Sunday, January 17, 2010

ரா (RAW) வலையில் சிக்கிய பிரபாகரன்

இந்தியா ஏன் இலங்கை பிரச்சனையில் தலையிட்டது? என்பதற்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான்.  ஆமாம் அப்போது ஆண்டு கொண்டுருந்த ஜே.ஆர். ஜெயவர்த்னே வின் பிடிவாதப் போக்கும், அளவுகடந்த தமிழர்களின் மீதான வெறுப்பும் தான் முக்கியமாக தெரிகிறது.  பிரபாகரன் என்ற சக்தியை வளர்த்தும் இவரே?

கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பின்பு புலம்பெயர்ந்தோர்களின் மொத்த ஆதரவும் மெதுவாக பிரபாகரன் பக்கம் திரும்பியது.  உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மக்களும் மற்ற போராளி குழுக்களின் ஆதிக்கத்தை விட  விடுதலைப்புலிகள் வரி வசூல் செய்து தனது உள்கட்டமைப்பை உருவாக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற காரணமாக இருக்க விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மற்ற இயக்கங்களை விட மேம்பட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் வளர்ந்து கொண்டே இருந்தது.  இலங்கை இராணுவமும், காவல்துறையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இவர்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிக்கு செல்ல பயப்படும் அளவிற்கு மாற்றம் பெற்றது.
இந்திரா காந்தி இரும்பு மனிதராக செயல்பட்டு,  பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்ததற்கு பிறகு, இந்தியா கொண்டுருந்த ரஷ்யா ஆதரவு நிலைக்கு எதிராக, அருகே இருக்கும் இலங்கை ஜெயவர்த்னேயின் அமெரிக்கா ஆதரவு இந்தியாவிற்கு காலில் குத்திய முள் வலி போல் உறுத்திக்கொண்டுருந்தது.

அதுவரைக்கும் கண்டும் காணாமல் இருந்த இந்தியா அதற்குப்பிறகு தான் முழுமையாக இலங்கையின் மேல் கவனம் செலுத்த தொடங்கியது. தமிழ்நாட்டுக்குள் வந்து கொண்டுருந்த தொடர்ச்சியான அகதிகளின் வருகையும், இலங்கையின் தறிகெட்ட வெளியுறவு கொள்கைகளும் நாளுக்குள் நாள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுக்கொண்டு வந்தன.

அப்போது இந்திரா காந்தியின் ஆளுமை என்பது உலகமெங்கும் பிரசித்தம்.

பின்னாளில் இந்திரா காந்தியின் இறப்புக்குப் பிறகு, ஜெயவர்த்னேவுடன் ஜே என் தீட்சித் பேசிய போது இந்திரா காந்தியின் மரணம் தனிப்பட்ட முறையில் ஜெயவர்த்னேவுக்கு சந்தோஷமாய் இருந்தது போல் அவருடைய வார்த்தைகள் உணர்த்தியது.

  " இந்திரா காந்தி உயிரோடு இருந்து இருந்தால் இலங்கை என்பது இரண்டு நாடாக துண்டாக்கி இருக்கும்"

அந்த அளவிற்கு ஜெயவர்த்னே சொப்பன ஸ்கலிதமாகியிருந்தார்.

அமெரிக்க ஆதரவு ஜெயவர்த்னே மூலம் வளர்க்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தென் இந்தியாவிற்கு மட்டுமல்ல மொத்தமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய அவசர அவஸ்ய காரணங்கள் ஏராளமாய் இருந்தது.

தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க மொத்தமாக சட்டம் ஓழுங்கு வரைக்கும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை.  இதற்கிடையே தான் தோன்றித்தனமாக போராளிக்குழுக்களின் செயல்பாடுகள்.

இரண்டு பக்கத்தையும் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டிய அவஸ்யம்.  கலவரத்திற்குப்பிறகு இந்திரா காந்தி நேரிடையாக தொலைபேசியில் ஜெயவர்த்னே கூட பேசியதும், நரசிம்மராவ், பார்த்தசாரதி,ரொமேஷ் பண்டாரி போன்ற இயல்பான அதிகார வர்க்கத்தினரின் முன்னேற்பாடுகளைக்கூட ஜெயவர்த்னே கேட்கக்கூட தயராய் இல்லை.  மொத்தமாக ராஜதந்திர முயற்சிகள் அத்தனையும் தோல்வியில் முடிந்த போது தான் ஒரு பக்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் அதேசமயம் மறுபக்கம் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி என்று முடிவு எடுத்து மொத்த பொறுப்பும் ரா உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேர்மையான வழியில் சென்றால் ஜெயவர்த்னே வழிக்கு வரமாட்டார்.  உள்நாட்டு கலவரங்களை உருவாக்கும் பட்சத்தில் தான் இந்தியா எதிர்பார்க்கும் வழிக்கு வருவார் என்று போட்ட கணக்கு சரியாகவே வேலை செய்யத்தொடங்கியது.

ரா வின் பார்வையில் முதலில் பட்டதும், அதுவே பரஸ்பர நல்ல புரிந்துணர்வை உருவாக்கியதும் சந்திரஹாசன் மட்டுமே. இவர் தந்தை செல்வாவின் மகனாவார். சந்திரஹாசன் மூலமாக அப்போது இலங்கையில் TELO இயக்கத்தினர் சாரை சாரையாக தமிழ்நாட்டில் வந்து இறங்குவதும், அது போக ரா வால் தேர்ந்தெடுத்த மற்ற போராளிக்குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதும் நடந்து கொண்டுருந்தது.   தமிழ்நாட்டு க்யூ உளவுத்துறைக்குக் கூட தெரியாத அளவிற்கு ரா வின் நேரிடையான பார்வையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழ்நாட்டு காவல்துறை உயரதிகாரி அலெக்ஸாண்டர்.

மொத்த நிகழ்வுகளையும் உள்வாங்கிய பிரபாகரன் லண்டனில் (1983) கல்லூரிப் பேராசியராக பணிபுரிந்து கொண்டுருந்த ஆன்டன் பாலசிங்கத்தை சென்னைக்கு வரவழைத்தார். அந்த நாள் வரைக்கும் பிரபாகரனை தங்கள் ஆட்டத்தில் ரா சேர்க்கவில்லை.  பிரபாகரனும் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் இல்லை.  ஆனால் தங்களைப் போலவே வளர்ந்து கொண்டுருந்த மற்ற போராளிக்குழுக்களுக்கு கிடைத்துக்கொண்டுருந்த முக்கியத்துவம் மனதில் என்ன மாறுதல் உருவாக்கியதோ ஆன்டன் பாலசிங்கம் மூலமாக விடுதலைப்புலிகளுக்கும் தேவையான ஆயுதப்பயிற்சிக்கு ரா மூலமாக ஏற்பாடு செய்யும் பொருட்டு ஆன்டன் பாலசிங்கத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1978 முதல் 1983 வரை சென்னைக்கு ஆன்டன் பாலசிங்கம் வருவதும், இயக்கப் போராளிகளுடன் பழகி, அரசியல் பாடம் நடத்துவதும் போன்ற தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் இடையே நடந்து கொண்டுயிருந்தது.

அப்போது ரா நிகழ்வுகளை, அவர்களின் தொடர்புகளை உருவாக்க முடியாமல் தவித்த பாலசிங்கத்திற்கு அப்போது உதவியர் தமிழ்நாட்டு காவல்துறை உயரதிகாரி அலெக்ஸாண்டர்.  அலெக்ஸாண்டர் வகுத்து கொடுத்த பாதையின்படி நீண்ட கடிதம் ஒன்றை இந்திரா காந்திக்கு பாலசிங்கம் எழுத, ரா அதிகாரிகள் அதன் தொடர்ச்சியாக வந்து சென்னையில் சந்திக்க பட்டும் படாமல் புரிந்துணர்வு உருவாக்கப்பட்டது.  ஒரு வகையில் பார்க்கப்போனால் பிரபாகரன் கூட மற்றவர்களின் வளர்ச்சியினால் வேறுவழியே இல்லாமல் சிக்கிக்கொண்ட மீன் போல் ரா விரித்த வலையில் தானாகவே வந்து மாட்டிக் கொண்டவர் தான்.

எம்.ஜி.ஆர் பார்வையில் பிரபாகரன் என்பது போல் மொத்த ரா உளவுத்துறையின் பார்வையில் மொத்த போராளிக்குழுக்களையும் பிரித்து தனித்தனியாக வளர்ப்பதில் உறுதியாக இருந்தனர்.  அன்றும் இன்றும் போராளிக்குழுக்கள் வளர்வதை விட தங்களுடைய பேச்சை கேட்கும் அளவிற்கு உருவாக்கி வைத்திருக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.

இந்திரா காந்தியின் நேரிடையான பார்வையில் இலங்கைக்கென உருவாக்கப்பட்ட குழுவில் மூவர் இடம் பெற்று இருந்தனர்.  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆர்.என்.ராவ்.  மொத்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் கிரீஷ் சக்சேனா. இவர் ரா உளவுத்துறையின் வெளியுறவு புலனாய்வுத் துறையின் தலைவர்.  மூன்றாவது நபர் சங்கரன் நாயர்.  இவர் வகித்த பதவி பிரதம மந்திரியின் செயலக ஆணையாளராக பணியாற்றிக்கொண்டுருந்தவர்.

" பாதுகாப்பு ஏஜென்சி"  என்றழைக்கப்பட்ட இவர்களின் அதிகாரம் வானளாவிய அதிகாரங்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு துணை குழுக்கள். நேரிடையாக, மறைமுகமாக.  இவர்களின் மொத்த செயல்பாடுகளும் தமிழ்நாட்டு அரசுக்குக் கூட தெரியாத அளவிற்கு அத்தனை ரகஸ்யமானது.

இவர்களின் முன்னேற்பாடுகள் ஒரு பக்கம்.  ஜி. பார்த்தசாரதியின் சமாதான ராஜதந்திர பேச்சுவார்த்தை மறுபக்கம். ரா வின் ஆயுதப் பயிற்சி ஒத்துழைப்பு அப்போது மூன்று இயக்கங்களுக்கு கிடைத்து பயிற்சிகள் தொடங்கப்பட்டு இருந்தது.  ERRLF. TELO. EROS. இந்த மூன்று இயக்கங்களுக்கும் பொறுப்பாளாராக இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்தவர் மேலே பார்த்த தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன்.  பிரபாகரனை தனக்கு கீழே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சித்து தோல்வி கண்டவர். டெல்லியின் பார்வையில் விடுதலைப்புலிகளை மறைத்தவர்.

1983 ஆம் ஆண்டு ரா உயரதிகாரி தமிழர் சந்திரசேகரன் (மதுரையைச் சேர்ந்தவர்) மூலம், பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, பாண்டிச்சேரியில் வைத்து பேசி முடித்த போது 100 பேர்கள் என இரண்டு குழுக்கள் என மொத்தம் 200 இளைஞர்கள் பயிற்சிக்கென்று ரயில் மார்க்கமாக டெல்லி அடைந்து அங்கிருந்து டேராடூன் சென்றடைவது என்று திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதில் மற்றொரு ஆச்சரியம் ரா உருவாக்கி இருந்த மற்றொரு பிரித்தாளும் சூழ்ச்சி.  விடுதலைப்புலிகளுக்கு உண்டான ஆயுதப்பயிற்சி என்பது, ஏற்கனவே பயிற்சி எடுத்துக்கொண்டுருந்த போராளிக்குழுக்களுக்கு தெரியாது.  ஏன் அந்த மூன்று இயக்க பொறுப்பாளரான சந்திரஹாசனுக்கே தெரியுமா? என்பதே சந்தேகம்.
பிரபாகரன் அனுப்பிய 200 பேர்கள் பெற்ற முறைப்படியான ஆயுதப்பயிற்சி இயக்க வளர்ச்சிக்கு உதவியதே தவிர முழுமையடையவில்லை.  அதிலும் நவீன ரக ஆயுதங்களுக்கான பயிற்சியும் அளிக்கப்படவில்லை.  கொடுத்த ஒன்றிரண்டு ஆயுதங்களும் அத்தனை தூரம் சிறப்பாக இல்லை.  மிகப் பெரிய செலவீனங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் பிரபாகரன் தடுமாறி விழி பிதுங்கிக்கொண்டுருந்த காலம் இது.  சந்திரஹாசன் ரா மூலம் பெறப்படும் நிதி என்பது மற்ற மூன்று இயக்கங்களுக்கு மட்டும் சென்று கொண்டுருந்தது.  இது போக வெளிநாட்டு வாழ் மக்களிடம் மற்ற இயக்கங்கள் பிரபாகரன் குறித்து அவதூறு பரப்பிக்கொண்டுருந்த காரணத்தால் முழுமையான நிதி ஆதாரங்களையும் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.  கனவுகளை சுமந்து கொண்டுருந்த பிரபாகரனின் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்து கொண்டுருந்தது.

அந்த சூழ்நிலையில் தான் (1984) எம்.ஜி.ஆரின் நிதி உதவி என்பது பிரபாகரன் உருவாக்கி இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் மொத்த பின்னடைவுகளை மாற்றி முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்க உதவியது.

அதற்குப் பிறகு வந்த 25 ஆண்டுகளும் பிரபாகரன் வாழ்க்கையில் எந்தப் பெரிதான வீழ்ச்சிகளும் வரவில்லை. தொட்டுக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல்.  வாங்கியவர் செம்மையாக பயன்படுத்தியதும் முக்கிய காரணம்.

15 comments:

கிரி said...

தகவல்களுக்கு நன்றி

//கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பின்பு//

இது பற்றி ஒரு பதிவு எழுத முடியுமா! அல்லது ஏற்கனவே எழுதி இருக்கிறீர்களா!

ஜோதிஜி said...

முழுமையாக இல்லாவிட்டாலும் மேலோட்டமாக இதைக் குறித்து கடந்த பதிவுகளில் எழுதி உள்ளேன். பத்து தலைப்புகள் ஒன்றாக படிக்கும் சில புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

புத்தக விபரங்கள் போல் இடுகையில் மிக விரிவாக ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைய படிப்பவர்கள் விரும்புவார்களா என்பதைக்குறித்து ஆராய்ந்து கொண்டுருக்கின்றேன்.

நன்றி கிரி. உங்கள் தொடர் வாசிப்புக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமையான பதிவுகள்... தமிழ் ஈழம் குறித்து பேசுபவர்கள் ,எழுதுபவர்கள் எவ்வளவு பேருக்கு இந்த விபரமெல்லாம் தெரியும் என்பது சந்தேகமே!!!

ஜோதிஜி said...

இந்த விபரமெல்லாம் தெரியும் என்பது சந்தேகமே!!!

பெருந்தன்மையான வார்த்தைகள். தெரிந்தவர்கள் பேசும் சூழ்நிலையில் இருக்க மாட்டார்கள். காரணம் இது ஒரு சுழல். சிக்கியவர்களை விட காப்பாற்றப் போனவர்களும் உள்ளே இழுத்து விடும் மாயப் பிரச்சனை. புரிந்தவர்கள் இப்போதைய சூழ்நிலையில் இறைநிலை தியானத்தில் தான் இருக்க முடியும்.---?????

M.Thevesh said...

சொப்பன ஸ்கலிதமாகியிருந்தார் இது என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.
சொப்பன ஸ்கலிதம் என்பது தூக்கத்தில் விந்து வெளி
யாவதைக்குறிப்பது.

ஜோதிஜி said...

விடுதலைப்புலிகளின் மொத்த வரலாற்றை உள்வாங்கி படித்துப்பார்த்தால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளும், போராட்டங்களும், திறமைகளும், தூக்கமில்லா அவர்களின் வீரத்தை பறைசாற்றுவதாக இருக்கின்றது.

ஆனால் ஜெயவர்த்னே மட்டுமல்ல? இன்று வரைக்கும் மொத்த இலங்கை ஆட்சியாளர்கள் எவருமே களமாடாத வீரமறியா ஆண்மையற்றவனின் " செயல்பாடுகள்" போலத்தான்.

நீங்களே யூகிக்க????

geethappriyan said...

ஆகா, அருமையான தகவல்கள் கொண்ட இடுகை,ஓட்டுக்கள் போட்டாச்சு

சீ.பிரபாகரன் said...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்து நிகழ்வுகளும், அனைத்து இயக்கங்களின் செயல்பாடுகளும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு பதிவு செய்யப்பட வேண்டும். ஏனெனில் வரலாறு நமது வழிகாட்டி...

“தமிழீழம்” என்ற இலக்கை அடைய இவை பயன கையேடாக அமையும்.

ஜோதிஜி said...

நன்றி கார்த்திகேயன்.

ஜோதிஜி said...

வரலாறு நமது வழிகாட்டி...

இவை பயன கையேடாக அமையும்

உண்மையும் கூட. ஆனால் உங்கள் குறியீட்டின் அர்த்தம் இதில் இருக்கிறதா என்பதை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம்?

படிப்பவர்களுக்கும் எனக்குமே உதவியாய் இருந்து இருக்கும்?

நன்றி பிரபாகரன்.

தமிழ் உதயம் said...

தெரிந்தோ, தெரியாமலோ ஒரு சுதந்திர போராட்டத்தை, உலகம் கொச்சைப் படுத்தி, முடித்து வைத்துவிட்டது. கடின உழைப்பில் கட்டப்பட்ட இயக்கம், தன் எண்ணம் ஈடேறும்வரை பயங்கரவாத முகமூடியை கழட்டாமல் இருந்து இருக்க வேண்டும். உலகம் ஜெயிப்பவன் பின்னால் தான் வரும். வெற்றி வந்த வழியை பார்க்காது. வெற்றியை மட்டுமே பார்க்கும். உலக வரலாற்றை பாருங்கள். ஜெயித்தவனை குற்றவாளி கூண்டில் ஏற்றி இருக்கிறார்களா.

ஜோதிஜி said...

நன்றி தமிழ் உதயம்.

உங்கள் வார்த்தைகளை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டுமானால் இடுகையின் மூலம் தான் தனியாக தெரிவிக்க வேண்டும். முடிக்கப்பட்டு விட்டது என்பதை நீங்களும் உறுதியாக நம்புகிறீர்களா?

அப்படியென்றால் கடந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆதிக்கத்தின் பிடியில் இருந்து வெளியே வந்த மொத்த நாடுகளின் போராட்ட வரலாறு பிரபாகரன் தொடங்கிய நாட்களுக்கு முன்னால் அல்லவா தொடங்கியது.

பிரபாகரன் சொன்ன வாசகம் நினைவு கூறத்தக்கது.

எனக்குப் பின்னால் வேறு ஒருவர் தொடர்வார்.

அதேபோல் ஜெயித்தவன் நிம்மதியாக இருந்து இருக்கின்றனா? ஓபாமா கூட ஆப்கானுக்கு படைபலம் இன்னும் தேவை என்று தான் வாங்கிய நோபலுக்கு புதிய தத்துவம் சொல்கிறாரே?

கடின உழைப்பு வீண் போனதாக எந்த சரித்திரமும் சொல்லவில்லை. கால அவகாசம் மட்டும் மாறும். காட்சிகளும் சற்று மாற்றம் பெற்று இருக்கும். ஆட்களின் ஆளுமையிலும் சற்று பெருந்தன்மை கூடியிருக்கும்.

அந்தக்காலம் எப்போது தான் இப்போதை கேள்வி. கேலிகள் மாறும் காலம் உருவாகாமலா போய்விடும்??????

பின்னோக்கி said...

புதிய அறியாத தகவல்கள் ஒரு படிப்பினை. வலை இறுகுகிறது. ஒரு நிகழ்வின் உள்ளே சென்று பார்க்கும் போது, அதன் தன்மை மாறுகிறது.

கடல் அன்பன் said...

"...மற்ற போராளிக்குழுக்களுக்கு கிடைத்துக்கொண்டுருந்த முக்கியத்துவம் மனதில் என்ன மாறுதல் உருவாக்கியதோ ஆன்டன் பாலசிங்கம் மூலமாக விடுதலைப்புலிகளுக்கும் தேவையான ஆயுதப்பயிற்சிக்கு..."
இந்த கருத்து சரியா தோழரே?
கவிஞர் புலமை பித்தன் ஒரு பேட்டியில், 'ஆயுத பயிற்ச்சி கொடுக்க இந்தியா விடுத்த அழைப்பினை பிரபாகரன் ஏற்க மறுத்தார்.ஏன் தம்பி என்று கேட்டதற்கு,பிரபாகரன் கூறியது, 'அண்ணா! இந்தியா எங்களது இனப்பகை சண்டையில், தன்னுடைய நலனுக்காக மட்டும்
இன்று இதை செய்கிறது. ஆனால் நிச்சயம் ஒருநாள் எங்களுக்கு எதிராக திரும்புவார்கள்' என்று. பின்னர் நானே சம்மதிக்க வைத்தேன்' என்று கூறி உள்ளார்.

ஜோதிஜி said...

மிக சரியான வார்த்தைகள் தான் கடன் அன்பன். முதன் முதலாக பிரபாகரனுக்குத் தெரியாமல் மற்ற பேராளிக்குழுக்கள் இந்தியாவிற்கு வரிசையாக சென்று கொண்டிருப்பதை பிரபாகரன் தாமதமாகத்தான் உணர்ந்தார். இதற்குப் பினனால் தான் இந்தியா ஆயுத பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பதையும் அதற்கான முன்னேற்பாடுகள் என்பதையும் புரிந்து கொண்டே அன்டன் பாலசிங்கத்திற்கு தகவல் அனுப்பி சென்னைக்கு வரவழைத்தார்.