Showing posts with label தொழிற்சாலை. Show all posts
Showing posts with label தொழிற்சாலை. Show all posts

Saturday, June 21, 2014

யோசித்ததும் சாதித்ததும்

எழுதிய தொடர் பதிவு பாதியில் நிற்கின்றது. அரசியல் ரீதியான பதிவுகள் எழுதும் போது அதன் ஆயுசு மிகவும் குறைவு. காரணம் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் கூட அப்படித்தான் தேசத்தையே திருப்பிப் போட்டுள்ளது. எவருமே யூகிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமான புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இன்னும் எழுத வேண்டிய சில பதிவுகளுக்காக எழுதி வைத்துள்ள குறிப்புகளைக் கோர்க்க முடியாத நேரத்தில், நான் பணிபுரியும் தொழிற்சாலையில் நடந்த சில நிகழ்வுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். 

"எல்லோரும் மாற்றம் வேண்டும்" என்று விரும்புகின்றார்கள். ஆனால் எங்கிருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும்? என்பதில் தான் பிரச்சனை உருவாகின்றது. படித்தவர், படிக்காதவர், பாமரன் தொடங்கி இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முகமூடி. எவரும் எதையும் கழட்டி வைக்க விரும்பவில்லை. ஆனால் தன்னுடைய கொள்கை, விருப்பங்கள் என்று முழங்கிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். 

கடைசியாக அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் ஊழல்வாதிகள், அயோக்கியர்கள் என்று பொத்தாம் பொதுவாக முடித்து விட்டு அடுத்தக் கேளிக்கை விசயத்தில் ஈடுபட்டு முதலில் நடந்ததை மறந்து விடுகின்றோம். 

நாம் விரும்பும் மாற்றம் என்னில் இருந்து தொடங்க வேண்டும். என் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். நான் பணிபுரியும் இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். 

அது சிறியதோ பெரியதோ, பாதிப்பை உருவாக்குமோ உருவாக்காதோ? எது குறித்தும் நான் கவலைப்பட்டதில்லை. அதற்கு ஆதரவு கிடைக்குமோ? என்று நான் அச்சப்பட்டதில்லை. மற்றவர்களின் பார்வையில் அது எப்படித் தெரியுமோ? என்பது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. முதல் அடியை எடுத்து வைக்காமல் எந்தப் பாதையின் பயணமும் தொடங்குவதில்லை. 

தேர்தல் பார்வையாளர்? 

வருடந்தோறும் நடத்தப்பட வேண்டிய ஒவ்வொரு அமைப்பிற்கும் உரிய தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று மனிதவளத் துறை மேலாளர் என்னிடம் வந்து கோரிக்கை வைத்த போது மனதிற்குள் அந்த விபரித ஆசை வந்தது. விட்டுக்கொடுத்தல் மூலம் தகுதியானவர்களை ஆதரிப்பார்களா? என்ற எண்ணம் உருவானது. 

கூடவே அச்சமும் உருவானது. காரணம் நான் தான் தேர்தல் பார்வையாளர். 

என்னவொரு ஆச்சரியம்? 

நடந்த ஏழு அமைப்பு ரீதியான தேர்தலிலும் ஓட்டுச்சீட்டு முறை ஒழிக்கப்பட்டுக் கை தூக்கி ஆதரவு முறை உருவாக்க முடிந்தது. கூடவே கூச்சல் குழப்பமின்றி, கையூட்டு இல்லாமல், 144 தடையுத்தரவு போட்டுப் பணம் கடத்த ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லாமல் அத்தனை பதவிகளுக்கும் போட்டியின்றி ஒவ்வொரு தொழிலாளர்களும் அவர்களாகவே விட்டுக் கொடுத்தல் மூலம் தலா மூன்று பதவிகள் ஒவ்வொரு அமைப்புக்கும் தேர்ந்தெடுத்தல் இன்று நடந்து முடிந்தது. 

#விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போனதில்லை. 

############### 

மனதிற்குள் வைத்திருந்த மற்றொரு விசயத்தையும் இன்று சாதிக்க முடிந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி மற்றும் இரத்தப் பரிசோதனை முகாம் நடத்தி தொழிலாளர்களுக்குப் புதிய பாதையை உருவாக்க முடிந்தது. பரிசோதனை செய்த எல்லோருமே நெகடிவ் தான் என்று பரிசோதித்தவர் ரகசியமாக (என்னிடம் மட்டும்) வந்து சொல்லிவிட்டுச் சென்ற போது உருவான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒவ்வொருவரும் தயக்கத்துடன் தடுமாறி தவித்த போது நானே முதல் ஆளாகச் சென்று ரத்த மாதிரி கொடுத்த பிறகே ஒவ்வொருவரும் வரிசையாக வரத் தொடங்கினர். 

#தவறான பாதை தொடக்கத்தில் இனிக்கும். பிறகு வாழ்க்கை நம்மைப் பார்த்து சிரிக்கும். 








Saturday, April 12, 2014

பெரிய மனிதர்கள் Vs எளிய மனிதர்கள்

பெரிதான ஆசைகள் இல்லை. தகுதிக்கு மீறிய லட்சியங்களோ ஏக்கங்களோ கூட இல்லை. இது தான் "தனக்குரிய வாழ்க்கை" என்று எளிதாக ஏற்றுக் கொண்ட மனம். தொழிலாளர் என்ற பெயரில் தினந்தோறும் அவர்கள் உழைக்கும் உழைப்பை பார்க்கும் போதெல்லாம் "இது போதும் எனக்கு" என்ற அவர்களின் எளிய நேர்மையான உள்ளம் தான் எனக்குத் தெரிந்தது. 

மனித மனம் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை எனக்கு முன்னால் இருந்தவர்கள் எவரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் தயாராக இல்லை. அவர்களின் புழுங்கிப் போன மனத்தை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கொண்டே வந்தேன். சில குறிப்பிட்ட நாளில் அவர்களின் தகுதிக்கு மீறிய வேலைப்பளூவை கொடுத்த குற்ற உணர்வு எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. 

இதை எப்படிச் சமன் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்த போது அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்து பார்த்தால் என்னவாகும்? என்று மனம் யோசித்தது. 

பெரிய பதவிகளில் இருக்கும் அத்தனை பேர்களும் எல்லாவிதமான அங்கீகாரமும் தனக்கே உரியதாகக் கருதிக் கொள்வதால் எளிய மனிதர்கள் "அங்கீகாரம் என்பதே தங்களுக்குரியது அல்ல" என்பதாகத் தங்கள் வாழ்க்கையை "உயிர் பிழைத்து இருப்பதற்கு என்பதற்காக மட்டுமே" என்பதாக வாழ்ந்து முடித்து விடுகின்றார்கள். 

இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது புதிய திட்டம். 

என் அதிகாரத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் அங்கீகார வார்த்தைகள், ஆறுதல் வார்த்தைகள், புழுக்கமான மனதில் நிரப்பப்பட வேண்டிய இதமான வார்த்தைகள் இதற்கு மேலாக உழைத்தவர்களுக்குச் சேர வேண்டிய ஊக்கத் தொகை என்று எல்லாவகையிலும் சிறப்பான ஒரு கூட்டத்தை நான் பணிபுரியும் பெரிய நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற் கூடத்தில் நடத்திய போது மனிதவளத்துறை அவசரமாக எடுத்த படங்கள் இது. 

இதே போல ஒவ்வொரு தொழிற்கூடத்திலும் மாதம் தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளர்களின் பாராட்டுகளையும் பெற்று எனது இருக்கையில் அமர்ந்த போது அடுத்தப் பிரிவில் இருந்த தொழிலாளர்களிடத்தில் இருந்து தொடர்ச்சியான அழைப்பு வந்தது. 

எங்கள் பகுதிக்கு எப்போது வருவீர்கள்? 

நேசிக்க, ரசிக்க, பரஸ்பரம் அங்கீகாரம் கொள்ளத்தானே இந்த வாழ்க்கை. தனி மனிதர்களின் மனதை அன்பால் நிரப்பிப் பாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல. உள்ளத்து எண்ணங்களில் கூட அழகு கூடும். 

#நினைத்தேன் செய்தேன் 

( APRIL 10 2014 GARMENT DIVISION. SECTION WISE BEST ACHIEVER PERFORMANCE MEETING)