Friday, October 13, 2023

யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.

 தங்கள் ஓட்டின் மதிப்பு தெரிந்தவர்கள்.

யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.

ஒரே குடையின் கீழ் திரளக்கூடியவர்கள்.

உத்தரவு வந்ததும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி எதுவும் கேட்காமல் சொன்னபடி சிந்தாமல் சிதறாமல் ஓட்டளிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்கள்.

கிறிஸ்துவச் சமூகம் மற்றும் இஸ்லாமியர்களும். 




இரண்டிலும் ஏழைகள் அதிகம். ஆனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. எந்தக் கட்சியும் நமக்கு எதுவும் செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைப் பற்றி அவர்கள் இன்னமும் யோசித்து மாறுவதாகவும் தெரியவில்லை. மோடி ஒழிக. பாஜக வரக்கூடாது.  முடிந்தது  கடமை.  இப்படித்தான் இருக்க வைக்கப் பழகியுள்ளனர். வெற்றியும் பெற்று உள்ளனர்.  

விதம் விதம் எங்கங்கோ இருந்த அடையாளம் தெரியாத பல பேர்கள் கடந்த சில நாட்களாகத் திருவாளர் பாடியாரை சந்தித்து எங்கள் ஆதரவு என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்கள்.  நாடகமா? பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டவர்களா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் மாற்றத்தை உருவாக்குகின்றோம் என்று  படம் காட்டுகின்றார்கள்.  எளிய மக்களுக்கு என்ன தெரியும்?  ஆட்டு மந்தை போல மாறி விடுவார்கள்.  இது தான் தமிழக அரசியலில் அடிப்படை பாலபாடம்.

2021 தேர்தலில் திருப்பூரில் அதிமுக சார்பாக நின்ற முன்னால் சமஉ குணசேகரன் அவர்கள் தோற்க வாய்ப்பே இல்லை.  காரணம் அவர் இங்கே இந்துக்கள் கோவிலுக்கு என்ன கேட்டார்களோ அதே இஸ்லாமியர்கள் தங்களுக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொண்டு கடைசியில் வந்த உத்தரவின் அடிப்படையில் ஓட்டை மாற்றி போட்டு சொற்ப வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.

கோவையில் வேலுமணி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு அள்ளி இறைப்பார்.  அவரை பாதிக்குப் பாதி ஏமாற்றவில்லை என்றே நினைக்கின்றேன். கமல் எச்சக்கையால் காகத்தைக்கூட விரட்டாத நல்ல மனிதருக்கு காருண்யா குரூப் ஒவ்வொரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீட்டுக்கு சென்று வழங்குகின்றது என்றால் இதற்குப் பின்னால் உள்ள துரோகத்தை உங்களாலும் என்னாலும் உணர முடியும்.  ஓட்டளிக்கும் எளிய மக்களுக்கு ஆயிரம் முக்கியமா?  வெத்து வேட்டு கொள்கைகள் முக்கியமா?

தமிழக ஓட்டரசியல் என்பது  கட்சி ரீதியாக மாறுபடும்.  தாலுகா ரீதியாக மண்டலம் வாரியாக உள்ளூர் பிரச்சனைகள் பொறுத்து மாறுபடும்.  உங்கள் பிம்பம் முக்கியம்.  

அறந்தாங்கியில் திருநாவுக்கரசுக்கு இஸ்லாமியர்கள் தொடக்கம் முதல் ஏகோபித்த ஆதரவு. இன்று அவர் மகன் ராமச்சந்திரனுக்கும் அதே ஆதரவு.  அவர் பாஜக வில் இருந்தவர் என்பது பொருட்டல்ல.. அவர் எங்கள் மாமா என்று தான் ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பமும் கொண்டாடுவார்கள். சப்ஜெக்ட் ஓவர்.

மதவாதம், இனவாதம், மொழிவாதம் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். தமிழக அரசியலுக்குத் தொடர்பு இல்லாதது.  மொத்தம் எட்டரைக் கோடி மக்கள்.  ஏறக்குறைய ஆறரைக் கோடி மக்கள் ஓட்டளிக்கத் தகுதி பெற்றவர்கள்.  நிச்சயம் ஒவ்வொரு முறையும் நான்கு கோடி மக்கள் ஓட்டளித்து விடுகின்றார்கள். இதில் 90  சதவிகித மக்களுக்குத் தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதனை அறியாதவர்கள். நிஜ அரசியல் புரியாதவர்கள். அரசியல் சார்ந்த கள்ளத் தொடர்பினைக் கிசுகிசு வாக பேசி கடந்து செல்பவர்கள்.  

கடந்த ௭ழுபது வருடமாக யாரெல்லாம் ஆட்சியிலிருந்து உள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளடங்கிய ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடம் பத்து ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றது.  தண்ணீருக்கு அரசு ஏற்பாடு செய்யவில்லையே என்று அவர்களும் ஓட்டுக்களைப் புதிய நல்லவர்களுக்கு மாற்றி போட மனம் இல்லாது இருக்கின்றார்கள்.  இது தான் தமிழக அரசியல்வாதிகளுக்கு பலம்.

சமூக வலைதள அரசியல் வேறு.  கள அரசியல் வேறு. நான் எழுதுவது உங்களை யோசிக்க வைக்கலாம். நீங்கள் ஓட்டளிக்கும் நேரத்தில் வாக்குச் சாவடிக்குச் செல்வீர்களா? என்று எனக்குத் தெரியாது. வெளிநாட்டிலிருந்து கொண்டு பொங்கலாம்.  என்ன பிரயோஜனம்? வாக்களிப்பவர்களுக்கு உங்கள் எண்ணம் சென்று சேர வாய்ப்பே இல்லை. அவர்கள் வேறு உலகத்தில் இருக்கின்றார்கள். அந்த உலகத்தை ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள் நன்றாகவே அறிந்து வைத்து உள்ளனர்.  

மானே தேனே பொன் மானே என்பது போலக் கொஞ்சம் சாதி. கொஞ்சம் பிராமணர், அப்புறம் சமூகநீதி சட்டியை இறக்கும் போது பாஜக வந்துடும் என்பதனை சேர்த்து இறக்கினால் சுடச்சுட விடியல் ஆட்சியை பரிமாறிவிட முடியும்.  நம்பி இன்று வரையிலும் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

நண்பர் சொன்னது இது.  

தமிழக மாவட்டங்களுக்குள் ரயில் வழியாகப் பயணம் செய்யும் போது மக்கள் கலாச்சாரம், நடவடிக்கை, அணுகுமுறை, பேச்சு வழியாக அந்த மக்களின்  வறுமையைப் புரிந்து கொள்ள முடியும். ரயில் கழிப்பறை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத பலரையும் நான் பாரத்துக் கொண்டு தான் இருக்கின்றேன் என்றார். வட மாவட்ட வாழ்க்கையில் இது முற்றிலும் உண்மை. 

ஏன் இத்தனை பேர்கள் கதறிக் கொண்டேயிருக்கின்றார்கள் என்றால்   இந்து மதம் சார்ந்தவர்கள் இங்கே யாருமில்லை.  அத்தனை பேர்களும் இங்கே சாதியச் சமூகம் சார்ந்தவர்கள் தான் என்பதனை இங்குள்ள அத்தனை அரசியல்வாதிகளும் நன்றாகவே உணர்ந்தே உள்ளனர்.  அதனால் தான் அவர்கள் பெரும்பான்மையின மக்களைச் சாதிய சமூகமாக அவரவருக்குத் தேவையான அளவுக்கு அங்கங்கே பிரித்து வைத்து ஜித்து வேலைகள் செய்து ஓட்டை வாங்கி கடைசியில் டாட்டா காட்டி விட்டுச் செல்கின்றனர்.  மதம் குறித்துப் பேசினால் டக் கென்று நீங்கள் அய்யரா என்று கேட்கக்கூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது.  அந்த அளவுக்கு இவர்கள் அத்தனை பேர்களும் ஒரே அணியில் உள்ளனர். 

அறந்தாங்கி, மதுரை, காரைக்குடி (கழனி வாசல் பகுதி) இந்தப் பகுதிகளில் கடந்த பத்துப் பதினைந்து மாதங்களில்  கெட்டுப் போன இறைச்சி, பிரியாணி, உணவு சாப்பிட்டுக் காப்பாற்ற முடியாமல் இறந்தவர்கள் ஏராளமான பேர்கள்.  நான் ஒவ்வொரு செய்திகளையும் கத்தரித்து வைத்துக் கொண்டே வந்தேன். அதிகமாக வந்து கொண்டேயிருக்க மன உளைச்சல் ஆகி அப்படியே விட்டு விட்டேன்.  சில தினங்களுக்கு முன் உணவுப் பாதுகாப்பு அதிகாரி நாங்கள் அந்தக் கடைக்கு, அந்தக் கடைகள் இருக்கும் பக்கம் செல்ல மாட்டோம் என்று சொன்னதை பாலிமர் சேனல் செய்தியாக்கி இருந்தனர். காவல் துறை முதல் அதிகாரவர்க்கத்தின் ஒவ்வொரு இடத்திலும் இவர்கள் பக்கம் எவரும் திரும்பக்கூட நினைப்பதே இல்லை.  எவனோ எக்கேடு போகட்டும். நமக்கென்ன என்ற மனநிலையில் தான் இருக்கின்றார்கள்.  காரணம் நடவடிக்கை எடுத்தால் அரசியல்வாதிகள் நம்மைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும்.  

உணவுக் கலப்பட விசயங்களில் ஒருவன் யோக்கியம் அடுத்தவன் அயோக்கியன் என்ற அர்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இதில் மத மாறுபாடுகள் சாதிய வேறுபாடுகள் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.  இன்றைய சூழலில் வெளியே வாங்கித் தின்று நீ உயிரோடு இருந்தால் உனக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்று அர்த்தம்.  உணவுப் பாதுகாப்புத் துறை முற்றிலும் முடங்கிப் போய் விட்டது.  ஒவ்வொரு குப்பை போடும் இடங்களில் தினமும் பத்து கிலோ நெகிழி பை குப்பை எடுப்பவர் புலம்பிக் கொண்டே எடுத்துச் சொல்கின்றார்.

அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றே நினைகின்றார்கள்.  மற்றொன்று ஆட்கள் பற்றாக்குறை.  எந்தத் துறையிலும் எவரையும் நியமிப்பதே இல்லை.  ஒவ்வொரு துறையும் முடங்க முடங்க அரசியல்வாதிகளுக்கு நல்லது.  பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.  ஓட்டளிக்கும் சமயத்தில் கொடுக்க வேண்டியதைப் பேச வேண்டியதை அளித்தால் போதும் தானே?

நிஜமாகவே நாம் தேர்ந்தெடுப்பவன் இப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் காசுக்கு அப்பாற்பட்டு யோசித்து ஓட்டளித்தே ஆக வேண்டும் என்று எண்ணம் என்று வருகின்றதோ அதுவரையிலும் நாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல அருகதை அற்றவர்கள்.  நம் விருப்பத்திற்கு ஃபேஸ்புக்கில் எழுதி நமக்குள் விருப்பக்குறி போட்டு அல்லது ஒளிந்து வந்து படித்து விட்டுக் கடந்து சென்று விட வேண்டியது தான். 

உணராத மக்கள் இருக்கும் வரை பிணவறையில் பணம் என்ற படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அடுத்த ஆ ராசா வாய் கிழிய பேசுவதை மக்கள் ரசித்துக் கொண்டு இருப்பார்கள்.  மொத்தத்தில் இவர்களுக்கு வாய்த்தது கோமாளி என்பதாக முடியும். 

கறை நல்லது.

No comments: