழுமையாகக் கூட படித்துப் பார்க்காமல் ஒப்படைக்க வேண்டிய நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் போக வேண்டிய வங்கிக்கு பறந்து விட்டேன்.

22.03.2011 காலை

மறுபடியும் என்னை துரத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்புடன் நண்பர் வரவழைத்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது தான் இந்த திட்டத்தின் முழு வீர்யமும்  அப்போது தான் எனக்குப் புரிந்தது.  வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த குளிர்சாதன குறுகிய அறைக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கூட்டத்தின் வியர்வை நாற்றம் நாசியைத்தாக்க அவசரமாக எனக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்து விட்டு வெளியே வந்து போது நண்பரிடம் கேட்டேன்.

'இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள்?' என்றேன்.

'நாளை ஒரு அலுவலகத்திற்கு வருவீர்கள்? அப்போது புரியும்' என்றார்.

அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக்களும் சில முதலாளிகளும் என்னைப் பார்த்து 'சாயப்பட்டறை குறித்து வெறுமனே எழுதினால் மட்டும் போதாது?' என்றனர்?

குழப்பத்துடன் நகர்ந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் உள்ள நிதி மந்திரி இது குறித்து செய்தி தாளில் உள்ள விளம்பரங்களையும் மற்ற தொகுப்பு விபரங்களையும் சேகரித்து வைத்திருந்தவர் என் கையில் கொடுத்தார்  அப்போது தான் அந்த வார்த்தையை முதன் முதலாக படித்தேன்.

'தொழில் பாதுகாப்பு குழு' என்ற பெயரை வைத்து ஒரு விளம்பரம் வந்திருந்தது.

23.03.2011 காலை

அடிப்படை வேலைகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவசரமாக தாராபுரம் சாலையில் உள்ள அந்த அலுவலகத்தை கண்டு பிடித்து அந்த மொட்டை மாடிக்கு வந்த போது ஒரு ஈ காக்காயை கூட காணவில்லை.  இந்து முண்ணனிக்கு இப்படி ஒரு காரியாலயம் இருப்பதையே அப்போது தான் உணர்ந்து கொண்டேன்.


நண்பர்கள் அவசரப்பட்டு போய்விடாதீர்கள். வந்து கொண்டேயிருக்கிறோம் என்றபடி என்னை அங்கேயே அமர வைத்தனர்.  காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் என் விண்ணப்பபடிவத்தை நிரப்ப சொல்லிக் கொடுத்தபடி நிரப்பி முடித்த போது நண்பர்களான பஞ்ச பண்டவர்கள் வந்து இறங்கினர். அப்போது கூட எனக்கு முழுமையாக இது குறித்து நம்பிக்கை வரவில்லை.

காரணம் திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை சங்க நிகழ்வுகளையும், உள்ளேயிருக்கும் ஒவ்வொரு விசயங்களையும் தினந்தோறும் உள்வாங்கிக் கொண்டிருப்பதால் ஏதோவொரு கோமாளி வேஷம் போடுவது போல் இருந்தது. நண்பர்கள் வந்து சேர்ந்தனர். சற்று நேரத்தில் அவர்களின் விண்ணப்ப படிவங்களும் பூர்த்தி செய்யப்பட்டது.

'இதே அலுவலகத்திற்கு மீண்டும் இன்று இரவு வந்து விடுங்க' என்றனர்.

ஏன்? என்று கேட்ட போது உங்களுக்கு பல விசயங்கள் புரியும்! என்று நண்பர்கள் மையமாக புன்னகைத்தனர்.

23.03.2011 இரவு

அவசர வேலைகள் ஏதுமில்லாமல் அமைதியாக அந்த காரியலாயத்திற்குள் நுழைந்த போது முதல் முறையாக அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை எவ்விதம் செயல்படுத்துகிறார்கள் என்பதை அங்கு நடந்த பல நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது. திடீரென்று உருவான மின்தடை பொருட்டாய் இல்லாமல் மினி ஜெனரேட்டர் கூடியிருந்த கூட்டத்தினரின் உரையாடல்களை நடத்திச் செல்ல உதவிபுரிந்து கொண்டிருந்தது.  ஓரு ஓரமாய் இருந்த டீ கேன் மூலம் தொடர்ந்து டீ கேட்பவர்களுக்கெல்லாம் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் முதல் முறையாக இதற்கு பின்னால் உள்ள அத்தனை முகங்களையும், முதலாளிகளையும் பார்த்தேன்.


இது போன்றதொரு திட்டத்தை வரைவு செய்தவர்களும்,முன்னிலை படுத்தவேண்டும் என்று உருவாக்கியவர்கள் அருள்புரம் பொதுசுத்திகரிப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சங்கத்தைச் சார்ந்த சாயப்பட்டறை முதலாளிகள் மற்றும் அறிமுகமில்லாத பலரும் அங்கே திட்ட ஏற்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

காரணம் மறுநாள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நாள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் டெபாஸிட் தொகை கட்டத் தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்த உரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது. குழப்பங்களும். நம்பிக்கையின்மையுமாய் அந்த கூட்டம் என் பார்வையில் தெரிந்தது.

பொறுமையிழந்து உட்கார்ந்திருந்த போது என்னிடம் நண்பர்கள் 'நாளை காலை இங்கேயே வந்து.விடுங்க' என்றனர்.

'இவர்கள் ஓடத்தை கரையில் சேர்க்க மாட்டார்கள். தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம்' என்றேன்.

நண்பர்கள் மறுத்துப் பேசி என்னை சம்மதிக்க வைத்தனர்.

24.03.2011  காலை

என் வேட்புமனுவுக்கான விண்ணப்பபடிவத்தில் பரிந்துரை செய்ய வேண்டிய பத்துப் பேர்கள் என்ற பகுதிமட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. காலையில் அது குறித்து தெரிவிக்க அதற்கான வேலைகள் நடந்தது. அப்போது வந்த அலைபேசியில் வந்த அழைப்பை பேசுவதற்காக சம்மந்தப்பட்டவரிடம் என் விண்ணப்பபடிவத்தை ஒப்படைத்து விட்டு நகர்ந்து சென்று பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்போது தான் பகவான் என் விண்ணப்ப படிவத்தில் வந்து அமர்ந்ததை கவனிக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட என் படிவத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். நேற்று இரவு நிதி ஆதாரம் குறித்து வாக்களித்த எந்த பெரிய தலைகளும் வரவில்லை. அத்தனை பேர்களும் இரவு நடந்த ஏதோவொன்றினால் பின்வாங்கி போயிருப்பதை உணர்ந்து கொண்டேன்.

நண்பர்கள் அவர்களுக்கு மற்ற வேலைகள் இருந்த காரணத்தால் அன்று பகல் பொழுதில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் என் வேட்பு மனுவை கொண்டு போய் சேர்த்தேன். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளும் வெளியே இருந்தது. என் விண்ணப்பபடிவத்திற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண் கிடைத்த நேரம் பிற்பகல் 3.10. ஆனால் உள்ளே நுழைந்து முறைப்படி ஒப்படைத்த நேரம் மாலை 6.45.  ஆனால் இதற்கிடையே அலுவலக வாசலில் இருந்த மத்திய மாநில உளவுத்துறையினர், மீடியா மக்கள், தனிப்பட்ட ஆர்வலர்கள் என்று ஒவ்வொரு வேட்பாளர்களின் பின்புலம் முதல் ஜாதி வரைக்கும் கேட்டு குறித்து எவருக்கோ கடத்திக் கொண்டிருந்தனர்.  கவனிப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்தது.  கண்களுக்குள் பசி என்ற பூச்சி மட்டும் பறந்து கொண்டேயிருக்க காணும் கட்சிகள் எதுவும் மனதிற்குள் பதியாமலேயிருந்து.


கோட்டாட்சியர் அலுவலகம் முழுக்க ஏகப்பட்ட காவல்துறை கெடுபிடிகளில் வெளியே எங்கே செல்ல முடியாமல் வயிறு காய வெறுப்பும் சோகமும் எதிரே உள்ள சிறைச்சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்த போது மண்டைக்குள் கிர் என்ற சப்தம் கேட்ட போதிலும் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. நேரங்கெட்டு சாப்பிட்ட போதிலும் ஏதோவொரு இனம் புரியாத சந்தோஷ உணர்வு. குறிப்பிட்ட நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்தேன்.

25.06.2011 காலை.

இப்போது தான் இந்த 'தொழில் பாதுகாப்பு குழு'வுக்கென்று நியமிக்கப்பட்ட பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.  ஏற்கனவே வேட்பாளர் விண்ணப்ப படிவத்துடன் கொடுக்கப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட் மட்டும் போதாது அதற்கான பாஸ்புக் வேண்டும் என்ற கெடுபிடித்தனம் உருவாகியுள்ளதை தெரிவித்தனர். காரணம் ஒவ்வொரு நாளும் சுயேட்சைகளின் எண்ணிக்கை அதிகமாக ஒவ்வொரு சட்டதிட்டமும் மாறிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  வங்கிக்குச் சென்றால் பாஸ்புக் கைவசமில்லை என்ற பதிலை கேட்ட போதிலும் பொறுமையாக அங்குள்ள அதிகாரிக்கு புரியவைத்து, அவர்களிடம் இருந்த இரண்டு பாஸ்புக்கில் ஒன்றை பெற்று என் புகைப்படத்தை ஓட்டி ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த போது அடுத்த அழைப்பு அதே பெண்ணிடமிருந்து வந்தது.

'சொத்து குறித்த கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ்களையும் கொண்டு போய்  கொடுத்து விடுங்க' என்றார்.

கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு முதன் முறையாக நான் சென்றபோது அங்கே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.. என்னுடன் பத்து வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்க பிரச்சனை முடிவுக்கு வந்தது. அந்த சான்றிதழ்களையும் கொண்டு போய் ஒப்படைத்துவிட்டு வீட்டில் வந்து நிதி மந்திரியும் சொன்ன போது சப்தம் போட்டு சிரித்தார்.


'நாளைக்கு தான் பஞ்சாயத்து ஆரம்பிக்கப் போகின்றது' என்றார்.

ஏன்? என்று கேட்ட போது திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், அதிமுக பொன்னையன் பேசிக் கொண்டிருப்பதையும் பத்திரிக்கையில் வந்த செய்திகளை சுட்டிக் காட்டி பேசினார். இதற்கிடையே சாய்ப்பட்டறை சங்கத்தின் பெயர் மாற்றம், பிரிந்த சாயப்பட்டறைகளின் லாவணிக் கச்சேரி, எதிர் அறிக்கை என்று ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது.

இந்து முண்ணனி காரியாலயத்தில் நான் இருந்த நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பு குழுவுக்கு ஒருங்கிருணைப்பாளராக இருந்தவருக்கும், அருகே இருந்த மற்றொரு முக்கிய பிரமுகருக்கும் வந்த அலைபேசி உரையாடல்களையும், மிரட்டல்களையும்,வாக்குவாதங்களையும்  கெஞ்சல்களையும், அழுத்தங்களையும் கவனித்தவனுக்கு இந்த செய்திகள் பெரிதாக தெரியவில்லை.  இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்து முண்ணணி அமைப்பு எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால் இங்கே நடக்கும் அத்தனை வெகுஜன போராட்டங்களுக்கும் முன்னிலையில் ஆதரவு கொடுப்பவர்கள் இவர்களே.  ஆனால் இவர்களின் செயல்பாடுகளை முதல் வரிசையில் நின்று எதிர்ப்பவர்களே சாயப்பட்டறை முதலாளிகள் தான். காரணம் பல விதமான பயங்கள்.

26.03.2011

ஒவ்வொரு ஊடகமும் போட்டி போட்டுக் கொண்டு அலறத் தொடங்கியது. காரணம் திங்கள் கிழமை (28) முதல் போட்டியிடும் அணைத்து சுயேட்சைகளும் வாபஸ் வாங்குகிறார்கள் என்ற செய்திகளை படித்து / கேட்டுக் கொண்டே வந்த போதிலும் அது போன்று எந்த முடிவும் இங்கே இல்லாமல் தான் இருந்தது. மனுத்தாக்கல் செய்த ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்களும் பரஸ்பரம் விசாரிக்கத் தொடங்கினர். மேல்மட்ட நிகழ்வுகளையும், உரையாடல்களையும் உணர்ந்து கொள்ள முடியாமல் தவித்தனர். நான் உண்மைகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டான தர்மத்தை அப்போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

வேட்பு மனுக்கான டெபாஸிட் தொகையை ஏற்கனவே பேசியபடி எந்த சங்கமும் ஏற்க முன்வராத காரணத்தால் தெரிந்தவர், அறிந்தவர், பழகியவர், நட்பு என்கிற ரீதியில் அவரவர்களும் பகிரிந்து கொண்டு கட்டத் தொடங்கினர். பல சாயப்பட்டறை முதலாளிகளே ஏற்றுக் கொண்டுவிட வேட்பு மனுத்தாக்கலின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் இந்த குழுவுக்கு வழிகாட்டியாக இருக்கும் தணிக்கையாளர் முதல் வழ்க்குரைஞர் வரைக்கும் களமிறக்க தயராய் இருந்தனர்.

வாபஸ் குறித்து எந்த முயற்சிகள் நடக்காத போதும் இது குறித்து வந்து கொண்டிருந்த செய்திகளை கவனித்துக் கொண்டே வந்த எனக்கு கலைஞர் தொலைக்காட்சி இந்த நிகழ்வுக்கு காட்டிய அக்கறையும், சன் தொலைக்காட்சி பிட்டு போல சொல்லிக் கொண்டு வர ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த செய்திக்காக காத்திருந்தேன்.

காரணம் இரவு நடந்த மேல்மட்ட உரையாடல்கள் அழுத்தங்கள் ஒவ்வொன்றாக மறுநாள் வெளிவரத் தொடங்கியது. .

27.03.2011 

நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து வாபஸ் வாங்குவது குறித்து பேசத் தொடங்கினர்.  காரணம் நாளை (28) மனு ஆய்வு தினம்.

நிராகரிப்பட்டவை, சந்தேகம் உள்ளவை, வாபஸ் வாங்க விரும்புவர்கள் போன்ற அத்தனை பஞ்சாயத்துகளும் நடக்கும்.

எனக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் ஆணைய தாளில் ஒரு பக்கத்தில் இதற்கான அழைப்பு இருந்தது.  எவராவது என்னிடம் பேசத் தொடங்க வார்த்தைகள் வித்யாசமாக வந்து விடுமோ என்று யோசித்துக் கொண்டு அந்த கூட்டத்திற்கு போகாமல் இருந்து விடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வாபஸ் வாங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அலைபேசியில் அழைத்த நண்பர்கள் குழுவிடம் மென்மையாக இதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தே வீட்டில் நிதி மந்திரி சப்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

28.03.2011  

காலை ஒன்பது மணிக்கு முதல் அழைப்பு வந்தது. 

'தொழில் பாதுகாப்பு குழுவிலிருந்து பேசுகின்றேன். உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து விடுங்க' என்றார்.

என்ன காரணம் என்று கேட்ட போது அந்த பெண்ணின் குரல் முழுமையற்று கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப ஒரே வாசகத்தை பேச `ஃபோனை வைத்து விடும்மா என்றேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் அதே எண்ணில் இருந்து மற்றொரு பெண் பேசிய போது பெண்களிடம் கெட்ட வார்த்தைகள் பேசுவது எனக்குப் பிடிக்காது.  வைத்து விடும்மா என்றேன்.

தகவல்கள் மேலே செல்ல ஒவ்வொருவராக அழைக்கத் தொடங்கினர். நண்பர்கள் குழுவிற்கு ஒவ்வொரு அழுத்தமும் வந்து சேர அலைபேசியின் உயிரைப் போக்கி விட்டு அமைதியாக அன்றைய பகல் தூக்கத்தை நீண்ட நாளைக்குப் பிறகு ரசித்து தூங்கிப் போனேன். இடையில் எழுந்து அலைபேசிக்கு உயிருட்டிய போது வந்து விழுந்த கால் அலர்ட் என்று குறுஞ்செய்திகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. அத்தனையும் புதிய எண்கள்.  ஐம்பதுக்கும் குறையாமல் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. நண்பர்களின் எண்களும் இருக்க மீண்டும் அலைபேசியின் உயிரைப் போகிக்கி விட்டு அமைதி காத்தேன்.

29.03.2011

மீண்டும் காலை ஒன்பது மணிக்கு அலைபேசியை உயிரூட்டிய போது மறுபடியும் பொல பொலவென்று குறுஞ்செய்திகளில் அலைத்த எண்களின் விபரங்கள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

மனம் கேட்காமல் நண்பரை அழைத்த போது கோபப்படாமல் சப்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினர்.  

'நம்முடைய ஐந்து பேரில் உங்கள் விண்ணப்ப படிவம் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போலவே எழுபது பேர்களின் விண்ணப்ப  படிவங்களையும் நிராகரிப்பு என்ற நிலையில் கொண்டு வந்து விட்டார்கள். எங்கள் முதலாளி சொன்னபடி நாங்கள் நான்கு பேர்களும் வாபஸ் வாங்கி விட்டோம்.  நீங்க தான் விழுந்து விழுந்து எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து ரொம்ப அக்கறையாக கொண்டு போய்ச் சேர்த்தீங்க.  நாங்களாவது பேங்க ஸ்டேமெண்ட் மட்டும் தான் வைத்தோம்.  நீங்க மெனக்கெட்டு பாஸ்புக் கூட வைத்தீங்க. யாரோ ரொப்பிக் கொடுத்தாங்க.  கையெழுத்து மட்டும் தான் நாங்க போட்டோம்'என்று அவர் சிரித்த சிரிப்பை ஸ்பீக்கரின் வழியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது என் பக்கத்தில் வீட்டு நிதி மந்திரியும் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.   அவர் சிரித்து முடித்ததும் இவர் சிரிக்கத் தொடங்கினர்.

29.03.2011

அவசரமில்லாது மாலையில் கோட்டாட்சியர் அலுவகத்தில் நுழைந்த போது ஒரு ஈ காக்காய் கூட இல்லை.  அப்போது அங்கு அறிமுகமான ஒரு உயர் அதிகாரி தொடர்பு கிடைத்தது. பழகிய சில நிமிடங்களில் நண்பராக பேசத் தொடங்கினார். அந்த அறையில் வேறு யாருமில்லை. தனிப்பட்ட முறையில் முக்கால் மணி நேரம் என்னுடன் பேசிய போது தான் பல விசயங்கள் புரிந்தது.

இங்கும் அந்த அதிகாரியின் இருக்கைக்கு பின்புறம் அதே காந்தி தாத்தா புகைப்படம். வேறுபக்கம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

காந்தி தாத்தா சிரிக்கும் சிரிப்பின் அர்த்தம் இப்போது எனக்கு புரிந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

பாதிக்கு மேற்பட்டவர்கள் எவரும் வாபஸ் வாங்கத் தயாராக இல்லை என்பதே உண்மை. அவர்களை அழைத்து சமாதானப்படுத்த அலைபேசி வழியாக அலைத்தவர்களின் காதுகளில் ரத்தம் வழியும் அளவிற்கு பேசிய செந்தமிழ் வார்த்தைகளும், நிறைய உண்டு. தொழில் பாதுகாப்பு குழு உருவாக்கிய வேகம் கலையத் தொடங்க ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஆதங்கம் வெளியேறத் தொடங்கியது. திசைதெரியாத பறவை போல மாறத் தொடங்கினர். பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாபஸ் வாங்குபவர்களின் புகைப்படம் என்று போட்டுத் தாக்க படிப்படியாக வேறு வழி தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர்.

இதற்கு பின்னால் உள்ள எதிர்மறை நியாயங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
.

விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.

நன்றி தமிழ்மீடியா, முன்னெடுக்க தயாராகயிருந்த வலையுலக தோழமை களுக்கும், மற்றும் சின்னம் வந்துவுடன் சொல்லுங்க. மற்ற திட்டமிடுதல்களை பேசுவோம் என்ற உள்ளூர் தோழனுக்கும்.