Wednesday, November 21, 2012

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்


தற்போது தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் மின்வெட்டு மற்றும் மின்சாரத்திற்கு பின்னால் உள்ள அரசியல் நிலவரங்கள். படிக்க  சொடுக்க, 

அதன் பாதிப்பில் உருவானதே இக்கடிதம்.  
                                                                            •••••••••••

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு

நலமாய் தான் இருப்பீர்கள் என்று நம்பும் வாக்காளன் எழுதும் கடிதம்.

ஏறக்குறைய 2000 வார்த்தைகள் உள்ள இந்த கடிதம் படிப்பவர்களுக்கே சற்று சலிப்பை தரக்கூடியது தான். ஆனால் 2000 வருடங்களுக்கும் அப்பாற்பட்ட தமிழர்களின் வரலாறு தாங்கள் ஆட்சி புரியும் இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு தொழில் வாழ்க்கையில் உள்ள தமிழனின் வாழ்க்கையும் ஒளியிழந்து போய்விட்டதே என்பதன் ஆதங்கமே இந்த கடிதம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கத்தின் பார்வையென்பது இன்றைய சூழ்நிலையில் இணையத்தின் மேல் அதிகம் இருப்பதென்பது மட்டும் எனக்கு நன்றாகவே தெரிந்தும் இந்த கடிதத்தை அவசர அவசியம் கருதியே எழுதுகின்றேன்.


அரசியல்வாதிகளின் உடல் நலமென்பது அவரவர் இருக்கும் பதவியோடு சம்மந்தப்பட்டது என்பதை நான் அறிவேன். ஆனால் எங்களைப் போன்றவர்கள் நலமாய் இருக்கின்றோம் என்று தாங்கள் நம்புகின்றீர்களா?

நீங்கள் நலமாய் எந்நாளும் வாழவேண்டும் என்று தான் விரும்புகின்றேன். நீங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள ஜீவராசிகளுமே  நலமாய் வாழ வேண்டும் என்பது தானே தாங்கள் பின்பற்றும் வைணவ மதமே சொல்கின்றது. மதங்கள் எத்தனை சொன்னாலும் பின்பற்ற வேண்டிய மனிதர்களின் மனம் என்பது பொதுவானது தானே. 

ஒவ்வொருவரும் கடைபிடித்தால் தானே வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஊடகங்களை அவதூறு வழக்கைச் சொல்லி பயத்தில் வைத்திருப்பது என் நினைவில் வந்தாலும்  இங்கே வெம்பிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை தினந்தோறும் நான் பார்த்துக் கொண்டேயிருப்பதால் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதத் தோன்றியது.

தவறில்லை தானே?

எனது கல்லூரி படிப்பின் இறுதி வருடத்தின் கடைசி நாளன்று கல்லூரியின் முந்தைய ஆண்டின் பட்டமளிப்பு விழா நடந்தது. அன்று முன்னாள் அமைச்சர் (திமுக) துரைமுருகன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எங்கள் கல்லூரி முதல்வரும் அவரும் ஒரு வகையில் உறவு கொண்டவர்கள். அவர் நிகழ்ச்சி முடிந்து விடைபெறும் சமயத்தில் எங்கள் முதல்வருடன் பேசிக் கொண்டிருந்த மரத்தடிக்கருகே நானும் நின்று கொண்டிருந்தேன்.. அமைச்சர் துரைமுருகன் விடைபெற்ற போது எங்கள் முதல்வரிடம் சொல்லிச் சென்ற வார்த்தை இன்னமும் என் மனதில் இருக்கிறது.  

"நாளை சட்டமன்றத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கப்போகின்றது" என்றார். அப்போது எனக்கு புரியவில்லை.  பத்திரிக்கையில் பார்த்த போது தான் “பாஞ்சாலி சபதம்”  அரங்கேறியிருந்தiதை புரிந்து கொள்ள முடிந்தது. 

அன்று நடத்தப்பட்டது பயமுறுத்தலா? நாடகமா? பழிவாங்கலா?  இல்லை மிகைப்படுத்தலா? ஆதாயம் தேடிக்கொள்வதற்கான ஆரம்பமா? 

இது போன்ற பல கேள்விகள் அப்போது என் மனதில் வந்து போனாலும் அன்று உங்களுக்கு கிடைத்த முழுபக்க விளம்பரங்களும், தமிழ்நாட்டு மக்களிடம் உருவான தாக்கமும் இன்று வரையிலும் இருக்கத்தான் செய்கின்றது. ஆணாதிக்க உலகில் உங்களின் இன்றைய வளர்ச்சி என்பது  பிரமிப்பாகவே உள்ளது. 

“இந்த உலகில்  வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறெதும் இல்லை” என்பதாகத் தான் உங்கள் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக் கொண்டேன். ஆனால் பழிவாங்குவது மட்டும் தான் உங்களிடம் முதன்மையாக இருக்கின்றதோ என்று என் எண்ணத்தில் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகம் நேற்றும் ஆண்களிடம் தான் இருந்தது.  நாளையும் அப்படித்தான் இருக்கும்.

வளர்ந்து விடுவாயா? என்பவர்களுக்கும் நான் வளர்ந்து காட்டுகின்றேன் என்பவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தர்மயுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து எனக்குத் தெரியாது.  ஆனால் ஆணாதிக்கம் என்பது தற்போது உடைந்து கொண்டே வருகின்றது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

அன்று நீங்கள் என்ன சபதம் எடுத்தீர்களோ? 

ஆனால் நான் உடைத்து வந்து விட்டேன் பார் என்பதான உங்களின் இன்றைய அரசியல் வளர்ச்சியும், வளர்த்துக் கொண்ட ஆளுமையும் எவரும் பாராட்டக்கூடியதாக உள்ளது. ஆனால் உருவானது வளர்ச்சியா இல்லை வீக்கமா  என்பதையும் கணக்கில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. 

எம்.ஜி.ஆர் வாள் கொடுத்து உங்களை அரசியல் களத்தில் அங்கீகரித்தார். அறிஞர் அண்ணா அமர்ந்த டெல்லி பாராளுமன்ற இருக்கையில் தாங்கள் அமர்ந்தது வரைக்கும் உங்களின் அரசியல் களமென்பது ஒற்றையடி பாதை தான்.  எம்.ஜி.ஆர் இறந்து அவர் சடலத்திற்கருகே தாங்கள் அமர்ந்து காட்டிய பிடிவாதம் முதல் அன்று உங்களை அவமானப்படுத்திய அத்தனை பேர்களின் அரசியல் முகத்தை  காணாமல் போகச் செய்தது வரைக்கும் உங்கள் பயணம் நீண்டதொரு முள்பாதை. 

நீங்கள் காட்டிய முனைப்பும், முயற்சிகளும் ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பாலபாடம். ஆனால் ஆசிரியையாக இருந்து அற்புத பாடத்தை நடத்திக் காட்டூவீர்கள் என்று நம்பிய எங்களுக்கு இன்று அலங்கோல நிர்வாகத்தை அல்லவா காட்டிக் கொண்டு இருக்குறீங்க?.

ஜா அணி ஜெ அணி என்று பிரிந்து இரட்டை இலை சின்னத்தை நீங்கள்  கைப்பற்றியது முதல் தான் உங்கள் தார் சாலை பயணம் தொடங்கியது.  ஆனால் ராஜீவ் காந்தி என்ற மனிதரின் மரணம் தான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தேசிய நெடுஞ்சாலை பயணத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது.

நினைவில் வைத்திருப்பீர்கள் தானே?  

கடந்து வந்த பாதையை அரசியல்வாதிகள் மறந்துவிடுவது இயல்பானது தான்.  அரசியலில் ஏணிகள் கிடைக்காதா என்று அலையும் மனிதர்கள் மத்தியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏணிகளே உங்களைத் தேடி வந்தது தான் உங்களுக்குண்டான ராசி.  உங்களை மகராசி என்றழைத்த தமிழ்நாட்டின் மக்களின் ராசியைத் தான் இனி சுபமங்களம் என்று பாட வைத்துக் கொண்டு இருக்கீறீர்கள்.  

"திருவாரூரில் இருந்து வெறும் மஞ்சள் பையோடு கிளம்பி வந்த தீயசக்தி கருணாநிதி" என்று வயசு வித்தியாசம் கூட பார்க்காமல் ஒவ்வொரு முறையும் முழக்கம் செய்வீர்களே? உங்கள் அகராதியில் அரசியல் எதிரி என்பவர்கள் அழிந்து போகவேண்டியவர்களா? உங்களும் அவருக்கும் என்ன அங்காளி பங்காளிச் சண்டையா?  எத்தனை ஜென்மத்து பகையிது.  நடிப்பா? நாடகமா? இல்லை தாங்கள் தப்பிப்பதற்கான ஒரு வழியா?

அவர் செய்தார். அவர் செய்யவில்லை. அவர் தான் காரணம் 

இந்த மூன்றும் தான் உங்களின் அரசியல் தாரக மந்திரமா?

இது போன்ற கீறல் விழுந்த வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகின்றீர்கள். சிறிய நிறுவனம் கூட தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் ஒவ்வொரு முறையும் காரணங்களைச் சொன்னால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவார்கள். நிறுவனமே இப்படி என்றால் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் உங்களிடம் கொடுத்து இருக்கின்றோமே? 

இனி நாங்கள் என்ன செய்ய முடியும்?

கலைஞரை குறித்து தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல. இந்திய அரசியலுக்கே நன்றாகவே தெரியும். சர்க்காரியா கமிஷன் முதல் இன்றைய அலைக்கறறை ஊழல் வரைக்கும் அவர் அரசியலில் கடந்து வந்த பாதை நீண்ட நெடியது. அவரின் குடும்பபாசத்தைப் பற்றி நீங்களே ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தீர்களே?

நீங்கள் மட்டுமல்ல?  

இன்னும் எத்தனை பேர்கள் தமிழ்நாட்டு அரசியலில் வந்தாலும் கலைஞருடன் அவர் காலம் முடியும் வரைக்கும் எவராலும் போட்டி முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நீங்கள் அரசியலை புத்தகத்தில் தான் படித்திருப்பீர்கள்.  அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் களத்தில் நின்று கற்றுத் தெளிந்தவர்.  அவர் ஒரு காட்டு மரம்   ஒரே ஒரு வாக்கியத்தில் தமிழ்நாட்டை கொந்தளிக்கவும் செய்வார். வேறொரு வார்த்தையில் ஊடகம் திரித்து எழுதி விட்டது என்பதாகவும் பேசுவார். 

குறைகளுடன் இருக்கும் அவரை அவர் குடும்பம் ஏற்றுக் கொண்டதைப் போல அவருக்காக, அவரை  நம்பியும் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொது ஜனமும் அவர் வார்த்தைகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்டு அவர் தான் எங்கள் தலைவர் என்று தான் வாழ்கிறார்கள்.  உங்களால் அவரை என்ன செயது விட முடியும்?   நட்ட நடு ராத்திரியில் அவரை கைது செய்தீர்கள்? என்ன நடந்தது?

அவர் ஊழல்வாதி என்றால் இப்போது கர்நாடக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்களே?  ஒரு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க வேண்டும் என்ற வித்தையை எதிர்கால வக்கீல்கள் உங்களின் தற்போதைய அனுபவத்தை பாடமாக படித்துக் கொள்ள முடியும்.

அரசியல் என்பது ஒரு முதலீடு செய்யும் தொழில் போன்றது என்பதை தற்போது மக்களும் எதார்த்த சினிமாவை போலவே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள் என்பது உங்களும் தெரியும் தானே?

முதல் முறை நீங்கள் ஆட்சிக்கு வர .காரணம் அமரர் ராஜீவ் காந்தி. இந்த முறை வந்ததற்கு காரணம் கலைஞர் மு. கருணாநிதி. ஒவ்வொரு முறையும்  நல்லது செய்வார்கள்  என்ற நம்பிக்கையில் எவரும் ஓட்டுப் போடுவதில்லை. இவர் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மட்டுமே மாற்றத்தை எதிர்பார்த்து தங்கள் ஒட்டுக்களை  குத்துகிறார்கள்.

ஆனால் இந்த முறை ஆட்சிக்கு வந்த தாங்கள் தமிழ்நாட்டின் மக்கள் முகத்தில் தொடர்ச்சியாக குத்திக் கொண்டேயிருக்கிறீர்களே இது நியாயமா?

இந்த முறை உங்கள் கட்சி ஜெயித்து வந்த போது திருப்பூர் தொழில் வளர்ச்சியில் தாங்கள் காட்டிய அக்கறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. எதிர்கால நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

பதவியேற்பு விழா நடப்பதற்கு முன்பே உங்களின் வேகம் என்னை திகைக்க வைத்தது.  திருப்பூரில் காட்டிய உங்கள் அக்கறை தமிழ்நாடு முழுக்க இருக்கும் என்று நம்பினேன். கடந்த கால அனுபவங்கள் உங்களை மாற்றியுள்ளது என்பதை மனதார நம்பினேன்.

ஆனால் நான் வைத்திருந்த நம்பிக்கையின் கை இழந்து அம்பி என்னை எப்போதும் நம்பாதே என்று தாங்கள் சொல்வது போல் இருக்கின்றது.  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் உங்கள் அருகே இருப்பதாகவும், கற்று அறிந்த பல அறிஞர் பெருமக்கள் உங்களுக்கு உதவுகிறார்கள், திட்டங்கள் விரைவாக தீட்டப்படுவதாகவும், தகவல்கள் வந்தன.  ஆனால் தெளிய வைத்து தொடர்ச்சியாக அடித்துக் கொண்டுருப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நம்பமுடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்சசி செங்குத்தாக ஏறிவிடும் என்றும் ஊடகங்கள் செய்திகளை பரப்பின.  வராது வந்த மாமணியோ என்று யோசித்தேன். உண்மைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி செங்குத்தாகத்தான் ஏறியுள்ளது. இன்னும் நாலடி எடுத்து வைத்தால் கருட புராண காட்சிகளை பார்த்து விடலாம். 


இன்று இருட்டுக்குள் இருந்து தொழில் துறையினர் அழுது கொண்டு வாழும் இந்த வாழ்க்கையின் விசும்பல்கள் உங்கள் போயஸ் தோட்டத்திற்கு எட்டுமா? மிக குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டை இருண்ட உலகமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். பதவியேற்றது முதல் பணிகளை தொடங்கி இருந்தால் கூட இன்று பாதி கிணறு தாண்டியுள்ளோம் என்று நம்பிக்கையில் காத்திருக்க முடியும். வடிவேல் சொன்ன கிணறே காணவில்லை என்பது போலத்தான் இருக்கிறது.

எத்தனை அதிகாரிகளின் மாற்றங்கள்?

எத்தனை அமைச்சர்களின் மாற்றங்கள்?

ஆனால் என்ன உருப்படியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தான் இன்று வரையிலும் புரியாமல் மர்மமாக இருக்கின்றது.


ஒரு அதிகாரி சீட்டில் உட்காரும் போதே இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பதவி? என்று யோசிக்கும் போது அவருக்கு என்ன தான் செய்யத் தோன்றும்?நாள் காட்டி தாளை கிழித்து மதிய சாப்பாட்டுக்கு காத்திருக்கத் தான் தோன்றும்.

அமைச்சர்கள் என்பவர்கள் தலையாட்டி பொம்மையா? இல்லை உங்கள் முன்னால் தலையை மட்டும் காட்ட வேண்டியவர்களா?  சட்டமன்றத்தில் உங்களைத் தவிர வேறு எவருமே பேசக்கூடாது என்பது போன்ற சட்டதிட்டங்கள் போடப்பட்டுள்ளதா? அப்புறம் எதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள்? 

அதென்ன உங்கள் முன்னால் பொத்தென்று விழுபவர்கள், பம்மிக் கொண்டு இருப்பவர்கள், பயத்தோடு பார்ப்பவர்கள் என்று மிகப் பெரிய அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றீர்களே? இவர்களுக்கு ஏதும் பயிற்சி பட்டறை இருக்கின்றதா? உலக மகா நடிகனான சிவாஜி கணேசனையும் மிஞ்சி விடுவார்கள் போல.

யார் எந்த துறையில் இருக்கின்றார்கள் என்றே தமிழகத்திற்கு தெரியுமா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

பம்மிக் கொண்டுருப்பவர்களும், உங்களை வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா அம்மம்மா என்று என்று அழைப்பவர்களும் தான் அமைச்சர்கள் என்றால் தமிழ்நாடு முழுக்க அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலையே மாநில கீதமாக அறிவித்து தினந்தோறும் பள்ளிக்குழந்தைகளை பாடவைத்து வகுப்புகளை தொடங்கச் சொல்லாமே?

எளிய மனிதர் காமராஜரை உங்களுக்குத் தெரியும் தானே? 

உங்களைப்போல கான்வென்ட் படிப்பு படித்தவர் அல்ல. பக்கா கிராமத்தான் என்பார்களே? அது போன்ற தோற்றம் தான்.

இன்று மூன்று வெள்ளூடைய மாற்றிக் கொண்டு வரும் அரசியல் தலைவரல்ல.

என்னவெல்லாம் இந்த தமிழ்நாட்டுக்குத் தேவை என்று பார்த்து பார்த்து செய்த பலனைத் தான் அவருக்குப் பினனால் வந்த திராவிட கட்சிகள் அனுபவித்தன.

உங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை இன்று வரையிலும் படித்தவர்கள் ஒரு தலைவராகக்கூட ஏற்றுக் கொள்ள தயாராயில்லை.  

ஆனால் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட, கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் அவரைத் தவிர வேறு எவரையுமே தலைவராக ஏற்றுக் கொள்ளவே விரும்பவில்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியுமா?

காமராஜர் தமிழ்நாடு முழுமையாக முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்.  அதையே சுயநலமின்றி செய்தும் காட்டினார். ஆனால் எம்.ஜி.ஆர் இய்லபான சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் அரசாங்க கொள்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் அதிக கவனமாக இருந்தார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?. 

மக்களுக்குத் தேவையான அடிப்படை விசயங்களை எப்போதும் சிறப்பாகவே வைத்திருந்தார். அதனால் அல்லல்படுவோருக்கு ரட்சகராகத் தெரிந்தார். எம்.ஜி.ஆர் கலைஞர் அளவுக்கு மிகப் பெரிய புத்திசாலி இல்லை தான்.  கலைஞரின் தந்திரம் மறைமுகமானது. ஆனால் எம்.ஜி.ஆரின் பார்வை அவரது உதவிக் கரங்களைப் போலவே வெளிப்படையானது. இது அரசியலை கவனிக்கும் அத்தனை பேர்களுக்குமே தெரிந்த உண்மை தானே..

ஆனால் புத்திசாலிகளால் மட்டும் தான் ஆள முடியுமா? என்பதை உடைத்துக் காட்டி எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரையிலும் கலைஞரால் கூட எழ முடியவில்லையே?  எனக்கு போடும் ஓட்டு அவருக்கு ஒப்படைக்க என்று கெஞ்சும் அளவுக்குத் தானே கொண்டு வந்து நிறுத்தியது. இதனால் அவரை மக்கள் தலைவர் என்று அழைக்கின்றார்கள்..

உங்களுக்கு கலைஞரைப் போல குடும்ப பாரங்கள் இல்லை. அழுத்தங்கள் இல்லை. பாசப் போராட்டத்தில் மதியிழக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. தொடக்கம் முதலே நீங்கள் தங்க ஸ்பூன் வாழ்க்கை வாழ்ந்தவர் தான். ஆசைக்கே ஆசைபடும் அளவுக்கு உங்களின் அழகும், அறிவும் குறித்து அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஆட்சி புரியத் தெரியவேண்டுமே? ஆட்சியினால் மக்களுக்கு பலன் சென்றடைய வேண்டுமே? கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் முதல் முறை ஆட்சிபுரிந்த அந்த ஐந்தாண்டுகளே போதுமானதே? 

முதல்முறை ஆட்சிக்கு வந்த போது உங்களைப் பார்க்க வந்தவர்கள், வரவழைக்கப்பட்டவர்கள், வந்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு கோட்டைக்கு, வீட்டுக்கு வந்தவர்கள் அத்தனை பேர்களும் நனைந்த ப்ளாஷ் மழையை நானும் பத்திரிக்கையில் படித்துள்ளேன். கலைஞரும், எம்.ஜி.ஆரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் அது வேறு இது வேறு எளிதாக புரிந்து கொண்டார்கள். ஆனால் நீங்களோ எல்லாமே ஒன்று தான் மக்களுக்கு இன்று வரையிலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள? 

சில மாதங்களுக்கு முன்பு உங்கள் ஆட்சியின் ஓராண்டு ஆட்சியின் நூறாண்டு சாதனை என்று மிகப்பெரிய செலவு செய்து இந்தியா முழுக்க தெரிவிக்கச் செய்தீர்கள்.  மிகச் சரியாகத்தான் செய்து இருக்கீங்க.  கடந்த ஓராண்டு காலத்தில் வாழ்ந்த அத்தனை தமிழ்நாட்டின் மக்களின் வாழ்வாதாரத்தை அடுத்த 99 ஆண்டுகள் வந்தாலும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு செய்தது உங்களின் சாதனை தானே.?

விலைவாசி உயர்வு.  அதற்கு மத்திய அரசாங்கமே  காரணம்.
பால்விலை உயர்வு.  கலைஞர் செய்த தவறு. 
பேரூந்து கட்டணம் உயர்வு. கலைஞர் செய்த தவறு. 
மின்சாரப் பற்றாக்குறை. அதுவும் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றாமல் வைத்திருக்கும்  திட்டங்கள் 

இதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்களே? நடிகர் வடிவேலிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றீர்களோ?என்று சந்தேகமாக இருக்கின்றது. 


ஆனால் மதுக்கடைகளை கலைஞர் தானே அறிமுகப்படுத்தினார்.   அதையும் உங்கள் பாணியில் மூடுவிழா நடத்திவிட வேண்டியது தானே?

ஏனிந்த ஓரவஞ்சகம்?

வாழ முடியாதவர்களின் வாழ்க்கையில் இந்த மது அரக்கனும் நுழைந்து பெண்களின் வாழ்க்கையில் இருக்கும் கொஞ்ச மகிழ்ச்சியையும் பறித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்குத் தானே மற்றொரு பெண்ணின் துயரம் புரியும்?

குறைந்தபட்சம் இந்த மின் துறையிலாவது போடப்பட்ட அதிகாரிகளை மாற்றாமல் அவரை நம்பி பொறுப்பை கொடுத்து இருப்பீர்களா? எவரையாவது சுதந்திரமாக செயலபட அனுமதித்து இருப்பீர்களா? கொள்கை ரீதியான மாற்றுக் கருத்து இருந்தால் உங்களுடன்  உரையாடும் தைரியத்தை உங்கள் அதிகாரவர்க்கம் பெற்று இருக்கின்றதா என்று தனிமையில் இருக்கும் போது  யோசித்துப் பாருங்கள்.  

காரணம் நீங்கள் வாழும் வாழ்க்கை, நீங்கள் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை. 

யோசித்து இருப்பீர்களா?

உங்களுக்குத் தான் குட்டிக்கதை சொல்வது தான் ரொம்ப பிடிக்குமே?  நானும் ஒரு கதை உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். திடீரென்று மக்களுக்கு ஒரு உத்தரவு போட்டாராம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து விளைச்சல் முடிந்த பிறகு ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டு அரண்மனையில் இருந்து ஒரு மூட்டை நெல் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தாராம். மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் மீற முடியாமல் தவித்தார்களாம். . ஆனால் ராஜா சாகும் தருவாயில் மகனை அழைத்து மக்கள் என்னை நல்ல ராஜா என்று சொல்ல வேண்டும் என்று விரும்பினாராம். 

நீங்க கவலைப்படாதீங்க மன்னா. நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இளவரசன் சொன்னாராம்.  மன்னரும் இறந்து விட்டாராம்.  பட்டத்துக்கு வந்த இளவரசன் மக்களுக்கு ஒரு உத்தரவு போட்டானாம். ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டு அரண்மனையில் இருந்து ஒரு மூட்டை உமி வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றாராம்.  அப்போது மக்கள் ராஜாவே பரவாயில்லை போலும் என்றார்களாம்.

தற்போதைய உங்களின் ஆட்சியும் இப்படித்தான் இருக்கிறது முதல்வரே.

ஒரு ஆட்சிக்கு வருபவர்களிடம் இந்த மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள்? 

ரேஷன் பொருட்கள், பொது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதிகள், தொடர்ச்சியான பராமரிப்பு. கண்டிப்பான சட்டம் ஒழுங்கு.

ஆனால் தற்போது எப்படி இருக்கின்றது.

முக்கியமான சட்டம் ஒழுங்கே இன்று மக்களுக்கு சவாலாக இருக்கிறது.

கலைஞர் கொண்டு வந்தது என்பதற்காகவே அற்புத திட்டமான சமச்சீர் கல்வியை தற்கொலையே செய்ய வைத்து விட்டீர்கள். தாங்கள் அமைத்த குழுவில் இடம் பெற்ற ஆட்களைப் பார்த்த பொழுதே நீங்கள் ஒரு படுபயங்கர மேதை என்பதை புரிந்து கொண்டேன்.  

வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமல் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள நூலகத்தை பத்திரிக்கையில் படித்து இருக்கின்றேன். நீங்களே ஒரு (ஆங்கில) புத்தக வாசிப்பு பிரியர் என்பதையும் புரிந்துள்ளேன். ஆனால் சென்ற ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த அண்ணா நூலககட்டிடத்தில் தாங்கள் காட்டிய பரிவும் பாசமும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே மறக்க மாட்டார்கள். உங்கள் தீர்க்கதரிசனமென்பது திடுக்கிடவைப்பது என்ற அர்த்தம் தானோ?

ஈழம் முதல் இன்றைய கூடங்குளம் வரைக்கும் உங்களின் கொள்கை என்ன என்பதை தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே? அரசியலில் அந்தர் பல்டி என்பது உங்களுக்கு பிடித்த வார்த்தையா? :மூவரின் தூக்குத் தண்டனை குறித்து நீங்கள் சொன்ன எனக்கு அதிகாரம் இல்லை என்பதன் பின்னால் உள்ள அர்த்தத்தை விபரம் தெரிந்தவர்கள் மட்டும் தங்களுக்குள் நகைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நேரிடையாக, மறைமுகமாக தமிழ்நாட்டு மக்களிடம் உருவாக்கிய தாக்கங்கள், உருவான மறுமலர்ச்சி போன்றவை குறித்து உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? 

காமராஜரை பலமுறை பிரதமர் பதவி தேடி வந்தது.  ஆனால் இன்று உங்கள் கனவே அதுவாக இருப்பதால் முடிந்த வரைக்கும் முய்ற்சிப்போம் என்று நீங்களும் முன்னேறிக் கொண்டே இருக்கீங்க. உங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துகள். உங்கள் நண்பர் குஜராத் மோடியைப் போல முதலில் மாநில மக்களின் அன்பை பெற முயற்சியாவது செய்யுங்க. 

ஆனால் பாதிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் கண்ணீரில் தான் நீங்கள் நடந்தபடி தான்  பிரதமர் பதவியை நோக்கி போய் கொண்டுருக்கீங்க என்பதையும் உங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் முதல்வரே.

கலைஞர் கொண்டு வந்த மற்றொரு அற்புதமான திட்டமான உழவர் சந்தையின் இன்றைய நிலைதான் என்ன? 

தமிழ்நாட்டை விவசாயிகளின் மாநிலமாக மாற்றுவேன் என்று சூளுரைத்தீர்களே? ஒரு விவசாயின் கண்ணீரை அறிய ஏழையாக பிறக்க வேண்டியதில்லை.  அவர்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்த்தாலே போதுமானது. 


உங்களுக்கென்ன? 

தடையற்ற மின்சாரம். நினைத்தால் கொடை நாடு.  அலுத்துப் போனால் பையனூர் பங்களா,  இதற்கு மேலும் இருக்கவே இருக்கும் சாமி,  பூதங்கள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், யாக வேள்விகள்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையை தீயின் மேல் நின்று கொண்டு வாழ்வது போலத்தான்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் கருகல் வாடை எப்போது உங்களுக்கு புரியும் என்பதே தெரியவில்லை.

சேலத்துக்கருகே ஒரு நெசவாளார்கள் வாழும் கிராமத்தில் வீட்டுக்கு வீடு கருப்புக் கொடி கட்டி வைத்து தீபாவளி பண்டிகையை புறக்கணித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் உங்களுக்கு உண்மையான மக்களின் அவலம் புரியும்.

“என் மகன் மற்ற பசங்க வெடிக்கின்ற பட்டாசு பார்த்து என்னிடம் வந்து அழுகின்றான்.  நான் என்ன செய்ய முடியும்?. இந்த மின் தடையில் வேலை செய்றதே மூணு நேரம் சாப்பிட போதல” என்றார்.  

கொண்டாட வேண்டிய என் பண்டிகையில் துக்கம் வந்து சூழ்ந்து விட்டது.  இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் என்னைப் போன்றவர்களின் கதியும் இப்படி வந்து விடுமோ என்று தான் யோசித்துக் கொண்டுருக்கின்றேன். .

ஒரே ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு அவரின் திரைப்பட வளர்ச்சிக்கு உதவிய பாடல் வரிகளை ஒரு தொகுப்பாக உருவாக்கி கோட்டைக்கு வரும் போது பயணிக்கும் காரில் கேட்டு வாருங்கள்.  மக்களின் நலத்தை மட்டுமே பிரதிபலித்த அந்த பாடல் வரிகளைத் தவிர வேறு ஏதும் தேவையா?

ஏன் அவரை ஏழை மக்கள் இன்றும் கொண்டாடுகின்றார்கள்?  என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் உருவாக்கிய இரட்டை இலையே இன்றும் உங்களின் அரசியல் வாழ்க்கையை வாழ் வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இங்கே படித்தவர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் எது குறித்த அக்கறையும் இல்லை.  நடுத்தர வர்க்கத்திற்கோ தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை. எங்கே போய் சிந்திப்பது? ஆனால் படிக்காத, பாமர, கிராமத்து ஜனங்களுக்கு எந்த செய்திகளும் முழுமையாக போய்ச் சேர்ந்துவிடுவதில்லை. நாளுக்கு நாள் சமூகத்தில் இந்த மக்கள் ஒதுங்கி போய்க் கொண்டேயிருப்பதாவது தெரியுமா?

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்களே, இது உங்களுக்கு என்னுடைய அறிவுரைக்கடிதம் அல்ல.

எங்கள் வாழ்க்கைபாடுகளை தினந்தோறும் அறியும் போது. அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உருவான கடிதம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் எனக்கு மகிழ்ச்சியே.

காரணம் இந்த உலகில் வாழ முடியாதவர்கள் விடுகின்ற கண்ணீர் இறுதியில் ஒரு சாம்ராஜ்யத்தையே மாற்ற வல்லது என்பதையும் தாங்கள் படித்த வரலாற்று புத்தகங்கள் சொல்லியிருக்குமே?இதை எப்போதும் தாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

வாழ்க நலமுடன் 

இப்படிக்கு

(வாக்கு மட்டுமே போடத் தெரிந்த) வாக்காளன்


ஈழம் தொடர் எழுதிய போது கலைஞருக்கு எழுதிய கடிதம்

30 comments:

வவ்வால் said...

ஜோதிதி,

எல்லாம் இன்பமயம் :-))

பகவான் சர்வ வல்லமை படைச்சவரு இல்லையா அவருக்கிட்டே சொன்னா எல்லாம் கொடுக்கப்போறார் இதுக்கு போய் கண்ணை கசக்குறிங்க ,பகவானுக்கான நேரடி ஏஜெண்டுகள் நம்ம பதிவுலகில் நிறைய இருக்காங்க அவாள்ட்ட சொன்னா எல்லாம் சரியாப்போயிடும் :-))

semmalai akash said...

யப்பா! இவ்ளோ பெரிய கடிதம், அவர்கள் கையில் இது கிடைத்தாலும் படித்து முடிக்கவே ஒரு வருடம் ஆகும் என்று நினைக்கிறேன்.:-))))) இந்த கடிதம் அம்மாவின் கண்ணில் பட வாழ்த்துகிறேன்.

அருமையான பதிவு.

தருமி said...

ரொம்ப தகிரியமோ ...!

Vee said...

Cut the power supply to Poes garden for 2 months. Then they will understand.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கேள்வி. துணிச்சல்தான்

தமிழ் அஞ்சல் said...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... இல்ல அவங்க அப்பனுக ஆண்டாலும் சனங்க தலைய திருகி திங்கற வேலைய மட்டுந்தான் செய்வானுக.. ஆட்சி முறை என்பதே நம்மள முட்டாளா வச்சுக்க தானு முடிவு ஆகிப்போச்சு..




கிரி said...

ஜோதிஜி உண்மையாகக் கூறினால் பதிவு தான் பெரியதே தவிர எனக்கு படிக்க சிரமமாக இல்லை. அருமையான கட்டுரை.

நீங்கள் கூறியுள்ள கருத்துகள் அனைத்துமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான். மின்சாரப்பிரச்சனைக்கு கலைஞரையே இன்னும் எத்தனை காலம் தான் கையை கட்டுவார்கள் என்று தெரியவில்லை. இதையொட்டி நானும் ஒரு கட்டுரை எழுதி நினைத்து இருந்தேன் ஆனால், நான் கூற நினைத்த பெரும்பாலானவற்றை கூறி விட்டீர்கள் இனி எதை நான் குறிப்பிடுவது என்று தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கு முற்றிலும் மோசமாக உள்ளது. ஊரில் உள்ளவர்கள் எல்லாம் நகை அணிந்து செல்லவே பயப்படுகிறார்கள். மின்சாரப்பிரச்சனை பற்றி ஏற்கனவே நீங்களே விரிவாக விளக்கி விட்டீர்கள்.

இதில் நான் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. இந்தக்கட்டுரை முதல்வருக்கு எழுதப்பட்டு இருக்கிறது (அவர் படிக்கிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்) இதில் நீங்கள் இடையிடையே வரும் நகைச்சுவை உதாரணங்களை தவிர்த்து இருக்கலாம் (வடிவேல் சம்பந்தப்பட்டவை). கட்டுரையின் வீரியத்தை இவரை குறைக்கின்றன.

பின்குறிப்பு: Refresh ஆகிக் கொண்டே இருந்த பிரச்சனை சரி ஆகி விட்டது.

வால்பையன் said...

டாஸ்மாக் மதுகடையை ஓப்பன் பண்ணது ஜெயலலிதா தான்.
கருணாநிதி தொடர்ந்தது மட்டுமே!

மறக்கும் மனிதர்கள் உள்ளவரை அரசியல் பிழைத்து கொண்டே இருக்கும் இந்தியாவில்

Unknown said...

ஜெயலலிதா போன்ற சொந்தங்களுக்கு சேர்த்துவைக்க தேவையில்லாத நபரால்தான் தமிழ்நாட்டினை மறுமலர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடியும் ஆனால் தினசரி அதிகாரிகளை பந்தாடுவதை சிறு பிள்ளை விளையாட்டைப் போல் செய்துகொண்டிருக்கும் இவரால் தமிழகம் இன்னும் மோசமான பாதைக்குத்தான் செல்லும். மிகவும் அத்தியாவசியமான தேவையான மின்சாரத்தை சரிசெய்ய போர்க்காள நடவடிக்கை எடுக்கத் தயங்குவதற்கு மக்களைப் பற்றிய யாதொரு கவலையும் படாத எனக்கு ஓட்டுப் போட்டா இப்படித்தான் அனுபவிக்கனும் என்றொரு தெனாவெட்டே காரனமாக இருக்க முடியும்.

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் இல்லாத மாற்று அரசியல் தலைவரே நமக்குத் தேவை.

Anonymous said...

"உங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை இன்று வரையிலும் படித்தவர்கள் ஒரு தலைவராகக்கூட ஏற்றுக் கொள்ள தயாராயில்லை"

ஆமாம், அந்தக் காலத்தில் படித்தவர்களில் பலர் முட்டாள்களாக இருந்தனர். அதனால்தான் அண்ணா, கலைஞர் போன்ற வாய்ச்சவுடால் பேர்வழிகளின் பேச்சுகளுக்கு மயங்கிக் கிடந்தனர்.

Unknown said...

அம்மா நீங்க படிக்கோனும்...!எங்க வாழ்க்க சிறக்கோனும்...அப்படின்னு திருப்பூரில் இருந்து ஒரு அப்பாவி சீவன் நீண்ண்ண்ண்ட கடிதம் எழுதியிருக்கு......இதுவும் குப்பைக்கு போகுமா.....? அப்படிப் போனால் வரும் தேர்ந்தலில் இருந்து நீங்கள் அரசியலுக்கு குட்பை சொல்ல வேண்டியதுதான்..!

Anonymous said...

"காமராஜரை பலமுறை பிரதமர் பதவி தேடி வந்தது"

ஆனால் தன்னம்பிக்கை குறைந்த காமராஜர், புத்திசாலி போல வேடமிடும் முட்டாள்களுக்கு அந்த பிரதமர் பதிவியை விட்டுக் கொடுத்தார்.

Anonymous said...

"கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் இல்லாத மாற்று அரசியல் தலைவரே நமக்குத் தேவை"

அந்த தலைவர் வைகோ-தான்

Ismail said...

NALLA PATHIVU

Ravichandran Somu said...

ஆட்டோ பயம் இல்லையா :)

நல்ல கட்டுரை... ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு :(((

Thoduvanam said...

அருமை ..

Unknown said...

மிகஅருமையான பதிவு!!!ஆனால்-------ஏதாவது பயனிருக்குமா???

எஸ் சம்பத் said...

அன்பார்ந்த ஜோதிஜி

எங்கள் தொழிலாளர்களில் பலர், ஓய்வூதியதாரர்களின் பலர் ஒவ்வொரு மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு கடிதமும் அம்மாவின் பார்வைக்கு போகும் என மனுச் செய்கிறார்கள். ஆனால் முதல் 3 வரியை படித்தவுடன் அது எந்த துறைக்கு என முடிவு செய்து அங்கிருந்து அனுப்பிவிடுகிறார்கள். எங்கள் துறைக்கு வரும் பல கடிதஙகளுக்கு இயலாமை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என பதில் போவதை பார்த்திருக்கிறேன்.

தங்கள் கடிதம் முதல்வர் கவனத்திற்கு செல்ல வேண்டுமென விரும்புகிறேன்

Ashwin Ji said...

அருமை ஜோதிஜி.
அம்மா கண்களில் மட்டுமல்ல, மனசிலேயும் உங்கள் கடித விவரங்கள் பதிய வேண்டும். தமிழகத்தில் வெளிச்சம் பரவ பிரார்த்திப்போம்.

Unknown said...

hmmm...

Unknown said...

kindly delete vadivelu examples, super letter, thamiz nattu makkalin ulla kumaral

Anonymous said...

வினவு கும்பலுக்கு எங்கிருந்து பணம் வருகிறது தமிழ்மனியின் பதிவு
http://thamizmani.blogspot.in/2011/02/blog-post.html

Unknown said...

Arumai...

ஜோதிஜி said...

பகிர்ந்து கொண்ட தைரியமான நண்பர்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துககளும்.

இந்த தலைப்பு நிறைய பேர்களை சென்றடைந்தது. ஆனால் பயத்தில் எவரும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.

ஒரு முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார்.

இந்த இடுகை பகிர்வதால் நான் கைது செய்யப்படலாம். ஆனால் இதில் சொல்லப்பட்ட அத்தனை விசயங்களும் உண்மை என்று எழுதியிருந்தார்.

சிரிப்பு வந்து விட்டது.

நாம் எந்த அளவுக்கு தற்போதைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை அநத நண்பரின் உண்மையான அக்கறையான வார்த்தைகள் எனக்கு புரிந்து கொள்ள உதவியது.

எம்.ஞானசேகரன் said...

அலட்சியம் என்பதுதானே இந்த அரசாங்கத்தின் அதிசயமான செயல்பாடு. எனவே இதையும் அலட்சியமாகத்தான் எடுத்துக்கொள்வார்கள். எனவே பயப்படத்தேவையில்லை!

அம்பாள்முத்து said...

yappa kalakkitteenka thalaivare neelama irunthaalum padikka padikka neelam theriyavillai duraimuruganalirunthu kalaignar,kamarajar,M.G.R,endru example sonna vitham super. thairiyamana pathivu - balan kidaithal santhosame. ambalmuthu

chandrasekaran said...

மிகத்தெளிவாக, மிகச் சாதரணமாக உண்மைகளை எழுதியுள்ளீர்கள் . செயல் புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் தமிழ் நாடு விமோச்சனம் பெறும் அல்லது நாடு படுபாதளத்தில் விழும் .

குரு said...

அவசரக்குடுக்கை போல நீளமா ஒரு பதிவு போடறது. பார்த்தியா நான் என்னமா எழுதிட்டேன்னு காலரை தூக்கிவிட்டுக்கிறது. தற்சமயம் இருக்கும் இணையப் பன்னாடைகளின் இதே போக்கைத்தான் ஆராய்ந்தறியாமல் நீங்களும் செய்திருக்கீங்க. கடந்த கால கருணாநிதியின் ஊழல் ஆட்சியைவிட தற்சமயம் ஜெயலலிதாவின் ஆட்சி 100 மடங்கு மேல் என்பது திமுக கண்ணாடி போட்டுக்கொண்டு உலவும் சொல்ப புத்திசாலிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எப்போதோ நீங்கள் புலம்பிய அந்த மின்சாரப்பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்பட்டு தமிழகம் ஒரு நிரந்தரத்தீர்வை நாடியுள்ளது. இதற்காக சில காலம் அந்த அவத்தைகளைப் பட்டுத்தான் தீரவேண்டும். உங்களின் இன்ன பிற பட்டியலும் அதே ரகம் தான். நல்லா இருங்க.

ஜோதிஜி said...

குரு உண்மையிலேயே ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட உருப்படியான திட்டங்கள் ஏதாவது இருந்தால் கொஞ்சம் பட்டியலிட முடியுமா? தெரிந்து கொள்ளத்தான்.

Unknown said...

super 100% true