Thursday, November 14, 2013

ஆங்கில மருத்துவம் (மட்டுமே) சிறப்பானதா?

விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பெற்ற நவீன மருந்துகள் மட்டும் இல்லாவிட்டால் பழைய காலம் போல நம்முடைய மனித இனத்தின் ஆயுள் என்பது முப்பதோ அல்லது நாற்பது வயதுக்குள் முடிந்து போயிருக்கும்.

கலப்பின விதைகளும், ரசாயன உரங்களும் இங்கே வராவிட்டால் இன்னமும் இந்தியாவில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்.

சித்த மருத்துவத்தைப் பற்றிப் பேசினால் இவன் மாறிக் கொண்டிருக்கும் உலகத்தைப் புரிந்து கொள்ளாதவனாக இருப்பானோ? என்று சொல்லக்கூடிய நவநாகரிக உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

தலைப்பிற்குரிய முழு விபரங்களைப் பற்றித் தனியாக எழுத வேண்டும் என்றாலும் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து இளவரசர் கேரளாவில் உள்ள குமரகம் ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்றார் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நேரம் இருப்பவர்கள் இந்தப் பெரிய கட்டுரையைப் படிக்கலாம்.

நமக்கு விஞ்ஞானத்தை கற்றுத் தந்தவர்களே கடைசியில் அடைக்கலமாகும் அளவிற்கு சித்த மருத்துவம் இன்று வரையிலும் சிறப்பாக இருந்தாலும் நமக்கு சிரிப்புச் சமாச்சாரமாகவே இன்று வரையிலும் உள்ளது.  மூட நம்பிக்கைகள என்ற பெயரில் நமது பழைய பொக்கிஷங்களை பகுத்தறிவு சட்டியில் போட்டு கிண்டி உண்ண முடியாத பொருளாக மாற்றிவிட்டோம்.

சித்தர்கள் நமது உடல் அமைப்பை எப்படிப் பகுத்துப் பிரித்தார்கள் என்பதற்காக இந்த ஆவணம், அரிய பொக்கிஷத்தை நாம் எப்படி இழந்துள்ளோம் என்பதற்காக இந்தக் கட்டுரை..


தமிழச்சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் 

தமிழச்சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. இதைவிட ஒரு நோய் கூடவும் முடியாது குறையவும் முடியாது. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது. 

1. தலை 307 

2. வாய் 18 

3. மூக்கு 27 

4. காது 56 

5. கண் 96 

6. பிடரி 10 

7. கன்னம் 32 

8. கண்டம் 6 

9. உந்தி 108 

10. கைகடம் 130 

11. குதம் 101 

12. தொடை 91 

13. முழங்கால் கெண்டை 47 

14. இடை 105 

15. இதயம் 106 

16. முதுகு 52 

17. உள்ளங்கால் 31 

18. புறங்கால் 25 

19. உடல்உறுப்பு எங்கும் 3100 

ஆக 4448 என்பனவாகும்.

இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம். 

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது. 

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள் 

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன.

அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும். 

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள் 

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும். 

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது. 

கிருமிகள் உருவாகக் காரணம் 

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும். 

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும். 

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும். 

கண் நோய் : 

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம். 

பொதுக் காரணங்கள் : 

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்கச் சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.

அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான். 

சிறப்புக் காரணம் : 

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும். 

காசநோய் : 

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும். 

வெள்ளெழுத்து 

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன. 

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றிச் சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது. 

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம். 

தலைநோய்

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. 

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை 

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார்.

ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை. 

கபால நோயின் வகை : 

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர். 

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன.

ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும். 

அம்மை நோய் : 

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம். 

மேலும், அம்மை நோய்க்கு குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. 

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. 

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது. 

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு. 

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை, 

1. பனை முகரி 2. பாலம்மை 

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை 

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை 

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை 

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை 

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை 

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை 

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. 

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும். 

தொடர்புடைய பதிவுகள்






16 comments:

Raja said...

எந்த ஒரு விஷயத்த எடுத்துகிட்டாலும், மேம்போக்கா சொல்லாம அடிப்படையில் இருந்து தொடங்குவதே உங்களின் சிறப்பு அண்ணா. நீங்கள் இதை தொடராக எழுதபோகின்றீர்களா? எழுதினால் மிக்க மகிழ்ச்சி. அப்படியே எவ்வாறு தமிழ்/இந்திய மருத்துவம் படிபடியாக அழிக்கப்பட்டது,அதில் அரசாங்கம் மற்றும் மருந்து கம்பெனிகளின் பங்கு எல்லாம் எழுதினால் சிறப்பாக இருக்கும்.
-ராஜா

Jayadev Das said...

விஜயகாந்த் தோத்தாரு போங்க......... ..............I am expecting treatment part also. Genuine siddha people are rare..........

Amudhavan said...

இது ஒரு பெரிய தொடராக வருமோ? இப்போதும் இணையத்தில் உலாவரும் நிறைய நண்பர்கள் சித்தமருத்துவத்தைக் கேலி செய்தும் கிண்டலடித்தும் நிறைய எழுதிவருகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எத்தனை நுட்பமாக எவ்வளவு விஷயங்களைச் சித்தர்கள் சொல்லிச்சென்றிருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இன்றைக்கு மிகப்பெரும் மருத்துவர்களிடம் போனாலும் நோயாளிக்கு என்ன பிரச்சினை என்பதை அவர்கள் சொல்லியும் தெரிந்துகொள்ள முடியாத மருத்துவர்கள் XRAY எடுத்துவா, SCAN எடுத்துவா என்று சொல்லி இயந்திரங்களின் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர். எல்லாம் எடுத்து வந்து காட்டியதும் (கூடவே ரத்தப்பரிசோதனை, மலம் மற்றும் சிறுநீர் பரிசோதனை) அப்படியா எல்லாம் நார்மல்தான் உன்னுடைய உடம்புக்கு ஒன்றுமில்லை. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வா என்று சொல்லி ஒரு எட்டுப்பத்து மாத்திரைகளை எழுதி அனுப்பிவைத்துவிடுகின்றனர். பலன்?
நோயாளியின் நோய்கள் அப்படியே தொடர.........அவன் என்ன செய்கிறான் என்றால் அடுத்து ஹோமியோபதி, சித்தவைத்தியம், ரெய்கி,அக்குபஞ்சர் என்று நோய்கள் குணமாகும் இடம்தேடிப் போய்விடுகிறான். இந்த அலோபதி டாக்டருக்கு feed back வருவதில்லை. இவர் தான் கொண்ட முடிவே சரியானது என்ற நினைப்பிலேயே இருந்துவிடுகிறார். அவரை சிந்திக்கக்கூட விடாத படிக்கு அவருக்கு அடுத்து வேறொரு நோயாளி கிடைத்து விடுகிறான்.
இப்படியொரு கண்ணாமூச்சி விளையாட்டு அலோபதிக்கும் மற்ற மருத்துவத் துறைகளுக்குமாக நடந்துகொண்டிருக்கிறது.
இதுபற்றிய சிறிய வெளிச்சத்தையும் உங்கள் கட்டுரைத் தொடரில் எதிர்பார்க்கிறேன்.

ஜோதிஜி said...

அக்கறைக்கு நன்றி ராஜா. நீங்க இந்த கட்டுரையில் உள்ள சித்தர்கள் மருத்துவம் என்ற முகநூல் பகுதியை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சென்ற மாதம் அதனை முழுமையாக படித்துக் கொண்டு வந்த போது கிடைத்த கட்டுரை இது.

நீங்கள் சொன்னதை வைத்து அமுதவன் அவர்களும் தொடர் என்றே முடிவு செய்து விட்டார். நான் என் வசதிக்காக கூகுள் ப்ளஸ் ல் இதனை சேமித்து வைத்திருந்தேன். நான் படிக்கும் முக்கிய தகவல்களை அதில் சேமித்து வைப்பது வழக்கம்.

நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கை புத்தகமாக கொண்டு வர அதுவும் தற்போதைய சமயத்தில் அவசியம் தேவைப்படும் ஒன்று. ஆனால் அதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். நிச்சயம் இப்போதைய சூழ்நிலையில் முடியாது.

இதற்குப் பிறகு வேறொரு (தமிழ் மொழி சார்ந்து) விசயத்தை எழுதி வைத்துள்ளேன். ஆனால் உங்கள் எதிர்பார்ப்புக்காக அடுத்து என் தனிப்பட்ட (ஆங்கில மருத்துவம் குறித்து) அனுபவங்களை எழுதுகின்றேன்.

நன்றி

ஜோதிஜி said...

உங்கள் தளத்தில் கூட சித்த மருத்துவம் சார்ந்து ஒரு இடுகைப் பார்த்தேன். உங்களுக்கு இதில் ஆர்வம் இருக்கும் என்றே நினைக்கின்றேன். உங்கள் பார்வைக்காக தொடர்ந்து நான் படித்துக் கொண்டிருக்கும் மற்றொரு பதிவு

http://ayurvedamaruthuvam.blogspot.com/

ஜோதிஜி said...

நன்றி. என் அனுபவங்கள் சார்ந்து சிலவற்றை எழுதுகின்றேன்.

Saran said...

நான் கடந்த 8 வருடங்களாக ஹோமியோபதி மருத்துவம்தான் பார்க்கிறேன்

தி.தமிழ் இளங்கோ said...

// விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பெற்ற நவீன மருந்துகள் மட்டும் இல்லாவிட்டால் பழைய காலம் போல நம்முடைய மனித இனத்தின் ஆயுள் என்பது முப்பதோ அல்லது நாற்பது வயதுக்குள் முடிந்து போயிருக்கும். //

இதுதான் உண்மை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதற்குக் காரணமான ஆங்கில மருத்துவத்தை அனைவரும் நம்புகின்றனர். “ நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்: வாய்நாடி வாய்ப்பச் செயல் “ என்ற திருக்குறள் கருத்து, ஆங்கில மருத்துவத்தில் உடனடி தீர்வாக உள்ளது.

” தமிழச்சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் ” என்ற தலைப்பில் நிறைய விவரங்களை தொகுத்துள்ளீர்கள். சித்த மருத்துவத்தை மேலுக்கு பூசிக்கொள்ளும் மெழுகு மருந்து போலத்தான் எல்லோரும் பயன்படுத்த விரும்புகிறனர். சீரியஸ் கேஸ்களில் யாரும் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.

ஆங்கில மருத்துவம் (மட்டுமே) சிறப்பானதா? என்ற தங்களது கேள்விக்கு, வரும் தொடர்களில், தாங்களே எப்படி பதில் சொல்லப் போகிறீர்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்.

Anonymous said...

ஆக மிகச் சிறந்த படைப்பு. முதலில் பாரம்பரிய வைத்தியங்கள் குற்றமற்றவை என்பது உண்மையே, அவற்றில் காலம் காலமாய் பெற்ற மரபு ஞானங்கள் புதைந்துள்ளன. எனது பாட்டன் முப்பாட்டனார் பலரும் வைத்தியர்களாயும் இருந்துள்ளனர். நவீன மருத்துவம் திடிர் என வானிலிருந்து கிளைத்து விடவில்லை, பல பாரம்பரிய வைத்தியங்களை உள்வாங்கியே வளர்ச்சி பெற்றது. நவீன வைத்தியம் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி வளர்ச்சி பாதையில் செல்கின்றது. ஆனால் பாரம்பரிய வைத்தியங்கள் பல பிழையான நபர்களிடமும், நம்பிக்கையாளர்களிடமும் சிக்கி தேங்கிவிட்டது. பாரம்பரிய வைத்தியங்களை நவீனப் படுத்தி நன்மை தீமைகளை ஆய்வுக்கு உட்படுத்தி வழங்குதல் மூலம் மரபறிவு காக்கப்படுவதோடு நம்பிக்கையூட்டும் மாற்று மருத்துவத்தை நிறுவலாம் என்பது எனது எண்ணம்.

”தளிர் சுரேஷ்” said...

சித்தமருத்துவ தகவல்கள் அறிந்தேன்! ஆச்சர்யம் அடைந்தேன்! ஆங்கில மருந்துகள் தீர்க்காத சிலவற்றை சித்த மருத்துவம் தீர்ப்பதை கண்கூடாக கண்டுள்ளேன்! அருமையான பகிர்வு! நன்றி!

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ். உண்மையும் கூட

ஜோதிஜி said...

சமீப காலத்தில் விமர்சனங்களின் வாயிலாக நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகின்றீர்கள். வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

மூவரும் சேர்ந்து எழுத நினைக்காத விசயங்களை எழுத காரணமாக இருந்துட்டீங்க. நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் ஜுனியர் நான்.

Vijay said...

Great information.
The main issue with the traditional (siddha / ayurvedic) medicine is how to differentiate between a really knowledgeable practitioner and a quack. And these days it is common that a number of traditional medical practitioners use/mix western medicines in what they prescribe. As a result people are loosing confidence on them.

ஜோதிஜி said...

நன்றி விஜய். நீங்க சொல்வதும் போது அவசர குடுக்கைகள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.