Showing posts with label ஆதாரம். Show all posts
Showing posts with label ஆதாரம். Show all posts

Thursday, October 11, 2012

தண்ணீரில் விளையாடிய நாடுடா இது?



திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தான் நான் பார்த்த காட்சிகள் ஆச்சரியமளித்தது.  தண்ணீர் பாட்டிலை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்தது. பேரூந்தோ அல்லது ரயிலோ பெருநகரங்களை தாண்டும் போதே ஒவ்வொரு விசயத்திலும் சில மாறுதல்களை கூர்மையாக கவனிக்கும் போது புரிந்து கொள்ள முடியும். இந்தப் பக்கம் உள்ள மக்கள் வீட்டில் இருந்து தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வந்து விடுகின்றனர். நான் பார்த்த எவர் கையிலும் 'பிராண்ட்' பொறித்த தண்ணீர் பாட்டில் இல்லை.

நகர்புறங்களில் வாழும் மனிதர்களிடத்தில், இரண்டு கைகளைப் போல வேறு இரண்டு சமாச்சாரமும் கட்டாயம் இருக்கிறது. ஒரு கையில் கைப்பேசி மற்றொரு கையில் தண்ணீர் பாட்டில். ஓட்டாமல் பிறந்த இரட்டையர்கள் போலவே இவையிரண்டும் தற்போதைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக இருக்கிறது.  

கொறிக்க... சுவைக்க... என்பது போல பேச... குடிக்க... என்பது தான் தற்போதைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. .சிறு நகரங்களில் பெப்ஸி, கோக் என்பதும் இன்னும் அதிக அளவு ஊடுருவ இல்லை.  மனிதர்களின் மனோபாவம் என்பது மாறிக் கொண்டுருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் செலவழிக்கும் பணத்தை கணக்கு பார்த்து தான் செலவழிக்கிறார்கள். அவசரம், அவசியம், அத்யாவஸ்யம் போன்ற வித்யாசங்களை உணர்ந்தே வாழ்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படியோ? தமிழ்நாட்டில் தண்ணீர் என்பது இன்று லாபம் கொழிக்கும் வியாபாரம். சென்னையில் மட்டும் ஒரு நடுத்தர வர்க்கம் வாழ்வதற்காக மாதம் தோறும் தண்ணீருக்கு மட்டும் செலவழிக்கும் தொகை 3,500 ரூபாய். காரணம் குடும்பமே விலைக்கு வாங்கித் தான் தங்கள் குடிதண்ணீர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நான் பார்த்த கடையில் இரண்டே இரண்டு சமாச்சாரங்கள் தான் அதிக அளவு இருந்தது.  அதுவே தான் அந்த ஒரு மணி நேரம் முழுக்க அதிக அளவு விற்பனையும் ஆனது.

சிப்ஸ் வகைகள் மற்றும் விதவிதமான தண்ணீர் பாட்டில்கள்.அதுவொன்று இதுவொன்று என்று அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.

வினோதமான காலசக்கரத்தில் நாம் பயணித்துக் கொண்டுருக்கின்றோம்.  .எது தேவையோ அது முக்கியத்துவம் இல்லாமல் தெருவுக்கு வந்து கிடக்கிறது.  எது வாழ்க்கைக்கு தேவையில்லையோ அதுக்கு தான் விளம்பரங்கள் மூலம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆசைகளுக்கு மேலும் மெருகேற்றப்படுகின்றது. அவசியமான விசயங்கள் விவாத பொருளாக மாற்றப்படுகின்றது. தங்கம் விலையை செய்திக்குப் பின்னே சொல்லும் ஊடகம் அரிசி விலையைப் பேசுகின்றதா? 


நாம் உண்ணும் உணவுக்கு முக்கியத் தேவை அரிசி.  ஆனால் அது இன்று விலையில்லா அரிசி என்ற பெயரில் கேவலமாக பார்க்கப்படுகின்றது. அதன் அருமையை உணராமல் கோழிக்கு பயன்படுத்த போய்க் கொண்டுருக்கிறது. தக்காளிக்கு விலையில்லை என்று மயானத்தில் போய் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று இதே தாக்காளி ஜிவ்வென்று பறக்கும். ரசம் வைப்பதை மற்நது விடுவோம்.  

அப்போதைக்கு உண்டான பிரச்சனை.  அடுத்த பிரச்சனையை நோக்கி நகர்ந்து போய்விடுவதால் எதுவும் எளிதில் நம்மை பாதிப்பதில்லை.

சென்னையில் நண்பருடன் பேசிக்கொண்டுருந்தேன்.  அவர் தந்தைக்கு இதய நோய் பிரச்சனை.  வயதான காலத்தில் பெரிய அளவுக்கு சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?  ரேசன் அரசியை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.  

வினோதமாக இருக்கிறதா?  உண்மைதான்.  

நாம் வாங்கும் அரசியில் உள்ள அத்தனை சத்துக்களையும் பாலீஷ் செய்து பளபளப்பு என்பதற்காக அரைத்து ரகம் என்ற பெயரில் விற்கிறார்கள். கடைசியில் எந்த சத்தும் இல்லாத சக்கையைத்தான் அரிசி என்ற பெயரில் உண்ணுகின்றோம்.  மருத்துவர் சொன்னபடி நண்பரின் தந்தை மட்டுமல்ல குடும்பமே இன்று ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்களாம்.  இதயப் பிரச்சனையில் உள்ள தந்தையும் நலமாகத்தான் இருக்கிறார்.

ஆனால் தற்போதைய நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமே சுவை தான். அதுவும் பளபளப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளிலும் விதவிதமான சுவைகளைத்தவிர நமக்கு வேறெதும் முக்கியமில்லை.

வந்து கொண்டுருக்கும் அத்தனை விளம்பரங்களையும் உற்று கவனித்துப் பாருங்கள். இரண்டு விசயங்களை முன்னிறுத்துவார்கள்.
  


கிருமியில்லா வாழ்க்கை.  சுத்தமான வாழ்க்கை.  
இது அவர்கள் பாணியில் ஆரோக்கிய வாழ்க்கை.  

இந்த சோப்பை,, பற்பசையை, வாய கொப்புளிக்க  வாங்குங்க என்று சொன்னால் கூட பரவாயில்லை.  வாங்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?  என்று பயங்காட்ட கிராபிக்ஸ் கிருமிகளை காட்டுவார்கள்.

வாயில் கொஞ்சமாவது கிருமியிருக்க வேண்டும்.  வயிற்றில் சிறிய அளவிலாவது குறிப்பிட்ட புழுக்கள் இருக்க வேண்டும்.  உடம்பில் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக துடைத்து கழுவி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்குப் பெயர் உடம்பல்ல. வேறு பெயரைத் தான் சூட்ட வேண்டும்.

ஊரில் உறவினர் வீட்டில் குழாய் நீரைத்தான் அப்படியே பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள். பயத்தோடு கேட்டேன்.  சுருக்கமாகச் சொன்னார்கள்.

"பயம் தான்டா எல்லா நோய்க்கும் காரணம்."

உண்மைதான்.  பயம், கோபம், பொறாமை, சுயகௌரவம், தற்பெருமை இந்த பஞ்சபாணடவர்களைப் பற்றித் தெரியுமா?

இதய நோய் எந்த ஏழைக்கும் வருவதில்லை. மன அழுத்தம் அடித்தட்டு மக்களுக்கு வருவதில்லை, விளிம்பு நிலை மனிதர்கள் பொறாமை படுவதில்லை. 

அன்றாடங்காச்சிகளுக்கு சுய கௌரவம் பற்றித் தெரிவதில்லை.    பணம் குறைவாகத்தான் இருக்கும்.  ஆனால் மனம் முழுக்க எப்போதுமே மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.  

தெருவில் வாழ்ந்து தெருவிலே புரண்டு கிடக்கும் எந்த குழந்தைக்கும் ஏன் பெரிய நோய்கள் தாக்குவதில்லை.  காரணம் எதிர்ப்பு சக்தி உள்ளூற வலுவாக இருப்பதால் எப்போதும் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.  நாம் தான் அத்தனை எதிர்ப்பு சக்திகளையும் சுத்தமாக துடைத்து வா... வா.. என்று அத்தனை நோய்களையும் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறத்தானே செய்கின்றோம்.

தென்னக ரயில்வே ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு வைத்திருக்கும் விலை 8.50. விற்க வேண்டிய விலையின் அளவு 12 ரூபாய்.  ஆனால் இது எப்படி மாறுகின்றது தெரியுமா?  

அவசரம் இல்லாமல் நிதானமாக வந்து கேட்டால் 12 ரூபாய்.  சற்று அவசரமாய் வந்து கேட்கும் போது 15 ரூபாய்.  ரயில் நடைமேடையில் இருந்து நகரப்போகின்றது என்கிற நிலையில் போய் கேட்கும் போது 20 ரூபாய்.  நம் அவசரம் தான் கடைக்காரருக்கு முக்கியம்.  நமக்கோ குறிப்பிட்ட அந்த பிராண்ட் மட்டும் தான் முக்கியம்.  

விலையென்பது ஒரு பொருட்டே அல்ல.  உள்ளேயிருக்கும் தண்ணீருக்குப் பெயர் மினரல் வாட்டர்.  ஆனால் உண்மையிலேயே வைக்க வேண்டிய பெயர் மைனஸ் வாட்டர் என்று தான் வர வேண்டும்.

நாம் சாப்பிடும் அரிசி மற்றும் தண்ணீரைப் பற்றி எப்பொழுதாவது யோசித்து இருக்கீங்களா? 

அம்மாவிடம் இனிமேலாவது சாப்பாத்தி சாப்பிடு என்றால் கொலவெறியோடு என்னைப் பார்க்கிறார். "ஒரு வாய் கஞ்சி போதும்டா.. உன்னோட சாப்பாத்திய நீயும் உன்னோட பிள்ளைகளும் தின்னுங்க" என்பார், 


அம்மாவுக்கு அறிவுரை சொல்லும் எனக்கு சாதம் இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறுகிறது. குழந்தைகள் விதவித ருசிகளை விரும்பினாலும் சாதம் என்பது சாகாவரம் போலத்தான் அவர்களுக்கும் இருக்கிறது. 

இன்று உருப்படியான அரிசியின் விலை 40 ரூபாய். இதுவே ஒரு வருடம் பழையது. 6 மாதம் பழையது என்ற பெயரில் தான் சந்தைக்கு வருகின்றது. ஆனால் மாதம் மாதம் விலையேறிக் கொண்டுருக்கின்றேதே என்று வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்.  

இரண்டு மாதம் தொடர்ந்து அந்த மூட்டையைப் பிரித்து வெயிலில் காய் வைக்காமல் இருந்தால் கெட்டுப் போன அரிசியின் நிறமும் தரமும் மாறியிருக்கும்.  காரணம் அந்த லட்சணத்தில் தான் இன்றைய அரிசி இருக்கிறது.

உரத்தை கொட்டி கொட்டி நமக்கான ஆரோக்கியத்தை இன்றைய விவசாயம் தந்து கொண்டுருக்கிறது.  இந்த அரிசி தான் பாலீஷ் செய்து செய்து பளபளப்பாக உங்கள் கண்களை பறித்து இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கேட்டு வாங்கித் தின்னத் தோன்றுகின்றது. அரிசியில் இருக்கும் மொத்த சத்துக்களையும் அரைத்து மில்காரர்கள் தவிடாக மாற்றி விட்டு கடைசியாக அரிசி என்ற பெயரில் ஒரு உருவத்தை கொடுக்க நாமும் மாட்டைப்போல விதி வந்தால் சாகலாம் என்று தின்று முடிக்கின்றோம்.

வெற்றிகரமாக மன்மோகன் சிங் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியாவுக்கு மானியம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளார். உரத்தின் விலை ஏறி விடும். ஆனால் விவசாயிகள் பாதிக்கபடக்கூடாதாம். ஆகவே மானியம் என்பதை விவசாயிகளுக்கு நேரிடையாக வழங்கி விடுகிறார்களாம். 

அதாவது நீ உரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மறைமுக கட்டளை. பயன்படுத்தாமல் இருந்தாலும் பிரச்சனையில்லை. காரணம் அந்த நிலத்தில் எதுவும் முளைக்காது. ஏற்கனவே மலடாக இருக்கும் நிலத்தில் ஏதேவொரு உரத்தை கொட்டினால் மட்டும் தான் பயிரின் பச்சை என்பதையே பார்க்க முடியும். இந்தியாவின் இயற்கை விவசாயத்தை வளர்த்தால் என்னவாகும். பன்னாட்டு எஜமான்கள் மன் மோகனை பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.  அவரவர் பாடு அவரவருக்கு.

இப்படித்தான் இப்போதுள்ள மினரல் வாட்டர் கதையும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பழைய கஞ்சியை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்.  மணிக்கணக்கான வைத்து சாப்பிடுவ்து முதல் சில நாட்கள் வைத்து சாப்பிடும் கஞ்சி வரைக்கும் அதன் மருத்துவ குணத்தை பிரித்துள்ளார்கள்.  அவர்கள் சொன்னது இப்போதுள்ள அரிசியின் அடிப்படையில் அல்ல. கடற்கரையில் விற்கப்படும் சுண்டக்கஞ்சி என்பது கூட இன்னும் கூடுதலாக சில நாட்கள் வைத்திருந்தால் அதுவே விஷம். 


இதைப் போலத்தான் நாம் அருந்தும் தண்ணீரும்.  மருந்துகளுக்கெல்லாம் தாத்தா ஒன்று உண்டு என்றால் அது தண்ணீர் மட்டும் தான்.  தண்ணீரில் இல்லாத மருத்துவ குணமே இல்லை. மனித உடம்புக்கு நீரே ஆதாரம்.

மினரல் என்று சொல்லக்கூடிய அத்தனை தாதுப் பொருட்களும் ஒரு சேர இருப்பது இந்த தண்ணீர் ஒன்றில் மட்டும் தான். ஆனால் நாம் வாங்கும் தண்ணீரில் உள்ள அத்தனை சத்துக்களையும் சுத்தம் என்ற பெயரில் எடுத்து விட்டு தான் அதை பாட்டிலில் அடைத்து தருகிறார்கள். 

தண்ணீரின் எந்த குணமும் இருக்காது.  குடித்தால் தாகம் கூட அடங்குவதில்லை. இந்த தண்ணீருக்குத் தான்  தமிழ்நாடு தற்போது பாடுபட்டுக் கொண்டுருப்பதைப் பார்க்கும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது.  நன்றாக வாசிக்கவும். வருத்தமாக இல்லை.  காரணம் நாம் செய்த செய்து கொண்டுருக்கும் விளைவுகளைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வியாதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை எதிரியாக பாவித்து முடிந்தவரைக்கும் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டுருக்கிறார்கள்.  

ஆனால் இந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்து தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையைப் போல இங்குள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் சர்வநிச்சயம்.  நம்மவர்கள் சாவு வீட்டில் கூட காசு பார்ப்பவர்கள். மாயனத்தில் ஊழல் செய்து காசு பார்க்கும் நம் அரசியல்வாதிகளிடம் நீங்கள் எது சொன்னாலும் எடுபடாது.. 

எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சராக இருந்து கொண்டு அவர் மாநிலத்திற்கு சாதகமாக இப்படி சொல்லிட்டாரே?  என்று அங்கலாய்த்துக் கொள்கின்றோம்.  அப்படி அவர் சொல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்குள் அவர் அடி எடுத்து வைக்க முடியாது.  காரணம் எதிர் கருத்து பேசி விட்டு உள்ளே நுழைய முடியாது. இடி போல விழும் ஒவ்வொரு அடியும்.  அவர்கள் வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்காக கூத்துக் கட்டி ஆடிக் கொண்டுருக்கிறார்கள் என்றாலும் நாம் காவேரி நீரை எப்படி பாதுகாக்கின்றோம் தெரியுமா?

காவேரி தலைக்காவிரியில் உருவாகின்றது என்பது அணைவருக்கும் தெரிந்ததே.  ஆனால் கர்நாடக அரசாங்கம் இந்த காவேரி நீர் வரும் பாதையில் எந்த தொழிற்சாலைகளையும்  செயல்பட அனுமதிக்கவே இல்லை. ஏறக்குறைய ஓகேனக்கல் வரைக்க்கும் இப்படித்தான். இந்த பகுதியில் ஓடி வரும் காவேரி நீரை பன்னீர் என்று சொல்லலாம். நீரில் பார்த்தால் நம் முகம் தெரியும். ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்து விட்டால் இந்த காவேரியை நம்மவர்கள் கற்பழித்து கதற அடிக்கின்றார்கள். இந்த வார்த்தை எழுத வருத்தபடவில்லை.  

காரணம் ஈரோடு பக்கம் வருவ்தற்குள் இந்த தண்ணீர்படும் பாடு இருக்கிறதே?

உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் என்று திருப்பூரும் ஈரோடும் போட்டிக் போட்டுக் கொண்டு வாழ முடியாத நகரமாக மாறிக் கொண்டுருக்கிறது.  சுற்றியுள்ள அத்தனை பகுதிகளுக்கும் இந்த விஷம் பரவிக் கொண்டுருக்கின்றது. 

காவேரி வரும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினம், நஞ்சன்கோடு, திருமுக்கூடல் நரசிபுரம் போன்ற சிறு நகரங்களாக இருக்கட்டும், அல்லது பாதைகளில் உள்ள மற்ற சிறு ஊர்களாக இருக்கட்டும்.  எந்த கழிவையும் இந்த தண்ணீரில் திறந்து விட முடியாது.  கர்நாடக மாநிலத்தின் சட்டம் தன் கடமையைச் செய்து விடும்.  ஆனால் திருப்பூருக்குள் இருக்கும் கொடுமையும், மழை பெய்து விட்டால் சாயப்பட்டறை முதலாளிகள் கொண்டாடும் சந்தோஷத்தையும் காண கண்கள் கோடி வேண்டும்.

அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தில் அத்தனை சாய நீரையும் திறந்து விட்டு விடலாம் அல்லவா?  அது தான் இங்கே நடந்து கொண்டுருக்கிறது. இதைப் போலத்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள ஆற்றின் நிலவரம் இருக்கிறது. கழிவுகளைக் கொட்ட, கழிவுகளைக் கொண்டு போய்ச் சேர்க்க என்று மாறி மாறி ஒவ்வொரு ஆற்றின் சுகாதாரத்தையும் நாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டுருக்கின்றோம். .

ஊரில் பார்த்த கண்மாயில் நீர் இல்லை. வறண்டு போய் கட்டாந்தரை போல இருக்கிறது.  சும்மா இருப்பார்களா? அருகே ப்ளாட் போட முயற்சித்துக் கொண்டுருக்கிறார்கள்.  முடிந்த வரை களி மண் தாண்டி கட்டாந்தரை வரைக்கும் மண் எடுத்து விற்பனை கண ஜோராக நடந்து கொண்டுருக்கிறது.  விவசாய நிலங்களை ப்ளாட் போட்டு விற்பதில் மற்ற மாநிலங்களை தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கும் போல.

காவேரி நீர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் நில நீர் ஆதாரத்தை எப்படி வைத்துள்ளார்கள் தெரியுமா?  மணல் மாஃபியா என்பது என்று பல்லாயிரக்கணக்கான கோடிகளை தந்து கொண்டுருக்கும் காமதேனு பசுவாக உள்ளது.  இதன் காரணமாகத்தான் காவேரி உள்ளே வந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வறண்டு போய்விடுகின்றது.  வறண்டு போன நிலங்களைத் தாண்டி இந்த காவேரி உள்ளே வருவதற்குள் படாதபாடு பட்டுத்தான் வருகின்றது. நாமும் அடிப்படை ஆதாரங்களை காக்க விரும்புவதில்லை. அது குறித்து கவலைப்பட நமக்கு நேரமும் இருப்பதில்லை.  காசு கொடுத்தால் தண்ணீர் வரும் போது ஆறென்ன குளமென்ன காவேரியென்ன?

காவேரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள் வரும் போதே ரூபம் மாறத் தொடங்குகின்றது.  கேரளா எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் கொட்டும் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கலக்கப்படுகின்றது. ஆனால் வளர்க்கப்படும் கோழிகளும் முட்டைகளும் கேரளாவுக்கு செல்கின்றது.  இதனைத் தொடர்ந்து மால்கோ, கெம்ப்ளாஸ்ட், போன்ற தொழிற்சாலைகளைத் தொடர்ந்து அனல் மின்நிலையம் வரைக்கும் அத்தனை நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவை சுமந்து வருவது தான் இந்த காவேரி தான்.

நாசிக், சூரத் போன்ற ஊர்கள் கூட பின்னுக்குப் போய்விட்டது.  நம்ம மேட்டூர் தான் இந்தியாவில் மாசடைந்த நகரில் முதலிடத்தில் இருக்கிறது. சுற்றுப்புற பாதுகாப்புக்கு விருது வாங்கிய காகித ஆலையின் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கொட்டப்படுகின்றது.

திருப்பூரில் உள்ள சாய்ப்பட்டறை முதலைகள் உருவாக்கிய பல சாயப்பட்டறைகள் அத்தனையும் காவேரி வழித்தடத்தில் தான் இருக்கிறது.  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க காசு.  நாம் எதையும் யோசிக்காமல் இருக்க தொலைக்காட்சி. 


கோவில்களை விட கழிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்ன போது பொங்கித் தீர்க்கும் நமக்கு என்ன அருகதை இருக்கிறது?   கோவில்களைக் கூட நாம் சுத்தமாகவா வைத்திருக்கின்றோம்.?

நம்முடைய உண்மையான வாழ்க்கை என்பதை அமைச்சர் உணர்ந்து தான் பேசியுள்ளார்.

நாம் தான் நாம் வாழும் அத்தனை இடங்களையும் கழிப்பறையாகத்தானே வைத்துள்ளோம். பாவத்தை செய்து கொண்டே பாவத்தை கரைக்க ஒவ்வொரு கோவிலுக்கும் படையெடுக்கின்றோம். கோவிலுக்குள் உள்ளே இருக்கும் ஆண்டவனும் அமைதியாக சிரித்தபடியே நம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்..

வீதி முதல் ஆறு வரைக்கும் அத்தனையையும் நாம் கழிவு கொட்டத்தானே பயன்படுத்துகின்றோம். கழிப்பறையில் வாழ விரும்பும் நாம் கையில் பாட்டிலை சுமந்து தானே ஆக வேண்டும்.

இதை விட மகிழ்ச்சி வேண்டுமா?