Sunday, November 05, 2023

E.V.Velu எ.வ.வேலு

டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட போது அவரை சர்வதேச ஊடகங்கள்  கட்டுமானத் தொழிலில் இருக்கும் சக்ரவர்த்தியாக வர்ணித்தன. மும்பையில் கூட ட்ரம்ப் டவர் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. அவரின் உண்மையான தொழில் கிளப். சூதாட்டம். மிக மிகப் பெரிய கோடீஸ்வரர்.  எல்லாமே சூதாட்ட விடுதி  வழியாகவே சம்பாதித்தது. அமெரிக்காவில் அது அங்கீகரிக்கப்பட்ட தொழில்.  இந்தத் தொழிலுடன் தொடர்புடைய அனைத்துத் தொழில்களும் நிழல் உலக தொடர்புகள் வரைக்கும் முடியும்.  நீங்களும் நானும் உள்ளே செல்ல முடியாது. மன்மதக் குஞ்சாகவே இன்னமும் ட்ரம்ப் இருப்பதற்கு அவர் தொழில் பழக்கமும் ஒரு காரணம். பணத்தாலே பேசுவார். பேச வைப்பார். ஆட்களைப் பின்னால் வர வைப்பார். நோ செண்டிமெண்ட். ஒன்லி மணி.





எனக்கு இரத்தினவேலு அய்யாவையும் அப்படித்தான் சொல்லத் தோன்றுகின்றது.  இப்படிச் சொன்னால் உங்களுக்கு யார் என்று தெரியாது. இ.வ. வேலு என்றால் நிச்சயம் தெரியும்.  வேலு அவர்களின் தொழிலாகத் தொடக்கத்தில் பேருந்து நடத்துநராக இருந்தார் என்று ஒவ்வொருவரும் கதையளக்கின்றார்கள். அது உண்மை. ஆனால் அதற்கு முன் அவர் என்ன தொழில் செய்தார் என்றால் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டு குறிப்பிட்ட பேருந்துகளுக்கு ஆட்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலை.  போளூர், போளூர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை என்று பேருந்து கிளம்பிக் கொண்டு இருக்கும் வரை கத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.  பேருந்தில் முழுமையாக ஆட்கள் ஏறாதவரை தொண்டை தண்ணீர் வற்றி விடும்.

போளூர் தொடங்கி ஆதமங்கலம் வரைக்கும் உள்ளே உள்ள அனைத்துக் கிராமங்களையும் 35 வருடத்திற்கு முன்னால் உள்ளும் புறமும் சென்று பார்த்துள்ளேன்.  டெல்டா மண்டலத்தில் எப்படி திமுக, கம்யூ ஆதரவோ அதை விட இந்தப் பகுதியில் திமுக  ஆதரவு என்பது குடும்பம் குடும்பமாக இருக்கும். கருணாநிதி என்ற பெயர் வீட்டுக்கு ஒருவராவது இருந்தார்கள்.  ஏழ்மை மிக அதிகம். அதே சமயத்தில் மீட்டர் வட்டி முதல் கந்து வட்டி வரை உலகில் என்னன்ன வட்டி வகைகள் உள்ளதோ அத்தனையும் வழங்கக்கூடிய மனிதர்களும் அதிகம். விவசாயம், நெல் அறவை எந்திரங்கள், அரிசி ஆலைகள் இது சார்ந்த தொழில் தான் அதிகம். இப்போது அந்தப் பக்கம் நடந்துள்ள வளர்ச்சி என்பது கற்பனையில் நினைத்தே பார்த்து இருக்க மாட்டார்கள்.  திருவண்ணாமலை ஆலயம் அப்போது புகழ் பெறவில்லை.  ரமண ஆசிரமத்திற்கு அவ்வப்போது வெளிநாட்டுப் பயணிகள் வந்து போய்க் கொண்டு இருப்பார்கள்.  எந்தப் பக்கம் திரும்பினாலும் வறுமை ஏழ்மை.  பீகார் போல போளூரிலிருந்து ஆதமங்கலம் (நாற்பது கிலோமீட்டர் இருக்கலாம்) அரசுப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றால் பேருந்து டாப் ல் அமர்ந்து கொண்டு வரக்கூடிய சூழல் தான் அன்று இருந்தது. 

சில வாரங்களுக்கு முன் சோதனை நடந்த திருவாளர் ஜெகத் அய்யா தினசரி கூலியாகத் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து  சிரம தசையோடு வாழ்ந்ததைவிட வேலுவின் தொடக்க வாழ்க்கை ரொம்பவே மோசம். கண்ணீர் வரவழைக்கக்கூடியது.  அரிசி வாங்கவே அல்லாடும் ஏழ்மை. ஆனால் மனிதர் அசாத்தியமான மன உறுதி கொண்டவர். அச்சம் தவிர். ஆண்மை கொள். முயன்று கொண்டேயிரு என்ற வகையில் உள்ளவர். தோற்றுக் கொண்டேயிருந்தாலும் முயற்சித்துக் கொண்டேயிருந்தவர்.  வறுமை ஒரு பக்கம். வாழ்க்கைப்பாடுகள் மறுபக்கம். 

வேலு பார்த்த தொழிலில் வயலில் தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்   எந்திரங்களைப் பழுது பார்க்கும் அனுபவ அறிவுள்ள சாதாரண இயந்திர வல்லுநராகவும் பணி செய்துள்ளார். 1951 ல் பிறந்தவர்.  முதல் ஐம்பது வருடங்கள் அதீத வறுமை, நிறைவேறாத ஆசைகள், விடாத நூறு சதவிகித உழைப்பு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்விலும் ஏமாற்றம், அங்கீகாரத்திற்கு ஏங்குதல், தாங்க முடியாத அவமானம் என்று சாதாரண மனிதர் சந்திக்கக்கூடிய அனைத்தையும் பார்த்து வளர்ந்த மனிதர்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய 1972 முதல் அதிமுக (உள்ளே நுழைந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை)  1977 முன்னால் அமைச்சர் பஉ சண்முகம் அல்லக்கையாக மாறி (என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதனை யூகித்துக் கொள்ளவும்) வெற்றிகரமாக சமஉ ஆனாலும் வாழ்க்கையில் பொருளாதாரச் சுதந்திரம் என்ற புள்ளி தான் வைக்க முடிந்தது. வளர்ச்சி என்ற கோலம் போடவில்லை.  அதன் பிறகு அதிமுக பிரிந்த போது ஜா அணி.

ஜா அணியில் இருந்தவர்களை, போட்டியிட்டவர்களை, வளர்ந்து கொண்டிருந்தவர்களை சசிகலா வகையறாக்கள் ஒன்று சேர்ந்த அதிமுக வின் உள்ளே நுழைய அனுமதிக்கவே இல்லை. முன்பு அங்காளி பங்காளியாக இருப்போம் என்று வாக்குறுதி அளித்து கட்சியை ஒன்று சேர்த்தார்கள். அத்தனையும் டமால்.  எனவே தான் வேலு வை கண்டு கொள்ள யாருமே இல்லை.  

நடிகர் பாக்யராஜ் தொடங்கிய கட்சி, ஆர்எம் வீரப்பன் தொடங்கிய கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் என்று செந்தில் பாலாஜிக்கு முன்பே ஐந்து கட்சி அமாவாசையாகப் பல இடங்களில் பயணித்து கடைசியில் திமுக வந்து சேர்ந்தார்.

கருணாநிதிக்கு நன்கு அறிமுகமான தொழில் அதிபர் வழியாக திமுக விற்கு உள்ளே வந்தார். அதாவது வேலு அவர்களின் முதல் ஐம்பது ஆண்டுகள் அனைத்துக் கிரகங்களும் தூங்கிக் கொண்டு இருந்தன.  திமுக உள்ளே வந்ததும் ஒவ்வொரு கிரகங்களும் 24 மணி நேரம் உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தன. இன்று வேலு அவர்களின் சாம்ராஜ்யத்தை கோபாலபுரம் கண்டு பயந்து போய் நிற்பதாக வந்து கொண்டு இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.  ஜெகத் தராசின் ஒரு பக்கம். வேலு மற்றொரு புறம் என்றால் ஜெகத் தான் வெல்வார். ஆனாலும் வேலு இருப்பதால் ஒரு நிமிடம் தட்டுத் தடுமாறி சுயநினைவு இழந்து மாறி இறுதியில் தான் ஜெகத் பக்கம் தராசு முள் போய் நிற்கும்.

ஜெ ஆட்சியில் எடப்பாடி மூலம் சேலத்தில் வீடு வாடகைக்குப் பிடித்துத் திருடப்பட்ட பணம் அனைத்தையும் கட்டுக்கட்டாக உள்ளே சேகரித்து வைத்து ஆட்கள் வைத்துப் பாதுகாக்கின்றார்கள் என்று வெளிப்படையாகவே பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.  அப்படித்தான் திமுக விலும் நடப்பதாகச் சொல்கின்றார்கள்.  சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் பகுதி பகுதியாகப் பிரித்து ஆட்கள் மூலம், தொழில் அதிபர்கள் மூலம், வட இந்தியர்கள் மூலம் என்று சேகரித்து வைத்துள்ள பணத்தைப் பாதுகாக்கின்றார்கள் என்கிறார்கள். புலனாய்வு ஏஜென்சிகளுக்குத் தெரியாமலா இருக்கும்.  கட்டாயம் தெரியும். கை வைக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆதாரம் தேவை.  காரணம் இந்தப் பணப் புழக்கத்தை நிறுத்தினால் தமிழகத்தில் பல தொழில்கள் அடி வாங்கும். கடந்த சமஉ தேர்தலில் டிடிவி சேகரித்து வைத்திருந்த வைரத்தைக் குஜராத் சந்தையில் (பாதியளவு தான் கொண்டு போய் கொடுத்தார்களாம்) இறக்கிய போது சந்தையே அலறி அமிழ்ந்த கதையை ஊடகங்கள் பூடகமாக எழுதியது. அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அடக்கி வாசிப்பார்களோ என்று தோன்றுகின்றது.

ஒரு முறை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது. அப்போது கருணாநிதி துரைமுருகனைப் பார்த்துச் சொன்ன வாசகம் இது. அந்தச் சமயத்தில் தான் துரைமுருகன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த தொடங்கியிருந்தார். என்ன துரை இனி கட்சியின் கஜானாவுக்கு உன்னைத்தான் நம்பியிருக்கவேண்டும் போல. கட்டிக் கொண்டிருக்கின்ற கட்டிடங்களைக் கட்சிக்குக் கொடுத்து விடு என்று போகிற போக்கில் கேட்டு விட்டு கூட்டம் முடித்து வீட்டுக்குச் சென்று விடத் துரை முருகன் வியர்த்து விட்டதாக அந்தச் சமயத்தில் படித்த ஞாபகம் இப்போது வருகின்றது.  அப்போதும் துரையைக் காப்பாற்றியவர் ஜெகத் தான்.

கருணாநிதிக்கு சில நல்ல குணங்கள் உண்டு. அது அரசியல்வாதிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் அடிப்படை குணமாகவே இருக்கும்.  

பெரிய கூட்டத்தைச் சேர்க்கத் தெரிந்தவர்கள், கட்சிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கக்கூடியவர்கள், செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள் மூன்று பேர்களையும் தன் உள்வட்டத்தில் வைத்திருப்பார்கள்.  

வேலு இப்படித்தான் கருணாநிதி அவர்களின் மனம் கவர்ந்தவராக மாறுகின்றார்.  துரைமுருகன் வெறும் பேச்சுத் துணைக்கு. ஜெகக் கூட்டத்தில் பாராட்டு மழை பொழிய அவ்வப்போது கேட்ட பணத்தை வழங்க.(ஜெகத் கட்சியில் உள்ள பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் பணப் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே வழங்குவார்). ஆனால் வேலு கொஞ்சம் வித்தியாசமானவர். 50 வருடங்கள் பட்ட பாடுகள் அவருக்குத் தானே தெரியும். கருணாநிதியின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் என்னவோ அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பதில் தொடக்கம் முதல் இன்று வரையிலும் முதன்மையான நபராகவே இருக்கின்றார். அழகிரிக்கும் பிடிக்கும். செல்விக்கும் பிடிக்கும்.

இது தவிர குடும்ப கிளையில் உள்ள ஒவ்வொரு காய் கனி பூக்களுக்கும்  மற்ற சுவையறிந்த தேவைகள் வரை நிறைவேற்றக்கூடியவராகவும் இருப்பதால் அறிவாலயத்தில் பணிபுரியும் சாதாரண ஊழியர்கள் முதல் ஒவ்வொரு வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்கள் வரைக்கும் அனைவரும் வேலுவுக்கு தான் முதல் மரியாதை தரக்கூடியவர்களாக இன்று வரை உள்ளனர். திரைப்படத் தொழிலில் ஆர்வம் இருப்பதாலும் அங்கே ஏகப்பட்ட முதலீடுகள் இருப்பதாலும் கருணாநிதி போல பல கலையார்வம் உள்ளவர்.கோவையில் மீனா ஜெயக்குமார் போல கரூரில் பெரிய பேக்கப் உள்ளதாகச் சொல்கின்றார்கள்.  இறந்த கரூர் மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் தொடர்பில் அங்கு ஒரு பெண்மணி உள்ளனர். அவர் பெயர் அதிகம் அடிபடவில்லை. முகம் வெளியே தெரியவில்லை. ஆச்சரியமாக உள்ளது.

 இது தவிரத்  தினமும் ஓசிக்குடி குடிக்கும் அத்தனை அமைச்சர் பெருமக்களுக்கும் தீர்த்தவாரி வழங்கக்கூடியவராகவும் வேலு இருப்பார். இருக்கின்றார்.  ஜெகத் தன் கல்வி நிறுவனங்களில் உயர் அதிகாரிகளின் வாரிசுகளும் இலவச அல்லது குறைவான தொகையில் இடம் வழங்கி அந்த அதிகாரிகளின் வகிக்கும் பதவி மூலம் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியதைப் போல வேலு யாருக்கு என்ன தேவை? எப்போது தேவை? என்பதனை அறிந்து செயல்பட்டு சில லட்சம் கோடி சாம்ராஜ்யத்தை முதல் தலைமுறையில் உருவாக்கிக் காட்டியுள்ளார்.

இறுதியாக

கருணாநிதி குடும்பத்தில் முக்கிய கொள்கை ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு. தங்கள் பதவிக்கு மற்றவர்கள் ஆசைப்படக்கூடாது. மாறன் ஆசைப்படாத காரணத்தால் கருணாநிதி அவர் சம்பாதித்ததைக் கண்டு கொள்ளவே இல்லை. கலாநிதி மாறன் ஷேர் பிரித்து வழங்கி பிரியும் வரைக்கும் அது தொடர்ந்தது. அதே போல வேலு பெரிய பதவிகளுக்கு ஆசைப்படுவதில்லை. இவரின் விசுவாசம் எந்த அளவுக்கு என்றால் திருவாரூரில் தற்போது கட்டப்பட்டு  சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் என்பது வேலு அவர்களின் நூறு சதவிகித உழைப்பில் உருவானது.  எனக்கு மாலை மரியாதை வேண்டாம் என்று வட இந்தியத் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேலு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.  ஆனால் ஸ்டாலின் உள்ள நெகிழ்ச்சியோடு தனக்குப் போட்ட சால்வையை வேலுக்கு வழங்கி உச்சி முகர்ந்தார்.  உதயநிதி அமைச்சர் பதவி ஏற்ற சமயத்தில் அவருக்கு அலுவலக அறை உருவாக்குவதற்காகத் தினமும் இரண்டு முறை அந்த அறைக்குச் சென்று தன் மேற்பார்வையில் எல்லாமே புத்தம் புதுசு என்கிற அளவுக்கு நேரிடையான கவனிப்பில் அந்த அறையைக் குடும்பம் விரும்பியபடி உருவாக்கிக் கொடுத்தார்.  

ஏறக்குறைய இராமருக்கு ஆஞ்சனேயர் போலவே குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளார். 

Amazon Kindle (Jothi G) E Books

இதன் காரணமாகவே நேற்றைய முதல்வர் நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.  மூட் அவுட் என்கிறார்கள்.

தமிழகத்தில் திமுக வின் பல லட்சம் கோடிகள் பல ரூபங்களில்  புழக்கத்தில் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அதை எடுப்பதா?  கொடுக்க முடியுமா?  என்ற அச்சத்தில் பலரும் தவிக்கின்றார்கள்.

கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருக்கிறது. யார் வெல்வார்கள்?

No comments: