கடந்த பிப்ரவரி 4 2011 'புதிய தலைமுறை'யில் வந்த அட்டைபடக்கட்டுரையின் விரிவாக்கம் இது. புதிய தலைமுறை ஆசிரியர் திரு. மாலன் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு என்னுடைய நன்றிகள்.
ஜனவரி 28 2010 செய்தித்தாளில் வந்த செய்தி பலரும் படித்துவிட்டு எளிதாக மறந்திருப்போம். ஆனால் இந்த செய்திக்குப் பின்னால் உள்ள விசயம் மிக எளிமையானது. தொழில் வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசாங்க கொள்கைகளும், சுயநலத்தை மட்டுமே கொண்டிருக்கும் முதலாளித்துவமும் உருவாக்கிய புரிந்துணர்வால் இன்று லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியில் வந்து முடிந்துள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் நாலு லட்சத்திற்கு மேல் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையே திசை திரும்பப் போகின்றது என்பதை எத்தனை பேர்கள் உணர்ந்திருப்பார்கள்?
தொடக்கத்தில் பல்லடம் தாலூகாவில் ஒரு சிறிய கிராமமாக திருப்பூர் இருந்தது. ஆனால் கல்கத்தாவில் இருந்து இங்கு அறிமுகமான பனியன் தொழில் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறி இன்று திருப்பூர் மாநகராட்சி என்கிற நிலைவரைக்கும் வளர்ந்துள்ளது. பிழைக்க வாய்ப்பு தேடி வரும் கிராமத்து மக்களுக்கு வாழ்க்கையை அளித்த இந்த திருப்பூர் இன்று கேள்விக்குறியில் வந்து நிற்கின்றது..
இங்குள்ள ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி மூலமாக மத்திய அரசாங்கத்திற்கு வருடத்திற்கு பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் அந்நியச் செலவாணியாக வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது. இதைவிட அதிகமாக மாநில அரசாங்கத்திற்கு டாஸ்மார்க் மூலமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சாயப்பட்டறை முதலாளிக்கு உச்ச நீதி மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பால் இந்த தொழிலை மட்டுமே சார்ந்துள்ள அத்தனை பேர்களையும் டாஸ்மார்க் செல்லாமலே மயங்கி விழ வைத்திருக்கிறது.
இந்த பிரச்சனை வெறும் சாயப்பட்டறை சார்ந்தது மட்டுமல்ல. திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழிலுடன் நேரிடையாக மறைமுகமாக பல நூறு தொழில்களுடன் சம்மந்தப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு துறையும் ஏற்றுமதிக்கு முக்கியமானது. ஒன்றில் அடி விழுந்தால் அதன் சுற்று முடியும் போது மொத்தமும் அடிவாங்கி மூச்சு வாங்கி நின்றுவிடும். ஒரு தொழில் முடங்கினாலும் பாதிக்கப்படுவது முதலாளி மட்டுமல்ல சார்ந்துள்ள ஏழை எளிய மக்களுமே.
இங்குள்ள ஏற்றுமதி தொழில் சூடுபிடிக்காமல் இருந்த 1985ல் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட சாய சலவைப்பட்டறைகள் இருந்தது. இந்த காலகட்டத்தில் திருப்பூரில் ஓடிக் கொண்டிருக்கும் நொய்யல் ஆற்றில் மக்கள் குளிக்கும் அளவுக்கு அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நிராகத்தான் இருந்தது. ஆனால் ஏற்றுமதி அதிகரிக்க நொய்யல் ஆறு நொந்து போய் இன்று வறண்டு போனதோடு மட்டுமல்லாமல் சாய நீரை சுமந்து செல்லும் ஆறாக மாறியுள்ளது.
இன்றைய நவீன யுத்திகள் எதுவுமில்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு எதுவும் செய்யாமல் அப்படியே ஆற்றில் கலந்து விட்டுக் கொண்டுடிருந்தார்கள். இப்போது மாசுக்கட்டுப்பாட்டுத் துறை பார்த்துக் கொண்டிருக்கும் பணியை தொடக்கத்தில் தாசில்தார் வசமிருந்தது. வெளியாகும் சாய நீரின் நிறத்தை போக்குவதற்காக சுண்ணாம்பு மற்றும் பெரஸ் சல்பேட் கலந்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். சுண்ணாம்பு நீரை வெள்ளையாக மாற்றிவிடும். பெரஸ் சல்பேட் என்பது கழிவை வண்டலாக மாற்றி கீழே தங்க வைத்துவிடும். நூறு சதவிகிதம் நச்சுத் தன்மையுள்ள இந்த கழிவு சமாச்சாரங்களை அந்தந்த நிறுவனங்கள் ஒரு மூட்டையில் கட்டி தனியாக உள்ளே வைத்து விடுவார்கள். மழை வந்து ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது இந்த சாக்கு மூட்டையை நீரில் தூக்கிப் போட்டு விட பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.
தொடக்கத்தில் 50 எண்ணிக்கையில் தொடங்கிய இந்த சாயப்பட்டறைகள் திருப்பூரின் ஏற்றுமதியின் அளவு அதிகமாக வேகமாக முன்னேறி 1300 என்ற எண்ணிக்கை வந்த போது தான் சாய நச்சின் விர்யம் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது. அதுவும் இந்த சாய நீர் காங்கேயம் வட்டத்தில் உள்ள ஓரத்துப்பாளையம் அணையில் போய்ச் சேர பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையத் தொடங்கியது.
சுத்திகரிக்கப்படாத சாய நீர் இந்த அணையை நோக்கி வந்து சேர அணையில் வாழும் உயிரினங்கள் செத்து மிதக்கத் தொடங்கியது. மொத்த அணையில் உள்ள நீரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாக விவசாயிகள் நலச்சங்கம் அமைத்து சாயப்பட்டறை முதலாளிகளுக்கு எதிராக நின்று போராடத் தொடங்கினர். நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டிருந்த சாய நீரைப் பார்த்து விவசாயிகள் இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்போது பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வைக்குச் சென்றது.
அவர் கொடுத்த தீர்ப்பில் மற்றொரு சாராம்சத்தையும் சேர்த்து இருந்தார். சுத்திகரிக்கப்படாமல் சாய நிர் எவர் வெளியேற்றுகின்றார்களோ அவர்களிடம் ஒரு லிட்டருக்கு ஏழு பைசா வசூலிக்க உத்தரவிட்டார். இந்த ஏழு பைசா என்பது சாய நீர் சேரும் அணையை சுத்தப்படுத்திக் கொள்ளவும், பாதிப்படையும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் என்று தீர்ப்பு வழங்கினார். ஆனால் அவரையும் பதவி உயர்வு என்ற போர்வையில் டெல்லிக்கு அனுப்பி விட பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக திருட்டுத்தனமாக சாயநிர் கழிவு மீண்டும் வெளியேறத் தொடங்கியது. இதில் மற்றொரு கொடுமையும் உண்டு..
ஒரு சாயப்பட்டறை முதலாளி எத்தனை ஆயிரம் லிட்டர் வெளியேற்ற அனுமதி வாங்கியிருக்கிறாரோ அந்த அளவு மட்டும் வெளியேற்றுவதில்லை. திருட்டுத்தனமாக இரண்டு மடங்கு அளவு சாய நீரை வெளியேற்றுவதும் நடக்கத் தொடங்கியது. அதிக வீர்யம் உள்ள நச்சுக் கலவைகள் கலந்த சாய நீர் திருப்பூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு செல்வதற்குள் இடையில் உள்ள அத்தனை நிலவள ஆதாரங்களையும் அழித்து முடித்து எப்போதும் போல அமைதியாக அணையில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் நீரைச் சென்றடைகின்றது.
பிரச்சனை சூடுபிடிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் உருவானது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அந்தந்த நிறுவனங்கள் அங்கே உருவாக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு தாங்கள் வெளியேற்றும் சாயநீரை அனுப்ப வேண்டும். அதன் நிர்வாகத்தை அந்தந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கைத்திட்டம் உருவாக்கப்பட்டது. அரசாங்க நிதி உதவியோடு உரிமையாளர்களும் கைகோர்க்க மொத்தம் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கியது.
வசதியுள்ளவர்கள் தங்கள் நிறுவனத்திற்குள் தாங்களாகவே உருவாக்கி செயல்படத் தொடங்கினர். ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையமும் அந்தந்த நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட லிட்டர் என்றொரு வரையறை உருவாக்கியிருந்தது. ஆனால் இதனை மதிக்காமல் மனம் போன போக்கில் செயல்படத் தொடங்கிய முதலாளிகளின் கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வராமலேயே திருட்டுத்தனமாக வெளியேறத் துவங்க பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு குழுவும் கைகோர்த்து திடீரென்று நடுஇரவில் சோதனைக்குச் சென்றபோதிலும் ஆற்றில் கலக்கும் நச்சுநீர் குறைந்தபாடில்லை. இடையே குறைபாடுகள் இருந்த பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூடுவதும், பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் திறப்பதுமாக கண்ணாமூச்சி விளையாட்டு போலவே போய்க்கொண்டிருக்க விவசாயிகளின் கோபம் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையின் மேல் திரும்பியது.
உள்ளே வருகின்ற அதிகாரிகள் முறைப்படி கவனிப்பு பெற்று இவர்கள் எங்கள் எதிர்காலத்தை பாழாக்கி விட்டார்கள் என்று நீதிமன்றத்திற்குச் செல்ல 2006ல் ஜீரோ டிஸ்சார்ஜ் என்றொரு புதிய வார்த்தை அறிமுகமானது. அதாவது வெளியாகும் சாய நீரில் ஒரு துளி அளவு கூட நச்சத் தன்மை இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்திரவு எப்போதும் போல உத்திரவாகவே இருந்தது. சாய நீர் எப்போதும் போல அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இடைவிடாத பணியில் இருந்தாலும் சாயப்பட்டறை முதலாளிகள் இந்த பிரச்சனையை டெல்லி உச்ச நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல அவர்கள் ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்கள்.
"சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டலின்படி நடந்து கொள்ளுங்கள். "
முதலாளிகள் தொழில் செய்ய வேண்டும். விவசாயிகள் நாங்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்று இரண்டு பக்கமும் மஞ்சுவிரட்டு போல வாய்தா மேல் வாய்தாவாக இழுத்துக் கொண்டே செல்ல இன்று உள்ளதும் போச்சு நெர்ள்ளக் கண்ணா என்கிற கதையாக மொத்த சாயப்பட்டறைகளையும் இழுத்து மூடிவிட்டு தரம் பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்கிறரீதியில் வந்து முடிந்துள்ளது.
இந்த இடத்தில் சங்கடப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இப்போது கொடுத்துள்ள தீர்ப்பு சாய்ப்பட்டறை முதலாளிகளும் மட்டுமல்ல. 2006 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றக் கொண்டிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் சேர்த்து நீதி மன்றம் ஒரு பெரிய ஓலையை அனுப்பி உள்ளது. முதலாளிகள் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பல்லைக்காட்டிய அதிகாரிகளின் வண்டவாளம் இனிமேல் ஒவ்வொன்றாக வெளியே வரக்கூடும்.
நீங்கள் திருபூருக்குள் உள்ளே வரவேண்டுமென்றால் தாராபுரம், பல்லடம், மங்கலம் அவினாசி போன்ற ஊர்களில் ஏதோவொன்றின் வழியாகத் தான் உள்ளே வரமுடியும். ஆனால் அவினாசி சாலையைத் தவிர மற்ற மூன்று வழிகளிலும் இன்று சாய்ப்பட்டறைகள் நீக்கமற நிறைந்துள்ளது. நெருக்கடி நிறைந்த இன்றைய திருப்பூர் வாழ்க்கையில் இந்த சாயப்பட்டறையைச் சுற்றி தான் சராசரி மக்களும் பணிபுரிந்து கொண்டு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். குழாய் வழியாக செல்ல வேண்டிய சாயநீர் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கலக்கும் போது இதன் வீபரீதம் இன்னமும் கொடுமையாய் இருக்கும் தானே?
திருப்பூர் நகரை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு டாலர் புழங்கும் நகரம் என்று அண்ணாந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எத்தனையோ நவீனங்கள் சமகாலத்தில் வந்திருந்த போதிலும் இங்குள்ள முதலாளிகளின் அம்மாஞ்சித்தனம் மட்டும் மாறுவதாகத் தெரியவில்லை. ஒரு தொழில் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகரும்?
தங்களை எப்படி தயார் படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து ஆய்த்த ஆடை ஏற்றுமதியாளர்களும் கவலைப்படுவதில்லை. சார்புத் தொழிலாக இருக்கும் சாயப்பட்டறை முதலாளிகளும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு மேலும் ஒற்றுமையில்லாமல் அவரவர் அவருக்குண்டான கணக்கில் மட்டும் குறியாக இருப்பதால் இந்த துறையில் உள்ள வளர்ந்து வருபவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக போய்விடுகின்றது.
பெருநகர வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டு விரைவான திட்டங்களை ஆட்சிக்கு வரும் எவரும் உடனடி தீர்வை கொண்டுவருவதில்லை. அதன் பாதிப்பு இன்றைய திருப்பூர் போக்குவரத்து நெரிசல். இதைப்போலவே இந்த சாயப்பட்டறைகளுக்கு 2006 ஆம் ஆண்டு நெருக்கடி உருவாக இங்குள்ள எந்த முதலாளிகளும் விழித்துக் கொள்ளாமல் அரசியல் கட்சிகள் அடிக்கும் கூத்துகளுக்கு உறுதுணையாக இருக்க இப்போது மொத்தமாக பாதிக்கப்பட்டதும் இந்த முதலாளிகள் தான்.
ஆனால் இப்போது வந்துள்ள நீதிமன்ற உத்திரவை பார்த்ததும் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்க. உடனடியாக மின்சார துண்டிப்பு வேண்டாம் என்று கெஞ்சும் சூழ்நிலையில் உள்ளார்கள். ஆனால் இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் என்று ஆப்பை தானாகவே முதலில் சொறுகிக் கொண்டதும் இந்த சாயப்பட்டறை முதலாளிகள் தான். பணம் படைத்த சில முதலாளிகள் இந்த பிரச்சனை விஸ்ரூபமாக எடுக்க நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம் என்று அவரவர் சாயப்பட்டறைகளில் இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் என்கிற வழிமுறையை கடைபிடித்து விருதும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் நடைமுறையில் பொருளாதார ரீதியாக சாத்யமில்லாத இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் தான் இன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.
திருப்பூருக்கு சவாலாக இருக்கும் பங்ளாதேஷ் மற்றும் சீனாவில் அரசாங்கமே இந்த சுத்திகரிப்பு வேலையை கையில் எடுத்துக் கொண்டு முடிந்து வரைக்கும் சாய நீரை சுத்திகரிப்பு செய்து மீதி உள்ள நீரை கடலில் கலந்து விட்டுக் கொண்டிருக்கிறது. சென்கைக்கு வந்து திருப்பூர் முதலாளிக்ளுக்கு அழைப்பு விடுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூட 24 மணி நேரத்தில் உங்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளை செய்து தருவோம் என்றார். ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கம் எப்போது விழிக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.
திருப்பூரில் தொடக்கம் முதல் குடிநீர் தட்டுப்பாடு எனப்து மிகப் பெரிய சவாலாக இருந்தது. மூன்றாவது குடிநீர் திட்டம் என்று முந்தைய அரசாங்கம் உருவாக்கிய புரிந்துணர்வில் திருப்பூருக்குள் எல் அண்ட் டி நிறுவனம் உள்ளே வர பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்தது, சாயப்பட்டறைகளுக்குத் தேவைப்படும் தண்ணிரையும் இவர்கள் வழங்க சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த பல சாயப்பட்டறை லாரிகள் இன்னும் அடியோடு காணாமல் போய்விட்டது..
இதே எல் அண்ட் டி நிறுவனம் இந்த சாய கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்திற்க்காக தொடக்கத்தில் ஒரு திட்டத்தை வடிவமைத்து கொடுத்தது. தூத்துக்குடி கடலில் கொண்டு போய் சேர்த்து கலக்கும் திட்டமாகும். அதாவது 100 லிட்டர் சாய கழிவு நீரை சுத்திகரிக்கும் போது கடைசியாக 30 லிட்டரை அதில் உள்ள நச்சு அமில காரத் தன்மையை ஓர் அளவுக்கு மேல் சுத்திகரித்துவிட முடியாது. உலகளவில் நூறு சதவிகித வெற்றியைத் தராத இந்த தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது தான் இப்போதுள்ள சவாலான விசயமாககும். அப்படியே செய்ய வேண்டுமென்றால் அது செலவு பிடிக்கும் சமாச்சாரம், உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி வருமே?
அதென்ன கடல் என்பது கழிவுகளை கொண்டு போய் இடமா என்று? நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இன்று ஒரு சாய்ப்பட்டறை என்பது வளர்ந்துள்ள நவீன மாற்றத்தில் பல கோடிகளை விழுங்கினால் தான் ஒரு நிறுவனமாக சந்தையில் நிற்க முடியும். எவரும் முழுத் தொகையும் கையில் வைத்துக் கொண்டு இந்த தொழிலில் இறங்க முடியாது. வங்கி முதல் வைத்துள்ள நகைகள் மற்றும் இடங்கள் மூலமாகத்தான் இவ்வளவு பெரிய முதலீட்டுக்காக வங்கியை நாடிச் செல்கிறார்கள். ஒரு சாயப்பட்டறை நிறுவனத்திற்கு ஆதாரமாக இருப்பது சாப்ட் புளோ என்ற ராட்ச எந்திரம். லட்சத்தில் தொடங்கிய பல கோடிகள் வரைக்கும் ஒவ்வொரு எந்திரமும் விழுங்கி தின்று விடும்.
எப்போது எனக்கு துணியைத் தந்து என் பசியை போக்கப் போகின்றாய் என்று மிரட்டிக் கொண்டிருக்கும். முதலாளிகளும் வசூலிக்க முடியாத கடன்களை மனதில் கொண்டு துணியை துணிவோடு சந்தையில் தேடிக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கி கடன்கள் வட்டி குட்டி போட்டு முதலாளியை தலைமறைவாக வாழ வைத்துவிடும். நிறுவனத்தை நடத்த சாப்ட் புளோ எந்திரத்தின் தொடர்ச்சியாக சாயமேற்றிய துணியை உலர வைக்க ட்ரையர் என்ற எந்திரம் தேவை. மொத்த நிறுவனத்திற்கும் தேவைப்படும் தண்ணீர். சரி இதெல்லாம் ஒரு நிறுவனத்திற்குரிய கட்டுமான செலவு தானே என்கீறீர்களா?
முதலீடு இத்துடன் முடிந்தால் பரவாயில்லையே? மாசுகட்டுப்பாட்டு வாரியம் சொல்லியுள்ள கழிவு நீரை சுத்தப்படுத்துதல். இதற்கு பணம் இருப்பவர்கள் தனியாக தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே ஆரோ என்றொரு அமைப்பை உருவாக்கி இருப்பார்கள். வாய்ப்பில்லாதவர்கள் பொது சுத்திகரிப்பு நிலையத்துடன் சார்ந்து இருப்பார்கள். இதற்கு உண்டான நடைமுறை மூலதன செலவு என்பது என்பதை விட இத்தனை பெரிய நிர்வாகத்தை நடத்திச் செல்ல முக்கியமானது மின்சாரம்.
தற்போதுள்ள தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டு காரணமாக ஒவ்வொரு முதலாளிகளும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதாக முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆடைத் தொழிலில் இருப்பவர்களை விட சாயப்பட்டறை முதலாளிகளுக்கு இந்த மின்சார பற்றாக்குறை என்பது தினந்தோறும் உயிர்போய் உயிர் வந்து கொண்டிருக்கும் சமாச்சாரமாகும். ஒரு வளர்ந்த சாய நிறுவனத்திற்கு 350 குதிரைதிறன் மோட்டார்கள் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஆனால் இவர்கள் இப்போது தமிழ்நாட்டு மின்சார வாரியம் உத்தரவின்படி இந்த முழுமையான குதிரைத்திறனை பயன்படுத்த முடியாது.
எந்த அளவிற்குண்டான அனுமதி பெற்று குதிரைத்திறன் வைத்திருக்கிறார்களோ அதில் 30 சதவிகிதத்தை பயன்படுத்தக்கூடாது. மீதி உள்ள 70 சதவிகிதத்தை பயன்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மிச்சம் மீதி தேவைப்பட்டால் ஜெனரேட்டர் வைத்துக் கொள்ள வேண்டியது தான். மீறிப் பயன்படுத்தினால் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூபாய் 300 அபராத தொகையாக வசூலிக்கப்படுகின்றது. இது தவிர தினந்தோறும் இரண்டு மணி நேரம் நிரந்தர மின் தடை. அடுத்து பீக் அவர்ஸ் என்று சொல்லப்படும் மாலை நேரத்தில் எந்த பெரிய நிறுவனங்களும் தங்களின் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது. அந்த சமயத்தில் மின்சாரம் இருந்தாலும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஜெனரேட்டர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரியம் நடைமுறை பழுது பார்த்தல் என்ற போர்வையில் ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட நாளில் ஜெனரேட்டர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் மீறி அறிவிக்கப்படாத மின்சாரத்தடை.
இன்னும் பிரச்சனை முடிந்தபாடில்லை. சரி நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் இத்தனை குளறுபடி என்றால் சாய்பபட்டறைக்கு தேவைப்படும் தண்ணீர் பிரச்சனை வேறொரு ரூபத்தில் பலரின் கல்லாபெட்டிகளை காலி செய்து கொண்டிருக்கிறது. வராது வந்த மாமணியாய் திருப்பூருக்குள் இருக்கும் எல் அண்ட் டி நிறுவனம் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு தொடக்கத்தில் தான் வழங்கிக் கொண்டிருந்த நீருக்கு ஒரு லிட்டருக்கு 3 பைசா என்று விலை நிர்ணயம் செய்திருந்தது. ஒவ்வொரு சாயப்பட்டறை நிறுவனத்துடனும் தொடக்கத்திலேயே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கெட்டிக்காரத்னமாக வாங்கி வைத்திருந்தது. எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் மற்றொன்றையும் சுட்டிக் காட்டுகின்றது. ஒவ்வொரு சாயப்பட்டறையும் தினந்தோறும் தேவைப்படும் மொத்த லிட்டர் அளவையும் தெரிவித்து விட வேண்டும்.
சாயப்பட்டறை செயல்படுகின்றதோ இல்லையோ அது குறித்து எல் அண்ட் டி நிறுவனத்திற்கு கவலையில்லை. போட்ட ஒப்பந்தத்தின் படி அந்த தண்ணீரை வாங்கியாக வேண்டும். அப்படி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாத பட்சத்தில் சாயப்பட்டறை நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தின் படி மூன்றில் ஒரு பங்கான தண்ணீருக்குண்டான கட்டணத்தை ஒழுங்கு மரியாதையா எடுத்து வைத்து விட வேண்டும். ஒரு நிறுவனம் தினந்தோறும் எங்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் வேண்டும் என்று சொல்லியிருந்தால் பயன்படுத்தா சூழ்நிலையில் இருந்தாலும் 30 000 லிட்டருக்கு உண்டான பணத்தை எடுத்து வைத்து விடவேண்டும். இதிலும் எல் அண்ட் டி நிறுவனத்தின் தில்லாலங்கடி வேலை ஒன்று உண்டு. தொடக்கத்தில் ஒரு லிட்டர் மூன்று பைசா என்று போடப்பட்ட ஒப்பந்தம் இப்போது ஆறரை பைசாவாக உயர்த்தி உள்ளனர். எவரும் ஏன் என்று கேட்பதும் இல்லை?
மொத்தத்தில் ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் நிலைப்படுத்திக் கொள்ள இத்தனை தடைகளைத் தாண்டி வரவேண்டியுள்ளது. முதலில் இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற பஞ்சாயத்தை நாட்டாமையிடம் கொண்டு போய் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கி விடுவோம்.
அதென்ன ஜீரோ டிஸ்சார்ஜ்.?
ஒரு லிட்டர் சாய கழிவு நீர் வெளியாகின்றது என்றால் அதில் ஒரு துளி கூட விஷத்தன்மை இருக்கக்கூடாது. இதற்குப் பெயர் தான் ஜீரோ டிஸ்சார்ஜ். இது சாத்தியம் தானா? இந்த இடத்தில் சில குறிப்பிட்ட சாயப்பட்டறை முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சொருகிக் கொண்ட ஆப்பையும் நாம் பார்க்க வேண்டும். தனியாக தங்கள் நிறுவனத்திற்குள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கி வைத்திருந்தவர்கள் இது முறை சாத்தியமானதே என்று தப்பட்டம் தட்டி பசுமை நாயகன் விருது வரைக்கும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் எப்படி சாத்தியம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. இன்று அவரவர் செய்து பார்க்கும் போது அதன் வண்டவாளம் முழுக்க இன்று தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. கழிவுநீரில் மிச்சமாகும் வண்டலை என்ன செய்வது தான் இதன் முக்கிய பிரச்சனையே. சாயமேறிய நூறு லிட்டரை சுத்தம் செய்தால் மீதம் இருக்கும் சுத்தப்படுத்த முடியாத 30 லிட்டரில இருந்து தான் இந்த பஞ்சாயத்தே தொடங்குகின்றது.
சுத்திகாரிப்பு என்பது பல தடங்களை தாண்டி வருவது. முதலில் நிறத்தை நீக்க வேண்டும். அதற்குப் பின்னால் அந்த நீரில் உள்ள விஷத்தன்மையை நீக்க பாக்டீரியாவை வளர்க்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக சி.ஓ.டி, (பயோ கெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட்) பி.ஓ.டி (பயோ கெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட்) மூலம் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாக்டீரியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அவற்றை கவனித்துக் கொண்டு வரவேண்டும். . எம்.எல்.எஸ்.எஸ் (மிக்சர்டு லிக்யூடு சஸ்பெண்டேடு சாலிட்) என்ற பாயாலாஜி முறைப்பாடுகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கவேண்டும்.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிரிக்கப்பட்ட முதல் இரண்டாவது மூன்றாவது தொட்டி என்று ஒரு நிலையாக இந்த சாய கழிவு நீர் பயணித்துக் கொண்டே வந்தாலும் இத்தனை தொழில் நுட்ப விசயத்திலும் தப்பித்து வரும் கழிவு நீர் சில சமயம் உள்ளே இருக்கும் பாக்டீரியாகளிடமிருந்து தப்பித்து வந்து நமக்கே இந்த விஷ நீர் தண்ணீ காட்டி விடக்கூடியது. இத்தனை பஞ்சாயத்துகளை தாண்டி வர முக்கிய இந்த சுத்திகரிப்பு நிலையம் முறைப்படி தொடர்சிசியாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் மின்சாரம்?. சுத்திகரிப்பின் ஒவ்வொரு அடியிலும் இந்த மின்சாரம் தேவை. சுத்திகரிப்பு நிலையத்தில் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை படிந்த உப்புக்களை நீக்கவேண்டும். இந்த சுத்திகரிப்பு சுழற்சியில் மொத்தமாக ஏறக்குறைய 12 மோட்டார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு மோட்டார் இயங்காமல் இருந்தாலும் மொத்தமும் பெரிய அக்கப்போரை உருவாக்கிவிடும்.
மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டிருக்க எத்தனை நாளைக்கு ஜெனரேட்டர் போட்டு ஒவ்வொருவரும் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். முறைப்படி சமூக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சில முதலாளிகளுக்கிடையே பல பவாத்மாக்களும் இருக்கிறார்கள். ஒரு நாள் சேரும் பத்து லட்சம் லிட்டர் கழிவுநீரை 300 குதிரைத்திறன் கொண்ட மோட்டாரால் நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் ஆற்றில் வெளியேற்றி விடும் ஆகாய சூரர்களை எவரும் தட்டிக் கேட்க தயாராக இல்லை என்ற காரணமே இன்றைய இந்த தீர்ப்பு வரக் காரணமாக அமைந்தது.