Wednesday, April 17, 2019

பா.ஜ.க மேல் ஏனிந்த வெறுப்பு?

பா.ஜ.க கட்சி தென் மாநிலங்களில் கடைசியாகக் கேரளாவில் கூட தங்களை நிலை நிறுத்திக் கொண்டாகி விட்டது. அதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள முடிகின்றது? இங்கே நாங்களும் களத்தில் இருக்கின்றோம்? என்று நிரூபிக்க முடிகின்றது. ஆனால் ஆட்சியதிகாரம், ஏவல், படைகள் இருந்தாலும் ஏன் தமிழகத்தில் அவர்களால் துரும்பைக்கூட நகர்த்த முடியவில்லை என்பதற்கு முக்கியக்காரணம் நேற்று நிதின் கட்காரி பேசிய பேச்சை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே இங்கே வந்து சென்ற நிர்மலா சீதாராமன் நடவடிக்கைகளையும் முன் உதாரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டுக்கே ராஜாவென்றாலும் ராஜசபைகளில் தான் மரியாதை கிடைக்கும்? மற்ற இடங்களில் சாதாரண மனிதனாகத் தான் இருக்க முடியும். எல்லா இடங்களிலும் ராஜா வேடம் போட்டால் அவர்களைக் கோமாளி என்று தான் அழைப்பார்கள். நிதின் கட்காரி கோமாளி போலத்தான் பேசி விட்டுச் சென்றுள்ளார்.

ராகுல் ஆங்கிலத்தில் பேசும் போது நான்கு வரிகள் பேசி விட்டு மொழிபெயர்ப்பாளருக்கு வழிவிட்டு நிற்பார். பீட்டர் அல்போன்ஸ் பேசி முடித்ததும் அடுத்த பேச்சைத் தொடர்ந்தார். ராகுல் சாத்தியப்படாத ஆசைகளை வைத்து விளையாட்டு காட்டுகின்றார். தற்போது அவர் அக்மார்க் அரசியல்வாதியாக மாறியுள்ளார் என்பதெல்லாம் தனியாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால் மக்களின் பாஷை, மக்கள் விரும்பும் மொழியைத் தான் தன் உரையாடலில் வைக்கின்றார் என்பதனை மறுக்க முடியாது.

ஆனால் நிதின் கட்காரி பேசிய பேச்சு நான் கெட்டிக்காரன் என்பது போலவே இருந்தது. நாங்கள் செய்து கொண்டிருப்பது நாட்டு நலன் என்பதாகவே போகிற போக்கில் அடித்து விட்டுச் சென்று கொண்டேயிருந்தார். அவர் பேசிய அனைத்தும் மக்கள் நலன் அல்ல. அதிகாரத் தோரணை. அதற்குப் பின்னால் உள்ளது அவரவர் சுயலாபங்கள். ஒரே ஒரு சாலை போடுவதில் இத்தனை அக்கறை காட்டும் நிதின் கட்காரி அவர் துறை சார்ந்த மற்ற அனைத்தும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதா? என்று கேட்க முடியும். ஆனால் பதில் வராது. அது தான் அவர்களின் அரசியல்.

இந்த நிமிடம் மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் முழுமையான திட்டவறிக்கையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. வந்தார்கள். கல் ஊன்றினார்கள். சென்றார்கள். அவ்வளவு தான். காரணம் கேட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற எதையும் செய்ய முடியுமா? என்று பதில் வரும். ஆனால் சாலை சார்ந்த திட்டங்களில் மட்டும் ஏன் இத்தனை கவனம் என்றால் அது தொடங்கும் போது கிடைக்கும் வருமானம் ஒரு பக்கம். இது தவிர மாதந்தோறும், வருடந்தோறும், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் வரையிலும் கிடைக்கும் வருமானம் என்பது யாவருக்கும் இங்கே தெரியும். நூறு கோடி ரூபாய் செலவளித்த சாலையின் மூலம் நூறாயிரம் கோடி சம்பாரிக்க முடியுமா? இங்கு முடியும்? அது தான் இப்போது நடந்து கொண்டிருப்பது.

நிதின் கெட்டிக்காரத்தனம் எல்லாம் அதிமுக அமைச்சர்களிடம் மட்டும் தான் செல்லும். பொது மேடைகளில் செல்லாது. காரணம் பேச்சைக் கேட்க வந்தவர்கள் எவரும் கோடிகளில் புழங்குபவர்கள் அல்ல. தெருக்கோடிகளில் வாழ்பவர்கள். அவர்களின் மொழி தெரிய வேண்டும். அவர்களை முதலில் புரிந்து கொள்ள முயல வேண்டும். அவையெல்லாம் அவருக்குத் தெரியுமா? என்றே தெரியவில்லை. காரணம் அப்படித்தான் அவரின் பேச்சு இருந்தது.

*******

எல்லாவிதமான குறுக்கு வழிகளுக்கும் தாய், தந்தை, பாட்டன், பூட்டன் போன்றவர்கள் தமிழகத்தில் உள்ளவர்கள். இங்குள்ளவர்கள் அரசியலை இப்படித்தான் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்கள். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தங்களைக் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள அளவுக்கு அதிகமான உழைப்பைக் கொடுத்தார்கள். இதற்கு மேலாக தங்களின் களப்பணியை நிரூபித்து தங்களுக்கான இடத்தை அடைந்தார்கள்.

பிறகு தங்களைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே அவரவருக்குத் தோன்றிய சந்தர்ப்ப சூழல் பொறுத்து குறுக்குவழியை ஊறுகாய் போலப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலப் போக்கில் ஊறுகாய் சாப்பாடு போலவே மாறிவிட்டது. சாப்பாடு என்ற பொதுநலம் இலையில் இல்லாமலே போய்விட்டது. 

பின்னால் வந்த அனைவருமே தொடக்கம் முதலே தமிழக அரசியலின் குறுக்கு வழியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையே கண்டுபிடித்த பிதாமகன்கள், பிதாமகள்கள். இது தவிர நோகாமல் நோம்பி கொண்டாடும் வாரிசு அரசியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வந்தது. திறமை, உழைப்பு முக்கியமல்ல. மகனாக, மகளாக, பேரனாக, மச்சானாக, மாமனாக இருந்தால் என்கிற அளவிற்கு வந்து நின்றுள்ளது.

இப்போது அது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த சமயத்தில் தான் இங்கே பா.ஜ.க தனக்கான இடத்தை இப்போது தேடிக் கொண்டு இருக்கின்றார்கள். அதிகாரத்தின் சுவையை அறிந்தவர்கள் எந்த காலத்தில் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மேலும் விஸ்தரிக்கவே விரும்புவார்கள். பா.ஜ.க அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடு மட்டுமே. காரணம் பா.ஜ.க வட மாநில அரசியலில் தாங்கள் நினைப்பதையெல்லாம் கொள்கையாக மாற்றி வெற்றி கண்டார்கள். இங்கே அவ்வாறு முடியவில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளது.

திராவிட கட்சிகள் சொல்வது போலப் பகுத்தறிவு, தந்தை பெரியார் போன்ற காரணங்கள் எல்லாமே இரண்டாம் பட்சம் தான். முதல் காரணம் பா.ஜ.க கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களின் நம்பகத் தன்மையை பெறவே இல்லை. அதற்கான முயற்சிகளில் கூட இறங்கவே இல்லை. காங்கிரஸ் உருவாக்கிய ஒவ்வொரு திட்டத்திலும் லேபிள் ஓட்டி தன்னை முன்னிறுத்தி சீர்திருத்தம் என்ற பெயரில் ஓரளவுக்கு வெற்றி கண்டார்கள். ஆனால் தமிழக வாழ்வாதார பிரச்சனைகளை அலட்சியம் செய்தார்கள். ஆறுதல் கூடச் சொல்லத் தயாராக இல்லை என்பது தான் மாநிலக் கட்சிகளைத் தாண்டி இன்னமும் வராமல் குழப்பத்தில் இருக்கின்றார்கள். பலர் வெறுப்புடன் பார்க்கின்றார்கள்.

படிப்பறிவு இல்லாத பாமரர்கள் அனைவரிடத்திலும் பணமதிப்பு விவகாரம் மிகப் பெரிய கோபத்தை உருவாக்கியுள்ளது. ஆறாத ரணம் போல இன்னமும் உள்ளது. காரணம் மாநிலக் கட்சிகள் அதைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். உருவான காயம் ஆறிப்போனாலும் வடு என்பது மாறாமல் இருக்கின்றது. நான் சந்திக்கும் சிறு தொழில் மூலம் வருமானம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஜிஎஸ்டி என்பது கொலைவெறியை உருவாக்கியுள்ளது. வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தைகளில் பொளந்து கட்டுகின்றார்கள்.

என்ன காரணம்? திட்டம் சரிதான். ஆனால் ஒரு திட்டம் உருவாக்கப்படும் போது இந்தியா போன்ற நாடுகளில் ஊழலில் மட்டுமே திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அதிகார வர்க்கம் எந்த அளவுக்குச் செயல்படும் என்பதனை உணராமல் இருந்தது முதல் கோணல்.

அதே போல ஜிஎஸ்டி யில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சமயமும் மாறுதல்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார்கள். வர்த்தகர்களுக்கு அது புரிபடவே இல்லை. புரிந்தவர்களும் அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. கிடைத்தவரைக்கும் லாபம் என்று சுருட்டினார்கள். வடமாநில தேர்தலில் காங்கிரஸ் ஏறுமுகமாக மாறியதும் மீண்டும் பா.ஜ.க பலமடங்கு கீழிறங்கி இன்னும் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்தார்கள். ஆனாலும் அதனால் உருவான நல்ல விசயங்கள் எதுவும் சாதாரண மக்களுக்கு, வர்த்தகர்களுக்குச் சென்று சேரவில்லை என்பது தான் இதில் முக்கிய அம்சம். இன்று வரையிலும் ரிட்டன் பைல் என்பதும் அதன் மூலம் கிடைக்க வேண்டிய பணம் என்பதும் ஏற்றுமதியாளர்களுக்கு கானல் நீராகவே உள்ளது.

அருண் ஜெட்லி இப்போது கூட நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்றார். இந்த சமயத்தில் கூட அமெரிக்கா சென்றுள்ளார். இவரை நம்பித்தான் ப. சிதம்பரம் இருக்கின்றார். இவர் தான் நம் நிதியமைச்சர். மக்களால் தோற்கடிக்கப்பட்டவருக்கு இந்தியாவின் இதயத்தை (நிதியமைச்சகத்தை) பரிசாக மோடி கொடுத்துள்ளார் என்பதற்குப் பின்னால் அரசியல் நமக்கு வேண்டாம். ஆனால் அவரோ இந்தியாவின் இதயத்தையே பிளந்து பார்க்கும் வேலையைச் செய்து விட்டு இப்போது தன் உடம்பைக் கவனிக்க உயிர்பயத்தில் அலைந்து கொண்டிருக்கின்றார். இங்கே ஒவ்வொருவரும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோவொரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவருக்கும் பதவி கொடுக்கும் போது அவர் கட்டாயம் நம்மை சுடுகாட்டுக்குத் தான் கொண்டு போய் சேர்ப்பார் என்பது தான் அருண் ஜெட்லி பாஜக விற்கு கொடுத்துள்ள பாடம்.

•••••••••
இப்போது நடக்கப்போகும் தமிழக தேர்தலில் ஒரு பக்கம் இதுவரையிலும் சேர்த்து வைத்துள்ளதை வெளியே விடலாமா? என்ற தயக்கம். மற்றொரு பக்கம் வெளியே விட்டால் தான் பிழைக்க முடியும் என்ற பதட்டம்.

ஆனால் பா.ஜ.க கட்சியோ வட மாநில அரசியல் போல வாயால் வடை சுட முடியுமா? என்று பார்க்கின்றது.

இதற்கிடையே பா.ஜ.க கடந்த வருடங்களில் ரெய்டு என்ற பெயரில் இங்குள்ளவர்கள் சேர்த்து வைத்துள்ளவற்றை நோகாமல் சுருட்டி எடுத்துக் கொண்டு சென்ற கிரிமினல் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எத்தனை லட்சம் கோடி. யாருக்குத் தெரியும்? அதை எண்ணிப் பார்த்தவர்களுக்குக்கூட மயக்கம் வந்திருக்கும்.

•••••••

தமிழகத்தில் சீர்திருத்தம் முன்னேற்றம். மாற்றம் போன்ற சொல் எடுபடாது. உடனடியாக கையில் வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் தாரக மந்திரம். காரணம் இங்குள்ள மக்கள் கற்றுள்ள கல்வியறிவு என்பது அரசியல்வாதிகளுக்கே சவால் விடும் அறிவு. அதனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்தரை லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் வந்து வேலை செய்கின்றார்கள். மற்ற 32 மாவட்டங்களிலும் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு இங்குள்ளவர்கள் என்ன காரணம் சொல்கின்றார்கள் என்றார் நம் வளர்ந்த சமூகமாக மாறிவிட்டோம் என்று அர்த்தம் என்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் அதீத புத்திசாலித்தனம்.

••••••••

இங்கு எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் பேச வேண்டும். எழவு வீடு, கல்யாண வீடு எதுவாக இருந்தாலும் பிரச்சனையில்லை. நாகரிகம் பார்க்கத் தேவையில்லை. எல்லா இடத்திலும் அரசியலைத் தொட வேண்டும். அதுவும் அந்த சூழலுக்கு ஏற்ப அங்கிருப்பவர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் கலவையாக, கவர்ச்சியாக, எல்லாவற்றையும் கலந்து பேசியாக வேண்டும். பேசுபவர்களைத் தான் தமிழர்களுக்குப் பிடிக்கும்.

பேசிப் பேசித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள். பேசினால் மட்டுமே நம்புவார்கள் என்பதனையே இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அது தான் உண்மையாகவும் இருந்து தொலைக்கின்றது.

நான் பேசமாட்டேன். செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்பதெல்லாம் இங்கே எடுபடாது. இங்கே கவர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம். இன்னமும் நடிகர், நடிகைகளுக்குக் கூடும் கூட்டத்தை வைத்தே நம்மால் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

இவர்களின் மனோநிலையை ஊடகமும் அப்படித்தான் உருவாக்கியுள்ளது. அதையே பின்பற்றி அரசியல்வாதிகளும் உருவாக்கி உள்ளனர். அப்படியே முன்னேற்றம் என்று பா.ஜ.க அரசு உருவாக்கிய முக்கால்வாசி திட்டங்களுக்குப் பின்னால் உள்ள திருட்டுத்தனமான செயல்பாடுகளையும் நம்மவர்கள் (ஏற்கனவே இதில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள்) அப்படியே வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றி வெறியேற்றி விடும் போது சாதாரண மனிதனின் பார்வையில், சிந்தனையில் என்ன தோன்றும்? அது தான் இப்போது இங்கே உருவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உருவான, உருவாக்கப்பட்ட எந்த திட்டத்தையும் காங்கிரஸ் வந்தாலும் கூட நிறுத்த முடியாது. இது தான் உண்மை. ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் இருப்பது பல்லாயிரம் கோடிகள். அந்தந்த நிறுவனத்திற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கு நிதியாதாரத்தில், அந்நியச் செலவாணியில் ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய திட்டங்கள்.

இதை அந்தந்தப் பகுதியில் இப்பொழுதே பல நூறு ஏக்கர்கள் அட்வான்ஸ் ஆக வாங்கிப் போட்டுள்ள அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் பினாமிகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் என்னவிதமான குற்றச்சாட்டுகள் யார் மேல் வைக்கப்படுகின்றது என்பதில் தான் அரசியல் உள்ளது. பெரிய ஆயுதமாக இவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நீட் பரிட்சையை மக்கள் கண்டு கொள்ளவே இல்லை. இந்த வருடம் ஒன்னரை லட்சம் பேர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மதநல்லிணக்கத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டவர்கள் ஏன் சாதிய நல்லிணக்கத்தை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றினால் இப்போது திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை கவனித்துப் பாருங்கள். அப்போது புரியும் நம்மவர்கள் சாதியம் என்பதை நாள்தோறும் சாப்பாடு போலவே பாவித்து வாழ்பவர்கள் என்று.

சுப.வீரபாண்டியன் ஒரு நிமிடச் செய்தியில் இவ்வாறு சொல்கின்றார். நாம் தேர்தலுக்காகப் பாதையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் தேர்தல் முடிந்தபின்பு நமக்கான பாதையை மறந்துவிடலாகாது என்கிறார். கனிமொழிக்குத் தேர்தல் முடியும் வரைக்கும் பெரியார் தேவையில்லை. காரணம் என்ன? அதிகாரத்தை அடைய வேண்டும். அதிகாரம் ஒன்று தான் அனைத்துக்கும் மாமருந்து.

••••••••••

இவர்கள் மொத்தமாகவே வென்று விட்டார்கள். தங்கள் இலக்கை அடைந்து விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். தேசிய அரசியலில் என்ன மாற்றம் உருவாகும்? ராகுல் பிரதமராக ஆகி விடுவாரா? அவரின் கூட்டணிக் கட்சிகள் அவரை மதிக்கத் தயாராக இல்லை என்பது தான கசப்பான உண்மை. மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வென்று வரும் பட்சத்தில் தம்பி இன்னும் டீ வரலை. பின்னால போய் நில்லுப்பா? என்று தான் ராகுலை பின் வரிசைக்குத் தள்ளுவார்கள். அவரால் வேடிக்கை பார்க்கத்தான் முடியுமே தவிர கனவுலக ராஜாவாக கூட்டணி ஆட்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீடித்தால் வாழ முடியும்.

•••••

பா.ஜ.க அரசு கடந்த ஐந்தாண்டுகளில் மகத்தான சாதனை புரிந்துள்ள ரயில்வே துறை, மின்சாரத்துறை, பாஸ்போர்ட் துறை, விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பது, மறுகட்டுமானம் செய்து வெற்றியடைந்த அஞ்சலகத்துறை, எளிய தவணைகளில் மற்றும் ஒரு முறை மட்டுமே கட்டினால் போதும் என்கிற ஆயுள் காப்பீடு, எளிமைப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு உருளை போன்ற எதுவும் இந்த மக்களிடம் சென்று சேரவே இல்லை.

அப்படியே பலன் பெற்றவர்களும் இது குறித்துப் பேசத் தயாராக இல்லை. காரணம் உருவான ஒவ்வொரு மாற்றத்தையும் வளர்ச்சியின் அறிகுறியாகப் பார்க்கும் மனோபவம் இங்கே இவர்களுக்கு உருவாகவில்லை. எரிச்சலாகத்தான் பார்க்கின்றார்கள்.

"வெளிநாட்டில் கருப்புப் பணமாக உள்ள பணத்தைக் கொண்டு வந்தால் இங்கே ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் போடும் அளவிற்கு உள்ளது என்றும், அப்படியென்றால் எந்த அளவுக்கு வெளிநாட்டில் எவ்வளவு பணம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனையும் யோசித்துப் பாருங்கள்" என்று தான் மோடி பேசினார். 

ஆனால் நம் கில்லாடிகள் அதில் கதை திரைக்கதை வசனத்தை எப்படியெல்லாம் மாற்றி இன்று வரையிலும் ஒப்பேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை வைத்தே இங்கே வரும் வட மாநில பா.ஜ.க அரசியல்வாதிகள் பேச கற்றுக் கொள்ள வேண்டாமா?

சரி நீங்கள் சொன்னதை நாங்கள் மாற்றிச் சொல்லிவிட்டோம்? என்ன ஆச்சு? நீ சொன்ன வெளிநாட்டுக் கருப்புப் பணம்? கடந்த ஐந்து வருடத்தில் அதற்காக என்ன தான் உன் பங்குக்குச் செய்தாய்? என்று கேட்கும் போது தான் பா.ஜ.க வின் உண்மையான முகமும் நமக்கு வெளியே தெரிகின்றது.

காரணம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பொய் என்பதும் போலி வாக்குறுதி என்பதும் மிகப் பெரிய அஸ்திவாரம். சிலரால் எளிதாகக் கட்டிடம் கட்டி எழுப்பி விட முடியும். சிலரால் தோண்டிய பள்ளத்திற்கு விழத் தான் முடியும்? வரும் தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க விற்கு எது கிடைத்தது என்பதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

******
நிதின் கட்காரி பைத்திகாரத்தனமாக உளறிவிட்டுச் சென்ற சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை குறித்துப் பேசிய பேச்சுக்கள் இன்று மீம்ஸ்களில் முன்னிலை வகிக்கின்றது.

ஒருவர் வந்து கிடைக்கும் ஆயிரம் ஓட்டுக்களைக் காவு வாங்க முடியும் என்ற சாதனையெல்லாம் பா.ஜ.க வில் இருப்பவர்களுக்கே பொருந்தும். களத்தில் நிற்கும் ஏன் இப்போது ஹெச். ராஜா ஏதாவது சர்ச்சை பேச்சு பேசுகின்றாரா? இல்லையே? காரணம் முட்டையிடும் போது தான் கோழிக்குத்தான் அதன் எரிச்சல் புரியும். சிவகங்கை மாவட்டத்திற்குரிய சிறப்பான வெயில் இனி அவரை மாற்றிவிடும் என்று நம்புகிறேன். மீண்டும் நிர்மலா சீதாராமன் இங்கே வராமல் இருக்க வேண்டும். 

••••••••

எந்த காலத்திலும் எந்த தேசிய கட்சிக்கும் தென் மாநில அரசியல் புரியவே புரியாது. குறிப்பாகத் தமிழக அரசியல் களம் சூடு போட்டு கற்றுக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். 
காரணம் அவர்கள் புரிந்து கொள்ளவே விரும்பவில்லை என்பது தான் உண்மை. ஆதிக்கம் செலுத்தியே பழகியவர்கள் எங்கேனும் அனுசரணையாகப் பேசி பழகிப் பார்த்திருக்கின்றீர்களா?

டெல்லி அரசியல் என்பது உழைப்பின்றி, மக்களைச் சந்திக்கத் தேவையில்லாமலே உன்னதமான இடத்தை அடைவது. மாநில அரசியல் என்பது முடிந்தவரைக்கும் அந்தந்த கட்சித் தலைவர்கள் தங்கள் குடும்பத்தை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, சேர்த்த சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளவே கடைசி வரைக்கும் போராடிக் கொண்டிருப்பது.

இது தான் உண்மையான இந்திய மக்களாட்சியின் தேசிய, மாநில அரசியல் ஆகும்.

26 comments:

G.M Balasubramaniam said...

முக்கியமாக கட்சி அரசியலில் ஹிந்துத்வா தமிழகத்தில் எடுபடாது கேரளத்தில் சபரிமலைப் பிரச்சனையை சாதகமாக்க பாஜ க முயற்சிப்பது தெரிகிறதுஒரு இடுக்கு கிடைத்ததும் அங்கு புகுந்து மக்களை ஏமாற்ற வழி தேடுகிறார்கள்படிவு நல்ல அலசல் இருந்தாலும் புரிந்து கொள்வது சிர்மம்

bandhu said...

நமக்கு வாய்த்த அரசியல் தலைவர்கள் லட்சணம் அவ்வளவுதான். தேசிய அளவில் ஆட்சி புரிபவர்கள் / புரிந்தவர்கள், ஒரு மாநில மக்களை புரிந்து கொள்ளவில்லை என்பது பெரிய சோகம். மாநிலக் கட்சிகளை பார்த்தால், எல்லோரும் தேர்தலுக்கு பின் யாருடனும் சேர தயாராக இருக்கும் 'உத்தமர்கள்'!

'மதவாதம்' என்ற பயித்தியம் பிடிக்காதவர்களும், 'சிறுபான்மையினர் என்ன செய்தாலும் சரி. ஓட்டு போட்டுவிட்டால் போதும்' என்ற மனப்பான்மை இல்லாதவர்களும் நமக்கு கிடைப்பார்களா?

என்ன செய்வது...

யதா பிரஜா.. ததா ராஜா!

கிரி said...

எனக்கும் இந்த கேள்வியுள்ளது. எப்படி இது போல முட்டாள்த்தனமாக பேசுகிறார்கள்!

இப்படி பேசினால் கொஞ்ச நஞ்ச ஓட்டும் போகும் என்ற அடிப்படை அறிவுரை கூட இல்லையா.. அல்லது நாங்கள் கூறுவதை மறு பேச்சு பேசாமல் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?

மோடி நீங்கள் கூறுவது போல 15 லட்சம் கணக்கில் போடுவேன் என்று கூறவில்லை, வந்தால் போடும் அளவுக்கு இருக்கும் என்றார் அதை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மாற்றி விட்டார்கள்.

வியப்பு என்னவென்றால், இதை ஏன் இவர்கள் துவக்கத்தில் இருந்து மறுக்காமல் இருந்தார்கள் என்பது.

மோடி சொன்னபடி கொண்டுவரவில்லை என்பதால், இரண்டுக்கும் சரியா போச்சு :-) .

இவர்கள் பல நல்ல திட்டங்களை நீங்கள் குறிப்பிட்டது போல செய்து இருக்கிறார்கள் ஆனால், அவை மக்களை சென்றடையவில்லை.

செய்திகளில் விளம்பரம் கொடுத்தால் சென்று விடும் என்று நினைத்து விட்டார்களோ!

நீங்கள் கூறியதில், தமிழக பிரச்னை என்ன? அதில் எப்படி கவனம் செலுத்தி வாக்கு பெறுவது என்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது 100% சரி.

பிரச்சனை என்ன என்பதையே இவர்கள் புரிந்து கொள்ளாமல், அதை சரி செய்ய முயற்சிக்காமல் இருந்தால், இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே நிலை தான் தொடரும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இது போன்ற அலசல் உங்களால் மட்டுமே முடியும்... GST பற்றிய புரிதல் என்னிடம் பேசியதில் ஒரு பெரிய வியப்பும் இருந்தது...

முகநூலில் இதன் கருத்துரைகளையும் வாசித்தேன்... சிறப்பு...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமையான அலசல்.

vic said...

கட்சிகள் எல்லாமே நெத்தலி போட்டு திமிங்கிலம் எதிர்பாக்கிறதுதான் அவர்களை விட்டு சுயேட்சைகளை தெரிவுசெய்து அவர்களுக்கான நிதிஉதவியும் செய்து ஆதரியுங்கள். தற்போதய சூழ்நிலையில் நெட்டிசன்களால் மட்டுமே (கட்சிகள் இங்கும் ஊடுருவியிருக்கிறது இருந்தாலும்) மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். சுயேட்சை தலைமைக்கு ரஜனியை கேட்கலாம்.
3 மாதம் குளிர்காலம் வீதி நடுநிசி 1மணிக்கும் தேவையெனில் உப்பு தூவி வாகனம் ஓட தயாராக இருக்கும். பால் உற்பத்தி செலவு இறக்குமதி பாலை விட இரண்டு மடங்கு அதனால் இங்கு உற்பத்தியாகும் பாலுக்கு லீட்டருக்கு 75 சென்ட் அரசு கொடுத்துவிடுகிறது. சில வருடங்களுக்கு முன் சில வீதியோர மரஙகளை கீழ்வீதி அமைக்க வெட்டினார்கள். அப்போது மேயர் சொன்னார் 16 வெட்டுகிறோம் 23 நடுவோம் என இப்போது அந்த 23ம் கிட்டத்தட்ட 10 மீட்டர் உயரத்தில்
தண்ணி கேஸ் கரண்ட் கழிவுநீர் குப்பை எல்லாம் பிரச்சனை காவிரிபிரச்சனை! இங்கு வரும் ஆறு சுவிஸில் இருந்துவருகிறது.
இவ்வகையான மாற்றத்தை உங்களால் கொண்டுவர முடியாதா நிச்சயமாக முடியும்.தமிழ்நாடு மாற்றம் வேண்டிநிற்கிறது.அதனால்தான் சீமான் தேர்தல் முடிவில் ஆச்சரயத்தை ஏற்படுத்துகிறார். வரும் தேர்தலில் கட்சிகளில்லாத ஆளுமைக்கு முயற்சி செய்யுங்கள்.
நான் தமிழை நேசிக்கும் நெதர்லாந்துவாசி

ஜோதிஜி said...


தனபாலன் நீங்க கேட்ட கேள்விக்குத் தனியாகப் பதிவு எழுதி வெளியிட வேண்டும். இருந்தாலும் இங்கே சுருக்கமாகச் சிலவற்றைத் தருகின்றேன்.

சில வருடங்கள், மாதங்களுக்கு முன்பு ப.சிதம்பரம் மோடி ஆட்சியில் பணவீக்கம் முதல் பொருளாதாரம் வரைக்கும் பாதாளம் வரைக்கும் சென்று விட்டது என்றார். இப்போது காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள பல திட்டங்களுக்குப் பணம் எங்கேயிருந்து வரும்? என்று கேட்ட போது இப்போதைய சூழலில் அரசாங்கத்திற்குப் பல வகையில் வருமானம் உள்ளது என்று அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுகின்றார். இதன் அடிப்படையில் தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையே உருவாக்கப்பட்டது என்பது தான் கூடுதல் சிறப்பு. இதற்குக் காரணம் மோடி. இப்போது ஜிஎஸ்டி மூலம் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கும் வருமானம் மாதம் ஒரு லட்சம் கோடி. இதுவரையிலும் எந்த அரசாங்கத்திலும் நடக்காத சாதனையின் உச்சமிது.

காங்கிரஸ் அரசு மக்கள் மேல் சுமை ஏற்றக்கூடாது என்பதாக நினைத்துக் கொண்டு உலகம் முழுக்க கடன் வாங்கி வைத்து விட்டுச் சென்றது. பெட்ரோல் வகையில் இரண்டரை லட்சம் கோடி வளைகுடா நாட்டிற்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. ஏன் பீப்பாய் 40 டாலர் விற்ற போதும் 120 டாலர் விற்றபோது பாஜக அரசு பெட்ரோல் விலையைக் குறைக்காமல் அப்படியே வைத்திருந்ததற்குக் காரணம் அவர்கள் உருவாக்கிச் சென்ற அனைத்துக் கடன்களையும் இந்த ஆட்சிக்கு வந்தவர்கள் அடைத்து முடித்துள்ளார்கள். அத்துடன் சாதனையாக நம் பணத்தில் பல நாட்டுட்டுன் கச்சா எண்ணெய் வாங்க முடியும் (அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி) என்று நிரூபித்து இப்போது வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நமக்கு டாலர் தேவை மிகவும் குறைவு.

அந்நியச் செலாவணி கையிருப்பு அப்படியே இருக்கும். இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் ஜிஎஸ்டி யில் கை வைக்க மாட்டார்கள். மாற்றுகிறேன் என்று பம்மாத்து காட்டுவார்கள். காரணம் ப.சி போன்றவர்கள் ஒன் வே ட்ராபிக் போன்றவர்கள். வருவது தான்முக்கியம். கொடுப்பது கூடவே கூடாது என்ற கொள்கையில் வாழ்பவர்கள். பாஜக அரசு பெட்ரோல் விலையில் ஜிஎஸ்டி கொண்டு வந்து விடுகின்றோம். அது மக்களுக்குச் சந்தைவிலையைக் காட்டும் என்றார்கள். ஆனால் தமிழ்நாடு மட்டுமல்ல எந்த மாநிலமும் அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை.

மக்கள் செத்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு மாநில வருவாய் முக்கியம் என்று சொல்லி உள்ளனர். பா.ஜ.க விற்கும் காங்கிரஸ் க்கும் என்ன வித்தியாசம்?
இப்போது பங்களாதேஷ் ல் அலையலையாக மக்கள் அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் உள்ளே இறங்கி வாழத் தொடங்கி விட்டார்கள். மம்தா பானர்ஜி அவர்களுக்கு ஒட்டுரிமை வரை வழங்கி தனக்குப் பாதுகாப்பாக இருக்க மாற்றியதோடு பங்களாதேஷ் நடிகரைக் கொண்டு வந்து பிரச்சாரம் செய்யும் அளவிற்குப் போயுள்ளார்கள். அசாமில் எப்போது பெரிய கலவரம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் காங்கிரஸ் ஓட்டுக்காகச் செய்த அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் பாஜக ஆப்பு அடித்துள்ளது. திண்டுக்கல்லில் சூடானில் இருந்து மூன்று லட்சம் பேர்கள் வந்து இறங்கி அங்கேயே வாழத் தொடங்கினால் உங்கள் ஊர் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்? மதநல்லிணக்கம் என்ற பெயரில் அவர்கள் செய்த ஒவ்வொரு அயோக்கியத்தனத்திற்குப் பின்னாலும் குறிப்பிட்ட சிலர் ஏய்த்துப் பிழைக்கும் பிழைப்பு வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது தான் காலம் காலமாக காங் செய்து வரும் தேச சேவை. ராகுல் போன்றவர்கள் இந்த நாட்டுக்குத் தேவை தான். கட்டாயம் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இன்னும் ஐந்து வருடங்கள் இந்த நாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு உண்மையாக அவர் அப்பா பாட்டி போல மாறி தனிப் பெரும்பான்மையுடன் வந்தால் போதும் என்றே நினைக்கின்றேன். அதற்குள் காங்கிரஸ் ல் உள்ள பழம் பெருச்சாளிகள் செத்து விடுவார்கள். ராகுலுக்குப் பிரச்சனையிருக்காது. அப்போது எது உண்மை? எது பொய்? எது தேவை? என்பது நன்றாகவே புரியும். காரணம் மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்து அமர்ந்த போது ராகுலுக்கு அனைத்து வாய்ப்புகளும் தேடி வந்தது.

அவர் அப்போது மன்மதனாகச் சுற்றிக் கொண்டிருந்தார். இப்போது காலம் கடந்து விட்டது. மோடி போன்ற ஆட்களை அவர் சமாளிக்க வேண்டுமென்றால் மூன்று இந்திரா காந்தியாக மாறியாக வேண்டும். அதற்கு அடுத்த ஐந்து வருடங்கள் அவர் உழைக்க வேண்டும். முதலில் திருமணம் செய்ய வேண்டும். அப்போது தான் அடிப்படை பொறுப்பு வந்து சேரும். பார்க்கலாம்.

ஜோதிஜி said...

நன்றி. இன்று நான் முகநூலில் எழுதியது உங்கள் பார்வைக்கு...........எங்கள் கட்சிக்குக் கொள்கையுண்டு. நாங்கள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவோம் என்று சொன்ன, சொல்லிக் கொண்டு இருக்கும் கட்சிகளும் சரி, மக்களிடம் கடந்த ஐம்பது வருடங்களாக அறிமுகமாகி எங்களுக்கு நிரந்தரமாக இத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கின்றது என்று மார் தட்டி களத்தில் நிற்கும் கட்சிகளும் பணத்தை வெவ்வேறு வழிகளில் வாரி இறைத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

ஊடக பலம் ஒரு பக்கம். சாதியை வைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சி மறுபக்கம். ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் கட்சிகளின் பிரச்சாரங்களும், பேச்சுகளும், அவர்களை முன்னிலைப்படுத்தும் செயல்பாடுகளும் ஊடகத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை கவனித்துப் பாருங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஏன் நிரந்தர ஓட்டு வங்கியுள்ளவர்களால் இத்தனை சிரமப்பட வேண்டியதாக உள்ளது?

மொத்தத்தில் ஒவ்வொரு பெரிய கட்சிகளும் இந்த தேர்தலில் பெறக்கூடிய ஓட்டுக்களும் அவர்கள் செலவளித்த பணத்திற்குக் கிடைத்த வெகுமதி. அப்படியென்றால் கட்சிக்காரர்கள்? அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

நான் இருக்கும் பகுதியில் ( மொத்த பத்து பகுதிகளிலும்) ஒரு வேட்பாளர் கூட வந்து ஓட்டுக் கேட்க வரவில்லை.

முக்கியமான இடங்களில் தான் அனைவரும் ஓட்டுக் கேட்கச் சென்றதாக பத்திரிக்கையில் வந்தது. அவர்களுக்கு நேரமில்லை என்பதனை விட அவர்களின் உடம்புக்கு இந்த வெயில் கொடுத்த பரிசாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த தேர்தல் இதுவரையிலும் நடந்த தேர்தல்களில் மொத்தமாகவே வித்தியாசமாக உள்ளது. வாக்காளர்களைச் சந்திக்காமல் ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்ற புதிய பாதையை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளதாக எடுத்துக் கொள்ள முடியும்.

சீமான் தமிழகம் முழுக்க எத்தனை சதவிகிதம் ஓட்டு பெறப் போகின்றார் என்பதனை கவனிக்க அதிக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் பரப்புரை தாக்கத்தை உருவாக்குமா? உருவாக்கியதா? இல்லை தமிழக மக்கள் குறிப்பிட்ட சின்னம், குறிப்பிட்ட அரசியல்வாதி என்ற எண்ணத்திலிருந்து வெளியே வந்துள்ளனரா? கிராமத்து மக்கள் மாறியிருக்கின்றார்களா? மாற்றப்பட்டு உள்ளனரா? விலைக்கு வாங்கப்பட்டு உள்ளனரா? மதம் ஆதிக்கம் செலுத்தியதா? இல்லை எப்போதும் போலச் சாதி தான் தீர்மானித்து உள்ளதா? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்?

ஜோதிஜி said...

நாங்கள் கூறுவதை மறு பேச்சு பேசாமல் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா.........நீங்களே பதில் சொல்லிட்டீங்க. இது பாஜக வின் டிசைன். இங்கேயிருந்து தான் பிரச்சனை தொடங்குகின்றது. தொடர்கின்றது. இது தான் எங்கே கொண்டு போய் விடப் போகின்றது என்றும் புரியவில்லை. இந்த அறிக்கையில் சமஸ்கிருதத்தை கொண்டு வந்து நுழைத்துள்ளார்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை?

ஜோதிஜி said...

படித்தவுடன் சிரித்து விட்டேன்.

ஜோதிஜி said...

கேரளாவில் சபரிமலை பிரச்சனையில் செய்தது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம். அதற்குப் பின்னால் இருப்பது ஒரு (லூலூ வளைகுடா நாட்டில் உள்ள மிகப் பெரிய முஸ்லீம் குழுமம்) நிறுவனத்திற்காக செய்த பல வேலைகளில் இதுவும் ஒன்று. இது எங்கேயும் வெளிவரவில்லை.

ஜோதிஜி said...

நன்றி

vic said...

சுயேட்சை தலைமைக்கு தொடக்கத்தில் ஒரு ஆளுமை தேவைப்படுகிறதுஅதற்கு ரஜனி சம்மதிக்காவிட்டால். அதற்க்கு அஜித் பொருத்தமானவர் கருணாநிதியால் அவரது விழாவிற்கு கட்டாயப்படுத்தி அழைக்கபட்ட அஜித் வேட்டி கட்டிக்கொண்டு போய்(அரசியல்வாதி யுனிபோம்) கண்ணியமான வார்தைகளால் எச்சரிக்கை விடுத்தார். தற்போதும் அரசியலை கண்ணியமாக தவிர்த்து விட்டார்.இவரே சுயேட்சை அமைப்புக்கு முதலில் பொருத்தமானவர். சுயேட்சை (நெட்டிசன்களால் ஆதரிக்கப்படுபவர் இரண்டாவதாக போட்டியிடகூடாது)
இதெல்லாம் சாத்தியமா என்றால் ஒரு கதை முனனர் ஐரோப்பாவில் இருந்து ஒரு நிறுவனம் சப்பாத்து விற்னை செய்ய ஆப்ரிக்காவிற்கு ஒருவரை அனுப்பியதாம். அவர் அங்குள்ளவர் கால்களில் சிலிப்பரே இல்லை என திரும்பிவிட்டார். நிறுவனம் வேரொருவரை அனுப்பியது அவர் இறங்கியதும் இங்குள்ளவர் கால்களில் சப்பாத்தே இல்லை உடனடியாக இருக்கும் சப்பாத்துக்களைஅனுப்புங்கள் என தந்தி அடித்தாராம்.
மாற்றம் மட்டுமே மாறாதது

வருண் said...

பிள்ளயார் சுத்திக்கு களீமண் பிள்ளயார் செய்துதான் கொண்டாடுவது நமது கலாச்சாரம். இன்னைக்கு எல்லாமே மாறீ விட்டது. பெரிய பெரிய பிள்ளயாரை தூக்கிக் கொண்டு ஊர்வலம் போறாங்க. இந்துத்தவா பாலிடிக்ஸ் ஓரளவுக்கு வளர்வதாகவே நான் நினைக்கிறேன்,

அதேபோல் சபரிமலை பிரச்சினை பெரிதாக்கப் படுகிறது. அய்யப்பன், முருகன் எல்லாம் நாம் உருவாக்கிய கடவுள்கள், நமக்குத்தெரிய உருவாக்கப்பட்ட கடவுள்கள். இதில் வட இந்திய ஹிந்துத்துவா உள் நுழைந்து வெற்றீ பெருகிறார்கள்.

ஆண்டாள் பத்தி வைரமுத்து பேசியதெல்லாம் பெரியார் காலத்தில் சர்வ சாதாரணமான விமர்சனம். ஆனால் இன்னைக்கு ஆண்டாள் பத்தி விமர்சிச்சா இவனுக ஆத்தாளப் பத்தி விமர்சிச்ச மாதிரி பொங்குறானுக. இதெல்லாம் மதவாதத்தின் வளர்ச்சிதான்.

ஜோதிஜி என்னவோ புதுசா கதை சொல்லுகிறார்..எங்க வீட்டிலேயே ஏகப்பட்ட பேரு குற்றாலம் போவதுபோல சபரிமலைக்கு போயிட்டு வர்ராங்க. பெண்கள் போவதில்லை. ஏன் போனா என்னனு கேட்டால், பி ஜெ பி க்கு சப்போர்ட் பண்றமாதிரித்தான் போறாங்க. ட்ரடிஷன் என்கிறார்கள். ட்ரடிஷன் என்பதே பெரிய பிரச்சினையான ஒண்ணூ. தீண்டாமை, சதி, குலத் தொழில் எல்லாமே ட்ரடிஷந்தான்.

ஹிந்துத்தவா அரசில்யல் ஓரளவுக்கு வெற்றீயே பெற்றதாகத் தோனுது.

அமெரிக்காவில் கூட இப்ப்பொ ரைட் விங் பாலிட்டிக்ஸ் வெற்றீ பெற்றே வருகிறது. ஆனால் இந்தியாவில் ரைர் விங் கை வர்வேற்கும் அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் இங்கே இருக்க ரைட் விங் பாலிட்டிக்சை எதிர்க்கிறாங்க. ஏன்னு விளங்கவில்லை.

வருண் said...

நம்ம நாட்டில் ஒண்ணூம் கிழிக்க முடியாமல் நான் அமெரிக்காவிலும் இவரு நெதர்லாண்டிலும் இருந்து கொண்டடு இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்பதெல்லாம் சுத்தமான கையாளாகத தனம் (என்னையும் தான் சொல்கிறேன்).

நாம் தமிழர் என்பதே முழு பித்தலாட்டம். இளவரசந் திவ்யா பிரச்சினைபோது, ரெண்டு பேரும் தமிழர்தான்னு இந்தப் புடுங்கி சீமான்போய் காடுவெட்டி மற்றூம் சாதி வெறீ பிடித்து அலையும் வன்னிய முட்டாள்களீடம் விமர்சிச்சு இருந்தால் இன்னைக்கு இவனையும் போட்டுத் தள்ளீ இருப்பார்கள். இந்த நாட்டுக்கு சம்மந்தமே இல்லாதவர்கள்தான் ஆமைக்கறீ தின்ன இந்த பொறம்போக்கு சீமானை மனிதனாகவே மதிக்கிறாங்க. ஏன்னா இவங்களூக்கு தமிழ்நாடுனா என்னனே தெரியலை. தமிழ் மட்டும்தான் தெரிகிறது,

ஸ்ரீராம். said...

எல்லாப் பக்கங்களையும் சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். நியாய அநியாயங்களையும் நடப்பு நிதர்சனங்களையும் வெளிப்படையாகச் சொல்லி இருப்பது சிறப்பு.

M.Thevesh said...

வெளிநாட்டில் வாழும் என்னைப்போன்றவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள பலவழிகள் இருப்பதால் எது உண்மை எது பொய் என்பதை அறிந்துகொள்கிறோம்.ஆனால் நடுநிலையான சுதந்திர ஊடகம் தமிழ் நாட்டில் இல்லாததால் சாதாரண மக்கள் உண்மையை அறியாமல் ஊழல் வாதிகளும் தேசவிரோத சக்திகளும் செய்யும் மாய் மாலப் பிரசார தந்திரங்களில் மூழ்கி திக்கித் திணறி போகும் திசை தெரியாது தடுமாறுகிறார்கள். சோசல் மீடியா விலே தனிநபர்கள் லட்சக்கணக்கில் மோடிக்கு ஆதரவாக உண்மைநிலையை எழுதிவருவதைப்பார்க்கும் போது சிறு ஆறுதலைத் தருகிறது. இந்தியாவின் சுபீட்சமான எதிர்காலம் மோடி என்கின்ற தனிநபரின் கையிலே தங்கி உள்ளது என்பதை அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சி நிரூபிக்கும் என நம்புகிறேன்.சத்தியமே வெற்றிபெறும்.

Anonymous said...

இந்தப் பின்னூட்டம் வெளியீட்டுக்கல்ல.
ஒரு வாக்கியம் {இங்கே பா.ஜ.க தனக்கான இடத்தை இப்போது தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.}
தமிழ் இலக்கணப்படி 'பா.ஜ.க' அஃறிணை. 'தேடிக்கொண்டு இருக்கிறது' என்றுதான் இந்த வாக்கியம் முடிய வேண்டும். உங்களுடைய பல வாக்கியங்கள் சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பல வாக்கியங்கள் தவறாக உள்ளன.
தயவுசெய்து உயர்திணை, அஃறிணை வேறுபாட்டை உணர்ந்து வாக்கியங்களை எழுதவும். நன்றி

ஜோதிஜி said...

வச்சுக்கிட்டா வஞ்சனை செய்யுறோம்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

ஜோதிஜி said...

டிகிரி முடித்த பெண்மணி இப்போது பாஜக வில் வாஜ்பாய் தான் பிரதமரா? என்று ஓட்டளிக்கச் செல்லும் நண்பரிடம் (அவர் மனைவி) கேட்டார். இது தான் தமிழக மக்களின் (வாக்காளர்களின்) அரசியல் புரிதல். இந்த அளவுக்குத்தான் உள்ளது. இவர்களே இப்படித்தான் என்றால் கிராமத்து மக்கள் 70 சதவிகித மக்கள் எந்த அளவுக்கு இருப்பார்கள் என்பதனை யோசித்துக் கொள்ளவும். வெளியே சொல்லப்படும் எந்த விசயங்களும் உண்மையான விசயங்களுடன் இங்கே பொருந்திப் போவதே இல்லை. நான் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையும் கூட. இங்கு வெவ்வேறு உலகங்கள் உள்ளது. இன்னும் இரண்டு ஐந்தாண்டுகள் கடந்த பின்பு ஓரளவுக்கு மாற்றங்கள் உருவாக வாய்ப்புண்டு.

ஜோதிஜி said...

நன்றி ராம்.

ஜோதிஜி said...

நீங்க சொன்ன கதையை நானும் கேள்விப்பட்டுள்ளேன். மனிதவளத்துறையில் நிறுவனங்களில் தொடக்கப் பேச்சில்சொல்லப்படும் கதையும் கூட. வாங்கும் சக்தி அதிகம் உள்ள அதிக ஜனத் தொகை கொண்டு வாழும் இந்தியா பின்னால் செல்ல வாய்ப்பே இல்லை. சாதக பாதக அம்சங்களும் அடுத்த கட்டத்திற்கு மட்டுமே நகரும். ஒரு ரூபாயில் 25 பைசா திருட நினைப்பவனைத்தான் இந்தியர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நடப்பதென்னவோ 95 காசு திருடுபவர்கள் தான் இங்கே வந்து தொலைக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

திக வில் இருந்து திமுக வாக மாறிய போது அவர்கள் பேசாத பேச்சா? வளரும் போது வளர நினைக்கும் போது எல்லோரும் செய்வது தான் வருண். எல்லாவற்றிலும் ***Conditions Apply என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

ஜோதிஜி said...

வருண் அய்யப்பன் கோவில் அது தொடர்பான ஆன்மீக விசயங்களைப் பற்றி நான் எழுத மாட்டேன். அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயங்கள். விரும்பியவர்கள் போகட்டும். அது அவர்கள் பாடு. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அங்கே செய்து கொண்டிருப்பது முக்கியமான அரசியல். அது கேவலமான அரசியலும் கூட. காரணம் வெள்ளம் வரப்போகின்றது என்ற போது கூட மின்சாரம் தயாரிப்பது நின்று விடக்கூடாது என்று தீர்க்கமான சிந்தனையில் யோசித்து மக்களை தடுமாறவிட்டவர்கள். பழியை அப்படியே தமிழ்நாடு பக்கம் திருப்பிவிட்டார்கள். இப்போது இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் இருப்பது பெருமுதலாளிகள் அங்கங்கே கட்ட விரும்பும் ரிசார்ட் வகையான தொழிலுக்கும் எவையெல்லாம் இடைஞ்சலாக இருக்கின்றதோ? அவற்றை அவர்கள் பாணியில் கையாள்கின்றார்கள். அவ்வளவு தான். எந்த கட்சி என்றாலும் எங்கேயும் ஆள்வது முதலாளிகள் தானே?

Rathnavel Natarajan said...

ஆனால் பா.ஜ.க கட்சியோ வட மாநில அரசியல் போல வாயால் வடை சுட முடியுமா? என்று பார்க்கின்றது.

இதற்கிடையே பா.ஜ.க கடந்த வருடங்களில் ரெய்டு என்ற பெயரில் இங்குள்ளவர்கள் சேர்த்து வைத்துள்ளவற்றை நோகாமல் சுருட்டி எடுத்துக் கொண்டு சென்ற கிரிமினல் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எத்தனை லட்சம் கோடி. யாருக்குத் தெரியும்? அதை எண்ணிப் பார்த்தவர்களுக்குக்கூட மயக்கம் வந்திருக்கும்.
- அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்க்ள் நேரம் ஒதுக்கு முழுமையாக படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு ஜோதிஜி

BUPESH KUMAR said...

அருமையான அலசல். இன்றைக்கு வரையிலும் சேவை வரி சிதம்பரம் அவர்களால் ஏன் கொண்டு வரப்பட்டது என உண்மையான காரணம் தெரியவில்லை. அவர்கள் கூறும் காரணங்கள் எதுவும் ஒத்துக் கொள்வது போல் இல்லை. சாலைகளில் வசூலிக்கப்படும் டோலும் அநியாயக் கொள்ளை. தேசிய கட்சிகள் மாநில மக்களின் விருப்பங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. மாநிலக் கட்சிகள் குடும்ப அரசியலை மையமாகக் கொண்டு சுயநலமாக இயங்குகின்றன. பொதுவுடைமை கட்சிகளோ தங்களுக்கு ஒன்றிரண்டு சீட் கிடைக்காதா என்று மாநிலத்துக்கு மாநிலம் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறது. மதுரையில் தன் கட்சி பெண் கவுன்சிலரை கொலை செய்த கட்சியினருடன் கூட்டணி வைத்து வலம் வருகின்றனர். இங்கு ராகுல் பிரதமராக வேண்டும் என்கின்றனர். பக்கத்து மாநிலத்தில் அவர் போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவரை தோற்கடிப்போம் என்கின்றனர். தலை சுத்துதுடா சாமி. ரமணா படத்தில் வடநாட்டில் இருந்து வரும் போலீஸ் அதிகாரி நம் தமிழர்களை சென்டிமன்செ இடியட்ஸ் என்பார். எவ்வளவு சத்தியமான உண்மை.