Wednesday, December 07, 2022

டிசம்பர் 5 ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினம் - மேலும் சில விசயங்கள்.

டிசம்பர் 5 ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினம்.

மேலும் சில விசயங்கள்.......


ஜெ வை ஆதரிப்பவர்கள் என்று நான் இதுவரையில் இணையத்தில் பார்த்த அத்தனை பேர்களிடம் ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது.  

அவர் கருணாநிதிக்குக் கடைசி வரைக்கும் மரண மாஸ் காட்டினார்.  

அடுத்து அவர் ஒரு பிராமணப் பெண்மணி. 

அடுத்து அசாத்தியமான தைரியம். 

அடுத்துத் துருப்பிடிக்காத இரும்பு ராடு போன்றவர் 

அடுத்து அம்மா என்ற பெயருக்குப் பொருத்தமானவர்.

சென்ற பதிவில் பலரும் பலவிதமான பதில்களை சிறப்பாகவே சொல்லி உள்ளனர்.  ஆனால் வேறொரு விசயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

அதற்கு முன்னால் ஒரு சிறிய உதாரணம்.

கருணாநிதி என்பவர் பேயா? பிசாசா? வெல்ல முடியாதவரா? ஒரு மண்ணும் இல்லை.  அவரே எம்ஜிஆரிடம் தொடக்கத்திலும் பிச்சை எடுத்து தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  குளித்தலையில் முதல் முறையாக சமஉ வுக்கு போட்டியிட்ட போது அங்கு செல்வாக்காக இருந்தவர் காலில் விழுந்து நீங்கள் காப்பாற்றினால் நான் வாழவேன். நீங்கள் சொன்னால் தான் எழுந்து நிற்பேன் என்று கதறி தான் தன் சட்டசபை வாழ்வைத் தொடங்கினார். 

இதெல்லாம் வரலாற்றில் இருக்கும் உண்மை.  

ஆனால் ஜெ எப்படி கருணாநிதியை ஒழிக்க முடியும் என்று நம்புகின்றீர்கள்.

அதாவது கருணாநிதியை அழிக்க  நான் தான் சரியான நபர் என்பதனை பத்திரிக்கை வழியாகக் காட்டிக் கொண்டு அவர் பத்து ரூபாய் திருடிய இடத்தில் பத்து கோடி திருட முடியும் என்பதனை தொடங்கி வைத்தவர் ஜெ. 

இன்று மாப்பிள்ளையும் மகனும், மனைவியும் கத்தை கத்தையாக தினமும் எண்ணுகின்றார்களே எப்படி? 

ஜெ கற்றுக் கொடுத்த வித்தையது.

ஜெ ஆட்சியில் கல்வித்துறை எப்படி இருந்தது?

இப்போது 20 முதல் 25 வயதுள்ள ஆண்கள் பெண்களிடம் அவர்கள் கல்வி அறிவு மூலம் கற்றவற்றை, 

அவர்கள் தொழில் ரீதியாக வளர்ந்து இருந்தாலும், பார்க்கும் பணி மூலம் உயர்ந்து இருந்தாலும், பொருளாதாரத்தில் உன்னதமான இடத்தை அடைந்து இருந்தாலும் பேசிப் பாருங்கள்.  

90 சதவிகிதம் சூர மொக்கையாக இருப்பார்கள்.  

காரணம் ஜெ ஆட்சியில் கல்வித்துறையில் நடந்த அலங்கோலத்தை இப்போது நினைத்தாலும் பத்து லிட்டர் பாலிடாயில் வாங்கி சமாதியில் இருப்பவரை எழுப்பி வாயில் ஊற்றி விடத் தோன்றும்.  

நிகழ்காலச் சமூகத்திற்குத் தொடர்பு இல்லாத பாடங்கள், எந்த புதிய பாடங்களையும் கொண்டு வரவே இல்லை.  

1990 முதல் 2017 வரை இங்கு படித்த அத்தனை பேர்களும் தங்கள் அளவில் கற்றுக் கொண்டு முன்னேறியவர்கள் மட்டுமே.  பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை என்பது ஊழல், லஞ்சம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டு எவ்வித மாற்றமும் இன்று, முன்னேற்றத்திற்கு வழியே இல்லாமல் மாதம் ஒரு கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலாளர் பதவியில் இருந்த பெண்மணி அமைச்சர்களை மிரட்டும் அளவுக்கு, நான் ஆண்டி (நியமித்த) ஆள் என்ற தெனாவெட்டுடன் தனியார் கல்வி முதலாளி விருப்பத்துடன் நடந்தது.

அடுத்து தொழில் துறை.

ஒரு முதலாளி கூடத் தமிழ்நாடு பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை.  ஆனால் விழாவிற்கு பஞ்சமே இல்லை.  

அடுத்து மின்சாரத்துறை

தனியார் முதலாளி வழியாக பல லட்சம்  கொள்ளையடிக்க முடியும். 

கொள்ளையடிப்பதற்காக நாம் மின்சாரம் தயாரிக்கக்கூடாது. இருப்பதைச் சிதைந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதனைத் தொடங்கிய புண்ணிய ஆத்மா கருணாநிதி அல்ல.  

இந்த மகா புனிதவதி தான் என்பதனை நம்புவீர்களா?  

நத்தம் விஸ்வநாதனை   பத்து முறை தூக்கில் போடலாம்.  அப்பவும் சாகாது அந்த உடம்பு. இந்த நபர் ஒரு கூட்டத்தில் வாய் தவறி ஜெ தன்னை எப்படி ஒரு முறை அழைத்தார் என்பதனை வாய் உளறி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டார்.  

கட்டுக்கோப்பாக கட்சியை வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள் அல்லவா? 

எப்படி?

மதுசூதனனை போயஸ் தோட்டத்தில் (ஒரு பிரச்சனைக்காக மனைவியுடன் வரவழைத்து இருந்தார்)  தன் கணவரை ஜெ எப்படி பேசுகின்றார். (செருப்பை எடுத்து வீசினாராம்) எப்படி கையாண்டார் என்பதனை அவர் மனைவி பார்த்து விட்டு ( ஜெ ஆங்கிலத்தில் உள்ளது போல தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் சர்வ சாதாரணமாக கூச்சப்படாமல் பேசக்கூடியவர்.  உச்சக் கட்ட கோபத்தில் பக்கத்தில் என்ன கிடைக்கின்றதோ அதனை வைத்துத் தாக்கக்கூடியவர். அதாவது தன் நிலை உணர முடியாத அளவுக்கு உச்சி முதல் பாதம் வரைக்கும் அகங்காரம் நிரம்பி வழிந்தது)  வீட்டிற்குச் சென்றவுடன் மதுசூதனன் மனைவி அழுது ஆர்ப்பாட்டம் செய்து பெரிய களேபரமே உருவாக்கி விட்டார். அவர்கள் தாய் மொழி தெலுங்கு.  பார்த்த நிருபர்களுக்கு முதலில் முழுமையாக புரியவில்லை.  கூடவே அந்தம்மா ஜெ வைப் பற்றிப் புழுத்த வார்த்தைகளில் பேசி சொர்ணாக்கா பாணியில் திட்டியது வரலாறு.  மதுசூதனன் கெஞ்சி மனைவியை ஆஃப் செய்தார்.  

காரணம் ஒவ்வொருவரும் பதவி இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும்.  அதற்கு மானத்தை விற்றால் பரவாயில்லை என்ற புதிய கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துரைத்தார்கள்.

நான் தமிழ்நாட்டில் பார்த்த அரசியல்வாதிகளில் ஜெ மட்டும் வித்தியாசமாகவே தொடக்கம் முதல் இறுதி வரை வாழ்ந்தார்.  

தனக்கு எந்த அளவுக்கு அறிவு உள்ளது என்பதனை எந்த இடத்திலும் அவர் காட்டிக் கொண்டது இல்லை.  காரணம் அறிவே இல்லை என்பது அருகே இருந்தவர்களுக்குத் தெரிந்த காரணத்தால் தான் ஒரு மாபியா கும்பல் பல லட்சம் கோடி திருட முடிந்ததுள்ளது.

நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்கள் நிதி அமைச்சராக பதவியேற்றது முதல் இன்று வரையிலும் அவர் குறித்து எத்தனை எத்தனை விமர்சனங்கள். அவர் கற்றுக் கொண்டர். காரணம் உழைத்தார். இயற்கை உதவியது. மோடி நம்பினார். நேர்மையாக இருப்பதே கொள்கை என்பதாக இன்றுவரையிலும் வாழ்கின்றார். செயல்படுகின்றார். அதே நரைத்த தலையுடன் அதையே தன் அழகாக மாற்றிக் கொண்டு விட்டார். ஆனால் ஜெயலலிதா ஒப்பனைப் போட்டு முடிய இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும்.  அதுவரையிலும் சாலையில் செல்லும் பாதசாரிகள் முதல் போக்குவரத்து காவல்துறையின் அடிமட்டம் வரை வெயிலில் நின்று சாவது அவர்களுக்கு கிடைத்த விதியின் சாபம்.

எதிர்க்கட்சியாக இருந்த போது அறிக்கை விடுவது தான் பணி.  

கூச்சமே இல்லாமல் திருடி வாங்கிய கொடநாட்டில் போய் உல்லாசமாக உறவாடுவது. அது ஆறு மாதம் வரைக்கும் தொடரும்.  உச்சக்கட்ட சுப்ரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருந்த காரணத்தால் ஆங்கிலப் பத்திரிக்கைகள் நக்கல் செய்து ஜாலியாக எழுதுவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அத்தனை பேர்கள் மேலும் கேஸ் போட்டு அலைய விடுவது. கடைசியில் நிர்வாகம் போயஸ் கார்டன் வந்து மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி விடுதலை பெற்றுச் செல்வார்கள்.

உங்களுக்குத் தோன்றும். அவர் காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததே என்று.  உண்மை தான்.  

சொர்ணாக்கா மாதிரி இருந்தால் பேட்டையில் மற்றொரு மயில் அக்கா வந்து தொழில் செய்யுமா?  அப்படித்தான். உடனே அடி வெட்டுக் குத்து என்று நீதிபதி வரைக்கும் சென்ற காரணத்தால் இந்த பொம்பள எப்ப பதவியை விட்டுச் செல்லும் என்று பயந்து கொண்டு இருந்தார்கள்.  அடி வாங்கிய வக்கீல் விஜயன் எழுந்த நடமாடப் பத்து மாதங்கள் ஆனது என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.

கடந்த 75 ஆண்டு காலத் தமிழக அரசியல் சரித்திரத்தில் சமுதாயத்தில் ஒழுங்கு என்பது முழுமையாக சீர் கெட்டது இந்த பெண்மணியின் கேவலமான நடவடிக்கையின் காரணமாக என்பதனை மறக்காதீர்கள். படித்த பாதித்த கேட்ட தெரிந்த உணர்ந்த பல விசயங்களை நாகரிகம் கருதி எழுதாமல் தவிர்க்கின்றேன்.  

ஜெ வைத் தொடர்ந்து சசிகலாவிடம் பாடம் கற்று அவருக்கே பாடம் கற்றுக் கொடுத்த எடப்பாடி சாதித்துக் காட்ட அதனை மிஞ்ச இப்போது நான்கு வரிகள் கூட சொந்தமாக பேசத் தெரியாத வாரிசு புலிகேசி கோமாளிக்கூட்டம் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

No comments: