Showing posts with label தேர்தல் களம் 2014. Show all posts
Showing posts with label தேர்தல் களம் 2014. Show all posts

Wednesday, June 25, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - 5


ஊரில் வாழ்ந்த போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை யாரையாவது பார்க்க வேண்டியிருந்தால் "அவர் காங்கிரஸ்காரர். தப்புத் தண்டாவுக் கெல்லாம் போற மனுசன் இல்லப்பா" என்பார்கள். 

நைந்து போன அந்தக் கதர்ச்சட்டை, கதர்வேஷ்டி என்பது ஒரு அடையாளம். அவர்களின் அமைதியும், சாத்வீகமும் மற்றொரு அடையாளம். 

உள்ளும் புறமும் இப்படித்தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் வாழ்ந்தார்கள். 

ஆனால் தற்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது பன்னாட்டு நிறுவனம். கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் பரந்து விரிந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள். பணம் தான் பிரதானம். பணம் தான் கொள்கை. கொள்ளை என்பது கட்சி ஆதாரக் கொள்கை.

ஆங்கிலேயர்களுடன் பேச, உறவாட, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைக்க ஆங்கிலேயர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் உருவாக்கிய கட்சி தான் காங்கிரஸ்.  

காங்கிரஸ் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு ஆங்கிலேயரின் நிர்வாகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் இடைவிடாது நடக்க வெள்ளையர்கள் யோசித்தார்கள். 1885 ஆம் ஆண்டு அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்த டப்ளின் பிரபுவின் ஆலோசனையின் ( மத ரீதியாகச் சாதி ரீதியாக மக்களைப் பிரித்துச் சண்டையிட வைத்து ஒற்றுமையைக் குலைப்பது) பேரின் மேலே சொன்ன ஆலன் என்ற வெள்ளையர் மூலம் காங்கிரஸ் கட்சி உருவானது. 

முதல் இருபது வருடம் இவரே தலைமைப் பொறுப்பில் இருந்தார். 

அப்போது இவர் பகிங்கரமாகச் சொன்ன ஒரு விசயத்தை இப்போது நாம் நினைத்துப் பார்ப்பது அவசியமாகும். 

"நாம் அரசியல் ரீதியாகக் கூடுகின்றோமே தவிர இதில் சமூகச் சீர்திருத்த கருத்துக்களுக்கு இடமில்லை. எவரும் கூட்டத்தில் அது குறித்துப் பேசக்கூடாது. எனவே மதம், அனுஷ்டானம்,வருணாசிரமம் போன்றவற்றைப் புண்படுத்தும் விதமாக எவரும் நடந்து கொள்ளக்கூடாது" என்று அரசியார் சொல்லியுள்ளார் என்றார். "எனவே மத ஆச்சாரமும், குல ஆச்சாரமும் இங்கே பாதுகாக்கப்படும்" என்றார். 

விதை ஒன்று போட்டால் எது முளைக்குமோ? அது தான் இன்று விஷ விருட்சமாகி வந்து வளர்ந்து நின்றுள்ளது. 

காலமாற்றத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக மாறியபடி வந்த காங்கிரஸ், நேரு, இந்திரா,ராஜீவ்,சோனியா என்று வந்து இன்று ராகுலின் கைக்கு வந்துள்ளது. நாளை சோனியாவின் மருமகன் "கை"க்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

"தீராத விளையாட்டுப் பிள்ளை"களான மகனையும் மருமகனையும் நம்பி இந்தப் பெரிய தேசம் காத்திருப்பது தான் நம் நாட்டின் பெரிய மிகப் பெரிய கொடுமை. நல்ல வேளை இந்த முறை இந்த மாஃபியா கும்பலிடமிருந்து இந்தியா தப்பித்து விட்டது. 

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த "காங்கிரஸ் பேரியக்கம்" என்பது வேறு. இன்று உள்ள "காங்கிரஸ் கட்சி" என்பது வேறு. இன்று இருக்கும் காங்கிரஸ்வாதிகள் ஊழல்வாதிகளாக மாறிப்போனதால் மகாத்மா காந்தி கண்ட கிராமப் பொருளாதாரம் அருவெறுக்கத்தக்கதாக மாறி உள்ளது. 

"ஏன் இந்த நாட்டில் விவசாயிகள் இந்தப் பாழாய்ப் போன விவசாயத்தைக் கட்டி மாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்?" என்று புண்ணியவான்கள் கேட்கின்ற அளவிற்குப் புத்திசாலிகளைக் காங்கிரஸ் கட்சி வளர்த்துள்ளது. இங்குள்ள கனிம வளங்கள் என்பது தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றால் மட்டுமே இந்த நாடு வளம் பெறும் என்று பொருளாதார மேதைகள் அருள்வாக்காகச் சொல்லி நம்மை ரட்சிக்கின்றார்கள்.

காந்தியை, நேருவை இன்று கூட விமர்சிக்கின்றார்கள். அவர்களின் கொள்கைகளில் குழப்பங்கள் இருந்ததே தவிர அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூர்ந்து கவனித்தால் அவர்களின் நோக்கம் இந்த தேசத்தை கொள்ளையடித்து தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. காந்தி தனது குடும்பத்தை ஆட்சி அதிகாரம் பக்கம் அண்டவிடவில்லை. ஆனால் நேருவால் பல விதங்களில் மெருகூட்டப்பட்டும் இந்திரா காந்தியால் சோபிக்க முடியவில்லை.  அதிகார போதை என்பது அனைத்தையும் விட மேலானது என்பதைத்தான் அவரின் ஒவ்வொரு வீழ்ச்சியும் நமக்கு இன்று பாடமாக கற்றுத் தந்து கொண்டிருக்கின்றது. 

மற்ற கட்சிகளின் ஊழல்களை எளிதில் எவரும் விமர்சித்து விட முடியும். போபர்ஸ் பீரங்கி ஊழல் முதல் இன்று திமுகவும் மாட்டிக் கொண்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வரைக்கும் இதன் சரித்திர கதை மிக நீண்டது. பசுத் தோல் போர்த்திய இந்தக் காங்கிரஸ் என்ற பெருச்சாளியின் வண்டவாளம் நேரு காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. 

அப்போது பிரிட்டனின் ஹை கமிஷனராகப் பணிபுரிந்த வி.கே.கிருஷ்ணமேனன் விதிமுறைகளை மீறி ராணுவத்திற்கு ஜீப் வாங்கும் 80 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டார். 

அப்போது இந்திய ராணுவத்திற்கு 4603 ஜீப்கள் தேவைப்பட்டது. 80 லட்சம் ரூபாய்க்கு 1500 ஜீப்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன போதும் வாங்கப்பட்ட ஜீப்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனம் ஜீப்களை ஒப்படைக்கும் முன்பே ஒப்பந்தத்தில் கூறப்பட்ட பெரும்பாலான பணம் அந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டு விட்டது. 1949 ஆம் ஆண்டு 150 ஜீப்கள் மட்டும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரோ அந்த ஜீப்புகள் இராணுவம் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். 

இந்த ஊழலைப்பற்றி விசாரிக்க நேரு அரசினால் அனந்தசயனம் ஐயங்கார் தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரனை கமிஷன் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிட்டது. ஆனால் நேரு நீதிமன்ற விசாரனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லாப் பந்த் செப்டம்பர் 30, 1955ல் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி ஊழல் வழக்கு முடிக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் திருப்தி அடையாவிட்டால் இப்பிரச்சனை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

இதில் ஆச்சரியப்படக்கூடிய அம்சம் என்னவென்றால் இந்த ஊழலில் தொடர்புடைய வி.கே.கிருஷ்ணமேனன் (பிப்ரவரி 3 1956) இலாகா இல்லாத அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவரே தான் பின்னாளில் நேருவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார். இவரையே பின்னாளில் நேரு, மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நியமித்தார். 

காங்கிரஸின் ஊழல் பயணம் என்பது 1948ல் தொடங்கியது. 2014 கடைசிக் கட்ட நேரம் வரைக்கும் தொட்டுத் தொடர்ந்தது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் காங்கிரஸில் சில நல்ல முகங்கள் தென்பட்டு கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியது. அது காமராஜர், கக்கன் போன்ற தன்னலமற்ற மனிதர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டது. அபுல்கலாம் ஆசாத் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் மூலம் புதுப்பொலிவை பெற முடிந்தது. 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் இவர்களைப் போன்ற தலைவர்களின் முகங்களை வைத்துத்தான் காங்கிரஸ் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. 

இவையெல்லாம் 1970 ஆம் ஆண்டோடு முடிந்து போனது. 

காங்கிரஸ் கட்சிக்கு காந்தி தேவைப்பட்டார். ஆனால் காந்தியின் கொள்கை தேவைப்படவில்லை. 

1980க்குப் பிறகு காந்தியைப் போலக் காமராஜரின் கொள்கைகளும் இங்கே கேள்வி கேட்பாரன்றிப் போய்விட்டது. நாங்கள் காந்தியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் சாராய அதிபர் விஜய் மல்லையாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். 

காரணம் காந்தியார் பயன்படுத்திய பொருட்கள் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது அதனை அதிக விலை கொடுத்து எடுத்தவர் இந்த மல்லையா தான். காந்தியின் கொள்கைகளே கலாவதியான பின்பு அவர் பயன்படுத்திய பொருட்களுக்கு இவர்கள் எங்கே மரியாதை தரக்கூடும்?

(அடுத்த பதிவில் இறுதியாக சில வார்த்தைகளுடன் முடிவுக்கு வருகின்றது)

தொடர்புடைய பதிவுகள்







Tuesday, June 24, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 4



இந்தப் பதிவின் முந்தைய தொடர்ச்சி 

வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற, விமர்சனத்துள்ளாகின்ற இரண்டு கட்சிகள், ஒன்று திமுக மற்றொன்று காங்கிரஸ். இதே போல நடந்து முடிந்த தேர்தலில் வலைதளங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அதன் நீக்கு போக்குகளை உணர்ந்து தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர் பிரதமர் நரேந்திரமோடி. 

நம்பமுடியாத அளவுக்கு ஓட்டு எண்ணிக்கையைப் பெற்ற இரண்டு கட்சிகள், ஒன்று அதிமுக மற்றொன்று பா.ஜ.க.  

இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் நூறு சதவிகிதம் அவர்களுக்கான ஆதரவு ஓட்டு அல்ல. மக்கள் மனதில் மாற்று கட்சியின் மேல் உருவான வெறுப்பும், எதிர்ப்பும் சேர்ந்து தான் இவர்களுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரத்தை கொடுக்க வைத்துள்ளது.

முதலில் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து விடலாம். 

இன்னமும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் சொல்லக்கூடிய ஒரு வாசகம் இது.

"உங்களுக்கெல்லாம் காங்கிரஸின் மரியாதை எங்கே தெரியப்போகின்றது? அடி உதை பட்டு ரத்தம் சிந்தி இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி என்று சரிவை நோக்கிச் சென்று மாநிலக் கட்சிகளைத் தலைதூக்கியதோ அன்றே இந்தியாவின் வளர்ச்சியும், கூட்டாட்சி தத்துவமும் கேள்விக்குறியாக மாறிவிட்டது" என்கிறார்கள். 

இன்னும் கொஞ்சம் எதார்த்தவாதியாக உள்ளவர்கள் மறக்காமல் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்கள். 

"ஒரு வேளை இத்தனை காலம் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா என்ற நாடே இருந்துருக்காது. மாநில பிரிவினைகள் உச்சத்திற்குச் சென்று இந்நேரம் நாடு துண்டு துண்டாகச் சிதறிப் போயிருக்கும்." 

உண்மை தான். அதற்கு முன்னால் சில விசயங்களைப் பார்த்து விடலாம். 

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் பதினேழரை லட்சம் வாக்குகள். இதை விடப் பத்து மடங்கு அதிகம் பெற்ற கட்சி அதிமுக. நேற்று முளைத்த தேமுதிக கூட மூன்று லட்சம் வாக்குகள் காங்கிரஸை விட அதிகம் பெற்றுள்ளது. 

ஏன் இந்த படுபாதாள வீழ்ச்சி? 

பொதுமக்கள் பட்ட பாடுகளை விட, ஒரு தொழில்துறையில் சம்மந்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கும், மிகப் பெரிய முதலீடு போட்டவர்களும் கடந்த பத்தாண்டுகளில் பெற்ற மனஉளைச்சல், அவமானங்கள், இழப்புகள் ஏராளமானது. 

இது தவிரத் தமிழர்கள் என்றாலே எட்டிக்காய் போலக் கசந்த கோமகன் வகுத்த வெளியுறவு கொள்கை, தொழில் கொள்கை, என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் ஏராளமான இழப்புகளை தந்தது. இது தவிர காங்கிரஸ் கட்சியின் மாற்றான் தாய் மனப்பான்மை ஒவ்வொரு தமிழர்களுக்கும் மனதிற்குள் வெறியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கொள்கையும் தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சிக்கு உதவியதே தவிர நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. 

கடைசியாக "பிரிட்டிஷ் வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திர நாட்டை அமெரிக்க வெள்ளையிடம் மகிழ்ச்சியாக ஒப்படைப்பதே தனது கடமை" என்று மன்மோகன் மட்டுமல்ல ஒவ்வொருவருமே செயல்பட்டவர்கள். 

இன்று காங்கிரஸ் கட்சியில் அத்தனை பேர்களையும் மக்கள் குப்பை போலவே தூக்கி எறிந்து விட்டனர். 

நான் எனது கடைசி மின் நூலை எழுதி வெளியிட்ட போது பின்வருமாறு எழுதினேன். அது தான் நடந்துள்ளது. 

இன்னும் சில மாதங்களில் தற்போது ஆண்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் தெருவில் கிடக்கும் குப்பையாக மாறப் போகின்றது. இந்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்காகச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு செய்த கேடு கேட்ட சமாச்சாரங்களை மக்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. 

இவர்கள் உருவாக்கி உள்ள ஒவ்வொரு பன்னாட்டு ஒப்பந்தங்களின் விளைவை நிச்சயம் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா மொத்தமும் உணரும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. மீதம் இருக்கும் விவசாயிகள் இந்த நாட்டிற்குப் பாரமாக இருப்பவர்கள் என்கிற நிலைக்கு மாறியிருப்பார்கள். பத்திரிக்கைகள் வாயிலாக வெளியே தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பற்றி "வெள்ளை அடிமைகள்" என்ற மின் நூலில் எழுதியுள்ளேன். 

ஆனால் இதனை விட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதி கொடுத்துள்ள திடீர் அமைச்சர் வீரப்ப மொய்லி (ஜெயந்தி நடராஜன் கையில் இருந்த சுற்றுச்சூழல் பொறுப்பு) செய்துள்ள காரியத்தின் பலனை அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு இந்தியனும் உணர முடியும். அதனைப் பற்றி இன்று வெளியான மின் நூலில் பேசியுள்ளேன்

காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்த நண்பர், மற்றும் வேறு சில கட்சிகளில் இருந்து கொண்டு நெருக்கமான தொடர்பில் இருந்த பல நண்பர்கள் நட்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டனர். காரணம் திரும்பத் திரும்ப உண்மையான விசயங்களை என் பார்வையில் பட்ட கருத்துக்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாற்று அரசியல் பார்வை கொண்டவர்களில் குறிப்பிட்ட சிலர் அழைத்து விவாதம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். 

நாம் கொண்ட வாழ்க்கை நெறிமுறைகளும், நாம் பார்க்கும் அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்த பார்வைகளும் வெவ்வேறு என்பதனை படித்தவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் ஆச்சரியமாக உளளது.

அதனால் என்ன? எவரிடமும் அண்டிப்பிழைக்க அவசியமில்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்களும், அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும் மற்றவர்களின் பார்வையில் வித்தியாசமாகத்தானே இருக்கும். 

எந்தத் தொடர் பதிவையும் பாதியில் நிறுத்தியது இல்லை. எந்த அளவுக்கு வேலைப்பளூ இருந்தாலும் என் கடமை என்பது எனக்குத் தெரிந்தவற்றை நான் புரிந்து கொண்டவற்றை என் மொழியில் அப்படியே ஆவணப்படுத்தி விட வேண்டும் என்பதே என் எண்ணம். 

குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியைப் பற்றித் தற்பொழுது வலைதளங்களில் வந்து உலாவி கொண்டிருக்கும் இளைஞர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகச் சுருக்கமாக எழுதி வைக்க விரும்புகினறேன்.  செத்த பாம்பு என்று ஒதுங்கி விடக்கூடாது. உள்ளே புதைத்தாலும் மீண்டும் எழுந்து விடககூடி வாய்ப்புள்ளது?  நரேந்திர மோடியின் ஒரு வருட ஆட்சிக்குப் பிறகே இவரின் தகுதியும் தராதரமும் விவாதிக்க வேண்டிய விசயமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  காரணம் பாழடைந்த வீட்டை சுத்தம் செய்து மறுபடியும் குடிபுகவே இந்த ஒரு வருடம் ஆகக்கூடும். 

இது தவிர நடந்து கொண்டிருக்கும் ஈராக் பிரச்சனை இந்தியாவையும் தாக்கக்கூடிய ஆபத்துள்ளது.  மோடியின் உறுதியான முடிவைப் பொறுத்து பாகிஸ்தான் நாட்டின் தலைவிதி மாறக்கூடும்.  இது குறித்து விரிவாக விரைவில் பேசுவோம்.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு எப்படி இந்தியர்களின் கல்வி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றினார்களோ? அதைப்போல அரசியல் கட்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வித்தியாசமான சிந்தனை ஒரு வெள்ளையர் மனதில் தோன்றியது. 

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டன் அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ் அதிகாரியான ஆலன் ஆக்கோடவியன் ஹ்யூம் என்பவருடைய சிந்தனையில் உருவான கட்சி (அமைப்பு) தான் இந்தக் காங்கிரஸ் கட்சி. 

சற்று விபரமாக அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

Sunday, June 01, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 3


தேர்தல் நடந்த நாள் மட்டுமல்ல முந்தைய வாரங்களிலும் வீட்டில் யாருமில்லை. வீட்டில் இருந்த நான்கு பெண்களும் கோடை விடுமுறையைக் கொண்டாட முறை வைத்து ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தனர். வீடே மயான அமைதி போல இருந்தது. இது போன்ற சமயங்களில் என் தனிப்பட்ட சோம்பேறித்தனமாகக் குணாதிசியங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். 

வீட்டில் எந்த இடத்தில் எதை வைத்தோம்? என்று மறந்து தடுமாறிக் கொண்டிருக்கும் போதெல்லாம் நான்கு பேர்களும் சேர்ந்து திட்டிக் கொண்டே எடுத்துக் கொடுப்பார்கள். இப்போது என் வாக்காளர் அடையாள அட்டை எங்கே இருக்கிறது? என்பது ஒரு பெரிய பிரச்சனை உருவாக, மனைவியை அழைத்துக் கேட்ட போது "இந்த இடத்தில் பாருங்க?" என்றார். 

கொடுத்த பூஜையை வாங்கிக் கொண்டே ராகுல் அடுத்த ஐந்து வருடங்கள் இந்தியாவில் இருப்பாரா? இல்லை அவரின் கூட்டாளிகளுடன் அவர் "விருப்பம் சார்ந்த செயல்பாடுகளில்" கவனம் செலுத்துவரா? என்பதை யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன். 

தேர்தல் குறித்துப் படித்த ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே தூங்கிய போதிலும் தனிமை என்னைக் கொன்றது. தொழிற்சாலை பரபரப்பில் இருந்தவனுக்கு வீட்டின் அமைதி உறுத்தியது. இது போன்ற சமயங்களில் எனக்கு எப்போதும் உற்ற தோழன் புத்தகங்கள் மட்டுமே. ஆனால் எந்தப் புத்தகங்களையும் படிக்கப் பிடிக்கவில்லை.  அமுதவன் புத்தகங்களை படிக்க எடுத்த போதிலும் அடுத்த நாள் அலுவலக வேலைகளுக்கு திட்டமிட வேண்டிய பணிச்சுமைகள் அழுத்திக் கொண்டிருந்தது.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் என்று வீடு முழுக்க இறைந்து கிடக்கும். எந்தப் பக்கம் கால் வைத்தாலும் ஏதோவொரு புத்தகம் கிடக்கும். இது தவிர மகள்களின் புத்தகங்கள் அதுவேறு தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும். என் வாசிப்புப் பழக்கம் இப்போது மகள்களுக்கும் வந்து விட்டது. நான் வாங்கிக் கொண்டு வருகின்ற வார இதழ்களையும் இருவர் போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருப்பார்கள். 

தேர்தல் அறிவிப்பு வந்த போது எனக்கு மற்றொரு வகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. வாங்கிக் கொண்டிருந்த அத்தனை வார இதழ்களிலும் பக்கங்கள் அதிகமாகி, பலதரப்பட்ட செய்திகள், யூகங்கள், கற்பனைகள், முடிவுகள், பேட்டிகள் என்று வந்து கொண்டேயிருக்கச் சுவராசியமாக இருந்தது. காசு கொடுத்து வாங்குவதற்குத் தகுதியாகவே இருந்தது. ஆனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் கொடுக்கும் பொய்த்தகவல்களும், புழுகு மூட்டைகளையும் படித்துப் படித்து வெறுப்பாகத் தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் எந்த வார இதழ்களையும் வாங்கக்கூடாது என்று முடிவுக்கு வந்தேன். இரவு நேரத்தில் மட்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மட்டும் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுப்பவர்களின் சொற்போர்களைக் கண்டு கொண்டிருந்தேன். 

பல சமயம் சிரிப்பு சில சமயம் ஆச்சரியம் கலந்த அதிசயமாகவும் இருக்கும். எனக்கு விருது கொடுக்கும் அதிகாரம் இருந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணாவுக்குத் தான் கொடுப்பேன். நம்ம நாராயணசாமியை விட ஒருபடி தாண்டி அசராமல் சிக்ஸர் அடித்துக் கொண்டேயிருந்தார். கேட்பவர்கள் சிரிப்பார்களே? என்பதைக்கூட யோசிப்பாரா? மாட்டாரா? என்று ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருந்தார். 

அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து தயாராகிக் கொண்டிருந்த போது தான் அந்தக் குழப்பம் உருவானது. சென்ற முறை ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் வீட்டுக்கே வந்து எந்தப் பள்ளிக்கூடம் என்பதைத் தெரிவித்து, அவர்கள் கட்சி சின்னம் உள்ள சிறிய சீட்டை கொடுத்து விட்டு சென்றனர். இந்த முறை அது வாங்காத காரணத்தால் எனக்குக் குழப்பமாக இருந்தது. தொழிற்சாலைக்கு விடுமுறை என்ற போதிலும் எனக்கு அலுவலகம் சார்ந்த பல வேலைகள் இருந்த காரணத்தால் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருந்தேன். அப்போது இரண்டு கட்சிகளை நினைக்கத் தோன்றியது. 

ஒன்று கம்யூனிஸ்ட் மக்கள் மற்றொன்று திமுக கட்சிக்காரர்கள். 

இரண்டு கட்சியிலும் அடித்தளம் பலமாக இருக்கும். தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டாமல் தீவிரத்தோடு பணியாற்றுவார்கள். எவராயினும் மரியாதை அளிப்பார்கள். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுப்பாகப் பதில் அளிப்பார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கட்சியிலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரைக்கும் உள்ள அத்தனை பேர்களுமே கட்சியின் கொள்கை சார்ந்த விசயங்களில் பிடிப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் தற்பொழுது மேல் மட்டம் பிரபல தொழில் அதிபர்களாக மாறிவிட் கீழ் மட்டம் "இனிமே இவனுங்கள நம்பி நம் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது" என்று உசாரகிவிட்டனர். 

"முன்பு தோழர்களே அணி திரண்டு வாரீர். நாம் யார் என்று முதலாளிகளுக்குக் காட்ட வேண்டும்" என்று மீன்பாடி வண்டியில் மைக் மூலம் அறைகூவல் விடுத்தால் போதும். திருப்பூர் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம செங்கொடியைத் தான் காணமுடியும். ஆனால் இன்றோ? கூவிக் கூவி அழைத்தாலும் "குடிக்கக் காசு தருவியா?" என்கிற அளவுக்கு மக்களின் மனம் மாறிவிட்டது. 

இவர்களில் யாரோ ஒருவரிடம் சென்றால் நிச்சயம் நம்முடைய சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் சென்றேன். 

நான் சென்ற முறை வாக்களித்த அரசு பள்ளிக்கூடம் இருந்த சந்தில் சென்று பார்த்த போது நினைத்த மாதிரியே அந்த அதிகாலை வேலையில் கம்யூனிஸ்ட் தொண்டர் படை சுறுசுறுப்பாக ஒரு வீட்டின் வாசல்படியில் இருந்து கொண்டு ஓட்டளிக்கச் செல்பவர்களிடம் தங்கள் கட்சி சின்னத்தைச் சொல்லி ஓட்டளிக்கச் சொன்னதோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தனர். 

மற்ற எந்தக் கட்சிகளையும் காணவில்லை. நான் அவர்களிடம் கேட்ட போது வைத்திருந்த மடிக்கணினியில் சோதித்துப் பார்த்து விட்டு எனக்குரிய சீட்டை எழுதி பள்ளியில் எந்த அறையில் சென்று ஓட்டளிக்க வேண்டும் என்பது வரைக்கும் மிகத் தெளிவாகக் கூறிவிட்டு மறக்காமல் "கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிங்க தோழரே" என்றார்கள். 

மனதிற்குள் சிரித்துக் கொண்டே திருப்பூர் வாழ்க்கையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாதகப் பாதகங்களை யோசித்துப் பார்த்துக் கொண்டே பள்ளியை நோக்கி நகர்ந்தேன். 

அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்கள். பல நிறுவனங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தார்கள். முதலாளிகளுக்குச் சிம்ம சொப்பமான இருந்தார்கள்.  சங்கத்துகாரர்கள் வருகின்றார்கள் என்றால் ஓடி ஒழிந்த பல முதலாளிகளை எனக்குத் தெரியும்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் என்றால் திருப்பூர் முழுக்க எங்குப் பார்த்தால் சிவப்பு நிறக் கொடிகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொழிலாளர்களுக்கு (அவர்கள் நம்பாத) கடவுளாக இருந்தார்கள். நான் கடந்த கால அனுபவத்தில் இவர்களால் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளேன். மிரட்டப்பட்டுள்ளேன். 

ஆனாலும் நியாயவான்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. சில்லறைத்தனமான கட்டைப்பஞ்சாயத்துச் செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டியும் தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர பாடுபட்டனர். டாலர் நகரம் புத்தகத்தில் கூட ஒரு அத்தியாயத்தில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் கூட மரியாதைக்குரிய தோழர் திருத் தங்கவேல் (சட்டமன்ற உறுப்பினர்) தான் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

ஆனால் இன்று? 

டெபாசிட் வாங்கக்கூட லாயக்கு இல்லாத அளவுக்கு மகத்தான சோக வரலாற்றின் ஒரு அத்தியாயமாக நடந்த 2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது. 

அவர்களின் கொள்கை காலாவதியாகிவிட்டதா? அல்லது தவறான கொள்கையைப் பிடித்துக் கொண்டு இன்றும் தொங்கிக் கொண்டிருக்கின்றார்களா? இல்லை தொழிலாளர்கள் இவர்களை நம்பத்தயாராக இல்லையா? 

அதை விட முக்கியக் காரணம் ஒன்று உண்டு.

சிலரின் பண ஆசைகளுக்காக ஒரு கட்சியின் கொள்கையே ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. தோழர்கள் முதலாளிகாக மாற நினைத்தால் என்ன விளைவு உருவாகும்? என்பதனை மக்கள் நடந்து முடிந்த தேர்தல் மூலம் உணர்த்தி உள்ளனர். இங்கு மட்டுமல்ல. மொத்த இந்தியாவிலும் இப்படித்தான்,

இங்கு நடந்த ஒரு மிகப் பெரிய செல்வந்தரின் திருமணத்தில் சில மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட போது நான் அமர்ந்து இருந்த வரிசைக்கு முந்தைய வரிசையில் இங்குள்ள திமுக, அதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த அத்தனை பெரிய தலைகளும் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். கட்சி ரீதியாகப் பிளவு பட்டு இருந்தனரே தவிர எல்லோருமே ஏதோவொரு வகையில் நெருங்கிய சொந்தங்களாகத்தான் இருந்தனர். 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த ஒவ்வொன்றும் என் காதிலும் விழுந்து கொண்டே தான் இருந்தது. பரஸ்பரம் கலாய்த்துக் கொண்ட போதிலும் அவர்களின் அந்தரங்க லூட்டிகளும் அவ்வப்போது வார்த்தைகள் வழியாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது. 

ஒரு காலத்தில் பிரபல பேச்சாளராக இருந்தவர் வாரிசை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைத்து அவர் கட்சிப்பற்றை அவர் பாணியில் காட்டியவரும் அங்கே இருந்தார். இது தவிரத் தொழிலாளர்களின் எட்டுமணி நேரத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இங்குள்ள முதலாளிக் கூட்டத்தோடு மத்திய அரசிடம் போய் நின்ற காரணத்தால் கட்சி கட்டம் கட்டி வெளியே தூக்கி எறிந்தது. அவரும் அசராமல் "உண்டியல் குலுக்குவது உடம்புக்கு ஆகாது. இதற்கு மேல் கட்சி நம்மைக் கரை சேர்க்காது" என்று திமுகவிற்கு மாறியவரும் அங்கே இருந்தார். 

ஒவ்வொரு தலைகளுக்குப் பின்னாலும் ஓராயிரம் சொத்துக்களைச் சேர்க்க உழைத்த அவர்களின் உழைப்பை புரிந்து கொள்ள முடிந்தது. 

கட்சி தான் தோற்று விட்டது. அவர்களைப் பொறுத்தவரையிலும் தோற்கவில்லை. 

அவரவர் விரும்பிய சொத்துக்களைச் சேர்த்து விட்டனர். காட்சிகள் மாறும் என்று அவர்கள் வாரிகளைக் களம் இறக்குவார்கள். கட்சிக்கு 3000 ஓட்டுக்குள் விழுந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எந்தப்பக்கம் பொட்டல்காடு உள்ளது. எவரைப் பினாமியாக வைத்து வளைத்துப் போடலாம் என்று வாரிசுகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். 

எப்போதும் போல உண்மையான கம்யூனிஸ்ட் தோழன் ஜிந்தாபாத் என்று தொண்டை தண்ணீர் வற்ற செங்கொடியை ஏந்தி கூட்டத்தில் களைத்துப் போயிருப்பான்.

தொடர்புடைய பதிவுகள்



Friday, May 30, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 2


"அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்பதற்காகச் சுற்றறிக்கை வாயிலாகச் சம்பளத்தோடு கூடிய ஒரு நாள் விடுமுறை அளித்த போதிலும் தொழிலாளர்களின் பெரும்பாலனோர் மனதில் "நாம் வாக்களிக்கச் செல்ல வேண்டும்" என்ற எண்ணம் உருவாகவில்லை. இரண்டு காரணங்கள். கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் வேறு எப்படிப் பயன்படுத்தலாம்? அல்லது மினி சுற்றுலாவாகச் சென்றால் அருகே எந்த ஊருக்குச் சென்று வர முடியும்? என்ற எண்ணம் தான் அவர்களின் மனதில் மேலோங்கியிருந்தது. இது போன்ற பல தகவல்கள் என் காதுக்கு வந்து கொண்டேயிருந்தது. 

"நாம் செய்ய வேண்டியதை செய்தாகி விட்டது. இனி அவரவர் விருப்பம்" என்று யோசித்துக் கொண்டே ஒரு நாள் முழுமையாக விடுமுறை கிடைக்கப் போகின்றது என்ற தகவலை மனைவியிடம் அழைத்துச் சொன்னேன். குழந்தைகள் குறுஞ்செய்தி மூலம் தான் பேசிக் கொண்டிருந்தனர். காரணம் தொழிற்சாலையில் புதிய பதவியை ஏற்றதில் இருந்து அவர்களை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டேன் என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. 

இதை ஏற்கனவே நான் உணர்ந்திருந்த போதிலும் "ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்" என்ற கொள்கையின் படி சில மாதங்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும். நான் விரும்பிய மாற்றங்கள் சரியானபடி வந்து விட்டால் அதன் பிறகு என் பங்களிப்பு குறைந்து விடும் என்று சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு அலையும் பேரிலையாக என்னை தாக்கிக் கொண்டேயிருந்தது. 

காரணம் தொழிலாளர்களின் மனோநிலை அந்த அளவுக்குச் சீர்கெட்டுப் போயிருந்தது. அவர்களின் உரிமைகளைப் பற்றியும் யோசிக்கத் தெரியவில்லை. அதே போல அவர்களுக்குண்டான கடமைகள் குறித்தும் கண்டு கொள்ளாமல் கிடைத்த வரை லாபம் என்று ஒவ்வொரு துறையிலும் மொன்னையாக "வந்தோம் வேலை செய்தோம்" என்று இருந்தார்களோ ஒழிய ஒரு நாளில் வெளிவர வேண்டிய ஆடைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாகவே இருந்தது. சாட்டையை எடுத்து சொடுக்க ஆரம்பித்தேன். இந்தச் சாட்டையின் மற்றொரு பெயர் அன்பு. 

துறைவாரியாகத் திறமைசாலிகள், உழைப்பின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், அங்கீகாரம் இல்லாமல் சோர்ந்து போயிருந்தவர்கள் போன்ற பலரையும் அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் தற்பொழுது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம், ஆனால் உண்மையிலேயே அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளம் போன்றவற்றைப் புரிய வைத்தேன். ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் பணிபுரிந்தால் அவரின் வாரச்சம்பளம் என்ன கிடைக்கும்? அதே சமயம் பல காரணங்களால் எட்டு மணி நேரம் பணிபுரியும் போது ஒரு மாதத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைக்கும்? என்பதைப் புரிய வைக்க இந்த அணுகுமுறை ஒவ்வொரு இடத்திலும் பட்டு எதிரொலித்தது. 

இது தவிர விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருபவர்கள், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஊக்கத் தொகை என்று ஒவ்வொன்றாக நான் உருவாக்கிய தொழிலாளர்கள் சார்ந்த ஒவ்வொரு செயல்பாடுகளும் பேக்டரி மேனேஜர் பதவியில் இருந்தவருக்கு உற்சாகத்தை அளிக்க அவர் பங்குக்குக் களத்தில் சூறாவளியாகப் பயணிக்கத் தொடங்கினார். மறுமலர்ச்சியின் அடுத்த அத்தியாயம் உருவாகத் தொடங்கியது. வாரந்தோறும் 1500க்கு குறைவாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எளிதாக 3000 ரூபாய் அளவுக்கு எகிற, இது அடுத்தடுத்து பல விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. ஒவ்வொரு துறையும் விரைவாகச் செயல்படக் காரணமாக அமைந்தது. 

ஒரு துறை மற்றொரு துறையோடு சம்மந்தப்பட்டு இருக்கும். ஒரு துறை வேகமாகச் செயல்படும் போது அடுத்தத் துறையும் செயல்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. ஒருவரின் சம்பளம் அடுத்தவருக்கு உத்வேகத்தைக் கொடுக்க அவரும் வேலையில் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேலை செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் தடுமாறத் தொடங்கினர். 

சிலர் அவர்களாகவே "இனி இங்கே காலம் தள்ள முடியாது" என்று வெளியேறத் தொடங்கினர். அவர்களின் இடத்தில் புதியவர்களைக் கொண்டு வந்து அமர்த்த இன்னும் வேகம் அதிகமாகத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் தான் பேக்டரி மேனேஜர் என்னிடம் வந்து சொன்னார். 

"தேர்தலுக்குச் செல்பவர்களின் இத்தனை பேர்கள் நிச்சயம் திரும்பி வர மாட்டார்கள்" என்றார். அவர் வைத்திருந்த பட்டியலைப் பார்த்த போது தலை சுற்றியது. காரணம் 50க்கும் மேற்பட்ட பெண்கள். வயதைப் பார்த்த போது 20 வயதுக்கு அருகே இருந்தார்கள். இதைவிட அவர்கள் அத்தனை பேர்களும் முதல்முறையாக வாக்களிக்கப் போகின்றவர்கள். 

"ஏன் திரும்பி வரமாட்டார்கள்? வேறெதும் பிரச்சனையா?" என்றேன். 

"அத்தனை பேர்களும் காதலில் சிக்கியவர்கள். பசங்க இடையில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். நானும் எல்லா இடத்திலும் செக் பாயிண்ட் வைத்திருந்தேன். இப்பொழுது நீங்க பல இடங்களில் திறந்து விட்டுட்டீங்க. இனி அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது?" என்றார், 

பேக்டரி மேனேஜர் மண்ணின் மைந்தர். அதே குணம். மனம். திடம். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் அதிகாரத் தோரணையாகவே வரும். 

மற்றொரு பிரச்சனை ஒரு நாள் உற்பத்தி குறையும் போது என் கேள்விகளை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும். நான் சிரித்துக் கொண்டே கத்தியை ஆழத்தில் குத்தி வெளியே எடுக்கும் போது அவர் என் மேல் காட்ட முடியாத கோபத்தை உற்பத்தியில் காட்டியே வேண்டிய நிலையில் இருந்தாக வேண்டும். 

நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயலும் அவருக்கு எரிச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது. 

காரணம் ஒரு தொழிலாளி ஒரு இடத்தில் இல்லையென்றால் அதன் பாதிப்பு பல இடங்களில் எதிரொலிக்கும்.  சங்கிலித் தொடர் அறுந்து போய்விடும். தொழிற்சாலை சார்ந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஒவ்வொரு அலுவலக ஊழியர்களுக்கும் நான் "டெரர் பாண்டியனாக" இருந்தேனே தவிரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் "இவர் நமக்கு நல்லது செய்ய முயற்சிக்கின்றார்" என்ற எண்ணத்தை மெதுமெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தேன். 

"ஏனுங்க காதலிப்பது தவறா?" என்றேன். 

அவருக்குக் கோபம் அதிகமாக "இவங்க செய்வது காதல் இல்லைங்க. அது வேற" என்று பல உதாரணங்களைக் காட்டி புலம்பித் தள்ளிவிட்டார். 

அவர் சுட்டிக் காட்டிய பல சுவராசிய சம்பவங்களை மனதிற்குள் ரசித்துக் கேட்டுக் கொண்ட போதிலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்தச் சுற்றறிக்கை ஒன்றை தயார் செய்யச் சென்னேன். 

"எல்லோருக்கும் விடுமுறை என்பது கட்டாயம். ஆனால் ஊருக்குச் சென்று ஓட்டளித்து விட்டு வருபவர்களின் பெருவிரல் மை சோதிக்கப்படும். மனிதவளத்துறை மூலம் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு மட்டும் சம்பளம். மற்றவர்களுக்குச் சம்பளம் இல்லாத விடுமுறை மட்டுமே". 

இது முறையற்ற செயல் என்ற போதிலும் குறிப்பாக விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அத்தனை பேர்களும் கட்டாயம் அவரவர் வீட்டுக்குச் சென்று பத்திரமாகப் பணிக்கு திரும்பி வர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. 

இதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் வீட்டில் இருந்து எனக்கே நேரிடையாகப் பல அலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியது. அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே மாதிரியாகவே இருந்தது. 

"என் பெண்/பையனை அவசியம் அனுப்பி வைங்க. இல்லைன்னா எங்களுக்குப் பிரச்சனை ஆயிடும்" என்றார்கள். 

தொடக்கத்தில் இது வினோதமாகத் தெரிந்தது.

என்னடா இது? ஓட்டளிக்க இத்தனை ஆர்வமா என்று மேற்கொண்டு அடுத்தடுத்து விசாரிக்க நடுவட்டம், தொட்டபேட்டா தொடங்கிச் சுற்றியுள்ள பல ஊர்களில் உள்ள ஒவ்வொரு சிறிய சிறிய கிராமங்களையும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் விலை கொடுத்து வாங்கிய ரகசியம் புரிந்தது. 

பாவம் அப்படியும் அவர் தோற்றுவிட்டார். 

இதை விட மற்றொரு ஆச்சரியம் என்னவென்றார் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும், கட்சியில் உள்ள முக்கியத் தலைகளும் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிவிட்டனர். 

ராஜா எப்போதும் ராஜா தான். 

அதனால் தான் நீலகிரி மாவட்ட வாக்காளர்களில் அதிகமானோர் நோட்டோ வில் கும்மாங்குத்து குத்தி அவரைக் கூஜாவாக மாற்றிவிட்டனர். இது தவிர மற்றவர்கள் "எப்ப அப்பன் ஆயி காலத்திலிருந்தே ரெட்ட இல தான்" என்ற எண்ணத்தில் மாறாமல் சிந்தாமல் சிதறாமல் பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர். 

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, May 28, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 1

நான் பணிபுரியும் நிறுவனத்தில் எனது நேரிடையான கட்டுப்பாட்டில் 2000 பேர்களும், மறைமுகமாக 3000 பேர்களும் உள்ளனர். இது தவிர ஏனைய துறை சார்ந்து பல பிரிவுகள் உள்ளன. வாரத்தில் ஏதோ ஒரு நாளில் ஏதோவொரு விசயத்திற்காக ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளனர். 

ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை அல்லது அலுவலகத்தின் உள்ளே நுழைந்தால் வெளியுலகம் மற்றும் குடும்பம் அனைத்தையும் மறந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்போம். 

காரணம் அடுத்தடுத்து அலை அடித்துக் கொண்டேயிருக்கும். 

தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் எத்தனை விதமான தட்டுக்கள் இருக்க முடியுமோ அதன்படி எல்லாத்தட்டு மக்களும் இருப்பதால் தினந்தோறும் உருவாகும் பஞ்சாயத்துக்குப் பஞ்சமிருக்காது. சுவாரசியமான நிகழ்வுகள், ஆச்சரியமான, அவஸ்தையான அனுபவங்கள் தினந்தோறும் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.  

எழுத்தாளர்கள் சிலாகித்துப் பேசும் இலக்கிய வாசிப்பைத் தாண்டிய அனுபவமிது. ரத்தமும், சதையும், வியர்வையும் அழுக்கும் கலந்த உண்மையான வாழ்வியல் தத்துவங்களை இங்கிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு ஆய்த்த ஆடை தொழிற்சாலை என்பதும், அது (ஏற்றுமதி) சார்ந்த நடவடிக்கைகள் என்பதும் ஒரு தினப்பொழுதில் நம்மை ஒரு நிமிடம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர விடாமல் கட்டுப்போட்டுவிடும் வல்லமை கொண்டது. அதிகமான கோடிகள் புழங்கும் இடம். நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். திருப்பூரில் வாரச்சம்பளம் என்பது மிகப் பெரிய சவால். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு தொழிலாளர்களும் தீபாவளி. ஆனால் முதலாளிகளைப் பொறுத்தவரையிலும் அன்று மாலை சம்பளப்பட்டுவாடா முடித்துப் பெருமூச்சு விட வேண்டிய தினம். 

ஒவ்வொரு சிறிய பொறியும் கொழுந்து விட்டு எரியக்கூடிய வாய்ப்புள்ளதால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு காதுகளை மட்டும் திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை. 

ஒவ்வொரு பெரிய நிறுவனத்திலும் முதலாளிக்கு அடுத்து இரண்டு பெரிய தலைகள் உண்டு. 

ஒன்று மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பான தலை (ADMINISTRATION  - G.M.) அடுத்த மொத்த உற்பத்திக்கும் உண்டான தலை (PRODUCTION - G.M.). இரண்டுமே முக்கியமான பதவி என்றபோதிலும் உற்பத்திக்கு பொறுப்பான தலை தறுதலையாக அமையும் பட்சத்தில் முதலாளிக்கு பண ரீதியான பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமல்ல. உள்ளே இருக்கும் மொத்த தொழிலாளர்களும் தினந்தோறும் நரகாசூரனிடம் சிக்கியவர்களாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. 

தொடக்கத்தில் நிர்வாக (ADMN.) பொறுப்பில் இருந்த போது மூச்சு விட நிறைய நேரம் கிடைத்தது. தினந்தோறும் கோப்புகளோடு உறவாடிக் கொண்டிருந்தேன். என் விருப்பம் சார்ந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் நேரம் கிடைத்தது. ஆனால் நாலைந்து மாதங்களுக்கு முன் உற்பத்தித் துறையில் இருந்தவரின் திறமையற்ற செயல்பாட்டின் காரணமாக நிறுவனம் படிப்படியாக மூத்திரச் சந்துக்குள் சிக்கியவனின் நிலைபோலத் தடுமாறத் தொடங்கியது. 

நிர்வாகம் விழித்துக் கொண்டது. உற்பத்தி மற்றும் நிர்வாகம் இரண்டிலும் என் அனுபவத்தைப் பற்றி உணர்ந்த நிர்வாகம் என்னைக் கரைத்து உற்பத்தி என்ற கடலுக்குள் தள்ளிவிட நான் அப்போது அவர்களிடம் வைத்த ஒரே கோரிக்கை "என்னிடம் பொறுப்பு கொடுத்து விட்டால் வேறு எவரும் எதிலும் தலையிடக்கூடாது "என்பதே. 

திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனத்திலும் நிர்வாகம் என்பதும், அதன் ஆதார கொள்கை என்பதும் "எப்போதும் ஒவ்வொரு விசயத்திலும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிரு" என்பதே. காரணம் எத்தனை கோடிகள் புழங்கிக் கொண்டேயிருந்தாலும் இன்று வரையிலும் இங்குள்ள நிர்வாகம் என்பது குடிசைத் தொழில் போலவே நடந்து கொண்டிருக்கின்றது. காரணம் தொழில் என்பதையும் குடும்பம் என்பதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் இருக்கும் முதல் தலைமுறை பணக்காரர்கள் இவர்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு துறையிலும் கலந்தே இருப்பார்கள். 

இதுவொரு மிகப் பெரிய சவாலான அதைவிட அவஸ்த்தையான பிரச்சனைகளை அதிக அளவு உருவாக்கக்கூடிய ஒன்று. தெளிய வைத்து தெளிய வைத்து அடி விழுந்து கொண்டேயிருக்கும். நம் மேல் விழும் அடியை பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தப்பக்கம் திரும்பினாலும் குற்றம் என்கிற ரீதியில் நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் தினந்தோறும் முழி பிதுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். 

முக்கிய முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும். எடுக்காமல் இருக்கவும் முடியாது. 

நிர்வாகம் மற்றும் உற்பத்தி இரண்டு துறையிலும் காசு அதிகம் புழங்கினாலும் உற்பத்தித்துறையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்குவதால் ஊழலுக்குப் பஞ்சமிருக்காது. இந்தப் பதவியில் பெரும்பாலான நிறுவனங்களின் அவர்களின் உறவு சார்ந்தவர்கள் மட்டுமே அமர்த்தப்படுவார்கள். ஆனால் கட்டங்கள் மாறி என்னைக் கட்டத்திற்குள் கொண்டு நிறுத்தி, பட்டி மாடு போல சமாதானப்படுத்தி அடைத்தார்கள்.   நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். நானும் மகிழ்ச்சியாகத்தான் ஏற்றுக் கொண்டேன். நமக்குத்தான் பஞ்சாயத்துக்கு நாட்டாமையாக இருப்பது பாயசம் சாப்பிடுவது போலத்தானே?

என் வேகத்தின் காரணமாக அவர்கள் இலக்கு நிர்ணயித்த மூன்று மாதத்தில் கிடைக்க வேண்டிய பலன்கள் ஒரே மாதத்தில் கிடைக்க என் தனிப்பட்ட அதிகாரத்தில் குறுக்கீடு செய்து கொண்டிருந்த நிர்வாகத்தின் உறவுக்கூட்டம் சார்ந்த அத்தனை பேர்களை "நீங்கள் அத்தனை பேர்களும் ஒதுங்கி நின்று கொள்ளுங்க. இனி அவர் பார்த்துக் கொள்வார்" என்று நிர்வாகம் கட்டளையிட காற்றுச் சுகமாக வீசத் தொடங்கியது. 

என் சுவாசம் சீரானது. 

சுதந்திரம் என்பது முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒரு கோரிக்கையாக வைத்த போது நிர்வாகம் மிரண்டு போனது. அதாவது நிர்வாகம், உற்பத்தி இரண்டுக்கும் நானே ராஜா போல இருந்தால் வேறு சில காரியங்களை என் வேகத்தின்படி விரைவாக முடிக்க வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்த போது மொத்த நிர்வாகமும் மிரண்டு போனது. காரணம் நிர்வாகத்தின் முதல் தலையாக ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி இருக்க அவரின் பழைமையாகப் பஞ்சாங்க செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் எனக்குப் பல இடர்பாடுகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தது. 

"உழைப்பவனுக்கு உண்மையான சலுகைகள் கிடைத்தே ஆக வேண்டும்" என்பது என் கோரிக்கை. யார் உழைப்பவர்? யார் உழைக்காதவர் என்பதை நிர்வாகம் பார்ப்பவர் முடிவு செய்ய முடியாது? நான் தான் அதையும் முடிவு செய்வேன் என்ற போது பெரிய சலசலப்பு உருவானது. 

இது எங்கும் இல்லாத அதிசயம். என் பிடிவாதம் அவர்களுக்குப் பல பயத்தை உருவாகத் தொடங்கியது. செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு கிளம்பி விடுவேனோ என்று பயந்து போய்க் குறிப்பிட்ட சில வாரங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். சிலவற்றைச் சோதிக்க, பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நான் எதிர்பார்ப்பது சரியே என்பதை உணர்ந்து கொண்டு நிர்வாகம், உற்பத்தி இரண்டையும் என்னிடம் கொடுக்கச் சம்மதித்தது, மொத்த நிர்வாகத்தின் பாதியை என் கையில் கொடுத்து மற்றொரு பகுதியை வேறொரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள். 

ஏறக்குறைய 5000 பேர்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் ஐம்பது சதவிகித நிர்வாகத்தின் மொத்த பொறுப்புக்கும் நானே ராஜா. நானே மந்திரி. நான் எடுக்கும் இறுதி முடிவுகள் சார்ந்து தற்பொழுது நிர்வாகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. காரணம் மிகப் பெரிய பிரிவுகள் அனைத்தும் என் கைவசம். இங்கிருந்து உற்பத்தி செய்து செல்ல வேண்டிய ஆடைகள் பொறுத்தே நிர்வாகத்தின் நிதி நெருக்கடிகள் குறையும் என்ற நிலையில் இருப்பதால் சவாலான வேலைகளை தற்பொழுது சந்தோஷமாக செய்து கொண்டிருக்கின்றேன்.

வருடந்தோறும் முக்கியமான அரசு அறிவிப்பின்படி விட வேண்டிய விடுமுறை தினங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்த நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களிடம் இருந்து என்னிடம் பொறுப்புகள் வந்து சேர்ந்த போது 2014 பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நான் செய்தே முதல் பணி சுற்றறிக்கையின் மூலம் அன்றைய தினம் சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம். அன்று அனைவரும் ஊரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று ஒவ்வொரு தொழிலாளர்களிடத்தில் கையெழுத்து வாங்கச் சொன்னேன். 

அப்போது உள்ளே இருக்கும் தொழிலாளர்கள், அலுவலம் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் தேர்தல் குறித்த எண்ணங்கள், கட்சி குறித்த அபிமானங்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரிடமும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பேசி தெரிந்து கொள்ளத் தொடங்கினேன்.