Saturday, September 26, 2009

கதாநாயகனின் உயிருக்கு குறி






புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (32)
உச்சக்கட்ட தொடக்கம்
அத்தனை வௌ்ளையர்களும் நடுநடுங்கியதும் ,பரவசப்பட்டதும் அவ்வப்போது அவஸ்த்தைபட்டதுமான ஒரே இந்திய ஜீவன் மகாத்மா காந்தி என்றால் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
மவுண்ட் பேட்டன் பிரபு வேண்டுகோளின்படி அதுவும் பிரயாசைப்பட்டு அவரை கல்கத்தாவில் உட்கார வைத்தாகிவிட்டது. அவருக்கு அங்கு தன்னுடைய மக்களால் அவருக்கு கிடைத்த மரியாதை?
ஆக்ஸ்ட் 15 அன்று நவகாளியில் ஒரு இந்து சாகமாட்டான். அது போல கல்கத்தாவில் ஒரு முஸ்லீம் கூட சாகக்கூடாது சொல்லிக் கொண்டு காரில் இறங்கி நடந்த போது விழுந்த அர்ச்சனை வார்த்தைகள், தன் மேல் விழுந்த "நல்ல" விஷயங்கள், பாதையில் பரப்பி வைத்த முட்கள், உடைக்கப்பட்டு தெறித்து விழுந்த கண்ணாடிச் சிதறல்கள், மலக்குவியலை மலை மலையாக வீசி எறிந்த மக்கள். இவர்களின் வாழ்வுக்காக இவர்களின் சுதந்திரத்திற்காக இவர் சிறைச்சாலையில் இருந்த விஷயங்களை நாட்களை கொள்கைகளை தனியாக பார்ப்போம்.
இந்தியாவிற்குள் விமர்சனத்திற்குள் வாழ்ந்த காந்தியின் வௌிவட்டாரத்தையும் பார்த்துவிடலாம்.
உப்பு சத்தியாகிரகத்தின் பாதிப்பாக அன்றைய லார்ட் இர்வின் காந்தியை சிறையில் இருந்து விடுவித்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அன்றைய பிரிட்டிஷ் ஆளுமையில் நடுநாயமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்க்கு வாயிலும் வயிற்றிலும் வௌிவந்த புகை நிற்கவே இல்லை.
"அரை நிர்வாண பக்கிரி" யை மன்னர் சந்திப்பதா? இயல்பாகவே பெரிய காதுகளைப் பெற்ற காந்தி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காந்தி இர்வின் ஒப்பந்தம் (1931 பிப்ரவரி 17) ஏற்பட்டது. எப்போதும் போல (வட்ட மேஜை மாநாடு) தன்னுடைய புகழ்பெற்ற "ஆடையை" உடுத்திக்கொண்டு மன்னர் மாளிகையில் உள்ளே நுழைந்த போது அத்தனை மக்களும் ஆச்சரியமாய் பார்த்தனர். அவர் தங்கியிருந்த இடத்தில் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
இவரா? இந்த மனிதரா?
காந்தியை அங்கு விரும்பி வந்து சந்தித்த பிரபலங்கள்
ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, மேரியா மாண்டி சோரி, சார்லி சாப்ளின், ஹெரால்ட் லஸ்கி, கான்டர்பெரி ஆர்ச் பிஷப், ஜான்ஸ் ஸ்மட்ஸ். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் மட்டும் பொருமிக்கொண்டு வௌியே காட்டவில்லை. மொத்தத்திலும் சர்ச்சில் எதிர்பார்க்காத கொடுமையும் நிகழ்ந்தது. வைஸ்ராஸ் சமமாக உட்கார வைத்ததே தவறு என்றவருக்கு மாட்சிமை தாங்கிய மன்னர் அழைத்து "உங்களுக்கு தேநீர் விருந்து அளிக்க ஆசை " என்றதும் சுத்தமாக வெறுத்துப்போய்விட்டார்.
மன்னர் காந்தியை மரியாதையாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அளித்த தேநீர் விருந்தை முடித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வௌியே வந்த போது திரண்டு இருந்தனர் பத்திரிக்கையாளர்கள். ஏராளமான கேள்விகள் புன்சிரிப்புடன் அத்தனை பேருக்கும் பதில்கள்.
கூட்டத்தில் இருந்து ஒரு நிருபர் கேட்ட கேள்வி.
" மிஸ்டர் காந்தி. இப்படிப்பட்ட அறைகுறை உடையுடன் மன்னரைச் சந்திக்க உங்களுக்ச் சங்கடமாக இல்லையா?"
காந்திஜி அவரை புன்கையுடன் ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்ன பதில்.
"ஒரு சங்கடமும் இல்லை. எங்கள் இருவருக்கும் போதுமான உடைகளை மன்னரே அணிந்திருந்தார்"
பிரிட்டிஷார் கடைசியாக காந்தியை சிறையில் வைத்த ஆண்டு 1942. மொத்தமாக சிறையில் வாழ்ந்த நாட்கள் 2338. இதில் 249 நாட்கள் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த நாட்கள்.
மன்னர்களுடனும், வைஸ்ராய்களுடனும், பிரபல அரசியல் மேதைகளுடனும் பேசிய காந்தி இந்த எளிய பாதிக்கப்ட்ட மக்களுக்குப் பொறுமையான குரலில் அத்தனை அவமதிப்புகளையும் பொருட்படுத்தாமல் எடுத்துக்கூறி அவர்களை சகஜ நிலைக்குத் திரும்பும் நோக்கத்துடன் பேசினார்.
அவரது அஹிம்சைப் போராட்டத்தின் திட்டமே இதுதான்.
கலகத்தில் இறங்க இருக்கும் இரண்டு கூட்டத்தினரிடையே அவரது உயிரைப் பணயப் பொருளாக வைத்த ஒரு ஒப்பந்தம்.
இவை ஒரு பக்கம் நடந்து கொண்டுருக்க மவுண்ட் பேட்டன் பிரபு பாகிஸ்தானின் கதாநாயகன் புது மாப்பிளையை தனது (ஜின்னா சாகிப்) அலுவலகத்திற்கு வரவழைத்து இருந்தார். அருகில் லியாகத் அலிகான். காரணம் உலகில் தலைசிறந்த துப்பறியும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைவரான திரு. சாவேஜ் கொடுத்த தகவல்.
அவருடைய பணியாளர்கள் இந்தியா முழுக்க பிச்சைகாரர்கள் வேஷம் முதல் வீடுகளில் எடுபிடியாக என்று அத்தனை துறைகளிலும் ஊடுருவி இருந்தனர்.
காரணம் அங்கு அப்போது அவர்கள் விவாதித்த செய்தி அத்தனை முக்கியமானது. லாகூரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள அரசியல் தலைவர்களின் கூட்டு சதி ஆலோசனையின் மொத்த விபரீதம்.
தாராசிங் என்ற தலைவர் குழுவில் தீவிரவாத எண்ணம் கொண்ட சீக்கியர்களும், ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் என்று இந்து மத தீவிரவாத குழுக்களும் சேர்ந்து ஆகஸ்ட் 14 அன்று ஜின்னா சாகிப்பை பாகிஸ்தான் அசெம்பிளி கட்டிடத்தில் இருந்து கவர்னர் ஜெனரல் மாளிகைக்கு செல்லும் போது அணிவகுப்பின் போது கலந்து கொண்டு சுட்டுக்கொல்வது.
மற்றொன்று பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய அனைத்து பொருட்களையும் ஏற்றிச் செல்லும் "பாகிஸ்தான் ஸ்பெஷசல்" என்று ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது.
கட்டுக்கோப்பான சீக்கியர்களின் கையில் அத்தனை நவீன வசதிகளும் மனம் முழுக்க அத்தனை வெறியும் இருந்தது.
அவர்களின் கொள்கை ஒன்று தான்.
எத்தனை பிரச்சனை என்றாலும் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களே இறுதியில் ஜெயிப்பார்கள்.
தன்னால் மாற்றிக்கொள்ள முடியாத முஸ்லீம் வேடத்திற்கு சுயம் சேவக் தொண்டர்கள். உத்தரவிட வயர்லெஸ் வசதியுடன் அங்கங்கே ஒருவர். ஒருவர் சிக்கினாலும் அடுத்தவர்க்கு என்ன தொடர்பு? என்று தெரிவிக்க முடியாதபடி நவீன முறைகள். மொத்தத்தில் அன்று அவர்களின் மொத்த திட்டத்தையும், அமைப்பையும் கேட்டு முடித்தவுடன் ஜின்னாவின் முகம் வௌிறி விட்டது.
24 மணி நேரத்தில் எத்தனை பேர்களை கைது செய்யமுடியும்?
பிரச்சனை வேறு விதமாக மாறி உள்நாட்டு போர் உக்கிரமாகி விடும் என்ற பயம் மவுண்ட் பேட்டன் பிரபுக்கு. குழம்பிப்போய் மவுண்ட் மகாராஜன் எடுத்த முடிவுதான் ஜின்னாவின் உயிரையும் காப்பாற்றி இன்று வரையிலும் பாகிஸ்தானின் தந்தை என்று அவர் புகழ் கொடி பறந்து கொண்டுருக்கிறது.
எருமைப் பால் குடித்து ஏப்பத்துடன் வாழ்ந்தவர்களும், காரம் பசு பால் குடித்து அறிவில்லாமல் வாழ்ந்து, அடித்துக்கொண்டவர்களுடன் ஆட்டுப்பால் குடித்து அறிவுடன் வாழ்ந்தவர்.
தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625


No comments: