Friday, September 27, 2019

மொழி அரசியல்


நெருங்கிய நண்பர்கள் என்னுடன் பேசும் போது பழைய விசயங்களை, பழைய தலைவர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் அப்போது இருந்த, வாழ்ந்த சூழலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

உண்மைதான்.

ஆனால் தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து அதிகாரத்தைப் பிடித்தவர்கள் மூலம் தமிழுக்கு என்ன மரியாதை கிடைத்துள்ளது? எப்படி வளர்த்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதனை நான் சொல்ல விரும்பவில்லை.  

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற தென் இந்திய மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் தான் மேலிருந்து கீழ் வரைக்கும் ஆட்சி புரிகின்றது.  அத்துடன் இந்தி முதல் பல மொழிகளும் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.  

எந்த அரசியல்வாதிகளும் மொழி அரசியல் செய்யவில்லை.  எங்கள் உயிருக்கு நேர் என்று கதையளக்கவில்லை.  செயலில் காட்டினார்கள். விரைவாக வளர்கின்றார்கள்.  ஹிந்தி மொழியை மத்திய அரசாங்கம் இங்கே திடீரென்று எங்கே வேண்டுமானாலும் கொண்டு வந்து திணிக்க முடியும்.

ஆனால் மற்ற மாநிலங்களில் திணித்தால் டவுசரை கழட்டி விடுவார்கள்.

இயல்பாகவே மொழியைக் கற்பது என்பது வேறு.  திணிப்பது என்பது வேறு என்ற உண்மையான கொள்கையைப் பின்பற்றுகின்றார்கள்.  ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஈத்தேன் என்று இங்கே மத்திய அரசாங்கம் நினைத்தபடியெல்லாம் செயல்படுகின்றது.  பொன்விளையும் பூமியாக இருக்கும் மாண்டியா மாவட்டத்தில் ஒரு ரிக் எந்திரத்தைக் கொண்டு போய் இறக்கிப்பார்க்கச் சொல்லுங்கள்.  அடுத்த ஒரு மணி நேரத்தில் அக்கு வேறு ஆணி வேறாக அந்த ரிக் இயந்திரத்தைப் பிரித்து காயலான் கடைக்கு அனுப்பி விடுவார்கள்.  அரசியல்வாதிகள் வாயைப் பொத்திக் கொண்டு ஒன்றுமே நடக்காதது போலவே இருப்பார்கள்.  

அணுவுலைக் கழிவை கோலார் தங்க சுரங்கப் பகுதியில் சேமிக்க எண்ணமுண்டு என்று ஒரு பேச்சு தான் கிளம்பியது.  அங்குள்ளவர்கள் கொடுத்த பரிசு கொஞ்சநஞ்சமல்ல. அன்று மாலையே திட்டம் வாபஸ் என்று அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வந்தது.  

ஆந்திராவில் தலைநகர் உருவாக்கும் (அமராவதி) திட்ட மதிப்பில் 80 000 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளார் என்று சொல்லப்படுகின்ற சந்திரபாபு நாயுடு தில்லாக சிபிஐ உள்ளே வரக்கூடாது என்று உத்தரவு போடுகின்றார்.

உச்சநீதிமன்றம் என்ன கட்டளையிட்டாலும் கர்நாடகா இன்று வரையிலும் அது காற்றில் எழுதப்பட்ட மொழி போலவே பார்க்கின்றது.  

ரயில்வே துறையில் கழிவு ஒப்பந்தங்கள் கேரளகாரர்கள் தான் எடுக்கின்றார்கள். ஆனால் கேரளா மாநிலத்திற்குள் எந்த ரயில் பெட்டியில் உள்ள கழிவுகளையும் சுத்தம் செய்ய மாட்டார்கள்.  ஒன்று தமிழ்நாடு அல்லது எல்லை தாண்டிய வட மாநிலங்களில் தான் கழுவித் துடைத்து ஆய் அனைத்தையும் சுத்தம் செய்வார்கள்.  நம்மவர்கள் காசு வாங்கிக் கொண்டு கேரளா தரும் மருத்துவ கழிவுகளையும் எங்கள் பூமியில் வந்து கொட்டி விட்டுச் செல் என்று ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கின்றார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் வளர்ந்த தமிழ் மொழி குறித்து கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சொல்வதைக் கேளுங்கள்.  நாம் எதிர்க்க வேண்டியவர்கள் நம்முடன் இருக்கும் துரோகியா? டெல்லியில் இருக்கும் எதிரியா? என்பது புரியும்?  -

*********


எழுத்தாளர் முத்துலிங்கம். கனடா.

சமீபத்தில் இக்வடோர் நாட்டுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒரு கதை கூறினார். அந்த நாட்டு அரச கரும மொழி ஸ்பானிஷ். அவர்களுடைய மக்கள் மொழியான குவெச்சா அழிந்து வருகிறது. அதை பேசுவோரும் குறைந்து விட்டார்கள். தென் அமெரிக்காவின் ஆதிவாசிகளான இன்கா இனத்தவர் பேசிய மொழி அது. அதை அழிவிலிருந்து காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இப்பொழுது மைக்ரோசொஃப்ட் நிறுவனம் குவெச்சா மொழி கம்ப்யூட்டரில் இடம் பெறும் தகுதி பெற்றுவிட்டது என அறிவித்திருக்கிறது.

ஒரு மொழியை பாவிக்காவிட்டால் அது அழிந்து போகும். தமிழ் நாட்டின் பிரபல கவி ஒருவர் தமிழை ஒன்றுமே செய்யத்தேவை இல்லை, அது தானாகவே வளரும் என்று சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் ஆங்கிலம், ஹவாய் மொழியை நசுக்கி வருவதால் ஹவாய் மொழி பேசுபவர்கள் அருகிவிட்டார்கள். 1984-ல் இருந்து அரசாங்கம் தலையிட்டு ஹவாய் மொழியை மறுபடியும் உயிர்ப்பித்து வருகிறது.

வேல்ஸ் நாட்டில் ஆங்கிலத்துக்கும் வேல்ஸ் மொழிக்கும் சம அந்தஸ்து. அப்படியிருந்தும் வேல்ஸ் மொழி பேசுபவர்கள் 20 சதவீதமாக குறைந்துவிட்டார்கள். இங்கேயும் அரசாங்கம் விழித்துக்கொண்டு மேலும் மொழி அழிவதை தடுத்து வருகிறது. அவர்கள் ஒன்றுமே செய்யாமல் விட்டால் அந்த மொழிகள் கிட்டத்தட்ட ஒழிந்தே போயிருக்கும். நூறு வருடங்களுக்கு முன்னர் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. இன்று ஏழு மில்லியன் மக்கள் அதை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். 1948 -ல் அவர்களுக்கு ஒரு நாடு கிடைத்து ஹீப்ரு மொழி புதுப்பிக்கப்பட்டது. அந்த நாடு கிடைத்திருக்காவிட்டால் அவர்கள் மொழி அழிந்துபோயிருக்கும்.

சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக்கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. அவர் சொன்னார் தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலே முழுப்படிப்பையும் படித்து முடிக்கலாம் என்று.

இது எப்படி சாத்தியமாகும்? ஸ்பெயின் நாட்டில் ஸ்பானிஷ் மொழி தெரியாமல் படிப்பை முடிக்க முடியுமா? பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு தெரியாமல் படிப்பை முடிக்கமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள். கனடாவில்கூட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண்களை அவர்களுடைய தகைமையை தீர்மானிப்பதற்கு கணக்கில் காட்டலாம். இது நம்புவதற்கு கடினமானதாகத்தான் இருக்கிறது.

கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களின் மொழிகளை வளர்த்து ஊக்குவிப்பதற்கு கனடிய அரசு உதவி செய்கிறது. இம்முறை விஜயதசமியின் போது நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஏடு துவக்கி தமிழ் கற்றுக்கொண்டார்கள். வரிசையாக நின்று சுட்டுவிரலால் அரிசியிலே எழுதினார்கள். ஆனால் ஒருவர் தன் மகளுக்கு கணினியில் தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தார். அந்தச் சிறுமி வெகுவிரைவிலேயே கணினியில் பல வார்த்தைகளை தமிழில் எழுதினாள். கம்ப்யூட்டரில் தமிழ் படிப்பது மிகச் சுலபம். மூன்று மாதத்தில் 2000 வார்த்தைகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம். வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் படிக்குமளவுக்கு தமிழ் அறிவு பெறலாம், மீதியை அவர்களாகவே கற்றுக்கொள்ளலாம். இப்படியான வசதிகள் இன்று வந்துவிட்டன.

’சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக் கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது.’

முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா? இவர்களுக்கு ஒரே கதையைத்தான் நான் பதிலாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். மணமுடித்து பல வருடம் ஆகியும் அவருக்கு பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும் அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். ‘ உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?’ மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதிக் கதை எல்லோருக்கும் தெரியும்.

புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நூறு வார்த்தைகள் தெரிந்தால் அன்றாட தேவைக்கு தமிழ் பேசி இவர்கள் வாழ்க்கையை சமாளிக்கலாம். அதனால் என்ன பெருமை? நூறு வார்த்தைகள் கற்கும் தமிழர் வேண்டுமா அல்லது தமிழில் மேல்கல்வி கற்கும் புலமைபெற்றவர் வேண்டுமா?

வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. இந்த வருடம் நடந்த ஐந்தாவது மாநாட்டில் பல நாடுகளிலிருந்து படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50 – 60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவுசெய்து கட்டணம் கட்டியாகவேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸிலே சிறுவர் சிறுமியருக்கான தமிழ் கல்வித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதை இன்று உலகத்து பல நாட்டு தமிழர்களும் பயன்படுத்துகிறார்கள். மதுரைத் திட்டம், நூலகத் திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான நூல்கள் கணினி வழியாக இலவசமாக உலகம் முழுவதும் படிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கிபீடியாவில் இன்றைய தேதியில் 22,645 கட்டுரைகள் ஏறிவிட்டன. தமிழ் விக்சனரியில் 1,15,000 வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. 

இவற்றிற்காக எத்தனையோ புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து மௌனமாக உழைக்கிறார்கள். அவர்களைப்பற்றி வெளியுலகம் அறிவதே இல்லை.

ஈழத்து பூராடனார் என்ற பெரும் தமிழ் அறிஞர் கனடாவில் வாழ்கிறார். இதுவரை 250 தமிழ் நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழில் கணினியில் 1986-ல் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் ‘பெத்தலேகம் கலம்பகம்’. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை கணினியில் உருவாக்கியதும் அவர்தான். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காவியங்களை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 48 ஆதிக்கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்து 14 புத்தகங்களாக பதிப்பித்திருக்கிறார். ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்தவரை பலருக்கு தெரியாது. இவருக்கு செவ்வியல் மாநாட்டுக்கு அழைப்பு இல்லை.

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டது. கனடிய அரசு இதை charitable organization ஆக அங்கீகரித்திருக்கிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு இலக்கிய உரைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கிறது. வருடா வருடம் இலக்கியத் தோட்டத்தின் சர்வதேச நடுவர்கள் உலகத்து சிறந்த தமிழ் படைப்பாளிகளை அடையாளம் கண்டு பரிசு கொடுத்து கௌரவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாய்ச்சல்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். தமிழ் கணிமைத்துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகை முதலீடு செய்யப்படுகிறது. ஒலியில் இருந்து தமிழ் எழுத்துருவுக்கு மாற்றும் திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். தமிழ்நாட்டு கவி சொன்னதில் பாதி உண்மை இருக்கத்தான் செய்கிறது. கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு. ‘தானும் செய்யமாட்டான், தள்ளியும் நிற்கமாட்டான்.’ தமிழ்நாடு ஒன்றுமே செய்யவேண்டாம். தள்ளி நின்றால் போதும், தமிழ் வளர்ந்துவிடும்.

வாசிக்க (கிண்டில்)






8 comments:

KILLERGEE Devakottai said...

நமது அரசியல்வாதிகள் வாய்ச்சொல்லில் வீரர்களே...

தமிழ்ப்பற்று உள்ளவன் குழந்தைகளை கட்டாயமாக தமிழ் படிக்க வைத்து, வீட்டில் தமிழில் பேசினாலே போதும் தமிழ் வளரா விட்டாலும் அழியாது இருக்கும்.

ஸ்டாலின் மனைவி நடத்துவது ஹிந்தி பள்ளி. ஸ்டாலின் மேடையில் முழங்குவது ஹிந்தி ஒழிக!

நம்மவர்கள் உறங்கினால் எழுப்பலாம் உறங்குவது போல் நடித்தால் ???

நான் அ.தி.மு.க.காரன் அல்ல!

ஜோதிஜி said...

இதில் திமுக அதிமுக மற்ற கட்சிகள் என்ன பெரிதான வேறுபாடு. யார் யாருக்கு பணம் இருக்கோ, முதலீடு செய்ய விருப்பம் இருக்கோ அத்தனை பேர்களும் கல்வி முதல் பல துறைகளில் முதலீடு செய்து லாபம் சம்பாரிக்கத்தான் விரும்புவார்கள். தினமும் ஷிப்ட் 300 ரூபாய் சம்பளம் வாங்குபவன் தன் மகனை ஆங்கிலப்பள்ளியில் தனியார் பள்ளியில் தன் தகுதிக்கு மீறிய கட்டணத்தில் சேர்த்து படித்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். இதற்கும் கட்சிகள் தான் காரணமா? அவனவன் தனிப்பட்ட ஏக்கம், பொறாமை, எதிர்பார்ப்பு, ஆசை, பேராசை, முட்டாள்தனம் எல்லாமே கலந்துள்ளது.இவற்றை கட்சி சார்ந்தவர்கள் சாராதவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மொழியில் அரசியல் பல நிலைகளில் உள்ளது. அடிப்படையாகப் பார்க்கும்போது தம்மை தக்கவைத்துக்கொள்ள அரசியல்வாதிகள் மட்டுமன்றி மொழிப்பற்று என்று (பெயருக்காக)கூறிக்கொண்டே நம்மை மடைமாற்றம் செய்யும் பலரும் காரணம்.

ஜோதிஜி said...

தமிழ் மென்பொருள் உருவாக்கும் பலரையும் நான் அறிவேன். அதே போல தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் நடந்து கொண்டு இருக்கும் உள் அரசியல் குறித்தும் ஓரளவிற்குத் தெரியும். எனக்கு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் களஞ்சியம் அதற்குப் பிறகு முழுமையாக அதில் கவனம் செலுத்தி வளர்க்கும் அளவிற்கு எவரும் முயலவில்லை. அதை விட அந்தத்துறையையும் காசு பார்க்கும் துறையாகவே நம்மவர்கள் மாற்றி விட்டனர். மன்னர் காலம் முதல் மக்கள் ஆட்சி காலம் வரைக்கும் பல துரோகங்களை துரோகிகளை தமிழ் பார்த்து விட்டது. அனைத்தும் மீறி இன்னமும் தமிழ் இன்று வரையிலும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பதே பெரிய ஆச்சரியம். நல்ல வேளை தொழில் நுட்பம் வளர்ந்த காரணத்தால் இன்று தமிழ் கணினி மொழியாக மாற்றம் பெற்றுள்ளது. இன்று எந்த பன்னாட்டு நிறுவனமும் தன் வாடிக்கையாளர் வசதிக்காக, தங்களின் வியாபார வளர்ச்சிக்காக எந்த மொழியையையும் வளர்க்கத் தயாராக இருக்கின்றார்கள். இதனால் தான் இன்று மாநில மொழிகள் தங்கள் அந்தஸ்த்தை இழக்காமல் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

Rathnavel Natarajan said...

மொழி அரசியல் - ’சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக் கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது.’ - புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாய்ச்சல்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். - அருமையான, அவசியமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

வெங்கட் நாகராஜ் said...

மொழி அரசியல் - ஆமாம் ஜோதிஜி. இதில் முழுக்க முழுக்க அரசியல் தான். தமக்கு ஆதாயம் என்றால் எதையும் செய்யும் அரசியல்வாதிகள் - நம் ஊரில் அதிக அளவில் இருக்கிறார்கள்.

நல்ல கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

தமிழகத்தில் தமிழ் மொழி பலரை அரசியல்வாதியாக தலைவராக முதல் அமைச்சராக மாற்றியுள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அத்தனை பேர்களும் பெயர் தெரியாமல் இறந்து விடுகின்றார்கள்.