Friday, June 25, 2010

ஆடைகளுக்குப் பினனால் என்ன இருக்கிறது?

திருப்பூரில் தனலெஷ்மி திரையரங்கத்திற்குப் பின்னால் உள்ள குறுகிய பகுதிகளுக்குள் பள்ளித் தோழன் பணிபுரியும் இடம் இருக்கிறது. அது உள்நாட்டுச் சந்தையை குறிவைத்து இயங்கும் அறவு எந்திர நிறுவனம். 24 மணிநேரமும் இடைவிடாமல் ஓடிக்கொண்டுருக்கும் நிறுவனத்தில் அவனுக்கு மேலாளர் பொறுப்பு. நிறுவனம் என்றதும் கற்பனையை பறக்க விடாதீர்கள்.  லூதியானா அல்லது கோவையில் இருந்து வாங்கப்பட்ட இரண்டாந்தரமான அறவு எந்திரங்கள்.  இது போன்று உள்நாட்டுச் சந்தையை குறிவைத்து இதை மட்டுமே நம்பி உள்ளுரிலும் வெளியூரிலும் வாழ்பவர்கள் அநேகம் பேர்கள். வாங்கி வரும் எந்திரங்களை சரி செய்து பராமரித்து குறுகிய முதலீட்டில் தொடங்குவார்கள். 

சில முதலாளிகள் தொடக்கத்தில் குடும்பத்தோடு முழுமையாக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள்.தங்கள் நிறுவனம் வளர்வதைப் பொறுத்து படிப்படியாக ஆட்களை சேர்த்துக் கொள்வதுண்டு.வெற்றி என்பது மொத்த வாழ்க்கையிலும் உழைப்பின் மூலம் மட்டுமே வருவதென்பதை அவர்கள் வாழ்க்கையின் மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். பல நிஜ வாழ்க்கை சூத்திரங்களையும் நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.இந்த துறையில் மட்டுமல்ல இங்குள்ள ஒவ்வொரு துறையுமே உழைப்பு தான் முக்கிய மூலதனம்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் பணிபுரிய ஆட்களைச் சேர்த்து தன்னை சந்தையில் நிலைநிறுத்தத் தொடங்குவார்கள்.திருப்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஈரோட்டில் இதற்கென்று பிரபலமான சந்தையொன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது.  கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் இடம். இந்தியாவின் அத்தனை பகுதிகளிலும் இருந்து வந்து கூடுவார்கள்.  அவரவர்க்கு தேவைப்படும் மலிவான விலையில் உள்ள ஜட்டி முதல் குழந்தைகளுக்கு தேவைப்படும் பல்வேறு வண்ண ஆடைகள் வரைக்கும் வாங்கிக் கொண்டு செல்வார்கள். கை மேல் காசு. குறைந்த லாபம். சுமாரான தரம்.  தொடர்ச்சியான விற்பனை.  வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் இன்று வரைக்கும் சாதனை படைத்துக் கொண்டுருப்பவர்கள் பலர். தரமான ஆடைகள் கிடைத்தால் அது உங்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டம். அடித்தட்டு மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட அற்புத உலகமது.

ஈரோடு சந்தைக்குத் தேவைப்படும் ஜட்டி முதல் மற்ற அத்தனை உள்ளாடைகளுக்கும் தேவைப்படும் சாயம் ஏற்றப்படாத கோரத் துணியை பல்வேறு அளவுகளில் இது போன்ற சிறிய நிறுவனங்களில் ஓட்டிக் கொடுத்துக் கொண்டுருப்பார்கள்.  கோரத்துணியை மட்டும் வாங்கிக் கொண்டும் செல்வார்கள்.  பணம் இருக்கும் சிலர் சாயமேற்றிய துணியாகவும் விற்பனை செய்வதுண்டு.  சிலர் வெறும் இடைத்தரகராகவும் செயல்படுபவர்கள்.  மொத்தத்தில் வாழ்க்கையை தேடி வந்தவர்களை மிக எளிதாக முதலாளியாக மாற்றும் விந்தை உலகம் இது. 

இது போன்ற சிறிய அறவு எந்திர தொழிற் சாலையில் ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ விடுமுறை கிடைக்கலாம்.  தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களும்,இது போன்ற பல்வேறு தொழில்களை மட்டுமே நம்பி வந்து கொண்டு இருப்பவர்களும் ஒவ்வொரு நிறுவனத்திலும் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிந்து கொண்டுருக்கிறார்கள்.  12 மணி நேரம் என்பது ஒரு வேலை நேரம்.  முதல் வாரம் பகல் பொழுது என்றால் அடுத்த வாரம் அவர்கள் இரவு வேலைக்கு மாற்றப்படுவார்கள்.  பல சமயம் ஆட்கள் வரவில்லை என்றால் இரண்டு பொழுதுகளும் ஒருவரே பார்க்க வேண்டும். மறுக்க முடியாது. 

நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் மின்சாரத்தில் இயங்குவதைத் தவிர வேறொன்றும் உள்நாட்டு சந்தைக்கென்று உருவாக்கப்பட்ட அந்த எந்திரங்களில் வேறெந்த புதுமையும் இருக்காது.  ஓடும் சப்தங்களும், காற்று வசதிகள் இல்லாத கொடுமையும் ஒருங்கே சேர்ந்த நரகம் அது. ஆனால் அது குறித்து பணிபுரியும் எவரும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை.  காரணம் நடுத்தர வர்க்கமாய் வாழ ஏதோவொரு நரகத்தை இயல்பாகவே ஏற்றுக் கொண்டே தான் ஆகவேண்டும்.  இல்லாவிட்டால் வாழ்கை முழுக்க நடுங்கும் வர்க்கமாகத் தான் வாழ்ந்தாக வேண்டும்.

ஒவ்வொரு எந்திரத்தின் கொண்டைப் பகுதியில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அளவுக்கு நூல் கண்டுகளை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணிக்கைகளில் கம்பிகள் இருக்கும்.  ஒவ்வொரு கம்பியிலும் நூல் கண்டு நிறுத்தப்பட்டு நூலின் முனையை எந்திரத்தின் மையப் பகுதியின் உள்ளே உள்ள (CAMP SET) அமைப்பில் கோர்த்து விடுவார்கள். இந்த பகுதி தான் எந்திரத்தின் முக்கிய மூளை.  இந்த மூளைக்குள் அளவான ஊசிகள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டு மூடியபடி இருக்கும். மேலே இருந்து வரும் நூலின் முனை ஊசிகளில் உள்ள காது ஓட்டை வழியாக கோர்க்கப்பட்டு கீழே இறங்கும், ஜாலவித்தைகள் தொடங்க துணியாக மாறி கீழே இறங்கத் தொடங்கும். எந்திரம் ஓடத் தொடங்கியதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பான துணி கீழே இறங்க பத்து கிலோ இருபது கிலோவாக சேர ஒவ்வொரு முறையும் வெட்டி அருகே தரம் வாரியாக பிரித்து அடுக்கி வைத்து இருப்பார்கள்.  இரவு நேரங்களில் வரும் சாயப்பட்டறை வண்டிகள் வந்து எடுத்துக் கொண்டு செல்லும். 

துணிகளில் பல வகைகள் உண்டு.  ஆடைகளை கோடைகாலம், குளிர்காலம் என்று இரண்டு விதமாக பிரித்து வைத்து இருந்தாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் பல்வேறு கிளை நதிகள்.  மெல்லிய, கடினமான, என்று தொடங்கி பல்வேறான வடிவமைப்பு,  அத்தனையும் இந்த மூளைப்பகுதியில் உள்ள வடிவமைப்பு பொறுத்து மாற்றப்படுகின்றது. நீங்கள் விரும்பும் துணியில் வடிவமைப்பை சிறிய துண்டாக கத்தரித்துக்கொண்டு போய் காட்டினால் அதன் சூட்சமத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் எந்திர வடிவமைப்பை மாற்றி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். 

ஒவ்வொரு முறையும் எந்திரங்களில் மாற்றிக் கொள்ள வசதியுண்டு. ஓரே எந்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை உருவாக்கும் அத்தனை நவீனங்களும் வந்து விட்டது. நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும்.  ஆனால் அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவும் சுகமாக இருக்கும்.  அத்தனையும் ஊசிகள் உள்ள பகுதிகளில் செய்யப்படும் ஜாலவித்தை. ஊசி வழியாக வந்த நூல் துணியாக பின்னப்பட்டு பின்னலாடைத் துணியாக கீழே இறங்கும். கீழே உள்ள மிக நெருக்கமாக இருக்கும் இரண்டு உருளைச் சக்கரத்திற்குள் நுழைந்து கீழே உள்ள கம்பியில் வந்து சேரும். உருண்டுக் கொண்டே இருக்கும் அந்த கம்பி துணியை சேகரித்துக் கொண்டுருக்கும். கீழே உள்ள இரண்டு சக்கர உருளையைக் கடந்து இறங்கும் துணியின் மையப் பகுதியில் உள்ள மின்சார விளக்கின்  வெளிச்சத்தில் துணியின் தரமும் தராதரமும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு எந்திரத்திற்கும் ஒரு அளவு.  ஒவ்வொன்றும் மனிதர்களின் மார்பு அளவைப் பொறுத்து உள்ளேயிருக்கும் முக்கிய உருளைகள் உருவாக்கப்பட்டுருக்கும். துணிகள் இறங்கும் போதே தவறுகள் ஏதும் தெரிந்தால் பளிச்சென்று எறிந்து கொண்டும் மின்சார விளக்கு மூலம் மிக எளிதாக கண்டு பிடித்து விடலாம்.  தவறாக கோர்க்கப்பட்ட நூல், தரமில்லாத நூல் என்று தொடங்கி உள்ளே ஓடிக் கொண்டுருக்கும் உடைந்த ஊசியின் விளைவாக உருவாகும் விளைவுகள் வரைக்கும் கண்காணித்துக் கொண்டுருப்பவரால் எளிதாக கண்டு கொள்ள முடியும். பணிபுரியும் 12 மணி நேரமும் எந்திரத்தின் அருகே நின்று கொண்டு பணியில் இருப்பவர்கள் எந்தப் பக்கமும் நகர்ந்து விட முடியாது.

ஒவ்வொரு நொடியும் முக்கியமானது.  ஓடிக் கொண்டுருக்கும் எந்திரத்தில் உள்ளே உள்ள ஒரு ஊசி உடைந்து இருந்தாலும் உருவாக்கும் விளைவுகள் கண நேரத்தில் பல நூறு ரூபாய்களை காணாமல் போக்கிவிடும். சில சமயம் மொத்த எந்திரத்தையும் காயலான் கடைக்கு அனுப்ப வைத்துவிடும். அருகே இருப்பவரின் வேலைக்கும் ஆப்பு வைத்துவிடும். இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்கள் என்றால் நிமிடத்தில் லட்சத்தை தின்று அமைதியாக நிற்கும்.  முதலீடு போட்டவர் அமைதியை குலைத்துவிட்டு.

இதற்கு மேலாக நூல் வேகமாக ஊசியை நோக்கி ஓடி வரும் போது பறக்கும் பஞ்சு துகள்கள் அந்த இருட்டு அறையை திரைப்பட கனவுக் காட்சி போல் மாற்றியிருக்கும்.  உள்ளே இருப்பவர்கள் பணி நேரம் முழுவதும் அந்த பஞ்சு துகள்களை சுவாசித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.  உள்நாட்டு சந்தை என்பது மிகக் குறைவான லாபத்தைக் கொண்டுள்ளதைப் போலவே எந்த முதலாளி வர்க்கமும் தொழிலாளிக்கு உண்டான அடிப்படை வசதிகளை செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை.  

ஆனால் ஏற்றுமதியாகும் ஆய்த்த ஆடைகள் தொடக்கத்தில் இது போன்ற உள்நாட்டு எந்திரங்களைச் சார்ந்தே இருந்தது.  ஆனால் இறக்குமதியாளர்களின் தேவை அறிந்து, உள்ளே வந்த நவீனங்களுக்கு பின்னால் போய் இன்று கணிணி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அத்தனை அறவு (KNITTING MECHINES) எந்திரங்களும் திருப்பூரில் உள்ளது.  இன்றுவரையிலும் ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து,கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து ஒன்றை ஒன்று மிஞ்சம் அளவிற்கு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடுகளுக்கெல்லாம் ஆப்படிக்கும் அய்யா சீனாவின் கைங்கர்யமும் பாடாய் படுத்திக்கொண்டுருக்கிறது.  

இறக்குமதியாகும் நவீன அறவு எந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஒப்பீட்டளவில் வேலைப் பளூவும் குறைவு.  அவர்களின் ஆரோக்கியமும் சற்று மேம்பட்டதாய் இருக்கும். உள் நாட்டில் தயாராகும் எந்திரத்தில் நூல் திறந்த வெளி பயணத்தின் மூலமாகத் தான் நடுப்பகுதியில் உள்ள ஊசியை வந்து அடைகிறது.  அதுவே நவீன எந்திரங்களில் இந்த நூல் பயணம் செய்வதற்கு தனியாக சிறிய குழாய் போன்ற வசதிகள் உண்டு.  நூல் குழாய் வழியாக ஊசி இருக்கும் பகுதிகளுக்குள் வரும் போது பறக்கும் பஞ்சு துகள் அத்தனையும் ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு விடும்.  சில நவீன எந்திரங்கள் குளிர் சாதன வசதிகளுக்குள் இருப்பதால் பணிபுரிபவர்களுக்கு இன்னும் சிறப்பாய் இருக்கும். 

15 வருடங்களாக இந்த உள்நாட்டு சந்தையை அடிப்படையாக வைத்து இயங்கிக்கொண்டுருக்கும் துறையில் பணிபுரியும் நண்பன் இப்போது வாரம் 4000 ரூபாய் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளான். அறவு எந்திரம் தரும் சப்தத்தை வைத்தே என்ன பிரச்சனை என்று எளிதில் கண்டு கொள்ளக் கூடியவன். எந்திரத்தை முழுமையாக கழற்றி மாட்டி விடக் கூடியவன்.  வாழ்க்கையையும் எந்திரமாகவே மாற்றிக் கொண்டவன்.  ட வடிவில் உள்ள அந்த டொக்கு சந்தில் ஒரு பக்கத்தில் சாக்கடை கழிவுகள் மிதந்து போய்க் கொண்டுருக்கும்.  மற்றொரு மூலையில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உபயோகிக்கும் கழிப்பறை.
மிக நெருக்கமாக உள்ளேயிருக்கும் 20 எந்திரங்கள் இருக்கும் பகுதிகளுக்குள் முறைப்படியான மின்சார பாதுகாப்பு சாதனங்களோ, உள்ளே அவசர வழிகளோ எதுவும் இல்லாமல் ஒரே உடைந்த அந்த பழைய கதவு.  காரணம் கதவுகளை மூட வேண்டிய அவஸ்யமில்லாமல் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டுருக்கும் நிறுவனம்.  உள்ளே எப்போதும் போல இருட்டறை.  இருட்டை விரட்ட இடைவிடாமல் எறிந்து கொண்டு குழல் விளக்குகள் தந்து கொண்டுருக்கும் சூடு ஒரு பக்கம்.  பஞ்சு என்பது அடுத்த உஷ்ணம். காற்று இல்லாத இடம்.  உள்ளே சுற்றிக்கொண்டுருக்கும் பஞ்சுப் பொதிகள் வெளியேற வாய்ப்பில்லாத இடம். எந்திரத்தின் தொடர்ச்சியான சப்தங்கள். மொத்தத்தையும் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்ட தொழிலாளர் கூட்டம்.  இந்த உள்நாட்டு வெளிநாட்டு அறவு எந்திர உலகத்தில் எத்தனையோ தொழிலாளிகள், எத்தனையோ பேர்கள் விரும்பும் கவர்ச்சியை தந்து கொண்டுருக்கும் உள்ளாடைகளுக்காக தங்கள் வாழ்க்கை ச்ச்சீசீ என்று வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். தொடர் மின் வெட்டு இருந்தால் இது போன்ற நிறுவனங்கள் இயங்காது.  ஜெனரேட்டர் வைத்து இயங்கும் அளவிற்கு லாபமும் இருக்காது.

தொடக்கத்தில் தனித்தனியான நபர்கள் எந்திரத்தின் அருகே நின்று கொண்டு இறங்கும் துணியை கவனித்துக் கொண்டுருப்பார்கள். இப்போது மூன்று எந்திரங்களுக்கு ஒருவரே பொறுப்பு.  அந்த அளவிற்கு ஒரு புறம் சர்வதேசம் ஜவுளித்துறைக்கு பல நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. சரிசமமாக முதலாளிகளின் ஆசைகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

17 comments:

பழமைபேசி said...

திருப்பூர் பற்றிய தொகுப்பு நன்றாகவும், தகவல்ச் செறிவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறீகள்... நன்றி! அடுத்த மாதம் ஊரில் சந்திப்போம்!!!

Unknown said...

இதைபோன்ற தொழிற்சாலைகள் என்றில்லை.. வீடுகளின் தொகுதிகள் கூட சரியான கட்டமைப்பின்றி இருக்கிறது..

காலமெல்லாம் பஞ்சுக்குள் உழன்றாலும் அந்த தேர்ந்த நண்பனுக்கு வாரம் நான்காயிரம் மட்டுமே சம்பளம் என்பது மிகக்குறைவே..

உங்கள் கட்டுரையில் ஆறுதல் அளிக்கும் ஒரே விசயம் ஈரோட்டில் கூடும் வார சந்தை, நடுத்தர ஏழை மக்களுக்கான அந்த சந்தை பற்றி நண்பன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்..

இன்றளவுக்கும் நானும் என் குழந்தைகளும் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் EXPORT SURPLUS தான் குறைந்த விலை.. நிறைந்த தரம் ..

ராம்ஜி_யாஹூ said...

Last 3 lines are correct. Thailand, Indonesia, China cloth materials are cheaper and long lasting than our Tirupur materials.

தமிழ் உதயம் said...

திருப்பூரின் வெற்றிக்கு யாரோ ஒருவர் காரணமல்ல. கூட்டு முயற்சி. பல பேரின் உழைப்பு.
ஆனால் அதன் நெருக்கடிக்கு கூடிய மட்டும் ஒன்றே காரணம். அது அரசாங்கம்.

மக்கள் ஏன் இத்தனை கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது பிழைக்க வாய்ப்பு, நம்பிக்கையுள்ளது என்பதால். அந்த வாய்ப்பு, நம்பிக்கை குறையும் போது... நினைக்கவே பயமாய் உள்ளது.

அச்சம் வந்து விட்டால் மனிதர்களால் வாழவே இயலாது.

ஜோதிஜி said...

வாருங்கள் மணிவாசகம். சந்திப்போம். தொடர் வாசிப்புக்கு நன்றி.

உண்மை செந்தில். நம்மவர்கள் பிராண்டு பார்த்து ஏமாந்து விடுவதுண்டு. தரத்திற்கும் விலைக்கும் சம்மந்தம் இருக்காது.

ராம்ஜி உங்கள் வரிசை சரிதான். காரணத்தை நான் கூட தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ரமேஷ் ஓரளவிற்கு அந்த பயம் இப்போது முதலீடு போட்டவர்களிடத்தில் வந்து விட்டது.

Thenammai Lakshmanan said...

உங்கள் இடுகை திருப்பூர் வந்து பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.. ஆனால் வேலையாட்கள் படும் சிரமம் கேட்கச் சகிக்கவில்லை ஜோதிஜி.. முதலாளிகள் மன சாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்..

கண்ணகி said...

திருப்பூரின் மறுபக்கம்...

ராஜ நடராஜன் said...

தொடர்கிறேன்.மீண்டும் வருகிறேன்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

திருப்பூர் குறித்தும் அதன் தொழில் நிலை குறித்தும் அமைந்திருக்கும் உங்கள் அண்மைய விரிவான பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அருகே இருக்கும் ஊர் தான் என்றாலும் திருப்பூருக்கு நான் அதிகம் வந்ததில்லை. அறிந்ததில்லை. இருப்பினும் எனது சுற்றத்திலும் திருப்பூருக்கு வந்து செழிப்பாக இருந்து, பின் தொழில் நொடித்து வேறூர் சென்றுவிட்டவர்களையும் அறிவேன். உங்களது இடுகைகள் பல பின்னணித் தகவல்களையும் சுவாரசியமான நடையில் தருவது நன்றாக இருக்கிறது.

ஜோதிஜி said...

வாங்க கண்ணகி வருக ராஜ நடராஜன். தொடர்வாசிப்புக்கு நன்றி.

திரு செல்வராசு வலைதளத்தில் நான் பார்த்த வரைக்கும் உங்களின் முதல் பின்னூட்டம் இது தான் என்று நினைக்கின்றேன். ஒரே நாளில் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் எழுத்தின் தீவிர வாசகன் என்ற போது சுவராஸ்யமான நடை இயல்பாக வரத்தானே வேண்டும்!!!!!!

ஜெகதீஸ்வரன் said...

ஆகா மிக அருமை!,...

சாதாரண மனிதனுக்கும் திருப்பூரில் நடக்கும் எல்லாவற்றையும் புரிய வைக்கும் பதிவு!@

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

ப.கந்தசாமி said...

அருமையான பதிவு. ஒரு பனியன் தொழிற்சாலையை முழுமையாக கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். நன்றி.

ஒன்று சேர் said...

தோழர் ஜோதிஜி
எல்லோரும் திருப்பூருக்கு வரும் போது பேருந்து நிலையங்களில் இன்றும் காணப்படும் அட்டை விளம்பரங்களில் வேலைக்கு ஆள் தேவை என்பதை பார்க்கும் இளைஞர்கள் உடனே படிப்பை பாதியில் விட்டுவிட்டு, வீட்டில் கோபித்துக் கொண்டு எப்படி வந்தாலும் வாழும் வழி உண்டு. ஆனால் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு குறையாமல் உழைக்க வேண்டும். அவ்வப்போது (நீங்கள் முந்தைய இடுகை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது போல்) வாரப்பத்திரிக்கையில் ஜெயித்தவர்கள் கதை படித்துவிட்டு கனவோடு வந்தால் பார்க்கும் திருப்பூர் வேறாக இருக்கும். பனியன் தொழில், அதோடு இணைந்த உப தொழில்கள் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் இருப்பினும் உங்களைப் போல் ஒவ்வொரு அம்சத்தையும் ஊன்றி கவனித்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனக்கு எனது பள்ளிப்பருவ நாட்கைள நினைவூட்டியது பனியன் ஊசியை தாங்கள் விவரித்திருந்த விபரம். நான் தனலட்சுமி தியேட்டர் செல்லும் வழி கொங்குநகர் ரயில்வே லயனை ஒட்டி இருக்கும் வெங்கடாஜலபதி நகராட்சி ஆரம்ப பள்ளியில் பயிலும் காலத்தில் (அப்பொழுது இரட்டை லயனும் கிடையாது, இவ்வளவு ரயில்களும் கிடையாது) லயனை ஒட்டி வீட்டிற்கு வரும் வழியில் சிக்கி முக்கி கல்லும்- பனியன் ஊசியும் கை நிறைய பொறுக்கிவருவதுதான் வேலை (விளையாட்டுப் பொருளுக்காக). தங்கள் இடுகை முழுவதும் நல்ல தமிழ் பயன்படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். திருப்பூரில் சில சதவீதங்கள் தான் வந்திருக்கிறீர்கள், இன்னும் அந்த நகரில் எழுத ஏராளமான விபரங்கள் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. செம்மொழி மாநாட்டு நன்கொடைகள் காரணமாக இந்த வாரமே நூல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் ஏறியிருக்கும். மின் வெட்டால் சொல்லொணா துன்பங்களை இன்றும் சிறு தொழில் முனைவர்கள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகமயமாக்கல் தாக்கம் ஒருபுறம், சந்தை பொருளாதார தாக்கம் மறுபுறம், 50 பைசா கிடைத்தால் கைமாற்றி பணம் பார்த்துவிடுவோம் என்கிற மார்வாடி சேட் இன்னொருபுறம் - இத்தனைக்கும் நடுவில் ஓடிவரும் இளைஞர்களை இன்றும் கவர்ந்திழுக்கும் நகராய் விளங்கும் திருப்பூர் குறித்து தங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து வந்தால் சூட்சுமங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
சித்திரகுப்தன்

ஜோதிஜி said...

சித்ரகுப்தன் உங்கள் நீண்ட விமர்சனத்தை படித்து முடித்ததும் என்னுள் தோன்றிய விசயம்,

இங்கு வாழ வந்தவன் சொல்ல வந்த விசயங்களை அதில் வாழ்ந்தவரே அனுபவித்த விதத்தை உங்கள் வார்த்தைகளின் உள்ளுடாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

எவருக்கோ ஒருவருக்கு ஒவ்வொரு எழுத்துக்களுக்கு உதவியாய் இருக்கும். ஆனால் இந்த இடுகை உங்களின் 20 வருடத்தை பின்னோக்கி பார்க்க வைத்ததில் அதிக மகிழ்ச்சி.

Anonymous said...

good proceed.........

சீ.பிரபாகரன் said...

ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பதிவு ஒரு தொழிலாளி தன்னுடைய பணியை விவரிப்பது போல் சிறப்பாக உள்ளது.

வடுவூர் குமார் said...

பாவ‌ம் இந்த‌ தொழிலாள‌ர்க‌ள்,கூடிய‌ விரைவில் அனைத்து இய‌ந்திர‌ங்க‌ளும் மேல் நாட்டு த‌ர‌ங்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌ட்டாலாவ‌து அவ‌ர்க‌ளை ந‌ல்ல‌ நிலையில் வேலை செய்ய‌ வைக்க‌வேண்டும்.