Thursday, July 18, 2013

பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி

வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுக்க எனக்கு அனுமதியில்லை. நான் வீட்டில் இருந்தால் குறிப்பிட்ட சந்தேகங்களுக்கு மட்டுமே பேச அனுமதி கிடைக்கும். காரணம் படிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் பேச தொடங்கி விடுவதால் எப்போதும் 144 தடையுத்தரவு அமலில் இருந்து கொண்டேயிருக்கும். நாம இதுக்கெல்லாம் பயந்தா தொழில் நடத்த முடியுமா பாஸ?

குழந்தைகளுடன் அவர்கள் பாடம் குறித்து பேசும் போதெல்லாம் நான் படித்த பள்ளிக்கூட நினைவுகளுடன் நாம் எப்படி படித்தோம்? என்ற யோசனையும் வந்து போய்க் கொண்டேயிருக்கும்?காரணம் குழந்தைகளின் பாடத் திட்டங்களை பார்க்கும் போதும் வியப்பும் பயமும் ஒன்றாக என்னைத் தாக்குவது போலவே இருக்கும். . 

நாம் படித்த கல்வி எளிமையின் வடிவமா? இல்லை சுமையில்லா பாடமா? போன்றதொரு கேள்வியும் இயல்பாக எழும்.

வீட்டுக்கருகே அருகே இருந்த சரஸ்வதி வித்தியாசாலையில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை இருந்தது. எட்டாம் வகுப்பு வரையிலும் ஒரே பள்ளியில் படித்த காரணத்தால் எந்த பிரச்சனையும் உருவானதில்லை.  எப்போதும் போல கோவிந்தன் தான் முதல் இடத்தில் இருப்பான். இரண்டாம் இடத்திற்காக நானும் அன்புக்கரசியும் போட்டி போட்டுக் கொண்டிருப்போம். மாறி மாறி வந்து கொண்டிருப்போம்.  எட்டு வரைக்கும் படிப்புக்காக எந்த ஆசிரியரும் எந்த குறையும் சொல்லாத அளவுக்குத்தான் இருந்தேன். 

என் கையெழுத்து நன்றாக இருக்கும் காரணத்தால் அதுவே  வகுப்புத் தலைவன் என்ற பதவியைக் கூட தந்தது. ஆனால் என்ன கற்றுக் கொண்டோம்? எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதை அருகே இருந்த மற்றொரு பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது புரிந்து கொள்ள முடிந்தது.  இங்கேயும் ஆறு முதல் 12 வரைக்கும் இருந்தது.  ஆனால் இங்கே ஒன்பதாம் வகுப்பில் தான் நுழைந்தேன்.

இந்த இரண்டு பள்ளிகளும் தனியார் நிர்வாகத்தில் அரசாங்கத்தின நிதியுதவி பெறும் பள்ளி என்கிற நிலையில் இருந்தது. அரசு பள்ளிகள் என்று எதுவும் தனியாக இல்லை. இன்று வரைக்கும் அப்படித்தான் உள்ளது.

பனிரென்டாம் வகுப்பு வரைக்கும் குடும்பத்தினர் எனக்கென்று கல்விகென்று செல்வழித்த தொகை அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்றே நினைக்கின்றேன். இன்று சராசரியாக ஒரு குழந்தைகக்கு வருடத்திற்கு 25000 ரூபாய் செல்வு செய்தால் மட்டுமே சுமாரான பள்ளியில் படிக்க வைக்க முடியும். இருபது வருட இந்திய வளர்ச்சியின் பலன் இதுவே.

ஒன்பதாம் வகுப்பில் உள்ளே நுழைந்த பள்ளியில் முதல் இரண்டு மாதங்கள் முழிக்க வேண்டியதாய் இருந்தது.

அதே பள்ளியில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் இயல்பானதாகவே இருக்க என்னைப் போன்றவர்களுக்கு சவாலாகவே இருந்தது. பாடம் நடத்திய அத்தனை ஆசிரியர்களும் தேவதூதன் போலவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். முந்தைய பள்ளியில் நடந்த ஆசிரியர் மாணவர்களின் சகஜமான உரையாடல்கள் ஏதும் நிகழாத காரணத்தால் பயமே அடித்தளமாகி படபடப்பே வாழ்க்கையாக மாறத் தொடங்கியது.

ஒன்பதாம் வகுப்பில் முதன் முதலாக நடந்த  பரிட்சையின் முடிவை கையில் வைத்துக் கொண்டு ஆசிரியர் ஒவ்வொருவரையும் அழைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஏற்கனவே பரிட்சை தாளை கையில் கொடுத்திருந்த காரணத்தால் முடமாகிப் போன ஆங்கிலமும் நொண்டித்த கணக்கும் சேர்ந்து டவுசருக்குள் ஒரு நசநசப்பை உருவாக்கியிருந்தது.  ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்ததும் முட்டிக் கொண்டிருந்த மூத்திரத்தை அடக்கிக்கொண்டே அவர் கொடுத்த பிரம்படியை வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தேன்.  

எப்போதும் போல அங்கேயும் கோவிந்தன் முதன் மூன்று இடத்திற்குள் ஒன்றை தக்க வைத்து முன்னேறிக் கொண்டிருந்jதான்.  ஏற்கனவே படித்த பள்ளி பெண்கள் பள்ளியாக மாறியிருந்தது. ஒன்பதாம் வகுப்பு முழுக்க ஒரு சில பரிட்சைகளில் மட்டுமே சிவப்பு கோடு வாங்காமல் தப்பிக்க முடிந்தது. பத்தும் அப்படியே தான் தொடர்ந்தது.  இடைவிடாத முயற்சியில் முன்னேறி இருந்தேன். ஆனால் ஆசிரியர்களின் பார்வையில் நான் பத்தாம் வகுப்பில் தேற மாட்டேன் என்ற பட்டியலில் தான் வைத்திருந்தார்கள்.  அவர்கள் கணிப்பு பொய்யானது.

அவர்கள் ஊட்டி வளர்த்த மாணவர்கள் முடமாகிப் போயிருந்தார்கள். அதிலும் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நீ எப்படிடா பாஸானாய்? என்று கேட்டது இன்றும் நினைவில் உள்ளது. காரணம் இரண்டு முறைகள் அவரை எதிர்த்து கையோங்க வீடு வரைக்கும் பஞ்சாயத்து வந்து விட்டது.

இரண்டு வருட அனுபவம் தந்த பாடங்கள் பயத்தைப் போக்க  பதினொன்று பனிரெண்டில் இனி பயமில்லை என்ற தைரியத்தை தந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் பழக்கத்தில் வந்திருந்தார்கள். நானும் பள்ளியில் முக்கியமான ஆளாய் மாறியிருந்தேன். அரட்டைக்கு  தக்க நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். கட்டுப்பாடுகள் கொஞ்சம் குறைந்திருந்தது.

வீட்டில் தினந்தோறும் படிக்க வேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் என்னளவில் பலசமயம் அது காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்த்து அடி வாங்குவது இயல்பானதாக இருந்தது.  ஒவ்வொருவரும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க ஏதோவொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒப்பேற்றிவிட்டு படுக்க ஓடிவிடுவதுண்டு.  ஆனாலும் இங்கேயும் ஒரே தாண்டலில் தாண்டி கல்லூரி செல்ல முடிந்தது. படித்த பாடத்தை சொந்தமாக எழுதத் தெரிந்ததும் ஒரு காரணமாக இருந்தது.

ஆனால் கல்லூரி தான் இதயத்தைத் தொட்டதோடு கணக்கற்ற ஆசைகளை நிறைவேற்றவும் உதவியது.  ஜன்னல் மட்டுமல்ல கதவுகளையும் அகலமாக திறந்து வைக்க சுதந்திர காற்றின் சுவாசத்தை அனுபவிக்க முடிந்தது. இதே பள்ளியில் படித்த என்னை விட மிக அதிகமான மதிப்பெண்கள் வாங்கிய ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய துறையில் நுழைய எனக்குப் பிடித்த தாவரவியல் துறையில் நுழைந்த போது பலரும் என்னை ஏளனமாக பார்த்தனர்.

ஆனால் முதல் பருவத்தேர்வு முடிந்த போது என்னுடன் வந்த 17 பேர்களும் தலா இரண்டு பாடங்களில் கோடு வாங்கி கும்மி தட்டும் கோஷ்டியில் சேர்ந்திருந்தனர்.  ஊரில் இருந்து சென்றவர்களின் நான் மட்டும் தான் அறுபது சதவிகிதத்திற்கு மேல் வாங்கி அத்தனை பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தேன்.  கல்வி ரீதியான எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவே. அன்று முதல் தான் எனக்குள் இருந்த திறமைகளுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. மூன்றாண்டுகளும் வெகு இயல்பாக விருப்பத்துடன் படித்த வாழ்க்கையது.

என்னுடன் படித்தவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலவழிக் கல்வி என்றதும் அலறிக் கொண்டு தான் படித்தார்கள்.  ஆனால் பள்ளியில் படித்த மனப்பாடம் அங்கே வேலைக்கு உதவவில்லை.சொந்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணமும்  எவருக்கும் தோன்றவில்லை. பள்ளியைப் போலவே கல்லூரியை கருதியிருந்தார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில் நெஞ்சில் அடித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார்கள்.  மூன்று வருடமும் கண்களை கட்டி காட்டில் விட்டது போல அலைந்தார்கள்.

என்னுடன் படித்தவர்களில் ஒருவன் முதல் பருவத் தேர்வில் மொழிப்பாடமான தமிழிலும் கூட தேர்ச்சியடையவில்லை. அடுத்த பருவம் முதல் அழகாக பிட் எழுதும் கலையை கற்றுக் கொண்டு விட அடித்து பிடித்து இளங்கலையை முடித்து மேற்படிப்புக்கு சென்று அங்கேயும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று பார்டர் வீரனாக வெளியே வந்தான்.

மேற்படிப்புகக்குச் சென்ற இன்னும் சில பேர்கள் இப்போது ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடன் உரையாடும் போது ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும்.

அவர்களும் மாறவில்லை. அவர்கள் கற்ற கல்வியும் அவர்களை எந்த விதத்திலும் மாற்றவில்லை?  பாவம் மாணவர்கள் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

ஆனால் இங்கே இருபதாண்டுக்குள் ஏராளமான மாறுதல்கள் நடந்துள்ளது. கல்வியின் போக்கு மாறியுள்ளது. கற்றுத்தர வேண்டியவர்களின் நேர்மை முதல் அரசாங்கத்தின் கொள்கை வரை அனைத்தும் மாறியுள்ளது.  கல்வியை காசாக்கும் கள்ளப்பணம் நிறைந்தவர்கள் நடத்தும் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இருபது ஆண்டுகளுக்கு நம்பமுடியாத அளவுக்கு பல்லாயிரம் கோடி தொழில் நிறுவனம் போல மாறியுள்ளது. மனப்பாடம் செய்வதே மாணவனின் தகுதி என்பதாக மாறியுள்ளது. .  

எனக்கு இன்றைய கல்விச் சூழல் கணக்கற்ற கேள்விகளை தினந்தோறும் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றது.  

சமச்சீர் கல்வி தேவையற்றது என்கிற நிலைக்கு கல்விக்கூடங்கள் வந்ததை விட (நடுத்தரவர்க்க) பெற்றோர்கள் அதை ஆதரிக்கவும் விரும்பவில்லை.  இது போன்று ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே பல சமயம் ஒதுங்கி நின்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.

தினந்தோறும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நகரும் குழந்தைகளின் பைகளை தூக்கி எறிந்து விடாலாமோ என்று தோன்றுகின்றது.

தாய் மொழி குறித்த அக்கறையில்லை என்பதை விட எந்த மொழி குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாமல் காசாக்க எது சிறந்ததோ அதுவே வேண்டும் என்கிற நிலைக்கு கல்வி மாறியுள்ளது.  

ஐந்து பாடங்களாக இருந்த கல்வி பத்து பாடங்களாக மாறியுள்ளது.  எதிர்கால வேலை வாய்ப்புக்கு ஆங்கிலமே அருமருந்து என்று நம்பப்பட்டு அதுவே வரம் தரும் மொழியாக மாறிவிட்டது.

அந்நிய மொழி ஒரு பக்கம். அளவு கடந்த பாடத்திட்டங்கள் மறு பக்கம்.  

ஆனால் வீட்டில் என்னை அடக்கி ஒதுக்கி வைதது விட சென்ற ஆண்டு வரைக்கும் குழந்தைகளின் கல்வி குறித்து கண்டும் காணாமல் தான் இருந்தேன்.  

நான் படிக்கும் போது குடும்பத்தினர் உருவாக்கிய கட்டளைகள் தான் என்னை படிக்க வைத்தது.  ஆனால் நாங்கள் வீட்டில் உருவாக்கி வைத்துள்ள சூழ்நிலைகள் தான் கட்டாயப்படுத்த தேவையில்லாது எங்கள் பிள்ளைகளை தினந்தோறும் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.    

தினந்தோறும் குழந்தைகள் அவர்களின் அன்றாட படித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் என்ன மாதிரியான பாடங்களை படிக்கின்றார்கள்?எதைக்குறித்து இவர்களுக்கு ஆசிரியர்கள் புரியவைக்கின்றார்கள்? என்பதை உணர்ந்து கொள்ள அவர்களின் பல புத்தகங்களை எடுத்து சில மணி நேரங்கள் படிப்பதுண்டு.  

பல சமயம் எனக்கு தலை சுற்றிப் போகின்றது. 

இன்றைய ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டம் என்பது ஏறக்குறைய கல்லூரி பாடத் திட்டத்திற்கு சமமாகவே உள்ளது. வீட்டில் கேள்வி பதிலை படிக்க வைத்து ஒப்பிக்க என்றொரு போராட்டம் தொடங்கும்.  

ஜாலியன் வாலாபாக் படுகொலையை பார்ப்பது போலவே இருக்கும்.  முட்டல் மோதல் அதிகமாகி இடைவிடாத விவாதங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் படிப்படியான பழக்கத்தின் வாயிலாக இதுவொரு இயல்பான கடமையாக இன்று மாறியுள்ளது. 

"எனக்கு சொந்தமாக எழுத முடிகின்றது. ஆனால் மதிப்பெண்கள் போட மாட்றாங்கப்பா............"

"மிஸ்க்கு உச்சரிக்கவே தெரியலப்பா.  வருஷத்துக்கு ஒரு மிஸ்ஸா வந்துகிட்டே இருங்கப்பா..............."

"சுத்த போருப்பா..... உள்ளே பேசவே விடமாட்றாங்கப்பா.........."

"ஸ்மார்ட் போர்டு வச்சுருக்காங்க. ஆனால் அதுவொரு பந்தாவுக்காக வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் அதில் பாடம் நடத்துறாங்கப்பா...."

"ஒரு பீரியட்க்குள்ள நடத்தி விட்டு அதை அழித்து விட்டு போயிடுறாங்க.... என்னால தொடர்ந்து முழுமையா எழுத முடியல......"

இதே போல தினந்தோறும் ஏதோவொரு குற்றச்சாட்டு வந்து விழுந்து கொண்டேயிருக்கும். .

கடந்த இரண்டு வருடமாக என்னுடைய முக்கிய பணியாக பள்ளியில் ஆசிரியர் யார்? அவரைப்பற்றிய பின்புலம் என்ன? என்று கேட்டு படிக்க உட்காரும் போது அவர்களை பேச வைப்பதுண்டு.  காரணம் எந்திரமாக படிக்க உட்காருபவர்களுக்கு ஒரு ஆர்வத்தைத் தூண்டும் பொருட்டு பல கேள்விகள் கேட்டு அவர்கள் பார்த்த உணர்ந்த அத்தனை பள்ளிக்கூட சம்பவங்களும் ஒவ்வொன்றாக வார்த்தைகளாக அவர்களிடமிருந்து வந்து விழுந்து கொண்டே இருக்கும். 

வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும் தவறாமல் வந்து விழும்.  

"மிஸ்க்கு தெளிவா புரிய வைக்க தெரியலைப்பா" என்பார்கள்.

கொடுக்கும் நாலாயிரம் சம்பளத்திற்கு அப்படிப்பட்ட ஆட்கள் தான் கிடைப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு. 

பல சமயம் இது போன்ற தகுதியற்ற ஆசிரியர்களை வைத்திருக்கும் பள்ளிக்கூடத்தினால் அடிப்படை அறிவுகளை மாணவர்களுக்கு எப்படி புகட்ட முடியும்? என்று நினைத்துக் கொண்டே பாடங்களுக்கு வெளியே உள்ள பல விசயங்களை அவர்களுடன் கலந்துரையாடுவதுண்டு.  

அவர்கள் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், ஆசைகள், விருப்பங்கள் என்று ஒவ்வொன்றாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

இப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் வரும்.

"இவளுக அடிக்கிற அரட்டைகளை மிஸ் கேட்டுக்கிட்டு இருந்தா அரைப்பரிட்சைக்குள் அவங்களால எப்படி பாடத்திட்டத்தை முடிக்க முடியும்? " என்பார்.

ஆனாலும் விடாமல் அவர்களை பேசவைப்பதுண்டு.

சமூகம் குறித்த அவர்களின் பார்வைகளை கவனமாக உள்வாங்கிக் கொள்வதுண்டு.  என் கருத்துக்களை எந்த இடத்திலும் சொல்வதில்லை. இந்தியா குறித்து முழுமையாக இவர்களுக்கு என்ன தெரியப் போகின்றது என்று நினைத்துக் கொண்டு வீட்டில் உள்ள உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழ்நாட்டின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்த தொடங்கிய போது அப்பா இதெல்லாம் போன வருஷமே படித்தாகி விட்டது. இந்த வருடம் நாங்கள் படிப்பது இதைப் பற்றி என்று புத்தகத்தை காட்டிய போது  குழப்பாகவே இருந்தது.

மேற்கொண்டு அது குறித்து பேச அவர்களின் எல்லை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் நிறுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து அமைதியாகி விடுவதுண்டு.

செயல்வழி திட்டத்தை ஆதரிக்காத நமது கல்விச்சூழல் எதிர்காலத்திற்கு எந்த மாதிரியான மனிதர்களை உருவாக்கப் போகின்றது என்பதே என் கேள்வியாக இருக்கின்றது.  

படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் போது உருவாகும் பிரச்சனைகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். பள்ளியிலிருந்து வெளியே வரும் மாணவரால் ஒரு சமூகம் முழுக்க தாக்கத்தையும் உருவாக்க முடிகின்றது. பலசமயம் தேவையற்ற விசயங்களையும் உருவாக்க அது பலரையும் தாக்குகின்றது.

வெளிநாட்டில் வேலை. வெள்ளைக்காரன் போல உத்தியோகம் என்ற கேரட் வாயில் கட்டப்பட்டு கண்களில் சேனம் கட்டப்பட்டு பந்தயத்தில் ஓட வைக்கப்படுகின்றது.

தற்போதைய கல்வியின் பாடத்திட்டங்கள் ஆச்சரியமளித்தாலும் கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் கவலைப்பட வேண்டியதாக உள்ளது. 

காரணம் இங்கே பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்றறொரு நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

ஆனால் இந்த கல்வி நம் குழந்தைகளுக்கு தகுதியான வாழ்க்கையைத் தருமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.

இது குறித்து தொடர்ந்து பேசுவோம்..............

கல்வி கற்க காசு. காசு சம்பாரிக்கவே கல்வி

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை...

இங்கும் எங்கும் அதே அதே...!

நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டும் புரிகிறது...!

துளசி கோபால் said...

கல்விக்அகடையில் எல்லாமே விலை கூடுதல். தரம்(மட்டும்) பார்த்து வாங்கப் போனீங்கன்னா வெறும் கை/பை யோடுதான் திரும்பி வருவீங்க..... நாட்டு வைத்தியர் காய்கறிக் கடைக்குப் போனமாதிரி:(

sathishsangkavi.blogspot.com said...

உண்மை தான் அண்ணே....

இன்றைய சந்தையில் முக்கிய வியாபாரமே கல்வி தான்...

அகலிக‌ன் said...

அன்றைய பெற்றோருக்கு தங்கள் பிள்ளை கல்வியில் சற்று பின்தங்கி போனாலும் அவனை ஒரு மெக்கானிக்காகவோ, கார்பெண்டராகவோ அல்லது பெயிண்டர் என ஏதாவது ஒரு தொழிளாளியாய் காண்பதில் எந்த மனத்தடையும் இருந்திருக்கவில்லை. இன்றைய பெற்றோர்கள் தங்க்கள் பிள்ளைகளை தப்பித்தவறியும் உடல் உழைப்பு சார்ந்த எந்த துறையில் கற்பனையும் செய்வதில்லை."கைதொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற பழமொழி என் ஐந்தாம் வகுப்பு பாடத்தில் இருந்தது, இன்று அதற்கு படதிட்டத்தில் மட்டும்ல்ல மக்கள் மனதிலேகூட எந்த இடம் என்பது கேள்வியே. மக்களின் இந்த மனநிலையை கல்விக்கூடங்கள் காசாக்கிக்கொள்கின்றன.

உலக சினிமா ரசிகன் said...

1975ல் எனது எஸ்.எஸ்.எல்.சி. கல்விக்கட்டணம் வெறும் 15 ரூபாய்.
இன்று அனைத்திலும் பெட்ரோல் விலையோடு, போட்டி போடுகின்றனர்.

Ranjani Narayanan said...

// கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் கவலைப்பட வேண்டியதாக உள்ளது.// மிகவும் உண்மை.

தரமான ஆசிரியர்கள் இல்லை. வெறுமனே புத்தகத்தை எடுத்துக் கொண்டுபோய் அப்படியே படித்து விடை குறித்துக் கொடுத்து மாணவர்களை நெட்டுரு போடச் சொல்லும் ஆசிரியர்களால் என்ன பயன்?

பள்ளிகளில் கட்டணம் உயர்ந்த அளவுக்கு கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா? சந்தேகம் தான்.

திரு அகலிகனின் கருத்துரை சிந்திக்க வேண்டிய ஒன்று.

எம்.ஞானசேகரன் said...

அருமையான நினைவலைகள். பொறுமையாய் படிக்கவேண்டும். இப்போது பயண அவசரத்தில் உள்ளேன். மீண்டும் வருகிறேன்.

ஜோதிஜி said...

உங்கள் சார்பாக அகலிகனின் கருத்தை முகநூலில் போட்டு வைத்தேன். இதைப் பற்றி எழுதத் தொடங்க இங்கே நடந்து கொண்டிருக்கும் அனுபவங்கள் குறித்து எழுதினாலே பத்து பதிவுகள் எழுதலாம் போல. மன உளைச்சலோடு எழுத வேண்டியதாக உள்ளது.

ஜோதிஜி said...

மாறி வந்த பண வீழ்ச்சி வளர்ச்சியோடு ஒப்பிட்டால் கூட இப்போதுள்ள தொகையை எதனோடு ஒப்பிடுவது என்றே தெரியல?

ஜோதிஜி said...

மிக ஆழமான கருத்து. நன்றி

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

உண்மைதான்.

ஜோதிஜி said...

கல்விக்கடைகள்

தலைப்பே நல்லாயிருக்குங்க.

ஜோதிஜி said...

பயணம் சிறக்க வாழ்த்துகள்

ESWARAN.A said...

ஜோதிஜி.. வணக்கம். இன்றைய தனியார் பள்ளிகளில் எக்ஸ்ட்ரா கோச்சிங் என்று ஸ்கேட்டிங், அபாகஸ், யோகா, நாட்டியம்,கீ போர்டு, கராத்தே, டேக் வாண்டோ, சிலம்பம்,செஸ்,என்று பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளினால், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.. எனது பேரன் 1-ம் வகுப்பு படிக்கிறான்.. இரண்டு நாள் முன்பு அவன் என்னிடம் சொல்லியது..” அப்பிச்சி, இந்த ஸ்கேட்டிங் மாஸ்டர் பிளஸ் டூ தான் படித்துள்ளார். காலேஜே போகவில்லை.. ஆனால் ஸ்கேட்டிங் மூலம் நிறைய பணம் வருகிறது.. நானும் ஸ்கேட்டிங்கை நன்றாக கற்றுக்கொண்டு மாஸ்டராகி பணம் சம்பாதிப்பேன்” என்று கூறினான். உங்களுக்கு எழுதுவதற்கே மன உளைச்சல் என்றால், இருபது வருட காலம் இரவு பகல் பாடுபட்டு, வளர்த்த பள்ளியில் உருவாக்கப்பட்டவையெல்லாம் அழிவதை கண்ணால் பார்த்துக்கொண்டு, கையறு நிலையில் உள்ள என்னை நினைத்துப்பாருங்கள்..

ஜோதிஜி said...

நாளை உங்களை சந்தித்து சில குறிப்புகளை கேட்டு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்களே நாம் ஏற்கனவே உரையாடிய விசயங்களை எழுதியமைக்கு நன்றி.

கிரி said...

//இந்த இரண்டு பள்ளிகளும் தனியார் நிர்வாகத்தில் அரசாங்கத்தின நிதியுதவி பெறும் பள்ளி என்கிற நிலையில் இருந்தது. அரசு பள்ளிகள் என்று எதுவும் தனியாக இல்லை. இன்று வரைக்கும் அப்படித்தான் உள்ளது.//

நானும் அரசு உதவி பெறும் பள்ளியான டயமண்ட் ஜுபிலி உயர் நிலைப் பள்ளியில் படித்தேன். புத்தக செலவு மட்டுமே! வேறு எதுவும் என்னுடைய படிப்பிற்கு செலவு செய்தது போல நினைவில்லை சீருடை தவிர

என்னுடைய LKG படிக்கும் மகனுக்கு நான் ஒரு வருடத்தில் செலவழித்த தொகையை என்னுடைய் பள்ளி படிப்பு முடியும் வரை கூட செலவு செய்தது இல்லை. மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம்.

இவர்கள் படிக்கும் படிப்பை நான் படிக்க ஐந்து வருடம் ஆகியது. ஒரு சில குழந்தைகள் புத்தகத்தை பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. படிப்பு செலவில் மட்டுமல்ல அவர்களின் படிப்பிற்கும் நமக்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்யாசம்.

இதன் பிறகு படிப்பிற்கு ஆகும் செலவை நினைத்தால் கலக்கமாகவே இருக்கிறது. கல்வி வியாபாரம் ஆனதால் இனி வரும் காலங்களில் மக்கள் அனைவருக்கும் தங்கள் சம்பாத்தியத்தில் அதிக செலவுள்ள பிரிவாக கல்வியும் வீட்டு வாடகையும் இருக்கும்.

எதிலோ படித்தது போல தனியார் எடுத்து நடத்த வேண்டிய மதுவை அரசாங்கம் நடத்துகிறது. அரசாங்கம் நடத்த வேண்டிய கல்வியை தனியார் நடத்துகிறார்கள்.

நாம் இந்த சூழலில் வாழ பழகிக் கொள்வது ஒன்று தான் நம்மை கொஞ்சம் ஆறுதல் படுத்தும்.

Unknown said...

இதேல்லாம் அரசியல்ல சகஜம் அய்யா.

moses dhilipkumar said...

http://latesttechnology-world.blogspot.iN

Unknown said...

\\பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்றறொரு நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இந்த கல்வி நம் குழந்தைகளுக்கு தகுதியான வாழ்க்கையைத் தருமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.//

உண்மைதான் ஜோதிஜீ, நாம் இந்த சூழலில் வாழ பழகிக் கொள்வது
ஒன்று தான் நம்மை கொஞ்சம் ஆறுதல் படுத்தும்.

தி.தமிழ் இளங்கோ said...

// வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும் தவறாமல் வந்து விழும். "மிஸ்க்கு தெளிவா புரிய வைக்க தெரியலைப்பா" என்பார்கள். கொடுக்கும் நாலாயிரம் சம்பளத்திற்கு அப்படிப்பட்ட ஆட்கள் தான் கிடைப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு. //

நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது வைத்திருக்கும் எதிர்கால பயம் தேவையற்றது. இந்த பயத்தின் காரணமாகவே அடிக்கடி நீங்கள் குழந்தைகளோடு பள்ளி ஆசிரியைகளைப் பற்றி கலந்துரையாடல் செய்வதாகத் தெரிகிறது. குழந்தைகளுக்கு ஆசிரியைகள் மீது நம்பிக்கை வரச் செய்யுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

ஜோதிஜி said...

யோசிக்க வைத்த வரிகள்.

Unknown said...

அருமையான பதிவு.. ஆனால் இத்தனை அறிவுள்ளவர் ஏன் தன் பிள்ளையை ஆங்கிலவழியில் தனியார்பள்ளயில் படிக்கவைக்கிறார் என்பதுதான் புரியவில்லை..