Friday, September 03, 2010

சாயமே இது பொய்யடா

ஆய்த்த ஆடைகள் உருவாக்கத்தின் தொடக்கமென்பது நூல் உள்ளே வந்து இறங்குவதிலிருந்து தொடங்குகிறது.  அதுவே பின்னலாடையாக மாற்றம் பெறுவதற்கு பின்னலகம் என்ற நிட்டிங் எந்திரங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது.  மார்பு அளவுகளைப் பொறுத்து தனித்தனியாக உள்ள எந்திரங்கள் மூலம் தேவைப்படும் அளவிற்கு துணியாக உருவாகின்றது.  இப்போது அந்த துணி இரண்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.  வெள்ளை என்றால் சலவை பட்டறை.  பல நிற வண்ணமென்றால் சாயப்பட்டறைகள். 

வெள்ளையை மட்டும் உருவாக்கி கொடுப்பவர்களுக்கு எளிய மூதலீடுகள் போதுமானது..  வணணமாக்க ஐம்பது லட்சத்தில் தொடங்கி நூறு கோடி வரைக் கும் அவரவர் தகுதியைப் பொறுத்து உருவாக்கி வைத்துருப்பார்கள். 10 கிலோ துணி முதல் ஆயிரம் கிலோ வரைக்கும் எட்டு மணி நேரத்தில் விரும்பும் நிறமாக வெளியே தள்ளும் நவீன எந்திரங்கள் உண்டு. எந்திரத்திரங்களுக்கான முதலீடு தவிர தேவைப்படும் மற்ற வசதிகளுக்குத் தான் பணத்தை வாரி இறைக்க வேண்டும். 

கை படாத ரோஜாவாக பளபளவென்ற பட்டாடை போல அடித்து துவைத்து நிறமாக்கி உலர வைத்து வெளியே தள்ளும்.  வேண்டிய அளவுகளில் விதவித மாய் ரகரகமாய் ஜொலிப்பாய் மடிப்பு கலையாத புத்தம் புது ரோஜா போல் வந்து சேரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நவீனம்.  

ஆனால் அத்தனையும் வெளிநாட்டு மூளைகளின் நளினம். ஒரே கூரையின் கீழ் மொத்த வசதிகளையையும் வைத்துருப்பவர்கள் விடாத மழை என்றாலும் கவலைப்படாது கப்பலில் 365 நாளும் ஏற்றிக் கொண்டே இருக்க முடியும். அவர்களின் வங்கிக் கணக்கு என்றுமே சொங்கிப் போய்விடாது.

என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டுருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழை யாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே.  ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே?  அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்.
நீங்கள் பத்திரிக்கைகள் படிப்பவரா?  நடிகைகள் படம் பார்த்து நகரும் போது ஏதோ ஒரு பக்கவாட்டில் இந்த சாயப்பட்டறை குறித்து துணுக்கு செய்திகளாக படித்து இருக்க வாய்ப்பு உண்டு. திருப்பூரில் ஆய்த்த ஏற்றுமதி தொழில் சூடு பிடிக்காமல் இருந்த 1984 ல் இந்த துறையில் சுமாராக 30 நிறுவனங்கள் செயல்பட்டு இருக்க லாம். தொடக்கத்தில் பெரிய அளவிற்கு நவீன உபகரணங்கள் இல்லை. ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும்.  சொந்த இடம், வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து எவர் வேண்டுமானாலும் இந்த தொழிலில் இறங்கலாம் என்ற சூழ்நிலை.  

செவ்வக வடிவில் ஒரு இரும்புத் தொட்டி.  70 லிட்டரில் தொடங்கி 700 லிட்டர் முதல் அதிகபட்ச வரைக்கும் கிலோ பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தொட்டியின் மேல் கம்பி உருளைகள்.  இதனை இயக்க மின்சார மோட்டார் மற்ற உபகரணங்கள்.  கம்பி உருளையில் கொண்டு வரப்படும் துணிகள் ஏற்றப்பட்டு, சுழன்று அது தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டுருக்கும்.

தண்ணீரில் நன்றாக மூழ்கி வந்து கொண்டு இருக்கும்,  துணி தன்னுடன் வைத்து இருக்கும் பஞ்சு போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை உதறித்தள்ளும்.  துணியில் பிற்பாடு ஊற்ற்படும் வெட்டிங் ஆயில் தான் சாயம் கலப்பதற்கு முன் செய்யப்படும் சடங்கு மந்திரம் போன்றது.

ஆனால் இந்த தொழிலுக்கு முக்கியத் தேவை தண்ணீர் வசதி. சிலருக்கு இயல்பாக நிறுவனங்களுக்குள் ஆழ் குழாய் வசதிகள் இருக்கும்.  வசதி இல்லாதவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நீருக்கு பக்கத்து ஊரில் உள்ள விவசாய கிணற்றில் இருந்தது டேங்கர் லாரி கொண்டு வந்து சேர்க்கும். தொடக்கத்தில் வயல் விவசாயத்தை விட இந்த தண்ணீர் விற்று பணக்காரர் ஆனவர்கள் பலபேர்கள்.  

ஆனால் இப்போது எல் அண்டு டி நிறுவனம் உள்ளே வந்து இதற்கென்று ஒப்பந்தம் எடுத்து மிகப் பெரிய தொழிலாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு லிட்டர் ரெண்டு பைசா என்று விற்றுக் கொண்டுருந்தவர்கள் இப்போது ஆறு பைசா வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.  இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு என்பது பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது.  பவானி ஆற்றை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள்.

சாய்பபட்டறைகளுக்குள் பெரிய மூதலீடுகளை போட்டு வராக்கடன்களை வசூலித்து தம் கட்ட வசதியிருந்தால் வாய்ப்புகள் தேடி வரும். இதுவே இந்த தொழில் தொடங்க போதுமானது. முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரைக் கும் தங்களுக்குள் இருக்கும் அனுபவம் மட்டுமே மிகப் பெரிய முதலீடு என்று நம்பி ஜெயித்தவர்கள்.  அதை வைத்துக் கொண்டு தான் சாதித்து தங்களை தக்க வைத்துக் கொண்டார்கள், . 
 இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப்பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகெங்கை,கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை உடைய இளைஞர்கள்.. படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல் வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரைக்கும் அத்தனை பேர்களையும் இந்த தொழிலில் பார்க்கலாம்.

மிகப் பெரிய ஆச்சரியம் கடைசி வரைக்கும் உடல் உழைப்பாளியாகவே இருந்து விடுவது தான்.  விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் மேலேறி வருகிறார்கள்.   . 

சாயமேற்ற வேண்டிய 20 கிலோ நனைந்த துணியை தூக்குவதற்கு சாதாரண மானவர்களுக்கு தனிப் பயிற்சி வேண்டும்.  ஆனால் நம் மக்கள் அட்டாகாசமாக தூக்கிக் கொண்டு விஜயகாந்த் கதையை பேசிக் கொண்டு நகர்ந்து கொண்டு இருப்பார்கள்.  பார்க்கும் நமக்கு மூச்சுப் பிடிப்பு வந்து விடும். 

முதலாளிகளும் பெரிய படிப்பு படித்தவர்களோ, கெமிக்கல் இன்ஜி னியரிங் அறிவு பெற்றவர்களோ அல்ல. ஒன்று ஏதோ ஒரு இடத்தில் பணிபுரிந்து இருப்பார்கள்.  அல்லது பார்த்துக் கொண்டு வந்து ஆசையில் தொடங்கி இருப்பார்கள். 

தொடக்கத்தில் உள்ளே வராத நவீன ங்கள் குறித்து எவருக்கும் அக்கறை இல்லை. அவரவருக்குண்டா அயராத உழைப்பே அத்தனையும் வெற்றியாக்கியது.

ஒவ்வொரு முதலாளிகளும் பெற்ற வெற்றிகள் அவர்களை பணக்காரர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியது. கல்லு பூமியெல்லாம் இவர்கள் கடைக்கண் பட்டு காசு கொழித்த பூமியாக மாறியது. 

ஆனால் விவசாய பூமிகளை மட்டுமே நம்பி வாழ்ந்த சமூகத்தின் முகவரியே இன்று மொத்தமாய் மாறி அலற வைத்து விட்டது. 
ஒரு கிலோ துணியை விரும்பும் நிறத்திற்கு கொண்டு வரவேண்டு மென்றால் எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும்.  ஒரு கிலோ என்பது மூன்று அல்லது நான்கு ஆடைகளை உருவாக்க உதவும். துணிகள் நிறமான பிறகு வெளியேற்ற ப்படும் அந்த நீர் என்பது மற்றொரு போபால் விஷ வாயுவுக்கு சமமானது.  உப்பும், அமிலமும், காரத் தன்மையும் கலந்து சகிக்க முடியாத நாற்றத்துடன் பூமியில் கலக்க வைத்து விடுவார்கள்.  

துணிகள் மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலவாணியைத் ஈட்டித்தந்தாலும் இதற்குப் பின்னால் உழைத்துக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு முதல் நரம்பு பிரச்சனைகள் வரைக்கும் உருவாக்கும். இன்று வந்துள்ள நவீனங்கள் முடிந்தவரைக்கும் கட்டுப்படுத்தியுள்ளது. 

சாயப்பட்றை, சலவைப்பட்டறைக்கு தேவைப்படும் கொதிநீருக்கு தமிழ் நாட்டில் உள்ள முக்கிய காடுகளில் இருந்து விறகு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. டீஸல் போட்டு நீரை கொதிக்க வைக்க முடியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் விறகு தான் வரப்பிரசாதம். சில நிறுவனங்கள் பயன்படுத்தும் இது போன்ற கொதிகலன்கள் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் உயர் அதிக அழுத்தம் உடையது.  ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து வெடித்து சிதறினால் சுற்றிலும் உள்ள இடங்ககளை சர்வநாசமாக்கி விடும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வை பட்டபிறகு தான் இங்குள்ள சாயப்பட்டறை முதலாளிகளுக்கு ஜுரம் வரத் தொடங்கியது. இது திருப்பூர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.  

கரூர், ஈரோடு வரைக்கும் பரந்து பட்டு இடையில் இருக்கும் அத்தனை விளை நிலங்களையும் பாழாக்கிய பெருமை இந்த சாயம் போன முதலாளிக்கே சேரும். தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டு ஓடி இன்று இங்குள்ள பல நிறுவனங்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாகி விட்டது.

சாயப்பட்டறை முதலாளிகளின் கூட்டங்கள். ஏற்றுமதியாளர்களின் சங்கங்கள், எதிர்ப்பு காட்டிக் கொண்டுருக்கும் விவசாயிகள் என்று மும்முனை போராட் டமாக முடிவே தெரியாமல் இன்று வரை போய்க் கொண்டே இருக்கிறது. விவசாயிகளின் எதிர்பபால் நீதிமன்றம் வரைக்கும் சென்று கடைசியில் டெல்லி உயர்நீதி மன்றம் வரைக்கும் சென்ற போதிலும் எந்த மாற்றமும் இல்லை. 
சவ்வு போல் இழுவையாக முதலாளிகளும் விவசாயிகளும் இரண்டு பக்கம் நின்று போராடிக் கொண்டுருக்கிறார்கள். .முதலாளிகளுக்கு அரசாங்க மான்யம் வேண்டும்.  விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கண்க்கு வேண்டும்.

திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி. நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டுக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

வைரமுத்து சொன்ன எட்டில் பிரித்த வாழ்க்கை போல் துணிகளை சாயமேற்ற எட்டு விதமாக அலசி துவைக்க இறுதியில் விரும்பும் நிறத்தில் வந்து விடுகின்றது.

துணிகளை சாயமேற்ற இரண்டு வகையான உத்திகள் உண்டு. 
அதிக நவீனம் இல்லாத வின்ஞ் என்பது ஒரு இயல்பான முறை. சற்று மேம் பட்ட நவீன வசதிகள் என்பது சாப்ட் புளோ,  தொட்டிக்குள் திணிக்கப்பட்ட துணி கள் தண்ணீருடன் கலந்து உள்ளே வெளியே என்று குதியாட்டம் போடும்.  தற்போது வந்துள்ள நவீன உபகரணங்கள் என்பது கணினி வழியே கட்டுப் படுத்தி கனகச்சிதமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வண்ணத் துணியாக மாற்றி விட முடியும்.  

தொட்டியில் நீர் நிரப்பி துணியை நனைக்க வெட்டிங் ஆயில் என்ற வஸ்துவை ஊற்றி தண்ணீர் துணிகளில் நன்றாக ஊடுருவ வைக்கிறார்கள். பிறகு தான் வேதியல் சமாச்சரங்களை அளவோடு கலந்து விடுகிறார்கள்.  ஒவ்வொரு சாயமாக சேர்த்துக்கொண்டே வரவேண்டும். 

துணியை இளக்க, இளக்கிய துணியை சாயத்தோடு ஓட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியை தரமாக்க, வண்ணத்துணியை அதன் தராதரம் பார்க்க இறுதியில் சிறிய அளவிலான துண்டு வெட்டி சரி பார்த்துக் கொள்கிறார்கள். சேர்த்த கலவை சரியில்லை என்றாலோ சேராத சாயங்கள் சிரித்தாலோ எட்டு அலசலுக்குப் பிறகு மேற்கொண்டு இரண்டு அலசலில் அந்த துணி வண்ணமாய் ஈரத்தோடு சிரிக்கும்.

ஓவ்வாரு அலசலுக்கும் பிறகு அந்த தண்ணீர் தேவையில்லாமல் வெளி யேற்றப்படுகின்றது. மீண்டும் புதிய தண்ணீர்.  ஒவ்வொரு முறை வெளி யேறும் தண்ணீரும் சோடாவாக, ஆசிட்டாக, அடர்வேதியல் சாயமாக, குழாய் மூலமாக வெளியேற்றப் படுகின்றது. குழாய்கள் வழியே செல்லும் இந்த சாயத்தண்ணீர் அருகே உள்ள சாக்கடை வழியே சென்று இறுதியில் நொய்யல் ஆற்றில் கலந்து கரூர் வரைக்கும் சென்றடைகின்றது. ஈரோடு என்றால் பவானி தாண்டியும் பயணிக்கும்..

பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறை யால் ஆனது. சில இடங்களில் நூறு அடிகளில் ஆழ் குழாய் இறங்கும். ஆனால் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறும். இத்தனை இறுக்க மான பூமியில் மிச்சமான பாறைக்குழி என்ற வட்ட வடிவ குளம் போன்ற குட்டைகள் இங்கு ஒவ்வொரு இடங்களிலும் உண்டு,

இந்த இடம் தான் இன்று வரையிலும் பல சாய நிறுவனங்களுக்கு பொக்கிஷம். கழிவு நீர் வெளியேற்ற எந்த வசதியும் செய்யாமல் இருக்கும் முதலாளிகள் நடு இரவில் டேங்கர் வண்டியில் சாயத் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி விட்டு காணாமல் போய் விடுவார்கள். அருகே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் விழித்து பார்ப்பதற்குள் அந்த குட்டை நீரில் வாழ்ந்த உயிர்கள் செத்து மிதந்து கொண்டு இருக்கும்.

அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், எதிர்ப்பு காட்டிய விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இன்று பொது சுத்திகரிப்பு நிலையம், தனியாருக்குச் சொந்தமாக சுத்திகரிப்பு நிலையம் என்று பல வசதிகள் வந்து உள்ளது. 

ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் இருக்கும் சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் இந்த கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். சுத்திகரித்த பிறகு வரும் உப்பில்லாத சாயமில்லாத தண்ணீரை இயல்பாக பயன்படுத்த முடியும்.  ஆனால் செலவு பிடிக்கும் சமாச்சாரம்.  பின்பற்ற விரும்பாமல் கொள்ளை லாபம் வேண்டி இன்று வரைக்கும் பலரும் நடு இரவு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாதமானால் மாமூல்.  சென்னையில் இருப்பவர்களுக்கு தேவைப்படுவது மாதாந்திர அறிக்கை.  

இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர். 

ஒரு நாளைக்கு திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக பத்தாயிரம் கோடி லிட்டர். 1400 நிறுவனங்கள் சுறுசுறுப்பாக சாயமேற்றி சம்பாரித்துக் கொண்டுருந்தார்கள்.  நல்ல அதிகாரிகள் ஒவ்வொருமுறையும் ராக்கோழி போல திடீர் வருகை தந்து இன்று 700க்கும் குறைவான நிறுவ னங்களே செயல்பட்டுக் கொண்டுருக்கின்றன. 

சிலர் செலவு செய்ய முடியாமல் இழுத்து மூடி விட்டு சென்று விட்டனர்.  பலர் அதிகாரிகள் எப்போது எந்த பாதையில் வருவார்கள் என்று ஆட்கள் வைத்து தடம் கண்டு கொண்டு இருக்கின்றனர். 

கற்பனையில் கொண்டு வாருங்கள். உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ?

இந்த சாய நீர் பயணித்து வரும் பாதை மட்டுமல்லாமல் பயணிக்காத பாதை யிலும் இதன் கெமிஸ்ட்ரி உருவாக்கும் காதல் சமாச்சாரங்கள் அத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்?

அகமதாபாத்தில் குடிசை தொழிலாக தொடங்கிய சாயங்கள் தரம் வாரியாக தகுதியான நிறுவனங்களால் முத்திரை குத்தப்பட்டு உள்ளே வந்து கொண்டே இருக்கிறது.  நாளுக்கு நாள் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.  அதுவே இன்று குறிப்பிட்ட சாயங்கள் தான் உபயோகிக்க வேண்டும் என்ற பன்னாட்டு சட்டதிட்டங்களால் ஸ்விஸ் முதல் ஜெர்மனி வரை அத்தனை நாடுகளிலும் இருந்து சாயங்கள் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது. 

எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசும்ப வைத்ததாலும் பல லட்ச மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.

திருப்பூருக்கு என்று ஒரு ராசி. எல்லா ஊர்களிலும் மழை வராதா என்ற ஏக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இங்கோ வந்த மழை எப்போது நிற்கும் என்று ஏக்கமாய் இருக்கும். காரணம் சாயமேற்றப்பட்ட ஆடைகளுக்கு வெயில் இருந்தால் தான் சிறப்பு. மழை தொடர்ந்து கொண்டே இருந்தால் ஈரமாக இருக்கும் ஆடைகளை உலர வைக்க காசு செலவழிக்க வேண்டும். 

மழை தொடர பல ஏற்றுமதி நிறுவனங்களின் வங்கிக் கணக்கும் ஒழுகத் தொடங்கி பல சமயம் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும்,  மழை நிற்கும் போது திருப்பூரைச் சுற்றியுள்ள அத்தனை வயல்பிரதேச தண்ணீரும் ஒன்றாக ஓடி வந்து கால்வாயில் கலக்கும் போது நமக்கு அந்த கலங்கிய சாயத் தண்ணீர் பலவற்றையும் புரிய வைக்கும். சென்னையைப் போலவே திருப்பூ ரையும் மழை வந்து தான் ஒவ்வொரு முறையும் சுகாதாரப்படுத்தி விட்டுச் செல்கின்றது. 

மொத்த நிறுவனங்களின் சாயக் கழிவுக்ளும் கடைசியில் சென்றடையும் இடம் ஓரத்துப் பாளையம் அணை தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக குளித்தலை வரைக்கும் சென்று விடும் போலிருக்கிறது.பல நாட்கள் காத்து இருந்து மழை பெய்ய, வந்து சேரும் நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட அத்தனையும் பாழாகிப் போய்விடுகின்றது.. 

ஓரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயர்வு.,
சாயக்கழிவு கலந்த நீரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

செய்தித்தாளில் படிக்கும் போது பலருக்கும் இதன் விபரீதம் புரிவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வருகின்ற தண்ணீரை தேக்கிவைக்க அனுமதி இல்லை. தண்ணீரை நம்பி வாழும் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களின் தற்போதையை நிலையை விரைவில் நாம் ஆவண படமாக பார்க்க வாய்ப்புள்ளது. 
காரணம் மழை நீரை தேக்கி வைத்தாலும் கலந்து வருகின்ற சாய நீரால் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஜீவன்கள் இறந்து உருவாக்கும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு மக்களும் வாழப் பழகிவிட்டார்கள். அரசாங்கமும் அமைதியாய் இருக்கிறது.. 

38 comments:

Chitra said...

......சவ்வு போல் இழுவையாக முதலாளிகளும் விவசாயிகளும் இரண்டு பக்கம் நின்று போராடிக் கொண்டுருக்கிறார்கள். .முதலாளிகளுக்கு அரசாங்க மான்யம் வேண்டும். விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கண்க்கு வேண்டும்.


......காரணம் மழை நீரை தேக்கி வைத்தாலும் கலந்து வருகின்ற சாய நீரால் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஜீவன்கள் இறந்து உருவாக்கும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு மக்களும் வாழப் பழகிவிட்டார்கள். அரசாங்கமும் அமைதியாய் இருக்கிறது..


....மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது, சார். யாராவது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?

Thenammai Lakshmanan said...

இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் திருப்பூரில் தொழில் செய்வது ஏன்.. எல்லா கெடுதலையும் நான் அனுபவித்துக் கொண்டு. நல்லதை வெளிநாட்டாருக்கு விற்கத்தான் வேண்டுமா என்ன ஜோதிஜி

பவள சங்கரி said...

அருமை. நெஞ்சைத் தொட்ட பதிவுங்க..... நானும் ஈரோடுதாங்க..... இந்தக் கன்றாவியெல்லாம் கண்ணால பாத்துக்கிட்டுத்தான் இருக்கிறோம்....... என்ன செய்வது.......பணம் தானே எல்லா இடத்திலேயும் பேசுகிறது...... நன்றிங்க.

Thomas Ruban said...

//பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறை யால் ஆனது.//

ரசித்தேன்..

//பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.//

நச்...(100% உண்மை)


//செய்தித்தாளில் படிக்கும் போது பலருக்கும் இதன் விபரீதம் புரிவதில்லை.//
உண்மைதான் சார்

இந்த பிரசினைகளுக்கு சுலபமான,எளிய,நிரந்திர தீர்வாக என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைகிறீர்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்.

லெமூரியன்... said...

ஹ்ம்ம்...! நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நொய்யலாற்றின் நீரை அணையில் இருந்து திறந்து விடுவதற்கு
முன்பு அரசாங்கம் கரையோர மக்களை இரண்டு நாட்கள் வேறு பகுதிக்கு போக சொல்லி அறிக்கை கொடுத்தது என்று நினைக்கிறேன்...
ஆணை திறந்த காட்சியை தொலைகாட்சியில் காண்பித்தார்கள்...வயிற்றெரிச்சலாக இருந்தது...
எவனோ ஒருத்தனின் சந்தோசத்திற்காக இயற்கையை நாசம் செய்து விட்டு மனசாட்சி இல்லாமல் எப்படி வாழ முடிகிறதென்று...
அந்த பகுதி நிலத்தடி நீரும் பாழ்லாகிவிட்டதேன்று கேள்வி....!
ஒரு தொழில் துறையை ஊக்குவிக்க முடிவெடுத்தால் அரசாங்க மானியம் எம்மாத்திரம்...!
தொழில் துறையினரும் அரசாங்கமும் பங்குதாரராக கழிவுநீர் சுத்திகரிப்பு நீரேற்று அமைக்கலாமே???
அங்கு வாழும் முதலாளிகளால் அவர்கள் பணத்திலேயே இதை செய்ய முடியும்...
விட்ட பணத்தைதான் எடுக்கும் மந்திரம் கற்றவர்கலாசே அவர்கள்????

Thomas Ruban said...

இங்கேயும் பயாக்கான் மருந்து நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட கழிவுநீர் நிலத்தடிநீரையும், விவசாய நிலங்களையும் கெடுத்து விவசாய நிலங்களின் விளையும் கீரைகள்க் கூட நச்சு தன்மையுடன் உள்ளது.

எல்லோரும் போர்வில்லில் இருந்து நீரை எடுக்க தான் பயன்படுத்துவார்கள் ஆனால் இந்நிறுவனத்தார் வற்றிப்போன போர்வில்லில் கழிவுநீர் வெளியேற்றப் பயன் படுத்துகிறார்கள் மழை நேரத்தில் மழைநீர்யோடு கழிவுநீரையும் வெளியேற்றுகிறார்கள் அதிகாரிகள்ளும் இதற்கு உடந்தை.
சட்டத்தை மதித்து நடக்க வேண்டியவர்களே சட்டத்தை மாதிக்காதே இத்தனை அவலங்களுக்கும் காரணம்.

MLA, அரசியல்வியாதிகள் தலைமையில் மக்கள் போராட்டம் நடக்கும் நிறுவனத்தார் இனிமேல் இப்படி நடக்காது என அறிக்கை விடுவார்கள்.MLA சூட்கேஸ் வாங்கிக் கொண்டு போய் விடுவார் மக்களுக்கு ஆப்பே மிச்சம்.

Thomas Ruban said...

இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய மீடியாக்கள் பணத்துக்கு விலை போய்க்கொண்டே உள்ளது சிலது அரசியல்வியாதிகள் பிடிக்குள் மீடியாக்கள் உள்ளது.
நெட் என்று ஒன்று இல்லாதிருந்தால் பல உண்மைகள் வெளியவே வராது..

வாழ்க பணநாயகம்!!!

nandhu said...

வணக்கம் தோழா

நல்ல பதிவு .

ப.கந்தசாமி said...

ஆஜர்.

vinthaimanithan said...

அற்புதமான பதிவு... வினவு மிகச்சரியாக அடையாளம் காட்டி இருக்கின்றது. மூடப்பட்டிருக்கும் அமராவதி அணை பற்றியும் எழுதி இருக்கலாம். அப்புறம் சிறுதுளி இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன நண்பரே!

வல்லிசிம்ஹன் said...

இதற்கெல்லாம் முடிவு யாருக்காவது தெரிகிறதா. நல்ல பதிவு ஜோதிஜி.

வல்லிசிம்ஹன் said...

இதற்கெல்லாம் முடிவு யாருக்காவது தெரிகிறதா. நல்ல பதிவு ஜோதிஜி.

க.பாலாசி said...

மிக நல்ல அலசல்... நிச்சயமாக நீங்களும் இந்த துறையில்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் இதிலுள்ள இவ்வளவு நுணுக்கங்களையும் அறிந்துகொள்வது கடினம். நானும் இந்த தொழில் சார்ந்த துறையிலேயே வேலை செய்தாலும் இவ்வளவு விசயங்களை இப்போதுதான் அறிகிறேன். மண்ணின் மலட்டுத்தன்மைக்கு நாமும் காரணமாயிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியும் இல்லாமலில்லை.

அன்பரசன் said...

மிக அருமையான பதிவுங்க

'பரிவை' சே.குமார் said...

//முதலாளிகளுக்கு அரசாங்க மான்யம் வேண்டும். விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கண்க்கு வேண்டும்.//

உண்மை நிலை இதுதான்.
உங்கள் பகிர்வு அருமை.

வாழ்த்துக்கள் செந்தில்.

Bibiliobibuli said...

இங்கே சாயம் போவது அரச பொது நிர்வாக சீர்கேடுகள். "நீருயர நெல் உயரும்............ கோன் உயர்வான்" என்று ஒளவையார் பாடியதில், நீர், நெல், குடிகளைத் தவிர்த்துவிட்டு மற்றவர்கள் மட்டும் உயர, உயர வளர்கிறார்கள் போலும்.

அம்பாள்முத்து said...

எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசும்ப வைத்ததாலும் பல லட்ச மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.


ஜோதிஜி அருமை ஆனாலும் அரசாங்க உதவி இருந்தால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும் ஜீரோ டிச்சார்ஜ் என்பது உலக அளவில் தோல்வி கண்ட சமாசாரம். சாய நீரை கடலில் கொண்டு பொய் கலப்பது தான் சரியான தீர்வு

T.S.Muthu

krishnakrishna said...

அடுத்த தலைமுறைக்கு நீர் இல்லாமல் செய்து விடுவோம்போல?

நல்ல பதிவு

கிரி said...

இதனாலே எங்கள் கோபியில் சாய பட்டறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இன்று வரை பலரும் முயற்சித்தும் மக்கள் எதிர்ப்பு காரணமாக முடியவில்லை. நல்லவேளை!

RVS said...

அவ்வளவு விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள். அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Thekkikattan|தெகா said...

படிக்க படிக்கா திகில்தான் மிஞ்சுகிறது. மிகவும் விபரமாக இதனைப் பொருத்து ஆழ, அகலம் தெரிஞ்சவராக படுகிறீர்கள். இது போன்ற கட்டுரைகளை பாகங்களாக பிரித்துக் கொடுத்தால் படிப்பவர்களுக்கு அயர்ச்சி கொடுக்காமல் தொடர்ந்து படிக்க முடியுமோ என்று தோணச் செய்கிறது.


//இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு என்பது பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது. பவானி ஆற்றை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள்.//

கடைசியில் நெருப்பு குழம்புதான் மிஞ்சும் என்று தெரிகிறது. அதனை வைத்து என்ன செய்வது?

இது போன்ற நச்சு கழிவுகளையும், நச்சுத் தன்மை நீக்குவதற்கான செலவீனங்களையும் கருத்தில் கொண்டே வளர்ந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு இது போன்ற வாய்ப்புகளை எந்த விதமான இரண்டாவது சிந்தனையுமில்லாம அனுப்பி வைக்கிறார்களோ! மெல்லச் சாவட்டுமென்றும். :((

a said...

சாயப்பட்டரைகளின் சாயம் வெளுக்கும் பதிவு....

ஜோதிஜி said...

யோகேஷ் உங்கள் வார்த்தை விளையாட்டு அற்புதம்.

தெகா.......

நீங்கள் சொல்வதும் உண்மைதான். இதற்காகத்தான் பல பத்திகளாகப் பிரித்து படங்கள் சேர்த்து உள்ளேன். வேறு வழியில்லை இரண்டு பாகமாக பிரிக்க மனமில்லாமல் ஒன்றாக சேர்த்து விட்டேன். உங்கள் பொறுமைக்கு நன்றி.

மேலை நாடுகளில் சில இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் தடா பொடா போன்ற சட்டங்கள். இயற்கையை ரொம்பவே மதிக்கும் வெளிநாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் ரொம்பவே தூரம்.

ஆர்விஎஸ் முதல் வருகைக்கும் தொடர் பயணத்துக்கும் நன்றி.

ஜோதிஜி said...

கிரி

கோபியில் இப்போது நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டுஇருக்கிறார்கள். சாயப்பட்டறையும் பட்டறையையும் வெகு விரைவில் போட்டு விடுவார்கள் போல(?)

கிருஷ்ணா நீங்கள் சொல்வது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நாம் தான் ஒரு லிட்டர் 12 ரூபாய்கு வாங்கி குடிப்பதை பெருமையாக அல்லவா நினைத்துக் கொண்டுருக்கிறோம்.

முத்து உங்கள் டையிங் மக்கள் கோபம் தணிந்து விட்டதா?

ஜோதிஜி said...

ரதி

எப்போதும் போல மிக நல்ல தெளிவான விமர்சனம். எதை எதனுடன் இணைத்து? ஆகா அற்புதம்.......

வாங்க குமார் அன்பரசன். நன்றி.

பாலாசி நன்றிங்க. உங்கள் புரிந்துணர்வும், அக்கறையும் நினைத்து கொஞ்சம் பெருமையா இருக்கு,

ஜோதிஜி said...

வல்லிசிம்ஹன் உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

மனிதா சிறுதுளி இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அமராவதி குறித்து முழுமையாக தெரியவில்லை.

கந்தசாமி ஐயாவுக்கும் வழக்கறிஞருக்கும் நன்றிங்க.

ஜோதிஜி said...

தாமஸ் ரூபன் உங்கள் தாக்கம் புரிகிறது. வலைதளத்தில் தேடுதலுடன் வாசிப்பு அனுபவம் உள்ள உங்களுக்கு என்னுடைய நன்றி.

லெமூரியன்


அங்கு வாழும் முதலாளிகளால் அவர்கள் பணத்திலேயே இதை செய்ய முடியும்...

இது தான் சரியான பார்வை. ஆனால் செய்யமாட்டார்கள். காரணம் ஆசைகளும் அவஸ்த்தைகளும் பலப்பல. அதைப்பற்றி எழுதினால் தெகா சொல்வது போல் மீண்டும் ஒரு நீண்ட இடுகை எழுத வேண்டும்

தேனம்மை சித்ரா உங்கள் வருகைக்கு நன்றி. சிலவற்றை இழந்து தான் தொழிலாக இருந்தாலும் நம்முடைய மொத்த நாகரிக வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியதாய் உள்ளது.

நித்திலம் முதல் வருகைக்கு நன்றிங்க. மிகுந்த மகிழ்ச்சி.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஜோதிஜி! அருமையான கட்டுரை. விழிப்புணர்வு வரவேண்டியவர்களுக்கு வருமா?

துளசி கோபால் said...

படிக்கப்படிக்க திக் திக் ன்னு இருக்கு. இப்படி செலவுக்குப் பயந்து எல்லாத்தையும் நஞ்சாக்கிட்டாங்களே:(

பணம் பணம்.....பாதாளம்வரை பாயுது இந்த சீர்கேட்டுக்குத் துணைநிற்க.

தேனம்மை,
இதுலே மட்டுமா? காய்கறி மீன் முதற்கொண்டு நல்லதெல்லாம் அடுத்த மாநிலத்துக்கும். அடுத்த நாட்டுக்கும்தான்.
எக்ஸ்போர்ட் காசு வருதுல்லே?

ஆக்கினவனுக்கு எதும் மிஞ்சாதுப்பா:(

பின்னோக்கி said...

சிறு வயதில், கரூரில் இருந்த என் உறவினரின் சாயப் பட்டறையில் விளையாடிய நியாபகம் வருகிறது. அமராவதி என்ற ஒரு ஆறு, சாயக் கழிவுகளால் அழிந்தே போய்விட்டது. தொழில்வளர்ச்சி முக்கியம். ஆனால், சாயக் கழிவுகளை சுத்திகரிப்பதில் குறுக்கு வழிகளை உபயோகிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். வெளிநாடுகள், இந்த மாதிரி சுற்றுப்புறக் கேடான விஷயங்களை, வளரும் நாடுகளுக்கு தள்ளி விடுகிறார்கள். மக்களுக்கும் வேறு வழியில்லை.

ஜோதிஜி said...

விழிப்புணர்வு வரவேண்டியவர்களுக்கு

வந்து விட்டால் ஏன் இதைப் பற்றி எழுத வேண்டியுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் பலப்பல, நன்றி சாந்தி லெஷமணன்,


எக்ஸ்போர்ட் காசு வருதுல்லே?

ஆக்கினவனுக்கு எதும் மிஞ்சாதுப்பா:(

கேள்வியும் பதிலும் நன்றி டீச்சர்,

வெளிநாடுகள், இந்த மாதிரி சுற்றுப்புறக் கேடான விஷயங்களை, வளரும் நாடுகளுக்கு தள்ளி விடுகிறார்கள்.

சபாஷ் நண்பா,

பெருசு said...

இத்தனை சிரமங்களுக்கு அப்புறமும்,
லாட் ஓடி கம்பேக்டிங் அல்லது ஸ்டீம் போட்டதுக்கு அப்புறம் வருவானே ஒருத்தன் அல்லது ஒருத்தி,
இன்ஸ்பெக்சன் எனும் பெயரில்.
அவர்கள் கருமமே கண்ணாயினார் ஆதலால்
pantone மேட்ச் இல்லே, ரீடையிங்
அதாவது எல்லாரையும் மறுபடியும் சாக அடிப்பாங்க.

நொந்து நூடில்ஸ் ஆகி அந்து அவல் ஆகி,ஒரே ஒரு ரோல மட்டும் ராத்திரி ரெண்டு மணிக்கு டிவிஸ்50லே
ஏத்திட்டு,போயம்பாளைத்து பிரிவுலே இருந்து குர்குர்ன்னு ஓட்டிட்டு போனா எக்ஸடேட்டர் கேபிள் அந்து போகும்,அதைய கையிலே இழுத்துட்டு குதுர மாதிரி ஓட்டிட்டு பல்லடம் ரோட்டுலே போயி குத்து மதிப்பா,இட்டேரிய புடிச்சு டையிங்க்கு போனா,குவாட்டர் அடிச்சிட்டு கவுந்து கிடக்குற டையிங் மாஸ்டர எழுப்பி, அண்ணா அண்ணான்னு கெஞ்சி....

ஆனா அந்தப்பொழப்புலேயும் ஒரு சொகம் இருக்குங்கண்ணா.

அதுகப்புற்ம் பிரிண்டிங் ஓடுன கதையெல்லாம் இருக்குங்.

ஜோதிஜி said...

பெரியவா சொல்றது பத்து வருசத்துக்கு முன்னாடி உள்ள வாழ்க்கையை நெனைக்க வைக்குது,

நீங்களே எழுதலாம் போல,

என்னமா ரைமிங்,,,,,,,,,,,,,,,,,,

கண்ணகி said...

நீங்கள் ஒரு ஆச்சர்யம்....தாமரை இலைத்தண்ணிற் போல...போதிமரத்தடி புத்தர் போல்...

அருமையான பதிவு..உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்குது...

ஜோதிஜி said...

கண்ணகி

நான் எழுத் தொடங்கியது முதல் இன்று வரைக்கும் என்னை தொடர்ந்து கொண்டு இருக்கீங்க.

உங்கள் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால்

போதிமரத்தை தேடிப் போன புத்தர் பெற்ற ஞானம் போலே என் எழுத்துக்களை சு வாசிக்கும் உங்களுக்கு என்னுடைய வணக்கமும் நன்றியும்.

ரோஸ்விக் said...

இந்த சாயக்கழிவு நீரை பார்க்கும்போது கண்ணு உறுத்துது. சுற்றுப்புற கிராம மக்களின் சுகாதார வாழ்க்கைநிலை கேள்விக்குறிதான்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மனசு கலங்குகிறது.
நன்றி.

Kasthuri Rengan said...

அதி முக்கியமான பதிவு
வார்த்தைகள் ஏதும் இல்லை
தம +