Tuesday, January 27, 2015

எதிர்கால விருப்பம்

வணக்கம், 

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயத்த ஆடை சமூகத்தின் சிக்கல்களுக்கு விடை காண விழையும் தேடல் தாகத்துடன் இருக்கும்  தனிமனிதர்களின் பிரதிநிதியாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன.  இந்த சமூகத்தில்  பொருளாதார அடிப்படயிலாலான காரண காரிய உறவுகள் நிரந்தர வெற்றிக்கு வழிகோலுவதில்லை.

தேவைப்பட்ட மனிதர்களுக்கு பயனற்றவர்களாகி  வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரண வலியினை உணர முடிகிறது. இங்கு அனைத்து சிக்கல்களுக்கும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்பட்டு புதிய பிரட்சினைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துகொண்டிருக்கின்றன. இந்தத் தற்காலிக நிவாரணம் எச்சரிக்கை மணியை அனைத்து வைப்பது போலத்தான். 

இங்கு பெரும்பாலான முதலாளிகளும்  உழைப்பாளிகளும்  முடிவுகள் எடுப்பதில் கடந்த கால அனுபவ அறிவை மட்டும் நம்பிக்கொண்டு புதியனவற்றை ஏற்றுக்கொள்ளாத சமூகமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றது. பழக்கத்தில் இருக்கக் கூடாதவற்றைப் பின்பற்றுவதால் தொழில் ரீதியான விபத்துகள் இழப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன. உற்பத்தி முறைகள் மரபு மாரதவைகளாக இன்னமும் இருக்கின்றன. இதனால் தொழில் மட்டும் வளர்ச்சி அடைந்திருக்கிறது தொழிற்சாலைகள் நீண்ட காலம் வாழ்வது இல்லை. 

சிறிய வேர்களை வைத்துகொண்டு பெரிய மரங்கள் வளர முடியாது. வலுவில்லாத வேர்கள் பெரிய மரங்களைச் சுமக்க முடிவதில்லை. நபர்களைச் சார்ந்து நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை. நபர்களைச்  சார்ந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி பாகுபாடின்றி பரஸ்பர துரோகத்தில் வீழ்ந்து விடுகின்றன.

தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தில்  வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் (கற்பித்தல் மூலமாக இல்லாமல்) அனுபவத்தினை  புலப்படாத தொடர்பில் பெற்றுக்கொண்டிருக்கிறது.  அந்த விஞ்ஞானம் முதிர்ச்சியடையாத ஒன்று. எதுவும் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சொந்தமானதல்ல. 

வானம் பார்த்த பூமியாக கார்காலத்தில் பருத்தி, எள், சோளம் கம்பு ராகி போன்ற பயிர்களை விதைத்து விவசாயத்தைத்  தொழிலாகக் கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்தது வந்த  மூதாதையர்களின் மண்தான்  திருப்பூரும்.  காவிரியும் தாமிரபரணியும் முல்லைபெரியாரும்  பாயும் ஊரில் வயலில் நடவு செய்துவிட்டு காலாற  இருந்தவர்கள்  அல்ல திருப்பூர் மக்கள். பஞ்சாலைகளில் இராப்பகலாக உழைத்தவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலான பழைய முதலாளிகள். ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும் சிறந்த உழைப்பாளியின் அனுபவக் கதை இருக்கும்.  ஒவ்வொருவரும் உழைப்பாளியாகச் சுரண்டப்பட்டுத்தான் முதலாளியானார்கள். அவர்களுடைய உழைப்புதான் இங்கு வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. 

நபர்களைச் சாராத  தொழில் நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறை பின்பற்றப் பட வேண்டும். இந்த சமூகத்தில் தற்காலிக வெற்றியாளர்களின், புத்திசாலிகளின் அவநம்பிக்கை விஞ்யான ரீதியான அணுகுமுறைகளைத் தடைசெய்கிறது. பாரம்பரியமாக வந்த பல வற்றை நாம் மறு பசிசீலனை செய்ய வேண்டும். அனுபவத்திற்கும் புதுமைக்கும் எல்லை பிரிக்கப்பட வேண்டும். 

அனுபவத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாரம்பரியத்தை துடைத்துப் போட்டு சுத்தப்படுத்தி காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்கவேண்டும். 

இந்த சுழற்சி நடைபெறாத நிறுவனங்கள் சிறிய வேர்களைகொண்டு வளரும் மரங்கள் போன்றதுதான். 

தான் யாரென்று தெரியாமல் யாரைப் போலவோ எதுவாகவோ ஆகவேண்டும் என்று இலக்கு மட்டும் வைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறார்கள். நமது இருப்பைத் தெரிவதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம்.பல்வேறு நிறுவனங்களின் வெற்றி தோல்வி குறித்த பல்வேறு ஆதாரங்களை, தகவல்களைத் திரட்டி அது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அதை நோக்கிய பதிவுகள் எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து வரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

கடந்த காலஅனுபவங்களைச்  சுவாரசியமாகச்  சொல்வது போல் இதனையும் முயற்சி செய்தால்  உங்களால் திருப்பூரின் வருங்காலச் சந்ததி மேலும் பயன்பெறும்.

நன்றி, 

இப்படிக்கு 

சமகால திருப்பூர் பயணி





கம்யுனிச சித்தாந்தம் குறித்த மேலோட்டமான பார்வை கூட இல்லாமல் திரு. ராஜா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார் என்று படுகிறது. மிக சுருக்கமாக, கம்யுனிசம் என்பது உடல் உழைப்புக்கும் முளை உழைப்பிற்கும் சமமான பிரதிபலன் கிடைக்கச் செய்வது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனித சமுதயத்தை உருவாக்குவது. திரு ஜோதிஜி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு கம்யுனிசத்தை குறை கூறுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட முனைவது போன்றது. 

திருப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு கம்யுனிஸ்டுகள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் வகித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருப்பூரின் துவக்ககால தொழில் வளர்ச்சியின் பொழுது தொழிலாளர்களின் உரிமைக்காக பல போராட்டங்களைச் செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றுத் தந்து இருக்கிறார்கள். 

ஒருகாலத்தில் உள்ளூர் மக்களால் மட்டுமே செய்துவந்த இந்தத் தொழில் பல மாவட்டத்தினரையும் ஏன் பல மாநிலத்தவரையும் இங்கு வந்து பிழைப்பதற்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தவர்கள் திருப்பூர் கம்யுனிஸ்டுகள். பல்வேறு ஊர் மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் விழைவு அவர்கள் இயக்க வளர்ச்சிக்குப் பாதகமாக ஆனது வேறு நிகழ்வு. 

கம்யுனிஸ்டுகள் அன்று விதைத்த விதை மரமாக வளராமல் பயிராக வளர்ந்து சுழற்சிமுறையில் இன்றும் வெவ்வேறு உருவங்களில் இன்று லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் அவர்கள் பிழைப்பிற்கு பயனளித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

கம்யுனிசம் சிறு சிறு குழுக்களாக தொழிலாளர்கள் மத்தியில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்று அவரவர்கள் அவர்களது உழைப்பிற்கான ஊதியத்தை அந்தந்த சிறு குறு நிறுவனங்களில் தாமாகவே போராடிப் பெற்றுக்கொண்டு கொண்டு இருப்பதற்கு கம்யுனிஸ்டுகள் விதைத்த போராடும் குணம், மன உறுதிதான் இதற்குக் காரணம். திரைப்படங்களில் வருவது போன்று ஒரே பாட்டில் வந்தது அல்ல. 

இயற்கையின் பரிணாமத்தில் வந்தது. நிச்சயமாக இது மீண்டும் ஒரு பேரியக்கமாக வளர்ந்து ஏற்றத்தாழ்வுகள் அற்ற மனித சமுதாயம் உருவாக காரணமாக இயற்கையின் தேர்வில் அமையும். 

தொழிலாளர்களை மதிக்காத அவர்களது உழைப்பை மட்டும் உறிஞ்சும் எந்த நிறுவனமும் நீண்டகாலம் வாழாது. 

ஜோதிஜி அவர்களின் கேள்விக்கு விடையை கம்யுனிசத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு உரிய இடத்தில் தேடுவது பொருத்தமாக இருக்கும்.



4 comments:

kiramatthu kallan said...

Fat fate don't dry to comments peoples

ப.கந்தசாமி said...

//திருப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு கம்யுனிஸ்டுகள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் வகித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருப்பூரின் துவக்ககால தொழில் வளர்ச்சியின் பொழுது தொழிலாளர்களின் உரிமைக்காக பல போராட்டங்களைச் செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றுத் தந்து இருக்கிறார்கள். //

கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர் நலனுக்குத்தான் போராடுவார்களே தவிர தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டதாக நான் கேள்விப்பட்டதேயில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

கவனிக்க : பல 'எதிர்'ப்பார்ப்புகள் உள்ளன...

Online Jobs for Tamil People said...

முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html