Thursday, January 25, 2018

மருத்துவ சிந்தனையாளர்



முகநூல் பதிவுகள் வலை பதிவுகளைத் தின்று செரித்து விட்டது என்று புலம்பலை இந்த வருடம் முழுக்கப் பல இடங்களில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது உண்மையல்ல. வாசிக்க நேரம் இருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்களுக்கு உண்டான களமே வலைபதிவுகள். வாசிக்காமல் போகின்றவர்களுக்குத் தான் இழப்பே தவிர எழுதுகின்றவர்களின் சிந்தனை மேன்மேலும் கூர்மையாகிக் கொண்டேதான் இருக்கின்றது. 

ஆனால் முகநூல் பதிவுகளிலும் காலமாற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பலரும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல், மதம், சாதி இந்த மூன்றும் தான் இந்தத் தளத்தில் பேசு பொருளாக உள்ளது. அவசர கதியாக வாசிக்க விரும்புவர்களுக்கு, அலைபேசி வாயிலாக உண்டான வாசிப்புகளுக்கு ஈர்ப்பும் இதில் தான் உள்ளது என்பதனை உணர முடிந்தாலும் அவையெல்லாம் கூச்சலும் குழப்பமும் சேர்ந்து புரிதலில் குறைபாடுகளை உருவாக்கி வன்மம் மேலும் வன்மத்தையே வளர்த்துக் கொண்டிருக்கின்றது. 

நான் 2017 வருடம் முழுக்க ஃபேஸ்புக் என்ற முகநூல் தளத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். என்ன கற்றுக் கொண்டேன் என்றால் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றுகின்றது. அரை மணியில் ஐம்பது செய்திகள், விரைவுச் செய்திகள் போலக் கண் இமைக்கும் நேரத்தில் வாசித்த அனைத்தும் கடந்து மறந்து போய்விடுகின்றது.

ஆனாலும் முகநூல் தளத்தில் வரும் கருத்துக்களை வாசிப்பது சுகமாக உள்ளது. காரணம் புதுப்புது நபர்கள். புதுப்புது சிந்தனைகள். புதிய துறைகள். நாம் எண்ணிப் பார்க்க முடியாத விசயங்கள். இதுவரையிலும் அம்பலத்திற்கு வராத, அந்த நிமிடம் வரைக்கும் ஊடகத்தில் கூட வராத செய்திகள் போன்றவற்றை உடனே நாம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

சிந்தனையின் தாக்கத்தைக் கீறிக்கூடப் பார்க்கவில்லை. கட்சி சார்பு, மத வெறி, சாதி குறித்த உரையாடல்கள் அனைத்தும் அவரவர் சார்பாக இங்கே எடுத்து வைத்தாலும் எடுத்து வைத்த கருத்தில் துளி கூட உண்மை இல்லாமல் எதிர்க்கருத்து கொண்டவர்களின் சிந்தனையை அதில் உள்ள இருட்டை வெளிச்சமாக்குபவர்கள் வெகு சிலரே. அந்தச் சிலரை இந்த வருடம் இந்த வருடம் இந்தத் தளத்தில் அடையாளம் கண்டேன். 

1. ஒருவர் இராணுவத்தில் பணியாற்றி மதம், சாதி இல்லாத எதிர்கால வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றார். 

2. ஒருவர் பசியைப் போக்குவது முக்கியம். தொழில் நுட்பத்தை அதன் வளர்ச்சியைப் புறக்கணிக்காதீர் என்கிறார். 

3. ஒருவர் தான் இருக்கும் மதம் இது தான். இதையும் தாண்டி என்னால் யோசிக்க முடியும். உண்மைகளை உரக்கச் சொல்ல முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றார். 

4. ஒருவர் என் வலைபதிவுகள், மின் நூல்கள் வாசித்து, அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, தான் பணிபுரியும் சூழலில் தான் வைத்திருக்கும் அலைபேசி வாயிலாகவே எழுதக் கற்றுக் கொண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு எழுத்தாளராக மாறியுள்ளார். 

5. சில பத்திரிக்கைகள் வாங்கி வாசித்த பின்பு அதில் போட்டுள்ள விலைக்கு உண்டான மதிப்பு இல்லையே? என்று மனம் வருந்தும். ஆனால் இவரின் கட்டுரைகளுக்காக மட்டும் இன்று வரையிலும் வாங்கிக் கொண்டிருக்கின்றேன். இவர் எழுதிய எழுத்துக்கள் மட்டுமல்ல. இவர் பேசி பதிவு செய்த பேச்சு உரைகளை இந்த வருடம் முழுக்க இரவு நேரங்களில் எத்தனை முறைகள் கேட்டிருப்பேன் என்ற கணக்கே தெரியாத அளவிற்கு அத்தனை முறை கேட்டுள்ளேன். பல நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளேன். 

6. ஒருவர் எனக்கு உயர் அதிகாரியாக இருந்தார். நான் இப்போது இருக்கும் உயர் பதவியில் இவருக்கும் பங்குண்டு. இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். போட்டி , பொறாமை நிறைந்த வெளியே சொல்ல முடியாத அசிங்கங்கள் நிறைந்த நான் இருக்கும் தொழில் வாழ்க்கையில் என் எழுத்துப் பக்கம் எவரையும் கொண்டு வந்து சேர்க்க விரும்புவதில்லை. ஆனால் இவர் எனக்கு வாசகராக இருக்கின்றார். என் நல்வாழ்க்கை குறித்த அக்கறை கொண்டவராக இருக்கின்றார். வாழ் நாள் முழுக்க நேர்மை என்ற வார்த்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

7. என் வாழ்நாள் முழுக்க என் நலனைக் கருத்தில் கொண்டவர். வாசகராக அறிமுகமாகி என் ஏற்றத் தாழ்வுகளில் பங்கெடுத்து இன்னமும் என்னை செதுக்கிக் கொண்டவர். இருவரின் எண்ணமும் வேறு. கொள்கைகளும் வேறு. சொல்லப் போனால் கடந்த சில வருடங்களில் என் தனிப்பட்ட கொள்கைகள் கரைந்து அவர் கடைபிடிக்கும் கொள்கைகள், எண்ணங்கள் தான் என்னை இப்போது செதுக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல. 

8. இவர் நினைத்து இருந்தால் இவர் பணிபுரிந்த சூழலில், இவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் மூலம் ஊடகத்துறையில் உச்ச பதவியை அடைந்து இருக்க முடியும். ஆனால் கொள்கை அதிலும் முடிந்தவரைக்கும் நேர்மை. உணர்ந்ததை உலகிற்குச் சொல்லியே தீருவேன் என்ற பிடிவாதம் என்ற வாழ்க்கை ஏராளமான இன்னல்களை உருவாக்கிய போதும் இன்னமும் என்னை நான் இழக்க மாட்டேன் என்று இவர் வாழும் வாழ்க்கை என் வாழ்க்கையின் சுவடுகள் போலவே உள்ளது. 

9. எதிரிகளுக்குச் சமமாக ஆதரிப்பவர்கள் அதிகம் உள்ளவர்களில் இவர் தொடர்ந்து இயங்குவது என்னளவில் இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. இவரின் எழுத்துக்கள் எதிர்கால இளைஞர்களுக்கு வாழ்ந்து முடிந்த அரசியல்வாதிகளின் யோக்கியதை என்னவாக இருந்தது? என்பதனை நிச்சயம் உணர்த்தக்கூடியது. 

10. ஒருவர் மருத்துவராக இருக்கின்றார். ஆனால் இவர் எழுத்து இந்த வருடம் முழுக்க அதிக ஆச்சரியத்தை, உத்வேகத்தை, இதுவரையிலும் யோசிக்க முடியாத பல பரிணாமங்களைத் தந்து உதவியுள்ளார். 

முன் குறிப்பு கொடுத்துள்ள இவர்களைப் பற்றி எழுதுகின்றேன். 

தொடர்ந்து எழுதுவேன். 

#2017 கற்றதும் பெற்றதும்   (28/01/2017)

++++++++

நான் பார்த்த தமிழாசிரியர்கள் நல்ல கதை சொல்லியாக இருந்துள்ளார்கள். பாடத்தைப் படிக்கத் தேவையில்லாத அளவிற்கு ஈடுபாட்டுடன் பாடம் நடத்தி இருக்கின்றார்கள். ஆனால் கல்லூரி வரைக்கும் நான் பார்த்த ஒரு ஆசிரியர் கூட எழுத்தாளர்களாக மாறிப் பார்த்தது இல்லை. ஆனால் இன்று அனைத்துத் துறைகளில் இருந்தும் எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர். அது அவர்கள் சார்ந்த துறைகளை மட்டுமல்லாது அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் தொடங்கி ஏனைய பிற துறைகளிலும் தங்கள் திறமைகளைக் காட்டுகின்றார்கள். 

அதில் இந்த ஆண்டு முக்கியமானவராக இவர் என் பார்வையில், வாசிப்பில் எனக்கு முதன்மையானவராக இருக்கின்றார். 

மருத்துவராக உள்ளார். தினமும் பல பதிவுகளாக எழுதித் தள்ளிக் கொண்டேயிருப்பார். இரவில் வந்து இவர் பக்கம் சென்று நிதானமாக வாசிப்பதுண்டு. 
சிலரின் எழுத்துக்கள் நம் கண்களைத் திறக்கக்கூடியது. இவர் எழுதிய பலதும் நான் யோசித்துப் பார்க்காத பல விசயங்களைக் கொண்டதாக இருந்தது. 

ரு முறை இவர் எழுதிய ஒருவரின் ஈகோவை சீண்டிப் பார்க்காதவரைக்கும் நம் வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்கிற ரீதியில் எழுதிய எழுத்துக்கள், அது சார்ந்த சிந்தனைகள் பல நாட்கள் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. 

உழைத்துக் கொண்டேயிருந்தாலும் எல்லோருக்கும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. இதன் மூலக்கூறுகளைப் புதுவிதமாக அலசுகின்றார். சுவராசியமாக உள்ளது. எல்லோருக்கும் அதன் காரணங்கள் தெரிவதில்லை. ஆனால் இவர் அரசியல், திரைப்படம், சாதி, சமூகம் போன்ற பல துறைகளைப் பற்றி எழுதுகின்றார். ஒவ்வொன்றும் முத்துக்கள். 

ரே ஒரு குறை என்னவென்றால் துணுக்குச் செய்திகள் போலவே எழுதித் தள்ளி விடுகின்றார். அடுத்தவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற மெனக்கெடல் அதிகம் உள்ளது. எழுதுபவன் எல்லாச் சமயங்களிலும் மார்க்கெட்டிங் விசயத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியுமா? மருத்துவரே? 

வாசித்து யோசிக்கத் தெரிந்தவனுக்கு உங்கள் எழுத்துக்கள் போய்ச் சேரட்டும். நீங்கள் எழுத்துக்களைச் சாரம்சத்தைக் கூர்மைப்படுத்துங்கள். 

இந்த வருடத்தில் இவர் எழுத்து எனக்கு முக்கியமானது. என் வாசிப்பில் முதன்மையாக இருந்தது. 

நன்றி மருத்துவரே. வாழ்த்துகள். Dinesh Kumar 





9 comments:

Avargal Unmaigal said...

இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்......என் எதிர்பார்ப்பு வீணாகமல் பதிவு வந்துவிட்டது.பாராட்டுக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நன்கு அலசி எழுதியுள்ளீர்கள். அவ்வப்போது முகநூலில் பகிர்ந்தாலும் முக்கியமானவற்றை கூடுதல் விவரங்களைச் சேர்த்து வலைப்பூவில் தொடர்ந்து பதிந்துவருகிறேன்.

G.M Balasubramaniam said...

முகநூல் வாசிப்பாளர்கள் நம் நட்புக்கு ஆசைப் படுபவர்களாக இருக்கிறார்கள்நட்பு அல்லாதவர்கள்ன் முகநூல் பக்கங்களுக்குத் தேடி செல்வது அபூர்வம்

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பகிர்வு...
துளசி: முகநூலில் இருந்தாலும் ஆக்டிவாக இல்லை.... -
கீதா: முகநூலில் இல்லை..எனவே இங்கு நீங்கள் சொல்லியிருப்பதன் மூலம் அறிய முடிந்தது.

நீங்களும் அங்கு பகிர்வதை அல்லது அங்கிருந்து இது போன்று பகிர்வுகளை இங்குத் தொகுத்து அளியுங்களேன் சகோ..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி. இந்த மாதம் முழுக்க கூகுள் ப்ளஸ் மற்றும் முகநூலில் நான் எழுதிய பலவற்றை இங்கே வெளியிடுகின்றேன்.

ஜோதிஜி said...

நம் கருத்துக்களை மட்டும் தேடி அலைந்தால் நட்புகள் இயல்பாகவே அமையும்.

ஜோதிஜி said...

நீங்க சொல்வது சிறப்பான ஆலோசனையாக உள்ளது. நானும் அப்படியே செய்கின்றேன். நன்றி.