Wednesday, June 24, 2020

சீனாவை ஒதுக்க முடியுமா?

சீனாவிற்கு எதிராக இருக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவை ஓரங்கட்ட முடியுமா?

(ஆங்கிலத்தில் வாசித்ததை மொழி மாற்றம் செய்துள்ளேன்)

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் கூறுவார்கள். You can like me!, you can hate me!, but you can never ignore me. இதன் தமிழாக்கம் நீங்கள் என்னை விரும்பலாம்!அல்லது வெறுக்கலாம் !ஆனால் என்னைத் தவிர்க்க இயலாது. இதுதான் சீனா. இங்கு நாம் கோபத்தினால் சீன பொருட்களை அனைத்துத் தேசங்களும் தடை செய்ய வேண்டும் என்று கூறலாம் ஆனால் இது எத்தனை தூரம் சாத்தியம் என்று இப்பொழுது பார்க்கலாம். கீழ்வரும் அட்டவணையில் சைனாவிலிருந்து முக்கியமான 15 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் சதவிகிதம் மற்றும் அதன் மதிப்பைப் பார்ப்போம்.




1) அமெரிக்கா: 16.8 சதவிகிதம் இதன் மதிப்பு 418.6 பில்லியன் டாலர்கள்.
2) ஹாங்காங்: 11.2 சதவிகிதம் இதன் மதிப்பு 279.6 பில்லியன் டாலர்கள்.
3) ஜப்பான்: 5.7 சதவிகிதம். இதன் மதிப்பு 143.2 பில்லியன் டாலர்கள்.
4) தென் கொரியா: 4.4 சதவிகிதம். இதன் மதிப்பு 111 பில்லியன் டாலர்கள்.
5) வியட்நாம்: 3.9 சதவிகிதம். இதன் மதிப்பு 98 பில்லியன் டாலர்கள்.
6) ஜெர்மனி: 3.2 சதவிகிதம். இதன் மதிப்பு 79.7 பில்லியன் டாலர்கள்.
7) இந்தியா: 3 சதவிகிதம். இதன் மதிப்பு 74.9 பில்லியன் டாலர்கள்.
8) நெதர்லாந்து: 3%. இதன் மதிப்பு 73.9 பில்லியன் டாலர்கள்.
9) பிரிட்டன்: 2.5 சதவிகிதம். இதன் மதிப்பு 62.3 பில்லியன் டாலர்கள்.
10) தைவான்: 2.2 சதவிகிதம். இதன் மதிப்பு 55.1 பில்லியன் டாலர்கள்.
11) சிங்கப்பூர்: 2.2 சதவிகிதம். இதன் மதிப்பு 55 பில்லியன் டாலர்கள்.
12) மலேசியா: 2.1 சதவிகிதம். இதன் மதிப்பு 52.5 பில்லியன் டாலர்கள்.
13) ரஷ்யா: 2 சதவிகிதம். இதன் மதிப்பு 49.5 பில்லியன் டாலர்கள்.
14) ஆஸ்திரேலியா: 1.9 சதவிகிதம். இதன் மதிப்பு 48.1 பில்லியன் டாலர்கள்.
15) மெக்சிகோ: 1.9 சதவிகிதம். இதன் மதிப்பு 46.4 பில்லியன் டாலர்கள்.

மேலுள்ள பதினைந்து தேசத்திற்கு தன்னுடைய ஏற்றுமதியில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக சைனா செய்கிறது. இப்போது சொல்லுங்கள் சீனாவை விடுத்து முக்கியமாக நாடுகள் இயங்க முடியுமா என்று? இந்தியா வருங்காலத்தில் சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியுமென்று நினைக்கின்றனர்! இதற்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்று இப்போது பார்ப்போம். ஒரு நாட்டில் முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் கருதப்படுவது பல விஷயங்கள். அதிலும் மிக முக்கியமாக கருதப்படுவது இரண்டு விஷயங்கள்.

1: உள்நாட்டுத் தரைவழி போக்குவரத்து.

2: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கப்பல் வழி போக்குவரத்து.

உற்பத்தி செய்த பொருளை எத்தனை சீக்கிரம் நாம் உரியவரிடம் எடுத்துக்கொண்டு செல்கிறோமோ அத்தனை தூரம் நமக்கு மதிப்பு கூடுகிறது. இந்தியா மற்றும் சீனாவில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ்வே மற்றும் பெரிய சிறிய துறைமுகங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இந்தியாவில் 1642.5 கிலோமீட்டர்களுக்கு எக்ஸ்பிரஸ்வே உள்ளது.
சீனாவில் 1,42500 கிலோமீட்டர்க் கான எக்ஸ்பிரஸ்வே உள்ளது.
துறைமுகங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும் 180 சிறிய துறைமுகங்களும் உள்ளது.
சீனாவில் 34 பெரிய துறைமுகங்களும் 2000 சிறிய துறைமுகங்களும் உள்ளது.

உள்நாட்டு வர்த்தகத்திற்கும், வெளிநாட்டு வர்த்தகத்திற்கும், ஒரு பொருளை நன்றாகத் தயாரிப்பது ஒரு அங்கம் என்றால் அந்தப் பொருளைச் சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது இன்னொரு அங்கம். குஜராத்திலிருந்து ஒரு பொருள் கோயம்புத்தூருக்கு வருகிறது என்றால் வருவதற்கு நான்கிலிருந்து ஏழு நாட்கள் வரை ஆகிறது. இதற்கான டீசல் செலவு ,ஓட்டுநர், மற்றும் கிளீனர் சம்பளம், மற்றும் சாலை வழி சுங்கக்கட்டணம் பீஸ், என்று எடுத்துக்கொண்டால் பொருளின் விலை எங்கேயோ சென்று விடுகிறது. இந்தப் பொருளை நாம் எக்ஸ்பிரஸ் வேயில் எடுத்து வந்தால் ஒன்று அல்லது ஒன்றரை நாள்களில் கொண்டுவரமுடியும்.

இந்தியாவின் போக்குவரத்தில் கப்பல் வழி போக்குவரத்து பெரிதாக எடுக்கப்படுவதில்லை.  நம்நாடு முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை மட்டும் இருந்தால் போதாது! முன்னேறுவதற்கான அனைத்து விஷயங்களையும் நாடு செய்ய வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பல வருடங்களாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம்! நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு மேலாகக் கூடாது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் போய்ச் சேரவேண்டும். இவ்விஷயங்களில் சீனா மிகமிக முன்னணியில் உள்ளது.

சீன வளர்ச்சிக்கு வேறு பல காரணங்களைக் கீழே கொடுக்கிறேன்.

1) லஞ்சம் கீழ்மட்டத்தில் மிகக் குறைவு.எல்லாமே மேலே இருப்பவர்களின் வட்டத்திற்குள் முடிவாகி விடுகின்றது. ஒரு நிறுவனம் அரசு அல்லது தனியார் என்பதனை கண்டு பிடிக்க முடியாது. கம்யூ கட்சியில் இருப்பவர் கட்டாயம் அங்கம் வகிப்பார். மீறவே முடியாது. நினைக்கும் நேரத்தில் அரசு அப்படியே எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.கம்யூ கட்சி முதல் வட்டத்தில் இருப்பவர்கள் சுக போக வாழ்க்கை வாழ்பவர்கள். வாரிசுகள் அனைவரும் வெளிநாட்டில் கல்வி கற்று மறுபடியும் உள்ளே வந்து விடுவார்கள். வெளிநாட்டில் தங்குபவர்கள் மிக மிகக் குறைவு.

2) ஒரு ஊரின் பிரதிநிதியாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை நியமிக்கப்படுகிறார்கள்.

3) மாஸ் ப்ரொடக்ஷன் என்று சொல்லப்படும் மிக அதிகமான உற்பத்தி செய்கிறார்கள். பொருட்களின் உற்பத்தி அதிகமாகும் பொழுது, விலை தன்னால் குறையும்.

4) வேலை செய்பவர்களுக்குப் படிப்பறிவு குறைவாக இருந்தாலும்,அனுபவத்தின் மூலம் சிறு இயந்திரத்திலிருந்து ஐபோன் வரை சிறப்பாகச் செய்கிறார்கள்.

5) அமெரிக்காவில் ஒரு மணி நேரச் சம்பளம் 8.5 டாலரிலிருந்து 9.5 டாலர் வரை. சீனாவில் 2.5 டாலரிலிருந்து 3.5 டாலர் வரை. வேலை செய்ய ஆட்களும் சரியாகக் கிடைக்கிறார்கள்.

6)மற்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் நான்கைந்து வருடம் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் செய்து ஒரு பொருளை தயாரித்து, ஆறு மாதங்களுக்கு மேல் டிரையல் செய்து பொருளை வெளியே விடுவார்கள். சைனா அப்படியல்ல. அந்தப் பொருள் சீனாவிற்கு வந்தவுடன் ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் அந்தப் பொருளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து முதலில் தயாரித்தவர் இன் விலையை விடக் குறைந்த விலைக்குச் செய்து முடிப்பார்கள் .

7) ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான அத்தனை அடிப்படை பொருட்களும் சீனாவிலேயே கிடைப்பது அவர்களுக்கு ஒரு பெரிய பாக்கியம்.

8) மிகக் குறைந்த விலையில் இடம், மற்றும் மின்சாரம், கொடுப்பார்கள். மின்சாரம் மற்றும் நீர் 24 மணி நேரமும் கிடைக்கும். ஏற்றுமதி பொருட்களுக்கு சப்சிடி அதிகமாக உண்டு.

9) அவர்கள் நாணயமான யுவானை மதிப்பை இழக்கச் செய்து டாலருக்கான மதிப்பைக் கூட்டி விடுவார்கள். ஒரு ஏற்றுமதியாளர் வெளிநாட்டிலிருந்து ஒரு டாலர் கொண்டு வந்தால் அவர்களுக்கு அதிகமான யுவான் கிடைக்கும்.

10) ஒரு தொழில் தொடங்குவதற்கு ரெட் tap ism என்பது மிகமிகக் குறைவு. அரசாங்கம் விதிக்கும் வரிகளும் குறைவுதான்.இப்படி ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆதலால் சைனா என்பது தவிர்க்க முடியாத சக்தி. இந்தியா இன்று முயன்றால் சைனாவின் நிலையை ஒரு 25 வருடங்கள் கழித்து அடையமுடியும் என்பதே நிதர்சன உண்மை. ஆனால் இங்குள்ள சூழலை நினைத்தால் பயமாக உள்ளது. நம்பிக்கையளிக்கும் பத்து விசயங்கள் நடந்தால் பயம் கொள்ள வைக்கும் 20 விசயங்கள் நடக்கின்றதே? நாம் கொள்கைகளை மாற்றி அடுத்த 25 வருடங்களில் சீனாவைப் போல முன்னேறியிருக்கும் போது அவர்கள் 50 வருட முன்னேற்றத்தை அசால்ட்டாக கடந்து போயிருப்பார்களே? (அதற்குள் சீனா உடையாமல் இருக்க வேண்டும்)

உலக நாடுகளுக்கு சைனாவைப் பிடிக்கிறதோ இல்லையோ அவர்கள் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்து விட்டார்கள் என்பதே உண்மை.


இந்தியா சீனா ஊடல்



19 comments:

Unknown said...

எல்லாவற்றிற்கும் மேலாக யாரும் கொடி பிடிக்க முடியாது .அரசு நினைத்தால்அந்த இடங்களில் அந்த தொழிற்சாலை அமைக்கப்படும் . சுற்றுசுழல் , தனி மனித உரிமை என்பதைபற்றி யாரும் கேள்வி கேட்கமுடியாது .

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் சொன்னதும் உண்மை...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை. அங்கே அரசு சொல்வதே நடக்கும். எதிர்ப்புகள் குறைவு - அப்படியே வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி விடுவார்கள்.

koilpillai said...

வளர்ந்துவிட்டார்கள் என்பது உண்மைதான், எனினும் வீழ்த்துவது முடியாததல்ல. சுதேசி இயக்கம் தோன்றியபோது இங்கிலாந்தும் வளர்ந்த நாடகத்தானே இருந்தது? நம் நாட்டு அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் நேர்மறை சிந்தனைகளையும் நேர்மையும் நாட்டுப்பற்றும் மிக்கவரானாலே எதையும் சாதிக்கலாம். ஊழல் , வரி ஏய்ப்பு போன்றவற்றை விசாரிக்க commission அமைப்பதை விட வெளி நாட்டு பொருட்கள் நம் நாட்டிற்குள் வர அனுமதிக்க commission வாங்குவதை நிறுத்தினால் போதும்.ஏற்றுமதியை பிறகு பார்க்கலாம், முதலில் உள் நாட்டு தயாரிப்புகள் உள் நாட்டிலேயே தரமாக கிடைக்க வகைசெய்யவேண்டும். வெளி நாட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகளில் கண்ணை கவரும் பொருட்கள் பெரும்பாலும் இந்திய தயாரிப்புகளே. அவற்றை பார்க்கும்போது இதே தரத்தில் நம்ம ஊரில் ஏன் கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது.

தரமான பொருட்கள் உள் ஊரிலேயே கிடைக்க வகைசெய்தால் அந்நிய பொருட்கள் எப்படி நம்நாட்டில் கோலோச்சமுடியும்?

Thulasidharan V Thillaiakathu said...

சீனாவைச் சார்ந்து இருக்கும் நாடுகள் பல உள்ளதால்தான் அதன் சக்தி பெரிதாகத் தெரிகிறது. நான் சொல்ல வந்த கருத்துகளில் வெங்கட்ஜியும் கோவும் சொல்லியிருக்கின்றனர்.

நம் ஊரில் உற்பத்தியாகும் பொருட்களில் முதல் க்ரேட் 2 ஆம் க்ரெட் எலலம் வெளிநாட்டிற்குச் சென்றுவிடுகின்றன. ஏற்றுமதி எனும் பெயரில். இங்கு நமக்குக் கிடைப்பது 3, 4 ஆம் தரம் தான். இதில் நிறைய சொல்லலாம். இதைச் சரி செய்தாலே பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இந்தத் தரம் அடிப்படைத் தேவையான கல்வியிலிருந்து தொடங்கலாம்.

கீதா

Rathnavel Natarajan said...

சீனாவை ஒதுக்க முடியுமா? - இந்தியாவின் போக்குவரத்தில் கப்பல் வழி போக்குவரத்து பெரிதாக எடுக்கப்படுவதில்லை. நம்நாடு முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை மட்டும் இருந்தால் போதாது! முன்னேறுவதற்கான அனைத்து விஷயங்களையும் நாடு செய்ய வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பல வருடங்களாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம்! நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு மேலாகக் கூடாது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் போய்ச் சேரவேண்டும். இவ்விஷயங்களில் சீனா மிகமிக முன்னணியில் உள்ளது. - திரு ஜோதிஜி அவர்களின் விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

SNR.தேவதாஸ் said...

தங்களது கட்டுரைக்கு கருத்துக் கூறியவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,அரசாங்கம் இவற்றுக்குத்தான் பொருப்பு இருப்பதாகவும் பதிவிட்டு இருக்கின்றார்கள்.
அப்ப மக்களாகிய நாம் வழக்கம் போல இலவசம்,
டாஸ்மாக்,சினிமா என இருந்துகொள்ளலாம்.
வாழ்க வளமுடன்
SNR.தேவதாஸ் கொச்சின்

கரந்தை ஜெயக்குமார் said...

நீங்கள் என்னை விரும்பலாம்!அல்லது வெறுக்கலாம் !ஆனால் என்னைத் தவிர்க்க இயலாது. இதுதான் சீனா

உண்மை

G.M Balasubramaniam said...

கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ

ஜோதிஜி said...

இரண்டாவது வரியை படித்தீர்களா?

ஜோதிஜி said...

என் வாழ்க்கையும் இப்படித்தான் ஆசிரியரே.

ஜோதிஜி said...

சாட்டையடி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

கல்வியில் கை வைத்து அதனை சரியான முறையில் கொண்டு வந்து சேர்த்தாலே போதுமானது. மீதி இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ஜோதிஜி said...

இறக்குமதியை அனுமதிப்பதால் மட்டுமே உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுகின்றது.

ஜோதிஜி said...

தியாமென் சதுக்கம் முக்கிய உதாரணம்.

ஜோதிஜி said...

உறங்காத உண்மைகள்.

Unknown said...

You didn’t give the reference from where you took the data. -rajan