Tuesday, December 21, 2010

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?

2000 ஆண்டு தொடக்கத்தில் திருமணம் ஆவதற்கு முன்பு பெரிய வீட்டில் தனி ஆளாக புதிய வாழ்க்கையை தொடங்கினேன். மொத்த குடியிருப்பில் நான் மட்டுமே பேச்சுலர். தனி ஆளுக்கு ஏன் இத்தனை ரூபாய் வாடகை கொடுத்து ஏன் இவன் இங்கே இருக்கின்றான்? என்பதை மனதில் கொண்டு "கழுகுப் பார்வை"யால் மற்றவர்கள் என்னை பார்த்துக் கொண்டுருந்தனர். 

ஏறக்குறைய தினந்தோறும் கைபேசியில் 500க்கும் குறையாத அளவிற்கு வந்து கொண்டுருக்கும் அழைப்புகளுடன் நிறுவன பதவிகளில் வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கையது.

என்னைத் தேடி வந்த எதிர்கால மாமனார் கூட நான் உள்ளே வைத்திருந்த குடும்பத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும் பார்த்து அசந்து விட்டார். சமையல் கலை என்பது நான் ரசித்து செய்யும் ஒரு விசயம்.  அதுவும் அந்த சமயத்தில் நான் புகுந்து விளையாடிக் கொண்டுருந்த அசைவ உணவு வகைகளைப் பார்த்து அவருக்கும் மேலும் இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.  பொதுவாக பேச்சுலர் வாழும் வாழ்க்கையில் மற்றவர்கள் "கண் கொத்தி பாம்பாக" பார்க்கும் பல விசயங்கள் இல்லாமல் இருந்ததை கண்டு என்னை வினோத ஜந்தாகவே பார்த்தார்.  

அலுவலக நேரம் தவிர மற்ற பொழுதுகள் அத்தனையும் வீட்டுக்குள் இருந்த ஒலி நாடாக்கள் என்னை அடைகாத்தது. பள்ளிப்பருவம் முதல் நான் மனதில் வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு உள்ளே நான்கு புறமும் விலை உயர்ந்த ஓலிவாங்கிகளை பொருத்தி மிகத் துல்லியம் என்பதற்காக அதன் தொடர்பான பல சமாச்சாரங்களை பொருத்தி கதவை சார்த்திக்கொண்டு கேட்டுக் கொண்டுருப்பேன்.  

பலரும் பேசிய இலக்கியப் பேச்சுகள் என்று தொடங்கி அதன் தொடராக ஆன்மிகத்தை விட்டால் அரசியல் பேச்சுகள் போன்ற பலதையும் கலவையாக கேட்டுக் கொண்டுருப்பேன். சராசரி நபர்களால் ஜீரணிக்க முடியாத  கேசட்டுகள் ரகம் வாரியாக உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுருக்கும்.

குறிப்பாக அப்போது வைகோ மேல் அதீத காதல் கொண்டுருந்தேன். அவரின் ஒவ்வொரு ஒலிநாடாக்களையும் நூற்றுக்கணக்கான முறைகள் கேட்டுக் கொண்டேயிருந்தாலும் சலிக்கவே சலிக்காது.  வார்த்தை பிரயோகங்கள், கம்பீர, உதாரணங்கள், தடுமாற்றம் இல்லாத பேச்சு என்று ஆச்சரியமனிதராக எல்லாவிதங்களிலும் தெரிந்தார்.  நடைபயணத்தில் இறுதியில் சென்னையில் பேசிய பேச்சை அடுத்த நாலைந்து வருடங்கள் வைத்திருந்தேன். 

ஆனால் இப்போது அவரைப் பார்க்கும் போது?

தமிழ்நாட்டு அரசியலில் உருப்படியாக அமைந்த ஒரு புத்திசாலி தன்னுடைய தவறான கொள்கைகளால், எதிர்காலம் குறித்து அக்கறைபட்டுக்கொள்ளாமல் இந்த நிமிடம் வரைக்கும் தான் கொண்ட ஈழம் குறித்த கொள்கைகளில் ஆச்சரியமனிதராக வாழ்ந்து கொண்டுருக்கிறார். அவரின் பல புத்தகங்களை படித்துள்ளேன்.  ராஜீவ் காந்தியுடன் நேருக்கு நேராக .நின்றவிதம், அசாத்தியமான துணிச்சல், நம்ம சூனாபானாவை (அதாங்க சுப்ரமணியசாமி) பாராளுமன்றலாபியில் மிரட்டிய கம்பீரம் என்று எல்லாவிதங்களிலும் சிங்கமாகத் தான் வாழ்ந்தார். 

ஆனால் இன்று?

தமிழ்நாட்டில் இரண்டு கழகங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் மேலே வந்த ராமதாஸ் மற்றும் திருமாவளவன் குறித்து இங்கு என்ன எழுத முடியும்?

என்னுடைய பார்வையில் மருத்துவர் ராமதாஸ் மேல் அவரின் அரசியல் கொள்கையின் மேல் ஏராளமான காழ்புணர்ச்சி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் உருவாக்கிய "மக்கள் தொலைக்காட்சி" ஆச்சரியமானதே. 

ஈ மொய்க்கவில்லையே என்று தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளாமல் அதே பிடிவாதத்தோடு தனித்தமிழிலில் கொண்டு போய்க் கொண்டுருப்பதற்கு தனியான பாராட்டுரையை வழங்க வேண்டும்.

திருமாவளவனும் வைகோவுடன் இருந்தார். வளர்ந்தார்.  ஆனால் இவர் பிடிக்க வேண்டிய இடத்தை இன்று பிடித்துருப்பவர் சீமான் அவர்கள். 

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கழகங்கள் சரியில்லை. ஊழல் குற்றச்சாட்டு, சுயநல ஆதிக்கம், குடும்ப அரசியல் என்று கருத்து சொல்பவர்கள் திருமாவளவன், ராமதாஸ் இருவரும் கடந்து வந்த பாதையில் தான் சார்ந்த இனத்திற்கு என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்ன சாதித்து இருக்கிறார்கள்? என்று தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கும் கொஞ்சம் இவர்களின் அரசியலை புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். 

காரணம் இவர்கள் தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடுகின்றோம் என்கிறார்கள்.   ஈழத்தில் நடத்த கடைசி யுத்தப் போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கெட்டிக்காரத்னமாக கடைசி வாய்ப்புள்ள வரைக்கும் தன்னுடைய மந்திரிப்பதவியை விட்டு இறங்கத் தயாராக இல்லை என்பது போன்ற விசயங்கள் பெரும்பாலான மக்களால் மறக்கப்பட்ட ஒன்றாகும். திருமாவளவன் எந்த நோக்கத்தில் இலங்கைக்கு சென்ற குழுவுடன் சென்றார்? என்பதே இன்று வரையிலும் ஆச்சரியம் அளிக்கும் விசயமாகும்?  

கடைசியாக நான் உங்களை திட்டிப்பேசவில்லை என்று சோனியாவின் வாசலில் நுழைய தவமாய் தவமிருப்பது வரைக்கும் வைகோவுக்கு அடுத்தபடியாக அந்தர்பல்டி அகாய சூரனாக இருக்கிறார்.

மொத்தத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று இரு துருவங்களுக்குள் சிக்கியவர்களாக இவர்களின் தயவை எதிர்பார்ப்பவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள்.  

ஆனால் எல்லாவிதங்களிலும் சீமான் சற்று வித்யாசமாக இருக்கிறார்.  

பேச்சு, செயல்பாடு, கொள்கை.  

ஆனால் இவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் இவரின் எதிர்கால பாதையை எந்த அளவிற்கு தீர்மானிக்கும் என்பது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.  ஈழம் குறித்து பேசுவது போல இங்குள்ள மாற்று ஏற்பாடுகள், கண் எதிரே நடக்கும் மற்ற விசயங்களையும் பேச வேண்டும். 

எப்படி இருந்தவர் இப்படி ஆனார் என்று இவர் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியவர் வைகோ.  

தொழில் நிறுவனங்களைப் போலவே அரசியலுக்கும் முன் எச்சரிக்கை தேவை. 
காரணம் தன்னுடைய இருப்பு தெளிவான முறையில் இருந்தால் தான் தான் வைத்திருக்கும் கொள்கைகளை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்த முடியும்.  இல்லாவிட்டால் நானும் கத்திப்பார்த்தேன்.  தொண்டை வற்ண்டுபோனது தான் மிச்சம் என்று ஒதுங்க வேண்டியது தான். 

சீமானின் பல ஊடகப் பேட்டிகளை பார்த்து படித்து இருக்கின்றேன்.  அவரின் தீவிர ஆதவாளர்கள் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.  அவரின் எண்ணங்கள் சரியானதே என்றபோதிலும் அதை எடுத்து வைப்பதில் முரண்பட்டு நிற்கிறார்.  இந்திய இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லில் இது போன்று வளர்ந்து வருபவர்களை துடைத்தொழிக்கவென்றே ஓராயிரம் நபர்கள் கண்களுக்கு தெரிந்தும்,  தெரியாமல் இருப்பார்கள். 

இது தமிழினத்தில் மட்டுமே நடக்கும் சாபக்கேடு.

சமகாலத்தில் சீமான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பலவிதங்களிலும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டுருப்பவர். ஆனால் அத்தனையும் வீணாகிப் போய்விடுமோ என்பது போல் இருக்கிறது.. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால் மரியாதையான பார்வையில் கவனிக்கப்படுபவர். வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் சார்பார்ளர்களில் முதன்மையான இடத்தில் இருக்கிறார். சிறையில் இரண்டு நாட்கள் சந்திக்க மட்டுமே அனுமதி என்ற போதிலும் கூட படித்த இளைஞர்கள் வரிசை கட்டி நின்றது ஆச்சரியமே.  சென்றவர்கள் எவரும் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு போனவர்கள் அல்ல.

இவரைப் போன்றவர்கள் தெளிவான கொள்கைகளால் முன்னேறிச் செல்லவேண்டும். வெகு விரைவில் உருவாகப்போகும் இரண்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கண்ணுக்கு தெரிந்த வகையில் எவரும் தென்படவில்லை என்பதே தற்கால தமிழ்நாட்டு அரசியல் நிதர்சனம். சீமான் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மாற்று அரசியல் பார்வையில் விஜயகாந்த ஒரு பக்கம்.  சீமான் ஒரு பக்கமும் இருக்கிறார்கள்.  ஆனால்  சீமான் அரசியல் கட்சியாக மாற்ற இன்னமும் காலம் இருக்கிறது என்பதில் உறுதியாகவே இருக்கிறார். 

தமிழ்நாட்டு மக்கள் எந்த பக்கம் இருப்பார்கள் என்பதை வரும் தேர்தல் ஓரளவுக்கேனும் சூசமாக காட்டிவிடும்.

இந்த காணொளியில் ஒரு கட்சியின் சார்பாக கேள்விகேட்கும் ரவிபெர்ணார்ட் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவர் வருகின்ற தேர்தலிலாவது ஓட்டுப் போட செல்ல வேண்டும். 

குறிப்பாக கலைஞர் அரசியல் குறித்து சீமான் பேசும் இடங்களில் கடைபிடித்த நாகரிகம் என்னை வியக்க வைத்தது. ஆனால் பளிச்சென்று மிகத் தெளிவாக இருந்தது.

தன் மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாக எப்போதும் போல உணர்ச்சிபூர்வமாக பேசும் சீமான பிறந்த ஊருக்கு அருகே நானும் பிறந்தவன் என்கிற வகையில் என்னைப் போன்றவர்களுக்கு பெருமையாகத்தான் இருக்கு.







151 comments:

உமர் | Umar said...

இரவு வீட்டிற்குச் சென்று பேட்டியைக் கேட்டுவிட்டு பின்னூட்டத்தைத் தொடர்கின்றேன்.

ஜோதிஜி said...

தங்கம் நீங்க கும்முற கும்முல சீமான் வந்து நான் என்ன பாவம் செஞ்சேன்னு கேட்கனும். ஆமாம் சொல்லிபுட்டேன்.

Hai said...

இன்றைய அரசியல் நிலையில் ஒரு தமிழனாய் எதிர்கால அரசியல் சூழல் மீது பார்வை கொண்ட ஒருவனின் எண்ணங்கள் அப்படியே வார்த்தையாக வந்துள்ளன.

காலம் கனிந்து நல்ல தலைமை தமிழனுக்கு அமைய வேண்டும்.

satheshpandian said...
This comment has been removed by the author.
satheshpandian said...

he is the most worthy person in tamilnadu politics now

arasan said...

super sir... தெளிவா எழதி இருக்கீங்க ...

தமிழ் உதயம் said...

நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளலாம். ஆனால் சீமானுக்கு இரண்டு நெருக்குதல் உள்ளன. ஒன்று, அவரை தேவரினத்திற்குள் அடைக்க முயலும் சக்தியிடம் இருந்து தன்னை தற்காத்து வெளியே வருதல். மற்றொன்று, அவர் திராவிட கொள்கை ஆதரவாளர்களாக இருந்து, பகுத்தறிவு முகத்துடன் பெரும்பான்மையோரை அதீதமாக சாடியதை மறக்காத பத்திரிகைகளின்(சினிமாகாரர் சீமான் கைது என்று போட்ட துவேஷம்) இரட்டிப்பை தாண்டி வருதல்.

செல்வம் said...

சீமானுடைய பேச்சு உணர்ச்சி வசப் பட வைக்கும் பேச்சு.ஆனால் கருணாநிதியின் பேச்சு ஜனரஞ்சகமான பேச்சு. மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமெனில் ஜனரஞ்சகமான பேச்சும், செயல்களும் மிகவும் அவசியம்.

அதே போன்று வெறும் ஈழப் பிரச்சினைகளுக்கு மட்டும் குரல் கொடுக்காமல், தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தால் அனைவரையும் சென்று அடையலாம்.

அதற்காக ஈழப் பிரச்சினையில் நீர்த்துப்போகும் படி சொல்ல வில்லை. என் கருத்துப் படி இன்று கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்து அவர் ஈழப்பிரச்சினையைக் கையில் எடுத்திருந்தால் வீச்சு அதிகம் இருந்திருக்கும். ஆனால் நம் துரதிர்ஷ்டம் அவர் ஆளுங்கட்சியாக இருந்ததால் நமக்கு நாடகங்கள் தான் மிச்சம்.

எனவே தான் சொல்கிறேன்...சீமான் போன்ற மாற்று அரசியலுக்கு முயல்பவர்கள் சற்று ஜனரஞ்சகமாகவும் இருக்க வேண்டும்.இல்லையெனில் அய்யா நெடுமாறன் போல் (பிரத்யேகமாக ஈழத்திற்கு) ஆகிவிடும்.

மற்றபடி தமிழ் உதயம் சொல்லும் கருத்துக்கள் கூர்ந்து நோக்கத்தக்கது.

Thenammai Lakshmanan said...

சீமான் பற்றி அறீய முடிந்தது நன்றி ஜோதிஜி

வனம் said...

வணக்கம் ஜி

சக்கப்போடு போட்டு இருக்கீங்க.

\\ஈழம் குறித்து பேசுவது போல இங்குள்ள மாற்று ஏற்பாடுகள், கண் எதிரே நடக்கும் மற்ற விசயங்களையும் பேச வேண்டும்.\\

மிகவும் நியாயமான விடயம்.

நிறைய பேர் அவர் ஒரு நல்ல தலைவராக வருவார் என எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

இராஜராஜன்.

Bibiliobibuli said...

கொண்டுருப்பதற்கு XX கொண்டு+இருப்பது= கொண்டிருப்பது.


கொண்டுருந்தனர் XX கொண்டு+இருந்தனர்= கொண்டிருந்தனர்.

இதை நீண்டகாலமாக கவனித்து வருகிறேன். முடிந்தால் திருத்திக்கொள்ளவும்.

அடேங்கப்பா, திருமணத்திற்கு முதலே எல்லாத்துக்கும் தயாராய் தான் இருந்திருக்கிறீர்கள். ஆனால், இந்தப்பதிவில் "இவ்ளோ" "சுயபுராணம்" தேவையா? சீமான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் தன்னை ஓர் இனத்துக்காக அற்பணித்துக் கொண்டவர். அவரை பற்றிய கட்டுரையில் உங்க சுயபுராணம்..... ம்ம்ம்ம்!!!!!

மிச்சம் காணொளி கண்டபின், ஜோதிஜி.

ஜோதிஜி said...

நன்றி வினோத்

ரதி நீங்க சொன்ன தவறு உண்மைதான். இன்று தான் முழு ஓய்வு கிடைத்தது. இங்குள்ள மின்சார பிரச்சனை உங்களுக்கு தெரிந்தது தானே?

சுயபுராணத்திற்கு காரணம் இது போன்ற அரசியல் விசயங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். என் ஆர்வமும் தொடர்பும் எங்கிருந்து தொடங்கியது என்பதற்காக மட்டுமே?

ஜோதிஜி said...

தமிழ் உதயம், செல்வம் அற்புதமான விமர்சனத்திற்கு நன்றி.

நன்றி தேனம்மை, இராஜராஜன்.சதிஷ்,அரசன்.

Unknown said...

சார் நாம் சந்திக்காமலே உங்களை பற்றி கொஞ்சம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள முடிந்துள்ளது :-)
சீமானை பற்றிய உங்கள் பார்வையில் நானும் முழுதாக ஒத்து போகிறேன், ஆனால் இப்பொழுது சீமானுக்கு கூடியுள்ள கூட்டம் முழுவதுமே ஈழத்துக்காக கூடியதே, அவரும் முழுக்க தொழில்சார்ந்த அரசியல்வாதியாக மாறும் பொழுதுதான் அவரது ஆதரவினை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியம் என நினைக்கிறேன்,மற்றபடி உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன் என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்.

ஜோதிஜி said...

அரைக்கிறுக்கன் (என்னவொரு வித்யாசமான பெயர்????)

இரவு வானம் அன்புக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

மொத்தத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று இரு துருவங்களுக்குள் சிக்கியவர்களாக இவர்களின் தயவை எதிர்பார்ப்பவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். //

சீறி வருபவர்களை முனை மழுங்கடிப்பதிலும், அவர்களின் கையிலும் சிறிது கறையேற்றி நீயிம் நம்மாளுதாம்பா என்று சப்பிப் போட்ட மாங்கொட்டை ஆக்குவதில் நம்ம தாத்தாவிற்கு ஈடு இணை உண்டா... சொல்லுங்கோ?

படிக்க படிக்க பின்னூட்டுகிறேன் :)

ஜோதிஜி said...

சூப்பி போட்ட மாங்கொட்டையும் சப்பிக்கொண்டுருக்கும் மனிதர்களும்

நல்லாயிருக்கே தலைப்பு

Bibiliobibuli said...

முதலில் ரபி பெர்னாட் (அது "ரவி"பெர்னார்ட் இல்லை ஜோதிஜி, திருத்திக்கொள்க) பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி கேள்விகளை தொடுக்காமல் எதிராளி யாரோ அவரை மையப்படுத்தி கேள்வி கேட்பது தான் தமிழ்நாட்டு அரசியல் நேர்காணல் என்று கருதி, தவிர்த்து மேலே போகிறேன்.

///ஈழம் குறித்து பேசுவது போல இங்குள்ள மாற்று ஏற்பாடுகள், கண் எதிரே நடக்கும் மற்ற விசயங்களையும் பேச வேண்டும். //

நான் ஏதோ பொறாமை, காண்டு என்பவற்றால் இதை சொல்லவில்லை. சீமான் ஈழம் பற்றி பேசுகிறார். அதே போல் தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற விடயங்கள் பற்றியும் பேசவேண்டும் என்று சொன்னால், என்னய்யா இது? ஆறரை கோடி பேர் இருக்கும் ஓர் மாநிலத்தில் உங்கள் பிரச்சினைகள் பற்றி ஒரேயொரு "சீமான்" தான் பேசவேண்டும் என்றால் பிழை அரசியல்வாதிகளிடம் இல்லை, மக்களிடம் தான் என்பது என் தாழ்மையான கருத்து.

Constitutional Monarchy என்றால் என்பதற்கு யாராச்சும் விளக்கம் சொல்லுங்கள்???

அப்புறமா, இந்த இறையாண்மை பற்றி நிஹால் ஜெயவிக்கிரம என்பவர் "The Myth of State Sovereignty" என்று ஓர் கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் சொன்னதிலிருந்து, " From being solely a matter of domestic concern under the archaic doctrine of state sovereignty, a government of its own nationals has now become the legitimate concern of the international community".

Geneva Convention மற்றும் International Covenant on Civil and Political Rights (ICCPR) இல் இந்தியா கை ஒப்பமிடவில்லையா ?

தெரியும் ஜோதிஜி, நான் இப்படி ஏதாவது சொன்னால் ரதி நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்கன்னு சொல்வீங்க, சரிதானே?? :)))

ஜோதிஜி said...

ரதி ஈழத்தைப் பற்றி பேசுபவர்களிடம் இங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அதைப்பற்றி மட்டுமே தான் பேசுகிறார்கள். கூட்டத்தில் இருக்கும் சராசரி பாமரனுக்கு அவன் வயித்தைப் பார்ப்பனா? இல்லை இவர்கள் உணர்ச்சி பூர்வமாக பேசும் பேச்சை கேட்பானா? சரி பேசுகிறார்கள்? கடைசியில் ரிசல்ட்?

அடுத்த கூட்டம்? அடுத்த கூட்டம்?

இவர்களுக்கு போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள்.
அங்கும் விடிந்தபாடில்லை? இங்கே இருப்பவர்களுக்கும் ஈழம்ன்னா என்ன?ங்ற சந்தேகமும் தீர்ந்தபாடியில்லை.

நெட் ரிசல்ட்???????????

அப்புறம் ஆறரை கோடி மக்களுக்கு தலைவர்கள்?

வேண்டாம் அதை தனிப்பதிவாக வைத்துக் கொள்வோம்.

Bibiliobibuli said...

//கூட்டத்தில் இருக்கும் சராசரி பாமரனுக்கு அவன் வயித்தைப் பார்ப்பனா? //

ஜோதிஜி, தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே வயிற்றுப்பாட்டை பார்ப்பவர்கள் மட்டும் தானா? சீமானுக்கு மட்டும் வயிறு இல்லையா? ஏன் இன்னும் ஒரேயொரு சீமான் மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று கேள்வி கேட்டால், "அடுத்த கூட்டம், நெட் ரிசல்ட்" என்று பதில் சொல்கிறீர்கள். கண்டிப்பா அடுத்த பதிவில் பதில் சொல்லிடுங்க.

Thekkikattan|தெகா said...

இந்திய இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லில் இது போன்று வளர்ந்து வருபவர்களை துடைத்தொழிக்கவென்றே ஓராயிரம் நபர்கள் கண்களுக்கு தெரிந்தும், தெரியாமல் இருப்பார்கள்.//

மிக்க உண்மை இது. அவரின் நெருங்கிய தோழர்கள் இதனை அவரிடத்தில் கொண்டு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிடலோடு பிரச்சினைகளை நெருங்குவது ஒன்றே நீண்ட கால காலுன்றலுக்கு உதவும். ஆனா, அடிக்கடி இவரை உள்ளே வெளியே என்று வைத்துக் கொள்ளவே நிறைய பேர் விரும்புவார்கள்... என்பதனை உணர்ந்து அதே ‘சாணக்கிய’ தனத்துடன் தன்னை வெளியே வைத்துக் கொள்வது ரொம்ப அவசியம். ;)

இப்பொழுது சீமானிடத்தில் இருக்கும் இந்தத் தீயில் ஒரு 40 சதவீதம் மிஞ்சி அவருடைய பயணத்தின் பாதி வழியை எட்டி விட்டாலே பெரிய அளவில் மாற்றங்களை காண முடியுமென்று தெரிகிறது.

நம்ம தாத்தா மாதிரி ஆட்களிடம் மாட்டாமல், கூர் மழுங்காமல் தன்னை தக்க வைத்துக் கொள்வதே ஒருவரின் தன் மானத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான காலத்தின் தேவை. ஏனைய சீறிய சிங்கங்களை எல்லாம் பூனை குட்டிகளாக ட்ரைன் செய்து விட்டார், தாத்தா... :))

கல்வெட்டு said...

.

ஜோதிஜி,
சீமானின் இயக்கத்தின் கொள்கைகள் அல்லது இலக்கு என்ற வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் உள்ளதா?

உணர்ச்சி வசப்படச் செய்யும் பேச்சு வெட்டிப்பேச்சாகவே இருக்கும். இலக்கும் கொள்கையும் அதை அடையும் தீர்க்கமான வழியும் வரையறுக்கப்படாதவரை. அப்படி ஏதாவது இருக்கு இலக்கு, கொள்கை, வழிமுறை என்று
Why they exists as political party?

அறிந்துகொள்ள சுட்டி உள்ளதா?

சும்மா ஈழக்காற்றில் ஏற்றப்பட்ட கொடி என்றால் வைகோ, திருமா, நெடுமாறன் போல இலக்கில்லாமல் மேலும் எந்தவித மாற்று விமர்ச்சனங்களையும் ஏற்றுக் கொள்ளாத இரசிகக் கும்பலாய் மாறிவிடும்.

.
கொள்கை குறித்தான எனது விளக்கங்கள்..
சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1
http://kalvetu.blogspot.com/2010/11/1.html

.

Anonymous said...

seeman enra peyar usilampatti piranmali kallar samoogam vaikum peyar intha seeman enga oor paramakudi pakkam ilayankudi chrithava sebastian nadar magan simon ippa seemana irukkar yiver thamizharasana maaranum jeya tv pondra katchi tv la petti koodathu

Anonymous said...

very nice article, seeman is great . marai u s a .tadam pathippar...

vinthaimanithan said...

கொஞ்சம் நீண்ட பின்னூட்டமாக அமையுமென்று எண்ணுகிறேன். முதலில் சீமான் ஒரு சிறப்பான தலைவனாகப் பரிமளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏன்?

சீமானிடம் உணர்ச்சி இருக்கிறது. அந்த உணர்ச்சி வார்த்தைகளில் தீக்கங்குகளாகப் பாய்கிறது. தமிழன் என்கிற ஆழமான பற்றுதல் இருக்கிறது. ஆனால் தெள்ளத்தெளிவான கொள்கைத்திட்டங்களோ, இலக்குகளோ, ஆழமான தொலைநோக்குப்பார்வைகளோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பசும்பொன் தேவரையும், இமானுவேல் சேகரனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தபோதே அவரது புரிதல் தெரிந்துபோனது.

அடுத்தபடியாக ஒரு இந்திய ஏகாதிபத்தியம் என்ற வல்லரசை எதிர்த்து நிற்பதற்கான தெளிவான திட்டங்கள் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

மாற்று அரசியல் என்கிற மிக ஆழமான வார்த்தயின்கீழ் விஜகாந்தைக் கொண்டு வந்ததற்கு ஜோதிஜிக்கு என் கடும் கண்டனங்கள்.

மாற்று அரசியல் என்பது மக்ளை மையப்படுத்தி இயங்கும், இன்றைய சீரழிவு அரசியலுக்குப் பதில் வலுவான மாற்றை முன்னிறுத்தும் அரசியல். ஊழல்மயப்பட்ட, நிறுவனமயப்பட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தின் முகத்திரையைத் தோலுரிக்கும் அரசியல். விஜயகாந்தை மாற்று அரசியலாளன் என உருவகப்படுத்துவது மிகவும் தவறான புரிதலாகும்.

நிற்க.continued

vinthaimanithan said...

அக்கா ரதிக்கு,

ஈழம்பற்றிப் பேசுவதும், அதை ஒற்றை இலக்காகக் கொண்டிருப்பதும் தமிழக அரசியலிலும், தமிழக மக்களிலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. மக்கள் சார்ந்த அரசியல் என்பது எப்போதும் ஒற்றை இலக்கை நோக்கமாகக் கொண்டிருக்க முடியாது. தமிழ்ச்சமூகத்தைத் தளைத்து வைத்திருக்கும் மாயைகளைத் தகர்த்தெறியும் ஆயுதமாக மாற்றுக் கலாச்சாரத்தையும், மாற்று வாழ்வியலை அடைவதற்கான வழிமுறைகளையும் இயங்கியல் நோக்கில் பரிசீலிக்கும் இயக்கம் மட்டுமே தமிழ்மக்களை அரசியல்ரீதியாகக் கிளர்ந்தெழச் செய்யமுடியும். இந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும், இந்திய ஏகாதிபத்தியத்தினைத் தகர்த்தெறியவும் ஒரு வலுவான இடதுசாரி அமைப்பினால் மட்டுமே முடியும்

மீண்டும் வருவேன்

உமர் | Umar said...

நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை தமிழ் உதயம், செல்வம், தெகா உள்ளிட்ட பலரும் சொல்லிவிட்டனர். அனைவருக்கும் நன்றி.

முதன்முறையாக கல்வெட்டு அவர்களின் கருத்தோடு சற்று வேறுபடுகின்றேன் (என்று நினைக்கின்றேன்). அதனால் அங்கிருந்தே தொடங்குகின்றேன்.

தமிழக, இந்திய அரசியல் களத்தில் தங்கப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வரப்பட்டவர்கள் சிலர். (தயாநிதி மாறன் போல). தோளில் கைபோட்டு அழைத்து வரப்பட்டவர்கள் சிலர். (கனிமொழி போல.) இழுத்து வரப்பட்டவர்கள் சிலர். (ஸ்டாலின், ராஜீவ் போல.) சீமானையும் இழுத்து வரப்பட்டவராகதான் நான் பார்க்கின்றேன். அப்படி இழுத்து வரப்பட்டவர்கள், இழுத்துவரப்பட்ட சூழலுக்கேற்ப நடந்து பின்னர் ஒரு பாதையினைத் தேர்ந்தெடுக்கக்கூடும். அப்பொழுது கொள்கையும், நோக்கமும் வழிமுறையும் வகுத்துக்கொள்ளக்கூடும்.

உமர் | Umar said...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ 5 மாதங்கள் இருப்பதால், இப்பொழுது அது குறித்து ஏதும் பேச முடியாது. கூட்டணி சேர்க்கைகளும், கலைஞரின் தேர்தல் நேர ஸ்டன்ட்களும் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையலாம். எப்படியிருந்தாலும், சீமான் வரும் தேர்தலில் தனது கட்சியை வெற்றி பெற வைக்க முடியாது. ஆனால், தேர்தலுக்குப் பின்னரும் அவர் தொடர்ந்து இயங்குவதற்கு அவர் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.

வரும் தேர்தலில், அவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தன் மீதான அடக்குமுறைகளை கட்டுக்குள் வைக்க முடியும்; தனது கட்சியை அனைத்துப் பகுதிகளிலும் வலுவாகக் காலூன்ற வைக்க இயலும்.

--
இப்பேட்டியிலும் மற்ற இடங்களிலும், அவர் கருணாநிதியை எதிர்த்து நிற்கப்போவதாகக் கூறி வருகின்றார். அதனை விடுத்து அவர் இளையான்குடி அல்லது வேறு ஏதேனும் இடத்தில் நிற்கலாம். ஏனெனில் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தா.பாண்டியன் தோற்க வேண்டும் என்பதற்காக,கருணாநிதி வட சென்னை தொகுதியில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் ஆற்காட்டாரையும் (மின்வெட்டு), அழகிரியையும் (பணம்) களத்தில் இறக்கினார். அதுபோல் தனக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும் என்று நினைத்தால் எத்தகைய செயலிலும் இறங்குவார்.

இப்போதைய சூழ்நிலையில், சீமான் தான் போட்டியிட நினைக்கும் தொகுதியினை முன்னரேத் தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்து வெற்றியினை உறுதி செய்ய திட்டமிடலாம்.

உமர் | Umar said...

விந்தை மனிதன் கூறியிருக்கும் பசும்பொன் விஷயம் எனக்கும் நெருடலாகவே உள்ளது. இதுபோன்ற விஷயங்களை சீமான் தவிர்ப்பது நல்லது.

மாற்று அரசியலுக்கு சீமான் தகுதியானவரா இல்லையா என்பதெல்லாம் அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் தெரிந்துவிடும். பார்ப்போம் காலம் அவரை எப்படி வார்க்கிரதென்று.

கல்வெட்டு said...

.

கும்மி,
//சீமானையும் இழுத்து வரப்பட்டவராகதான் நான் பார்க்கின்றேன். அப்படி இழுத்து வரப்பட்டவர்கள், இழுத்துவரப்பட்ட சூழலுக்கேற்ப நடந்து பின்னர் ஒரு பாதையினைத் தேர்ந்தெடுக்கக்கூடும். அப்பொழுது கொள்கையும், நோக்கமும் வழிமுறையும் வகுத்துக்கொள்ளக்கூடும்.//

சீமான் இழுத்து வரப்பட்டவர் என்பதே எனது நிலையும்.

கொள்கைகள் , தெளிவு ஏதும் அற்ற , சாதியைத்தாண்டி வர இயலாத, சராசரியான, பிறரால் இழுத்து வரப்பட்டவராகவே சீமானை நானும் பார்க்கிறேன்.

தங்கப் பல்லக்கில் தூக்கி வந்தாலும், தரதரவென்று இழுத்து வந்தாலும் அல்லது ஆமாம் சாமியாக (பிரதமர் மன்மோகன் அதிமுக பன்னீர்செல்வம்) உட்காரவைக்கப்பட்டாலும் சுயம் உணர்ந்தவர்கள் சிந்தித்து அடுத்த முடிவை உடனே எடுப்பார்கள்.

சுயம் இல்லாதவர்களே அப்படியே அலையில் போக்கில் தொடுருவார்கள்.

***


சீமான் அரசியல் சந்திக்கு வலிந்து இழுத்து வர‌ப்பட்டாலும், கட்சியை ஆரம்பித்தது அவர்தான். த்தனை நாளைக்கு இழுத்ததால் வந்தேன் என்று சொல்ல முடியும்?

கட்சிகான இலக்கு மற்றும் கொள்கை என்ன என்று அவரை நோக்கியே கேட்க முடியும் அல்லவா? இல்லை என்றால் விஜய்காந்தின் பிரபாகர பிறந்தநாள் சபதம் போலத்தான் இருக்கும் இவரது நிலையும்.

**

முத்துராமலிங்கத்தேவர் பற்றியெல்லாம் இவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த பட்சம் தனக்கான இலக்கு என்னவென்று கட்சியின் கொள்கையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் தேவர் குருபூசை விழாவில் கலந்து கொண்டு சாதி அரசியல் நடத்த வேண்டியதுதான்.

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

//...திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். //


தகவலுக்கு:

முத்துராமலிங்கத்தேவர் பற்றி அசுரன்
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

.

உமர் | Umar said...

@கல்வெட்டு

நிச்சயமாக பசும்பொன் சென்றதும் பூஜையில் கலந்து கொண்டதும் மிகத் தவறான செயல்கள். தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்தியத் தருணங்கள் அவை.

இன்று நிலவும் எதேச்சதிகார கழக அரசியலுக்கு மாற்றாக வரக்கூடிய வாய்ப்பு உள்ள ஒருவராக அவரை பலரும் எண்ணுகின்றனர். (I'm just a spectator). அந்த நம்பிக்கையை காப்பதோ, தக்கவைப்பதோ, உடைப்பதோ அவர் தீர்மானிக்கும் பாதையில் உள்ளது.

திசையை அவர் தீர்மானிக்கிறாரா; அலை தீர்மானிக்கின்றதா அல்லது அலையில் மூழ்குகின்றாரா என்பது ஓரிரு ஆண்டுகளில் புலப்பட்டுவிடும்.

உமர் | Umar said...

@கல்வெட்டு

சுட்டிக்கு நன்றி. முத்துராமலிங்கத்தேவர் பற்றி ஏற்கனவே நிறைய அறிந்திருந்தாலும், படித்திருந்தாலும், அசுரனின் கட்டுரையிலும், பின்னூட்டங்களிலும் இன்னும் நிறைய அறிய முடியும் என்று தோன்றுகின்றது.

கல்வெட்டு said...

கும்மி,

//நிச்சயமாக பசும்பொன் சென்றதும் பூஜையில் கலந்து கொண்டதும் மிகத் தவறான செயல்கள். தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்தியத் தருணங்கள் அவை. //


ஒருமுறை செய்வது தவறு அறியாமை. ஆனால் அடுத்தமுறையும் அந்த தவறையே வெகு சிறப்பாகச் செய்வதை எந்த வகையில் சேர்ப்பது? :-((

தம்பி என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் படத்தை காட்சிப்படுத்தியதை... "தெரியாது. அண்ணன்களிடம் கேட்டு பின்னால் தெரிந்து கொண்டேன்" என்றார்.

சரி விடுங்க .. கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவார தெரிந்த தமிழர் தங்கத்துக்கு அம்பேத்காரும் பெரியாரும் தெரியாதது வாடிக்கையானதுதான்.

ஆனால் அதே தம்பி ஏன் கட்சி ஆரம்பித்தவுடன் குரு பூசை க்க்குப் போனார்?

Note:
தம்பி திரப்படத்திற்கு அடுத்துதான் கட்சி ஆரம்பித்தார். அதற்குப்பின்தான் குரு பூசை ‍க்குப் போனார் என்ற வரிசயில் எழுதுகிறேன். தவறு என்றால் சுட்டவும்.


.
ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611‌

.

Bibiliobibuli said...

தம்பி விந்தைமனிதன் (எ) ராஜாராமனுக்கு,

சீமான் தமிழ்நாட்டுக்காரர். அவர் அரசியலில் பாதை எதை நோக்கி நகரவேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் தான் ஒத்துக்கொள்கிறேன். அவர் ஈழம் பற்றி மட்டும் பேசாமல் தமிழ்நாட்டு சூழ்நிலைகளையும் பேசவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கலாம். அவர் ஈழம் பற்றி தமிழ்நாட்டில் ஓர் விழிப்புணர்வை கொண்டுவரவில்லை என்றாலும் நாங்கள், ஈழத்தமிழர்கள் கோபிக்கவோ அல்லது ஏனென்றோ கேட்கமுடியாது. நான் கேட்டது ஏன் சீமான் மட்டும் தான் அதையெல்லாம் பேசவேண்டுமா என்பது தான்!!! இதில் அவரை ஆளாளுக்கு அரசியல், ஜாதி சாயம் பூச வேறு முற்படுகிறார்கள் என்பது ஓர் ஈழத்தமிழராய் எனக்கு தோன்றுகிறது. தமிழ்நாட்டின் ஜாதி அரசியல் எனக்கு தெரியாது தான். யாரும் பேசவோ அல்லது சிறை சொல்லவோ கூட தயங்கும் ஓர் மண்ணில் ஒருவர் துணிந்து அதையெல்லாம் செய்தால் அவரை விமர்சனம் செய்தே ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலும்.

தமிழ்நாட்டு அரசியலும் சரி, பொதுசனமும் சரி இந்த விமர்சனப்பாணியையே கடைப்பிடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. சரியென்று பட்டால் சீமானுக்கு தோள்கொடுங்கள். இல்லையென்றால் நீங்கள் சொல்லும் "இயங்கியல் நோக்குகளை" பரிசீலனை செய்யுங்கள். முன்முடிவாக சீமானின் எதிர்கால அரசியல் பற்றி ஏன் விமர்சிக்க வேண்டும்.

இங்கே பெரும்பாலானவர்கள் பதிவுலக புரட்சி செய்பவர்கள். அவர் தான் நிஜத்தில் ஏதோ தன்னால் முடிந்ததை செய்கிறார். சீமானுக்கு என் வாழ்த்துக்கள்.

///இயங்கியல் நோக்கில் பரிசீலிக்கும் இயக்கம் மட்டுமே தமிழ்மக்களை அரசியல்ரீதியாகக் கிளர்ந்தெழச் செய்யமுடியும். ///

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு "கிளர்ந்தெழ" இன்னுமா ஒருவிடயமும் கிடைக்கவில்லை, :))). தமிழ்நாட்டில், இந்தியாவில் எத்தனையோ அரசியல் மோசடிகள், ஊழல்கள் அத்தனையும் உங்கள் வரிப்பணம். தங்கள் வாழ்வின் சுபீட்சத்திற்காக இதையெல்லாம் எதிர்த்து கிளர்ந்தெழாமல் பூடகமாக சொல்லப்படும் இயங்கியல் கருத்தினை மனதில் நிறுத்தி, நீதி கிடைக்கும் என்று கிளர்ந்தெழுவார்களா!! இது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்பது அங்கு வாழும் உங்களுக்குத்தான் தெரியும்.

அப்புறமா, பதிவுலகம் "ஆளில்லாத ரீ கடை" என்றும் சில நேரம் உணரவைக்குது.

உமர் | Umar said...

கல்வெட்டு,

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பதால், எனக்கு 'தம்பி' திரைப்படத்தில் நீங்கள் சுட்டிக்காட்டும் விஷயம் தெரிந்திருக்கவில்லை. அவர் பசும்பொன் சென்றது மட்டுமே அறிந்திருந்தேன். அதன் அடிப்படையிலேயே பின்னூட்டங்கள் இட்டேன். அவரைப் பற்றி மேலும் சில விஷயங்கள் தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

உமர் | Umar said...

@Rathi

//யாரும் பேசவோ அல்லது சிறை சொல்லவோ கூட தயங்கும் ஓர் மண்ணில் ஒருவர் துணிந்து அதையெல்லாம் செய்தால் அவரை விமர்சனம் செய்தே ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலும்//

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதை யாரும் விமர்சிக்கவில்லை. ஒரு அரசியல் கட்சி என்ற நிலையில் ஈழம் தாண்டி வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகள் பற்றிதான் பேசுகின்றோம்.

//இங்கே பெரும்பாலானவர்கள் பதிவுலக புரட்சி செய்பவர்கள். //

:-(

நிஜத்திலும் இயங்குபவர்கள் சிலர் உள்ளனர்.

கல்வெட்டு said...

கும்மி,
தேவர் குருபூசை என்பது கட்டாய அரசியல் சடங்காகிவிட்டது அல்லவா தமிழகத்தில்? அடுத்த குருபூசைக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

வருங்காலத்தில் சீமான் அவரைச் சுற்றியுள்ள தடைகளைத் தாண்டி ஒரு நல்ல தலைவராக பரிணமித்தால் நிச்சயம் வரவேற்போம்.

**

நாம் செய்வது ஒரு கருத்தின் மீதான உரையாடலே. உரையாடலாகத்தான் ..எனக்குத் தெரிந்ததை / அறிந்ததைச் சொன்னேன். மற்றபடி ஒன்றும் அல்ல.

:-‍)))

உங்களிடம் இருந்தும் நானும் என்னிடம் இருந்து நீங்களும் ..அது மட்டும் அல்ல ஒவ்வொருவரிடமும் இருந்து நாம் அனைவருமே புதியதாகத் தெரிந்து கொள்கிறோம்.

.

ஹேமா said...

"சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?"
ஜோதிஜி...இதே கேள்வி என் மனதில் எப்போதும்.

வைகோ சுவிஸ் வந்தபோதே நான் சொல்லியிருந்தேன்..."இவர் கருப்புச் சால்வையை இழுத்து இழுத்து வலு ஆக்ரோசமாகத்தான் பேசுறார்.என்றாலும் எனக்கு நம்பிக்கையில்லை.
எங்களை வச்சு இவர் தனக்குப் புகழ் தேடிக்கொள்றாரோ என்னமோ"ன்னு !

ஜோதிஜி said...

ரதி இந்த முறை துளசி கோபால் அவர்களின் வேலையை நீங்க எடுத்துக் கொண்டு விட்டீங்க. ம்ம்ம். சரிதான். இனி அவசரம் ஆகாது என்பதை புரிந்து கொண்டேன். திருத்தியமைக்கு நன்றி ரதி.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே வயிற்றுப்பாட்டை பார்ப்பவர்கள் மட்டும் தானா?

போன்வாரத்தில் என்னை சந்திக்க வந்தவர் என்னை விட ஈழம் குறித்து மனித உரிமைகள் போன்றவற்றை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்பவர். அவர் சென்னை கோவை முதல் சுற்றி வந்து கடைசியாக என்னிடம் வந்து சேர்ந்தார். அவர் சொன்ன வார்த்தை உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

படித்தவர்களுக்கு கூட ஈழம் என்பதும் வலையுலகம் என்பதும் ஒரு துளி கூட தெரியவில்லை.

ஜோதிஜி said...

இப்பொழுது சீமானிடத்தில் இருக்கும் இந்தத் தீயில் ஒரு 40 சதவீதம் மிஞ்சி அவருடைய பயணத்தின் பாதி வழியை எட்டி விட்டாலே பெரிய அளவில் மாற்றங்களை காண முடியுமென்று தெரிகிறது.

இடிமுழக்கம் இனியவனுக்கு இந்த கூட்டத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை கொடுத்த அவருக்கு இந்த ஆளுயர பூமாலையை தூக்க முடியாமல் தூக்கி அவர் கழுத்தை நோக வைப்பதில் பெருமையடைகின்றோம்.

ஜோதிஜி said...

ரதி ஹேமா போலவே விமர்சனத்தில் ஆழமான பார்வையை கொண்டுருக்கும் ராசாவுக்கு வாழ்த்துகள்.

மாற்று அரசியல் என்பது என்னுடைய பார்வையில் முதலில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உருவாக்குதல். மக்களை விழிக்க வைத்தால் தானே அடுத்து தான் கொண்டுருக்கும் கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியும். வெறும் வறட்டு கொள்கைகளை கட்டுரைகளாக எழுதி என்ன பிரயோஜனம்? இங்கு பலரும் அலைகடல் என திரண்டு இருக்கும் பொதுமக்களே என்று கூட்டத்தில் பேசிக்கொண்டுருப்பவர்கள் முன்னால் நாலைந்து பேர்கள் தானே இருக்கிறார்கள். சமீப உதாரணம் ராமதாஸ் கூடிய கூட்டத்தில் நடந்த கூத்துக்கள். மேடையில் இருப்பவர்களை கடித்து துப்பி கீழே இறங்கிப் போய் உட்காருங்கய்யா என்று விரட்டி அடித்த கதை ராசா உனக்கு தெரியும் தானே? எங்கே போனார்கள் இரண்டரை கோடி அவர் மக்கள்?

ஜோதிஜி said...

தமிழக, இந்திய அரசியல் களத்தில் தங்கப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வரப்பட்டவர்கள் சிலர். (தயாநிதி மாறன் போல). தோளில் கைபோட்டு அழைத்து வரப்பட்டவர்கள் சிலர். (கனிமொழி போல.) இழுத்து வரப்பட்டவர்கள் சிலர். (ஸ்டாலின், ராஜீவ் போல.) சீமானையும் இழுத்து வரப்பட்டவராகதான் நான் பார்க்கின்றேன். அப்படி இழுத்து வரப்பட்டவர்கள், இழுத்துவரப்பட்ட சூழலுக்கேற்ப நடந்து பின்னர் ஒரு பாதையினைத் தேர்ந்தெடுக்கக்கூடும். அப்பொழுது கொள்கையும், நோக்கமும் வழிமுறையும் வகுத்துக்கொள்ளக்கூடும்

கும்மிக்கு பூமாலை இல்லை. என் செல்ல அன்பான தடவல் குத்து. ரதிக்கு சமர்ப்பணம்..

ஜோதிஜி said...

இப்போதைய சூழ்நிலையில், சீமான் தான் போட்டியிட நினைக்கும் தொகுதியினை முன்னரேத் தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்து வெற்றியினை உறுதி செய்ய திட்டமிடலாம்.

வைகோ உள்ளே இருக்கிறார் என்றால் ராஜீவ் காந்தி பயந்த சம்பவங்கள் எல்லாம் உண்டு. சீமான் ஒரு பால் தாக்கரே, வாட்டாள் நாகராஜ் போல வர வேண்டிய அவஸ்யமில்லை. நீங்கள் சொல்வது போல் சட்டமன்றத்திற்கு நுழைந்தால் போதுமானது. மன்றத்திற்குள் ஒரு சிங்கம் கர்ஜித்தால் போதுமானதே. மற்ற அசிங்கங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை.

ஜோதிஜி said...

சுயம் உணர்ந்தவர்கள் சிந்தித்து அடுத்த முடிவை உடனே எடுப்பார்கள்.

இந்த நம்பிக்கை எனக்கும் உண்டு.

கார்ல் மார்க்ஸ் மற்றும் சேகுவார தெரிந்த தமிழர் தங்கத்துக்கு அம்பேத்காரும் பெரியாரும் தெரியாதது வாடிக்கையானதுதான்.

இவர் மட்டுமல்ல. இங்குள்ள பலரும் உள்ளே இருக்கும் தலைவர்களைப் பற்றி முன்னெடுக்க விரும்பாமல் இருப்பது ஆச்சரியமே. வைகோ மேற்கோள் காட்டும் கதைகள் எப்போதுமே அடிப்படை பாமரனுக்கு புரியாத மேலைநாட்டு தத்துவ மேதைகள் உதிர்த்த பொன்மொழிகளாகத்தான் இருக்கின்றது.

ஜோதிஜி said...

யாரும் பேசவோ அல்லது சிறை சொல்லவோ கூட தயங்கும் ஓர் மண்ணில் ஒருவர் துணிந்து அதையெல்லாம் செய்தால் அவரை விமர்சனம் செய்தே ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலும்.


ரதி எனக்குத் தெரியாமல் இங்கே வந்து சீமானை சிறையில் சந்தித்தி திரும்புனீர்களோ? அவர் தன்னை சிறையில் சந்தித்த பலரிடமும் இதையே தான் சொல்லியிருக்கிறார்.

ஜோதிஜி said...

ஹேமா உங்கள் விமர்சனத்தை பார்த்து சிரித்து விட்டேன். துண்டு போடாமல் அவரை பேசவிட்டால் எப்படி பேசுவார் என்று பலமுறை கற்பனை செய்து பார்த்தது உண்டு.

தாராபுரத்தான் said...

சீமானாவது வளரட்டும்.

கோவி.கண்ணன் said...

கடைசிவரை கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் என்று எவருமே இல்லை. அதில் ஓரளவு கடைபிடித்து வந்தாலே போதும். கருணாநிதியின் திரா'விட' அரசியல் அன்றும் இன்றும் நினைத்துப்பாருங்கள். சீமான் மட்டும் விதிவிலக்காக இருப்பார் என்று சொல்வதற்கு இல்லை, இருந்தாலும் அவருடைய தற்போதைய நிலைப்பாடுகள் ஆதரிக்கத் தக்கதே.

சி.பி.செந்தில்குமார் said...

சீமான் பற்றிய அலசல் அருமை

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான பகிர்வு .

Bibiliobibuli said...

ஜோதிஜி,

// மக்களை விழிக்க வைத்தால் தானே அடுத்து தான் கொண்டுருக்கும் கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியும். //

முதற்கண், அது..துதுது.... "கொண்டிருக்கும்". இனிமேலும் திருத்தாவிட்டால் நான் அழுதிடுவன். :(

நல்லா சொல்லுங்க ராசாவுக்கு. கொஞ்ச நாளாவே "இயங்கியல் பொருள்முதல்வாதம்" என்று சொல்லித்திரியிறார். தமிழ்நாட்டிற்கு அது எப்படி பொருந்தும். அதைப்பற்றி எழுதுங்கள் என்றால் ஆளைக்காணோம். கொள்கைகளும், சித்தாந்தங்களும் மக்களிடம் எவ்வளவு தூரம் அவர்கள் உரிமைகள், கடமைகள் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவருமென்று நானும் யோசிப்பதுண்டு.

ஜோதிஜி, சீமானை கனடா திருப்பி அனுப்பியதில் எனக்கு கொஞ்சமல்ல நிறையவே வருத்தமுண்டு. எல்லா நேரங்களிலும் ஒருவரை சந்தித்துத்தான் அவரின் மன ஓட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.

vinthaimanithan said...

ஒரு தலைவன் என்பவன் பெரியாரைப்போல, லெனினைப்போல சமூகத்தின் இன்றைய இழிநிலைக்குக் காரணமான அனைத்தையும் எரிக்கும் கொள்கையும், இலக்கும், தீயாய் இயங்கும் செயலாற்றலும் கொண்டவனாக இருக்கவேண்டும். சீமான் இந்திய இறையாண்மையை, ஏகாதிபத்தியத்தைத் தோலுரிப்பவராக இருக்கவேண்டுமெனில் அதன் பொய்மைகளை, மக்களை உறிஞ்சி முதலாளிகளையும், மேற்கத்திய வல்லரசுகளையும் கொழுக்கவைக்கச் செய்யும் இந்திய அரசின் வால்பிடிக்கும் தனத்தையும் நார்நாராகக் கிழித்தெறியவேண்டும். இன்றைய அடித்தட்டு, நடுத்தர மக்களின் சீரழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்குக் காரணம் என்னவென்று அவர்கள் அறியமுடியாமல் அவர்களை மாயைகளுக்குள்ளும், "இதுதான் விதி"யென்று கிடக்கும் இயலாமைக்குள்ளும் ஆழ்த்தி வைத்திருக்கும் தாராளமய, தனியார்மய, உலகமயப் பொருளாதாரப் புதைகுழிகளில் இருந்து மீட்டெடுக்கும் திறன்வாய்ந்தவராக இருக்கவேண்டும். வெறுமனே இனம், மொழி என்று ஒற்றை இலக்கைக் கொண்டிருந்த அண்ணாவின் கருத்தியல் வீழ்ச்சி எல்லோரும் அறிந்ததே!

அருள் said...

சாதீய‌ அர‌சிய‌லுக்குள் சிக்காம‌ல் தற்க்காத்துகொள்வ‌து மிக‌வும் அவ‌சிய‌ம்.
மேலும் ம‌க்க‌ளிட‌ம் சென்ற‌டைய‌ உள்ளூர் பிர‌ச்ச‌னைக‌ளை கையில் எடுக்க‌ வேண்டும்.

vinthaimanithan said...

//இங்கே பெரும்பாலானவர்கள் பதிவுலக புரட்சி செய்பவர்கள். அவர் தான் நிஜத்தில் ஏதோ தன்னால் முடிந்ததை செய்கிறார். சீமானுக்கு என் வாழ்த்துக்கள். //

உண்மை... அதேநேரம் மக்களிடம் சென்று சமூகத்தளத்தில் தீவிரமாக இயங்குவதன் உதாரணமான வினவு தோழர்களையும், பிரின்ஸ்ராமா என்று வலையுலகில் அறியப்படும் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் போன்ற பெரியாரிஸ்ட்டுகளையும் மறந்துவிடலாகாது

vinthaimanithan said...

//முதற்கண், அது..துதுது.... "கொண்டிருக்கும்". இனிமேலும் திருத்தாவிட்டால் நான் அழுதிடுவன். :( //

அது வேறொண்ணுமில்லையக்கா. கீபோர்டில் 'I' என்ற எழுத்தும் 'U' என்ற எழுத்தும் அருகருகே இருக்கும். கொண் 'டிரு' என்பதற்கு 'diru' என்று டைப்பவேண்டும். di ru என்பதை அவசரத்தில் duru என்று இட்டுவிடுகிறார். தட்டும்போது கீபோர்டைப் பார்க்காமல் திரையைப்பார்த்துத் தட்டுவது மரபுமுறைத் தட்டச்சர்களின் பாணி. நான் எப்போதும் மானிட்டரைப்பார்க்காமல் கீபோர்டை மட்டும் பார்த்துத் தட்டச்சுவேன். ஏனெனில் நான் முறையாகத் தட்டச்சு பழகியவனல்ல. அப்படித் தட்டச்சும்போதே நான் பிழையான 'கீ'யைத் தட்டுகிறேன் என்பது எனக்குப் பெரும்பாலும் தெரிந்துவிடும். நிறைய வலைப்பதிவுகளில் இம்மாதிரியான எழுத்துப்பிழைகளின் வேர் எது என்பதை மிக சுவாரஸ்யமாகக் கவனிப்பது எனது பொழுதுபோக்குகளில் ஒன்று.

துளசி கோபால் said...

இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கணும்.

'விளையும் பயிர் முளையிலேயே'.... அரசியலுக்கு ஒத்துவராது:-)

vinthaimanithan said...

//மக்களை விழிக்க வைத்தால் தானே அடுத்து தான் கொண்டுருக்கும் கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியும்// மக்களை விழிப்படையச் செய்வதே, அவர்களின் தாழ்நிலைக்குக் காரணமானவற்றை மிகச்சரியாக விளக்கும் சித்தாந்தங்களின்மூலமும், அவற்றிற்கான மாற்றுக்களை முன்வைப்பதன் மூலமும் மட்டுமே முடியும் என்பது என் தாழ்மையான கருத்து

Prakash said...

Seeman have missed golden opportunity during 2009 LS election, he should have contested in Sivaganga against PC, definitely he would have won and made entire India to look at him.

Seeman should focus more on local issues in addition to Eelam, and then only he can reach out the mass. Also he need to include some popular personalities who accepts his political views, into his party as he alone can't reach out whole tamil nadu, especially women voters.

http://thavaru.blogspot.com/ said...

சீமான் உடைய உணர்ச்சி வேகம் ஏற்றதல்ல. ஈழ விசயத்தில் தன் ஆர்வலர்கள் இவரை பின்பற்றலாம்.மற்றப்படி தமிழக அரசியலில் முன்னேற நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அன்பின் ஜோதிஜி.

? said...

ttp://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !

ஜோதிஜி said...

கேள்விக்குறி நண்பா இதென்ன கேலிக்குறி போல. வினவு தளத்தில் வலையுலக நண்பர்கள் ஒவ்வொருவரும் எழுதிய பல கட்டுரைகள் உள்ளடங்கிய புத்தகம் வெளிவருவதை நல்ல விதமாகவே தெரியப்படுத்தி இருக்கலாமே?

என்னுடைய வாழ்த்துகள்.

தவறு

இன்னும் ஒரு வருடத்தில் சீமான் குறித்து அவரின் கொள்கைகள் நோக்கங்கள் குறித்து நாம் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பிரகாஷ் நீங்கள் சொன்ன கருத்து உண்மையும் கூட. ஆனால் கடைசி ஏழு நாட்கள் தான் அவரை வெளியே இருக்கும்படி செய்தார்கள்.

ஜோதிஜி said...

விந்தையாரே

தாழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ராமதாஸ் திருமாவளவன் என்ன செய்தார்கள்? செய்வார்கள்?
இடைச்செருகல் தகவல் ஒன்று உண்டு. நம்ம குழலி (தெரியும் தானே?) யிடம் பேசியதைத்தான் இங்கே எழுத வேண்டும் போல் உள்ளது.

கடந்து போன பத்து வருடங்களில் ஒவ்வொரு தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டுருப்பவர்கள் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்களை மட்டுமாவது சிறப்பான கல்வியறிவு கொடுத்து அல்லது அதற்கு உதவிக்கரம் நீட்டியிருக்கும் பட்சத்தில் அவரவர் இனத்தில் இன்று ஒரு லட்சம் பேர்களாவது நல்ல பதவியில் அமர்ந்தது தங்கள் இனத்துக்கான அரசியல் சமூக உரிமைகளை பெற்று இருக்கக்கூடும்.

கொடிபிடிக்க மட்டும் தான் தொண்டர்கள். ஒவ்வொருவரும் முன்னேறி விட்டால் இவர்கள் பாடு திண்டாட்டம். சமீப அன்புமணி இராமதாஸ் பேசும் துவேஷ பேச்சுக்களை படித்துப் பார்க்கவும்.

உணர்ந்தவர்கள் தலை
உணராதவர்கள் தான் என்றுமே வால்.

ஜோதிஜி said...

துளசி கோபால்

நச் நச்.

மக்களிடம் சென்று சமூகத்தளத்தில் தீவிரமாக இயங்குவதன் உதாரணமான வினவு தோழர்களையும், பிரின்ஸ்ராமா என்று வலையுலகில் அறியப்படும் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் போன்ற பெரியாரிஸ்ட்டுகளையும் மறந்துவிடலாகாது

ராசா இங்கே ஏற்கனவே யார் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள்? ஏன் சூடான பதிவு போன்ற பல "அக்கறை"யான விசயங்கள் கலகலத்துக் கொண்டுருக்கிறது?

அருள் வருக. உங்கள் எண்ணம் தான் என்னுடைய இந்த பதிவின் நோக்கமும்.

விந்தை மனிதா ஆரம்பத்தில் மதிமுக வில் இருந்த காரணத்தினால் என்னவோ வைகோ போலவே சொற்பொழிவு சாயலில் விமர்சனமும் இருக்கு.
கேட்க எழுத படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் யாரு கிழிக்கிறது? இப்ப தயாரிப்பாளர் தாணுக்கிட்ட போய்க் கேட்டா வண்டி வண்டியா ரொம்புற அளவுக்கு கண்ணீர் விட்டு அழுவாரு????

சிவம் அமுதசிவம் said...

தமிழா தமிழா..... நீ எப்படா திருந்துவை?
விமர்சன்ம் எழுதினாலும் சரி... பின்னூட்டம் எழுதினாலும் சரி ...
அடுத்தவனில உள்ள குற்றங்களுக்குத்தான் பூதக்கண்ணாடி...

வைகோ, திருமா, இராமதாசு,அன்புமணி என்றெல்லாம் சுற்றிவந்து, கடைசியா சீமானுக்கும் ஒரு செக் வச்சு.....
ஆனா முக்கியமான ஒன்னை விட்டுட்டியே!
அதுதான் நாம!...
இலட்சிய வெறியோட இறங்கின இவங்களையெல்லாம் , தில்லுமுல்லுத் திராவிடக்கட்சிகளுக்கை அமிழவச்சது யார்?
நாமதானே!
இன்னைக்கு 176352 கோடி.
நாளைக்கே 176353 கோடி வந்தா , இதை மறந்துபோகிறமே!
அஞ்சுக்கும் பத்துக்கும் ஓட்டை விக்கிறமே....
மொதல்ல அவனவன் வீட்டபோய் ஒழுங்கா கண்ணாடியைப் பாப்பாம்!
அதுக்குப்பிறகு, வைகோவில் தொடங்கி அன்புமணி வரைக்கும் விமர்சிப்போம்! சரியா?

ஜோதிஜி said...

ஜோதிஜி, சீமானை கனடா திருப்பி அனுப்பியதில் எனக்கு கொஞ்சமல்ல நிறையவே வருத்தமுண்டு. எல்லா நேரங்களிலும் ஒருவரை சந்தித்துத்தான் அவரின் மன ஓட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.

ரதி கனடாவில் இருந்து சீமானை வெளியேற்றும் போது நடந்த நிகழ்வு இது.

சீமானை கைது செய்து விமான நிலையம் வரைக்கும் கொண்டு செல்ல தனது இரும்பு பிடிக்குள் வைத்திருந்தவர் கனடாவில் உள்ள சிங் இனத்தை சேர்ந்த அதிகாரி.

அதிகாரி கேட்ட கேள்வி

இராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிக்கிறாயே? உனக்கு வெட்கமாக இல்லையா?

சீமான்... நீ இந்திரா காந்தியை கொன்றாயே உனக்கு கேவலமாக இல்லையா?

கப்சிப்

தறுதலை said...

சீமான் வரும் தேர்தலில் 'காங்கிரசை கருவறுப்போம்' என்னும் முழக்கத்துடன் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்பதை குறிக்கோலாகக் கொள்ள வேண்டும். காங்கிரசை ஏன் தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்களும், மக்களிடயே வெறுப்பும் இருக்கின்றது, இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்சிகளில் இதை சொல்லக்கூடிய தகுதி சீமானுக்கு மட்டுமே உண்டு.

அதே வேளை, எக்காரணம் கொண்டும் அது காங்கிரஸ் எதிப்பு அணிக்கு சாதகமாக அமையக் கூடாது. ஆகவே, காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கல் போட்டியிட வேண்டும். பார்க்கலாம் யார் யார் கை கொடுக்கிறார்கள், முடிவு என்ன என்பதை.

இது முதல் படி.
----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-டிச'2010)

Anonymous said...

பிரமேந்திரா:சீமான் ஒருநாள் அரசியல்வாதியாக வருவார்

க.பாலாசி said...

அரசியலிலும் உங்களது பார்வை தெளிவாகவே இருக்கிறது ஜோதிஜி.. நல்ல கட்டுரை.. ஆரம்ப காலகட்டங்களில் நானும் வை.கோ வை அரசியல், இலக்கியவாதியாக ரசித்தவன். பின்னர் அவரது செயல்பாடுகளில் நிலவிய குழப்பம் பெரிய வட்டமாக மாறவேண்டியவரை புள்ளியாக மாற்றிவிட்டது. பார்ப்போம் சீமானும் இப்போது அரசியல் நிலைபாடுகளில் ஈர்த்துவருகிறார்.. போகப்போகத்தான் தெரியும்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நன்கு அலசியுள்ளீர்கள்.

சீமான் ஒரு விடிவெள்ளியாக மாற தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்வது நல்லது. உணர்ச்சி வசப்பட்ட பேச்சு என்றுமே சரியான் முடிவைத்தருவது இல்லை. இது சினிமா அல்ல சீன்மா(சீனை செலக்ட் செய்யும் பெருச்சாளியின் இடம்).
மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமில்லாதது.

வாய்ப்புக்கு நன்றி.

கல்வெட்டு said...

.

கோவி,
//கடைசிவரை கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் என்று எவருமே இல்லை. அதில் ஓரளவு கடைபிடித்து வந்தாலே போதும். கருணாநிதியின் திரா'விட' அரசியல் அன்றும் இன்றும் நினைத்துப்பாருங்கள். சீமான் மட்டும் விதிவிலக்காக இருப்பார் என்று சொல்வதற்கு இல்லை, இருந்தாலும் அவருடைய தற்போதைய நிலைப்பாடுகள் ஆதரிக்கத் தக்கதே.//

கொள்கைகள் காலப்போக்கில் சமரசம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை அளவிற்கு தேய்ந்து போகும். கருணாநிதியின் திரா'விட' அரசியல் நல்ல எடுத்துக்காட்டே.

ஆனால், உங்கள் பதிலில் உள்ளபடி "ஓரளவு கடைபிடித்து வந்தாலே போதும்" என்ற அளவிலாவது ...............

ஓரளவு கடைபிடிக்க இலக்கு. முதலில் நோக்கம் , கொள்கை வரையறை வேண்டுமல்லவா?


சீமானின் அரசியல் கட்சியின் நோக்கம் ,இலக்கு கொள்கை என்று ஏதாவது உண்டா?

Why they exists as political party?

.

ஜோதிஜி said...

கல்வெட்டு கும்மி உங்கள் இருவருக்கும் என் தனிப்பட்ட நன்றிகள். இருவரும் விளையாடியதில் நான் எழுதிய எழுத்துக்களே மறைந்து போனது.

அப்புறம் கோவிகண்ணன் சொன்னதற்கு நீங்க கேட்ட பதிலுக்கும் சேர்த்து?

பத்தோடு ஒன்றாக கட்சி தொடங்கி எதிர்கால முதல் அமைச்சர் என்று கோஷம் போட விரும்பவில்லை. முதலில் ஒரு இனம் குறித்து மொழி குறித்து சமூக அக்கறை குறித்து இது போன்ற பலவற்றை சம கால இளைஞர்களின் மனதில் தேவைப்படும் அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்க வேண்டும். அதன் பிறகே இந்த ஓட்டரசியல்.

அவர் சொன்னது இது.

ஜோதிஜி said...

இது சீன் செய்யும் உலகமல்ல. ரசித்த வரிகள் விக்கி. நன்றிங்க.

நன்றி பாலாசி. விழா வெற்றியடைய வாழ்த்துகள்.

பிரமேந்திரா இங்க அரசியல்வாதியாக வருவது எளிது. நீடீப்பது தான் கடினம்.

தறுதலை (என்னவொரு பெயர் தேர்வு?) சங்கரபாண்டி செந்தில் தளத்தில் கொடுத்த விமர்சனம் போலவே இருக்குங்க.

ஜோதிஜி said...

சிவம் அமுத சிவம்

வருக உங்கள் முதல் விமர்சனத்திற்கு நன்றி. உங்கள் வார்த்தைகளில் உள்ள ஆதங்கம் நியாயமானதே.

விந்தைமனிதன், ஹேமா, தெகா, ரதி இவரின் தளத்தில் உள்ளே சென்று பார்க்கவும். ஆவணம்.

Thomas Ruban said...

விரிவாக அலசியுள்ளீர்கள் நன்றி சார்..

ஓரளவுக்கு நேர்மையான, சிறந்த பேச்சாளரும்மான வைகோவே டம்மிபீஸ் ஆயிட்டாரு சீமானின் நிலைமை என்னவாகிறது என்று பொருந்திருந்து பார்க்கலாம்.

// சீமான் ஒரு பால் தாக்கரே, வாட்டாள் நாகராஜ் போல வர வேண்டிய அவஸ்யமில்லை//

பால் தாக்கர் எப்படியோ தெரியவில்லை வாட்டாள் நாகராஜ் ஒரு கோமாளி சார் இங்கிருக்கும் மீடியாக்கள்,மக்கள் எல்லோரும் அவரை அப்படித்தான் பார்க்கிறார்கள்.

(அரசியல்வியாதிகள் பயப்படும் ஒரே ஆயுதம் ஓட்டு மட்டுமே,அதை சரியாக, நேர்மையாக பயன்படுத்த வேண்டும்.கட்சிகள் பார்க்காமல், உங்கள் தொகுதியில் போட்டியிடும் நேர்மையாளருக்கு வாக்களியுங்கள். என்று உங்கள் ஒவ்வொரு பதிவிலும் முடிந்தவரை வலியுறுத்துங்கள் சார்).


பகிர்வுக்கு நன்றி சார்.

கல்வெட்டு said...

.

ஜோதிஜி,

//பத்தோடு ஒன்றாக கட்சி தொடங்கி எதிர்கால முதல் அமைச்சர் என்று கோஷம் போட விரும்பவில்லை. முதலில் ஒரு இனம் குறித்து மொழி குறித்து சமூக அக்கறை குறித்து இது போன்ற பலவற்றை சம கால இளைஞர்களின் மனதில் தேவைப்படும் அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்க வேண்டும். அதன் பிறகே இந்த ஓட்டரசியல்.

அவர் சொன்னது இது.//


அரசியல் கட்சி என்பது அதிகாரத்தை அடையவே. அரசியல் கட்சி மற்றும் கூட்டணிகள் மூலம் அடிப்படை மாற்றங்களை (மனதில் முதலில் ஒரு இனம் குறித்து மொழி குறித்து சமூக அக்கறை குறித்து) கொண்டுவரமுடியும் என்று நினைப்பது நிச்சயம் தவறு.

பெரியாரும் அம்பேத்காரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. சமூக மாற்றத்திற்கும் அரசியல் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. முதலில் இவரிடம் உள்ள சாதி அடையாளத்தையும் அது சார்ந்த அல்லக்கைகளையும் விரட்டிவிட்டு நான் ,எனது நோக்கம் என்று தெளிவாக அறிவிக்க வேண்டும்.

இவர் யாரை தமிழ் இனம் என்கிறார்? அதை முதலில் வரையறுக்க வேண்டுமே. பள்ளரை பறையரும் , நாடாரை தேவரும், தேவரை வெள்ளாரும் , வெள்ளாரரை அய்யரும் பகுத்துப் பார்க்கும் நிலை.

அதைத் தாண்டி மதம். எந்த ஒரு இஸ்லாமியரும் எனது முதல் அடையாளம் தமிழ் அடுத்துதான் இஸ்லாம் என்று இஸ்லாத்தை இரண்டாவதாக வைக்க மாட்டார்கள். எந்த ஒரு வர்ணாசிரம சாதிமக்களும் வர்ணாசிரமச் சாதியை இரண்டாவதாக வைக்க மாட்டார்கள்.

எல்லா அடையாளங்களையும் (சாதி.மத) இரண்டாவதாக வைத்துவிட்டு தமிழ் என்ற அடையாளத்தை முன்னிருத்தி சேர்ந்திருக்க முடியுமா? புலம் பெயர்ந்த யாழ் வெள்ளாளத் தமிழர் ஒருவர் வீட்டில் இன்னும் அடுத்த சாதி கேவலமாகவே பார்க்கபடுகிறது. இத்தனைக்கும் இருவரும் போரால் பாதிக்கப்பட்டவர்களே. இழப்பு இருவருக்குமே. யாரை நோக?

குழந்தைகள் சேர்ந்து விளையாடுவதுகூட மறைமுகமாக மறுக்கப்படுகிறது.


:-(((


முதலில் இவர் பசும்பொன்னை விட்டு விலகி வரட்டும் பார்க்கலாம்.

.

ஜோதிஜி said...

ஈழம் குறித்து நீங்க சொன்ன நிதர்சனம். என்னுடைய புத்தகத்தில் இதை ஒரு அத்தியாயம் முழுக்க விபரமாய் எழுதியுள்ளேன். அப்புறம் சம கால அரசியலில் தெரிந்த பேய் தெரியாத பிசாசு என்ற இரண்டு வாய்ப்புகள் தான் உண்டு. ஆனால் இரண்டுக்கும் நடுவே உள்ளவர்களின்“

குணம் நாடி குற்றமும் நாடி அதை மிகைநாடிப் பார்த்தல் வேண்டும் என் கருத்து.

ஜோதிஜி said...

கோவி கண்ணன் உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

ரூபன் நீங்க பெங்களூரில் இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.

vinthaimanithan said...

கல்வெட்டு சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்... அரசியல்ரீதியான, சமூகரீதியான மாற்றங்களைக் கோரும் இயக்கம் முதலில் தனது கொள்கைகள், அவற்றை அடைவதற்கான தெளிவான திட்டங்கள் இவற்றோடுதான் மக்களிடம் செல்ல வேண்டும். எம்ஜிஆரின் "அண்ணாயிசம்" போல காமெடிக்கூத்தாகிவிடக்கூடாது.

"சித்தாந்தம் இல்லாத இயக்கம் முரட்டுத்தனமானது;
இயக்கம் இல்லாத சித்தாந்தம் வறட்டுத்தனமானது."

இது ஜோசப் ஸ்டாலின் சொன்னது.

vinthaimanithan said...

ஜோதிஜி,
விளையாட்டாக ஒரு கணக்குப்போட்டுப் பாருங்கள்... ஒரு 'நேர்மை'யான வேட்பாளர் தேர்தலில்(சட்டமன்றம் என்றே கொள்வோம்) நின்று வெற்றிக்கான அல்லது கணிசமான வாக்குக்களை வாங்க (ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்றே கொள்வோம்) எவ்வளவு ரூபாய் தோராயமாகச் செலவழிக்க வேண்டும்?

1)டெபாஸிட்
2)போஸ்டர், பிட் நோட்டீஸ்
3)சுமார் 50-60 பஞ்சாயத்துக்களைச் சுற்றிவந்து பிரச்சாரம் செய்ய கார்வாடகை, தொண்டர்களுக்கான உணவு, உடை, மைக்செட்டு இன்னபிற...
4)பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் இவற்றுக்கான செலவு
5)இன்னும் பட்டியலிட நிறைய இருக்கும்... நினைவுக்கு வரவில்லை... இவை அடிப்படைச் செலவினங்கள் மட்டும்.

ஒரு அரசியல் இயக்கத்தின் சார்பில் நின்றால் அவர்சார்பாக செலவினங்களை இயக்கம் பொறுப்பேற்கும்... சுயேச்சை என்றால்? சொந்தச்செலவு...

கைக்காசை லட்சங்களில் செலவழிக்கும் வேட்பாளர் அதை மக்கள்நலனுக்காகச் செலவு செய்யவில்லை... ஒரு தொழிலுக்கான முதலீடாகத்தான்...

அரசியல் இயக்கம் என்று பார்த்தால் இந்தியாவின் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தையும் பாருங்கள்... அவை த்மது கட்சி மற்றும் தேர்தல் நிதியை பெரு,சிறு,குறு முதலாளிகள் மூலமாகவே திரட்டுகின்றன. கட்சித் தொண்டர்கள் மூலம் திரட்டும் நிதி போஸ்டர் ஒட்டும் பசைச்செலவுக்குக்கூடக் காணாது :)

எனக்குத்தெரிந்து இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே தமது பெரும்பாலான (கவனிக்க: பெரும்பாலான) நிதியாதாரத்தை நேரடியாக மக்களிடம் உண்டியல் மற்றும் இன்னபிற வழிகளில் திரட்டுகின்றன.

எனவே தேர்தல் மூலம் அதிகாரத்தை அடைந்து மக்கள்சேவையாற்ற நினைப்பது... :))))

vinthaimanithan said...

தனிப்பட்ட ஒரு சந்திப்பின்போது (போன சட்டமன்றத்தேர்தல் சமயம்) எல்.கணேசன் சொன்னது:
"1993 ல மதிமுகவோட முதல்மாநாட்டுக்கு லட்சக்கணக்குல வந்த கூட்டத்தைப் பாத்துட்டு வைகோ உட்பட எல்லாருமே மலைக்கோட்டையில் இருந்து நேரே செங்கோட்டைக்கு அப்டீன்னுதான் நெனச்சாங்க. நான் மட்டும் நம்பலியே! ஏன்னா வந்ததுபூரா விசிலடிச்சான்குஞ்சுக் கூட்டம்"

:))))))))

உமர் | Umar said...

//1993 ல மதிமுகவோட முதல்மாநாட்டுக்கு//

அந்த மாநாட்டில் ஒரு கவிதை வாசிக்கப்பட்டதாகப் படித்தேன். (சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை.)

எட்டுச் சுவை
பட்டுத் தமிழ்
கட்டித் தயிர்
வட்டில் நிறை
கொட்டித் தர
கொற்றனூர் சோழனூர் வருவீரே.!

(இக்கவிதையின் உச்சரிப்பு வடிவம் வேறு )

இக்கவிதை வாசித்தவர் நீங்களா விந்தையாரே?

-
ஜோதிஜி மன்னிக்கவும் பதிவிற்கு சம்பந்தமில்லை. இருந்தாலும் கேட்டுவிட்டேன்.

vinthaimanithan said...

@ கும்மி
இல்லை தலைவரே! அந்த டைம்ல நான் டவுசர் பாண்டி :))) எட்டாங்கிளாஸ்! அப்ப தேர்தல் சமயத்துல கொடிபிடிக்கிற கட்சிப்பணி மட்டும் 'ஆத்தி'கிட்டு இருந்தேன் :)))

உமர் | Umar said...

@விந்தைமனிதன்

அந்தக் கவிதையை எழுதியவர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள். ஜோதிஜி கொடுக்கும் மாலைகளை எல்லாம் அவர் கழுத்தில் போட்டு அழகு பார்க்கவேண்டும்.

Bibiliobibuli said...

இந்த ஜோதியில் ஐக்கியமாகத்தான் விருப்பம். கடமை அழைக்கிறது. ராஜாராமன் அப்புறமா வச்சுக்கிறேன் கச்சேரியை.

Admin said...

சீமானுடைய பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வருபவர்களில் நானும் ஒருவன். ஈழம், தமிழ், தமிழர்கள் பற்றி உணர்ச்சி வார்த்தைகளை பேசினால் தமிழர்களை கவர்ந்து விடலாம் சுலபமாக அரசியல் நடத்தி நிலைத்து நிக்கலாம் என்று சிலர் உணர்ச்சி வார்த்தைகளை பேசுவதுண்டு.

சீமான் இவர்கள்போல் இல்லாது உண்மையான தமிழ் பற்றாளனாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

ஆரம்பத்தில் சீமானில் எனக்கு முற்று முழுதான நம்பிக்கை இருந்தது அது இப்போது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

a said...

thalaipponra kavalai enakkum undu. thadam maramal payanitharendral thanippattu nirkka mudiyum...

suneel krishnan said...

சீமான் ,முதற்கட்ட சோதனைகளை கடந்து விட்டார் .
அவர் முழு அரசியல் சக்தியாக பரிணமிக்க முடியுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் ...
பின்னூட்ட விவாதங்கள் பல விஷயங்களை முன் வைக்கிறது ,பதிவர் கல்வெட்டு,ரதி,கும்மி அனைவருக்கும் நன்றிகள்

Butter_cutter said...

என்னுடைய பார்வையில் மருத்துவர் ராமதாஸ் மேல் அவரின் அரசியல் கொள்கையின் மேல் ஏராளமான காழ்புணர்ச்சி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் உருவாக்கிய "மக்கள் தொலைக்காட்சி" ஆச்சரியமானதே.

வழக்கம் போல் அருமை

'பரிவை' சே.குமார் said...

தெளிவா எழதி இருக்கீங்க ...

சீமான் இவர்கள்போல் இல்லாது உண்மையான தமிழனாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

ஜோதிஜி said...

வாங்க குமார். நான் எழுத்துப் பிழையாக எழுத இரண்டு பேர் வெளுத்து வாங்குறாங்க. நீங்களும் அவசரத்தில் எழுதியிருப்பீங்க போல. உண்மைத்தமிழனாக இருக்கிறாரோ இல்லையோ கொள்கைகளில் முடிந்த அளவிற்கு சமரசம் செய்து கொள்ளாத அளவிற்கு இருந்தாலே அதாவது கோவி கண்ணன் மாதிரி தொடர்ந்தால் போதுமானது தானே?

சிட்டிபாபு அடிக்கடி உள்ளே வருவீங்க போலிருக்கே?

சுனில் என் எண்ணத்தை நீங்களே எழுதிவிட்டீங்க. கும்மி, கல்வெட்டு ரதிக்கு என்னுடைய நன்றிகளும்.

யோகேஷ் முடியும் என்ற இந்த ஒற்றைச் சொல்லில் தான் காலமும் கடக்கின்றது. நன்றி நண்பா.

சந்ரு சீமானை மற்றவர்களுடன் ஒப்பீட்டளவில் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை.

Unknown said...

ஒரு மாற்று அரசியலுக்கான விதை சீமானிடம் இருக்கு, ஆனால் அவர் அரசியலின் அரிச்சுவடியை இன்னும் சரியாக கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவில்லை.

ஜோதிஜி said...

செந்தில் விந்தை மனிதனிடம் புரிய வையுங்க.

கும்மியாரே ஒரு கவிஞர் உள்ளே ஒளிந்து கொண்டுருப்பார் போல. இதை விட்டு தாடிகீடின்னு ஏனிந்த இம்சை? நேரில் பார்க்கும் போது நிச்சயம் மாலை உண்டு நண்பா.

விந்தையாரே ரதியைப் போல விமர்சனம் என்று வரும் புகுந்து விளையாடும் மர்மம் என்ன?

கல்வெட்டு said...

.
சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
http://periyaryouth.blogspot.com/2009/11/blog-post.html
.

உமர் | Umar said...

//கும்மியாரே ஒரு கவிஞர் உள்ளே ஒளிந்து கொண்டுருப்பார் போல//

தமிழகத்தில் ஆறு கோடி கவிஞர்கள் இருப்பதாக விந்தையார் கூறியிருந்தார். நீங்கள் கூறியதைப் பார்த்தால், இனி ஆறு கோடியே ஒன்று என்று கூற ஆரம்பித்துவிடுவார்.

//தாடிகீடின்னு ஏனிந்த இம்சை//

நம்ம ஹோம் கிரவுண்ட் அதானே. அங்க அடிச்சி ஆடாம, வேற எங்க வெளையாட போறோம்?

சாமக்கோடங்கி said...

வணக்கம்.. நான் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்துக் காரன்... உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி...(உண்மையா பின்னூட்டம் போட இந்தப் பதிவை படிக்கவில்லை..அப்புறமா வந்து படிச்சிட்டு பின்னூட்டம் போடறேன்..)

நன்றி..

உமர் | Umar said...

@கல்வெட்டு

சுட்டிக்கு நன்றி நண்பா. 'தம்பி' திரைப்படம் குறித்தும், சீமானின் வேறு பல பேட்டிகள் குறித்தும், முத்துராமலிங்கத்தேவர் விஷயத்தில் இரட்டை நிலை குறித்தும் மிக நன்றாக எழுதியுள்ளார். சீமான் தன் மீதிருக்கும் இந்தக் கறையை போக்கவும், இனி ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் பெரும்பாலானவர்களின் பார்வையாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

அந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் மகிழ்நன் கூறியிருப்பதை இங்கும் பதிகின்றேன்.

''சீமான் குழப்பவாதியா? இல்லையா என்பதைவிட..நானறிந்த வரையில் நல்ல மனிதர்..இந்த பதிவு....அவரின் தவறான அரசியல் பாதையை சுட்டிக்காண்பித்து...அவரை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்ற தோழமை உணர்வுடன் கூடிய பதிவே இது..

இதுவரை..வந்த அரசியல்வாதிகளால் தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியாமைக்கு காரணம் சாதி வெறிக்கு ஊக்கம் கொடுத்து அரசியல் லாபம் கொண்டதுதான்...

தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அம்மக்களும் தமிழர்கள்தான் என்று சீமான் சமாதானம் சொன்னாலும்...அவர்கள் தமிழர்களை ஒடுக்கும் பொழுது கண்டித்தால்தான் தான் தொடங்கியிருக்கும் அமைப்பின் பெயருக்கு ஏற்றபடி "நாம் தமிழர்" என்ற அடையாளத்தை தமிழர்க்ளிடையே நிறுவ முடியும்."

ஜோதிஜி said...

கல்வெட்டு என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. கருப்பு பின்புலத்தில் ஒரு தளம் இருந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். கும்மி எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

அப்புறம் கும்மி

ஆயிரத்தில் ஒருவன் என்பது போல
ஆறரைகோடி கவியில் நீங்களும் ஒரு கவிஞர்.

கனிமொழி அம்மையார் தலைமையில் ஒரு விழா நடத்திவிடுவோமா?

உமர் | Umar said...

//ஆறரைகோடி கவியில் நீங்களும் ஒரு கவிஞர்.//

என்னைக் கவிஞனாக்காமல் விடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டீர்கள் போல. :-(

ஜோதிஜி said...

நான் எழுதினா ஹாலிவுட் பாலா திட்டுவாரு. ஹேமா உதைக்க வருவாங்க.

உங்களுக்கு என்ன?

நெட்டும் பிட்டும் என்று தொடங்கலாமே?

Bibiliobibuli said...

ஜோதிஜி, வேறெந்த விமரசனங்களிலும் சமீபத்தில் நீங்கள் இவ்வளவு சந்தோசமாய் பின்னூட்டம் போட்டு நான் படித்ததில்லை.போட்டு தாக்குறீங்க.

கல்வெட்டு said...

.

வைகோவை (மாற்று சக்தியாக) கவனித்து காய்ந்துபோனேன்.அனைவரையும் ஏமாற்றிவிட்டார் வைகோ. மிகவும் மலிந்த அரசியல்வாதியாகப் போய்விட்டார்.

**

சீமான்:
என்னளவில் சீமான் ஈழம் என்ற ஒற்றைக் குறிக்கோளால் கவரப்பட்ட ஒரு நல்ல மனிதர்.

ஆனால் அவருக்கு தமிழக அரசியலோ அல்லது தமிழக சாதிக் கொடுமைகளின் வரலாரோ கொஞ்சமும் தெரியவில்லை. இது குற்றமல்ல. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால் ஈழம் மற்றும் பிரபாரனின் மீது அன்பு வைத்திருக்கும் இவருக்கு ஈழ அரசியலும் , அதன் சாதி மத வேறுபாடுகளால் அங்கேயே தமிழர்களுக்குள் உள்ளே உள்ள மனக்கசப்புகளும் அது சார்ந்த வரலாறும் தெரியவில்லை எனபதே வருத்தம்.

"எல்லாம் தமிழர்" என்று சொல்லவே முடியாது. ஈழத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் (தமிழ் பேசுபவர்கள்) தங்களை ஈழத் தமிழர் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவர விரும்பவே இல்லை. அவர்களுக்கு இஸ்லாம் என்ற அடையாளமே முதன்மையானது.

மேலும் தமிழ் ஈழம் என்பதில் மலையகம் இல்லை. அது ஒரு கொடுமையான தனிப்பிரச்சனையே என்றாலும் இவருக்கு அந்த வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.

**

சும்மாங்காட்டியும் "நாம் தமிழர்" என்று சொன்னால் போதாது. யார் தமிழர் என்பதற்கான தேடலும் அதை அறிந்து அவர்களை எப்படி இணைக்க வேண்டும் என்ற திட்டமும் வேண்டும்.

சும்மா தேவரும் தமிழர், இம்மானுவேலும் தமிழர் என்றால் , ஜெயமோகன் போன்ற கதைபுக் ரைட்டர்ஸ் சொல்லும் "தேவர் தேசியவாதி. தேவர் ஜெயந்தி நல்லது" என்ற கருத்தில்தான் முடியும்.

சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’
http://sugunadiwakar.blogspot.com/2009/11/blog-post.html
***

சீமானிடம் தமிழ்களின் காயங்களுக்கான் மருந்து இருந்தாலும் எங்கே புண் என்பது தெரியாமல் இவரால் மருந்தை இடமுடியாது.

Thekkikattan|தெகா said...

சீமானிடம் தமிழ்களின் காயங்களுக்கான் மருந்து இருந்தாலும் எங்கே புண் என்பது தெரியாமல் இவரால் மருந்தை இடமுடியாது.//

இதனை கலந்துரையாடி வெளிக் கொணரவே இந்தத் தளம் உண்மையிலேயே உதவும் என்று நினைத்திருந்தேன். அந்த திசையிலேயே பயணித்தும் வருகிறது. நன்று!

கண்டிப்பாக, கல்வெட்டு எடுத்து வைத்திருக்கும் வாதங்கள் மிகவும் அவசியமான கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம். அனைவரையிம் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டுமானல், எது போன்ற விடயங்கள் பிரித்துப் போட்டு விலகிச் செல்ல வைக்கிறது என்ற அடித்தள வரலாறு அறிவது அவசியமாகிறது.

பிரச்சினையின் ஆழத்தை வைத்து நெருப்பு உண்டாக்கவில்லையென்றால் விரைவிலேயே நீர்த்துப் போய்விடும். அதனை எடுத்துச் சென்று சீமானுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இது போன்ற ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அமையட்டும் என்று வாழ்த்தி, வரவேற்று அமர்கிறேன்... ச்சோடா ப்ளீஸ் :)).

//வேறெந்த விமரசனங்களிலும் சமீபத்தில் நீங்கள் இவ்வளவு சந்தோசமாய் பின்னூட்டம் போட்டு நான் படித்ததில்லை.போட்டு தாக்குறீங்க//

ரதி, அதுக்கொரு காரணமிருக்கு ...ஜோதிஜிக்கு, சேர்வாரு சரியில்ல கொஞ்ச நாளா ... :)) அதான் இந்த புத்துணர்ச்சிக்கு காரணம் போல... அப்பூடீங்களாய்யா ;)

Bibiliobibuli said...

//ஜோதிஜிக்கு, சேர்வாரு சரியில்ல கொஞ்ச நாளா ... :)) அதான் இந்த புத்துணர்ச்சிக்கு காரணம் போல... அப்பூடீங்களாய்யா ;)//

என்ன ஜோதிஜி, அப்பூடியா!! :)))

ஜோதிஜி said...

ரதி ஒரு நாள் ஓய்வில் நிமிட நேரத்தில் உண்டான சிந்தனை இது. கடந்த ஒரு வருடமாக நண்பர்கள் ஒவ்வொருவரும் இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே வருகிறார்கள். ஆனால் இவரை சந்திக்கும் எவரும் நான் விரும்பும் அளவிற்கு சிறையில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக புரிய வைக்க தெரியவில்லை. அதிகபட்சம் நான் பெற்ற தகவல்கள்

கல்லூரி மாணவர்கள் அதிக அளவு சிறைய சந்திக்கச் சென்றார்கள்.
நாம் தமிழர் இயக்கம் தொடங்கும் போது 1.5 லட்சத்திற்கும் அதிகமான பேர்கள் கூடினார்கள். குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் அதிகம். எந்த பத்திரிக்கையும் மூச்சு விடவில்லை.
சிறையில் சந்திக்க செல்பவர்கள் கொண்டு செல்லும் முக்கிய பொருட்களில் புத்தகங்கள் அதிகமாக இருந்தது. ஏறக்குறைய ரொம்ப வழிந்து வைக்க இடமில்லை என்கிற அளவிற்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒவ்வொரு வாரமும் போய்க் கொண்டேயிருந்தது.

ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் தான் இவருக்கு உள்ளே தேவைப்படும் அத்தனை இயல்பான உதவிகளை செய்து கொடுத்தார்கள். இந்த காணொளியில் பேசும் வார்த்தைகள் சற்று நாகரிகமானது. இயல்பாக நெருக்கமாக பேசுபவர்களிடம் இவர் உரையாடும் விதம் சிரிப்பை வரவழைத்து விடும். மொத்தத்தில் கலைஞர் கேட்டால் ஒரு மாதிரியாக ஆகி விடுவார்.

ரதி சந்தோஷத்திற்கு காரணம் இந்த அளவிற்கு இது எதிர்பார்ப்பை தூண்டும் பெயர் என்று நான் கனவிலும் யோசிக்கவில்லை. அழைத்த நண்பர்கள் ஆச்சரியமாக விசாரித்தார்கள்.

எங்கே செல்லும் பாதை?

உமர் | Umar said...

//எங்கே செல்லும் பாதை? //

அவரை நேரில் சந்தித்து இவை குறித்து பேச நம் நண்பர்கள் முயற்சிக்கின்றனர்.

ஜோதிஜி said...

அப்புறம் நீங்க சுய புராணம் தேவையா என்று கேட்ட போது நானே யோசித்தேன். ஆனால் பாலாசி விமர்சனத்தைப் பார்த்த போது தான் நான் மனதில் நினைத்து வைத்திருந்தது சரியெனபட்டது. அவரவர் வாழ்க்கை அவரவர் பெற்ற அனுபவங்கள் எங்கிருந்து தொடங்கியது ஏன் தொடங்கியது என்று சொல்லும் போது தான் ஒருவித நம்பகத்தன்மை கிடைக்கும். சுத்த அரசியல் விமர்சகர் அல்லது ஒரு கட்சி சார்பாளர் என்றால் இந்த பிரச்சனை இல்லை. அப்புறம் சிவம் அமுத சிவம் தெளிவாக புரிந்துள்ளார். எந்தந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் போட்டுள்ளேன். அதன் பின்னால் உள்ளவை. அவர் கில்லாடிக்கு கில்லாடி போல????

அப்புறம் தான் சற்று தெம்பாக இருந்தது. ஆனால் வெளியிட்ட கொஞ்ச நேரத்தில் நம்ம ராசா மாற்று அரசியல் குறித்து சண்டைக்கு வந்து விட்டார். நல்ல வேளை செந்தில் தெளிவாக எடுத்துரைத்தார்.

வருகின்ற 1 முதல் இணையத் தொடர்பில் வேகம் அதிகப்படுத்த சொல்லி விண்ணப்பம் செய்துள்ளேன். அப்புறம் இப்ப உள்ள கொடுமை இருக்காது என்று நினைக்கின்றேன். இப்ப ஒருதளம் திறந்தால் முழுமையாக வந்து படிக்கத் தொடங்க பத்து நிமிடம் ஆகின்றது.

ஜோதிஜி said...

ரதி, அதுக்கொரு காரணமிருக்கு ...ஜோதிஜிக்கு, சேர்வாரு சரியில்ல கொஞ்ச நாளா ... :)) அதான் இந்த புத்துணர்ச்சிக்கு காரணம் போல... அப்பூடீங்களாய்யா ;)


நம்மாளு கொஞ்சும் சுதி கிளப்பி விடுறாரு ரதி. அதுக்கு காரணம் ஒன்னுமில்ல. நாம கிறுக்கி வைத்திருக்கும் காகிதங்கள் தடைகள் தாண்டி சிலர் கண்களுக்கு படிக்கச் சென்றது. அதில் ஒருவர் கொண்டு சென்றவர் தான் எழுதியவர் என்று முத்தம் கொடுக்காத குறையாக கூச்சமின்றி கட்டிப்பிடித்து தூக்கி விட்டார்.

இது போன்ற சுயசொரிதல் வேண்டாம் என்றே அடக்கி வாசித்துக் கொண்டு இந்த சிற்றுரையை நிறைவு செய்கின்றேன்.

சோடா தாங்கப்பா?

ஐயா தெகா சூடு கொதிக்குது. சொறிஞ்சு புண்ணாகி இருக்கிற நெஞ்சை இன்னும் சொறிய அனுமதிப்பது முறையோ? தகுமோ? அடுக்குமோ?

ஜோதிஜி said...

கும்மி உங்க நண்பர்கள் சந்தித்துக்கும் போது கேட்க வேண்டிய கேள்விகள்

1. ஈழம் தவிர தமிழ்நாட்டில் உள்ள விசயங்களைப் பற்றி எப்போது முழுமையாக பேசத் தொடங்குவீங்க?

2. எப்போது தேர்தலில் நிப்பீங்க? இல்லாவிட்டால் காரணம் என்ன?

3. அரசியல் கட்சியாக எப்போது பதிவு செய்யப் போறீங்க?

4. நீங்க ரொம்பவே உணர்ச்சிவசப்படுறீங்களே? உங்க வாழ்க்கையில கல்யாணம் காட்சியெல்லாம் உண்டா இல்லையா?

5. உங்கள் வாழ்வின் அதிகபட்ச லட்சியம் என்ன?
(ஈழம் தவிர்த்து)

கேட்டுச் சொல்லுங்க. இப்ப சூழ்நிலையில் அவரை வந்து பார்க்க நினைக்க முடியாது எனக்கு.

ஜோதிஜி said...

சீமானிடம் தமிழ்களின் காயங்களுக்கான் மருந்து இருந்தாலும் எங்கே புண் என்பது தெரியாமல் இவரால் மருந்தை இடமுடியாது.

அற்புதம்.


சாமக்கோடாங்கி

நன்றி நண்பா. ஏற்கனவே சுடலைமாடன் என்ற கவர்ந்த பெயரைப் போலவே இந்த பெயரும் தமிழர்களின் வாழ்வியலோடு சம்மந்தப்பட்டது.

நன்றி.

உமர் | Umar said...

//உங்க நண்பர்கள்//

நம் நண்பர்கள்.

ஜோதிஜி said...

நம் நண்பர்கள்.


உண்மைதான் கும்மி. இங்கே பணம் துரத்தும் பறவைகள் தான் அதிகம். நட்பாவது ஒன்னாவது?

எனக்குத் தெரிந்து திருப்பூரில் அதிகபட்சம் செய்திதாள்கள் படிப்பது வயதானவர்கள், மலையாளிகள் குறிப்பிட்ட சதவிகித மற்றவர்கள்.

உங்களை நண்பன் என்று சொல்வதில் என்றும் எனக்குப் பெருமை தான்.

அறிமுகமே அசத்தலாகயிருக்க எப்படி மறக்க முடியம்?

Jerry Eshananda said...

இந்த இடுகை என் மனசை தொட்டது ஜோதிஜி

vinthaimanithan said...

//வெளியிட்ட கொஞ்ச நேரத்தில் நம்ம ராசா மாற்று அரசியல் குறித்து சண்டைக்கு வந்து விட்டார். நல்ல வேளை செந்தில் தெளிவாக எடுத்துரைத்தார்./
ஜோதிஜி ... இது நீங்க சொன்னது.


//ஒரு மாற்று அரசியலுக்கான விதை சீமானிடம் இருக்கு, ஆனால் அவர் அரசியலின் அரிச்சுவடியை இன்னும் சரியாக கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவில்லை.//

இது மேற்படியார் சொன்னது :)))

அவர் என்னத்தை வந்து 'தெளிவு' 'படுத்துறாரு'ன்னு ஒண்ணியிம் பிரியலியே :)))

கேஆர்பி வந்து சீமானுக்கு அரிச்சுவடியே தெரியலனு சொல்லிட்டு போயிருக்காரு...நாஞ்சொல்றேன் சீமான் அரிச்சுவடி கத்துக்க விருப்பமில்லாதவர்னு

ம்ஹூம்...

மொதல்ல மாற்று அரசியல்னா என்னன்னு ஒரு விவாதத்தை ஆரமிக்கணுங்கோவ்!
ஆனா.... மறுபடியும் மொதல்லேருந்தாஆஆஆஆஆஆஆ?

ஜோதிஜி said...

ராசா உனக்கு ஒரு தகவல்.

சன் தொலைக்காட்சியா வேறு எதுவுமா என்று நினைவில்லை. சீமான் பேட்டியில் பேசிக் கொண்டுருந்தார். ஏழெட்டு மாதங்கள் இருக்கலாம்.

என்ன கேள்வி என்று கூட மற்ந்து விடடது. சீமான் சொன்ன பதில் மட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது.

என்னை பெரிய ஆளாக நினைக்காதீர்கள். என்னை ஈழத்தைப் பற்றி உண்மையான அக்கறையுடன் யோசித்தவர்கள் பேசியவர்கள் செயல்பட்டவர்கள் அதிகம் பேர்கள். அவர் குறிப்பிட்டது நெடுமாறன் தொடங்கி கடைசியாக குறிப்பிட்ட கோவை இராமகிருஷ்ணன் வரைக்கும்.

நான் திரைப்படத்துறைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் நான் பேசும் பேச்சு பல இடங்களுக்குச் செல்கிறது. என்னை இராமகிருஷ்ணன் செயல்படும் விதம் பலருக்கும் செல்வதில்லை. காரணம் இது தமிழ்நாடு. தமிழர்கள் எல்லாவற்றையும் திரைப்படத்தில் இருந்தது அதன் மூலம் தான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். நான் என்ன செய்ய முடியுமோ? பேச முடியுமோ? அதைத்தான் எனக்கு தெரிந்தவரையில் செய்து கொண்டுருக்கின்றேன்.

இதற்காக அவர் சரியில்லை இவர் சரியில்லை. அவர்களின் கொள்கைகள் தவறானது என்று நான் சொல்லமாட்டேன். அவரவருக்கு தெரிந்த வகையில் செயல்படுகிறார்கள். நான் என் வழியில் செயல்பட்டுக் கொண்டுருக்கின்றேன்.

இதைவிட ஒருவரின் புரிந்துணர்வை வேறு எவரிடம் எதிர்பாக்க முடியும் ராசா

ஆனந்தி.. said...

ஜோதிஜி...நல்ல அலசல்..நேத்து இரவு பாலிமர் சேனல் இல் சீமான் பேட்டி போட்டாங்க...பார்த்திங்களா..? :))))))

Bibiliobibuli said...

ஜோதிஜி,

ராசாவுக்கு நீங்க எப்படி சொன்னாலும் அவர் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சீமானை அளவெடுப்பார். இந்த சித்தாந்தத்தின் வழி தான் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று வம்படியாய் சொல்வார் பாருங்களேன் :)))

ஈழத்துக்காக, தமிழ்நாட்டுக்காக யார்வேண்டுமானாலும் பேசட்டும், போராடட்டும். ஆனால், எத்தனை பேர் இதயசுத்தியோடு அதை செய்கிறார்கள் என்பது தான் என் கணக்கு.

என்னைப்பொறுத்தவரை சீமான் ஈழ விடயத்தில் அதை "இதயசுத்தியோடு" செய்கிறார். அடக்குமுறைக்கு அடிபணியாதவர் ஆயினும், இதுபோன்ற விமர்சனங்களால் நிச்சயம் நொந்துபோவார் என்றே தோன்றுகிறது.

அப்புறமா, இவ்வளவு அக்கப்போர் உங்க தளத்தில் நடக்க கடமை ஆத்தி "ராஜ நட" எங்கே போனார்? ஏன் கேட்கிறேன் என்றால் அண்மையில் சனல் 4 வெளியிட்ட போர்குற்ற காணொளிகளை பார்த்தபின் அவர் சொன்னது இதுதான். இப்போதான் புரிகிறது சீமான் ஏன் இவ்வளவு கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார் என்பது. அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்பது என் கருத்து.

சரி, ஒருவேளை யாருமே சரியா இல்லையென்றால் விந்தைமனிதன் என்கிற ராஜாராமனை அடுத்த தமிழ்நாட்டின் சீமானாய் அறிவிப்போமா?? பின்விளைவுகள் வந்தால் ஜோதிஜியும், ரதியும் புத்தகமும் பூரியும் சுட்டு அனுப்புவோம். என்ன ஜோதிஜி சரியா நான் சொல்றது. :)))

vinthaimanithan said...

//ராசாவுக்கு நீங்க எப்படி சொன்னாலும் அவர் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சீமானை அளவெடுப்பார். இந்த சித்தாந்தத்தின் வழி தான் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று வம்படியாய் சொல்வார் பாருங்களேன் :)))//

அடக்கொடுமையே! நான் சித்தாந்தவாதியெல்லாம் இல்லீங்க. மக்களை ஒருங்கிணைக்க ஒரு தெளிவான கொள்கை, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், செயல்திட்டங்கள் இவையெல்லாம் அவசியம்னு சொன்னேன். சீமான் இதுலல்லாம் தெளிவா இருந்தாத்தானுங்களே பயணம் வலிமையா இருக்கும்?

அத உட்டுட்டு "திரும்பத் திரும்பப் பேசறே நீ" அப்டீங்குற ரேஞ்சுல என்னைக் கும்முறீங்களே, ஞாயமா? :))))

அப்புறம் ஒண்ணு, ஜோதிஜி பூரியும், ரதியக்கா புத்தகமும் தந்தாத்தான் நல்லாருக்கும். ரதியக்கா சமைச்சி அதையும் சாப்பிடணும்னா அதுக்குன்னு இரும்பு நெஞ்சம் வேணுமே? ஏற்கனவே ஜோதிஜி வீட்டுக்குப் போனப்பவே தட்டு நெறய பூரிசுட்டு அடுக்கிவெச்சித் தெணறத் தெணற அடிச்சிட்டாரு :))))))

Bibiliobibuli said...

//ஜோதிஜி பூரியும், ரதியக்கா புத்தகமும் தந்தாத்தான் நல்லாருக்கும். ரதியக்கா சமைச்சி அதையும் சாப்பிடணும்னா அதுக்குன்னு இரும்பு நெஞ்சம் வேணுமே? //

இது சீமான் பற்றிய பதிவென்பதால் சும்மா விடுறன். :))))

ஜோதிஜி said...

வாங்க ஆனந்தி

தகவலுக்கு நன்றி. இந்த செய்தியை அன்றைய தினமே நண்பர் அழைத்து தெரிவித்து இருந்தார். ஆனால் இங்கு நிலவரம் வேறு. பள்ளிவிடுமுறை தொடங்கி விட்டது. ஆலமரம் சொம்பு தேவைப்படாத பஞ்சாயத்து தினந்தோறும் நடந்து கொண்டுருக்கிறது. எங்கள் வீட்டுக்குள் இருக்கும் எந்த பொருட்களும் எனக்கோ என் வீட்டுக்காரம்மாவுக்கோ சொந்தமில்லை. அதற்கென்றே மூன்று அரசிகள் உள்ளே ராஜ்யம் போல நடத்திக்கொண்டு எங்களை படுத்திக் கொண்டுருக்கிறார்கள். தூங்கி விட்டார்களா? என்று உறுதிபடுத்திக் கொண்டே ஒரு சில விசயங்களை அனுபவித்துக் கொண்டுருக்கிறோம். வாங்கி வந்த வரம் அவர்களுக்கு அப்படி இருக்கிறது.

ஜோதிஜி said...

இவ்வளவு அக்கப்போர் உங்க தளத்தில் நடக்க கடமை ஆத்தி "ராஜ நட" எங்கே போனார்? ஏன் கேட்கிறேன் என்றால் அண்மையில் சனல் 4 வெளியிட்ட போர்குற்ற காணொளிகளை பார்த்தபின் அவர் சொன்னது இதுதான்.

உங்களுக்கு பூனைக் கண் ஆஆஆஆ அல்லது ஆந்தைக் கண்ஆஆஆஆஆ என்று எனக்குத் தெரியாது. ஆனால் கழுகுக் கண்கள் என்று மட்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. சென்ற தமிழ்மணம் விருதுகளும் விரும்பாதவர்களும் பதிவில் குறிப்பிட்டப்பட்ட புண்ணியவான் சாட்சாத்.

தமிழ்மணம் விருது கிடைக்குதோ இல்லையோ பெரிய ஒன்றை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். தமிழ்நாட்டில் சொந்த பந்தத்தை பார்க்க உறவாட ஊர் சுற்றும் வாலிபனாக இருந்து கொண்டுருகிறார். 28 முதல் இணையத்தில் உலா வருவார்.

ஜோதிஜி said...

வீட்டுக்குப் போனப்பவே தட்டு நெறய பூரிசுட்டு அடுக்கிவெச்சித் தெணறத் தெணற

ரதியக்கா சமைச்சி அதையும் சாப்பிடணும்னா அதுக்குன்னு இரும்பு நெஞ்சம் வேணுமே

இது சீமான் பற்றிய பதிவென்பதால் சும்மா விடுறன். :))))

உடன்பிறப்பே பார்த்தாயா? உறவாடும் நெஞ்சங்கள் கொண்டு வரும் பூரி கதையை?

நான் பேசத் தான் ஆசைப்படுகின்றேன். ஆனால் வந்துள்ள வார்த்தைகள் என்னை பேசா மடந்தையாய் ஆக்கிவிட்டது.

நன்றி வணக்கம்.

Bibiliobibuli said...

//என்னை பேசா மடந்தையாய் //

ஆஹா, மாட்டிக்கிட்டீங்களா! மடந்தை என்பது பெண்பால், ஜோதிஜி.

பூரி கதையா! ம்ம்ம்... இருக்கட்டும். பிறகு பார்க்கலாம்.

vinthaimanithan said...

//ஆஹா, மாட்டிக்கிட்டீங்களா! மடந்தை என்பது பெண்பால், ஜோதிஜி. //
அட ஒரு உதாரணத்துக்குக்கூட சொல்லப்படாதான்னு ஜோதிஜி மொணகுறது இங்க கேக்குது :))))

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி, ஒண்ணு எனக்கு நல்லா வெளங்கிது. செமையா சமைப்பீங்கன்னு, நேர்ல வந்தா வைச்சிக்கட்டலாம்னு... சீக்கிரம் அதுக் கடவ!

//தூங்கி விட்டார்களா? என்று உறுதிபடுத்திக் கொண்டே ஒரு சில விசயங்களை அனுபவித்துக் கொண்டுருக்கிறோம். //

இதெல்லாம் போயி யாராவது வெளிய செல்லிட்டு இருப்பாங்களா... :)))

ஜோதிஜி said...

இதெல்லாம் போயி யாராவது வெளிய செல்லிட்டு இருப்பாங்களா... :)))


யோவ் யோவ் உன்னத் தூக்கி அமெரிக்கா கடல்ல தூக்கி எறிய கடவ............... நான் என்ன சொல்ல வந்தா எத சொல்லிக்கிட்டு இருய்யா ஆசிரியையிடம் வத்தி வைக்கின்றேன்.

ஜோதிஜி said...

மொணகுறது இங்க கேக்குது :))))

கேட்டுவிட்டதா?

ஜோதிஜி said...

பூரி கதையா! ம்ம்ம்... இருக்கட்டும். பிறகு பார்க்கலாம்.


இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து இந்தியா வரும் போது வாயில் திணிக்க இப்போதே மாவு தயாராகிக்கொண்டுருக்கிறது..............

vinthaimanithan said...

//இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து இந்தியா வரும் போது வாயில் திணிக்க இப்போதே மாவு தயாராகிக்கொண்டுருக்கிறது..............//
அதுக்குள்ள புளிச்சிப் போயிடாது ??? #டவுட்டு

Bibiliobibuli said...

//இப்போதே மாவு தயாராகிக்கொண்டுருக்கிறது.......//

ஹீம்...ம்ம்ம்ம்.... நான் தொண்டையை செருமினது கேட்டிச்சா... வேண்டாம் தமிழ் வேண்டாம் :)))))

ஏன் ஜீ, எனக்கு பூரிக்குப் பதில் மாவையே தர்றதுன்னு முடிவெடுத்திட்டீங்களா.

சரி ஜோதிஜி, அடுத்த பதிவுக்கான நேரம் வந்தாச்சு. சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க.

ரோஸ்விக் said...

அடேங்கப்பா இந்த கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள்ள அரசியலை அடிச்சு காயப்போட்டு வச்சுட்டாங்க. இதுவே சீமானின் மீது இளைஞர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு சான்று.

இன்னும் அவர் பல உள்ளூர் பிரச்சனைகளையும் தொட்டுபேசி அனைவரிடமும் அவரின் தாக்கம் சென்றடையசெய்யவேண்டும்.

Anonymous said...

ரொம்ப லேட்டாக வந்திட்டேனோ.
இந்த புளொக்கருக்கு என்ன பிரச்சினையோ தெரியாது. நான் வந்த உடனேயே சேர்ந்த தளங்களில் ஒன்று உங்களுடையது. பல நாட்கள் அப்டேட் கிடைக்காததால் டிலீட் பண்ணிவிட்டு மீண்டும் கிட்டடியில் தான் இனைத்தேன்.

எதையோ படித்த போது இது தோன்றியது. தட்டிப் பார்த்தேன்.
//தமிழ்நாட்டு அரசியலில் உருப்படியாக அமைந்த ஒரு புத்திசாலி தன்னுடைய தவறான கொள்கைகளால், எதிர்காலம் குறித்து அக்கறைபட்டுக்கொள்ளாமல் இந்த நிமிடம் வரைக்கும் தான் கொண்ட ஈழம் குறித்த கொள்கைகளில் ஆச்சரியமனிதராக வாழ்ந்து கொண்டுருக்கிறார். //

மிக்கச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

//ராஜீவ் காந்தியுடன் நேருக்கு நேராக .நின்றவிதம், அசாத்தியமான துணிச்சல், நம்ம சூனாபானாவை (அதாங்க சுப்ரமணியசாமி) பாராளுமன்றலாபியில் மிரட்டிய கம்பீரம் என்று எல்லாவிதங்களிலும் சிங்கமாகத் தான் வாழ்ந்தார்.//

ஒவ்வொரு வார்த்தைகளும் ஆக்சன் ஹீரோ இன்ரோ மாதிரி இருக்கு. (க்யூட்)

அப்புறம் சுயபுராணம் நன்றாக இருக்கு. வாயை கையால் மூடிக்கொண்டு கி கி கின்னு சிரிச்சிட்டு இருந்தேன். (சும்மா டீஸ் பண்ணத் தான். ராட்சசின்னு சொன்னதற்கு)

Anonymous said...

@ ரதி அக்கா,
/ஆறரை கோடி பேர் இருக்கும் ஓர் மாநிலத்தில் உங்கள் பிரச்சினைகள் பற்றி ஒரேயொரு "சீமான்" தான் பேசவேண்டும் என்றால் பிழை அரசியல்வாதிகளிடம் இல்லை, மக்களிடம் தான் என்பது என் தாழ்மையான கருத்து. //

இப்படி சொன்னால் எப்படி. உங்க முதல் பின்னூட்டத்தைப்படிச்ச பிறகு, ஹை அக்கா இதைக் கவனிக்கேல என்டு வந்தால், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நான் ரிப்பீட்டு என்டு சொல்லிட்டுப் போறேன்.

Anonymous said...

//தமிழ்நாட்டு அரசியலும் சரி, பொதுசனமும் சரி இந்த விமர்சனப்பாணியையே கடைப்பிடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. சரியென்று பட்டால் சீமானுக்கு தோள்கொடுங்கள். இல்லையென்றால் நீங்கள் சொல்லும் "இயங்கியல் நோக்குகளை" பரிசீலனை செய்யுங்கள். முன்முடிவாக சீமானின் எதிர்கால அரசியல் பற்றி ஏன் விமர்சிக்க வேண்டும்.//

//தமிழ்நாட்டு தமிழர்களுக்கு "கிளர்ந்தெழ" இன்னுமா ஒருவிடயமும் கிடைக்கவில்லை, ;))//

இதுக்கு மேல யாரும் ஆணி அடிக்க மாட்டாங்க. எப்படீக்கா.

Anonymous said...

நிறைய பின்னூட்டங்கள். கடைசியில் கொஞ்சம் மேலோட்டமாகவே படிச்சு முடிச்சேன்.

@ கல்வெட்டு,
மன்மோகன் சிங் ஒரு காமடி பீஸ். எப்படீங்க அவரை சுயமாக முடிவெடுப்பவர் என்று சொல்லுறீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

@ விந்தை மனிதன்,
//ஒரு தலைவன் என்பவன் பெரியாரைப்போல, லெனினைப்போல சமூகத்தின் இன்றைய இழிநிலைக்குக் காரணமான அனைத்தையும் எரிக்கும் கொள்கையும், இலக்கும், தீயாய் இயங்கும் செயலாற்றலும் கொண்டவனாக இருக்கவேண்டும். //

பெரியார் சுவாமி விக்கிரகங்களை செருப்பால் அடித்து தனக்கு எதுவும் நடக்கவில்லை என்று சொன்னாராமே. எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. இருந்தாலும் டோன் கேர். இல்லை என்றாலும் டோன் கேர். ஆனால், செருப்பால் விக்கிரகத்தை அடித்து தான் கடவுள் இல்லை என்று உணர்த்த வேண்டியதில்லை. அதைப் படித்த பின்னர் அவரை பெரியவராக எண்ண முடியவில்லை.

தலைவர் என்றால் எங்கள் தலைவர் போல, சே போல இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் ஒன்று சொல்லுகிறேன் (டெரர் லுக்குடன்) சே யை குறை சொன்னால் அந்திராஸ் அனுப்புவேன். தலைவரைப் போலவே எனக்கு சே உம் கடவுள். மந்திரி பதவி வேண்டாம் என்று வேறு நாட்டிற்காகப் போராடப் போனவர் சே. தமிழக சி.எம் ஆக இருக்கலாம் என்று ஆசை காட்டிய போதும் முடியாது என்று மக்களுக்காக போராடியவர் எங்கள் தலைவர்.

Anonymous said...

//இராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிக்கிறாயே? உனக்கு வெட்கமாக இல்லையா?

சீமான்... நீ இந்திரா காந்தியை கொன்றாயே உனக்கு கேவலமாக இல்லையா?//

பக்கத்தில இருந்து படிக்கறவன் போய் பிரண்டு கூட பேசறியா இவ்வளவு க்யூட்டா ஸ்மைல் பண்ணிக் கொண்டே டைப் பண்ணறியேன்னு கேக்கறா. அவ்வ்வ்வ்வ்வ். அநியாயத்திற்கு ரொம்பவே இலகுவாக மனது இருக்கிறது. எப்படி என்று தெரியவில்லை.

ஈழ பதிவுகளில் ஏனோ கோவம் / எரிச்சல் / சோகம் வராத ஒரே பதிவு.

Anonymous said...

ஒரே ஒரு ஆசை. சீமானுக்கு இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் கொடுங்கள். சந்திக்க முடியாது என்று சொல்ல மாட்டாரே. உங்களுக்கு அவரின் நண்பர்கள் தெரியும் என்றால் இன்னும் இலகுவாக சந்திக்கலாமே. என்னதுன்னு கேட்டா நான் படிக்க சொன்னேன் என்று சொல்லுங்க. =)) இன்ரோ கொடுக்கும் போது சூறாவளி/மின்னல்/ராட்சசி/பிசாசு/சுனாமி என்று எல்லாம் இன்ரோ குடுக்காமல், ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்லுடுங்க. சொல்லிட்டேன். =))

// சீமான் ஒரு பால் தாக்கரே, வாட்டாள் நாகராஜ் போல வர வேண்டிய அவஸ்யமில்லை//
பால் தக்கரே ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆள். அந்த ஆள் கூட ஒப்பிடறீங்களே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

சீமான் இவர்கள்போல் இல்லாது உண்மையான பற்று உள்ளவர் என்று தான் புரிந்து வைத்திருக்கிறேன். சில குறைகள். ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு பேசுவது ஒன்று. சினிமா தன்னுடைய ப்ரொபஷன் அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு என்று தெளிவாக ஒரு முறை அவர் மக்களுக்கு உணர வைக்க வேண்டும்.

தலைவர் படம் போட்ட டீசேட்டை போடுவது கொஞ்சம் எரிச்சல் படுத்தும். சிலர் ப்ரொபைல் படம் போட்டு வைப்பதும் தான். (வி.ம. சார். கொஞ்சம் இதையும் படியுங்க). தெரியல்ல, எரிச்சல் என்பதை விட கஷ்டமாக இருக்கும். அவர் மேல் மரியாதையில் போடுகிறார்கள் என்று அம்மா சொல்லுவார். சரி ப்ரொபைல் படம் ஓக்கே. பட், சேர்ட் கிழிந்தால் அதை குப்பையில் தூக்கிப் போடும் போது தலைவரையும் தூக்கிப் போடுவது போல இருக்கும்.

ஜோதிஜி said...

அனாமிகா நல்ல பிள்ளை தானே?

போய் ஒழுங்கா சப்தம் போட்டு ஜன்னல் ஓரத்தில இருந்துகிட்டு பாடங்களை படிக்கோனும். இந்த வலைபதிவுகள் தான் பல ஆண்டுகள் இப்படியே இருக்கத்தானே செய்யும்.

நான் ஏற்கனவே மண்டை சூடு உள்ள ஆளு. இப்பத்தான் திருந்தி எழுதுற கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க இங்கே வந்து குடியிருக்கிற பார்த்து (மனதிற்குள்) சந்தோஷமாயிருந்தாலும் நாளைக்கு மதிப்பெண்கள் குறைந்தால் அந்த பாவமும் எனக்குத்தானா?

இது எப்பூடீ?

Anonymous said...

ஹி ஹி. மண்டை சூடு உள்ள ஆள் என்றாலும் திட்டாம அன்பாக சொல்லுறீங்கன்னு எடுத்துக்கட்டா. ஹாஹா. எக்சாமுக்கு இரண்டு நாளுக்கு முன்னாலேயே புக் எல்லாம் கட்டி வைச்சுடுவேன். அதற்கு பிறகு படிப்பது ரொம்ப குறைவு. சின்ன வயசில அம்மா பழக்கியது. பழக்கிய போது வேண்டா வெறுப்பாக ஒவ்வொரு நாளும் இரண்டு-மூன்று மணி நேரம் படித்தேன். இப்ப ரொம்ப உதவியாக இருக்கு. நாளையோட எக்சாம் முடிஞ்சுடும். யாகூ.

ஓ, அப்புறம் லிங்குகள் பார்த்தேன். நன்றி. இன்னும் படிக்கல. வெள்ளிக்கிழமை படிக்க ஆரம்பிச்சுடுவேன். உங்க பக்கமும் ரதி அக்கா பக்கமும் வருவதால் எங்க அக்கா (இட்லி மாமி) பக்கம் போறதே கொறைஞ்சுடுச்சு. காரணம் தெரிஞ்சா உங்களுக்கு கனடாவிலேயே ஒரு பாராட்டு விழா வச்சுடுவா. நான் அவ்வளவு பிசாசுத் தனம் பண்ணி இருக்கேன் அவங்க பக்கம்.

ஜோதிஜி said...

தயார் பாராட்டு விழாவுக்கு. ரதியை பார்த்தது போலவும் ஆயிடும். எப்போ? சரி அதுயாரு இட்லி மாமி?

Anonymous said...

இட்லி மாமி யாரா?

யாரங்கே. இட்லி மாமியைத் தெரியாதவங்க எப்படி பதிவுலகில் இருக்கலாம். ஐயஹோ.

Anonymous said...

http://appavithangamani.blogspot.com/

சரியான இம்சை அரசின்னா அவங்க தான். பெண் சகோதரிகளுடன் பிறக்காததால் அவங்க பக்கமே பழிகிடப்பேன். ஆனா, அவ சவ்வுன்னு ஒரு காதல் கதை எழுதி பண்ணின கடுப்பில் இப்ப அவ என்னோட எனிமி.

அவ பெயரு தான் அப்பாவி தங்கமணி. நிஜத்தில வில்லங்கம் பிடிச்ச தங்கமணி. பாவம் கோவிந்த் மாமால இருந்து பிரியாக்கா, வாசகன் மாம்ஸ், கார்த்தி சார், என்னைனு அவ படத்தற பாடு இருக்கே. சரியான ராட்சசி.

இட்லிமாமின்னு ஏன் பெயர் வந்துச்சுன்னா, அவங்களுக்கு இட்லி பண்ணமட்டுமல்ல இட்லி ஆடர் பண்ணக் கூட தெரியாது.

அவ பக்கம் மட்டும் போயிடாதீங்க. டென்சன் படுத்துவா. அவ டென்சனால் வீட்ல இருக்கற முள்ளு கரண்டி பிளேட் (நல்ல வேளை சில்வர் ப்ளேட்டு) எல்லாம் நெழிஞ்சுடுச்சு. அவ மேல வருகிற கடுப்பில பிரட்டை தட்டில போட்டுட்டு, அவான்னு நினைச்சு இரண்டு முள்ளு கரண்டியால் பிரட்டை பீஸ் பீஸ் ஆக்குவது என்னோட ஹாபி.

Anonymous said...

பயந்திடாதீங்க. அவ கூட சேர்ந்து எனக்கும் கொஞ்சம் கிறுக்கு. அவ்வளவு தான். =))

சனல் 4 பாத்து மனசு கஷ்டமாக இருந்தாலும், இட்லி மாமி பத்தி பேசினாலே கொஞ்சம் சிரிப்பு வரும்.

ஜோதிஜி said...

இவங்க கூகுள் பஸ்ஸில் இருக்கிறார். அவர் தானே?

பதிவின் பெயர் அல்லது இணைப்பு தாங்கோ

Anonymous said...

http://appavithangamani.blogspot.com/

Copy and paste the link. He he.

Yes she uses Google Buzz too.

Anonymous said...

Kedaichutha?

ஜோதிஜி said...

http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_12.html

பெண்கள் மாத இதழ் மாதிரி கதையா எழுதியிருக்காங்க. நான் என்ன சொல்ல முடியும்? ஒரே பெண்கள் கூட்டம்? அப்புறம் இந்த இணைப்பை படித்துப் பாருங்க. ஐந்து அல்லது ஆறு பகுதி வரும் என்று நினைக்கின்றேன்.

கெட்டது பரிட்சை போங்க.

Anonymous said...

ஹல்லோ. இன்னைக்கு காலையிலேயே எல்லாம் முடிஞ்சுது. இனிமேல் இரண்டு மாசம் ஜாலின்னு தான் பரீட்சை ஆரம்பித்த போது நினைச்சேன். நேத்து சனல் 4 பாத்தப்புறம் எதுவும் பண்ண பிடிக்கல. ரூமிலேயே உக்காந்து 15 கப் காப்பி குடிச்சது தான் மிச்சம்.


பொண்ணுங்க கூட்டமா? எங்க ஐவர் பேரவையிலேயே மூணு பேர் ஆண்கள் தெரியுமா? நிறைய ஆண் விசிறிகள் இருக்கு அவங்களுக்கு. அவங்க கதை படிக்க வேணாம். இட்லி பதிவு, பொண்ணு பார்த்த பதிவு, கடைசியாக வந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பாத்த வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்ச பதிவுன்னு சிலது நல்லா இருக்கும். லைட் ரீடிங்க் எப்பவும் எனக்கு பிடிக்கும். இப்ப கூட அவங்களோட பைத்திய பதிவை படிச்சுட்டு கொஞ்சம் ரிலாக்சாக இருக்க முடியுது.

Anonymous said...

இன்னைக்குத் தான் புரிஞ்சுது. டென்சனால் குடியை நாடுபவர்களை கொறை சொல்லக்கூடாதுன்னு. 15 கப் காப்பி. ஸப்பா.

Anonymous said...

நாளைக்கு ஆறுதலாகப் படிக்கறேன். லிங்கிற்கு நன்றி.

Anonymous said...

ddddddd

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அலசல்! பகிர்வுக்கு நன்றி!