Wednesday, March 30, 2011

இந்திய அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டவாறு .................

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நாமும் வேட்பாளாராக மாற சென்ற பதிவில் சொன்னபடி வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்து அத்துடன் வங்கி கணக்கு, சொத்து குறித்த சான்றிதழ்கள், வழக்குரைஞர் சான்றிதழ்கள், கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பகுதியையும் சரியாக பூர்த்தி செய்து உள்ளோமோ என்று கவனித்து தேவைப்படும் அத்தனை இடங்களிலும் நாம் கையொப்பமிட்டு தைரியமாக சிங்க நடை போட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்றாலே ஒரு தனிப்பட்ட கம்பீரம் உங்களுக்கு வந்து விடுவதை உணரக்கூடும்.  


காரணம் இந்தியாவில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் இது போன்ற சமயத்தில் நாம் எத்தனை சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  நமக்காக எத்தனை வாய்ப்புகள் உள்ளது என்பதை முழுமையாக உணர முடியும்.  

அந்தந்த வருவாய் கோட்டாட்சியாளர் தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 

இவர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் அமர்ந்திருக்கும் நபர் நம்மை வரவேற்பார்.  வரிசையில் நின்று அவரிடம் நாம் பூர்த்தி செய்து வைத்துள்ள மொத்த விண்ணப்ப படிவங்களையும் கொடுத்தால் நம்முடைய பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண் போன்றவற்றை குறிப்பிட்டு ஒரு துண்டுச்சீட்டை நம்மிடம் கொடுப்பார். அதில் வரிசை எண் போடப்பட்டிருக்கும்.

அந்த எண் சொல்லி அழைக்கும் போது அலுவலகத்தின் அடுத்த பகுதிக்குள் செல்ல அனுமதி கிடைக்கும். அங்கே இருவர் அமர்ந்திருப்பார்கள் அவர்கள் கையில் நான்கு பக்கம் உள்ள விண்ணப்ப படிவம் இருக்கும்.  இதுவரையிலும் நாம் கையாண்ட எந்த படிவத்திலும் ஆங்கிலம் என்பது மருந்துக்குக்கூட இருக்காது.

இப்போது வழங்கப்படும் படிவத்தில் ஆங்கிலப் படிவமும் இருக்கும். நம் பெயரை முகவரியை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பதுடன் மற்ற சம்பிரதாய விசயங்களையும் கொடுக்கப்பட்ட மற்ற படிவங்களிலும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இனிமேல் தான் உங்களுக்கு ஒரு வித்யாச அனுபவம் கிடைக்கும். 

நாம் சராசரி, சாமான்யன் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு உள்ள தேர்தல் அதிகாரி (கோட்டாட்சியர்) இருக்கும் அறைக்குள் சென்றதும் கிடைக்கும் ராஜமரியாதை ஆச்சரியப்படத்தக்கது. 

அந்த அறையில் கோட்டாட்சியர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரின் பக்கவாட்டில் ஐந்து அலுவலர்கள் (இரண்டு பெண் அலுவலர்) அமர்ந்து இருப்பார்கள்.  முதல் நபர் நம்முடைய துண்டுச்சீட்டை பெற்றுக் கொண்டு அடுத்தவரிடம் நம்முடைய விண்ணப்ப படிவம் மற்றும் அதனைச் சார்ந்த மொத்த சான்றிதழ்களையும் வழங்குகிறார். இவர் ஒவ்வொன்றையும் சரிபார்த்து விட்டு அடுத்தவரிடம் கொடுக்க அவர் நாம் சொல்ல வேண்டிய பிரமாண பத்திரத்தையும் கொடுத்து கோட்டாட்சியரிடம் கையெழுத்து வாங்க அனுப்புகிறார். 

நம்மிடம் வாங்கிய அந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பு பக்கவாட்டில் நிற்கும் புகைப்படக்காரர் கோட்டாட்சியருடன் சேர்த்து நம்மை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.  நாம் உள்ளே நுழைந்தது முதல் இறுதியாக பிரமாண பத்திரம் வாசிக்கும் வரையிலும் உள்ளேயிருக்கும் வீடியோகிராபர் மொத்த நிகழ்வுகளையும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  குறிப்பாக பிரமாண பத்திரம் வாசிக்கும் போது நம்மை மட்டும் தனியாக அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை படமாக்கிக் கொள்கிறார்.


இப்போது பக்கவாட்டில் கடைசியாக இருக்கும் அந்த அலுவலரிடம் மீண்டும் மொத்த விண்ணப்பபடிவங்களையும் கொடுத்து விட அவர் ஒரு பிரமாண பத்திரத்தை கொடுத்து எழுந்து நின்று வாசிக்கச் சொல்கிறார். அதன் சுருக்கம் இது.

.................................................. ......................................................இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வேட்பாளராகிய ........................................................ தேதி............................................. அன்று ........................................................ மணிக்கு இந்திய அரசியமைப்பில் சொல்லப்பட்டுளளவாறு ஆண்டவன்/உளமாற மீது சூளுரைத்து உறுதி கூறுகின்றேன்.

இறுதியாக கையொப்பமிடும் போது புகைப்படம் எடுக்கப்படுகின்றது.

விடைபெறும் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டதற்கான சான்று, நம்முடைய வேட்பு மனு எப்போது பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளபடும் என்பதற்கான விபரங்கள் அடங்கிய படிவம், நாம் வேட்பு மனுக்காக செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் பத்தாயிரத்திற்கான ரசீது (இது தான் டெபாஸிட் தொகை என்றழைக்கப்படுகின்றது. கடந்த தேர்தல்களில் சுயேச்சைகள் அதிகளவில் போட்டியிட்ட காரணத்தால் தான் பத்தாயிரம் என்கிற அளவிற்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது)  பத்திரிக்கையில் டெபாஸிட் காலி என்று வார்த்தை வருமே?  ஜெயித்த வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட சதவிகிதம் வாக்கு வாங்காத பட்சத்தில் வேட்பாளர் கட்டிய பணம் திருப்பி தரப்படமாட்டது.

இவற்றுடன் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விதிமுறைகள் அடங்கிய தாள்கள், தேர்தல் முடிந்தவுடன் நாம் ஒப்படைக்க வேண்டிய கண்க்கு குறித்த விபரங்களுக்கான வழிகாட்டிகள் அடங்கிய காகித தாள்கள் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடைமுறைகள் குறித்து ஏறக்குறைய 30 பக்கங்கள் உள்ள ஒரு கையேட்டை பெற்றுக் கொண்டு வந்து விட் வேண்டும். 

தேர்தல் அதிகாரி குறிப்பிடப்பட்டுள்ள நாளில் சென்று நமக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சடங்கு நடைமுறையில் செலவழிக்கும் தொகை ரூபாய் பத்தாயிரம்.  மொத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற வேட்பாளராக ரூபாய் 11500 போதுமானது.   இதற்கு பிறகு தான் அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள 'திருமங்கலம் சூத்திரம்' போன்ற வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்ற பஞ்சாயத்து வருகின்றது. ஆனால் இப்போது நடக்கப் போகின்ற தேர்தலில் அதற்கும் வாய்ப்பு குறைவு. கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நம் தலைவர்கள் எத்தனை பார்த்திருப்பார்கள்? 

ஆனால் மொத்தத்திலும் நமக்கு ஒரே ஒரு பிரச்சனையுண்டு. 


தில்லாலங்கடி மூலம் நம்முடைய வேட்புமனு நிராகரிப்பு ஆகாமல் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

9 comments:

ப.கந்தசாமி said...

என்னங்க நீங்க, இந்தப் பதிவ பத்து நாளைக்கு முன் போட்டிருக்கப்படாதுங்களா? இப்ப பாருங்க, நான் வேட்பாளரா ஆக முடியாமப் போச்சு பாருங்க? நாட்டுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்?

Chitra said...

மொத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற வேட்பாளராக ரூபாய் 11500 போதுமானது. இதற்கு பிறகு தான் அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள 'திருமங்கலம் சூத்திரம்' போன்ற வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்ற பஞ்சாயத்து வருகின்றது. ஆனால் இப்போது நடக்கப் போகின்ற தேர்தலில் அதற்கும் வாய்ப்பு குறைவு. கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் தலைவர்கள் எத்தனை பார்த்திருப்பார்கள்?


........விடாகண்டர்களும், கொடாகண்டர்களும் கதை மாதிரி ஆகி போச்சு... :-(

ராஜ நடராஜன் said...

//இந்தியாவில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் இது போன்ற சமயத்தில் நாம் எத்தனை சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமக்காக எத்தனை வாய்ப்புகள் உள்ளது என்பதை முழுமையாக உணர முடியும். //

இந்தியாவின் மீதான காதலும் வெறுப்புமே இந்த ஜனநாயக உரிமையும்,குறைபாடுகளும்தான்.

ராஜ நடராஜன் said...

//மொத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற வேட்பாளராக ரூபாய் 11500 போதுமானது.//

அடுத்த தேர்தலில் டெபாசிட் போனாலும் பரவாயில்லைன்னு நின்னுட வேண்டியதுதான்!

Bibiliobibuli said...

ஜோதிஜி,

முதலில் படங்கள் அருமை.

தேர்தல் ஆணைய விதிமுறைகளில் சினிமா சம்பந்தப்பட்ட பிரபலங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஏதாவது விதிமுறை இல்லையா? அரசியல்வாதிகளின் காமெடியை விட இவர்கள் தனி track இல் நகைச்சுவை படைக்கிறார்கள்.

தேர்தலில் ஒருவருக்கு ஒரு முறைதான் வாக்களிக்கிறீர்கள். பிறகு அவரின் ஆயுள் வரைக்கும் நீங்கள் வாக்களித்தவர் அரசியலை விட்டு நீங்கவே மாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். Success next exit, சரி தான். Success அரசியல்வாதிக்கு. வாக்களித்தவர்கள் எல்லாம் LOSERS!

Anonymous said...

உலக கோப்பை இறுதி போட்டியில் தமிழின விரோதிகள் இந்தியா இலங்கை மோதுகிறது.அதை உண்மை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

Unknown said...

ஹி ஹி இவ்வளவு மேட்டர் இருக்குங்களா? அதனாலதான் பாதி பேரு போட்டியிடறது இல்லை போல, அந்த டெபாசிட் தொகையை எதுக்கு வாங்குறாங்க, ஓட்டு போடறது மட்டும் ஜனநாயக கடமையின்னா தேர்தல்ல நிக்குறதும் ஜனநாயக கடமைதான்ன சார், அப்புறம் அதிகெ பேரு சுயேட்சையா நிக்குறாங்கன்னு சொன்னா எப்படி, அஞ்சு வருசத்துக்கு ஒருதடவைதான் தேர்தல் வருது, எத்தனை பேரு நின்னாலும் தேர்தல்ல போட்டியிட வைக்கணும், அதவிட்டா தேர்தல் கமிசனுக்கு என்ன வேலை?

http://thavaru.blogspot.com/ said...

படங்கள் இப்பதிவில் அதிகம் அன்பின் ஜோதிஜி.விபர கையேடு...அப்புறம்..

Unknown said...

சட்ட சபை தேர்தலில் போட்டிடில 11500 போதும்...
சரி ஜெயிக்க ?