Tuesday, June 29, 2010

கருணா என்ற கூலி

அதிகாலை வேளையில் வந்து நின்றவனை பார்த்ததும் குழப்பமாய் இருந்தது. குரல் நினைவில் இருந்தாலும் முகம் மாறியிருந்தது.

"அண்ணே நாந்தான்னே கருணாகரன்" என்று உரிமையாய் என்னுடைய அழைப்பு இல்லாமல் வீட்டுக்குள் உள்ளே நுழைந்தான்.  எப்படி கண்டு பிடித்து உள்ளே வந்தானோ தெரியவில்லை? பரபரப்பாய் தான் கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்து அவனின் திருமணப் பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.

ஏற்கனவே எழுதி வைத்துருந்த பெயர். நான்கு புறமும் மஞ்சள் தடவி பவ்யமாய் திசை பார்த்து நின்று கொடுத்து வணங்கி நின்றான்.  திகைப்பாய் இருந்தது.  பத்து வருடத்திற்குள் மொத்தமும் மாறியிருந்தான்.  உற்பத்தித் துறையில் உயர் பொறுப்பில் இருந்த போது டவுசர் சட்டையோடு நிறுவனத்தின் வாசலில் வந்து நின்றவன்.  நிறுவன உள்நுழைவு வாயில் காவலாளியின் எச்சரிக்கையைம் மீறி திமிறலோடு உள்ளே வர முயற்சித்துக் கொண்டுந்தவனை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளே அழைத்தேன். பேசிய போது உள்ளே காஜா பட்டன் அடிப்பதற்காக வேலை கேட்டு வந்தவன் என்று புரிந்து கொள்ள முடிந்தது.  ஆய்த்த ஆடை ஏற்றுமதிக்கான வளர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களில் இது போன்ற சிறிய ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனி நபர்கள் வெளியே இருந்து அழைக்கப்படுவார்கள்.  மாத, தினசரி சம்பளம் அல்லது ஒவ்வொரு ஆடைகளுக்கும் உண்டான கூலி என்பதாக பேசிக் கொள்வர்.  இதற்கென்று வருபவர்கள் தங்கள் படை பரிவாரங்களுடன் வந்து காரியத்தை கண்ணும் கருத்துமாய் முடித்துக் கொடுப்பர்.  சில நிறுவனங்கள் முறைப்படி அந்த வார சனிக்கிழமையில் வேலை முடிந்தவரைக்கும் கூலியை கொடுத்து விடுவர்.  பலர் இவர்களையும் ஏறி மிதிக்க எத்தனை திறமைகள் காட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டுவர். 
ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படும் எந்திரங்கள் ஒவ்வொன்றும் நிறுவனத்தில் உள்ளே வைத்து இருப்பார்கள். சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாதவர்கள் இதற்காக வெளியே தனியாக வைத்து இருப்பவர்களை நாடிச் செல்வர்.  ஓப்பந்த அடிப்படையில் இது போன்ற பல வேலைகளுக்கு நிறுவனத்திற்குள் ஒருவர் உள்ளே நுழைந்து விட்டால் அடுத்தவர் நுழைய முடியாத அளவிற்கு அத்தனை புரிந்துணர்வுகளையும் மிகத் தெளிவாக உருவாக்கி இருப்பார்கள். இது போன்ற பணிகளுக்கு உள்ளே வருபவர்களை கண்கொத்தி பாம்பாக நிறுவனங்கள் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே மிகப் பெரிய பிரச்சனைகள் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி விடும்.  தொழில் வாழ்க்கை என்பது கத்தி போலத்தான். எப்படி எங்கு எவரை கையாள் கிறோம் என்பதை பொறுத்து தான் விளைவுகள் உருவாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும் போடக்கூடிய எந்த வகையான ஆடைகளாக இருந்தாலும் அந்த ஆடை முழுமையாக உருவாக பல இடங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். இடையில் திருடப்பட்டு விடும். தவறாக உருவாக்கம் அடைந்து விடக்கூடாது. இதற்கெல்லாம் மேல் வெள்ளை ஆடை என்றால் அழுக்கு எண்ணெய் பிசுக்கு இல்லாமல் கற்பு மாறாமல் உள்ளே வந்து சேர வேண்டும்.  இல்லாவிட்டால் கற்பு இழந்த பெண் விடும் கண்ணீர் போல் நிறுவன முதலாளி பெட்டி போடும் சமயத்தில் குமைந்து கொண்டு குமுற வேண்டியதாய் ஆகிவிடும். நீக்கவே முடியாத பிரச்சனைகள் உள்ள ஆடைகள் இறுதியில் குறைபிரசவ குழந்தை போல் கேட்பார் இன்றி மூலையில் போய் முடங்கி நட்டக்கணக்கை அதிகப்படுத்தி விடும். 

இது போன்ற ஆடைகளுக்குண்டான தரத்தை கவனிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் உழைக்க (QUALITY CONTROL) தனியாக ஒரு கூட்டம் உண்டு.  அவர்களின் பாடு இரண்டு பக்க மத்தளம் போலத்தான் இருக்கும். ஆடைகளின் சரியான எண்ணிக்கையும் இறுதியில் வந்து வேண்டும். அதே சமயத்தில் நிறுவனம் எதிர்பார்க்கும் அத்தனை அவசர கதிகளையும் சமாளிக்க வேண்டும்.  மொத்தத்தில் கடல் தாண்டி சென்றதும் அங்கிருந்து ஓலை வராமலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இதற்கென்று ஓராயிரம் மனிதர்கள் வெளியே தெரியாமல் ராத்திரி பகலாக உழைத்துக் கொண்டுருக்கிறார்கள். கூலி உலகத்தில் உள்ள முதலாளிகள் படும்பாடுகள் மொத்தத்திலும் கொடுமை யானது. தொழிலாளர்களை மேய்ப்பது முதல் பணத்துக்கு டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்கள் வரைக்கும் கடந்து வரவேண்டும். இவர்கள் இரவு பகல் பாராமல் முறைப்படி உழைத்தால் தான் மறுநாள் நிறுவனத்தில் மற்ற வேலைகள் நடந்து ஆடைகள் முழுமையடையும். தொடர் ஓட்டத்தில் ஓரே ஒரு இடத்தில் தவறி பின்தங்கியிருந்தாலும் மறுநாள் நிறுவனத்தில் குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் அத்தனை பேர்களுக்கும் வேலை இருக்காது. பணி நேரத்திற்கான சம்பளம் மீட்டர் வட்டி போல் ஓடிக்கொண்டுருக்கும்.

சமீப கால கட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பிய "மொத்தமும் ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் வந்த பிறகு (VERTICAL SETUP) இந்த கூலி உலகமும் கலகலக்கத் தொடங்கியது.  வளர்ந்த பெரிய நிறுவனங்கள் அறவு எந்திரம் முதல் அட்டைப் பெட்டி முதல் எல்லாத் துறைகளையும் தாங்களே உருவாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள்.

இறக்குமதியாளர்கள் இது போன்ற பெரிய நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஒரே காரணம் விலையை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்க முடியும்.  நூல் முதல் அட்டைப் பெட்டி வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள லாபங்கள் அறவே நீக்கப்படுகின்றது.  நிறுவனம் நடந்தால் போதும் என்று பெரிய நிறுவனங்கள் வேறு வழியே இல்லாமல் சகித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.

அறவு எந்திரம் (KNITTING MECHINES), சாயப்பட்டறைகள்( DYEING & BLEACHING), துணிகளை விரும்பிய அளவிற்கு வெட்டி மட்டும் கொடுப்பவர்கள்(CUTTING UNIT) , வெறுமனே தைத்து கொடுப்பவர்கள்  (SITCHING UNIT) என்று தொடங்கி கப்பலில் (FREIGHT & FORWARDERS) ஏற்றுவதற்கு உதவுபவர்கள் வரைக்கும் கண்ணீர் விடும் சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். தொழிலில் நிலவக் கூடிய ஆரோக்கியமற்ற போட்டியில் கடல் கடந்து இருப்பவர்களுக்கு இங்கு இருப்பர்களே பலவற்றையும் தாரை வார்த்துக் கொடுத்து விடுவதால் உட்கார்ந்த இடத்தில் அவர்களால் உல்லாச வாழ்க்கை வாழ முடிகிறது.  உழைப்பவர்களின் ஒவ்வொரு இரவுகளும் உளறல் மொழியில் முடிந்து விடுகிறது.

ஒவ்வொரு ஆடைக்கும் தேவைப்படும் அத்தனை உள் மற்றும் வெளி அலங்காரங்களையும் செய்து கொடுக்க கருணாகரன் போன்றவர்கள் தினந்தோறும் இங்கு உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆடைகளும் நூலில் இருந்து ஒரு நீண்ட பயணம் தொடங்கி ஒவ்வொரு படிகளும் கடந்து கடைசியில் அடைக்கப்பட்ட பெட்டியில் உள்ள ஆடைகளாக கடல் கடக்க தங்கள் பயணத்தை சாலை வழியாக தொடங்குகிறது. 

இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் என்பது பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு ஒரு கணிணி, ஒரு தொலைபேசி இணைப்போடு அலுவலகமாகவும் இருக்கலாம். அல்லது 50,000 சதுர அடி உள்ள வானளாவிய கட்டிடத்திற் குள்ளும் இருந்து கொண்டு ஒரு ராஜ்யமாகவும் நடத்தலாம்.  ஆனால் எந்த ஊர் ராஜாவாக இருந்தாலும் இந்தக் கூலிப்படை இல்லாமல் ஒன்றையும் நகர்த்த முடியாது.  தூத்துக்குடி கப்பல் துறைமுகமோ, சென்னை விமான நிலையமோ ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு கூலி உலகம் தான் உதவிக் கொண்டுருக்கிறது.

தொடக்கத்தில் வண்ண வண்ண ஆடைகள் உருவாவதற்கு உண்டான வசதிகளை விட வெள்ளை நிறத்திற்கு அதிக மரியாதையும் செய்வதற்கு மிக எளிதாகவும் இருந்தது. இன்றைய நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாத போது வெள்ளை நிறத்திற்கென்று ஒரு தனியான வழிமுறை தான் இருந்தது.  தொட்டி மூலம் வெள்ளையாக்குதல்.  இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஊரில் துவைத்துத் தருபவர்கள் வெள்ளாவி மூலமாக நமது ஆடைகளை மொட மொடவென்று கொண்டு வந்து தருவார்களே?  அதைப் போலத் தான் இங்கும் இருந்தது.  ஊருக்கு வெளியே துணிகளை வெள்ளை ஆடையாக மாற்றுவதற்கு தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் வைத்து இருந்தார்கள். இதில் பணி புரிவ தெற்கென்றே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கோவணத்தோடு அந்த தொட்டித் தண்ணீரில் முழங்கால் அளவிற்கு வந்து இறங்கும் துணிகளை காலால் மிதித்து தங்களுடைய கடமைகளை செய்து கொண்டுருப்பார்கள். மூடப்பட்ட மிகப்பெரிய சூளையில் வேக வைக்கப்பட்டு, தண்ணீரில் கலந்த குளோரின் பொடிகள் முதல் கடைசியில் சல்பியூரிக் ஆசிட் வரைக்கும் இந்த ஆடைகள் கலந்துயடித்து அவர்கள் காலால் மட்டும் மிதிபட்டு உதைபட்டு கடைசியில் உஜாலா வெள்ளை போல் கொடியில் காய்ந்து கொண்டுருக்கும்.

பணிபுரிந்து கொண்டுருக்கும் நபர்களின் கால்களில் உள்ள முடிகள் உதிர்ந்து போயிருக்கும். கால் விரல்களில் சரியான கவனிப்பு இல்லாவிட்டால் புண்ணாகிப் போயிருக்கும்.  அவர்களுக்கு இருக்கும் ஒரே அருமருந்து சைபால் தான்.  பூசிக் கொண்டு உடம்பில் மொழுகிக் கொண்டு தினந்தோறும் இரவு பகல் பாராமல் வெள்ளை மனத்தோடு இந்த வெள்ளை ஆடைகளுக்காக உழைத்துக் கொண்டுருந்தார்கள்.  ஆனால் இன்று அந்தக்கூட்டம் எவருமே இல்லை.  இந்த முறையும் வழக்கொழிந்து விட்டது.  அத்தனைக்கும் இன்று நவீன எந்திரங்களின் பிடிக்கு வந்து விட்டது.  கிடைத்த குறைவான கூலியில் தினந் தோறும் குடித்தது போக கொண்டு போய்ச் சேர்த்த உழைத்துக் களைத்தவர் களின் தலைமுறைகளும் மாறிவிட்டார்கள். சமூக விழிப்புணர்வும், தலை       முறைகளுக்கு கிடைத்த படித்த வாய்ப்புகள் என்று எல்லாவிதங்களிலும் முன்னேறி உள்ளார்கள். 

துணியை சாயமேற்றுதல் என்பதில் தொடங்கிய இந்த கூலிகளின் உலகம், தைப்பது, தரத்தை சோதித்து தரம் வாரியாக பிரித்துக் கொடுப்பது வரைக்கும் உள்ள இந்த கூலி உலகத்திற்கு கிடைக்கும் நிரந்தர வருமானம் என்பது மிகக் குறைவே. சாறு முழுவதும் பிழியப்பட்டு கொடுக்கும் சக்கையைக் கூட கொடுக்க மனம் இல்லாமல் கொண்டாடி வாழ்பவர்களையும் தாண்டி தினமும் பலரும் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றனர். காரணம் இயல்பான இந்தியர்களின் வாழ்க்கை முறையே காரணமாகும்.  அதிக ஆசையை விட இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் அதிக உழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்.  ஏதோவொரு சமயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு மேலேறி வந்து விடுவார்கள்.  அதைப் போலத்தான் கருணாவின் வாழ்க்கையும்.

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு செல்லும் வழியில் முக்கிய சாலையில் இருந்து கீழே பிரிந்து செல்லும் மண்சாலையில் மூச்சு வாங்க நடந்து சென்றால் கருணாவின் கிராமத்துக்கு செல்லமுடியும்.  படிக்க வேண்டிய பாடத்தில் ஆங்கிலம் என்பதை துரத்தும் பேய் போல் பார்த்து குடும்பத்தினரிடம் சொல்லாமலே குருட்டு நம்பிக்கையில் திருப்பூருக்கு ஓடி வந்தவன். வாங்கி வந்த நண்பர்களின் முகவரிக்கு கையில் காசு இல்லாமல் நடந்தே சென்று அந்த ஓண்டுக்குடித்தனத்தில் உள்ளே தன்னை அடைத்துக் கொண்டவன். வந்து இறங்கிய நேரத்தில் தொழில் குறித்து எதுவுமே தெரியாது.  டவுசர் போட்ட வயதின் காரணமே தையல் கடைக்கு கொண்டு போய் நிறுத்தினார்கள்.  இரண்டு மாதங்கள் கூட முழுமையாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் திருப்பூர் பற்றியும், உள்ளே உள்ள நிறுவனங்களின் சூட்சுமத்தையும் பற்றி வந்து போனவர்களுடன் பேசிப் பேசி எப்படியோ ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைந்து விட்டான்.

அந்த நிறுவனத்தில் இருந்த உள்நாட்டு தயாரிப்பு எந்திரத்தின் மூலம் தினக்கூலிக்கு காஜா பட்டன் அடித்து கொடுத்துக் கொண்டுருந்தவரிடம் போய்ச் சேர ஆறு மாதத்தில் பெற்ற பட்டறிவும் அவமானங்களும் தனியாக வேறொரு நிறுவனத்தை தேட வைத்தது.  இரண்டு வருடங்களில் மாறிய நிறுவனங்களும் பெற்ற அனுபவங்களும் தனியாக கையூண்டி கரணம் போட வைக்க நிறுவன காவலாளியை தள்ளி விட்டு உள்ளே நுழைய தைரியம் தந்தது.  

ஊர் பாசமும் அவனின் முரட்டு சுபாவமும் ஒன்று சேர்த்துப் பார்க்க நினைத்தது எதுவும் வீணாகிப் போய்விடவில்லை.  காரணம் உழைப்பவர்களிடம் இருக்கும் முன்கோபம் இயல்பான ஒன்று.  சுய கௌவரம் அளவிற்கு இடைவிடாத உழைப்பும் ஒன்று சேர அவனை விட்டால் ஆளே இல்லை என்கிற அளவிற்கு அவனின் ராஜபாட்டை தொடங்கியது.  தொடக்கத்தில் ஒரு பட்டன் காஜா அடிக்க 16 பைசா.  ஆனால் பத்து வருட இடைவெளியில் இன்று அதுவே 40 பைசா அளவிற்கு இந்த துறை வளர்ந்துள்ளது. காஜா பட்டன் எந்திரங்கள் வைத்திருக்காத நிறுவனங்கள் அத்தனை பேருமே இது போன்ற தனி நபர்கள் வைத்திருக்கும் இந்த உலகத்தைச் சார்ந்தே இருந்தாக வேண்டிய சூழ்நிலை. 

சூட்டிகை என்று சொல்வார்களே அதற்கு மொத்த உதாரணமே இந்த கருணாகரன் தான்.  நிறுவனத்தில் உள்ளே நடக்கும் வேளைக்கு கூட்டிக் கொண்டு வந்த ஆளை வைத்து விட்டு வேலை தொடங்கியதும் அருகில் உள்ள நிறுவனங்களில் நுழைந்து அடுத்த வாய்ப்புகளை தேடத் தொடங்குவான்.  கொண்டு வந்த நபர்களால் வேலை எதுவும் தடைபடாத காரணத்தினால் இவனை எவரும் தேடுவதும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் அவனது கையில் சிறிய பெரிய 60 நிரந்தர நிறுவனங்கள் உள்ளது. தன்னிடம் வேலை செய்வதற்காகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊரில் இருந்து அழைத்து வந்த மாமன்,மச்சான்,சகலை,பங்காளி,மைத்துனர் என்று தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக பள்ளிப்பருவத்தில் காதலித்த பெண் வரைக்கும் திருப்பூர் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

ஆனால் இதையெல்லாம் விட மற்றொரு மகத்தான் சாதனை ஒன்று உண்டு. இன்று கருணாகரனிடம் இன்றைய நவீன காஜாபட்டன் BROTHER. JUKI போன்ற எந்திரங்கள் பதினைந்து வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளது.  தொடக்கத்திலேயே நகர் வளர்ச்சியை உணர்ந்து நல்ல புரிந்துணர்வோடு நகரின் வெளியே வாங்கிப்போட்ட ஆயிரம் சதுர அடி நிலத்தில் போடப்பட்ட எளிய கூரையாக இருந்த கட்டிடம் இன்று மாடிப்பகுதியில் அலுவலகம் போல் செயல்படும் அளவிற்கு வளர்க்க முடிந்துள்ளது. ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல வியப்பாய் இருந்தது.

வருடாந்திர வரவு செலவு 10 கோடி என்று முதல் வருடம் கணக்கு காட்டி விட்டு அடுத்த வருடம் போட்ட ஆட்டத்தில் அதோகதியாகப் போன எந்த நாதாரித்தனமும் அவன் வாழ்க்கையில் இல்லை. வாழ்க்கை என்பதை கிராமத்து கலாச்சாரமாக பார்த்தவன். கருணாவின் வாழ்க்கையில் வெளியுலகம் எப்படி இயங்கிக் கொண்டுருக்கிறது எதுவும் தெரியாத வாழ்க்கை. யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்?  பதவியை வைத்துக் கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்? எது குறித்தும் அக்கறையில்லை. தன்னுடைய வாழ்க்கை என்பது நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன்.  உழைப்பின் மூலம் கிடைத்த ஒவ்வொரு பைசாவையும் கிராமத்தில் முதலீடு செய்து விவசாயம் பார்த்துக் கொண்டுருக்கும் அண்ணனுக்கு உதவியாய் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மாதச் சீட்டில் கவனம். உணர்ந்து வாழும் வாழ்க்கையை முழுமையாக உள்வாங்கி வாழ்ந்து கொண்டுருப்பவன். 
                                                                  (4 Tamil Media)
இந்தியா முழுக்க வாழ்ந்து கொண்டுருக்கும் கருணா போன்ற நபர்களால் தான் இன்றும் பணக்காரர்களால் ஆளப்படும் இந்திய ஏழை ஜனநாயகத்திற்கு உயிர் இருந்து கொண்டே இருக்கிறது.

29 comments:

தமிழ் உதயம் said...

சமீப கால கட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பிய "மொத்தமும் ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் வந்த பிறகு (VERTICAL SETUP) இந்த கூலி உலகமும் கலகலக்கத் தொடங்கியது.இறக்குமதியாளர்கள் இது போன்ற பெரிய நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஒரே காரணம் விலையை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்க முடியும்.////

இதன் விளைவு. தயவு தாட்சண்யமின்றி சிறு தொழில்கள் க்ரூரமாக அழிக்கப் படுகிறது. மனிதனை நேரிடையாக கொன்றால் தான் கொலையா. சுயநலனுக்காக இம்மாதிரியான சிறு தொழில்களை அழிக்க முனைபவனும் கொலை காரனே. காரணம் அழிவது தொழில் மட்டுமல்ல. அதன் பின்னே உள்ள ஆயிரமாயிரம் தொழிலாளர்கள்.

4Tamilmedia said...

நல்லதொரு தகவல் பகிர்வு!வாழ்த்துக்கள்!

Unknown said...

கருணா பெயர் படித்தவுடன் நான் வேறு மாதிரியான கட்டுரை என நினைத்தேன்..
ஆனால் கருணா எனப் பெயர்கொண்டவர்கள் எல்லாம் வாழ்வை தக்க வைத்துக்கொள்வதில் புத்திசாலிகள் ஆகத்தான் இருக்கிறார்கள்..

மற்றபடி நல்ல கட்டுரை.. நல்ல பார்வை.. தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக தொகுக்கப்பட வேண்டிய கட்டுரைகள்..

பனித்துளி சங்கர் said...

///////இது போன்ற ஆடைகளுக்குண்டான தரத்தை கவனிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் உழைக்க (QUALITY CONTROL) தனியாக ஒரு கூட்டம் உண்டு. அவர்களின் பாடு இரண்டு பக்க மத்தளம் போலத்தான் இருக்கும்.////////

உண்மைதான் நண்பரே சரியாக சொல்லி இருக்கிறிர்கள் எனக்கும் இதில் அனுபவம் இருக்கிறது .
சிறப்பான பதிவு பல தகவல்களை சொல்லி இருக்கிறிர்கள் . பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

அதானே பாத்தேன்....
என்ன ஒரு வில்லத்தனமான தலையங்கம் !

லெமூரியன்... said...

ஜோதி வலைப்பக்கத்தில கருணானு பேர் பாத்த எல்லாருமே அப்டிதான் நினைப்போம் :-) நானும் கூட திருப்பூர்கும் கருணாக்கும் என்ன தொடர்புன்னு யோசிச்சிட்டே படிக்க ஆரம்பிச்சேன் :-) :-)
நல்ல கட்டுரை......

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல கட்டுரை..
திருப்பூர் (மா)நகரை இதுபோன்ற கருணாகரன்கள் தான் இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளார்கள்.

பின்னோக்கி said...

புத்தகமாக வெளிவர வேண்டிய கட்டுரை இது. தொடருங்கள். அருமை

அது ஒரு கனாக் காலம் said...

டெர்ரர் தலைப்பு ... அருமையான பதிவு . நீங்கள் சொன்ன கருணாவுக்கும் மற்ற அங்குள்ள அல்லல் படுவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? அவருக்கு அதிர்ஷ்டமா ? .... அவருக்கு உள்ள திட மனசு தான் காரணம், இப்படி எத்தனை ஆத்மாக்களோ ???

தக்குடு said...

nalla iyalpaana nadai nanpareyy!!

geethappriyan said...

வைக்கும் தலைப்பில் கூட ஈழத்துக்கு சிந்திக்கும் உங்கள் கொள்கை மெச்சவைக்கிறது.

நல்ல தொடர்ச்சி.,பயனுள்ள தகவல்கள்.
பின்னோக்கி சொன்னார் போல புத்தகம் போட்டுவிடவேண்டியதுதான்.

ராஜ நடராஜன் said...

ஓ!இப்படி தலைப்பு வைப்பதைத்தான் "என்னா ஒரு வில்லத்தனம்" என்பதா?

உங்கள் இடுகைகளைப் படிக்கும் போது எவ்வளவு பேரின் உழைப்பு குளிர்சாதன அறைகளுக்குள்ளும்,தெருவோரங்களிலும் அலட்சியப்படுகிறது.

இவ்வளவு உழைப்பும்,முக்கியமாக துணிகளின் தரமிருந்தும் இந்தியா ஏன் சீனாவுடன் சந்தைப்படுத்தலில் போட்டி போட இயலவில்லையென்பதை அறிய விரும்புகிறேன்.

எங்கும் சீனா!எதிலும் சீனா என்பது எப்படி சாத்தியமாயிற்று?

சீனா வேகமாக ஓடும் குதிரை.சீக்கிரம் சோர்ந்து விடும்.இந்தியா நிதானமாக ஓடுவது.இலக்கை எட்டுமென்று கமல்நாத் வார்த்தையெல்லாம் பத்திரிகை அமர்வுக்கு மட்டுமே.இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது.

ஜோதிஜி said...

ரமேஷ் பெரிய நிறுவனங்களை வைத்து இருப்பவர்களும் வேறு வழியே இல்லாமல் தான் இவ்வாறு செயல்படுகின்றனர். ஒரு நாள் ஒரு துறை இயங்காவிட்டால் உண்டான நட்டம் பல லட்சம். முடிவில்லா சுழற்சி............


முதல் வருகைக்கு நன்றி தமிழ்மீடியா,தக்குடுபாண்டி,பனித்துளி சங்கர். நன்றி.


பின்னோக்கி, கார்த்திக் உங்கள் அக்கறைக்கு நன்றி.

திருப்பூர் பழனிச்சாமி திருநாவுக்கரசு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

ஹேமா கூலி உலகம்ன்னு முதலில் எழுதியிருந்தேன். நேற்று படித்த ஒரு செய்தி மிகுந்த பாதிப்பை உருவாக்கியதன் விளைவே இது. உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். எப்போது வந்து கொண்டுருந்த மற்றொருவர் மட்டும் காணாமல் போய் விட்டார்????

லெமூரியன் ஹேமா இடுகையில் பார்த்த போது யோசித்தேன். வந்தே விட்டீர்கள். நன்றி.

சுந்தர், ராஜ நடராஜன் விளக்கமாக நாளை?

ஒன்று சேர் said...

அன்பார்ந்த ஜோதிகணேசன்-
வழக்கமாக நுணுக்கமான நீண்ட பதிவு. பின்னூட்ட நண்பர்கள் சொல்லியது போல் இன்னும் 4 பதிவுகள் சேர்ந்தபின் புத்தகமாக வெளியிடலாம். பலருக்கு பலன் தரும். கடைநிலை பணியாளராக உள் நுழைந்து நுட்பங்களை கற்று, முன்னேறி தனியே தொழில் துவங்கி அல்லது இருக்கும் நிறுவனத்தின் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி வளர்ந்தவர்களும் உண்டு. என் தம்பி 25 வருடங்களுக்கு முன்னால் பனியனில் தவழத் துவங்கி இன்று வருடத்திற்கு 200 கோடி வர்த்தகம் நிகழும் நிறுவனத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறான். அதே நிறுவனத்தில் சில வருடங்களுக்கு முன் சாதாரண பையனாக நுழைந்து நம்பிக்கைக்கு பாத்திரமாகி அனைத்து வங்கி பரிமாற்ற பணிகளையும் பார்க்கும் நிலைக்கு உயர்ந்து, முழுமையான நம்பிக்கை பெற்றபின்னர் பணி புரிந்த 6 மாதங்களில் சில லட்சங்கள் சுருட்டி கண்டுபிடித்த தினத்தில் வெளியில் அனுப்பிய நிகழ்வையும் கண்டிருக்கிறேன். பனியன் அட்டைப்பெட்டிகளுக்கு முன்னர் சிவகாசியை நம்பியிருந்த நிலை மாறி இன்று பனியனுக்கு இணையாக அச்சுத் தொழிலும் திருப்பூரில் வளர்ந்திருக்கிறது. எனவே பஞ்சையும் நூலையும் சுற்றி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தொழில்கள். இடையே பங்கு மார்க்கெட் சரிவு- மன்மோகன-சிதம்பர-(மான்டேக்சிங்)அலுவாலிய உலகமயமாக்கலினால் சிறிய தொழில் முனைவோர் காணாமல் போகும் நிகழ்வுகளையும் மீறி உழைப்பிற்கு நிச்சயம் பலன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. - சித்திரகுப்தன்-

Abu Khadijah said...

அருமையான கட்டுரை ஜோதிஜி, இங்கு வாசகர்கள் கூறியது போல புத்தகமாக வெளியிடுங்கள், அனைவருக்கும் பயனளிக்கும்

nerkuppai thumbi said...

மிக பயனுள்ள தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி

ஒவ்வொரு படியிலும் சிக்கனம் செய்து, உழைப்போருக்கு , சிறு தொழில் செய்வோருக்கு குறைத்துக் கொடுத்து, உருவான பொருள் விற்கும் விலையைக் குறைத்து, மேல் நாட்டு இறக்குமதியாளன் லாபத்தை அதிகமாக்கி ஏற்றுமதி தொழில் மென்மேலும் உயர்கிறது என்றாலும், கருணா போன்ற ஆயிரக்க கணக்கானோர் சிற்றூர்களில் இருந்து
வந்து, நகர் வாழ்வியலையும், தொழில் முறையும் உள்வாங்கி தடம் பதிக்கிறார்கள் என மிக எளிய நடையில் அழகாக சொல்லும் பதிவு. அறிவியல்/ தொழில்முறை/தாராள மயமாக்கல் காரணமாக விவசாயத்தை சார்ந்து இருப்போரும், சிறு ஊர்களில் வசிப்போரும் நகரம் நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள்; மென்மேலும் வருவார்கள்; அதை சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கலின் கெட்ட பின் விளைவுகள் எனக் கருதாமல், எவ்வாறு வழிப்படுத்த வேண்டும் என முனைவதற்கு உங்கள் பதிவு ஒரு வழிகாட்டி.
ஒரு அன்பர் சைனாவைப்பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்; ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில் இந்திய- சீனா ஒப்பு நோக்கி எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
makaranthapezhai.blogspot.com

Thomas Ruban said...

சிறப்பான பல தகவல்களை அருமையாகவும், எளிமையாகவும் சொல்லி இருக்கிறிர்கள் வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி.

Thomas Ruban said...

//ஒரு பதிவில் தாங்களே, தொழில்/ ஏற்றுமதி விஷயங்களில் இந்திய- சீனா ஒப்பு நோக்கி எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
makaranthapezhai.blogspot.com//


இதே கருத்து தான் என்னுடையதும் நன்றி.

Anonymous said...

Dear All,

A man can come up in his life in Tirupur before 2005.Once open market starts all small and mid compact factories destroyed due to low margin orders.
From 2007 Pollution board start to strict the dyeings.Now 30% of dyeing is running.Nobody know how can 0 % discharge possible and what can do with waste after dyed.
Now yarn price hike factories not book orders due to price not match with customers.
One thing all Tirupur peoples know in a short period this business will destroy by state & central government

I am saying sadly i am born and living in tirupur in front of us this business grew and now destroying .Without anybody help we grew up in past now we are downing with out any help from state & central govt.
Through this i inform to state and central govt we are Tamilians from India not from Sri lanka Please save textile,knitted business In west tamil nadu

ஜோதிஜி said...

உங்கள் இடுகைகளைப் படிக்கும் போது எவ்வளவு பேரின் உழைப்பு குளிர்சாதன அறைகளுக்குள்ளும்,தெருவோரங்களிலும் அலட்சியப்படுகிறது.

ராஜ நடராஜன் இதே இந்த வார்த்தைகள் என்னை அதிகம் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. ஈழத்தைச் சேர்ந்த ரதி என்பவர் கனடா நாட்டில் வசித்துக் கொண்டுருப்பவர் சொல்லியுள்ளபடி கனடா நாட்டில் வாய்ப்புகள் அதிகம். உழைக்க தயாராய் இருப்பவர்கள் எளிதில் மேலேறி வந்து விடலாம் என்றார். ஆனால் இங்கு உழைப்பு முயற்சி இருந்தாலும் பல பன்னாடைகள் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொண்டுருக்கிறார்கள். வட்டம் மாவட்டம் சதுரம் என்று தொடங்கி கடைசியில் அவர்களின் பெயர் அல்லக்கை அமைச்சர்கள்........... இதுவே கடைசி வரைக்கும் போய் ஜனநாயக காப்பாள்ர்கள் வரைக்கும்.

சீனா வேகமாக ஓடும் குதிரை.சீக்கிரம் சோர்ந்து விடும்.இந்தியா நிதானமாக ஓடுவது.இலக்கை எட்டுமென்று கமல்நாத் வார்த்தையெல்லாம் பத்திரிகை அமர்வுக்கு மட்டுமே.இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது.

பல்லவி ஐயர் என்பவர் சீனா குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார். வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள். முழுமையாக சீனாவிற்குள்ளேயே போய்விட்டு வந்த முழுமையான திருப்தி கிடைக்கும். நீங்கள் ஆட்டத்தை தொடங்கி விட்டீர்கள். பின்னால் பல புதிய நண்பர்களும் அதையே பிடித்துக் கொண்டு விட்டார்கள். என்ன ஆகப் போகுதோ????????

ஜோதிஜி said...

அல்லல் படுவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? அவருக்கு அதிர்ஷ்டமா ? .... அவருக்கு உள்ள திட மனசு தான் காரணம், இப்படி எத்தனை ஆத்மாக்களோ ???

சுந்தர் சிறிய அளவில் இருந்து வளர்ந்தவர்கள் (ஏற்கனவே ஆறுமுகம் கதை தெரிந்தது தானே) அத்தனை பேர்களிடமும் நான் பார்த்து வியந்த ரசித்த ஒரே விசயம். தன்னால் என்ன முடியும் என்பதை தொடக்கத்திலேயே உணர்ந்த ஒரே காரணமே முக்கியம் என்பேன்.

மற்றொன்று கருணா கிராமத்தில் உள்ளவர்கள் வேண்டுமென்றால் படிக்காத ஜனமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் பூமி வீடு வரைக்கும் அடமானம் வைத்து முதலீடுக்கும் அடுத்த கட்ட நகர்வுக்கும் நகர்த்தி உள்ளார்கள். ஆறுமுகம் வாழ்க்கையிலும் அது தான் நடந்தது.

இதற்கெல்லாம் மேல் நான் முதலாளியாகத்தான் இருப்பேன் என்ற மனோதிடமே அவர்களை இன்று வரைக்கும் முதல் போடுபவர்களாக மாற்றி உள்ளது.

எவருடைய ஆதரவும் இல்லாமல் தொழிலில் மேட்டுக்கு வருவது சற்று கடினம். நண்பர்கள்,குடும்பத்தினர்,வங்கி,உழைப்பு,குடும்பம் இதற்கெல்லாம் மேல்

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...........

ஜோதிஜி said...

நன்றி சித்ரகுப்தன்.

வினவு தளத்தில் கூட இன்னும் ப.சிதம்பரம் குறித்து முழுமையாக எதுவும் வரவில்லை. கோடிட்ட இடங்கள் போல் கொடுத்துள்ளார்களே தவிர அவரைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் எழுதி இருந்தால் தளங்களை தெரியப்படுத்தவும். உள்ளும் புறமும். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

ஜோதிஜி said...

தங்கள் வருகைக்கு நன்றி தாமஸ் ரூபன். முயற்சிக்கலாம்............

ஜோதிஜி said...

நன்றி ஆதிரை

Unknown said...

ஜோதிஜி ,
" நாறும் உள்ளாடைகள் " பதிவிலேயே பதிலிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரமில்லை. மன்னிக்கவும்,...

திருப்பூர் இப்பொழுது சந்திக்கும் தொழில்ரீதியான பிரச்சன்னைகளுக்கு காரணம் ..திரு.மன்மோகன் சிங், திரு.சிதம்பரம், திரு.தயாந்தி மாறன் ..... மற்றும் பலர், இதில் உலக பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொண்டது.

தமிழ் நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திருப்பூர் பொருளதாரம் தருகின்றது...

மாத முதல் வாரத்தில் .. போஸ்ட் ஆப்பிஸ் மணியாடர் கியுவிலும்... ஸ்டேட் பங்கு வெளியுர் கணக்கு பணம் கட்டும் கியுவையும் பார்த்தால் இது புரியும்.

அரசு நினைத்தால் சுலபமாக ஆடை தொழிலை காப்பற்றலாம்....

ஆனால் அரசு நினைக்கவில்லை .. ஏன்...

திரு.சிதம்பரம் , திரு.தயாந்தி திரு.அழகிரி என 3 தமிழர்கள் ஆட்சியில் இருந்தும்...மட்டும்மல்ல.. மத்திய 39 மக்கள் தமிழர்கள் பிரதிந்திகள் இருந்தும்......

தமிழ்நாட்டை வாழ வைக்கும் திருப்பூரை யாரும் கண்டு கொள்ள் வில்லை...

நூல்/பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்து.. ஆடை தொழிலை பொத்தல் விழ வைக்கின்றனர்...


சாய ஆலைகழிவு பிரச்சனையை முடிக்க மனமில்லை ...
ஏன்....?

என் பார்வையில்...

திருப்பூரில் கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றது. கங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் தேர்தல் முடிவு குறித்து பேட்டியளிக்கையில் ஒரு சாதி கட்சி பெறுமளவு வாக்குகளை பிரித்ததனால் தான் தோல்வியடைய நேரிட்டது என்றார்.

தேர்தலுக்கு முன் 2008ல் கருமத்தாம்பட்டியில்லும், திருச்செந்துரிலும் மாநாடு நடத்தி, தங்கள் பலத்தை காட்டி வரும் ஆட்சியில் பங்குபெற நினைத்தனர் ஒருசிலர்.

அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தனர் பல ஆடை அதிபர்கள் காரணம் இன பாசம். அதிகம் ஊக்கம் / பொருளாதரம் தந்தவர்க்ளுக்கு இயக்க பதவிகள் வழங்கபட்டன.

தேர்தல்.. முடிவுகள்... பலரும் எதிர்பராவிதமாக அமைந்தது. பழைய அரசு தொடர்ந்தது...

புதிய எதிரி உருவாவதை தடுக்க...ஆட்சியில் .. வருவாயில் .. தங்கள் பங்கு குறைவதை தடுக்க சுலபமான வழி ... ஆடையில் .. நூலில்... கை வைத்தால் ... ஆடை பொருளாதாரம் வீழ்ந்தால் ... புதிய எதிரி வர வாய்ப்பு இல்லை...


1+1=2 என்ற கணக்கு இப்போழுது நடக்கின்றது...

தமிழக நலமா இல்லை சுய நலமா எனில் சுயநலம் ஜெயிக்கிறது...


நீங்கள் சொல்வது போல் இதுவும் கடந்து போகும்...

பார்போம் ஜோதிஜி.... இது எங்கு முடியும் என..

வினேத்..

Unknown said...

ஜோதிஜி ,
" நாறும் உள்ளாடைகள் " பதிவிலேயே பதிலிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரமில்லை. மன்னிக்கவும்,...

திருப்பூர் இப்பொழுது சந்திக்கும் தொழில்ரீதியான பிரச்சன்னைகளுக்கு காரணம் ..திரு.மன்மோகன் சிங், திரு.சிதம்பரம், திரு.தயாந்தி மாறன் ..... மற்றும் பலர், இதில் உலக பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொண்டது.

தமிழ் நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திருப்பூர் பொருளதாரம் தருகின்றது...

மாத முதல் வாரத்தில் .. போஸ்ட் ஆப்பிஸ் மணியாடர் கியுவிலும்... ஸ்டேட் பங்கு வெளியுர் கணக்கு பணம் கட்டும் கியுவையும் பார்த்தால் இது புரியும்.

அரசு நினைத்தால் சுலபமாக ஆடை தொழிலை காப்பற்றலாம்....

ஆனால் அரசு நினைக்கவில்லை .. ஏன்...

திரு.சிதம்பரம் , திரு.தயாந்தி திரு.அழகிரி என 3 தமிழர்கள் ஆட்சியில் இருந்தும்...மட்டும்மல்ல.. மத்திய 39 மக்கள் தமிழர்கள் பிரதிந்திகள் இருந்தும்......

தமிழ்நாட்டை வாழ வைக்கும் திருப்பூரை யாரும் கண்டு கொள்ள் வில்லை...

நூல்/பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்து.. ஆடை தொழிலை பொத்தல் விழ வைக்கின்றனர்...


சாய ஆலைகழிவு பிரச்சனையை முடிக்க மனமில்லை ...
ஏன்....?

என் பார்வையில்...

திருப்பூரில் கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றது. கங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் தேர்தல் முடிவு குறித்து பேட்டியளிக்கையில் ஒரு சாதி கட்சி பெறுமளவு வாக்குகளை பிரித்ததனால் தான் தோல்வியடைய நேரிட்டது என்றார்.

தேர்தலுக்கு முன் 2008ல் கருமத்தாம்பட்டியில்லும், திருச்செந்துரிலும் மாநாடு நடத்தி, தங்கள் பலத்தை காட்டி வரும் ஆட்சியில் பங்குபெற நினைத்தனர் ஒருசிலர்.

அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தனர் பல ஆடை அதிபர்கள் காரணம் இன பாசம். அதிகம் ஊக்கம் / பொருளாதரம் தந்தவர்க்ளுக்கு இயக்க பதவிகள் வழங்கபட்டன.

தேர்தல்.. முடிவுகள்... பலரும் எதிர்பராவிதமாக அமைந்தது. பழைய அரசு தொடர்ந்தது...

புதிய எதிரி உருவாவதை தடுக்க...ஆட்சியில் .. வருவாயில் .. தங்கள் பங்கு குறைவதை தடுக்க சுலபமான வழி ... ஆடையில் .. நூலில்... கை வைத்தால் ... ஆடை பொருளாதாரம் வீழ்ந்தால் ... புதிய எதிரி வர வாய்ப்பு இல்லை...


1+1=2 என்ற கணக்கு இப்போழுது நடக்கின்றது...

தமிழக நலமா இல்லை சுய நலமா எனில் சுயநலம் ஜெயிக்கிறது...


நீங்கள் சொல்வது போல் இதுவும் கடந்து போகும்...

பார்போம் ஜோதிஜி.... இது எங்கு முடியும் என..

வினேத்..

நிகழ்காலத்தில்... said...

திருப்பூர் தொழில் குறித்த மறுபக்கத்தை உங்கள் சுட்டியுடன் இடுகை இட்டிருக்கிறேன்.:))

http://arivhedeivam.blogspot.com/2010/07/1.html

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

ஜோதிஜியின் இடுகை - கருணா பற்றியது - என்னவாக இருக்கும் என சிந்தித்துக் கொண்டா தான் படித்தேன் - இயல்பான நிகழவினை அழகாகச் சொன்ன விதம் நன்று - முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு கருணாவே உதாரணம்.

நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா

ஜோதிஜி said...

நன்றி சீனா அவர்களே. உங்களை இந்த தலைப்புக்கு கொண்டு வந்து சேர்த்த சிவாவுக்கும்.