Tuesday, November 29, 2011

அந்நியன் தரும் அல்வா துண்டுகள்


இந்த கட்டுரை 4 தமிழ் மீடியா தளத்தில் சிறப்பு கட்டுரையாக இரண்டு பகுதியாக வெளியிடப்பட்டது.

" பா.ஜ.க போன்ற மதவாத கட்சி வேண்டாம்.  எங்களுக்கு காந்திஜி சொன்ன மிதவாதமாக இருக்கும் காங்கிரஸே போதுமானது "

பிடிவாதமாக இரண்டாவது முறையாகவும் காங்கிரஸை அரியணையில் அமர வைத்த இந்தியர்களின் தலையில் விழுந்து கொண்டிருப்பது அடியல்ல. இடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

‘பொருளாதார புலி’ மன்மோகன் சிங்கின் சமீப பரிசு சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் 51 சதவிகித முதலீடு. 

அதாவது சில்லறை வணிகத்தில் (multi brand retail) அன்னிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லறை வணிகத்தில் (single brand retail) அன்னிய முதலீட்டை 100 சதவீதமும் இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது 

சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் விவசாய அமைச்சருமான சரத்பவாரை ஒரு அறை தான் கொடுத்தார். ஆனால் மன்மோகன் சிங் 120 கோடி இந்தியர்களின் வயிற்றில் ஒரே அடியாக அடித்துள்ளார்.


மன்மோகன் சிங் பல விதங்களிலும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கிறார். எவருக்கும் புரிந்தபாடில்லை.

“எங்கம்மா தெருவோர காய்கறி கடை வச்சு தான் என்னை படிக்க வச்சாங்க” 

இனி எந்த நடுத்தர வர்க்க மாணவனும் சொல்ல முடியாது.  காரணம் இனிமேல் தெருவோர கடைகள் இருந்தால் தானே பிரச்சனை?

மொத்தமாக ஒரு ஊருக்கு ஒரு வால்மார்ட், கே மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்து விட்டால் நமக்கு பிழைக்க வழி பிறந்து விடாதா? 

ஏன் வேகாத வெயிலிலும், மழையிலும் துன்பப்பட வேண்டும்?

வேலை தேடுபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆத்மார்த்தமாக உதவி செய்ய இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் எதற்காகவும் அலைய வேண்டிய அவசியமிருக்காது. கருவேப்பிலையை கூட குளு குளு வசதி கடையில் போய் வாங்கி வரலாம். 

காரணம் நம் பொருளாதார மேதைகள் இந்த நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் தான் வாங்க வேண்டும் என்று சொல்லி இந்தியர்களின் வாயில் பாலூற்றி இருக்கிறார்கள்?

பன்னாட்டு நிறுவனங்கள உள்ளே வந்து விட்டால் நாட்டின் அந்நிய செலவாணி நிரம்பி வழியும்.  என்னவொன்று நாளுக்கு நாள் உள்ளூரில் பஞ்சம் பிழைக்க முடியாமல் நடுத்தர வர்க்கமும் அவதிபட, களவாணிகளும் பெருகிக் கொண்டே தான் இருப்பார்கள்.

இதைத்தான் நமது பொருளாதார மேதைகள் இப்போது செய்துள்ளார்கள்.

இந்த சில்லறை வியாபாரத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 20 கோடி பேர்கள். இதன் மூலம் 25 லட்சம் கோடி பணம் புழங்குகின்றது. இவர்களின் அன்றாடங்காய்ச்சி முதல் அகாயசூரர்கள் வரைக்கும் உண்டு. தெருமுனையில் வண்டியில் வந்து விற்பவர் முதல் அண்ணாச்சி நடத்தும் மொத்த கொள்முதல் வரைக்கும் உண்டு. 

இதில் தான் இப்போது காங்கிரஸ் அரசாங்கம் கை வைத்துள்ளது. கைக்கு ஓட்டுப் போட்டவர்கள் கண்ணீர் விட்டு கதற முடியாது. 

2014 வரைக்கும் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஜனதா அரசாங்கம் இருந்த போது விரட்டியத்த பெப்ஸி கோக் நிறுவனங்களை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றவர்களும் நம் தலைவர்களே.  ஆனால் இவர்கள் தான் இப்போது ஆளுக்கொரு பக்கமாய் நின்றுகொண்டு முதலைக் கண்ணீர் விடுகிறார்கள். இப்போதல்ல எப்போதுமே இந்தியாவில் ஒன்றல்ல? ஓராயிரம் பூதங்கள் உண்டு. ஆனால் மன்மோகன் பதவிக்கு வந்ததும் பன்னாட்டு பூதங்கள் அத்தனைக்கும் வலிமையான பலம் கிடைக்க ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே வந்து தங்கள் சேவைகளை இந்தியாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னால் பெயரளவில் பெப்ஸி,கோக் குளிர்பானங்கள் இருந்தது.  ஆனால் இன்றோ இதுவொரு கௌரவம் சார்ந்த விசயம் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.  தொடக்கத்தில் மூன்று ரூபாய்க்கு கடையில் கிடைத்தது.  அவ்வாறு விற்றால் கடைக்காரருக்கு 80 பைசா கிடைக்கும்.  ஆனால் இன்று அதன் விலை 12 ரூபாய். 

3000 அடிக்கு மேலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்ட நம்முடைய நிலத்தடி நீரை எடுத்து ஜாலக்கு வித்தை சேர்த்து இன்று நாம் 12 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  விளம்பரங்கள் செய்யும் மாயவித்தைகளால் நாமும் மதிமயங்கி நாகரிக மனிதராக நம்மை காட்டிக்கொண்டிருக்கிறோம். 

எல்லா வியாபாரிகளும் லாபத்தை நோக்கி தானே ஓடுவார்கள்?

இப்போது தமிழ்நாட்டில் தயாராகும் ஒரு சிமெண்ட் மூட்டை (50 கிலோ) யின் விலை ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.  ஆனால் இதன் லாபத்தோடு கூடிய அடிப்படை விலையென்பது இதில் பாதிக்கு பாதி.  கடந்த முறை திமுக அரசாங்கம் விலை குறைப்பை வலியுறுத்திய போதும் எவரும் குறைக்கத் தயாராய் இல்லை என்பது தான் இதில் மிகப் பெரிய ஆச்சரியம்.  அடுத்த ஜெ அரசாங்கமும் வந்து விட்டது.  ஆனால் அதே விலை.  காரணம் அரசியல்வாதிகள் போகும் கட்டிங் என்றுமே நிரந்தரம்.

இதே சிமெண்ட் விலை பக்கத்து மாநிலத்தில் வேறொரு விலை. அங்கிருந்து இங்கே கொண்டு வர முடியாத அளவுக்கு சிண்டிகேட் வைத்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்குமதி சிமெண்ட் என்பது இன்னமும் மலிவானது.  யாருக்கு பாதிப்பு?.  

விலை உயர்வால் கதறியழுவது திருவாளர் பொதுஜனமே.

இது சிமெண்ட் துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலுமே இது போன்று இந்திய தொழிலதிபர்கள் அவரவர்களுக்கு வசதிப்படி சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப் போகும் சிண்டிகேட் என்பது இவர்களின் டவுசர் கழன்று போய்விடும் அளவுக்கு இருப்பது தானே முறையாகும். அது தான் இனிமேல் நடக்கப் போகின்றது. இந்திய தொழில் அதிபர்களுக்கே சவாலாக இருந்தால் சாதாரண பொதுஜனத்தின் பாடு?

பன்னாட்டு நிறுவனங்கள் அதிலும் சற்று வித்யாசனமானவர்கள். 

லாபத்தை போலவே லாபத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்களையம் ஒழித்துக் கட்டுவது. 

இன்று தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த காளிமார்க், டொரினோ போன்ற உள்நாட்டு குளிர்பான தயாரிப்புகள் ஏறக்குறைய இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் பெப்ஸியும், கோக்கும்,  இவர்கள் கொடுக்கும் குளிர்சாதன பெட்டி தானே நம்மை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியதோடு மற்றொரு காரியத்தையும் தவறாமல் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளூர் குளிர்பான பாட்டில்களையும் கைப்பற்றி உடைத்து நொறுக்கிக் கொண்டே வர இன்று பாட்டில் இல்லாத உள்ளூர் நிறுவனங்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இத்தனை நாளும் மறைமுகமாக பலவகையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இனி முன்வாசல் வழியாகவே உள்ளே வரலாம் என்று மன்மோகன் சிங்கிள் மேன் ஆர்மியாக செயல்படுத்தி சாதித்திருக்கிறார்.

"உலகத்தோடு ஒத்து வாழ்" என்ற முதுமொழியை கடைபிடிப்பதில் மன் மோகன் சிங்கிற்கு முதல் தகுதியுண்டு.  காரணம் இந்திய பிரச்சனைகளை தீர்ப்பதற்கே வருடத்தில் பாதி நாட்கள் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றிக்  கொண்டிருக்கிறார்.

 பறந்து பறந்து தாக்குவதை படத்தில் தான் பார்த்துருப்பீங்க.  நம்ம பிரதமரும் கூட அப்படித்தான்.  இந்தியப் பிரச்சனைகளையே விமானத்தில் தான் பேட்டியாக கொடுத்து விட்டு அடுத்த நாட்டுக்கு பறந்து போய்விடுகிறார்.

இவர் மூளையில் உதித்த ஒவ்வொரு கொள்கைகளும் எந்த இந்தியனும் மறக்க கூடாத ஒன்றாகும்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டியதில்லை.  15 நாளைக்கு ஒரு முறை தங்கள் விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் விளைவாக காங்கிரஸ் முதன் முறையாக பதவிக்கு வந்தது முதல் இன்று வரைக்கும் பெட்ரோல் விலை நூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது.


எதிர்கால வளமான இந்தியாவிற்கு மின்சாரம் அவசியமாகும். எனவே கூடங்குளம் திட்டம் இந்தியாவிற்கு தேவை. ஆனால் இதற்கு தேவைப்படும் தரமான யுரேனியம் எளிதில் கிடைக்கும் கனடாவை விட்டு அமெரிக்கா மூலம் பெறுவதே எப்போதும் சிறப்பானதாகும். தேவைப்படும் யுரேனியமும் ஒரே சமயத்தில் அமெரிக்கா கொடுக்காது.  அவ்வப்போது நடைபெறும் திட்ட செயலாக்கத்தின்படி வழங்கப்படும். எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு.  ஆனால் நிர்வாக கட்டுப்பாடு எப்போதும் அமெரிக்காவின் கைகளில் இருக்கும். அமெரிக்காவுக்கு திடீரென்று சந்தேகம் வந்தால் எவர் வேண்டுமானாலும் எந்த அனுமதியின்றி இங்கே வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.  சந்தேகம் என்றால் அப்துல்கலாமை தேட மாட்டார்கள். இழுத்து மூடிவிட்டு போய்க்கிட்டே இருப்பார்கள்.

முன்பேர சந்தைக்கு அனுமதி (ஆன் லைன் வர்த்தகம்) கொடுத்தன் விளைவாக நாட்டில் உள்ள அடிப்படையான அத்தனை பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி விலைவாசி உச்சத்தில் போய்விட்டது.  குறிப்பாக இந்த முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) கொடுத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 23 நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது. 


இந்த நிறுவனங்கள் அதிகளவில் தங்கம், வெள்ளி போன்ற சந்தையிலும் அடுத்தபடியாக விவசாயம் சார்ந்த விளைபொருட்களிலும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்கும் இந்த நிறுவனங்களின் செயல்பாடு 99 லட்சத்து 16 ஆயிரத்து 52 கோடி ரூபாய். ஏறக்குறைய 100 லட்சம் கோடியை அட்டகாசமாக கடந்துள்ளது.  பாடுபட்டு உழைப்பவன் ஒரு பக்கம்.  ஆனால் ஏதோவொரு மூலையில் குளிர்சாதன அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நோகாமல் நோம்பி கொண்டாடுபவர்களை உருவாக்கி விட்டவரும் நம்முடைய பொருளாதாரப் புலியே. 

ஆன் லைன் வர்த்தகத்தை அனுமதித்ததே போதே இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. 

உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு இங்கே கொட்டாம்பட்டியில் விளையும் பயிறுக்கு விலை நிர்ணயம் செய்யும் கொடுமை இந்த ஆன் லைன் யுக பேரத்தில் நடந்து கொண்டிருப்பதால் விளைவித்தவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் விரலை சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு வருடத்திலும் எந்த துறையில் பற்றாக்குறை வரும் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு பேரம் மூலம் விலையை நிர்ணயம் செய்யும் போது எல்லாமே தலைகீழாகப் போய்விடுகின்றது. 

இந்த யுக பேரங்களுக்கு பின்னால் இருக்கும் அத்தனை பேர்களும் வெளிநாட்டு முதலீட்டார்களே.  

அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள். எவருக்கோ லாபமாக கடல் கடக்கும் 

இந்த லாபங்கள் நாட்டில் விலைவாசியாக மாறி சாதாரண மனிதன் தலையில் வந்து விழுகின்றது.

நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரைக்கும் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய முதலீடுத் தொகை 2,550 கோடி டாலர். (1 லட்சத்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்)  கடந்த 2010 ஆம் ஆண்டை விட 41 சதவிகிதம் அதிகம். ஆனாலும் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியை நிறுத்தமுடியவில்லை.  காரணம் நவம்பர் 22 அன்று வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்கன் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 52.30.

ஏனிந்த குளறுபடி?

இன்றைய சூழ்நிலையில் இந்தியா வைத்துள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 31,960 கோடி டாலர் (15 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்) 

நான் வளர்கிறேனே அம்மா என்பதாக நம் நாட்டின் கடன் தொகையும் மாதத்திற்கு மாதம் எகிறிக் கொண்டேயிருகிறது.

அமெரிக்காவில் ஓபாமா பதவியேற்றதும் வீட்டு வசதி கடனில் சிக்கிய வங்கிகள் பட்டபாடுகள் உலகம் முழுக்க எதிரொலித்தது. 

அமெரிக்க வங்கிகளுக்கான தர வரிசை குறியீட்டை மாற்றியதும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தும்மலும் சளியும் வந்த கதை நம் அணைவருக்கும் தெரிந்தது தானே.  அதைப்போலவே இந்தியாவிலும் நடந்தது. 

ஆனால் எத்தனை பேர்களுக்கு தெரிந்துருக்கும்?. 

இயல்பாகவே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் அணைவருக்கும் தெரிந்த ஒன்று.  ஆனால் வங்கியில் போடப்படும் பணமும் கிடைக்கும் சொற்ப வட்டி என்றாலும் இன்று வரையிலும் இந்தியர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மேல் உள்ள மோகம் குறைந்தபாடில்லை. 

ஆனால் வங்கிகளின் செயல்பாடுகள் அத்தனையும் வருடத்திற்கு வருடம் வராக்கடனாகவே போய்க் கொண்டிருக்கிறது.

உலகளவில் இந்தியாவில் உள்ள வங்கியின் தரமென்பது ‘எத்தகு இடர்பாடுகளையும் தாண்டி வரக்கூடியது’ என்கிற நிலையில் சர்வதேச சமூகம் கணக்கில் வைத்திருந்தது. 

2004 ஆம் ஆண்டு மூடிஸ் நிறுவனம் பி.ஏ.ஏ 3 என்ற தரக்குறியீட்டை வழங்கியது. ஆனால் வருடந்தோறும் வசூலிக்க முடியாத கடன்களின் அளவை வைத்து அண்மையில் இந்த குறியீட்டை ஒரு படி குறைத்து ‘இடர்பாடு காண வாய்ப்புள்ளதாக’ மாற்றியுள்ளது. சென்ற செப்டம்பர் வரைக்கும் வசூலிக்க முடியாத கடன் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தொகையென்பது 1.07 லட்சம் கோடி.

நம்முடைய தலைவர்கள் சொல்லும் மற்றொரு கருத்தையும் இப்போது எடுத்துக் கொள்வோம். 

உற்பத்தி அளவுக்கும் நம்முடைய தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.  பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் இரண்டு வகையில் இந்தியாவிற்கு நல்லது.  

ஒன்று இந்திய பண் மதிப்பின் நிலை ஸ்திரமாக இருக்கும். 

அதே சமயம் இந்திய நுகர்வோர் சந்தையில் பணப்புழக்கம் இன்னும் அதிகமாகும். இதற்கு மேலாக தேவைப்படும் பொருட்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கே வந்து சேரும் என்பதே. 


ஆனால் ஒரு கிராமத்து விவசாயி தனக்கு அருகே உள்ள சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் லாபமோ நட்டமோ என்று நடையைக் கட்டி விட்டு வந்து விடலாம்.  ஆனால் நிறுவன பாங்கில் செயல்படப் போகும் பன்னாட்டு சட்டதிட்டங்கள் எத்தனை விவசாய சிந்தனைகளை மாற்ற முடியும்?

சில்லறை வணிகமென்பது அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல.  கிராமத்து மக்களின் நலவாழ்வு என்று தொடங்கி, நாட்டின் உணவு பாதுகாப்பு வரைக்கும் வந்து நிற்கின்றது.  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலாச்சார பாதுகாப்பு முதல் அந்தந்த ஊர் அமைதி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கக்கூடியது. இயல்பாகவே இந்திய கிராம மக்கள் அமைதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இது போன்ற அடிப்படை கிராமங்களின் மேல் கையை வைத்து விட்டால் வேறென்ன வேண்டும். 

தொடக்கத்தில் 30 சதவிகிதம் வாங்க வேண்டும் என்று உத்திரவு போட்டுள்ள அரசாங்கத்தின் காற்றில் பறக்கும்.  காரணம் இங்குள்ள விலையை விட சீனப் பொருட்கள் குவியத் தொடங்கும். 

வேறென்ன வேண்டும்? 

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் பருத்தி விவசாயத்தை ஒழித்துக் கட்டியதைப் போலவே இப்போது சில்லறை வணிகத்தின் மூலம் இந்திய சமூக கட்டமைப்பை செல்லறிக்கப் போகின்றார்கள்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொன்ன காந்தி தாத்தா சொன்ன வாசகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எட்டவில்லை போதும். ஆனால் இவர்களின் நோக்கம் அத்தனையும் கிராமப் பொருளாதரத்தை அழிப்பதிலே குறியாகவே இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம் தான் இப்போது முடிவெடுத்துள்ள அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி. 

கிராமப்புறங்களும் விவசாயமும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.  மாற்றுப் பொருளாதார சிந்தனைகளைப் பற்றி செயல்படுத்த வேண்டாம்.  குறைந்தபட்சம் அதை யோசிக்கக்கூட நம் தலைவர்களுக்கு மனமில்லை.  கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய நடுத்தரவர்ககத்தினைப் போலவே ஏறக்குறைய இந்தியாவும் இப்போதுள்ள சூழ்நிலையில் இருக்கிறது. 

பொருளாதார கொள்கைகளை விவசாயம் சார்ந்து மாற்றியமைக்காத வரை இந்தியாவால் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீள்வது சாத்தியமேயில்லை.


இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க கொள்கைகளை தீர்மானிப்பவர்கள் கார்ப்ரேட் கணவான்களே.  இது பணம் படைத்தவர்களுக்கான உலகம். உண்பது, குடிப்பது முதல் அணியும் உடைகள் வரைக்கும் எவரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகின்றது. 

அதிலும் இந்திய அரசியல் என்பது அடிவருடிகளின் உலகமாக இருப்பதால் வெற்றிகரமாக இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற தகுதியை நான்காவது ஆண்டாக முகேஷ் அம்பானி (2,260 கோடி டாலர்) யும், இரண்டாவது இடத்தில் இரும்பு மனிதர் ( என்ன பட்டம்டா சாமி?) லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) மூன்றாவது இடத்தில் அசீம் ப்ரேம்ஜி (1,300 கோடி டாலர்) பெற்றுள்ளனர்.

இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்.  

நம்முடைய நிதியமைச்சர் பிரணாப் இதைப் பற்றி தெளிவாகவே சொல்லியுள்ளார். 

“எந்த அரசாங்கமும் தொழில் அதிபர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் “ 

ஆனால் இவர்களைப் போன்ற இந்தியாவில் உள்ள கார்ப்ரேட் கணவான்கள் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன்களைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் வாயே திறப்பதில்லை. உலகில் தற்போதும் பெட்ரோல் முதலான பல பொருட்களுக்கு டாலர் அடிப்படையிலான வியாபாரமே நடந்து வருவதால், இந்தியா தன்னுடைய டாலர் கையிருப்பைக் குறைக்கும்பட்சத்தில், வரும் காலத்தில் இந்தியாவில் எரிபொருள் முதலான வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறும். இது இந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக சிதைக்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்த பொருளாதார கொள்கையினை சீரமைக்காமல் இந்தச் சரிவிலிருந்து இந்தியா மீள்வது கடினம்.  நம்மை விட லஞ்சம் ஊழல் எண்ணிக்கையில் 86 நாட்கள் முன்ணணியில் இருக்கிறார்கள். 

சர்வதேச நிறுவனம் ஒன்ற கணக்கெடுத்துள்ளது.  

இந்தியா 87வது இடத்தில் உள்ளதாம். அந்தஅளவுக்கு சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்க.

நடப்பு (2011 - 12) நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரைக்கும் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 3 லட்சம் கோடி. 

உங்களுக்கு வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்க. 


அதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக உள்ளே வரப்போகிறார்களே?  

நமக்கு கூட்டிப் பெருக்குற வேலை கூட கிடைக்காத என்ன? 

நம்முடைய பொருளாதார மேதைகளின் கூட்டல் கணக்கில் கடைசியாக நமக்கு கிடைக்கப் போவது இந்த பெருக்கிற வேலை தானே?. 

சற்று முன் கிடைத்த செய்தி 

எக்காரணம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். 


கடைசி காலத்தில் இவருக்கு பிடித்துள்ள அமெரிக்கா பைத்தியத்தை எந்த மாரியத்தா கோவிலில் கொண்டு போய் குலையடித்து திருத்த முடியம்?


கவலைவிடுங்க ஸ்வீட் எடுங்க.  கொண்டாடுங்க.

அடுத்த ஆட்சி வரும்.

இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பிக்கை வைப்போம்.  

26 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .

வவ்வால் said...

ஜோதிஜி,

வணக்கம்,

//ஆனால் ஒரு கிராமத்து விவசாயி தனக்கு அருகே உள்ள சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் லாபமோ நட்டமோ என்று நடையைக் கட்டி விட்டு வந்து விடலாம். ஆனால் நிறுவன பாங்கில் செயல்படப் போகும் பன்னாட்டு சட்டதிட்டங்கள் எத்தனை விவசாய சிந்தனைகளை மாற்ற முடியும்?

சில்லறை வணிகமென்பது அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. கிராமத்து மக்களின் நலவாழ்வு என்று தொடங்கி, நாட்டின் உணவு பாதுகாப்பு வரைக்கும் வந்து நிற்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலாச்சார பாதுகாப்பு முதல் அந்தந்த ஊர் அமைதி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கக்கூடியது. இயல்பாகவே இந்திய கிராம மக்கள் அமைதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இது போன்ற அடிப்படை கிராமங்களின் மேல் கையை வைத்து விட்டால் வேறென்ன வேண்டும். //

இது தான் கட்டமைக்கப்பட்ட சித்தாந்த பொய் என்பதா?

விவசாயி சந்தையில் விற்கிறானா, அப்படி எனில் உழவர் சந்தையில் கூட்டம் அள்ள வேண்டுமே?

எந்த விவசாயியும் ,கத்தரிக்கா, வெண்டைக்காய், சுரை,பூசனை, தக்காளி, வெங்காயம், மிளகாய், கேரட், பீரட்ரூட், கோஸ் என எல்லாவற்றையும் பயிரிடுவதில்லையே, ஒரு ஏக்கரில் தக்காளி மட்டுமே போடுவான் என்றால் அதெல்லாம் சந்தையில் விற்று விடுவாரா ஒரு சில மணியில், அவர்கள் தங்கள் பொருட்களை கமிஷண் மண்டிகளிடமே விற்கிறார்கள், ஏஜண்கள் வைப்பது தான் விலை. தக்காளி கிலோ 50 காசுக்கு கூட விலைப்போகாமல் ரோட்டில் கொட்டி செல்வார்கள் ஒட்டன் சத்திரம் பகுதிகளில்.

நீங்கள் விவசாயம் ச்செய்து, விற்பனை செய்ய போய் இருக்கிறீர்களா? நான் செய்துப்பார்த்து இருக்கேன். பைசா தேறாதறப்படி அடித்தவர்கள் எல்லாம் அன்னியர்களா, எல்லாம் நம்ம ஊர் அண்ணாச்சிகள் தான்!

இப்போ வியாபாரிகள்,கமிஷண் ஏஜண்ட்கள் கையில் சிக்கி விவசாயி விழிப்பிதூங்கிறான்.முறைப்படுத்தப்பட்ட சில்லரை விற்பனை, நேரடி கொள்முதல், ஒப்பந்த விவசாயம் என மாற்றம் வந்தால் விவசாயிக்கு கடன் சுமையாவாது குறையும்.

நம்ம ஊர் வியாபாரிகளே செய்திருக்கலாம், செய்யலை, இப்போ அன்னியர்கள் வராங்க எதாவது போட்டி வந்தா தான் விடிவு வரும் போல.

வலிப்போக்கன் said...

இந்தா, இன்னொருத்தறு Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்குது சொல்லுறாருங்க!

bandhu said...

வவ்வால் சொன்னது மிக சரி. நம்மிடம் அடிப்படையாக பிரச்சனைகள் உள்ளன. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை சரி செய்வதற்கு இந்த பெரிய நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொள்வதற்கு சமம்!

துளசி கோபால் said...

bandhu சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு.

Unknown said...

nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com

ஆனந்த் said...

//அன்னியர்கள் வராங்க எதாவது போட்டி வந்தா தான் விடிவு வரும் போல.

உள்ளூர் குளிர்பானங்கள் நிலையை யோசியுங்கள். அதே நிலை வந்துவிடும். இந்தியா முழுக்க காலனியாக மாறும் நாள் தொலைவில் இல்லை.

நல்ல கட்டுரை.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

முனைவர் இரா.குணசீலன் said...

பொருளாதார கொள்கைகளை விவசாயம் சார்ந்து மாற்றியமைக்காத வரை இந்தியாவால் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீள்வது சாத்தியமேயில்லை.


மறுக்கமுடியாத உண்மை..

சத்ரியன் said...

//கவலைவிடுங்க ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க.

அடுத்த ஆட்சி வரும்.

இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்பிக்கை வைப்போம். //

ஹா ஹா ஹா!

( சிரிக்காம வேறென்ன செய்யறதுங்க ஜோதிஜி. நாதாரிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியைக் கொடுத்தால், நம் சந்ததிகளின் வாழ்வையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

தம்முடைய வாழ்வும் - பறிபோகிறதே என்ற பிரக்ஞை சிறிதுமின்றி அரசியல்வாதி அமைச்சர்கள் சொல்படி செயல்படும் இந்திய பாதுக்காப்புத்துறையை
என்ன செய்வதோ?)

ஜோதிஜி said...

பகிர்ந்து கொண்ட அணைவருக்கும் நன்றி.

வவ்வால் நீங்கள் செந்தில் தளத்தில் போட்டிருந்த விமர்சனத்தையும் பார்த்தேன்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.

நிச்சயம் இப்போது கூட எந்த விவசாயிகளுக்கும் அவர்கள் பயிர் செய்யும் எந்த பயிர்களுக்கும் உரிய விலை கிடைப்பது இல்லை. பருத்தி, கரும்பு முதல் அடிப்படை கத்திரிக்காய வரைக்கும். கமிஷன் மண்டி காரர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

உண்மை தான்.

ரிலையன்ஸ் இந்த துறையில் காலடி வைத்த போது மனப்பூர்வமாக வரவேற்றேன். குறிப்பாக செங்கல்பட்டு பகுதியில் ஒரு கொள்முதல் செய்யும் ஒரு அலுவலகம் திறக்கப்படும். சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் இடத்திலே சென்று வாங்கப்படும். அவர்களின் அலைச்சல் மிச்சம் என்று ஏதோ சொன்னார்கள்.

தமிழ்நாடு முழுக்க இதே போல இருப்பார்கள் என்று தான் நினைத்தேன்.

ஆனால் அவர்கள் கடை காத்தாடுது. 80 சதவிகித பொருட்கள் பன்னாட்டு நிறுவன தயாரிப்பு. குறிப்பாக சாதாரண மக்களுக்கு தங்கள் வாழ்க்கைக்கு தேவையில்லாத அழகு சாதன பொருட்களும் தான் கடை முழுக்க அலங்கரிக்கின்றது.

இதைப்பற்றி ரிலையன்ஸ் தரமே நிரந்தரம் என்றொரு பதிவில் கூட போட்டுருககின்றேன்.

செந்தில் கூட கக்கூஸ் பிரச்சனையைப் பற்றி சொல்லி உள்ளார். எந்த ரிலையன்ஸ் கடையிலும் இந்த கக்கூஸ் சமாச்சாரம் இல்லை. நாம் வாங்குவதைப் பொறுத்து தான் மரியாதை. எதுவும் பேசவே முடியாது.

ஆனால் ரிலையன்ஸ் கோதுமை மாவு, மற்றும் ரிலையன்ஸ் டீத்தூள் மட்டும் எவராலும் கொடுக்க முடியாத தரமும் விலையும் ரிலையன்ஸ் ல் மட்டுமே உண்டு.

மற்றபடி எல்லா பொருட்களுமே தரம் என்ற பெயரில் படுபயங்கர கொள்ளை. கடை திறக்கும் போது ஒரு மாதிரி. அடுத்த வருடம் வேறு மாதிரி. இப்போது கடை முழுக்க காத்தாடிக்கொண்டிருந்தாலும் அவர்களின் கொள்கைகளில் மாறுதல் இல்லை. அது தான் நம்ம அரசாங்கம் இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் கடன் தொகையை வராக்கடன்களில் கொண்டு போய் சேர்த்து விடுதே? வேறென்ன கவலை. ஏற்கனவே ரிலையன்ஸ் செல் போன் கொடுத்து வசூலாகாமல் இருந்த 700 கோடிக்கும் மேல் ஸ்வாகா. அரசாங்க பணம். இவர்களுக்கு நட்டமில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னமும் கூட கிராமத்தில் 2 ரூபாய் கம்மி என்றால் காத்திருந்து டவுன்பஸ்ஸில் போவது தான் அதிகம்.

83 நகரங்களில் மட்டுமே வரப்போகும் பன்னாட்டு நிறுவனங்களின் கடைகள் செயல்படும். நகரத்தில் இருப்பவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் இதன் வலி தெரியும். இதன் தாக்கம் முதலில் ரியல் எஸ்டேட். அடுத்து அரசாங்கம் கொடுக்கும் தள்ளுபடி மானியம் அத்தனையும் சாமான்யன் தலையில் விழும்.

விவசாயிகளுக்கு தொடக்கத்தில் தேன் போல இருக்கும். காலப்போக்கில் விஷம் போல மாறி விடும்.

மாற்றவே முடியாது. அந்நிய முதலீடு அவசியம் தேவை என்ற போதிலும் அப்போது 50 ஏக்கர் வைத்திருப்பவன் மட்டுமே சமூக பார்வையில் விவசாயிகள் என்று பார்க்கப்படுவான். மற்றவர்கள் ஏதோவொரு நிறுவனத்தில் வைத்துள்ள இடத்தை விற்று விட்டு வேலை பார்த்துக் கொண்டு இருப்பான்.

பார்த்து கொண்டே இருங்க. விவசாயத்தைப்பற்றி எழுதிக் கொண்டு இருக்கேன். மேலும் பல விவகாரங்கள் உங்களுக்கு அப்போது புரியும்.

arul said...

miga arumayana pathivu

வவ்வால் said...

ஜோதிஜி,


//நிச்சயம் இப்போது கூட எந்த விவசாயிகளுக்கும் அவர்கள் பயிர் செய்யும் எந்த பயிர்களுக்கும் உரிய விலை கிடைப்பது இல்லை. பருத்தி, கரும்பு முதல் அடிப்படை கத்திரிக்காய வரைக்கும். கமிஷன் மண்டி காரர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

உண்மை தான்.//

ஒப்புக்கொண்டதுக்கு நன்றி! ஏன் அவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவே இல்லை இதனை ஆண்டுகளாக?

இந்த நிலை என்ன சில காலமாகவா இருக்கு, சுமார் 50-60 ஆண்டுகளாக இல்லையா ? இதுக்காக குரல் கொடுக்காதவங்க எல்லாம் வால்மார்ட் வந்தா விவசாயி அழிவான் சொல்வது சிரிப்பாக இல்லையா?

60% மக்கள் விவசாயிகள் அவங்க எக்கேடோ கெட்டாலும் கவலை இல்லை, ஒரு 1% வணிகர்கள் கெட்டுப்போய்டுவாங்கணு கூப்பாடு போட்டா நாங்க கவலைப்படணுமா?

உள்நாட்டு வியாபாரி கொள்ளையடித்தான் அவனுக்கு வெளிநாட்டில் இருந்து போட்டி வரவே புலம்புகிறான் , இப்போ புலம்பினா என்னப்பயன். கிராமத்தில போய் இத சொல்லிப்பாருங்க, சீண்டவே மாட்டாங்க.

யார் வந்தா என்ன எங்க தலைவிதி மாறவாப்போகுதுனு விரக்தியா பேசுவாங்க.

என்ப்பதிவில் கேட்டது தான், நீங்க பின்னலாடை தொழில் பின்புலம் கொண்டவர் என்பதால் உங்களைடயே நேராகக்கேட்கிறேன்.

பருத்திக்கு சரியான விலை சந்தையில் கிடைக்குதா?

பருத்தி உற்பத்தி குறைவா இருந்தாலும் ரொம்ப விலை ஏறாது, அதிகமா இருந்தா விலை குறையுது ஏன்?

காரணம் பருத்திய ஏற்றுமதி செய்ய தடை, கட்டுப்பாடு எல்லாம் இருக்கு.பருத்தி ஏற்றுமதி செய்தா உள்நாட்டு ஆலைகளூக்கு மூலப்பொருள் கிடைக்காது சொல்வாங்க. ஆனால் ஏற்றுமதி செய்தால் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும், சர்வதேச் சந்தை விலைக்கு ஏற்ப கொள்முதல் விலை அதிகரிக்கும், விவசாயிக்கும் காசு கிடைக்கும்.

ஆனா விவசாயிக்கு நாங்க குடுக்கிறது தான் விலை, எங்களுக்கு தாராளமாக பருத்தி வேண்டும்னு , ஏற்றுமதிய தடை செய்ய சொல்ராங்க முதலாளிகள்.

இப்போ எனக்கு ஜட்டி,பனியன் விலை ஏறி போச்சுனு தோனுது, காரணம் பாதி ஏற்றுமதி ஆகிறது, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகலைனா உள்நாட்டில ஜட்டி,பனியன் விலைக்கம்மிய கிடைக்கும்.

அதே போல மக்களும் எங்களுக்கு விலைக்கம்மியாக ஜட்டி வேணும் ஏற்றுமதி செய்யக்கூடாதுனு சொன்னா அரசு தடை செய்யுமா ஏற்றுமதியை, இல்லை அதை பின்னாலடை அதிபர்கள் தான் விடுவாங்களா?

பருத்தியைக்கொண்டு துணி, பின்னலாடை தயாரிக்கிறவங்க லாபம் பார்க்கும் போது , அதை விவசாயம் செய்பவன் மட்டும் தற்கொலை செய்துக்கொள்கிறானே ஏன்?

கடை வைத்து இருப்பவன் எதிர்ப்புக்காட்ட கடை அடைப்பான், ஆனால் விவசாயி எதை அடைப்பான்? அந்த துணிச்சலில் தானே எல்லாம் தைரியமாக இருக்காங்க!

சந்திர வம்சம் said...

"இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொன்ன காந்தி தாத்தா சொன்ன வாசகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எட்டவில்லை போதும். ஆனால் இவர்களின் நோக்கம் அத்தனையும் கிராமப் பொருளாதரத்தை அழிப்பதிலே குறியாகவே இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம் தான் இப்போது முடிவெடுத்துள்ள அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி."
நன்று சொன்னீ ர்கள்

rishvan said...

nambikkai thaan vaazhkkai.... thanks to share this article.... www.rishvan.com

Paleo God said...

அங்கேயும் படித்துவிட்டுக் கமெண்ட் போட்டுவிட்டேன். இங்கே வவ்வால் அவர்கள் சொல்லி இருப்பது வாயடைக்கும் உண்மை. அரசாங்கம் கைவிடும் விவசாயிகளுக்கு ஆபத்துதவிகளாக இருப்பவர்கள் தரகர்கள். இந்தக் கேடு நிலை விவசாயிக்கு வருவதற்கு அதுவே காரணம், மேலும் விவசாயிகள் மேல்தான் எவ்வளவு அலட்சியம்? இங்கே உயரத்தில் இருப்பவர் முதல் யாசகம் பெறுபவர் வரை யார் அவர்களுக்கு உணவிடுகிறார்கள்? அவனுக்கு இந்த சமூகத்தில் என்ன மதிப்பிருக்கிறது?

கட்டாய ராணுவப்பயிற்சி போல கட்டாய விவசாயப் பயிற்சி அல்லது உணவு உற்பத்தி சங்கடங்களின் குறைந்த பட்ச அறிவு அனைவருக்கும் போதிக்கப் படவேண்டும். பகல் இரவு விழித்து நீர் பாய்ச்சி பயிர் வளர்த்து வரும் அரிசியின் வழி தெரியவேண்டும். அது வெறுமனே டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் காசு குடுத்தால் கிடைக்கும் என்ற அலட்சியப் போக்கு ஒழியவேண்டும். தங்கத்துக்கும் மேலாக பாரம்பரிய உணவு / விளைச்சல் நிலம் என்பது ஆராதிக்கப்படவேண்டும், தலைமுறையைக் காக்கும் ஒரே விசயம் அதுவே.

Paleo God said...

நுகர்வோனுக்கான கடுமையான சட்டப் பாதுகாப்பில்லாத அதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த நாட்டில் இன்னும் என்னென்ன கேடுகள் காத்திருக்கிறதோ?

ஜோதிஜி said...

ஷங்கர் மிக்க நன்றி.

வவ்வால் இருங்க வர்றேன்.

நுகர்வோர் என்றால் இந்தியாவில் நுகத்தடியை சுமக்கும் மாடுகள் போலத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

ஒரு வாட்டர் பில்டர் வாங்கப் போயிருந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு (எவர்சில்வர்) 600 ரூபாய். தேவையான கொள்ளவும் இருந்தது. சிறிய பிரச்சனை. சரி செய்து விடலாம் என்று அதே கடையில் கேட்டால் மேலும் கீழும் பார்க்க எனக்கே வினோதமாக இருந்தது. சரி ஏன் காசை பார்க்க வேண்டும்? புதிதாக வாங்கி விடலாம் என்று அதே அளவுள்ள மற்றொரு வாட்டர் பில்டர் விலையைக் கேட்டால் 1600 ரூபாய் என்கிறார். காற்றில் பறக்கக்கூடிய அளவக்கு தகடு அத்தனை மெலிதாக இருக்கிறது.

காரணம் கேட்டால் அதற்கு ஒரு தயாரான பதில் வைத்திருக்கிறார். மக்கள் இப்படித்தான் விரும்புகிறார்களாம். இதே கடைக்கு பின்னால் தான் பட்டறையில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். பத்து வருடமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அவர்களின் வாழ்க்கை உயரவே இல்லை. மேலும் வாரத்தில் பாதிநாட்கள் வேலை இருக்கிறது.

இதன் முக்கிய காரணம் என்ன தெரியுமா?

வாட்டர் பில்டர் என்பது இப்போதைய சூழ்நிலையில் பலவிதமாக பிரிந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பத்து லிட்டர் வரக்கூடிய கண்ணாடி பாட்டில் போல, சுத்திகரிப்பு, சுகாதாரம் என்ற போர்வையில் இந்த சந்தை மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் கூட்டிக்கழித்துப் பார்த்தால் 600 ரூபாய்க்கு கிடைத்த தரம் வசதிகள் இல்லவே இல்லை என்பது மட்டும் நமக்கு கிடைக்கும் செய்தி.

சரி ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. பல காரணிகள் இதற்கு பின்னால் என்று பார்த்தால் தரமும் இல்லை. மொத்தத்தில் அதிக ஆசைகள், கொள்கை என்பது கொள்ளை மட்டுமே. இதுவே பன்னாட்டு நிறுவனங்கள் வரும் போது இந்த கொள்ளை நடக்கும். சற்று தாமதம் ஆகும். இதில் மற்றொரு கொடுமை. வாரத்தில் பாதிநாட்கள் வேலை செய்யும் அந்த பட்டறை மக்களுக்கு மாதத்தில் சில நாட்கள் மட்டும் வேலை கிடைக்கும்.

நிச்சயம் குழந்தைகள் படிக்கும் போது சந்தேகமாக கேட்கும் கேள்விகள் தான நீங்கள் சொன்ன டிபார்ட்மெண்டில் காசு கொடுத்தால் கிடைக்கும் என்கிற ரீதியில் அரிசி என்ற பொருள் மாறியுள்ளது.

ஜோதிஜி said...

பருத்திக்கு சரியான விலை சந்தையில் கிடைக்குதா?

இல்லை.


பருத்தி உற்பத்தி குறைவா இருந்தாலும் ரொம்ப விலை ஏறாது, அதிகமா இருந்தா விலை குறையுது ஏன்?

உங்க கேள்வியில் சற்று மாறுதல் தேவை நண்பா.

இந்த விலை உயர்வுக்கு காரணம் பதுக்கல், ஆன்லைன் வர்த்தகம், முதலாளிகள் சிண்டிகேட், சரத்பவார் சம்பாரிப்பது பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பவர்கள் வாங்கி போட்டு வைப்பது இன்னும் பல.

காரணம் பருத்திய ஏற்றுமதி செய்ய தடை, கட்டுப்பாடு எல்லாம் இருக்கு.
http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_15.html

இந்த பதிவை பார்த்து படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்க.


இப்போ எனக்கு ஜட்டி,பனியன் விலை ஏறி போச்சுனு தோனுது, காரணம் பாதி ஏற்றுமதி ஆகிறது, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகலைனா உள்நாட்டில ஜட்டி,பனியன் விலைக்கம்மிய கிடைக்கும்.


இதிலும் சற்று மாறுதல் வேண்டும்.

தமிழ்நாட்டில் நீங்க எந்த பெரிய கடைக்கு போனாலும் ஒரு சாதாரண டீ சர்ட் 150 ரூபாய்க்கு கீழே வாங்க முடியாது. ஆனால் இந்த டீ சர்ட் வெளிநாட்டு 50 ரூபாய்க்கு போய்க் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீங்களா? தொடக்கத்தில் 200 ரூபாய் கொடுத்தார்கள். படிப்படியாக கொடுத்தார்கள் குறைத்தார்கள். இதனை நம்பி கோடிக்கணக்கான ரூபாய் கொட்டி புதிய தொழிற்கூடங்களை அமைத்தவர்கள் வேறு வழியே தெரியாமல் வங்கி கடனுக்கு பயந்து நட்டத்திற்கு செய்து கொண்டு இருக்காங்க.

http://deviyar-illam.blogspot.com/2010/07/blog-post.html

இந்த பதிவுக்கு கீழே தெரியும் திருப்பூர் சம்மந்தபட்ட பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்க. சர்வதேச அரசியலை விட மோசமானது சர்வதேச வர்த்தகம்.

டாலரில் தொழில் செய்யும் அத்தனை பேர்களுக்கும் இப்போது மிஞ்சியது திருவிழாவில் கிடைக்கும் டாலர் தான்.

வாய்ப்பு இருந்தா பேசுங்க. சொல்லுங்க உங்க கருத்தை.

ஜோதிஜி said...

சந்திரவம்சம் பெயரே ரொம்ப நல்லாயிருக்கு.

வருக ரிஷ்வான்.அருள்.

வவ்வால் said...

//இந்த விலை உயர்வுக்கு காரணம் பதுக்கல், ஆன்லைன் வர்த்தகம், முதலாளிகள் சிண்டிகேட், சரத்பவார் சம்பாரிப்பது பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பவர்கள் வாங்கி போட்டு வைப்பது இன்னும் பல.

காரணம் பருத்திய ஏற்றுமதி செய்ய தடை, கட்டுப்பாடு எல்லாம் இருக்கு.
http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_15.html

இந்த பதிவை பார்த்து படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்க.//

ஜோதிஜி,

வணக்கம்,

உங்கப்பதிவை படிச்சேன் அது நூல் தட்டுப்பாட்டை தானே பேசுது, பருத்தி விவசாயிக்கு விலை கிடைப்பதாக இல்லையே அதில்.

திரும்ப திரும்ப ஆன்லைன் வர்த்தகம்னே சொல்லிக்கிட்டு இருந்தா சரியா, ஆன் லைன் வர்த்தம் இந்தியாவுக்கு வந்து ஒரு 5 வருடங்கள் இருக்குமா? அப்போ அதுக்கு முன்ன பருத்தி விவசாயம் நடக்கலையா ,நட்டம் இல்லையா? அதுக்கு யாரு காரணம்? எல்லாம் வியாபாரிகள், முதலாளிகள் கூட்டு தானே ?

இணையத்தில தேடினா எத்தனைப்பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டாங்கனு தெரியும் , பார்க்க விருப்பம் இல்லையா?ஆனால் நூற்பாலைகள், துணி ஆலைகள் வைத்திருப்போர் என்ன அப்படியா? அவர்களுக்கும் கஷ்டம் இருக்கு, ஆனால் அது பருத்தி விவசாயி அளவுக்கு கஷ்டம் இல்லையே?

நூற்பாலைகள் துணி ஆலைகளை வஞ்சிப்பதாக மட்டும் வருத்தப்படுறிங்க? எல்லாருமா சேர்ந்த்து விவசாயியை வஞ்சிப்பதை மறைத்து விடுகிறீர்கள்.

ஆலை அதிபர்களுக்கு ஏற்றுமதிக்கோ, அல்லது எங்க ,என்ன விலைக்கு விற்கணும் என்றோ தடைப்போட கூடாது, ஆனால் பருத்திப்போட்டவன் அவன் பொருளை எங்கே விற்கணும், யாருக்கு விற்கணும், என்ன விலைக்கு விற்கணும் என முடிவெடுக்க உரிமை இல்லை!

பின்னலாடைக்கு பருத்தி தரும் விவசாயி கோவணம் தான் கட்டி இருக்கான்? அதையும் உருவ எல்லாரும் திட்டம் போடுவது தான் தொழில் வளர்ச்சி!

தொழிலதிபர் நலன் பற்றி கவலைப்படுவது தானே அதிகம் செய்றிங்க, அப்புறம் என்ன மன்மோகனும் அதை தானே செய்யறார் என்ன அவர் பெரும் தொழிலதிபர்களுக்கு வாட்டமாக சட்டம் போடுகிறார், அது தான் உங்க கவலையோ?

to be continued...

வவ்வால் said...

//இதிலும் சற்று மாறுதல் வேண்டும்.

தமிழ்நாட்டில் நீங்க எந்த பெரிய கடைக்கு போனாலும் ஒரு சாதாரண டீ சர்ட் 150 ரூபாய்க்கு கீழே வாங்க முடியாது. ஆனால் இந்த டீ சர்ட் வெளிநாட்டு 50 ரூபாய்க்கு போய்க் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீங்களா? தொடக்கத்தில் 200 ரூபாய் கொடுத்தார்கள். படிப்படியாக கொடுத்தார்கள் குறைத்தார்கள். இதனை நம்பி கோடிக்கணக்கான ரூபாய் கொட்டி புதிய தொழிற்கூடங்களை அமைத்தவர்கள் வேறு வழியே தெரியாமல் வங்கி கடனுக்கு பயந்து நட்டத்திற்கு செய்து கொண்டு இருக்காங்க.//


தமிழ்நாட்டில இருந்து அடிமாட்டு விலைக்கு மூலப்பொருள் வாங்கி , இங்கே அதிக விலைக்கு விற்பது, ஆனால் ஏற்றுமதிக்கு குறைவான விலைக்கு விற்பதும் ஏன், அரசாங்கம் சொல்லிச்சா அப்படி, இல்லை யார் கத்தியை கழுத்தில வச்சு மிரட்டினாங்க?

வியாபார தொலை நோக்கு இல்லாமல் ஒப்பந்தம் போட்டது , பின்னர் கடன் வாங்கிட்டோமேனு சொல்வது சரியா?

நீங்க அங்கே கம்மி விலைக்கு விற்பதற்கு இங்கே விலைக்குறைத்து விற்கலாமே, பெரிய வெளிநாட்டு ஆர்டர்னு வாயப்பிளந்துக்கிட்டு போனீர்கள்,தானே.

50 ரூபாய்க்கு விற்றாலும் அதிலும் லாபம் பார்க்க மூலப்பொருளை மலிவாக வாங்க , விவசாயினை நசுக்குவார்கள், உற்பத்தி செய்ய தொழிலாளர்களை குறைவான ஊதியத்தில் பல மணி நேரம் வேலை வாங்குவார்கள். ஆனால் ஒரு போதும் தங்கள் வியாபார உத்தியை சீர் செய்துக்கொள்ள மாட்டார்கள்.

மலிவான மனித ஆற்றலை வாங்க என்றே இப்போது பீகார், உ.பி, ஆந்திரா,ஒரிசா தொழிலாளர்களை திருப்பூர் இறக்குமதி செய்கிறதே, ஏன் தமிழன் வேலை வாய்ப்பு பாதிக்குதுனு கவலைப்பட மாட்டார்களா தொழிலதிபர்கள்?

ஒரு ஆர்டரை கைப்பற்ற போட்டி போட்டு விலைக்குறைப்பது நம்ம ஆட்கள் தான், காரணம் பல்க் ஆ ஆர்டர் வருதேனு , ஏன் இந்தியாவில எல்லாருக்கும் வாங்க கூடிய விலையில் துணிகள் கிடைக்குதா இல்லையே , அங்கே வெளிநாட்டுக்காரன்கிட்டே செய்துக்கொள்கிற சமரசத்தை நம்ம நாட்டு மக்களுடன் செய்து கொண்டு மலிவா விற்கலாமே.அதை செய்ய மனம் வராது தொழிலதிபர்களுக்கு.

ஒரு ஆலை அதிபர் நட்டம் என வருந்துவது அவருக்கு கிடைக்கும் லாப சதவீதம் குறையுதே என்பதாகவே இருக்கும். விவசாயி நட்டம் என வருந்துவது போட்ட முதலுக்கே நட்டம் என்பதாக இருக்கும்.

இந்த இரண்டுப்பதிவுகளும் படித்தீர்களா?


வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்


வால்மார்ட்,கம்மோடிடி,செயற்கைத்தட்டுப்பாடு

மேலும் பெட்ரோல் பற்றி விலைக்காண காரணம் தெரிந்துக்கொள்ள பார்க்கவும்
சுட்டி:

பெட்ரோல் விலை ரகசியம்


படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் பகிரவும்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.

Sam Blabbermouth said...

இப்போது இந்தியாவிற்கு வரவிருக்கும் பல பெரிய சில்லறை வணிகநிருவனன்களுள் ஒன்று வால்மார்ட் மற்றொன்று டெஸ்கோ.

வால்மார்ட் தோன்றியது அமெரிக்காவில், டெஸ்கோ இங்கிலாந்தில். இரு நிறுவனங்களுக்குமே நல்ல அரசியல் ஆதரவு உள்ளது. வால்மார்ட் ரிபப்ளிகன் கட்சியின் (புஷ்ஷின் கட்சி) ஆதரவுடன் செயல் படுகிறது. டெஸ்கோவை தோற்றுவித்தவரே இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளைர்.
இவ்விரு கட்சிகளின் துணை கொண்டு அந்தந்த நாடுகளில் இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. அமெரிக்காவின் (Food and Agriculture Organisation) மூலமாக தரச்சான்று பெறுவதில் பல தில்லு முல்லுகளை செய்து கொண்டிருக்கிறது வால் மார்ட். எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் பெயரளவில் விசாரிக்கப்பட்டு தோற்கடிக்க படுகின்றன. சரியான அனுமதி இல்லாத பொருட்களையும் பல இடங்களில் விற்கிறார்கள். இங்கும் அதையே தொடர மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது.

பிரிட்டனின் சட்டப்படி, ஒரு சில்லறை நிறுவனம் விற்கும் பொருட்களில் 70 சதவிகிதம் பிரிட்டனில் விளைந்த அல்லது உற்பத்தி செய்யப்பட பொருட்களையே விற்க வேண்டும். அனால் டெஸ்கோ லேபிள்களில் மட்டுமே உள்நாட்டு தயாரிப்பு என்று காட்டி கைய்யூட்டு மற்றும் ஊழல்களை கையாண்டு உள்ளூர் வணிகர்கள் வயிற்றில் அடிக்கிறது. தவிரவும் பல நில ஆக்கிரமிப்பு வழக்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ( நம்மூரில் பல சில்லறை வியாபாரிகள் இதனை செய்கிறார்கள் ஆனால் டெஸ்கோ செய்வதோடு இதனை ஒப்பிடவே முடியாது). பல பள்ளிகளை கணிப்பொறி, விளையாட்டு பொருட்கள் தருகிறோம் என்று ஏமாற்றி தங்கள் பொருட்களை விற்க அநியாமான வியாபார உத்தியை கையாள்கிறார்கள். அதன் படி ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பொருட்கள் வாங்க வேண்டும். அந்த கூப்பன்களை பள்ளி நிர்வாகம் ஒரு நாள் ஒன்று திரட்டி டெஸ்கோவிடம் கொடுக்கும். பள்ளிக்கு வேண்டியது கிடைக்கும். ஒரு பள்ளி ஒரு கணிப்பொறி வாங்க அதன் மாணவர்கள் (மொத்தம்) இரண்டு அல்லது மூன்று இலட்சம் பவுண்டுகளை செலவு செய்ய வேண்டி உள்ளது.

நம் சட்டங்கள் பெரும்பாலும் பிரிட்டனின் சட்டங்களை ஒட்டியே வடிவமைக்கப்பட்டவை. சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அவ்வாறே. டெஸ்கோ இந்தியர்களை எவ்வாறெல்லாம் சுரண்டப்போகிறது என்பதை நாம் பிரிட்டனை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

நம் அரசியல்வாதிகளும் அமெரிக்க அரசியல்வாதிகளைப்போலவே ஊழலுக்கும், முதலாளிகளிடம் அடிபநிவதருக்கும் பெயர் போனவர்கள். வால்மார்ட் இந்தியர்களை அழிக்காமல் விடாது. அமெரிக்காவிலாவது பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அதிகம் உள்ளது. நம் மக்களின் (என்னையும் சேர்த்து தான்) விழிப்புணர்வைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

சூதாடிகள் மட்டுமே பங்கு பெரும் ஊக வணிகத்தால் மொரீஷியஸ் போன்ற நாடுகளின் மூலமாக பல கோடி ருபாய் கருப்பு பணம் உள்ளே வருகிறது பண வீக்கம் அதிகரிக்கிறது. விவசாயிகளின் ஊக வணிகத்தில் ஈடுபடுவது சந்தையில் உள்ள பாதகமான அம்சங்களில் இருந்து காப்பாற்றும். ஆனால் அதற்கு உரிய விழிப்புணர்வை ஊகச்சந்தைகள் ஏற்படுத்துவதே இல்லை.

பதுக்கல் செய்வதன் மூலம் சரியான விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. பதுக்கல்காரர்களை அரசுகள் கண்டுகொள்வதில்லை. கொள்முதல் செய்யப்படுவதில் பல பதுக்கல்காரர்கள் மட்டுமே பயன் பெறுகிறார்கள்.

ஆதாரம்: 'Wal-Mart: High Cost of Low Price'; 'Tesco: Supermarket That's Eating Britain' ஆகிய இரு ஆவணப்படங்களும், நான் கற்ற ஏட்டுக்கல்வியும், நாட்டு நிலவரங்களும்.

ஜோதிஜி said...

Sam Blabbermouth

மிக்க நன்றி. வவ்வால் அவர்களுக்கு ஒரு நீண்ட பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். உங்கள் பதில் போதுமானது என்றே நினைக்கின்றேன்.

நீங்கள் ஏன் உங்கள் வலைதளத்தில் உள்ள விசயங்களை தமிழிலில் எழுதலாமே.

Sam Blabbermouth said...

நன்றி ஜோதிஜி. தங்களது ஆலோசனை எனக்கு பயனளிக்கும். மிக்க நன்றி.