Saturday, September 07, 2013

ஒரு கூட்டம் ஒரு விமர்சனம்

1990 முதல் சென்னைக்கு ஏதோவொரு பணியின் பொருட்டு சென்று கொண்டே இருந்த போதிலும் சென்றவாரம் சென்னையில் நடந்த (31.08.2013) பதிவர் சந்திப்பிற்கு சென்றது முற்றிலும் வித்தியாசமான அனுபவம். நான் கடந்த நான்கு வருடங்களாக இணையத்தில் இருந்தாலும் இது போன்ற ஒரு சந்திப்பில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.  

இதற்கு முன்னால் இது போல நடந்த பலவற்றையும் சூழ்நிலையின் காரணமாக கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டிய நிலையில் இருந்த போதிலும் இந்த கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு உரிமையுடன் கட்டளையிட்டவர் திண்டுக்கல் தனபாலன். (கூட்டத்தில் பேசிய பலரும் இவரின் புகழ் பாடியது  இவருக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்)

கடைசி நேரத்தில் நிச்சயம் ஏதோவொரு பஞ்சாயத்து உருவாகக்கூடும் என்று பயந்து ஒரு வழிப்பாதை ரயில் சீட்டைத்தான் முன்பதிவு செய்திருந்தேன். ஒரு வேளை போகமுடியாத பட்சத்தில் பாதி இழப்பில் தப்பித்து விடலாம் என்று. ஆனால் அதிர்ஷ்டவசமாக செல்லும் வாய்ப்பு அமைந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும்,எழுதுவதை நிறுத்திக் கொண்டவர்களுக்கும், நகர்ந்து சென்றவர்களுக்கும்.ஏதோவொரு வழியில் நான் அறிமுகமானவாக இருந்தாலும், இளம் இணையவாதிகள் பலரையும் இந்த சந்திப்பில் சந்திக்க முடிந்தது. உறவினர் வீட்டுக்குச் செல்பவன் என்ற மனோநிலையில் தான் இந்த சந்திப்புக்குச் சென்றேன்.

கல்லூரியில் படித்த சமயத்தில் சமயத்தில் சென்னை என்பது அறிமுகம் ஆகாத நிலையிலும், பிறகு சென்னை நன்றாக அறிமுகமான போதும் எப்போதும் போல அங்கே இருக்கும் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்.  ஆனால் கடந்த இரண்டு வருடமாக சென்னைக்கு செல்லும் போது சரி, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பயணிக்கும் போதும் அந்தந்த ஊர்களில் வாழும் பதிவர்களை நினைத்துக் கொள்ளும் அளவுக்கு பலரின் முகமும், அவர்களின் எழுத்தும் என் நினைவில் வந்து போய்க் கொண்டேயிருக்கும்.  

திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த சிறிய மற்றும் பெரிய கூட்டங்களை நடத்தும் போதும், அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போது உருவாகும் அனுபவங்களை வைத்து ஒரு இடத்தில் குறிப்பிட்ட சிலரை வைத்து ஒரு கூட்டம் நடத்துவதில் எத்தனை சவால்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து இருப்பதால் சென்னையில் நடந்த பதிவர்களின் சந்திப்பு நிச்சயம் மகத்தான வெற்றி தான்.

சென்னையில் வெவ்வேறு பகுதிகளில், துறைகளில், பணிச்சூழலில் இருந்து கொண்டு இது போன்ற ஒரு நிகழ்வுக்காக உழைத்ததோடு அது குறித்த தகவல்களை வலைபதிவில் உடனடியாக வலையேற்றிய உழைப்பும் பிரமிக்கக்கூடியதே,

திருப்பூரில் கூட பதிவர்களை வைத்து, இது தவிர டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா என்று பல விதங்களிலும் விழா நடத்திய அனுபவம் இருப்பதால் ஒரு விழா என்பதை நடத்த எந்த அளவுக்கு உழைப்பு தேவைப்படும் என்பதை வைத்து இந்த விழாவிற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மதுமதி இயக்கி, அற்புதமான ஒளிப்பதிவில் 90 டிகிரி என்ற குறும்படம் அரங்கில் ஓடிக்கொண்டிருந்த போது அரங்கத்தின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்தேன்.  அரங்கத்தின் மொத்த இருக்கையும் நிரம்பி பலரும் நின்று கொண்டே அந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  

ரஞ்சனி அம்மா, தருமி அய்யா, சைதை அஜிஸ் போன்றோர் வருவீர்களா? கேட்டவர்களுடன் உரையாட முடிந்ததே தவிர அதிக நேரம் அவர்களுடன் இருக்க முடியவில்லை.எப்போதும் போல என்னுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் அகலிகன் நான் மேடையில் இருந்த போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார்.

பலரையும் சந்தித்தேன். பரஸ்பரம் ஒவ்வொருவருக்கும்  புதியவர்களுடன் பேச ஒரு தயக்கம் இருக்கின்றதை உணர முடிந்தது. வந்திருந்த அனைவருக்கும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் இருந்தது. வலைபதிவுகளை, மறுமொழிகளை, விழும் ஓட்டுக்களைப் பற்றியே பேச்சில் அதிகம் இருந்தது. சரி வயது உள்ளவர்கள் பரஸ்பரம் கலாய்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் இருந்ததை பார்க்க முடிந்தது.  வலையுலகம் என்பதை தங்களின் வாழ்க்கையில் உள்ள ஒரு முக்கிய உலகமாக எண்ணிக் கொண்டவர்களையும் பார்க்க முடிந்தது.

சென்னையில் உள்ள நண்பர்கள் பலருடனும் மண்டபத்திற்கு வெளியே உரையாடிய போது பலவற்றையும் பேச முடிந்தது. குறிப்பாக தமிழ்நாட்டின் மாண்டேசிங் அலுவாலியா என்று அழைக்கப்படும் திருவாளர் அதியமான் அவர்களை மாசி என்றழைக்கப்படும் மா. சிவகுமாருடன் சேர்ந்து ஓட்டிய போது நான் ஓட வேண்டியதாக இருந்தது.

நான் மேடையில் ஏறிய போது முதன் முதலாக எனக்கு நேரிடையாக அறிமுகமான கோவை எழில் சிறப்பான அங்கீகார வார்த்தை சொல்லி என்னை வரவேறறார். ஊருக்குத் திரும்பி வரும் போது எதிர்பாரதவிதமாக எழில் மற்றும் கோவை ஜீவா, தமிழ்ச்செல்வி போன்றோர்களுடன் அவர்கள் வாகனத்திலே உரையாடிக் கொண்டு வந்து சேரும் அளவிற்கு இந்த பயணம் மறக்க முடியாத இனிமையான பயணமாக அமைந்தது.  

இந்த விழாவில் குறிப்பிடத்தக்க அம்சமாக தனிப்பட்ட முறையில் எவருக்கும் முன்னிலை என்று இல்லாது தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் பல்வேறு பொறுப்புகளும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டு என் பார்வையில் நேர்த்தியாகவே இருந்தது.

குறிப்பாக இந்த விழாவிற்காக உழைத்தவர்கள் விழாவின் கடைசி வரைக்கும் வியர்வை வழிந்தோட அங்குமிங்கும் அலைந்து கொண்டேயிருந்ததும், அவர்களுக்குண்டான மரியாதையைப் பெற கடைசியில் விழா மேடையில் ஏறிய சமயத்தில் கூட பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த புகைப்படத்தை இந்த பதிவில் போடலாம் என்று முயற்சித்த போது அது கைக்கு கிடைக்காமல் போய்விட்டது.

நேரிலைக்காட்சியில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாததும், அது குறித்து பாடுபட்ட தோழர் கடைசிவரைக்கும் முடியாமல் போனது ஒன்று மட்டுமே இந்த விழாவில் திருஷ்டி பொட்டாக இருந்தது. 

விழா நடந்த மண்டபம் குறித்தும், வழிந்தோடிய வியர்வை குறித்தும் பலரும் எழுதியிருந்தார்கள்.  ஆனால் நம் உடம்பு எந்த அளவுக்கு சுகத்திற்கு அடிமையாகி உள்ளது என்பதாகத்தான் நான் எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து ஐந்து மணி நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது முட்டிக் கொண்டு வரும் அவஸ்த்தைகளை பொறுத்துக் கொண்டு இருப்பது போல இல்லாமல் என்னால் இயல்பாகவே இருக்க முடிந்தது.

சிலவற்றை நாம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது விமர்சிக்கத் தோன்றும். நாம் அந்த காரியத்தில் இறங்கி செயல்படும் போது தான் அதன் வலியும் வேதனைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விழா நடக்க காரணமாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

விழா குறித்த தொடர்புடைய பதிவுகள்



+++++++++++++++++++++++++++++++

டாலர் நகரம் ( நூல் விமர்சனம்)


தோழரே,

தங்களுடைய டாலர் நகரம் புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கிப்படித்தேன். புத்தகம் வாங்க தங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டதில், அவர் கொடுத்த எண்ணைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. SPS ஸ்டோருக்கு சென்று கேட்டதில் அப்படி ஒரு புத்தகம் அவர்களிடம் விற்பனையில் இல்லை என்றார்கள், 

பின்னர் என்னுடைய பழைய நண்பர் தற்பொழுது சேர்தளம் உறுப்பினராக இருப்பவரிடம் கேட்டு பின்னல் புத்தக நிலையத்திற்கு சென்று கேட்டேன். அங்கே கை இருப்பு இல்லை என்று கூறியதால் தங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு PN ரோடு (சாப்ளின் வாட்ச் ஹவுஸ்)கடிகாரக் கடையில் ஆர்வம் இல்லாமல் (ஒருவேளை நான் கடிகாரம் ஏதும் வாங்குவேன் என்று நினத்திருப்பாரோ) விற்பனை செய்தவரிடம் வாங்கி வந்து நேரமின்மை காரணமாக பகுதி பகுதியாகப் படித்துமுடித்துவிட்டேன்.

புத்தகத்தின் வடிவமைப்பு நன்றாக வந்துள்ளது. தரமான தாள்களில் பெரிய எழுத்துக்களில் கணனி தேவையின்றி படிக்கும் அளவில் அச்சிடப்பட்டுள்ளது

பக்கங்கள் அதிகமாக இருப்பதனாலும் செலவை ஈடுகட்ட புத்தகத்தின் விலையை குறைக்க பக்கங்களின் எண்ணிக்கையை சுருக்கச்செய்த முயற்சி பெரிதாக பலனளிக்காமல் சற்று பாதகமாகவே முடிந்திருப்பது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இடையில் உள்ள தொடர்பின்மையில் தெரிகிறது. மாற்று வழிகளில் முயற்சி செய்து இதனைத் தவிர்த்திருக்கலாம். 

முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல கிடைத்த வாய்ப்பை முடிந்தவரையில் பயன்படுத்தி எழுத்தாளராக அடுத்த கட்டத்திற்கு உயர தாங்கள் செய்த முயற்சி பலனளித்திருப்பதாகவே உணருகிறேன். வலைத்தளத்தில் வாரந்தோறும் வெளியிடப்பட்டதைத் தொகுத்து (எடிட்டிங்) புத்தகமாக வெளியிட்டதினால் தங்களுடைய சுயசரிதையும் டாலர் நகரத்தின் வரலாறும் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. 

குறைகள் சில இருந்தாலும் விழுந்து எழுந்து போராடிக்கொண்டிருக்கும், திருப்பூரில் வசிக்கும், தொழில் புரியும், பணியில் இருக்கும் உள்ளூர் வெளியூர் வாசிகளுக்கும் திருப்பூரைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும், புதிதாகத் திருப்பூரில் தொழில் துவங்க வேண்டும், வேலையில் சேரவேண்டும் என்பவர்களுக்கும் டாலர் நகரம் புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

உங்களுடைய சொந்த அனுபவம், திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் உண்மைக்கதைகள் மூலம் படிப்பதற்கு உற்சாகம் குறையாமல் கொடுத்திருக்கிறீர்கள். 

இந்த நகரத்தின் நாடியைப் பிடித்து பேராசை இல்லாமல் உண்மையாய் உழைத்தால் திருப்பூர் வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தார்ப்போல் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருப்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். 

மேலும் கோட்டா, இறக்குமதியாளர், தரகர், முதலாளி, அலுவலர், தொழிலாளி, அரசாங்க அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள், அரசின் கொள்கைகள், தாரளமயமாக்களின் விளைவுகள், பஞ்சு மற்றும் நூல்விலை ஏற்றத்தின் பாதிப்புகள், சாய ஆலைப் பிரட்சினைகள், மாசுக்கட்டுப்பாடு, மின்சாரப் பற்றாக்குறை, விவசாயிகள் போராட்டம், பணவீக்கம் அண்டை நாடுகளுடனான தொழில் போட்டி, உள்ளூரில் உள்ள முறையற்ற தொழில் போட்டி, தொழிலாளர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடு, தொழில்நுட்ப அறிவுக்குறைபாடு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, உள்ளூர் தேவைக்கான பனியன் உற்பத்தி, கழிவுகளில் இருந்து பனியன் தயாரிப்பு வடநாட்டவர்களின் உழைப்புச் சுரண்டல் என அனைத்துத் தரப்பிலும் ஆழமாக பார்வையிட்டு நிறை குறைகளை மிகுந்த துணிச்சலுடன் விமர்சனதிற்கு உள்ளாக்கி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை பாமரனுக்கும் புரியும் வண்ணம் படைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. 

முறையற்ற ஆண் பெண் பாலுறவு சற்று மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளதையும் அதன் சீர்கேடுகளையும் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது. 

தொழில் வளர்ச்சிக்கு என்ன செய்யக்கூடாது என்பதனை தெளிவாகக் கூறியுள்ளதுபோல என்னசெய்யவேண்டும் என்ற ஆலோசனைகளையும் முடிவுரையாகக் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பனியன் தொழில் புரிவதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு இருப்பது போல உலகத்தில் எங்குமே இல்லை. எவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் திருப்பூரில் பனியன் தொழில் அழிவு நிலைக்குச் செல்லாது.

ஆடை அணிபவர்கள் இருக்கும் வரை எந்தக் காலத்திலும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.  

நம்பிக்கையுடன் செயல்படுவோம். 

நல்ல புத்தகத்தை படைத்தமைக்கு நன்றி. மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

நட்புடன்,
விஷ்வா. திருப்பூர்

தொடர்புடைய பதிவுகள்

டாலர் நகரம்  புத்தகம் விகடன் குழுமத்தின் வாயிலாக இனி கிடைக்கும். முதல் பதிப்பு முடிந்தது.


25 comments:

Ranjani Narayanan said...

இந்தமுறை பதிவர்களில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது நிறைவாக இருந்தது.
கிடைத்த கொஞ்ச நேரத்தில் உங்களுடன் அளவளாவியது இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது. முதல் முறை சந்திப்பு என்று சொல்ல முடியாத அளவு எல்லோருடனும் பேச முடிந்தது.
மறுபடியும் பழைய நினைவுகளுக்குப் போய் வந்தேன்.

சீனு said...

மனமார வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஜோதிஜி.. உடனடியாக நீங்கள் எங்களை அழைத்து பாராட்டியபோதே மனம் மிகவும் நிறைவடைந்து விட்டது... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி.. உங்களோடு அதிக நேரம் பேச முடியவில்லை என்ற சிறு ஏக்கத்தைத் தவிர

ஸ்ரீராம். said...

விழா ஏற்பாடுகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. கடினமான ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செயல் படுத்திருக்கிறார்கள்.

உங்கள் டாலர் நகரம் புத்தகம் பற்றி முன்னரே சில இடங்களில் படித்திருக்கிறேன். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான ஆக்கப்பூர்வமான விமர்சனம்
தங்கள் பாராட்டு நிச்சயம் சந்திப்பு விழாக்
குழுவினருக்கு அதிக தெம்பளிக்கும்
விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

கார்த்திக் சரவணன் said...

தங்களது பார்வையில் சிறப்பான விமர்சனத்தை வைத்துவிட்டீர்கள்.... தங்களை நேரில் சந்தித்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி.... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

/// உறவினர் வீட்டுக்குச் செல்பவன் என்ற மனோநிலையில் தான் இந்த சந்திப்புக்குச் சென்றேன்... ///

மிக்க நன்றி சார்...

/// ஒரு கூட்டம் நடத்துவதில் எத்தனை சவால்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து இருப்பதால் சென்னையில் நடந்த பதிவர்களின் சந்திப்பு நிச்சயம் மகத்தான வெற்றி தான்... ///

/// டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா என்று பல விதங்களிலும் விழா நடத்திய அனுபவம் இருப்பதால் ஒரு விழா என்பதை நடத்த எந்த அளவுக்கு உழைப்பு தேவைப்படும்... ///

அனுபவம் சொல்கிறது... எத்தனையோ ஆலைகளில் ISO பற்றிய கூட்டம் நடத்தும் போது எவ்வளவோ சிரமப்பட்டுள்ளேன்...

/// தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் பல்வேறு பொறுப்புகளும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டு... ///

உங்களுக்கு தெரிகிறது... நன்றிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

/// நம் உடம்பு எந்த அளவுக்கு சுகத்திற்கு அடிமையாகி உள்ளது... ///

இது சாட்டையடி... புரிந்து கொள்பவர்களுக்கு நன்றி...

/// சிலவற்றை நாம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது விமர்சிக்கத் தோன்றும். நாம் அந்த காரியத்தில் இறங்கி செயல்படும் போது தான் அதன் வலியும் வேதனைகளையும் புரிந்து கொள்ள முடியும்... ///

உண்மை... உண்மை... அல்ப மனங்களுக்கு புரியாத உண்மை...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தெளிவாக சொல்லி விட்டீர்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

நாய் நக்ஸ் said...

ரகளை..தல...
:-))))))

நிகழ்காலத்தில்... said...

திருப்பூர் விஷ்வா அவர்களின் விமர்சனம், மண்ணின் மைந்தர்களின் மனதைத் டாலர் நகரம் தொட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.. வாழ்த்துகள்

ஜோதிஜி said...

சுவாமிஜியின் ஆசீர்வாதம் பெற்ற யாம் பாக்கியவானே.

ஜோதிஜி said...

மண்ணின் மைந்தீ ஒருவர் விரைவில் எழுதுவதாக உறுதி அளித்துள்ளார் சிவா.

ஜோதிஜி said...

உங்களின் சிறிய இளமையான உருவத்தை எதிர்பார்க்கவில்லை முரளி.

ஜோதிஜி said...

உங்களுக்குத்தான் நான் பல விதங்களில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சரவணனுக்கும் சேர்த்து.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

வந்தீர்களா?

ஜோதிஜி said...

நன்றி ராம்.

ஜோதிஜி said...

இந்த சிறிய வயதில் பெரிய முயற்சிகளில் இறங்கிய உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நான் ஏற்கனவே சொன்னபடி உங்களின் ராசி சில கதவுகளை திறக்க வைத்துள்ளது.

தேன் நிலா said...

***சிலவற்றை நாம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது விமர்சிக்கத் தோன்றும். நாம் அந்த காரியத்தில் இறங்கி செயல்படும் போது தான் அதன் வலியும் வேதனைகளையும் புரிந்துகொள்ள முடியும்.***

உண்மைதானே...!!! பிறர் சிரத்தை எடுத்து செய்யும் செயல்களில் உள்ள நிறைகளைப் பாராட்டுவதன் மூலமே அவர்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிப்பதுபோல் ஆகும். மேலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

அதைவிடுத்து ஒன்றுக்குமில்லாத உப்பு சப்பில்லாத குறைகளைச் சொல்லி அவர்களை குற்றவாளியாக்குவதில் எந்த வகையான நியாயமும் இல்லை. ஒரு பொதுவான காரியத்தைச் செய்ய இன்னல்கள் என்ன என்பதை அவர்களும் அதைச் செய்துபார்த்தால் மட்டுமே உணர முடியும்..


பதிவர் சந்திப்புக்கு உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி..!

தொடர்ந்து ஊக்கப்படுத்துவோம்.. பதிவர்கள் ஒன்றுகூடுவோம்..எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்...!!

பகிர்வுக்கு மிக்க நன்றி...!

arasan said...

மனம் விட்டு பாராட்டிய உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் சார் ...

ஜோதிஜி said...

நன்றி அரசன்

ஜோதிஜி said...

நன்றி சுப்புடு

நாய் நக்ஸ் said...

ஐயா...தங்களின் ஆசிர்வாதமே...முதன்மை...

Unknown said...

அருமையாக பதிவர் திருவிழாவை பகிர்ந்து உள்ளீர்கள் சார்...... நிச்சயமாக விழாவிற்காக உழைத்த யாவரும் பாராட்ட பட வேண்டியவர்கள்தான், நன்றாக நடந்தது.


தங்களது டாலர் நகரம் புத்தகம் வாங்கி கையில் வைத்துக்கொண்டு, உங்களது அருகிலேயே அமர்ந்து, உங்களை அப்போது தெரியாது இருந்தது குறித்து நான் என்ன சொல்வது ! உங்களது புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன்.....மிகவும் நன்றாக உள்ளது !