Saturday, June 04, 2022

June 4 தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள்

"அண்ணாமலை அதிகாரத்திற்கு வந்தால் இங்கு எல்லாமே மாறி விடும் என்று இவர் உணர்ச்சி வசப்பட்டு நம்புகின்றார்" என்று என்னிடம் பல பேர் நேரிடையாக மறைமுகமாகச் சொல்லியுள்ளனர்.  

இன்று வரையிலும் உறுதியாக நம்புகிறேன்.  என் நம்பிக்கை கூடிக் கொண்டே தான் செல்கின்றது. மாற்றமில்லை.



"ஏன் நீங்கள் இப்படி தினசரி கடமையாகத் தமிழக பாஜகவிற்கு இப்படி உங்கள் உழைப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்??  நீங்கள் எந்த பதவியில் கூட இல்லையே? நாங்கள் 25 வருடமாகக் கட்சியில் இருக்கின்றோம்?  ஏனிந்த ஆர்வம்"?  என்று கேட்ட நண்பருக்குப் பதில் சொல்லாமல் அவரை பட்டியலிலிருந்து நகர்த்தி வைத்தேன். கடந்த ஒரு வருடத்தில் இப்படிப்பட்ட குதர்க்கமான கேள்விகளைக் கேலிகளைக் கேட்ட பல நூறு பேர்களை அந்தமான நிகோபார் க்கு அனுப்பி வைப்பதைத் தினசரி கடமையாகவே வைத்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் எப்போதும் செயல் மட்டுமே முக்கியம்.  செயல்வீரர்கள் அருகிலிருந்தால் போதும்.  முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் "விஷக்கிருமிகள் காற்றில் பரவி விட்டது: என்று சொல்லி ஐம்பத்தி ஐந்து வருடங்கள் ஆகி விட்டது.  

இன்று அதன் முழுவீர்யமும் தெரிகின்றது.  நம் தாய் மொழிக்கு மதிப்பில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.  தாய்மொழிக் கல்வி என்பதனை கேவலமாக மாற்றிவிட்டார்கள்.  உன் கலாச்சாரம், உன் மரபு, உன் வாழ்க்கை முறை, உன் நம்பிக்கை என்பதனை பொதுவெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அயோக்கியத்தனம் என்பது அரசாள்பவர்களின் அடிப்படைக் குணம் என்பதாக மாற்றி வெற்றியடைந்துள்ளனர்.

பதினைந்து வருடத்திற்கு முன்பு எழுதத் தொடங்கினேன். என்னை நானே உணர்ந்து கொண்டேன். உணர்ந்ததை வெளிப்படுத்தினேன். 100 பேர்கள்  1000 பேர்கள் என்று தொடர்ந்த பயணத்தில் இன்று 1 லட்சம் பேர்கள் பார்க்கும் வலையொளி வரைக்கும் நகர்ந்து வந்துள்ள பயணத்தில் நான் புரிந்து கொண்டதும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க விரும்புவதும் ஒன்றே ஒன்று தான்.

மாற்றம் வேண்டும்.  மாற்றத்தை விரும்புகிறேன் என்று புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை. அன்று தேவைப்பட்ட கோஷம் "வெள்ளையனே வெளியேறு".  இன்று நமக்குத் தேவைப்படுகின்ற ஒரே கோஷம் "கொள்ளையர்களை வெளியேற்றுவோம்".

எந்த தகுதியும், திறமையும், அறிவும் இல்லாமல், அதீத சுயநலத்தை மட்டுமே தங்கள் தகுதிகளாக வைத்துக் கொண்டு தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக இரண்டு கட்சிகளில் மட்டுமல்ல. இவர்களை அண்டிப் பிழைக்கும் சாதிக்கட்சி, சாத்தான் கட்சி என்ற பெயரில் உள்ள அனாதைக்கூட்டங்களும் அரசு பணத்தைக் கொள்ளையடித்தே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் பல ஆயிரம் பேர்கள்.  பலமுறை நான் இதனை எழுதியுள்ளேன்.  தமிழக வளம் அனைத்தையும் இங்கே ஆயிரம் குடும்பங்களுக்குள் தான் சுற்றிச் சுற்றி வருகின்றது.  எந்த சர்வதேச பொருளாதார இதழ்களிலும் இவர்களின் சொத்துக்களின் உண்மையான மதிப்பை வெளியிட முடியாத அளவுக்கு மாய சூழலை சுழற்சியை உருவாக்கி வைத்து உள்ளனர்.   நான் கற்பனைக்காக இதனை இங்கே எழுதவில்லை. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். 

தமிழகத்தில் ஒரு குடும்பத்திடம் வைரம் உள்ளது. இருபத்தி ஐந்து வருடங்களில் ஊழல் பணமாகச் சேர்த்ததில் சிறிய அளவு அது. தேர்தல் வருகின்றது. பணம் தேவைப்படுகின்றது. கொண்டு போய் குஜராத் வைர சந்தையில் தங்களிடம் கைவசம் உள்ளதில் பாதியைக் கொண்டு போய் விற்கின்றது அந்த மாபியா கும்பல்.  சந்தையைக் குலுங்கி மீள முடியாமல் விலைச்சரிவுடன் தடுமாறி நிற்கின்றது.  நம்புவதற்குக் கடினமாக இருக்கும்.  

இன்னும் பலவற்றை எழுத முடியும். ஆனால் திருடர் கூட்டணியில் அங்கத்தினராக வாழும் ஊடக மாமாக்கள் எதையும் வெளியே கொண்டு வருவதில்லை.

அதிகாரத்தைச் சுவைத்து பல்லாயிரம் கோடிகள் சேர்த்தும், வெறி அடங்காமல் மேலும் மேலும் வாரிசுகளைக் களம் இறக்கி தமிழகத்தைச் சூறையாட முடியும். நம்மை எவரும் கேட்க முடியாது. சட்டமென்பது சாமானியர்களுக்கு மட்டுமே என்ற நினைப்பில் இங்கே வாழும் அத்தனை பேர்களையும் முட்டாள்களாக வைத்திருக்க முடியும் என்று நினைப்பே என்னைப் போன்றோர்களுக்கு அருவருப்பாக உள்ளது.

அண்ணா முதல் அண்ணாமலை வரை/BJP SR Sekhar/#Annamalai_Birthday_Special_Speech/#KKI_JothiG

நான் என் மகள்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய நல்ல கல்வியை மட்டும் கொடுத்தால் போதுமானது என்ற எண்ணத்தில் இருக்கின்றேன்.  கூடவே என் அறிவின் மூலம் நான் கற்றதை, அறிந்ததை, வாசிப்பதை மற்றவர்களுக்கு அறியத் தர வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளேன்.  

தனிஒருவன் பட வசனம்  

"50 வருடத்திற்கு முன்பு உன்னைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்.  நாடு என்ன ஆகப் போகின்றதோ?  ஆனால் இன்று இவரைப் பார்த்து பெருமையா நினைக்கிறேன்.  வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் வரத்தானே செய்வான்".

வாழ்த்துகள் குப்புசாமி அண்ணாமலை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தடம் மாறாமல் உச்சத்தைத் தொடுவீர்கள்.

ஜோதிஜி

 (04/06/2022)

1 comment:

இராய செல்லப்பா said...

ஜோதிஜி, உங்கள் அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் தலைவிதியே, நல்லவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்துவிடுவதுதான். அவர்களை உசுப்பி விடுவதற்கு உங்களைப்போன்றவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!