Thursday, July 25, 2013

அழிக்கப்பிறந்தவர்கள்

இந்த பதிவில் பேச வேண்டிய முக்கிய விசயங்களை அய்யா பழ. நெடுமாறன் எழுதியுள்ள வார்த்தைகள் மூலம் வாசிப்போம்.

 ""அன்னிய மொழியில் கல்வி என்பது நமது குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள் மீது சுமத்தி அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும் போலி நடத்தை உடையவர்களாகவும் ஆக்கிவிடும். சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கும். நமது சொந்த நாட்டிலேயே நமது குழந்தைகளை அன்னியர்களாக்கிவிடும். தற்போதைய கல்வி முறையின் மிகப்பெரிய சோகம் இதுதான்.

நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கு அன்னியக் கல்விமுறை பெரும் தடையாகும். எனக்கு மட்டும் ஒரு சர்வதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப்படுமானால் அன்னிய மொழியில் கல்வி பயில்வதற்குத் தடை விதித்துவிடுவேன். நமது ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தாய்மொழிக் கல்விக்கு மாறச் செய்வேன். 

இதற்கான பாடப் புத்தகங்கள்  தயாரிக்க வேண்டுமே என நான் பொறுத்திருக்க மாட்டேன். அவை தன்னாலேயே இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும்.

உடனடியாகப் பரிகாரம் தேடவேண்டிய மிகப்பெரிய தீமை அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும். அன்னிய ஆட்சியினால் விளைந்த பல தீமைகளில் மிகப்பெரிய தீமை நம் நாட்டு இளைஞர்களுக்கு அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும் என நமது வரலாறு பதிவு செய்யும். மக்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்திவிடும்.

கல்விக்கான செலவு தேவையில்லாமல் அதிகமாகிவிடும். இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்குமேயானால் தேசத்தின் ஆன்மாவை அவை அழித்துவிடும். எனவே அன்னியக் கல்விமுறை என்ற மாயையிலிருந்து தேசம் எவ்வளவு விரைவில் விடுதலை பெறுகிறதோ அவ்வளவுக்கு மக்களுக்கு நல்லதாகும்''. 

(தி செலக்டட் ஒர்க்ஸ் ஆஃப் காந்தி - வால்யூம் 6 "தி வாய்ஸ் ஆஃப் ட்ரூத்)

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பின்கண்டவாறு உள்ளன.

தொடக்கப் பள்ளிகள் 38,82,092.

நடுநிலைப் பள்ளிகள் 23,48,141.

உயர் நிலைப் பள்ளிகள் 19,15,409.

மேல்நிலைப் பள்ளிகள் 48,74,565.

ஆக மொத்தம் 1,30,20,207 மாணவர்கள் பயிலுகிறார்கள்.

தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,15,568 ஆகும். 

உயர் தொடக்கப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 62,156 ஆகும்.

உயர்நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 71,794 ஆகும்.

மேல் நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,41,509 ஆகும்.

உலகெங்கும் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 1:20 ஆகும். 

தமிழ்நாட்டில் இந்த விகிதாசாரம் 1:80 ஆகும். 

இது எவ்வளவு கவலைக்கிடமானது என்பதை உணர்ந்து, இந்த விகிதாசாரத்தை உயர்த்தி மாணவர்களின் கல்வித் தகுதியை அதிகரிப்பதற்குப் பதில் அவர்களின் மேல் தாங்கமுடியாத சுமைகளைச் சுமத்துவதால் என்ன பயன்?

பெரும்பாலான பள்ளிகளில் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள், தேவையான கரும்பலகை போன்ற கல்வி உபகரணங்கள் போன்றவை பற்றாக்குறையாக உள்ளன.  சுகாதார வசதிகளும், குடிநீர் வசதியும் போதுமானவையாக இல்லை. கிராமப்புற பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசம். இவற்றை மேம்படுத்துவது மிகமிக அவசரமான முன்னுரிமையான வேலைத் திட்டமாகும். ஆனால், இவற்றில் கவனம் செலுத்தாமல் ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தைப் புகுத்துவது என்பது மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதாகும்.

இவர்களில் ஆங்கில வழி கற்றவர்களானலும் தமிழ் வழி கற்றவர்களானாலும், கல்லூரிகளில் சேரும்போது அங்கு ஆங்கிலமே கல்விமொழியாக உள்ளபோதிலும், தமிழ் வழிக் கற்ற மாணவர்கள் அதன் காரணமாகப் பின் தங்கிவிடவில்லை. ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமே கற்றுவந்தபோதிலும் அவர்கள் கல்லூரியிலும் மிகச் சிறப்பாகப் பயின்று வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்னும் சொல்லப் போனால், ஆங்கில வழி கற்றுத் தேர்ச்சி பெற்றுவந்த மாணவர்களைவிட தமிழ்வழிக் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஒருபடி மேலாகவே விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த "பிளஸ்-2' தேர்வில் 100 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்திருக்கின்றன. மேலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதமும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் எஸ்.சி. மாணவர்களில் 70.4 சதவீதம் பேரும் எஸ்.டி. மாணவர்களில் 71.5 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றள்ளனர்.

அதைப் போல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 7,324 மாணவர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி தேர்ச்சிவிகிதம் 86 முதல் 88 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவை சாதாரணமான சாதனை அல்ல. மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் பெற்றோர்கள் கற்றவர்கள் அல்லர். 

இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதைத் தவிர வேறுவழியில்லை. மெட்ரிக் பள்ளிகளில் உள்ள கல்வி வசதி கட்டமைப்புகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. இருந்தாலும் இந்த மாணவர்கள் பாராட்டத்தகும் வகையில் தேர்ச்சிப் பெற்றிருப்பது ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த உண்மை தாய்மொழியில் அவர்கள் கல்வி கற்றதுதான் என்பதாகும். இதே மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வி கற்க வைத்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டு அவர்களின் கல்வியும் எதிர்காலமும் பாழாகிவிடும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வந்த 19 ஆயிரம் பேர்களில் 5 பேர் மட்டுமே "அரசுப் பள்ளியில் வேலை வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் செய்தி உணர்த்தும் உண்மை என்ன? தகுதித் தேர்வில் வென்றவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியாற்றுகிறார்கள், தகுதித் தேர்வில் வெல்லாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். 

அப்படியானால், தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பானவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அதுவே பயிற்று மொழி என்று கூறும் போதுதான் எதிர்க்க வேண்டியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சித்துறையின் தலைசிறந்த விஞ்ஞானிகளான அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு பள்ளிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

1930-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக 1952-ஆம் ஆண்டு தமிழ் வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 1954-ஆம் ஆண்டு முதல் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் உயர் நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது.

கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பல்கலைக் கழக மட்டத்திலும் தமிழே பயிற்சிமொழியாக வேண்டும் என்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தார். 1960-ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கோவையில் உள்ள அரசுக் கல்லூரியில் வரலாறு, அரசியல், பொருளாதாரம், நிலவியல், மனவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. 1961-ஆம் ஆண்டில் மேலும் மூன்று கல்லூரிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டது

இத்திட்டத்தை மாநிலம் முழுவதிலும் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது.

பட்டப்படிப்பை தமிழ் வழிக் கல்வியில் மேற்கொள்வோருக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்பட்டால் மட்டும் போதாது அவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், 1965-ஆம் ஆண்டு முதலமைச்சராக பக்தவத்சலம் பொறுப்பேற்றபோது இத்திட்டம் மெல்லமெல்லக் கைவிடப்பட்டது. 

பள்ளிகளில் தமிழே பாடமொழியாக இருந்ததை மாற்றும் வகையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என அவர் பிறப்பித்த உத்தரவு தமிழ் பாடமொழிக்குச் சாவுமணி அடித்துவிட்டது. முன்பு பக்தவத்சலம் அரசு செய்த தவறை இப்போதுள்ள அரசும் செய்யக்கூடாது. அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவு தொடங்குவது என்பது இறுதியாகத் தமிழ் பயிற்சி மொழி இல்லாது ஒழித்துவிடும்.

1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. பக்தவத்சலம் செய்தத் தவறை திருத்துவதற்குப் பதில் அதை இக்கட்சிகள் தொடர்ந்தன. இதன் விளைவாக ஆங்கில வழிக் கல்வியின் ஆதிக்கம் பரவியது.

1978-ஆம் ஆண்டுவரை மெட்ரிக் பள்ளிகள் மொத்தம் 34 மட்டுமே இருந்தன. 

அவையும் சென்னை, மதுரை, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. பிறகு இப்பொறுப்பை பல்கலைக் கழகங்கள் கை கழுவிய பிறகு இவற்றுக்காக மெட்ரிக்குலேஷன் போர்டு அமைக்கப்பட்டது. இப்போது உயர்நிலைப் பள்ளிகளில் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 2,053 ஆகும். மேல் நிலைப் பள்ளிகளில் இவற்றின் எண்ணிக்கை 1,421 ஆகும். ஆக மொத்தம் 3,474 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. வெறும் 34 ஆக இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை நூறு மடங்குக்கு மேல் பெருகிவிட்டது.

இப்பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ஆசிரியர்களும் பற்றாக்குறை. பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் 57 சதவீதம் பேர் ஆசிரியப் பயிற்சி பெறாதவர்கள். கொத்தடிமை ஆசிரியர்களைப் போல மாதம் ரூ.2,000 அல்லது அதற்குக் குறைவான ஊதியம் பெற்று வேலை பார்த்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிட்டிபாபு தலைமையிலான நிபுணர் குழு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைத்த போதிலும் இதுவரை அரசு ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் போதுமான தேர்ச்சியில்லாமலும், தமிழ் தெரியாமலும் வளர்ந்து வருகிறார்கள். 

இது எவ்வளவு பெரிய சமூகக் கேடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தாய்வழிக் கல்வி நசிந்து வருவதைக் கண்டு மனம் பொறாத 101 தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையிலான சான்றோர் பேரவையின் சார்பில் 25-4-1998-ஆம் ஆண்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். 

குறைந்தபட்சமாக முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புவரை தாய் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்கள் முன்வைத்த ஒரே கோரிக்கையாகும்.

அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி, அமைச்சர் தமிழ்க் குடிமகனை அனுப்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக இக்கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக நீதிநாயகம் எஸ். மோகன், தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அக்குழு அளித்தப் பரிந்துரையில் 1 முதல் 5 வரை உள்ள பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி அளிப்பதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், சட்டம் கொண்டு வருவதற்குப் பதில் 1999-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து ஆங்கில வழிப் பள்ளிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அரசு ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு இன்னமும் விசாரிக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.

மோகன் குழு அளித்த பரிந்துரையின்படி தமிழ்வழிக் கல்விக்கான சட்டத்தை கருணாநிதி கொண்டு வந்திருந்தால் அது நிலைத்து நின்றிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசு ஆணை பிறப்பித்ததின் விளைவாக தாய்மொழிக் கல்வி குழி தோண்டி புதைக்கப்பட்டது.

தமிழக அரசின் கட்டுத் திட்டங்களுக்கு உட்படாமல் தப்புவதற்காக ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் தங்களை மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் இணைத்துக் கொள்கின்றன. அங்கு ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்ல இந்தியும் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் 200-க்கு மேற்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதே இல்லை.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வழிப் பள்ளிகள் மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகள் தங்களுக்குள் தமிழில் பேசினால் அதற்குத் தண்டனை விதிக்கப்படுகிற கொடுமையும் சில பள்ளிகளில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தமிழே புறக்கணிக்கப்படுகிற நிலை நீடிப்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடும். உலகம் பூராவும் சிறிய நாடுகளாக இருந்தாலும் அந்தந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் வங்கம், மராட்டியம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் பள்ளிப் படிப்பு என்பது தாய்மொழியில்தான் நடைபெறுகிறது. ஆங்கிலத்தை ஒரு பாடமாக அங்கெல்லாம் பயிலுகிறார்களே தவிர ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொண்டு பிற பாடங்களையும் கற்பதில்லை.

அறிவியலிலும் பொருளாதாரத்திலும் மிக முன்னேறிய நாடுகளான சீனாவும், ஜப்பானும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமே கற்றுக்கொடுக்கின்றனர்.

இதன் முந்தைய தொடர்ச்சி




19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நம் மாநிலமும் ஒரு நாள் மாறும்... (நம்புவோம்..! ?)

கவியாழி said...

தங்களுக்குள் தமிழில் பேசினால் அதற்குத் தண்டனை விதிக்கப்படுகிற கொடுமையும் சில பள்ளிகளில் //வருத்தமாய் உள்ளது

Anonymous said...

பதிவுலகில் பிரமிப்பாக எழுதக் கூடியவர்களில் ஒருவர் நீங்கள். மிக ஆழமாகவும், புள்ளி விவரங்களோடும் பதிவை முன் வைத்துள்ளீர்கள். தாய் மொழிக் கல்வி மிக அவசியம், தாய் மொழி மற்றும் மாநில மொழிகளில் பயில்வதன் மூலம் சிறு வயது முதலே சிந்திக்கும் ஆற்றலும், தெளிவான கருத்தாடல்களையும், விருத்தியடையக் கூடிய மூளை வளர்ச்சியையும் பெறுவார்கள். அனைத்து பாடங்களையும் அரை குறையாய் ஆங்கிலத்தில் படித்து புரியாமலும், தின்று விழுங்காமலும் திணறுகின்றனர். அதற்கு பதிலாக ஒரு பாடத்தை ஆங்கிலத்தைப் பயின்றாலும் முறையாக தமிழ் கலப்படம் இல்லாமல் குற்றமற பயின்றாலே போதுமானது. திட்ட வகுப்பாளர்களும், அரசாங்கமும் இவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இதற்கான வலியுறுத்தல்களையும், லாபிக்களையும் தமிழார்வம் கொண்ட நாம் செய்ய வேண்டும்.. எவ்வகையில் செய்யலாம் என்பதையும் எழுத வேண்டுகின்றேன்.

டிபிஆர்.ஜோசப் said...

தமிழ்வழிக்கல்வி தேவைதான் என்பதுபோலவே ஆங்கிலக்கல்வி வழியும் தேவைதான். படித்து முடித்து தமிழகத்தில் மட்டும் வேலை செய்தால் போதும், அதுவும் அரசு துறைகளில்தான் பணி புரிவேன் என்று நினைப்பவர்களும் அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி பயிலட்டும். ஆனால் தங்களுடைய குழந்தைகள் தமிழகத்திலேயே முடங்கிவிடாமல் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் சென்று பணிபுரிய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஆங்கிலவழிக் கல்வியில் தங்களுடைய குழந்தைகளை பயில்விக்க விரும்புவதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? தனியார் பள்ளிகளில் பயில்விக்க வசதியில்லாத பெற்றோர்கள் அரசு பள்ளியைத் தான் நாட வேண்டிய சூழல். அவர்களுக்கும் தங்களுடைய குழந்தைகள் அயல் நாடு சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால் அது தப்பா என்ன? ஆகவே, அரசு பள்ளிகளிலும் கூட முழுமையான தமிழ்வழிக் கல்வி என்ற கட்டாயத்தை திணிக்க முயல்வது தவறு. அரசு பள்ளிகளிலும் ஆங்கிலக்கல்வி வழி கடந்த பல வருடங்களாகவே இருந்துக்கொண்டுதான் உள்ளது. அதாவது ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு (section) மட்டும் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அது இனியும் தொடர வேண்டும். ஆங்கிலவழிக் கல்வியை ஆரம்ப பள்ளியிலிருந்தே படிக்கும் குழந்தைகளால் மட்டுமே எதிர்காலத்தில் ஆங்கிலத்தில் சிந்திக்கவும் எழுதவும் பேசவும் முடியும். தமிழக எல்லையைக் கடந்தாலே தமிழில் மட்டும் பயின்ற படிப்பு கவைக்குதவாது என்கிற நிலையில் எதற்காக அது போதும் என்ற வாதத்தில் இறங்குகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. அரசியல்வாதிகள், அதுவும் காலங்கடந்து ஓய்வுபெறும் வயதிலுள்ளவர்கள் கூறத்தான் செய்வார்கள். அவர்களுக்கு தமிழ் மட்டும் வாழ்ந்தால் போதும். ஆனால் பெற்றோர்களுக்கு அதுவல்ல முக்கியம். படித்து முடித்து தங்களுடைய பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் முக்கியம். தமிழும் வாழ வேண்டும் அதைவிட முக்கியமாய் தமிழனும் வாழ வேண்டும், அதிலும் இன்று பொருளாதாரத்தில் பிந்தங்கிய நிலையில் இருக்கும் தமிழன் நிச்சயமாய் வாழ வேண்டும். அதற்கு அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியில் பயில ஒரு வாய்ப்பு அளிக்கப்படத்தான் வேண்டும்.

அகலிக‌ன் said...

தாய் மொழி கல்வி தன்னம்பிக்கையை கொடுக்கும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அரசியல், பூகோலம் என சமூகம் சார்ந்த கல்வியை தமிழில் படித்துக்கொள்ளலாம் தவறில்லை அதற்கான புத்தகங்களும் ஆராய்ச்சி தொகுப்புகளும் தமிழிலேயே கிடைக்கவும்செய்கிறது ( அதிகம் இல்லாவிட்டாலும் )ஆனால் பொறியியல், வானியல், கடலியல்,மருத்துவம் போன்ற தினமொரு மாற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் துறைகளில் தமிழின் நிலை என்ன?

அகலிக‌ன் said...

ஆங்கிலவழி கல்வியின் ஆதிக்கத்தால்தான் அன்னிய தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்தது என்பதுதான் உண்மை.தாய்மொழியில் சிந்திப்பது சிறந்தபலனை தரும்தான் ஆனால் சினிமாவையும் அரசிலையும் தவிர தாய்மொழியில் யாரும் சிந்தித்துவிடக்கூடாது என்பதின் விளைவுதான் டாஸ்மாக்.அவனை நிறுத்தச்சொல் நான் நிறுத்தரேன் என்பதுதான் எல்லாருடைய கூப்பாடும். அதுவரை என்ன செய்ய ஆங்கிலப்பாடம் பயில்வொம்.

Unknown said...

நோ நோ..

நத்திங் டூயிங்....

டோட்டலி அன் அக்சப்டபிள்....

ஒன்லி இங்கிலிஷ் கேன் கிவ் யு குட் ஜாப், பிஸ்னஸ் அன்டு லைப் ஸ்டைல்.

திஸ் திங்க் மெனி பீபுள் நோ.. சோ தட் தெ பிரிஃபர் இங்லிஷ் மீடியம். ஈவந்தோ கவர்மண்ட் ஸ்கூல் ஹவிங் இங்கிளிஸ் மீடியம் வீ வோட் அப்ட் பார் இட். வி பிரிஃபர் பிரைவேட் இன் எஜுகேசன். கவர்மெண்ட் ஒன்லி பிட் பர் ரன்னிங் டாஸ்மக். லெட் தெ டூ இட்.

டூயு எவெர் சீன் எனி கவர்மெண் ஸ்கூல் டீச்சர்'ஸ் சைல்டு ஆர் எனி கவர்மேன்ட் ஆப்பிசர் சைல்டு ஸ்டடி இன் டமில் மீடியம் ஆர் கவர்மெண்டு ஸ்கூல்? நோ.. பிகாஸ் தே நோ வாட் இஸ் த குவாலிட்டி தெர் வில் பி.. தோஸ் ஹு கேன் நாட் ஆஃபர்ட் தே சன் அப்ட் பர் கவர்மேண்ட் ஸ்கூல் அன்ட் தமிழ் மீடியம்.

இன் திஸ் எஜுகேசன், யூ கேன் நாட் எக்ஸ்பிரிமெட் யுவர் செல்ப். இஃப் யூ புட் யுவர் சைல்ட் இன் கவர்மேண்ட் ஸ்கூல் ஆர் தமிழ் மீடியம் .. ஆபடர் 12 இஃப் யூ ரியலைஸ் இட்ஸ் ராங்... வாட் யூ கேன் டூ... பிகாஸ் இட்ஸ் அல்ரெடி டூ லேட்...


திங்க் ஆல் பேக்டர்ஸ் ..கிவ் குவாலிடி எஜுகேசன் டு சைல்டு. ஐ திங்க் தி கம்மிங் ஜெனரேசன் இஸ் தெ லாஸ்ட் ஒன் ஃபார் தமிழ் லாங்குவேஜ், பிகாஸ் தோஸ் ஹு செலக்ட் டமிழ் ஃபர் ஸ்டடி ...

http://www.youtube.com/watch?v=5Qj-pBHc3dE

'பரிவை' சே.குமார் said...

மாற்றம் வரும் என நம்புவோம்

சிவக்குமார் said...

இல்லை இது மீண்டும் பழைய கருத்துக்களையே அசைபோட்டிருக்கும் ஒரு கட்டுரையே. இது குறித்து ஒரு கட்டுரை கொஞ்சம் விரிவாக எழுதலாமென்று இருக்கிறேன். தமிழார்வலர்கள், தமிழ்கல்வி ஆதரவாளர்கள் எந்த இடத்தில் கவனிக்கத் தவறுகிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. நானும் தமிழை சராசரியை விட அதிகமாக நேசிப்பவன் என்ற போதிலும் சொந்த வாழ்க்கையில் கற்ற பாடம் என்னை தமிழ்வழிக்கல்வியை எதிர்க்கச் செய்து விட்டது. :((( தமிழை வாழ வைக்க கல்வியைத் தாண்டித்தான் வேறு வழிகளைக் காண வேண்டும்.

ஜோதிஜி said...

திங்கள் கிழமை கடைசி பதிவாக ஒன்றை வெளியிடுகின்றேன். அதை படித்து விட்டு உங்கள் இறுதியான முடிவைச் சொல்லுங்க.

சொந்த வாழ்க்கையில் கற்ற பாடம் என்னை தமிழ்வழிக்கல்வியை எதிர்க்கச் செய்து விட்டது

நீங்கள் மட்டுமல்ல. பொருளாதார ரீதியாக தன்னை ஒரு இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள போராடும் ஒவ்வொருவரும் இது போன்ற நிலையில் இன்று இருக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

ரசித்த காணொளி காட்சி

ஜோதிஜி said...

நம்பிக்கை தான் வாழ்க்கை

ஜோதிஜி said...

உங்கள் இரண்டு விமர்சனமும் கடைசி பதிவு எழுத உதவியாக இருந்தது

ஜோதிஜி said...

கடைசி பதிவை திங்கள் கிழமை அன்று படித்துப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லவும்

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு நன்றி. அதை அனுபவ பகிர்வாகத்தான் எழுத வேண்டும். முயற்சிக்கின்றேன்.

ஜோதிஜி said...

ஆனாலும் முழுமையாக ஆங்கிலம் பேசமுடிவதில்லையே

ஜோதிஜி said...

வெகு தொலைவில் தெரியும் வெளிச்சங்கள்..................

Unknown said...

Enna boss...If kids reads only English, how will they survive in Germany, Russia, Japan and etc. Ponga boss...ask them to read all possible languages, they will get translator job.

Ippadikku Municipl school'il padithu vulagia sutram - Bodinayakanur Karthikeyan

தி.தமிழ் இளங்கோ said...

// ஒரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அதுவே பயிற்று மொழி என்று கூறும் போதுதான் எதிர்க்க வேண்டியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சித்துறையின் தலைசிறந்த விஞ்ஞானிகளான அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு பள்ளிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். //

ஜப்பான் நாட்டில் அவர்கள் மொழியில்தான் அனைத்து கல்வியையும் பெறுகிறார்கள். அவர்கள் மொழிதான் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை.

ஆனால் நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டதால், ஆட்சி மொழியான ஆங்கிலத்தை நம்மால் சட்டென்று உதறிவிட முடியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்று இந்தி படிக்காத தமிழன்தான் அமெரிக்காவிலும் பெங்களூரிலும் சாப்ட்வேரிலும் மற்ற துறைகளிலும் திறமையாளர்களாக இருக்கிறார்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொணட வடநாட்டு இளைஞர்கள் பலர் தமிழ்நாட்டிற்குத்தான் வேலை தேடி வருகிறார்கள்.

ஒரே சிக்கல். முதல் வகுப்பிலிருந்து SSLC வரை தாய்மொழி தமிழிலேயே படித்து விட்டு கல்லூரியில் முழுக்க முழுக்க ஆங்கிலம் எனும்போது பல மாணவர்கள் தடுமாறுகின்றனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். எது கல்வி என்பது நிச்சயம் ஆகாத வரையில் குழப்பம்தான்.

இன்றைய சூழ்நிலையில் நம்மால் பிள்ளைகளை அவர்களுக்கு ஆர்வம் உள்ளவற்றில்., நமது பொருளாதார நிலைக்குத் தக்கவாறு படிக்க வைத்தலே புத்திசாலித்தனம் ஆகும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கதையில்தான் பலரும் இருக்கிறார்கள்.