Sunday, June 12, 2022

சூரியன் மறையத் தொடங்கியுள்ளது.

மாலை நேரத்தில் இருள் வருவதற்கு முன்பு அந்திப் பொழுது என்றொரு நிகழ்வு நடக்கும்.  சூரிய ஒளி முழுமையாக மறைவதற்கு முன் மெதுவாக மாற்றங்கள் நடக்கும்.



அந்த சமயத்தில் கண் எதிரே இருக்கும் வெளிச்சம்  மெது மெதுவாக மறைவதைப் படபடப்பு இல்லாமல் தெளிவான மனநிலையிலிருந்தால் பார்க்க முடியும்.  அதே போலத்தான் தற்போது தமிழக அரசியல் களம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

சூரியன் மறையத் தொடங்கியுள்ளது. 

இந்த மண்டைக்குள் களிமண் தான் உள்ளது என்பதனை யதார்த்தவாதியாக உணர்ந்தவர் சாகும் வரையிலும் அண்ட விடாமல் தவிர்த்தே வந்தார். காலம் போட்ட கோலத்தில் கோமாளிகளும் இங்கு கோலோச்சமுடியும் என்பதனை நாம் இப்போது பார்த்து வருகின்றோம்.  

பேச்சாளர், வசனகர்த்தா, நடிகர், நடிகை என்று 50 ஆண்டுகளும் தமிழ் திரைப்பட உலகம் தான் நமக்கு தலைவர்களை தந்து கொண்டு இருந்தது. கடைசியாக அல்லக்கை வேலை பார்த்தால் வாய்ப்பு வரும் போது தனக்கும் விபரீத ராஜயோகம் அமையும் என்பதனையும் தமிழக அரசியல் களம் உணர்த்தியது.  

ஆனால் இனி இந்த வரிசை மாறும் என்றே நம்புகிறேன்.  அதிகாரத்தை முழுமையாக புரிந்த, உணர்ந்த, உள்வாங்கிய, ஆளத் தெரிந்த ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் அமரப் போகின்றார் என்பதனை உறுதியாகச் சொல்வேன்.

கம்பிகட்டுகின்ற கதைகளைச் சொல்லி ஒப்பேற்றிய அத்தனை பேர்களுக்கும், நேரிடையாக மறைமுகமாக பங்காளிகளாக இருந்தபடியே தமிழக வளங்களை சூறையாடுவதே தங்கள் அரசியல் பணி என்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கும் அரசியல் அந்திம காலம் கண் எதிரே தெரிவதாகவே நான் கருதுகிறேன்.

அப்பாவுக்கு பிறகு மகன்.  மகனுக்கு பிறகு என் மகன் என்று அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகாரத்தை வைத்துக் கொள்ள நாங்கள் தயார் செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற அறைகூவல் காதில் கேட்டாலும் காலம் மாற்றிய சூழலைக் கணக்கில் வைத்துப் பார்த்தால் இனி இங்கே நடக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.  

மக்கள் விழித்துக் கொண்டார்கள்.  

டெல்டா மண்டலம் முதல் கிருஷ்ணகிரி வரை கூடிய கூட்டம் என்பது அதனைத்தான் நமக்கு உணர்த்துகின்றது.  கூடவே ஏன் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தைப் பாதியில் நிறுத்தி விட்டார்கள் என்பதனை யோசித்துப் பாருங்கள்.  காறித் துப்பிவிடுவார்கள் என்ற பயம் தானே?

நான் கடந்த இரண்டு வருடமாக எழுதி வருகிறேன். 

பாஜக அடுத்த 25 ஆண்டுகள் தமிழகத்தை தன் களமாக மாற்றக்கூடியதற்கான அடித்தள பணிகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது. 

அண்ணா உருவாக்கிய கட்சி அயோக்கியர்கள் கையில் சிக்கி கொள்கை என்பதே கொள்ளையடிக்க என்பதற்காக மாறியதன் எச்சமும் சொச்சமும் இப்போது நடந்து வருகின்றது. இப்போது வெறிகொண்டு சுருட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  கூச்சப்படாமல் குடும்பத்தில் அத்தனை பேர்களுக்கு அள்ளி குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இது சார்ந்த நிகழ்வுகளை அடுத்தடுத்து நாம் பார்க்கப் போகின்றோம்.  மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்கள் உருவாக்கிய, பரப்பிய, சொன்ன வினோத கொள்கை என்பது சரியா? தவறாக என்பது தனியாக இருக்கட்டும். 

ஆனால் அது கடைசியில் கொள்ளைக்கூட்டத்தின் கைகளில் சிக்கி தமிழகம் சின்னாபின்னமாகும் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார். இன்னும் சில வருடங்களில் தமிழக கோரச் சூழல் உங்களுக்கு இது புரிய வைக்கக்கூடும்.

உங்களுக்கு இன்னமும் தெளிவாகப் புரிய வேண்டும் என்றால் 1949 ல் துவங்கிய திமுக என்ற கட்சி ஆட்சியைப் பிடித்து நாமும் சாதிப்போம் என்ற எண்ணமெல்லாம் அண்ணாதுரை  அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.  ஈ.வெ.ராவுடன் இருந்தால் பத்து பைசா பெயராது என்பதனை உணர்ந்த தருணத்தில் முயன்று தான் பார்ப்போமே என்று அண்ணாதுரை யோசித்தற்குப் பின்னால் அவர் பல காரணங்களை வைத்திருந்தார். அண்ணாதுரை ஏழை மகன்.  ஆடம்பரம் அறியாதவர். ஆனால் தனிமனித பலகீனம் உள்ளவர். அவர் முதலியார் சமூகம் என்பதால் பணம் படைத்த பல முதலியார்கள் அவரை நேரிடையாகவே ஆதரித்தனர். வாலாஜாபேட்டை பேருந்து முதலாளி தாங்கி கொண்டாடினார்.

இதை விட முக்கியமானது அண்ணாதுரை அவர்களின் கல்வி.  முதுகலைப் பட்டம் என்பது மிகப் பெரிய அங்கீகாரமாக இருந்தது.  மற்றொன்று அவர் பேசும் தமிழ் மற்றும் ஆங்கிலம்.  கூட்டம் மெது மெதுவாகச் சேர்ந்தது. தன்மானத்துடன் தன்னை உணர்ந்து வாழ்ந்த தமிழர்களை தரங்கெட்டு வெறியர்களாக மாற்றியதில் முழுமையாக வெற்றியடைந்தார். கடைசியில் சாதியை ஒழிக்க வந்தோம் என்று சொல்லி சாதித்தமிழனாக மாற்றியதில் திமுக வெற்றியடைந்தது.  இன்று வரையிலும் தொடர்கின்றது.

காங்கிரஸ் நடந்து கொணடிருந்த மாற்றங்களை உணரவே இல்லை. தங்களை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் அந்த இடத்தை அண்ணாதுரை நிரப்பினார் என்பது அவரின் அதிர்ஷ்டம் தானே.

திமுக என்ற கட்சி வளரத் தொடங்கியது.  

அண்ணாதுரை திராவிடம் என்ற பொய் வார்த்தையை அலங்கரித்து மேடையில் ஆர்ப்பரித்து அது வலிமையாக்கி வலுவாக்கி நகர்த்தி நம்ப வைப்பதில் வெற்றியடைந்தார் என்பது உண்மை.

ஆனால் 1967 ல் அண்ணாதுரை அவர்கள் முதல்வராக மாற முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்களின் முக்கியமானவர் கருணா. 

1957 முதல்  பத்தாண்டு காலம் தமிழகத்தில் செய்த, உருவாக்கிய, நிகழ்த்திக் காட்டிய அனைத்தும் அறுவறுப்பு தொடர்பானது. அப்போது தூவப்பட்ட விதைகள் இன்று பெரும் காடாக மாறியுள்ளது. இந்த விஷக்காடுகள் இன்று இணையத்தில் தினமும் பரவி பலரையும் பாவியாக மாற்றிக் கொண்டே இருக்கினற்ர்கள்.

கருணா செய்த அக்மார்க் அயோக்கியத்தனங்கள்.  

தனி மனித தாக்குதல்கள், 

வன்மம், வக்கிர எழுத்து, 

துவேஷப் பார்வை 

என்று  அயோக்கியத்தனத்தை தனக்கான அங்கீகாரத்திற்காக உருவாக்கிக் கொண்டே வந்தார்.  

பாலியல் தொடர்பாக எழுதினால் பேசினால் யாருக்குத்தான் பிடிக்காது.  நல்லவர்கள் கூட ஒளிந்திருந்து படிப்பார்கள்.

தங்கள் எழுத்தாற்றலை மஞ்சள் நிறமாக மாற்றியதில் அண்ணாவும் கருணாவும் போட்டிப் போட்டுச் செயல்பட்டனர். 

ஒருவருக்குச் சாதிய பின்புலம் இருந்த காரணத்தால் பாதி அளவில் நிறுத்திக் கொண்டார். ஆனால் கருணாவோ தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தன் பேனா முழுக்க வக்கிர எண்ணத்தை நிரப்பி நாள்தோறும் விடாமல் எழுதித் தள்ளிக் கொண்டேயிருந்தார்.  

திரைப்படத்திற்கு வசனம் எழுதும் போது ஒரு மாதிரி அரசியல் கட்டுரைகளுக்கு வேறு மாதிரி என்று சாக்கடையைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

காமராஜர் முதல் பக்தவச்சலம் வரை அத்தனை பேர்களையும் கருணா கிழித்துத் தொங்க விட்டார். 

வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அதனை உருவாக்கிக் கொண்டார். போராட்டம் என்ற பெயரில் பக்தவச்சலம் அரசினை ஸ்தம்பிக்க வைத்தார்கள்.  கம்யூனிஸ்ட் இவர்களை நம்பி ஒத்துழைத்தார்கள். இயற்கையும் இவர்களுக்கு ஒத்துழைத்தது. அரிசி பஞ்சம். மழை பற்றாக்குறை என்று தொடங்கி எந்தப் பக்கம் பார்த்தாலும் புலம்பல் புராணம் தான்.  ஆனால் காமராஜர், பக்தவச்சலம் நேர்மை என்ற பெயரில் தங்களுக்குத்தாங்களே கொள்ளி வைத்துக் கொண்டார்கள்.  

எதிரே இருப்பவர்கள் அதர்மத்தைக் கொள்கையாகக் கொண்ட சாத்தான் கூட்டம் என்று தெரிந்தும் கட்சிக் கொள்கை, மத்திய அரசின் கொள்கை, இந்திய இறையாண்மை, இந்தியா என்பது ஒரே தேசம் என்பது போன்றவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள அதுவே இவர்களின் கழுத்தை நெறித்து நீங்கள் அரசியலுக்கே லாயக்கில்லை என்று 1967  ஆண்டோடு வெளியே அனுப்பியது. காமராஜர் அவர்கள் அதிர்ச்சித் தோல்வி என்பதாக முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் இப்போது பாருங்கள்.  

கருணா உருவாக்கிய சாத்தான் கூட்டத்தோடு அத்தனை பாவிகளும் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள்.  

அண்ணாமலை அவர்கள் மட்டும் தனியாக நிற்க தமிழக மக்கள்  55 வருடங்களுக்குப் பிறகு மனம் மாறத் தொடங்கியதன் முதல் புள்ளியை அண்ணாமலை தொடங்கி வைத்துள்ளார்.

https://www.youtube.com/channel/UClbT3QLtksvugJR3QvzCn1w



2 comments:

இராய செல்லப்பா said...

நல்லதே நினைக்கிறீர்கள். நல்லதே நடக்கட்டும்!

ஸ்ரீராம். said...

நல்லவை தொடரட்டும்.