Friday, February 05, 2010

இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும்

கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா?  ஜெயித்தாலும் அது நீடித்து பார்த்து இருக்கிறீர்களா?  நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா?  வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும்.  உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது.  இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது.
இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொருந்தும். ஆடம்பர மணவிழா முடிந்து விட்டது.  உலக ஊடகம் முன் எப்போது சிரிக்காத மூஞ்சி ஜெயவர்த்னேவும், வாழ்க்கை முழுக்க எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மலர்ச்சியான முகத்தைப் பெற்ற ராஜீவ் காந்தியும் மனம் கொண்ட மகிழ்ச்சியை புகைப்பட ஆவணமாக்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் (29 ஜுலை 1987) போட்டாகி விட்டது.  வந்த விருந்தினரை சும்மா அனுப்பி விட்டால் இலங்கை மரியாதை என்னவாகும்.  அணிவகுப்பு மரியாதையின் வாயிலாக பெற்ற அத்தனை மரியாதையும் ராஜீவ் காந்தி கூட (அடித்த கடற்படை வீரனின் பெயர் விஷயமுனி விஷிதா ரோகண டி சில்வா) தலைகுனிந்து தப்பி விட்டார்.

ஒருவன் தான் பின்பக்கமாக அடிக்க உயர்த்தினான்.   அடித்த கட்டைக்கு முன் இருந்த கத்தி படாமல் இருந்தது நேரு செய்த புண்ணியமா? அம்மா இந்திரா காந்தி செய்த தவமா?  இல்லை தான் கற்று வைத்திருந்த பயிற்சி கொடுத்த முன் எச்சிரிக்கையா?  அந்த கூட்டணியில் இருந்த மற்ற வீரர்கள் அமைதியாய் இருந்த காரணம் நாம் செய்த புண்ணியம்.  இல்லாவிட்டால் அன்றே சிங்கள வெறி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இந்தியா மட்டுமல்ல உலகமே பார்த்து இருக்கும்?

மொத்தத்தில் முடிந்து விட்டது. எப்போதும் போல சிரித்துக்கொண்டே அதையும் மறந்து விட்டார் நம்ம ராஜீவ் காந்தி.  தொடக்கத்தில் நண்பர் சொன்னாரே விடுதலைப்புலிகள் அமெரிக்க அதிபரை இது போல் வெடிகுண்டு தாக்குதல்களை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தால் என்னவாயிருக்கும்?  துடைத்து இருப்பார்கள்.  அதையே சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள்?  அமெரிக்க அதிபருக்கு இது போல் அணிவகுப்பு மரியாதையில் நடந்து இருந்தால்?

வேண்டாம்?  எல்லாவற்றையும் யோசித்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.  காரணம் ராஜீவ் மட்டும் விரும்பிய ஒப்பந்தம் இது.  மொத்தத்தில் ஆசியாவின் கனவு ஒப்பந்தம்.  உலகம் முழுக்க இன்று தான் விரும்பிய அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கியாகி விட்டது.  இது ஒன்றே போதும்.  காந்தி தேசம் அல்லவா?  வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மறப்போம் மன்னிப்போம்.

ஆனாலும் சில கேள்விகளை இப்போது நாம் உரைத்துப் பார்க்க வேண்டும்.  இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றது குறித்து உங்கள் கருத்து என்ன? நீங்கள் சரிதான் என்பவரா?  இல்லை மொத்தமும் தவறு என்பவரா?  பிரபாகரன் என்ற சக்தியை இப்போது மறந்து விடுங்கள்.  அவர் பாவம்.  மனக்குமுறலோடு முதன் முறையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் தாளில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.  காரணம் சுதுமலை பிரகடனம் என்ற முதல் பொதுக்கூட்டத்தை நடத்தப் போகிறார். செயல் மட்டும் தான் முக்கியம் என்று பேசிப்பழக்கமில்லா அவருக்கு உரையாற்ற வேண்டிய உரையை அடித்தல் திருத்தமின்றி படித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டுருக்கிறார்.  எனவே இப்போது நீங்கள் இதையும் கடந்து வாருங்கள்.

1.  ஆண்டு கொண்டுருந்த ஜெயவர்த்னேவுக்கு வேறு வழியில்லை.

கிழக்குத் திசையில் ரா. சூரியன் உதிக்கிறதோ இல்லையே அவர்களின் தொல்லைபேசியும், சட்டசவடால்களும் அதிகம்.  மேற்குப் பக்கம் தமிழீழம் மட்டும் தான் வேண்டும் என்கிற போராளிகள்.   சூரியன் மறைகிறதோ இல்லையோ தினந்தோறும் எத்தனை இராணுவ வீரர்கள் மண்ணுக்கு போவர்கள் என்பதை உச்சிதமாக சொல்ல முடியவில்லை.    தெற்கில் பிரேமதாசா மற்றும் ஜேவிபி மற்றும் அரசாங்க எதிர்பாளர்கள்.   மீதி ஒரு பக்கம் தான் இருக்கிறது.  புத்த பிக்குகள்.  " பண்டாராநாயகா எப்படி போய் சேர்ந்தார் என்பதை மறந்து விட்டாயா?"  என்பது போல் தினந்தோறும் ஆசிர்வாதம் தேடிவந்து கொடுத்துக்கொண்டுருக்கிறார்கள்.

"வராது ஆனால் வரும் " என்பது போல. " புடிக்கல ஆனா புடுச்சுக்கிட்டு தொங்கித்தான் தீரவேண்டும் "  என்று ஜெயவர்த்னே வேறு வழியில்லாமல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர் உருவாக்கிய பாதை தான் இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் உள்ள எதிர்கால மொத்த புரிதல்களையும் தவிடுபொடியாக்கியது. ஆனால் இதற்கு மேலும் ஏன் இந்த ஒப்பந்தத்தை ஜெயவர்த்னே ஏற்றுக்கொண்டார்?  எளிதில் மசியக்கூடியவரா?  அதற்குள்ளும் ஒரு காரணம் இருக்கிறது. அன்றைய தின இலங்கையின் படைபல பலவீனமும், விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும், ஆட்சி எந்த நேரத்திலும் கவிழ்க்கப்படலாமென்ற அச்சமும் ஒரு காரணம்.  அவருக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்தது என்றால் உள்ளே இருந்த மொத்த அமைச்சர்களும் ஒரே எதிர்ப்பு அணியில் திரண்டதும், பிரேமதாசா " அண்ணன் எப்ப இடம் விடுவான் "
என்று காத்துக் கொண்டுருந்த தருணம்.  வேறு வழி.  மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி.

2.  இலங்கையின் உள்ளே சென்ற அமைதிப்படை எதை நோக்கி இந்தப் பயணம்? என்பதை தெரிந்து கொள்ளாமல் நுழைந்த ஆண்டு 30 ஜுலை 1987.  போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று திரும்பி வந்த ஆண்டு மார்ச் 24 1990.  மொத்த காலத்தையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. சென்ற போது டெல்லியில் ஆண்டு கொண்டுருந்தவர் ராஜீவ் காந்தி.  திரும்பி வந்த போது வி.பி.சிங் (VISWANATH PRATHAP SINGH).

4.  சென்ற இந்திய அமைதிப்படைக்கு தலைமை தாங்கி பூரிப்போடு சென்றவர் ஜெனரல் திபேந்திர சிங்.  திரும்பி வந்த போது வாடிப்போன முகத்தோடு மனதிற்குள் குமுறலோடு தலைமையேற்று வந்தவர் ஜெனரல் அமர்ஜித் சிங்.

5.  " இவனுங்க பொடியன்கள்.  இவர்களை குறித்தா பயப்படுறீங்க.  சும்மா ஊதித் தள்ளிவிடலாம் " என்ற மொத்த எண்ணங்களும் தவிடுபொடியாக்கி உயிர் இழந்த அப்பாவி இந்திய இராணுவ வீரர்கள் அதிகமில்லை ஜென்டில்மேன், பாகிஸ்தானுடன் மோதி பங்களாதேஷ் என்ற புதிய நாட்டை உருவாக்க பாடுபட்ட போது நடந்த போரில் உயிர் இழந்த இராணுவ வீரர்களை விட அதிகம்.

6.  உள்ளே நுழைந்த போது எரிச்சலுடன் வரவேற்றது ஜெயவர்த்னே.  கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பியது பிரேமதாசா.

7. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்.  அதுவே துறைமுகத்தில் வந்து இறங்கிய போது " இது அமைதிபபடை அல்ல.  அழிவுப்படை" என்று தன்னுடைய முழுமையான தந்திரமில்லா எதிர்ப்பைக்காட்டிய ஆட்சியில் இருந்த முதல் அமைச்சர். கலைஞர் மு.கருணாநிதி.  ஒரு வகையில் பார்க்கப்போனால் மொத்த அமைதிப்படையும் திருப்பி அழைக்கப்பட காரணமாக இருந்தவர் கலைஞர்.  இவர் கொடுத்த அழுத்தமும், மத்திய அரசாங்கத்திற்கு இவர் கொடுத்துக்கொண்டுருந்த ஆதரவும் முக்கிய காரணம்.  தேர்தலில் அப்போது விபி சிங் தேர்தலின் போது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு கொடுத்த முக்கிய வாக்குறுதியும் கூட.  அந்த அளவிற்கு இந்த அமைதிப்படை தமிழ்நாட்டில் முக்கிய விவாத பொருளாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

8.  இந்த இடத்தில் மற்றொரு நகைச்சுவை.  விவேகம் அதிகம் பெற்ற, உண்மையிலேயே இலங்கைத்தமிழர்களுக்கு பாடுபட எல்லாவகையிலும் முயற்சித்த இந்திரா காந்தி காலத்தில் செயல்பட்ட தூதர் தமிழர் ஜீ. பார்த்தசாரதியைக் கண்டாலே ஜெயவர்த்னேவுக்கு எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்கும்.  அதன் பிறகு பின்னால் பிரதமாக இருந்த நரசிம்மராவ் இந்த பிரச்சனையில் நுழைக்கப்ட்ட போது விமான நிலையத்தில் இருந்து அவருக்கு அழைத்து செல்லப்பட வேண்டிய வாகன வசதிகள் கூட அளிக்கப்படாமல் அவமானபடுத்தியதும், அவர் அமைதியாக அதை பொறுத்துக்கொண்டு எப்போதும் போல சிரிக்காமல் போய் அவர்கள் முன் அமர்ந்ததும் நடந்தது. காந்தியவாதிகள் எப்போது கண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள்.

ஆனால் இப்போது முக்கிய கதாநாயகன் ஜே.என். தீட்சித் ஒரு வகையில் பாராட்டக்கூடியவர்.  அட்டகாசமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு பி.எஸ். வீரப்பா போல் ஜெயவர்த்னே முன் அமர்ந்து கொண்டு சுருட்டுப் புகையை விட்டுக்கொண்டு மொத்த இலங்கை அதிகாரவர்க்கத்தையும் டர்ர்ர்ர் ஆக்கிக்கொண்டுருந்தார்.  அன்று ஜெயவர்த்னே முகம் எப்படி இருந்துருக்கும்?

9. பொடியன்களை சமாளிக்க முடியாத வல்லரசு கொண்டு போய் சேர்த்த ஆயுத தளவாடங்களின் பட்டியல் சரவணபவன் பட்டியலை விட நீளமானது.  பயந்து விடாதீர்கள்.  இது அத்தனையும் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட மட்டுமே?

நவீன AVF கவச வண்டிகள், ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 45 டன் எடையுள்ள T 72 ரக அதிவேக நவீன போர்முனை (வடக்கு மகாண காட்டுக்குள் செல்வதற்கு ஏற்ற) டாங்கிகள், உள்ளே இருந்த கொரில்லா போராளிகளை அழிக்க என்று பிரத்யோக பயிற்சி பெற்ற 31 வது ஆயுத டிவிசனைச் சேர்ந்த 65வது ரெஜிமெண்ட் படை வீரர்கள்.  இது போக 20 டன் எடையுள்ள ரஷ்ய தயாரிப்பான BMP 2 ஆயுத கவச வண்டிகள். இந்த வண்டிகளுடன் பராமரிக்க, பாதுகாக்க, ஈடுபட, மற்ற ஏற்பாடுகளுக்கென ஒரு படை பட்டாளங்கள்.

இந்த பட்டியல் இயல்பாய் முன்னமே போய்ச் சேர்ந்தவர்களுடன் சேர்த்து விடாதீர்கள்.  இவர்கள் தனி.  அவர்கள் தனி.  ஏனிந்த சிறப்பு மக்கள்?  புலிகள் உருவாக்கி வைத்திருந்த கண்ணி வெடிகள் என்பது நமது வீரர்களை தேங்காய் போடாத சட்னி போல் ரத்தச் சகதியை அறிமுகப்படுத்திக்கொண்டுருந்தத காரணத்தால் தினந்தோறும் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டுருந்தார்கள்.

பட்டியல் முடியவில்லை.  உக்கிரம் தொடங்க விட்ட குறை தொட்ட குறையாக தரைப்படை, வான்படை, கடற்படையுடன் அதி நவீன ஆயுதங்களுடன் பிரெஞ்சு ஜாகுவார் மற்றும் ரஷ்ய தயாரிப்பான மிக் 25 ரக போர்விமானங்கள்,அப்போது தான் புதிதாக வாங்கப்பட்ட ரஷ்ய MI 25 ரக ஹெலிகாப்டர், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆட்கள் பயணிக்க MI 8 வகை ஹெலிகாப்டர்.

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் இது போன்ற ஹெலிகப்டர் அத்தனை வகையிலும் எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எறிகணை தாக்குதலுக்கு உதவி புரியக்கூடிய எந்திர அமைப்புகள் என்று எல்லாவிதத்திலும் புதிய தொழில் நுட்பத்தோடு உருவாக்கப்பட்டு இருந்தது.  அத்தனையும் சிறப்புக் கவனத்தில் மொத்த உழைப்பையும் நம்முடைய இராணுவ தொழில் நுட்ப மக்கள் மேலே இருந்து வந்து கொண்டுருந்த அழுத்தம் காரணமாக இரவு பகலாக உழைத்துக்கொண்டுருந்தனர்.
இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் உள்ள இந்தியாவின் மொத்த படைபலத்தில்சதவிகிதத்தை இலங்கையில் கொண்டு போய் குவித்து இருந்தது. போர் உக்கிரம் அடைய ஒரு நாளைக்கு செலவிழித்த தொகை உத்தேசமாக இந்திய ரூபாய் 300 கோடி ரூபாய்.  மொத்த காலத்திலும் செலவழித்த தொகை அரசாங்க கணக்குப்படி ஆயிரம் கோடி. ஆனால் ஊடகத்தில் வந்த கணக்குப்படி 2000 கோடிக்கும் மேல்.

காரணம் அமைதியை நிலைநாட்ட?!!!!!!!?  நாட்டினார்களா?  நா தழுதழுக்க, முகம் வெளிறி தலைகுனிந்தபடியே வந்தவர்களைப் பார்த்து மேலாதிக்கம் செய்ய புறப்பட்டவர்கள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வைத்தது தான் மிச்சம்.

பணமா நமக்கு முக்கியம்.  காந்தி சொல்லிவிட்டுப் போன அமைதிப் பாதைக்கு இன்னும் கூட செலவளிக்கலாம் அல்லவா? ஏனிந்த அவமானம்?  யார் மேல் தவறு?

8 comments:

M.Thevesh said...

சுதந்திரம் பெற்றகாலம் தொட்டே நாடுவிஸ்தரிக்கும்
எண்ணம்இந்தியஆட்சியாளர்களிடம்தோன்றிவிட்டது.
பக்கத்து நாடுகளெல்லாம் தங்களுக்கு ஆமாம் சாமி
போடுபவர்களாகஇருக்கவேண்டும்.முரண்டுபிடித்தால்
அடிமைகொள்ளவேண்டும்.இது அவர்களின் தாரக மந்
திரம்.இந்தஆசையின்முதற்பலிசீக்கிம்என்றநாடு.சுதாரித்துக்கொண்டபூட்டான்சீனாவுடனஒருஒப்பந்தம்அவசரம்அவசரமாகச்செய்துகொண்டது.இலங்கையை தங்கள்
ஆளுகைகுள் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம்
இருந்துவந்துள்ளது. அமைதிகாக்கப்புறப்பட்ட படை
யைஅவதானித்தால் அது அமைதிகாகும்படை இல்லை நாடுபிடிக்கப்புறப்பட்ட படை என்பது துலாம்
பரமாகத்தெரியும்.ஒரு ஜம்பது அல்லது நூறு வருடங்
கள் தங்கிச்செயல்படும் ஆயத்தங்களுடன் வந்த படையாகவே தெரிந்தார்கள்.வடகிழக்கில்இருந்தபுலி வீரர்தொகையுடன் ஒப்பிட்டால் ஒரு புலிவீரனுக்குப்
பத்து அல்லது பதினைந்து போர்வீரர் என்கின்ற விகிதாசாரத்தில் இந்திய ஆக்கிரமிப்படையினரின் எண்ணிக்கை இருந்தது.அமைதிகாக்கும் படைக்கு இந்த எண்ணிக்கை அவசியமா? பிரபாகரனின் ராஜ
தந்திரத்தால் பிரேமதாசாவுடன் ஒத்துளைத்து இந்திய
ப்படைகளை வெளியேற்றினார் இலங்கை ஆக்கிரமிப்
பிலிருந்து தப்பியது அதேபோல் ஈழப்போராட்டமும்
அழிவிலிருந்து தப்பி இன்றுவரை தொடர்கிறது.

Thenammai Lakshmanan said...

//கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்து பார்த்து இருக்கிறீர்களா? நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது.கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்து பார்த்து இருக்கிறீர்களா? நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது.//

உண்மை மற்றும் அருமை ஜோதிஜி
ஆரம்பமே அருமையாக அமைந்து இருக்கு

வெத்து வேட்டு said...

//பிரபாகரனின் ராஜ
தந்திரத்தால் பிரேமதாசாவுடன் ஒத்துளைத்து இந்திய
ப்படைகளை வெளியேற்றினார் இலங்கை ஆக்கிரமிப்
பிலிருந்து தப்பியது அதேபோல் ஈழப்போராட்டமும்
அழிவிலிருந்து தப்பி இன்றுவரை தொடர்கிறது.//

பின் அதே கெட்டிக்கார பிரபாவின் தலையில் கோடாலி முளைத்தது ... ராஜபக்சேயின் ராஜதந்திரதாலா (அதே இந்தியாவை பாவித்து).. இல்லைனா ... சோனியாவின் வஞ்சத்தினாலா..
எல்லாம் தெரிந்த பிரபாவிற்கு... ராஜீவுக்கு தான் வைத்த ஆப்பு ... தமிழ் சனத்துக்கே வைக்கிற ஆப்புன்னு விளங்கல்ல :) :) :)

ஜோதிஜி said...

நாடு பிடிக்கும் ஆசை இந்தியாவிடம் இருக்கிறதா? சும்மா விளையாடாதீங்க நண்பரே.

ஜோதிஜி said...

நன்றி தேனம்மை. தொடக்க வரிகளை நீங்கள் ரசித்தது போல அமைதிப்படை வீரர்கள் உள்ளே நுழையும் போது அவர்களுக்கு அமர்க்களமான வரவேற்பு கிடைத்தது?

ஜோதிஜி said...

ஐயா வேட்டு, இன்னமும் தொடர்ந்து கொண்டுருப்பதற்கு நன்றி,

ஜெயவர்த்னேவைப் போலவே ராஜபக்ஷே நல்ல புத்திசாலி

சமீபத்தில் ஒரு தமிழ் செய்திதாள் சொன்ன வார்த்தைகள் இது.

M.Thevesh said...

நீங்கள் நேரு பரம்பரையின் விசுவாசியாக இருக்கலாம்ஆனால் இன்று இந்தியாவிலுள்ள எல்லாப்பிரச்சினைகளுக்கும் காரணகர்த்தாவே நேருவின்தவறான அணுகுமுறையும்ஆட்சியும்தான். அகில தேசியத்தலைவர் என்றபெயருக்காக சொந்த நாட்டில் தீர்க்கவேண்டியவற்றைத்தீர்க்கத்தவறியவர். இந்தியாவின் நாடு பிடிக்கும் ஆசையின் முதற்பலி தனி இறமையுடன் இருந்த சிக்கிம் என்பதை எப்படி நோக்குவது.இந்தியாவின் பாதுகாப்புக்குஅதுஅவசியம் என்று சப்பைக்கட்டு கட்டவேண்டாம். நேபாளத்தின் பிரச்சினைகளுக்கு யார் காரணம் இந்தியாவின் அயல்நாட்டுக்கொள்கைதான்.இந்தியாவைச்சுற்றியுள்ளஎந்த ஒரு நாட்டுடனாவது சுமூக உறவு இருக்கிறதா? இல்லையே ஏன் இந்தநிலை இந்தியாவின் அயல் நாட்டுக்கொள்கையில் எங்கோ தப்பு இருப்பது புரியவில்லையா.நூறு சதவிகிதம் முஸ்லீம் வாழ்ந்த
காஷ்மீரத்தை இந்தியாவுடன் பலவந்தமாக இணைத்
தது முதல் தவறு.காஷ்மீரம் பாகிஸ்தானுடன் இணைந்திருந்தால் நேரு இந்தியாவின் பிரதமராகப்
பதவிஏற்கமுடியாது அந்த ஒருகாரணத்திற்காகவே
காஷ்மீரம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.அதன்
பலனைத்தான் அறுபது வருடமாக இந்திய மக்கள்
அனுபவித்துவருகிறார்கள்.

M.Thevesh said...

ஜயா வேட்டு,பிரபாரனுடன் ஈழப்பிரச்சினை முடிந்து
விட்டது என்று நீங்கள் எண்ணினால் அரசியல் சரித்தி
ரங்களை நீங்கள் முழுமையாய் ஆராயவில்லை என
நம்புகிறேன்.எந்த ஒரு விடுதலை இயக்கமும் தலை
வனுடன் முடிந்துவிடுவதில்லை.ஈழப்பிரச்சினை இப்
போது சர்வதேச அரசியல் மட்டத்துக்குப்போய்விட்டது.
காலங்கடந்தாலும் உரிமை அவர்களுக்குக்கிடைக்கும்.