Tuesday, December 13, 2016

அரசியல் (கோர) முகம் 3


இத்தனை விரிவாக அலசி ஆராயும்போது உங்களுக்குச் செம்பரம்பாக்கம் ஏரித்திறப்பு நினைவு வரவில்லை என்பது ஆச்சரியம்தான். 

Amudhavan 

சென்ற வருடம் (2015) டிசம்பரில் நடந்த "செம்பரம்பாக்கம் பேரழிவு" என்பது பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நீக்கவே முடியாத சோகமாக வாழ்க்கை முழுக்க இருக்கும். வாழ்ந்தே ஆக வேண்டிய அடித்தட்டு மக்கள் ஒரு பக்கம். அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்த நடுத்தர வர்க்கம் மறுபக்கம். இழப்பு ஐந்து லட்சம் முதல் அதிகபட்சம் பல கோடிகள். நபர்கள் பொறுத்து நிறுவனங்கள் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும் சோகக்கதை இது.

சேதாரமான அரசு சொத்துக்கள், இறந்து போனவர்கள், இழந்து போனவர்கள் என்று பட்டியலிட்டால் பல மைல் நீளம் கொண்ட சமாச்சாரத்தை எந்த எழுத்துக்களாலும் எழுதிவிட முடியாது. அமுதவன் அவர்களின் கேள்வியை விமர்சனத்தில் படித்த போது அடுத்த நொடி எனக்குப் பல நினைவுகள் வந்து போனது.

2015 வருடம் நவம்பரில் சென்னையில் சில இடங்களில் மட்டும் வெள்ளம் புகுந்தது. சென்னை முழுக்கப் பரவவில்லை. அந்தச் சமயத்தில் நானும் சென்னையில் இருந்தேன். ஜாபர்கான் பேட்டையில் ஆசான் வீட்டில் தான் தங்கியிருந்தேன். கீழ்த் தளம், முதல் தளம் மற்றும் மொட்டை மாடி என்று குறுகிய இடத்தில் அழகாக அந்த வீட்டை ஆசான் கட்டியிருந்தார்.

நான் திருப்பூரில் இருந்து கிளம்பும் போதே தொலைக்காட்சியில் வந்த செய்திகளைப் பார்த்து வீட்டினர் எச்சரித்த போதும் கூட அதனை நான் பொருட்படுத்தவில்லை. நான் எப்பேர்ப்பட்ட துயரத்தில் மாட்டிக் கொள்ளப் போகின்றேன் என்பதனை அப்போது என்னால் உணர முடியவில்லை.

நான் சென்னை சென்று சேர்ந்த போது வெயில் தெரிய மனதிற்குள் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் மறுநாள் மழை பெய்யத் தொடங்கியது. மழை நின்றபாடில்லை. இரண்டாவது நாள் மொத்த மழையுடன் அருகே இருந்த கூவம் ஆற்றின் நீர் எல்லை தாண்டி உள்ளே வரத் தொடங்கியது.

ஜாபர்கான்பேட்டை என்பது கூவம் ஆற்றை கொத்துக்கறியாக்கி உருவாக்கப்பட்ட இடம். மொத்தமாகப் பள்ளத்தில் உள்ள பகுதி ஜாபர்கான் பேட்டை. இரண்டு பக்கமும் மேடு. நடுவே குழி என்பது உள்ள இந்தப் பகுதியின் மொத்த ஆபத்தையும் அப்போது தான் என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. கூவம் ஆற்றின் தண்ணீரும் நேரம் செல்லச் செல்ல அதிகமாக வீட்டுப்பகுதிகளுக்குள் வரத் தொடங்கியது.

ஆசான் வீடு சாலையில் இருந்து ஐந்தடிகள் உயரமாக உள்ள வீடு. இரவுக்குள் வீட்டின் பாதி அளவு உள்ளே நீர் ஏறத் தொடங்கியது. பகல் நேரத்திலே கீழே இருந்த முக்கியமான பொருட்களை மாடிப் பகுதிக்கு எடுத்து வந்த போதிலும் கூட அனைத்துப் பொருட்களையும் எங்களால் மேலே கொண்டு வர முடியவில்லை.

பெரிய அளவுக்குப் பிரச்சனை உருவாகப் போகின்றது என்பதனை புரிந்து கொண்டு அமைதியாக மொட்டை மாடியில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த தடுப்புச் சுவர்களை உடைத்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு ஆற்றின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

மின்சாரம் இல்லாத காரணத்தால் அலைபேசியை நிறுத்தி வைத்து விட்டேன். வீட்டில் அழைத்துச் சொல்லிவிட்டேன். மாலையில் எடுத்த சாட்சிப் புகைப்படத்துடன் தூங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்த போது சந்து முழுக்க ஏழு அடி உயரத்துக்குத் தண்ணீர். ஒவ்வொரு வீட்டின் கீழ்ப்பகுதி முழுக்க முழுகியிருந்தது.

ஆசான் வீட்டின் கீழ்ப்பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை. கையில் இருந்த ரொட்டி, அரிசியை வைத்துக் கொண்டு அடுத்த இரண்டு நாள் சமாளித்தோம். இயற்கை உபாதைகளையும் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் விலை மதிக்க முடியாததாக இருந்தது. பல் விளக்கக் கழிப்பறைக்கு வைத்திருந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை.

மொத்த பொருட்களை மேலே கொண்டு வந்த காரணத்தால் எந்தப் பொருள் எங்கே இருக்கின்றது? என்பதனைக் கூடக் கண்டு கொள்ள முடியாமல் மானத்தை மறைக்க ஒரு துணி என்பதாகத்தான் வாழவேண்டியிருந்தது. ஆனால் அரசு சார்ந்த அதிகாரிகளோ, வார்டு உறுப்பினர் என்று ஒரு நபர் கூட அந்தப் பகுதியில் எட்டிப் பார்க்கவே இல்லை. பிரச்சனை அதிகமாக ரப்பர் டயர் படகு மூலம் குறிப்பிட்ட வீடுகளில் உள்ள பெரியவர்களை அழைத்துச் சென்றார்கள்.

தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல், அடிப்படைத் தேவைகளுக்கு அவஸ்தைப் பட்டுக் கழிந்த நான்கு நாட்களில் நான் உணர்ந்த ஒன்று சென்னையில் நிர்வாகம் என்பது ஒன்று இல்லவே இல்லை என்பதே.

தமிழ்நாட்டின் தலைநகரம். அதி முக்கியமான சென்னை நகரத்திலே அரசு நிர்வாகம் என்பதே இல்லை என்ற போது சூழ்நிலையின் விபரீதத்தை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது, சென்னையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நடந்த சேதங்களைப் போர்க்கால நடவடிக்கை எடுக்க முடியாத அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பது சென்னையில் உள்ள 1.5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாதிப்பு குறித்து ஏராளமான செய்திகள், கவலைகள், காட்சிகள், சேதாரங்கள், கண்ணீர், இழப்புகள் என்று திகட்ட திகட்ட ஒவ்வொரு செய்தி ஊடகமும் மக்களிடம் கொண்டு வந்து சேர்ந்த போதிலும் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் தெளிவான பார்வையோடு இருந்தார்கள். யாரும் ஜெயலலிதாவைக் கேள்வி கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், காட்சி ஊடகங்கள் என்று யாருமே போயஸ் கார்டன் பக்கம் சென்று எந்தக் கேள்வியையும் எழுப்பத் தயாராக இல்லை.

வெள்ள சேதாரங்களைப் பார்வையிட பிரதமர் மோடி மாலை 4.15 மணிக்கு வருகின்றார் என்ற செய்தி வந்ததும் ஜெயலலிதா 12 மணிக்குச் சேதாரங்களைப் பார்வையிட ஹெலிகாப்டர் வழியாகச் சென்றார். ஒரு வேளை மோடி வராமல் இருந்திருந்தால் இவர் சென்று இருக்க மாட்டார்.

ஒரு ஆறுதல் அறிக்கை இல்லை. செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இல்லை. அதிகாரிகளின் கூட்டம் இல்லை. பிற துறைகளுடன் கூடிய ஒருங்கிணைப்பு என்பதை உருவாக்கவும் இல்லை. இதை விட மற்றொரு கோரமான கொடுமையான விசயம் என்னவென்றால் மாநகராட்சி நிர்வாகத்தை முடங்க வைத்த பெருமை ஜெ. வையே சாரும். மேயர் சைதை துரைசாமியை எவருடனும் பேசக்கூடாது என்று முடக்கிப் போட்ட சமாச்சாரம். அவரை ஊடகங்கள் துரத்திக் கொண்டே இருக்க அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் தான் கவனமாக இருந்தார்கள். மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் முக்கியப் பிரபலங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு மாதிரியாகவும் மற்ற இடங்களும் ஒரு மாதிரியாகவும் இருந்தது. மாநகராட்சி செயல்பாடுகள் விலைபோகத் தொடங்கியது. பணம் இருப்பவர்கள் மாநகராட்சி சேவையைப் பயன்படுத்த தொடங்கினர்.

கடைசி வரைக்கும் அரசாங்கம் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது என்பதைவிட. தனிப்பட்ட முறையில் செயல்பட நினைத்தவர்களையும் முடங்கிப் போகுமளவிற்கு கோர அரக்கர்களைப் போல ஒவ்வொரு அதிமுகவினரும் செயல்பட்டனர் என்பது வரலாற்றுப் பதிவாக இன்றும் பலரின் மனதில் உள்ளது.  ஆனால் இத்தனை கொடுமை மிகுந்த அரசு கொடுத்த நஷ்டஈடு 5000 ரூபாயை வாங்க முண்டியடித்துக் கொண்டு சென்ற மக்கள் அத்தனை பேர்களும் ஜெ. வை எப்போது போல மன்னித்து விட்டார்கள் என்பது தான் மொத்தத்திலும் தமிழகத்தின் எதார்த்த நிலைமை.

இப்போது நான் பேசப் போவது நடந்து முடிந்த பேரழிவு குறித்தல்ல. ஒரு நிர்வாகி, அதுவும் முதன்மை நிர்வாகி எப்படிச் செயலாற்ற வேண்டும்? நெருக்கடியான சமயத்தில் எப்படிச் செயலாற்றி இருக்க வேண்டும்? ஏன் செயல்படவில்லை? அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?

இவற்றைப் பற்றி நாம் பேச வேண்டுமென்றால் முதலில் ஜெ. குறித்த சில விசயங்களைப் பற்றி மீண்டும் கழுகுப் பார்வை பார்க்க வேண்டும். அவரின் உளவியல் குறித்து நாம் பேச வேண்டும்.

அதன் பிறகு தான் அவர் உண்மையிலேயே முதலமைச்சர் பதவிக்குத் தகுதியான நபரா? இல்லை ஊடகங்களைக் கையில் வைத்துக் கொண்டு அல்லது மிரட்டிப் பணிய வைத்து தன் போலி பிம்பத்தை மக்கள் மனதில் நம்ப வைத்தாரா? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஒரு மாநிலத்தின் முதன்மை நிர்வாகி என்பதற்கு அடையாளம் என்ன? என்பதனை ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்த்து விடுவோம்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாத வட கிழக்கு மாநிலங்களே இல்லை எனலாம். அஸ்ஸாம் முதல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பின்னாலும் ஒரு சோகம் உண்டு. அது வருடந்தோறும் அனுபவித்தே ஆக வேண்டிய சோகம். ஒரு முறை ஒரிஸ்ஸாவில் மிகப் பெரிய இயற்கை பேரிடர் உருவாகப் போகின்றது என்ற தகவலின் அடிப்படையில் (மட்டுமே) முதல்வர் பிஜு பட்நாயக் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த சில லட்ச மக்களை அப்படியே (கால்நடைகளும் சேர்த்து) வேறு பகுதிக்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்றார். ஆனால் கிடைத்த தகவலின்படி பேரிடர் ஒன்றும் தாக்கிவிடவில்லை. ஆனால் தெளிவான திட்டமிடுதல். அழகான முன்னேற்பாடு. அந்தச் சமயம் ஐ.நா. சபை இதற்கு அங்கீகாரம் கொடுத்து பாராட்டியதைப் பத்திரிக்கையில் படித்துப் பலரும் தெரிந்து இருக்கக்கூடும்.

ஆனால் தமிழ்நாட்டில்?

நாம் அவசரப்பட்டுச் செம்பரம்பாக்கம் பேரழிவு சமயத்தில் அப்போது நடந்து இருக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்துப் பேசப் போவதில்லை? நடந்து முடிந்தது மிகப் பெரிய கோரம் என்று தெரிய வந்தும் கூட இனிமேலாவது அரசு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்? என்பது கூடச் செய்யாமல் ஒரு மாநில நிர்வாகமே முடங்கிப் போனது.

ஜெ. ஆட்சிக்கு வந்தது முதல் மாநிலத்திற்குத் தேவைப்படுகின்ற தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமே நடக்கவில்லை என்று விபரம் தெரிந்த அத்தனை பேர்களுக்கும் தெரியும். ஆனால் எவரும் வாய் திறக்க விரும்பவில்லை. காரணம் ஜெ. விற்கு ஒருவர் ஆகாது என்றால் என்ன செய்வார்? எந்த அளவுக்குக் கீழே இறங்கிச் செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த காரணத்தால் நமக்கேன் வம்பு? என்கிற ரீதியில் தான் எல்லாத்தரப்பும் அமைதி காக்கத் தொடங்கினார்கள்.

ஜெ. ஆட்சியில் அவரின் நிர்வாகத்திறமை உருவாக்கிய சிறப்புகளில் ஒன்று. ஒருவரின் பலவீனம் என்ன? அவரின் விலை என்ன? இல்லாவிட்டால் போட்டுத் தாக்கு. முதல் தாக்குச் சட்டம் வழியே. இரண்டாவது தாக உயிர் பயம். இதில் இவருக்குச் சவால் விடுத்த ஒரே நபர் சுப்ரமணியசுவாமி மட்டுமே. அவர் மட்டும் கடைசி வரைக்கும் தப்பிப் பிழைத்தார்.

இவையெல்லாம் ஜெ. தன் பதவியைக் கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொள்ள முக்கியக் காரணமாக இருந்தது.  சட்டங்கள் என்பது வெறும் காகிதமாக மாறிப் போனது. மக்களுக்கு இலவசம்.  தேர்தல் சமயத்தில் பணம். மதுக்கடைகள் மூலம் ஆண்களுக்கு சொர்க்கம்.  இவையெல்லாம் நம் முன்னால் முதல்வரின் திறமைகள்?

ஒரு பிரதமர் அல்லது ஒரு மாநில முதல்வர் அதிகாலையில் உளவுத்துறை தலைவர்களைச் சந்திப்பது தொடங்கிச் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் சார்ந்து விவாதிப்பது முதல் காலை அலுவலகம் செல்வதற்குள் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

தனது பதவிக்காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற நிலைமைக்கு தன் உடல் நலனைப் பேணிய பெருமையும் இவருக்குண்டு.  ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் போல இரண்டு இடங்களில் ஆட்சி நடத்திய பெருமையும் ஜெ. வுக்கு உண்டு.இவரின் நிர்வாக விதிகள் மற்ற முதல் அமைச்சர்களுக்கும் முன் மாதிரியானது.

இவரின் நிர்வாக விதிகள் மற்ற முதல் அமைச்சர்களுக்கும் முன் மாதிரியானது.

முதல் வட்டம், இரண்டாவது வட்டம், மூன்றாவது வட்டம் என்று வட்டம் வட்டமாக அதிகாரவர்க்கத்தைப் பிரித்து வைத்திருந்தார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே சந்திக்க முடியும்? அதுவும் எப்போது சந்திப்பார் என்று யாருக்குமே தெரியாது? என்ன கேட்பார் என்றும் தெரியாது? எது குறித்துப் பேசப் போகின்றோம் என்று தெரியாமல் போயஸ் தோட்டத்திற்குச் சென்று காத்திருந்து சந்திக்காமல் வந்தவர்கள் பல பேர்கள்.

கட்சி என்ற பெயரில் கொள்ளைக்கூட்டத்தை இவர் தான் உருவாக்கினார். வளர்த்தார். ஆதரித்தார். கணக்கு வழக்குகளைக் கண் கொத்திப் பாம்பாய் கவனித்தார். வசூலிக்கும் அதிகாரத்தை அமைச்சர்களுக்குக் கொடுத்த பின்பு அதனையும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வைத்தார்.

நடைமுறை திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் என்பது பற்றி அவர் கவலைப்பட்டதும் இல்லை. அப்போதைக்கு என்ன தேவை? வலி நிவாரணி மாத்திரை போலத்தான் நிர்வாகத்தை கவனித்தார். முடியாவிட்டால் இருக்கவே இருக்கு காவல் துறை.  ஏவல்துறையாக மாற்றி ஏவி விட்டால் பிரச்சனை அப்போதைக்கு முடிவுக்கு வந்து விடும். அப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் நீர்த்துப் போக வைத்தார்.

ஜெ வின் நிர்வாகத்தில் எப்போதும் எல்லாவற்றிலும் உடனடி அறுவடை முக்கியம். விலைவாசி உயர்வு பற்றி மக்கள் கவலைப்பட்டார்களே இல்லையோ இவர் 40 சதவிகிதம் என்று கவலைப்பட்டு ஏற்றினார். அதுவும் முன்பணம். அதைப் பற்றி பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. அவர் விருப்பத்தை நிறைவேற்றத் தெரிந்தவர்கள் அதிகாரியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற புதிய கோட்பாட்டின் காரணமாக அரசுத் துறையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சூறையாடப்பட்டது. பங்கு பிரிக்கப்பட்ட பங்களாளிகள் பலரும் அமைச்சர் என்ற பெயரில் வலம் வந்தனர்.

எம்.ஜி.ஆர் கூடச் சாராய அனுமதி கொடுத்து அதன் மூலம் வந்த பணத்தைத் தன் வீட்டில் எப்படி வைத்திருந்தார் போன்ற பல கதைகளை நாம் கேட்டிருப்போம். அதனை நல்லவிதங்களுக்கும் பயன்படுத்தினார். ஆனால் ஊழலை அடிமட்டம் வரைக்கும் பரவ விடவில்லை. பயத்தை உருவாக்கி வைத்திருந்தார். எவரும் படபடப்புடன் அவரிடம் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் அவரைச் சந்திக்க வாய்ப்பு உருவாக்கி வைத்திருந்தார்.

அவர் அமைச்சரவையில் இருந்த எவரும் யோக்கியமானவர்கள் அல்ல. ஆனால் அமைச்சர்கள் என்பவர்கள் அவர்கள் பணியைச் செய்ய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். கலைஞரும் அப்படித்தான் நிர்வாகத்தை நடத்தினார்.

ஜெ. கடைசி வரையிலும் மக்களை தீண்டத்தகாதவர்கள் போலக் கருதினார். இன்று சசிகலா அவர் தினமும் விரும்பிக்குளிக்கும் நறுமணம் கலந்த பன்னீர் மூலம் பிணத்தை குளிப்பாட்டி அலங்கரித்தார் என்று ஊடகங்கள் எழுதுகின்றதே? இந்த வரிகள் உண்மையோ பொய்யோ? ஆனால் நிச்சயம் அவர் இப்படிப்பட்ட வாழ்க்கை தான் வாழ்ந்திருக்க முடியும்?

எம்.ஜி.ஆரும் சரி கலைஞரும் சரி இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.

பசி, வறுமை, ஏழ்மை போன்ற வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் உள்வாங்கி உணர்ந்து வாழ்ந்தவர்கள். இவர்கள் செய்த தவறுகள் எதுவாக இருந்தாலும் அதில் தர்மநியாயங்கள் சிறிதளவாவது இருந்தன.

என்ன சொல்வாரோ? எப்படி அவரிடம் கொண்டு செல்வது? யார் சொல்வது? நாம் அவசரப்பட்டுச் செய்தால் நம் பதவி போய்விடுமோ? என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஒரு பக்கம். நாம் இதனைப் பேசலாமா? பேசக்கூடாதா? நிமிர்ந்து பார்த்தால் கூட தன் பதவி போய்விடுமோ? என்று தெரியாமல் திகைத்த அமைச்சர் கூட்டம் மறுபக்கம். இதன் காரணமாகத்தான் கிடைத்தவரைக்கும் லாபம் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் என இரண்டு பேர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு சுருட்டத் தொடங்கினார்கள். இது தான் அவர் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் அப்போல்லோவில் மூளைச் சாவில் கிடத்தப்பட்டு கிடந்த வாழ்க்கை வரைக்கும் இருந்தது.

அவர் பெண் என்ற போதிலும் ஆண்கள் உலகமான அரசியல் உலகத்தில் போராடித்தான் தான் அதிமுக வின் தலைமைப் பதவிக்கு வந்தார் என்று ஒவ்வொருவரும் இன்று வரையிலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அது தான் உண்மை என்று நம்புகின்றார்கள். அது உண்மையா? எப்படிப்பட்ட போராட்டம்? அதன் மூலம் அவர் என்ன கற்றுக் கொண்டார் ?

எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன் புகழுக்கு தான் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு யாரோ ஒருவர் பங்கம் விளைவிக்கப் போகின்றார் என்றால் அதனை என்ன விலை கொடுத்தாலும் தடுத்து விடுவார். எந்த நிலைக்கு வேண்டுமானாலும் இறங்கி நின்று காரியம் சாதித்து விடுவார். ஆனால் இது அத்தனையும் மேல்மட்ட நிலையில் நடக்கக்கூடியது. ஜெ. அரசியலுக்கு வந்தது கூட ஒரு மிரட்டல் மூலம் தான் என்பதனை எத்தனைப் பேர்கள் அறிந்து இருப்பார்கள்?

1982 ஆம் ஆண்டு.

1948 ஆண்டு பிறந்த ஜெ. வின் வயது 34. திரைப்பட உலகத்தில் நடிகையின் வாழ்க்கை என்பது மின் மினி பூச்சி போன்றது தானே. பொதுவாகச் சொல்லப்படும் அவர் நடித்த போதே வசதியாக இருந்தார் என்பது உண்மையல்ல. அவர் 1980 ஆண்டுக் காலகட்டத்தில் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்ட காலம். தனியாக நடனப்பயிற்சி வகுப்பு நடத்த அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடிகர் சோபன்பாபுவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது இது குறித்து ஒரு வாரப்பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த போது தான் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதப் போகின்றேன் என்ற வெடிகுண்டு ஒன்றை வீசினார்.

அப்புறமென்ன?

1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஜெ வை அதிமுக வில் உறுப்பினராகச் சேர்த்தார். அடுத்த ஆண்டே அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளர். 1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர். அதே ஆண்டுச் சத்துணவு திட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் என்ற அரசுப்பதவி. முதல் 24 மாதங்களில் ஜெ. எவரும் தொட முடியாத உச்சத்தைத் தொட வைத்தவர் எம்.ஜி.ஆர். நிச்சயம் அடிப்படையான பணம் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும்.

ஒருவருக்கும் அதிர்ஷ்டம் தனது கதவுகளைத் திறக்கப் போகின்றது என்றால் மற்றொருவருக்கு வீழ்ச்சி தொடங்கப் போகின்றது என்று அர்த்தம். இது இயற்கை விதி.

1984 ஆம் எம்.ஜி.ஆர் உடம்பு பாதிக்கப்பட்டுக் காட்சிகள் மாறத் தொடங்கியது. இருந்தபோதிலும் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே ஆண்டிப் பட்டியில் எம்.ஜி.ஆர் வெல்ல ஜெ. மனதில் நினைத்து வைத்திருந்த எதுவும் நடந்தபாடில்லை. ஒரு பக்கம் இவருக்கு ஆர்.எம்.வீரப்பன் உன்னை வளர விட்டு விடுவேனா? என்று முட்டுக்கட்டைப் போட மறுபக்கம் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு போன்றோர் ஆதரவுக்கரம் நீட்டினாலும் அவர் நினைத்த கனவு பூர்த்தியாகவில்லை. காரணம் 1985 பிப்ரவரி 10ந் தேதி முதல்வர் பணியை மீண்டும் எம்..ஜி.ஆர். ஏற்றுக் கொள்கின்றார். மேலே ராஜீவ் காந்தி.

அப்போது எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்த ராஜிவ் காந்தியைச் சந்திக்க ஜெ. சென்றார். அப்போது புலனாய்வு பத்திரிக்கைகள் "பலவிதமாக" எழுதியது.

இனி பூதத்தைப் பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று கட்சியை விட்டு ஜெ. வை நீக்கி எவரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எம்.ஜி.ஆர் வாய்மொழியாக உத்திரவு இட்ட போதிலும் ஜெ. வின் செல்வாக்கு, சாமர்த்தியம் சகல இடங்களிலும் வியாபித்து இருக்க நிலைமை கைமீறிவிட்டது. 1987 ஆம் எம்.ஜி.ஆர் இயற்கை எய்த அதற்குப் பிறகு நடந்த சம்பங்கள் ஒவ்வொன்றும் ஜெ. விறகு சாதகமாக மாறத் தொடங்கியது.

கட்சியின் உள்ளே நுழைந்த முதல் ஐந்து வருடங்களுக்குள் முதல் அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். மக்கள் செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆரை நீயா? நானா? என்று போட்டு போராடிப்பார்த்தவர். தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆரின் தாக்கத்தைப் புரிந்த அமரர் ராஜீவ் காந்தி ஜெ. வின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத போதும் அவர் இறந்து இவரின் முதல் அமைச்சர் கனவை நனவாக்கிவிட்டுச் சென்றார்.

ஜெ. மிகக் குறுகிய காலத்திற்குள் உழைப்பின்றி தான் நினைத்ததை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடக்கம் முதலே இருந்தார்.

அவருக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லை என்பது வெறுமனே பம்மாத்து. எம்.ஜி.ஆர் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அரசு பதவிகள் மூலம் எதையும் சாதிக்கவில்லை என்பதோடு எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. அவர் நோக்கமெல்லாம் முதல் அமைச்சர் என்ற கனவு நிலையிலேயே நகர்ந்து வந்தார். பதவி கைக்கு வந்ததும் எம்.ஜி.ஆரை மறைத்து இன்று அம்மாவாகி காலத்தோடு கரைந்து போய்விட்டார்.

எனக்கேது வாரிசு? என்று உருக்கமாக கேட்டவருக்கு ஏன் இத்தனை கோடி? என்று எவரும் கேட்கமுடியாத என்ற தைரியத்தில்  தேடித்தேடி சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் இன்று யார் யாரோ பங்கு பிரிக்கப்போகும் சூழ்நிலையில் உள்ளது.

முதல் முறை பதவிக்கு வருவதற்கு முன்பு நடந்த பல காட்சிகள் அனைத்தும் அவரே உருவாக்கியது. சட்டமன்றத்தில் தலைவிரி கோலமாக என்னைப் பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்தில் "திமுக அமைச்சர்கள் மானபங்கம் செய்ய முற்பட்டார்கள்" என்றுப் பத்திரிக்கையில் முழுப்பக்க அளவிற்கு வந்தாரே? நினைவில் இருக்கின்றதா?

முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் செய்ய வாசித்துக் கொண்டிருந்த போது போய்ப் பிடுங்கினால் என்ன நடக்கும்? திமுகவில் இருப்பவர்களைப் பற்றிச் சாதாரணமாகவே சொல்லத் தேவையில்லை? அன்று சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களும் திருநாவுக்கரசரும் இல்லாவிட்டால் அவர் உடம்பு கந்தலாகிப் போயிருக்கும்.

இது அவருக்கு மக்கள் மனதில் அனுதாபத்தை உருவாகக் காரணமாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள திமுக எதிர்ப்பாளர்கள் நேரிடையாக மறைமுகமாக இவருக்கு உதவத் தொடங்கினார்கள். அப்போது முதல் "தான் செய்வது தான் சரி?" என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. அது தவறான வழி என்றாலும் கூட.

மற்ற துறைகளை விட அரசியலில் இலக்கை அடைய வேண்டும் என்றால் இழப்புகள் குறித்துக் கவலையே படக்கூடாது. போர் நடக்கும் போது மீறப்படும் விதிமீறல்கள் அனைத்தும் ராஜதந்திரம் என்று போற்றப்படும். வியாபாரத்தில் செய்யப்படும் பகல் கொள்ளை அனைத்தும் வெற்றிக்கதைக்கான அஸ்திவாரமாக மாற்றப்படும். வளர்த்தவர்களை அழித்து விடு. வளரும் போதும் எதையும் எவரையும் கண்டு கொள்ளாதே.. ஜெ வும் அதே தான் செய்தார். கலைஞரும் அதே தான் செய்தார்.

தவறில்லை.
இன்றைய சூழ்நிலையில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவிகிதம்

ஆனால் மக்கள் செல்வாக்கு ஒன்று வேண்டுமே? மறுபடியும் அவர்கள் முன்னால் போய் நிற்க வேண்டுமே? போடப் போகும் ஓட்டு வாயிலாக காறித்துப்பி விடுவார்களே?

கடைசி வரைக்கும் இருவருமே அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது தன் புகழுரைகளை கவனிக்க அதிகம் நேரம் செலவளித்தார். டெல்லியில் மகளுக்காக மொத்த தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்க விட்டார். இலங்கைப் பிரச்சனையில் வாழ்நாள் முழுக்க தான் சம்பாரித்த புகழை இழந்தார். வாழும் காலம் வரைக்கும் டெல்லி தயவில் தான் வாழ்ந்தாக வேண்டும் சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இவரோ புகழ் என்பதே எனக்கு மட்டுமே? என்பதாக ஒவ்வொன்றையும் மாற்றினார். சந்திக்கும் ஒவ்வொருவரையும் விலைப்பட்டியலாக மாற்றினார். குறுக்கு வழிகள் மட்டுமே உயர்வைத்தரும் என்று தான் நம்பியதோடு தமிழக மக்களையும் நம்ப வைத்தார்.  அறம் என்ற வார்த்தையை அகராதியில் இல்லாத அளவிற்கு அனைத்து வேலைகளையும் செய்தார். குற்றவுணர்ச்சியே இல்லாமல் சுக வாழ்க்கை வாழ்ந்தார்.

இவருக்கு இறந்த பின் தூற்றுகின்றார்கள். அவருக்கு வாழும் போதே செய்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள மற்ற வட மாநிலங்களை ஒப்பிட்டு நம் தமிழகம் வளர்ந்துள்ளது தானே என்று சிலாகித்துப் பேசுகின்றார்கள்.  ஆனால் இன்னமும் வளர்ந்து இருக்க வேண்டிய தமிழகம் 25 ஆண்டுகள் பின்னால் போய் நிற்கின்றது.

வரலாறு முக்கியம் அமைச்சரே (மின் நூல்)

ஜெ ஜெ  சில குறிப்புகள் 

அரசியல் (கோர ) முகம் 1 

அரசியல் (கோர) முகம் 2

8 comments:

Amudhavan said...

உங்களின் எழுத்து நடை பிரமாதம். எத்தனைப் பெரிய கட்டுரையாக இருந்தபோதும் சலிக்காமல் படிப்பதற்கு பிரத்யேக எழுத்து நடை ஒன்று தேவை. அது தங்களிடம் இருக்கிறது. அதற்குப் பாராட்டுக்கள்........ கட்டுரைப் பற்றிய கருத்தை அடுத்த பதிவையும் படித்துவிட்டு எழுதுகிறேன்.

நிகழ்காலத்தில்... said...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெ அரசின் ஒரு நிர்வாகச் சீர்கேடு.. அங்கு ஆரம்பித்து முழுமையாகவே அலசி விட்டீர்கள். அதைவிட முக்கியம் அமுதவனின் பாராட்டுக்கு மகிழ்கிறேன்

வருண் said...

இறந்த பிறகு ஒருவரை புகழ்ந்துதான் எழுதணும், அவர்கள் செய்த எல்லா கெட்ட காரியங்களையும் மறந்துவிடணும், இறந்தவர் ஆத்மா சாந்தி அடையணும்னு நம்மளும் கடவுளை வேண்டிக்கணும் என்கிற வியாக்யாணம் சரியென்றால்..ஹிட்லரை வணங்கணும், சைட்ல் ரேப்பிஸ்ட்டை வணங்கணும்..

இறந்தவரை நிச்சயம் விமர்சிக்கலாம். அவர் ஆத்மா சாந்தியடையணும் என்றால் அது செத்தவருடைய தனிப்பட்ட பிரச்னை எனபது ஏன் இந்த மண்டுகளுக்கு புரியவில்லை??. "இன்னொருவர் ஆன்மா சாந்தியடைய நீ என்னத்தை கிழிக்க முடியும்?" என்பது புரியாத புதிர். அவரவர் ஆன்மா சாந்தியடைய அவரவர்தான் பொறுப்பு. நீ இன்னொருவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுவது சும்மா ஏமாற்று வேலை. அடிமுட்டாள்த்தனம்.

-----------------

எம் ஜி ஆர் பிணத்தின் முன்னால் உக்காந்து இவர் அழுது ஒப்பாரி வைத்தது எதற்காக? எம் ஜி ஆர் மேல் உள்ள அன்பால்? ஹா ஹா. வடிகட்டிய சுய நலம்.

ராஜிவ் இறந்த பிறகு இன்றைய ஈழத்தாய், அதை எப்படி பயன்படுத்தினார் என்பது ஈழமக்களுக்கு எப்படி மறக்கிறது?? அவ்வளவு ஞாபக மறதியா இவர்களுக்கு?

ஒவ்வொரு பகடைக்காயையும் இவர் சுயநலத்திற்காக் பயன்படுத்தினார். சங்கர் ராமன் கொலைக்கேஸை ஒண்ணுமில்லாமல் பண்ணியதில் இவருக்கும், சோ வுக்கும் பங்குண்டு..

டாஸ்மாக் பற்றை சொல்லவே வேண்டாம்.

எல்லா வகையிலும் தமிழர்களை சீரழிக்க பிச்சையெடுக்க வழிவகுத்த சாதாரண பார்ப்பனர்கள்தானே இவர்கள்??? இந்த நாடு நாசமாகப் போனது பார்ப்பனர்களின் சுயநல சிந்தனைகளால்தான் என்பதற்கு ஜெயலலிதா மற்றும் சோ ராமசாமி நல்ல உதாரணம். இவர்கள் திராவிட அரசியல்வாதிகளை விட எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல. அப்படியிருக்கும்போது எதற்கு இந்தனை ஒப்பாரி? இவர் ஒரு சாதாரண அரசியல்வாதிதான். தமிழர்களை "அம்மா" "அம்மா" னு பிச்சை எடுக்க வைத்தாரே ஒழிய சுயமரியாதையுடன் வாழ எவ்விதத்திலும் உதவ வில்லை..

சோ, ஜெயா, டோண்டு ராகவன் போன்றவர் இழப்பால் பார்ப்பனர்கள் கண்ணீர் விடுவதில் அர்த்தமுள்ளது. பார்ப்பனர்கள அனைவருமே சுயநலவாத சிந்ந்தனைகளைத் தவிர வேறெதுவுமே அறியாதவர்வர்கள் என்பதால் அதில் தவறில்லை. இந்த திராவிட காட்டுமிராண்டிகள் ஏன் ஒப்பாரி வைக்கிறார்கள்? இவர்கள் அடி முட்டாள்கள் என்பதால்தானே?

'பரிவை' சே.குமார் said...

அரசியல் கோர முகம் நிஜத்தை... நிதர்சனத்தை... பட்டியலிட்டு வாசிக்கும் போது ஒரு சர்வாதிகாரியாய் ஜெ இருந்தார் என்பதை தெள்ளத் தெளிவாய் அறியத் தருகிறது...

மிக நீண்ட கட்டுரை... ஆனாலும் வாசிக்கத் தூண்டும் எழுத்து அண்ணா...

தெரியாத விபரங்களை அறியத் தரும் பகிர்வு... அருமை...

Unknown said...

இவரை பால்கனிபாவை என்பார்கள் ,அது நூற்றுக்கு நூறு உண்மை !
இங்கிலாந்து ராணியைக் கூட சந்தித்து விடலாம்,ஆனால்,இவரை யாராலும் சந்திக்க முடியாது ,ஆனால் பெயர் மட்டும் மக்களின் முதலவர் :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரசியல்வாதிக்கு ஒரு பாடத்தை உணர்த்தும் பதிவு.

Rathnavel Natarajan said...

Great.

vairamani said...

needed history ppl to know