Wednesday, February 19, 2014

பழம் நழுவி பாயாசத்தில் விழுந்துள்ளது.

நேற்று நண்பர் சென்னையில் இருந்து அழைத்த நண்பர் அங்குள்ள மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர். அவர் சிறிது நேரம் பேசாமல் இருக்க வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கக் குழப்பத்தோடு காத்திருந்தேன். காரணம் மூவர் குறித்த தீர்ப்புக் காரணமாகச் சென்னையில் அவர் இருக்கும் இடத்தில் "நடந்து கொண்டிருக்கும் ஆரவாரத்தை உணர்த்துவதற்காக" என்றார். 

சென்னையில் மட்டுமல்ல. நேற்றும் இன்றும் தமிழ்நாடு முழுக்க இனம் புரியாத மகிழ்ச்சி. 

இயல்பிலேயே தமிழர்கள் உணர்ச்சிகளோடு வாழப்பிறந்தவர்கள். திரையை நம்பி, பலரும் பேசிய உரைகளை நம்பியே தங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்தவர்கள்.  

ஆனால் நேற்று வந்த தீர்ப்பை விட இன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கைத்தான் அவர் காலத்திற்குப் பிறகும் தமிழர்களால் நினைத்துப் பார்க்க வைக்கக்கூடியது. தமிழர், தமிழ்மொழி, தமிழன் என்று சொல்லிக்கொண்டு இங்கே வாய்ச்சவடால் மூலம் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா தனது ஒரே அறிக்கையின் மூலம் திக்குமுக்காட வைத்து விட்டார்.  உலகத்தமிழர்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கனமான விசயங்களை எழுதினால் எவர் படிப்பார்கள்? என்று பொழுது போக்கு விசயங்களையே எழுதிய அத்தனை பேர்களும் தாங்களே இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் போல முகநூலில் நிலைத்தகவலாகப் பகிர்ந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  

அரசியலில் அதிமுகவிற்கு எதிர்முகாமில் உள்ளவர்கள் எப்படி எதைப்பற்றி பேசுவது என்று குழம்பி "நாங்களும் வரவேற்கின்றோம்" என்கிறார்கள். 

ஆனால் இதற்காகத் தொடக்கம் முதல் பாடுபட்ட மதிப்பிற்குரிய வைகோ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை விடப் பலமடங்கு அட்டகாசமாக அறுவடை செய்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. எப்போதும் போல வைக்கோவின் யோகம் உழைப்பது மட்டுமே. 

ஜெயலலிதா எடுத்துள்ள நடவடிக்கைப் பின்னால் பலதரப்பட்ட "அரசியல் கணக்குகள்" இருந்த போதிலும் இது முக்கியமானதொன்று. முதல் முறையாகத் தனது அரசியல் வாழ்வில் ஒரு உன்னதமான காரியத்தை மிகத் தைரியத்தோடு செய்துள்ள முதல்வரை மனதார பாராட்டத் தோன்றுகின்றது. 

ராஜீவ் காந்தி படுகொலை தினத்தைத் "தீவிரவாத எதிர்ப்புத் தினமாக" இன்று வரையிலும் மத்திய அரசாங்கம் கடைபிடித்து வருகின்றது. ஆனால் இந்திரா காந்தி படுகொலையை அவ்வாறு செய்வதில்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டும். 

மூவர் விடுதலையோடு, போனஸ் பரிசாக ஏழு பேரின் விடுதலையின் மூலம் நாடு தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கின்றது என்று புலம்பும் நண்பர்கள் ஒரு விசயத்தை யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். 

அவர்கள் இதுவரையிலும் பெற்றுள்ள சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது. அவர்களின் குற்றங்களை இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும்.




கலைஞருக்கு எம்.ஜி.ஆர் மூலம் பாடம் கற்றுக் கொள்ள நிறையச் சந்தர்ப்பங்கள் உருவானது. ஆனால் அவர் மாறவில்லை. அவருக்கு இந்த விசயத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு காலம் நிறைய சந்தர்ப்பங்களையும் வழங்கியது. ஆனால் இன்று வரையிலும் நல்ல குடும்பத் தலைவனாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இப்போது முதல்வர் ஜெயலலிதா மூலமும் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் காலம் கடந்து விட்டது.  

ராஜதந்திரி என்றழைக்கப்படும் கலைஞருக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். 

இன்று வேலூர் சிறைவளாகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. இது விடுதலையின் தொடக்க நிகழ்வாகவே கருதப்படுகின்றது. முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திற்கு மூன்று நாள் கெடு விடுத்துள்ள போதிலும், ஏழு பேர்களும் திங்கள் அல்லது செவ்வாய் விடுதலை ஆவார்கள் என்றே தெரிகின்றது.

இது குறித்து வடநாட்டு ஆங்கில ஊடகங்களின் ஊதிப் பெருக்கும் புலம்பல்களை கவனிக்கும் போது தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ளதா? என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நினைக்கத் தோன்றுகின்றது. இந்தியன் என்பதை விட தமிழன் என்ற எண்ணம் தான் இயல்பாகவே தமிழ்நாட்டில் உள்ள எல்லோர் மனதிலும் மேலோங்கும்.

அதிகாரத்திற்கு வந்து சேர்வதை விட அதை சரியான சமயத்தில் சரியான விடயத்திற்கு பயன்படுத்தி தங்களை தகுதியான மனிதர்களாக, தலைவர்களாக மாற்றிக் கொண்டவர்களின் பட்டியலில் இன்று முதல்வர் ஜெயலலிதாவும் ஒருவராக மாறியுள்ளார்.  இவரின் கடந்த இரண்டு வருட ஆட்சி நிர்வாகத்திறன் சகிக்க முடியாதாக இருந்த போதிலும் கூட இது போன்ற ஒரு துணிச்சல் நடவடிக்கையை வேறு எவரும் எடுப்பார்களா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

அற்புதம் அம்மாள் என்ற இடைவிடாத போராட்ட மனுஷியின் கண்களில் இனியாவது ஆனந்தக் கண்ணீர் வரட்டும். நல்லதே நடக்க வேண்டும். நடக்கும்.

இந்த விடுதலைக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையில், இயக்கம் சார்ந்து, கட்சி அடிப்படையில், அக்கறை சார்ந்து செயல்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்களுக்கு, நண்பர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.








''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை; யாருக்கும் மனசாட்சியுமில்லை!'' அற்புதம் அம்மாள் நேர்காணல்


இறந்து போகும் நாளை தெரிந்தவரின் ஒப்புதல் வாக்குமூலம்


உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா Arivai Petra Arputham


16 comments:

Amudhavan said...

ஆட்சியிலிருக்கும் ஒருவருக்கு இதற்கு மேலும் இந்த விஷயத்தைத் தள்ளிப்போட்டு அதற்கான பகையைச் சம்பாதிக்கும் துணிச்சல் இருக்கமுடியாது என்றுதான் படுகிறது. ஆகவே வழக்கம்போல் 'அதிரடி முடிவு', 'இந்தத் துணிச்சல் யாருக்கும் வராது' என்ற முகமூடிகளும் நிலைப்பாடுகளும்தாம் இந்த நேரத்தில் எடுக்கவேண்டிய கட்டாயம்.

இது, கட்டாயம் என்பதையும் தாண்டி அப்படியே புகழையும் பாராட்டுக்களையும் அட்சயபாத்திரமாய் அள்ளிக்கொள்ளுவதற்குமான ஒரு சந்தர்ப்பம்.
ஏனெனில் நளினியை பரோலில் விடுவதற்குக்கூட முடியாதென்று நான்கைந்து நாட்களுக்கு முன்னால் மறுத்தவர்தான் இந்த முதல்வர். இன்றைக்கு சுப்ரீம்கோர்ட் தீர்ப்பால் சட்டென்று மறுபடியும் ஈழத்தாய் வேடம் தானாகவே வந்து சூடிக்கொள்ளச் செய்திருக்கிறது.

காலச்சூழலால் கிடைக்கும் இம்மாதிரியான அதிர்ஷ்டங்கள் எப்போதும் ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். ஜெயலலிதாவுக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டங்கள் அவ்வப்போது கிடைப்பதை நாம் பார்த்துத்தான் வருகிறோம்.

இதே கோர்ட் தீர்ப்பு வந்து ஒரு மாதமாகியும் வீரப்பன் வழக்கில் சிக்கி சுப்ரீம் கோர்ட்டால் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டவர்களை விடுவிக்கச்சொல்லி இன்னமும் கர்நாடக அரசிடம் ஒரு கோரிக்கையைக்கூட இந்த முதல்வர் வைக்கவில்லை என்பதையும் இணைத்தே இந்த விஷயத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

எது எப்படியோ கருணாநிதி, ஜெயலலிதா என்ற இந்த அரசியலுக்குள் புகுந்து ஜல்லியடித்துக்கொண்டிருக்காமல் இத்தனைக் காலமும் சிறைக்கொட்டடியில் கிடந்து தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் விடுதலை ஆகிறார்களே என்ற நிறைவுக்கு நாமெல்லாம் வரவேண்டியதுதான் முக்கியம்.

நம்பள்கி said...

மிக மிக நல்ல பதிவு!
ஒரே குறை..எப்போதும் போல வைகோவின் யோகம் உழைப்பது மட்டுமே.
என்ன செய்வது? ஆட்சியில் இருப்பவர்களுக்கு தான் புகழ் போகும்!

திண்டுக்கல் தனபாலன் said...

வைகோ மிகவும் சந்தோசப்படுவார் என்று நினைக்கிறேன்... அதுவும் திருப்தியாக...!

saidaiazeez.blogspot.in said...

அமுதவனை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
இவ்விஷயத்தில் எந்த அதிரடியோ துணிச்சலோ தென்படவில்லை!
எரிகிற வீட்டில் பிடுங்குறவரை லாபம் என்பதுபோல, ஓட்டு அரசியலே இங்கு பிரதானமாகவுள்ளது.
இதுவே எலெக்ஷன் அல்லாத வேறு சமயமாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்பதையும் எண்ணி பார்க்கவேண்டியுள்ளது ஜோதிஜீ!

Unknown said...

vinoth says:
9:43 முப இல் பிப்ரவரி20, 2014

http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
போதும் என்று நினைக்கிறேன்
vinoth says:
9:58 முப இல் பிப்ரவரி20, 2014

இல்லை எழுதுவோம்…
http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
// தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.//

தமிழன் என்றால் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று டெல்லி வாலாக்கள் சொல்வது உண்மை தான்.

சாதசிவ கவுண்டர் படத்தை போட்டு . நன்றி யாருக்கு சொல்கிறீர்கள். எதற்கு நன்றி..

நடந்திருப்பது என்ன ? தமிழர்கள் ஆகிய நமக்கு சூடு சுரணை மானம் ஈனம் வெட்கம் ரோசம் எதாவது உள்ளதா?

சு சாமி , ச சாமி உள்ளிட்ட பலர் மேல் கொலை பழி குற்றச்சாட்டு விசாரிக்கபடாமல் இருக்கு. வேண்டுமென்றே சம்பந்தம் இல்லாத சிலரை தூக்கிலிட்டால் வேலை முடிந்தது சாமிகள் & கோ தப்பித்து விடலாம் என்று தானே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

இப்போதும் விடுதலை பற்றிய செய்தியில் இருப்பது என்ன? ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை..

காமேடியாக இல்லையா.. குற்றவாளையை ஏன அய்யா விடுதலை செய்யவேண்டும் ? நிரபராதி என்று அல்லவா விடுதலை செய்யவேண்டும் ? அப்படி செய்தால் அப்போது குற்றம் செய்தது யார் என்ற கேள்வி வரும்.. சாமி & சோ மாட்டும்.

சதி என்னவென்றால் .. விடுதலை என்று சொன்னலே தமிழனுக்கு போதும். அதின் பின்னனி குறித்தெல்லாம் பார்க்க தமிழனுக்கு மூளை இருக்க என்ன ?. நாளையே தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு..இது ஒரு தவறான முன் உதாரணம் என்றூ சொல்லி வழக்கை நடத்தினால்.. இந்த தீர்ப்பு ரத்தாகி கழுத்தில் தூக்கு கயிறு இருகும்.

இப்போது செய்யவேண்டியது வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டும். ரகோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்கு மூலம் வாங்கி, இவர்கல் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ய வேணுடும்…

மேலும் இவர்கள் சிறையில் கழித்த ஆண்டுக்கும் இழந்த வாழ்க்கைகும் ஈடாக தலைக்கு 50 கோடியாவது நட்ட ஈடு தரவேண்டும். அந்த தொகையும் தவறாக வழக்கை நடத்தி, இவர்களை சிக்க வைத்த அதிகாரிகளின் சேமிப்பு சம்பளம் தனிப்பட்ட/ குடும்ப சொத்தில் பறிமுதல் செய்டு ஈடு கட்ட வேண்டும்.

அப்போது தான் இனி தவறாக வழக்கு நடத்த எந்த அதிகாரியும் நினைக்க கூட மாட்டர்.

இதை விடுத்து.. இப்படி கண்கள் பணீத்தால் சிரமம் தான்.

Ranjani Narayanan said...

இந்தப் பதிவை படித்துக் கொண்டே வருகையில் மத்திய அரசு ஸ்டே வாங்கிவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே! என்றைக்கு விடியும் இவர்களின் துன்பங்கள்?

மகிழ்நிறை said...

இது தேர்தல் ஸ்டான்ட் டாக கூட இருந்துவிட்டு போகட்டும்.
இப்போதாவது அவர்கள் வாழ்க்கை விடிந்தால் சரி

Thulasidharan V Thillaiakathu said...

இது என்ன மாயமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும், தேர்தல் ஜாலம் என்றும் சொல்லப்படலாம் இருக்கட்டும், என்ன இருந்தாலும், அவர்களுக்கு இப்படியாவது ஒரு விடிவு காலம் வரட்டும்! வைகோ அவர்களுக்குத்தான் நாம் முதற்கண் நன்றி சொல்ல வேண்டும் அவர் எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்ததற்கு! நம்பள்கி சொல்லியது போல் உழைப்பவர் ஒருவர்....பேர் எடுப்பவர் இன்னொருவர்! அதுதானே உலக நியதி!?!

மத்திய அரச் ஸ்டே வாங்கிவிட்டதாமே! அப்போ கொண்டாடத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ? மத்திய அரசு கவிழ்து விடுமோ?

மிகவும் நல்லதொரு பதிவு!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

தவறுகளை சொல்லும் தார்மீக கடமை இருக்கும் ஒவ்வொருவரும் நிறை காணும்போது ஓடிவந்து சொல்ல வேண்டும் பாடம் கற்று தந்துள்ளீர்கள் .நன்றி .

இந்திய தமிழன் said...
This comment has been removed by the author.
Paramasivam said...

19-4-2000 அன்று கலைஞர் எடுக்க தவறிய ஒன்றை இன்று ஜெயல்லிதா அவர்கள் எடுத்தார்கள் என்பது தான் உண்மை. இது அரசியல் முடிவாகவும் இருக்கலாம். ஆனால், துரிதமாக, துணிவாக, காலத்தால் எடுத்த முடிவு தான். ஒட்டு மொத்த இந்தியாவும் அண்ணாந்து பார்க்கும் ஒன்று என்பதை விட கலைஞர் இப்போது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த விடுதலை இவர்களுக்கு கிடைத்திருக்காது என்பது தான் உண்மை.

sivakumarcoimbatore said...

மிக மிக நல்ல பதிவு!sir...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பதிவு
நன்றி ஐயா

ஜோதிஜி said...

Common Sense

இங்கு ஒத்த கருத்துக்கள் மட்டுமே வருகின்றவர்கள் எழுத வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. உங்களுக்கு பதில் அளிப்பதற்குள் ஏன் நீக்குனீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு பதில் அளிப்பதற்கென்றே பத்திரிக்கையாளர் மாலன் எழுதியவற்றை உங்களுக்கு பதிலாக தருகின்றேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதில் மத்திய ரசும், காங்கிரசும் எடுத்துள்ள நிலைப்பாடு வியப்பளிக்கவில்லை. ஆனால் அவர்கள் விடும் அறிக்கைகள் நேற்றைக்கு ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் நடந்த விவாதங்களின் அபத்தத்திற்கு இணையாக இருக்கின்றன.

The release of the killers of a former Prime Minister of India and our great leader, as well as several other innocent Indians, would be contrary to all principles of justice. என்று பிரதமரின் அறிக்கை பேசுகிறது.

பிரதமரின் இந்த அறிக்கை, “If some person kills the PM and is released, then how will a common man get justice?” என்று நேற்று ராகுல் பேசிய பின் வெளிவந்திருக்கிறது.

காங்கிரசும், ராகுலும் இந்த வழக்கு ஏன் உச்சநீதிமன்றத்தின் கதவுகலைத் தட்டியது என்பதை அறியாமலோ, அல்லது அறிந்தும் செலக்டிவ் அம்னீஷியாவிலோ பேசுகிறார்கள் எனத் தோன்றுகிறது. தூக்கு தண்டனைக் கைதிகளின் மனு 11 ஆண்டுகள் ஜனாதிபதி மாளிகையில் உறங்கிக் கிடந்த போது, நியாயத்தை நிலைநாட்ட விரும்பும் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கோரிக்கைக்கு ஆதரவாகவோ, எதிராகவோ முடிவெடுக்க ஏன் அத்தனை தாமதம்?

இப்போதும் உச்ச நீதிமன்றம் இந்தக் கைதிகளை குற்றம் புரிந்தவர்கள் அல்ல எனச் சொல்லிவிடவில்லை.குற்றம் புரிந்தவர்கள் என அது கருதுவதால்தான், தூக்கு தண்டனையை அது ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழநாள் முழுவதும் சிறையில் கழிக்க வழிகோலும் தண்டனை.

எனவே அது தண்டனையை மாநில அரசு விரும்பினால், குறைக்கலாம் என அது தீர்ப்பில் குறிப்பிடுகிறது. அது உச்சநீதி மன்றம் அளிக்கும் சலுகை அல்ல.சட்டம் அளித்திருக்கும் அதிகாரம்.

என்றாலும் இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறை சட்டம் 435–ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

இதனால்தான் தமிழக அரசு மத்திய அரசை அணுகுகிறது. 11 வருடம் தூக்கம் போட்ட விஷயம் என்ற முன் அனுபவத்தின் காரணமாக மூன்று நாள் எனக் கெடு விதிக்கிறது.

மத்திய அரசிற்கு மாநில அரசின் முடிவு ஏற்புடையதல்ல, எனத் தோன்றினால் அதை விளக்கி மாநில அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு அந்தக் கடிதத்தைப் பொதுவில் வைக்கலாம்.

ஆனால் அது உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பதன் மூலம் மேலும் காலதாமதம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது; அது தன் நிலைப்பாட்டிற்கு சட்ட பூர்வ, தர்மீகமான காரனங்கள் காட்ட இயலாமல் செண்டிமெண்டலாக விஷ்யத்தைக் கையாள விரும்புகிறது.

ஆனால் அப்படிச் செய்வதன் மூலம், அது அனுதாபததை விட கோபத்தையே சம்பாதிக்க நேரிடும் எனக்கூடவா அதற்குத் தெரியவில்லை?

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு அண்ணா...
வைகோ மிகவும் சந்தோஷமாக இருப்பார்.
ஜெயலலிதா எடுத்த இந்த முடிவு அரசியல் காரணியாக இருந்தாலும் மிகச் சிறப்பான முடிவுக்காக பாராட்டலாம்.

எம்.ஞானசேகரன் said...

அமுதவனின் கருத்துதான் என்னுடையதும். அம்மாவை வானளாவ புகழ ஏதுமில்லை. இதே காரியத்தை கலைஞர் செய்திருந்தால் அம்மா என்ன குதி குதித்திருப்பார்??? ஒரே நல்ல விஷயம் நடந்திருக்கிறது. இந்த பாராட்டுக்குரியவர். நீதிபதி சதாசிவம். அவர் தெளிவாகத் தன் தீர்ப்பில் கூறிவிட்டபடியால் வேறு வழியும் இல்லை. இரட்டைப் பலாபலன் வேறு. எல்லாம் அரசியல். ஈழ மக்கள் வெறும் பகடைக்காய்கள் தான். ஈழம் குறித்த விஷயத்தில் அம்மா எத்தனை முகங்களைக் காட்டியிருப்பார். தனி ஈழம் குறித்துப் பேசிய வைகோவை இரண்டு ஆண்டுகள் உள்ளே தள்ளி வேடிக்கை பார்த்தவர்தான் இந்த அம்மா. இதில் எந்த துணிச்சலும் இல்லை.