Monday, May 06, 2013

பாலைத்திணை



நான்கு பேர்களும் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.  

வண்டியை வீட்டின் முன் நிறுத்தும் போது எப்போதும் போல கத்திக் கொண்டு மேலே விழுவது போல வந்தார்கள். ஆனால் அதை ரசிக்கும் மனோநிலையில் நானில்லை. 

வரவேண்டிய கொரியர் ஒன்று வராதது முக்கிய காரணமாக இருந்தது. ஊருக்குச் செல்லும் போது  கட்டாயம் கையில் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன்.   

சென்னையில் உள்ள நண்பர் உறுதியளித்து இருந்தார்.

நிச்சயம் இரண்டு மணிக்குள் கிடைத்து விடும் என்று சொன்னார்கள் என்றார்.

கடந்த மூன்று மாதங்களில் இந்த கொரியர் சேவைகளின் உள்ளார்ந்த அத்தனை விசயங்களையும் பார்த்த காரணத்தால் எனக்கு நம்பிக்கை வரவில்லை.  

வெளியே காத்திருந்தவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன். 

நானே போய் வாங்கி விடுகின்றேன் என்று மறுபடியும் திருப்பூருக்குள் மத்திம பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தை நோக்கி மன உளைச்சலோடு சென்ற போது உள்ளே கழிவிரக்கம் மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்ததை என்னால் உணர முடிந்தது.  

போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டே உள்ளே மனசாட்சி நக்கல் விடுவதை உணர முடிந்தது.

என்னமோ பெரிய பாசக்காரன் இல்லை என்று சொன்னாய்?  ஊருக்கு கிளம்பும் குழந்தைகளை அனுப்பி வைக்க மனமில்லாமல் ஏன்டா இப்படி சோர்ந்து போயிருக்கிறாய் என்று கேட்டது.

கேலியாகத்தான் எனக்குத் தெரிந்தது.

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இன்னோருவன் வருவானே?  அப்போது வளர்ந்த மரத்தை வேறொரு இடத்தில் புடுங்கி நட வேண்டியிருக்குமே? என்று மனம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது.  

உள்ளே இருந்த மொத்த கோபமும் கொரியர் அலுவலகத்தில் முன்னால் அமர்ந்திருந்த பெண் மேல் கொட்ட  பதில் பேசாமல் அமைதியாக வந்த பார்சலை எடுத்துக் கொடுத்தார்.

கோடை விடுமுறையில் ஊருக்கெல்லாம் எங்கேயும் செல்ல மாட்டோம் என்றவர்கள் இரண்டு நாளில் மாறிவிட்டார்கள் என்பதே எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

அங்கே யூபிஎஸ் இருக்காது, கம்ப்யூட்டர் இருக்காது என்று ஆயிரெத்ட்டு வக்கணையாக பேசிய மூவரும் இதோ இப்போது நாங்க ரொடியாயிட்டோம்.  நீங்க தான் லேட்டு என்கிறார்கள்.

மனைவி என்னை உற்று கவனித்துக் கொண்டே இருந்துருப்பார் போலும்.  

"உங்களுக்கு பொறுக்காதே, வருஷத்ல ஒரு முறை தான் போக முடியுது.  உங்களுக்கு மனசே வரலையே" என்றார்.

நானே அவளுக்கு பலமுறை அறிவுரை சொன்னது இப்போது என் நினைவில் வந்து போனது. 

"பாசம் வைக்காதே.  கடமை என்பதாக உன்னை இப்போதே மாற்றிக் கொள்.  நாளை இவர்களின் தன்மை மாறும் போது உன்னால் தாங்க முடியாது.  நான் பலவற்றையும் கடந்து வந்து விட்டேன்". என்று பெரிய தத்துவஞானி போல சொன்ன எனக்கு இப்போது உண்மைகள் உரைத்தது.

எனக்கே என் மனோபாவம் வினோதமாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

சார்ந்து வாழுதல் என்பதும் சேர்ந்து வாழுதல் என்பதும் எப்போது தொடங்கியிருக்கும் என்று சிந்திக்கத் தோன்றியது.  

குறிப்பிட்ட கால கட்டத்தில் குடும்பத்தினர் எவருடனும் தொடர்பு கொள்ளாமல் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. முரட்டுத்தனமாக வேகத்தில் பயணித்த வாழ்க்கைச் சுவடுகள் தந்த காயங்கள் ஒவ்வொன்றும் நினைக்கத் தோன்றியது. ஆனால் திருமணம் என்பதும் அரவணைக்க, ஆறுதல்படுத்த ஒரு கரம் என்பதையும் மீறி வேறு ஏதோவொரு புள்ளியில் இணைத்து வைத்து விடுகின்றது.

பரஸ்பரம் புரிந்து கொண்டவர்கள், புரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் ஆத்மார்த்த அன்புக்குள் சிக்கிக் கொண்டவர்கள் எப்போதும் வழி தவறுதில்லை.

நானே பலமுறை வெறுத்துப் பேசியிருக்கின்றேன்.  

அக்கா வீட்டுக்காரரை திட்டியிருக்கின்றேன்.  "எனக்கும் மட்டும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியிருக்காவிட்டால் இன்னும் கூட பல படிகள் வாழ்வில் ஏறியிருக்க முடியும்" என்று சொல்லியிருக்கின்றேன்.  

ஆனால் அலுவலகத்தை விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்று மாறிப்போன எண்ணத்தில் வாழும் என்னை மனைவி தான் பலமுறை வெறுப்பேற்றியிருக்கிறாள்.

"ஒவ்வொருத்தனும் எங்கெங்கோ சுற்றி அலைந்து விட்டு வருகிறார்கள்.  என்னை உசுரெடுக்கத்தான் வேகமாக வந்து சேர்றீங்க" என்று அலுத்துப் போயி சொல்லியிருக்கிறாள்.  

காதில் வாங்காமல் எங்கே சாப்பாடு? என்று கேட்டவனை சிரிப்போடு முறைப்பாள்.

"மொத்த குடும்பமே தீனிக்குடும்பம்" என்று சொல்லிக் கொண்டே பறிமாறும் போது அலுவலக மன உளைச்சல் அந்த சாப்பாடு ருசியில் மாறிப் போயிருக்கும்.

ஏறக்குறைய இரைச்சலோடு வாழ பழகி விட்ட தற்கால சமூகம் போலவே மனம் நிலையில்லாமல் தவிக்கின்றது.  மனைவி ஊருக்கு கிளம்பிவிட்டாள் என்ற குதுகலிக்கும் சராசரி மனிதனாக இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தால் சீண்டிக்கொண்டே இருக்க பழகிவிட்ட வாழ்க்கையில் இப்போது வீடென்பது மயான அமைதி போலவே இருக்கிறது.

வெளியில் அடித்த மண்ணெல்லாம் வீட்டுக்குள் கிடக்க துடைப்பம் எங்கே என்று தேடிக் கொண்டே இருக்கேன். 

வீட்டை இன்று கூட்டவில்லையா? என்று குறை சொல்லிக் கொண்டு உள்ளே நுழைபவனுக்கு இரண்டு நாளில் குப்பையாக இருக்கும் வீட்டுக்குள் சுத்தம் செய்ய மனமில்லாமல் வந்து அடிக்கும் காற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  

திடீரென்று சமையல் கட்டில் உள்ளே நுழைந்து தேவைப்பட்டதை தேடி அலை பாயும் கைகளை பிடித்துத் தள்ளி "நீங்க அங்கே போய் உட்காருங்க.  நான் கொண்டு வந்து தருகின்றேன்" என்று முதுகை பிடித்து தள்ளுபவள் இல்லாது சமையல்கட்டில் கழுவாத பாத்திரங்கள் சேர்ந்து கொண்டேயிருக்க சோர்ந்து போய் இருக்கின்றேன்.

"அப்பா செய்திசேனலைத்தவிர உங்களுக்கு வேறு எதுவுமே பிடிக்காதே" என்று கத்திக் கொண்டே ரிமோட்டை தூக்கிக் கொண்டு சென்றவளை கெஞ்சி வாங்கிய கைகள் இப்போது சும்மா கிடக்கும் ரிமோட்டை சீண்ட மனமில்லாத மூன்று நாட்களாக அவர்கள் வைத்த இடத்திலே இருக்கிறது.. 

மூன்று நாட்களாக சுருட்டி வைக்காமல் ஒரே இடத்தில் விரித்துக் கிடக்கும் பாயில் அப்படியே சாய்கின்றேன்.

அடித்த காற்றில் மண் உள்ளே வந்து விழுந்திருக்கும் போல.  

வியர்வையில் கசகசத்த உடம்பை கழுவ மனமில்லாத நிலையில்  தலை சாய்த்தால் வராத தூக்கத்தை சபித்துக் கொண்டே வெளியே வந்து அமர கதவைத் திறந்த போது காத்திருந்த ஈசல் கூட்டம் உள்ளே கூட்டமாக பறந்து வந்தது.

இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஈசலின் வாழ்க்கை என்னவாகும் யோசித்துக் கொண்டே வீட்டின் வெளியே இருந்த வேப்பமரத்தை பார்த்த போது பறந்த வந்த இலை என் முகத்தில் வந்து விழுந்தது.


பழுப்பேறிய அந்த அலை இந்த வாழ்க்கையைப் பற்றி சொல்லாமல் புரியவைத்தது..

தொடர்புடைய பதிவு

20 comments:

துளசி கோபால் said...

சம்சாரமுன்னா அது சும்மா இல்லையாக்கும்!!!

இருக்கும்போது அருமை தெரியாது.

தாற்காலிகப் பிரிவு அன்பை மேம்படுத்தும் அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நாளைக்கு:-)

ஊரில் இருக்கும்போது அலுப்பாக தெரியும் சில வேலைகளும் எண்ணங்களும் கோபால் ஊரில் இல்லாதபோது அப்படியே தலைகீழாக மாறிவிடும்.

ஐயோ பாவம். இப்படியெல்லாம் நம்மைக் கட்டிக்கிட்டு அழறாரேன்னு பாசம் பொங்கி வழியும். ப்ளேன் லேண்டிங்னு ஏர்ப்போர்ட்டில் இருந்து கூப்பிட்டுச் சொன்னதும்.......... பாசம்.....போயேபோச்:-)))))

திண்டுக்கல் தனபாலன் said...

ஏக்கம் வரிகளில் நன்றாகவே தெரிகிறது... புரிகிறது... ஆத்மார்த்த அன்புக்குள் சிக்கிக் கொண்டவர்கள் எப்போதும் வழி தவற வாய்ப்பேயில்லையாதலால், உள்ளுக்குள் இருக்கும் தத்துவஞானி சொன்னது போல் நடக்கவும் முயற்சி செய்யலாம்... ஆனாலும் சிரமம் தான்... அலையாக வந்து விழுந்ததால் இலை அலையாகி விட்டதோ...?

ராஜ நடராஜன் said...

//சம்சாரமுன்னா அது சும்மா இல்லையாக்கும்!!!//

துளசி டீச்சர்!கிளிப்பிள்ளை மாதிரி உப்பை போடாதேன்னு சொல்லித்தந்தாலும் திரும்ப திரும்ப அதையே செய்யும் போது எகிறும் ரத்தக்கொதிப்பு அனுபவிக்கிறவனுக்குத்தானே தெரியும்!

உப்பாவது பரவாயில்லை!அதனைத் தொடர்ந்து "உப்பு போடாதவளா தேடி கட்டிக்கவேண்டியதுதானே"ன்னு வாய் நீளும் பாருங்க.......சம்சாரம்ன்னா சும்மா இல்லையாக்கும்:)

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்ற சமயம் இந்த உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வந்து போகும்! சிறப்பாக விவரித்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

அகலிக‌ன் said...

மூன்று நாளாய் கவனிக்கப்படாத ரிமோட் என் கவனத்தை ஈர்த்தது. என் வீட்டில் காலை 7.30 முதல் 8.00 வரையும் இரவு 9.00 முதல் 10.00 வரயிலும் என் நேரம் இது எங்களுக்குள்ளான ஒரு ஜெண்டில்மேன் அக்கிரிமெண்ட். ஆனாலும் தினமும் அந்த நேரத்தில் ரிமோட்டை அவர்களிடமிருந்து வாங்குவதற்குள் 10 நிமிடங்கள் ஓடிவிடும். என்றாவது கேட்டதும் கொடுத்துவிடுவார்கள் ஆனால் அன்று மனம் கேட்காமல் அவர்களுக்கே அவர்கள் சேனலை வைத்துகொடுத்துவிடுவேன்.

தவறு said...

எங்க வீட்டு அம்மணி ஊருல இல்லாதப்ப அவங்க செஞ்ச வேலை நாம செய்யிறப்ப தான் வீட்டு வேலையில என்னால பயிற்சி செஞ்சுக்க முடியும் . எப்படி தான் சரியா செஞ்சாலும் ஓரு இல்லாமை வீட்டுக்குள் நிறைந்து இருக்கும்.

ஆனாலும் அன்பின் ஜோதிஜி ராஜ நடராஜன் கருத்தையும் வழிமொழிகிறேன்.

இப்படியும் அப்படியும் அம்மணி இல்லாமை தற்காலிக சாபம் அனுபவிக்கதான் வேண்டும்.

சென்னை பித்தன் said...

அனைவருக்கும் ஏற்படும் உணர்வுகளை அருமையாகப் படம் பிடித்து விட்டீர்கள் ஜோதிஜி!

ஜோதிஜி said...

படம் பிடித்து காட்டி விட்டீங்க.

இக்கறைக்கு அக்கறை பச்சை.

வெளியே செல்லாதவர் வெளியே சென்றால் என்னவாகும்?

நீங்களும் ரெண்டு நாளைக்கு இங்கே வந்துட்டு போங்களேன் என்ற அழைப்பு தான் வருது.

ஜோதிஜி said...

உண்மைதான்

ஜோதிஜி said...

உப்புக்கு மட்டும் தானா? மிச்சம் சொச்சம்?

டீச்சருக்கு எங்கே புரியப் போகுது.

ஜோதிஜி said...

வாங்க சுரேஷ்

ஜோதிஜி said...

மிகப் பெரிய சந்தோஷம் சென்ற இடத்தில் தொ.கா மறந்து ஆடி ஓடி விளையாடுவதாக கேள்விப்பட்ட போது.

ஜோதிஜி said...

சமையல் செய்து கொண்டே இந்த நேரத்தில் உங்கள் பதிலை படித்தேன் ராஜ்

ஜோதிஜி said...

ஏற்கனவே பழைய பதிவான பழைய குப்பைகள் என்ற பதிவுக்கு நீங்க கொடுத்த பதில் என் நினைவில் வந்து போகின்றது. நன்றிங்க.

Avargal Unmaigal said...

////tஇன்னும் பத்து வருடங்கள் கழித்து இன்னோருவன் வருவானே? அப்போது வளர்ந்த மரத்தை வேறொரு இடத்தில் புடுங்கி நட வேண்டியிருக்குமே? என்று மனம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. ////

மிக அருமையான உணர்ந்து எழுதிய வரிகள். ஒவ்வொரு அப்பாவிற்கும் ஏற்படும் வலிகள், நமது இதயத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் வைக்கும் இதயமாற்று சிகிச்சை


மனைவி, குழந்தைகள் கூட இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. நான் அநேக நாட்களில் பாத்திரம் கழுவதில் இருந்து எல்லா வேலைகளையும் செய்வதால் அதில் எனக்கு பிரச்சனைகள் இல்லை ஆனால் வோர்க் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றால் வீடு வெறுமையாக தோன்றும்.

Anonymous said...

Greetings!
If you're looking for an excellent way to convert your Blog visitors into revenue-generating customers, join the PayOffers.in Ad Network today!
PayOffers India which is one of the fastest growing Indian Ad Network.
Why to Join PayOffers India?
* We Make Your Blog Into Money Making Machine.
* Promote Campaigns With Multiple Size Banner Ads.
* Top Paying and High Quality Campaigns/Offers...
* Earn Daily & Get Paid Weekly Through check,Bank deposit.
* 24/7, 365 Days Online Customer Support.
Click here and join now the PayOffers India Ad Network for free:
http://payoffers.co.in/join.php?pid=21454
For any other queries please mail us at Neha@PayOffers.co.in
With Regards
Neha K
Sr.Manager Business Development
Neha@PayOffers.co.in
www.payoffers.co.in
Safe Unsubscribe, You are receiving this relationship message, if you don't want to receive in the future, Reply to Unsubscribe@PayOffers.co.in Unsubscribe

ஜோதிஜி said...

எளிதாக பாச வலையில் சிக்கிக் கொண்டால் பாரம் சுமக்கும் மனிதராகத்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டியிருக்கும் போல.

Unknown said...

என்ன ?இரண்டு நாள் கழித்து வந்து விடுவார்கள்;புகைப்பட தொகுப்பை[ஆல்பம்]எடுத்து வைத்து பார்த்து மகிழுங்கள்.தனிமை மறக்கும்....

சீனு said...

பதிவு ரசித்துப் படிக்க முடிஞ்சது ஜோதிஜி

Rathnavel Natarajan said...

அருமையான் பதிவு. வீட்டில் குழந்தைகள், மனைவி ஊரில் இல்லையென்றால் காலண்டர் கிழிக்கத் தோன்றாது.
வாழ்த்துகள் திரு ஜோதிஜி.