Wednesday, June 09, 2010

நானும் ஜெயித்துக் காட்டுகிறேன்

கல்லூரியில் படித்துக்கொண்டுருக்கும் போது "இந்தியா டுடே"  ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுருந்தார்கள்.  திருப்பூர் ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் ஜெயித்த கதைகளையையும், அவர்கள் மிக ஆடம்பரமாக கட்டியுள்ள வீட்டின் மேலே நின்று கொண்டு, உள்ளே உருவாக்கி வைத்திருந்த புல்தரையில் படுத்தபடி, கட்டியுள்ள நீச்சல் குளத்தில் என்று பல விதமாக தங்கள் "ஆளுமைத்திறமை" யை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போல் பேட்டியாக கொடுத்துருந்தார்கள்.  அப்போது கூட அதை வெறும் செய்திகளாகத் தான் படித்து விட்டு நகர முடிந்ததே தவிர எதிர்காலம் குறித்து எந்த நோக்கமும் மனதில் எழவில்லை.  திருப்பூர் என்பது குறித்து எந்த மயக்கமும் உருவாக வில்லை.  மேலே மேலே படிக்கவேண்டும் என்ற முக்கிய எண்ணமே காரணம்.  சந்தர்ப்பவசத்தால் உள்ளே நுழைந்து ஏற்றுமதி நிறுவனத்தில் கால் வைத்த போது ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது.

இந்த கொங்கு மண்ணில் தொடக்கத்திலிருந்தே உள்ளே  வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற தகுதியைத் தவிர வேறொன்றும் இல்லை. வறப்பட்டிக்காடு என்று சொல்வோமே ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அப்போது வளர்ந்து கொண்டுருந்த நகரம் கோயமுத்தூர்.  இங்கு வளர்ச்சியடைந்து கொண்டு இருந்த நூற்பாலைகளே பிரதானம். முதல் நூற்பாலையின் பரிணாம வளர்ச்சி 1888 முதல் தொடங்குகிறது. இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் விரும்புவதும், வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்வதும் இந்த நூற்பாலை சார்ந்த பணிகளே,விட்டகுறை தொட்டகுறையாக வளர்ந்த மற்ற தொழில்கள். தொடக்கத்தில் திருப்பூரில் படித்தவர்கள் மிகக்குறைவு.  ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலங்கள்  மற்றும் பயன்படாத இடங்கள் இருந்தது. கூடவே மனம் முழுக்க ஆசைகளும் இருந்தது.  ஏற்றுமதி என்றால் என்னவென்று தெரியாதவர்களின் வாழ்க்கையும் வசதிகளும் எதிர்காலத்தில் இந்த டாலர் சிட்டி தங்கள் வாழ்க்கையை புரட்டி இறக்குமதியாகும் கார்களில் பயணிக்க வைக்கப் போகிறதென்பதை  எவராவது உணர்ந்து இருப்பார்களா?

திருப்பூரின் புராண கதைகளை நோண்டப் போனால் பனியன் ஜட்டி வியாபாரத் தையும் தலையில் சுமந்து அலைந்து திரிந்தவர்களின் அலைச்சலையும் விரிவாக விவரிக்க வேண்டும். அதன் தொடக்கத்தில் இருந்தது தான் தொடங்க வேண்டும்.  இப்போது அந்த தல வரலாறு அத்தனை முக்கிமில்லை.  கட்டியிருக்கும் கோவணமே அவிழ்ந்து கொண்டுருக்கும் இப்போதைய சூழ்நிலையில் அந்த உழைப்பை நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. தட்டுத்தடுமாறி ஏற்றுமதி பக்கம் காலை வைத்தார்கள். அதற்கு இவர்கள் காரணமில்லை. வெளி மாநிலங்களில் இருந்து தேடி இங்கு உள்ளே வந்தவர்கள் உருவாக்கிய பாதையது.  ஆனால் உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை பம்பாயில் இருந்து வந்தவர்கள் ஸ்ட்ரா இல்லாமல் உறிஞ்சு கொழுத்து வாழ்ந்து கொண்டுருந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் அவர்கள் மூலமாக கிடைத்த ஓப்பந்தங்கள். நிறைந்த லாபத்துடன் கூலிக்கு மாரடித்துக்கொண்டுருந்தார்கள்.  தயார் செய்து கொடுத்து விட வேண்டும். வந்தவர்கள் அவர்கள் பெயரில் ஏற்றுமதி செய்து கொண்டு ருந்தார்கள்.  அவர்கள் மறைமுக ஏற்றுமதி நிறுவன வாய்ப்புகளை கொடுத்த போது கிடைத்த லாபமே இவர்களுக்கு மயக்கத்தை தந்தது. அதுவே மாற்று வழியை யோசிக்க வைத்தது. தேடல் தொடங்க நல்ல சூழ்நிலைகளை உருவாக்கியது. பட்லர் இங்கிலீஸ் பயம் தந்தாலும் உள்ளேயிருந்த வேட்கை கடல் தாண்ட வைத்தது.

தரம் குறித்தோ, நவீன உபகரணங்கள் ஏதுமின்றி முழுக்க முழுக்க உடல் உழைப்பு ஒன்றே பிரதானமாக இருந்தது. இன்று எந்த வெளி மாவட்டங்களில் உள்ள எந்த தனி மனிதர்களும், அரசாங்க அதிகாரிகளும் திருப்பூர் என்றாலே உள்ளே பணம் காய்த்து தொங்கும் மரங்கள் இருப்பதாகத் தான் நினைக்கிறார்கள்.  திருப்பூருக்குள் வண்டியில் தள்ளிக்கொண்டு வாழைப்பழம் விற்பர் கூட ஒவ்வொரு குடியிருப்புக்கு தகுந்தப்படி விலையை வைத்து போணி செய்து தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போகிறார். வசதியான வீடுகள் என்றால் அந்த இடத்தில் ஒரு விலை.  நடுவாந்திரமாக இருந்தால் அதற்கு தனி பேரம். பாவம் அமெரிக்கா டாலர் வியாபாரம் பற்றி தெரியாதவர் அவருக்குத் தெரிந்த வியாபார யுக்தியை செயல்படுத்துகிறார். பணம் படுத்தும் பாட்டில் அவர் தான் என்ன செய்ய முடியும்?

தொடக்கத்தில் திருப்பூருக்கு வட நாட்டில் இருந்து வருபவர்கள் வந்த வேலை முடிந்தவுடன் திரும்பி சென்று விடும் வழக்கத்திற்கு முக்கிய காரணம் இங்குள்ள சாலை வசதிகள், தண்ணீர் பஞ்சம். 15 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு இருந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு தண்ணீரை விற்று சம்பாரித்தே லட்சங்களை சர்வ சாதரணமாக பார்த்தவர்கள் பல பேர்கள்.  நிறுவனத்திற்கு தேவைப்படும் தண்ணீருக்கென்று ஓடிய வாகனங்கள் உருவாக்கிய பள்ள மேடுகள் இப்போது தான் மெதுவாக மறையத் தொடங்கியுள்ளது.   அதற்கு மேலாக வெளிநாட்டில் இருந்து வரும் இறக்குமதியாளர்கள் பம்பாய் டில்லிக்கு வந்து இறங்கும் போதே அவர்களை கவனமாக திரும்பி பார்சல் செய்து அனுப்பி கொண்டுருந்தவர்களின் ராஜபோக வாழ்க்கையை இங்கிருந்தவர்கள் உடைப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறித்தானே ஆகவேண்டும். திருப்பூரில் இருப்பவர்களுக்கு தங்களுடைய தொழில் வாழ்க்கை என்பது அப்போது மாய வலையாக இருந்தது. தமிழன் என்பவனுக்குத் தான் தனியாக குணம் உண்டே?

மாயவலையை உடைத்தார்கள், சற்று கற்றுக்கொண்டு மொத்தமாக கிழித்தும் எறிந்தார்கள்.உண்மைகளையும் புரிந்ததோடு கற்றுக் கொடுத்தவர்களே காதில் ஜிமிக்கி குத்தி அழகு பார்த்தார்கள்.  இடையில் இருந்தவர்களின் இடுப்பு முதல் அவர்கள் வேக வைத்துக் கொண்டுருந்த பருப்பு வரைக்கும் காணாமல் போனது.

இரண்டு நாடுகளுக்குள் நடக்கும் போர் என்பதில் மனிதாபிமானம் என்பது தேடிப்பார்த்தாலும் கிடைக்காது என்பது போலவே தொழிலில் கூட அதுவே தான் உண்மையாக இருக்கிறது.  ஒருவர் வசதியாக வளர்ந்த பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டு மானாலும் சொல்லலாம் எழுதலாம். வந்த பாதையைப் பார்த்தால் மொத்தமும் அதுதான் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும். வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் எடுத்து வைக்கும் எந்த வெட்டிப் பேச்சும், விதாண்டாவாதமும் எடுபடாது.

பணம் என்பது விரும்புவர்களை விட வெறியாக இருப்பவர்களிடம் தான் வந்து சேரும்,  அந்த வெறியுடன் உழைத்தவர்கள் இன்றைய நூறு கோடிகளுக்கு மேல் சொத்துள்ள பிரபல நிறுவனங்கள்.  இன்றைய திருப்பூர் ஏற்றுமதியின் முதல் நிறுவன வருட கணக்கை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உத்தேசமாக 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்கு பிடித்த எண்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அவர்கள் வருத்தப்படமாட்டார்கள்.  அப்படி என்றால் மொத்த திருப்பூர் ஏற்றுமதியின் அளவு???  அதை தனியாக பார்த்துக் கொள்வோம். இப்போதைய சூழ்நிலையில் இங்கு உழைப்பவர்களின் வயிறு எரிந்து கொண்டுருப்பதைப் போல உங்கள் வயித்தெரிச்சல் அடங்க சற்று அவசகாசம் எடுத்துக் கொள்ளுங்களேன். ? 

இன்றைய திருப்பூர் உத்தேசமாக ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவு என்று எடுத்துக்கொண்டாலும் தொடக்கத்தில் இருந்த சாலை வசதிகளுக்கும் இன்றைக்கும் உள்ள நிலைமைக்கும் ஒரே வித்யாசம் மேல் பூச்சு பூசப்பட்ட தார் சாலைகள்.  அதுவும் மழை வந்தால் மணிச் சத்தம் போல் சிரிக்கும்.  கவனமாக செல்லாவிட்டால் விலா எழும்பு நோகும். சிரித்து அல்ல.  அன்றைக்கு சாலை போடும் குத்தகைக்காரர்களுக்கு வருமானம் அளிக்காத இந்த ஊர் இன்று மாநகர தந்தை வரைக்கும் வளர்ந்து மகத்தான வாழ்க்கையை வசதிகளை வழங்கிக் கொண்டுருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்களின் அறிவு பல நாடுகளை இன்று உச்சத்தில் அமர்த்தி வைத்துள்ளது.  வளர்ந்த நாடுகள் என்று பெயரைப் பெற்று வாழ உதவியவர்களுக்கும் இன்று நல்ல வசதியாக வாழ்க்கையையும் அளித்து அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கையையும் சிறப்படைய வைத்துள்ளது. இங்கும் பல கிராமங்களில் இருந்தும் வந்தார்கள்.  உயிர் வாழ வாழ்ந்தார்கள்.  இறந்தார்கள்.  ஒருவர் பின் ஒருவாராக உள்ளே வருவதும் உழைக்க முடியாதவர்கள் பின்னோக்கி சென்று விடுவதுமாய் இந்த பனியன் நகரம் பால் வடியும் பாலகன் வரைக்கும் விட்டு வைக்கவில்லை. உழைக்க வந்தவர்களுக்கு எத்தனையோ காரணங்கள்.  ஆனால் உழைப்பை உறிஞ்சியவர்களுக்கு ஒரே காரணம்.  மிகச் சிறந்த ஏற்றுமதி நிறுவனம்.  கௌரவம்.  அந்தஸ்து.  பணம்.  பதவி. புகழ்.  கடைசியாக விட்ட குறை தொட்டகுறையாக அரசியல்.  இதுவும் கைகூடா விட்டால் இறுதி அவதாரமான கல்வித் தந்தை.

இந்தியாவில் உள்ள இபிகோ சட்டம் முதல் நுகர்வோம் சட்டங்கள் வரைக்கும் எத்தனையோ தடிமனான புத்தகங்கள்.   சட்ட மேதை அம்பேத்கார் முதல் அறிவுஜீவு ராம்ஜெத்மலானி வரைக்கும் போட்டி போட்டு புரட்டி எடுத்து நம் மக்களுக்கு இன்று வரையிலும் புரிய வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  எதற்காக? மக்களின் வாழ்க்கைக்காக, இந்திய ஜனநாயகத்திற்காக, இருக்கும் இறையாண்மைக்காக. எத்தனையோ சட்டதிட்டங்கள்.  குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவனை கண்டிக்கும் சட்டம் முதல் குடியிருப்போர் நலம் சார்ந்த வரைக்கும் இன்னமும் இந்தியாவில் உயிரோடு தான் இருக்கிறது. ஆனால்  அத்தனையும் ஏட்டுச்சுரைக்காய்.  இலவச கேஸ் சிலிண்டரில் வேக வைத்தாலும் வேகாது.  மலேசியாவில் மகாதீர் முகம்மது ஆட்சியில் இருக்கும் போதே எதிர்கால மலேசியா சந்திக்கக்கூடிய சவால்கள் என்று யோசித்து உருவாக்கிய இன்றைய புதிய பன்னாட்டு விமானம் முதல் அருகில் உள்ள சிங்கப்பூர் கட்டுமாணங்கள் வரைக்கும் எதுவும் இந்தியாவிற்குள் வந்து விடாது. மற்றவர்கள் பார்த்து நாம் திருந்துவதா?  நாம் தான் வல்லரசாச்சே?

ஒவ்வொரு தொழில் நகரமும் வளர்ச்சியடையும் போதே வந்து இறங்கிக் கொண்டுருக்கும் மக்களை குறி வைத்து சாக்கடை முதல் சுடுகாட்டு நிலம் வரைக்கும் வீடாக தொழிற்சாலைகளாக மாற்றியதைப் போலேவே இங்கும் புற்றீசல் வீட்டு மனைகள் துரித கதியில் உருவாக்கப்பட்டது.  எடுத்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.  கோட்டை விட்டவர்கள் குடிசையே போதுமென்று புறநகர் பகுதிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட புறநகர் பகுதிகளுக்கும் ஒரு ஜாதகம் உண்டு.  தஞ்சாவூர் பகுதி மக்கள் என்றால் அவர்களுக்குண்டான இடம் என்று தொடங்கி தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இங்கு வெவ்வேறு பகுதிகளாக உழைப்பவர்கள் களைத்துப் போய் வாழ பழகிக்கொண்டார்கள்.

வாழை மரம் போலவே ஆடைகள் சார்ந்த தொழிலும்.  பஞ்சு முதல் இறுதியில் ஆடைகளாக மாறுவது வரைக்கும் எதுவுமே வீணாகிப் போய் விடுவதில்லை.  ஒன்றில் இருந்து மற்றொன்று.  மிச்சமானதில் இருந்து வேறொன்று.  இதுவொரு தொடர்பயணம்.  தொட்ட இடமெல்லாம் காசு.  குப்பையாக விழுந்தாலும் அது பண மேடு. இது தான் உண்மை. பஞ்சு என்பது விளைவிக்கும் இடத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குவது முதல் அதுவே ஆடைகளில் பல வித ரூபங்களில் மாறும் வரைக்கும் உண்டான இறுதி நிலை வரைக்கும் இந்த தொழிலைச் சார்ந்து இந்தியாவில் நேரிடையாக மறைமுகமாக பத்து கோடி மக்கள் இருக்கிறார்கள். 

இவர்கள் அத்தனை பேர்களும் இந்த ஜவுளித்துறையில் தங்களை அடகு வைத்தவர்கள். தங்கள் வாழ்க்கைக்கு இந்த பஞ்சை நம்பித்தான் தங்கள் குஞ்சு கொழுவுகளை நம்பி வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள்.  இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சில் ஐம்பது சதவிகிதம் குஜராத்தில் தான் விளைவிக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு நீங்கள் செல்ல எந்த சீதோஷ்ண நிலையை விரும்புவீர்களோ அதைப் போலவே பருத்திக்கு பருவநிலை முக்கியம்.

இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த துறைகளுக்கு அந்த வாரியம், இந்த அமைப்பு, கவுன்சில், சங்கம், தெருப்புழுதி, மண்ணாங்கட்டி என்று எப்போதும் போல் அரசு சார்ந்த சாராத ஏராளமான நலச்சங்கங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேல் கட்டுக்கோப்பான் நிறுவன அமைப்புகள் வேறு.  ஏற்றுமதியை மேம்படுத்த, இறக்குமதியை கட்டுப்பட்டுத்த, தொழில் வளர்ச்சிக் கழகம், நிதி உதவி நிறுவனங்கள் என்று தொடங்கி தலைமகன் ரிசர்வ் வங்கி வரைக்கும் ஆயிரமாயிரம் அமைப்புகள் கன்யாகுமரி முதல் டெல்லி வரைக்கும். 

ஆனால் என்ன செய்தார்கள்? கொண்டுருக்கிறார்கள்? செய்யப்போகிறார்கள்? என்று கேட்டால் கேட்டவர்களின் செவி கிழிந்துவிடும்.  காரணம் அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து கொண்டு இந்திய ஏற்றுமதிக்கான வளர்ச்சிக்கான மேம்பாட்டுக்கு உதவும் தகவல்கள் திரட்டிக்கொண்டுருக்கிறோம் என்று இங்குள்ளவர்களை வெறியேற்றிக் கொண்டுருப்பவர்கள்.  காரணம் இப்போது தான் ஜவுளித்துறை அமைச்சர் ஜப்பான் சென்று புதிதாக "கற்று"க் கொண்டு திரும்பி வந்துள்ளார்.  விரைவில் செயல்படுத்த ஆத்தா மங்கம்மாவை வேண்டிக்கொள்வோம்.

15 வருடங்களாக பல் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக இருந்தவர்.  முயன்று இப்போது கேரளாவிற்கு காலர் சட்டைகள் தைத்துக் கொடுத்து வாழ்க்கையை நல்ல விதமாக வாழ்ந்து கொண்டுருந்த நண்பர் இப்போது உருவாக்கிய நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.  காரணம் தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின் வெட்டு.  கடன் சுமை தாங்க முடியாதவருக்கும் அந்த தகவல் வந்தது. போய் நின்றார்?

சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் கடன் உதவிக்காக கேட்டு நின்ற போது அவர்கள் சொன்ன வாசகங்கள் மொத்ததிலும் நகைச்சுவையானது.  "எங்கள் நிதி உதவி என்பது நிறுவன அனுபவம் இல்லாமல், எந்த தொழிலும் இதுவரையிலும் தொடங்காமல், இப்போது தொடங்க முற்படுபவர்களுக்கு மட்டுமே"  வந்தவர் சொன்ன வார்த்தைகள்.... " போகும் போது கத்திரியை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்!!!!!"  இவர்களின் சட்டதிட்டங்களின்படி தவித்துக் கொண்டுருப்பவர்களுக்கு தண்ணீர் இல்லை.  இது தான் இந்திய ஜனநாயகம் உருவாக்கியயுள்ள சட்ட திட்டங்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது?

பாமரன் முதல் படித்தவர்கள் வரைக்கும் தங்களை மட்டுமே நம்பி வாழவும், தங்கள் உழைப்பு மட்டுமே தங்கள் குடும்பத்தை காக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் நிச்சயமாக இந்தியர்கள் மட்டுமே.  அதிகார வர்க்கத்திடம் மோதும் சக்தி எந்த தொழில் அதிபர்களுக்கும் இருக்காது.  அவர்களும் என்ன செய்வார்கள்?  கேள்வி கேட்க முடியாது.  காரணம் அவர்கள் வாங்கியுள்ள, எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கும் வங்கிக் கடன்கள் பேசவும் விடாது. 

விவசாயம் சார்ந்துள்ள துறைக்கு இருக்கும் அமைச்சர் திருவாளர் சரத்பவார் எப்படி மட்டைப்பந்து வாரியத்தின் மேல் கண்ணும் கருத்துமாக இருந்து தன் மகளுக்கு பாடுபட்டுக் கொண்டுருக்கிறார்.  டெல்லி முதல் சென்னை வரைக்கும் அரசியல் வியாதிகள் செய்து கொண்டுருக்கும் அத்தனை விசயங்களும் பெரிய நிறுவனங்களுக்குத் தெளிவாகவே தெரியும். சம்மந்தப்பட்ட பல கருப்பு பக்கங்களும் தெரியும். ஆனால் வெளியில் சொல்ல முடியாது.   இன்றைய பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்கியது?

"உள்நாட்டில் வாழும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார டெல்லி லாபியை பிரதமர் முதலில் துடைத்தொழிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனத்திற்காக குறு சிறு நிறுவனங்களில் குரல்வளையை நெறித்துக்கொண்டுருக்கும் இவர்களை இப்படியே வளர விட்டுக் கொண்டுருந்தால் இந்தியாவின் எதிர்கால தொழில் வளர்ச்சியே கேள்விக்குறியாகி விடும்?"

இப்படி ஒரு கண்டன அறிக்கையை தமிழ்நாட்டில் இருந்து வெளி யிட்டுருப்பார்கள் என்று நினைத்தால் நீங்கள் இன்னமும் "கைப்புள்ள" தான். அநியாயத்திற்கு அப்பாவியாய் இருக்காதீங்க.  இதையெல்லாம் விட இங்குள்ளவர்களுக்கு முக்கிய ஜோலிகள் பல இருக்கிறது.

மொழி வளர்க்க வேண்டும். உள்ளே வந்துள்ள நடிகையின் கன்னிப் பேச்சை எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்த பாராட்டு விழாவுக்கான ஆய்த்த ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.  இதற்கிடையே எங்கு போய் ஆய்த்த ஆடைகளை பார்க்க முடியும்? ஆனால் இது போன்ற பல கடினமான தனது அழுத்தமான வார்த்தைகளை அறிக்கையாக விடுத்தவர் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி.. காரணம் என்ன?
பஞ்சில் இருந்து தொடங்கும் இந்த ஜவுளி வாழ்க்கை பயனாளிகளின் வாழ்க்கை இன்று கஞ்சித் தொட்டி அவலம் முதல் தற்கொலை என்ற நிரந்தர நிம்மதி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. பெருவாரியான மக்கள் இன்னமும் இதை நம்பி வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்?  எப்போதும் குற்றத்தை கண்டு பிடிக்கும் கண்களுக்கு எல்லாமே மஞ்சள் காமாலையாகத் தானே தெரியும் என்கிறீர்களா?

ஊரில் இருக்கும் இடத்தை விற்று விட்டு, பொண்டாட்டி புள்ளைகளை தவிக்க விட்டு பத்து வருசம் இதே திருப்பூரில் உழைத்து பல விசயங்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம்.  நம்மால் இனி ஜெயிக்க முடியும் என்று தன்னுடைய திறமையை உழைப்பை மட்டும் நம்பும் ஒரு அப்பாவி திருவாளர் நடுத்தர வர்க்கம் எப்படியோ கையூண்டி ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கி விடுகிறார். உழைக்க உழைக்க நெளிவு சுழிவுகளை ஓரளவுக்கு கற்றுக் கொண்டு ஓடவும் தொடங்கிறார். ஆனால் இவர் இந்த தொழிலை விட்டு ஓட வைக்க எத்தனை பேர்களை இந்த இந்திய ஜனநாயகம் உருவாக்கிக்கொண்டுருக்கிறது என்பதை அவர் அறிகிறாரோ இல்லையோ நீங்கள் அறிவீர்களா? ?

இந்தியாவில் வாழும் குடிமகன் எங்கும் வேண்டுமானலும் போகலாம் வாழலாம் என்பதை சமீப மராத்தியர்கள் அவர்கள் பாணியில் " செய்து " காட்டினார்களே அது போலத் தான் பல இந்திய அமைச்சக அதிகாரிகள் மறைமுகமாக செய்து கொண்டுருக்கிறார்கள்.  யாருக்காக?

உள்நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று குஜராத் விவசாயிகளுக்கு இந்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.  ஏற்றுமதி செய்யும் ஒரு டன் கச்சா பஞ்சுக்கு ரூபாய் 2500 போட கடந்த ஏப்ரல் ஒரு மாதத்தில் மட்டும் 2,000 கோடி ரூபாய் நஷ்டம்.  ஆகா இது நல்லது தானே?  உள்நாட்டு தொழிலுக்கு செய்யும் மகத்தான் சேவை என்கிறீர்களா? அதற்கு முன்பு ஒரு இந்த ஜனநாயகவாதிகளின் நாதாரித்தனத்தையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தது.  இந்தியாவில் பார்க்க வேண்டியவர்களை வெளிநாட்டில் இருந்து வந்த பல கணவானகள் வந்து பார்த்தார்கள். நூற்பாலைகளின் எதிர்ப்புகளையும் மீறி பஞ்சு ஏற்றுமதிக்கான கதவை அகல திறந்து வைத்தார்கள். இது போக பருத்தி ஏற்றுமதிக்கு தனிப்பட்ட ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்தினார்கள். சிகரம் வைத்தாற் போல ஆன்லைன் வர்த்தகமும் யுக பேரங்களும் சந்தி சிரித்தது.  பல லட்ச குடும்பங்களின் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்தது.  ஆன் லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு உருவாக உடனடியாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து வந்தது ஆறுதல் அல்ல.  எச்சரிக்கை மட்டுமே.  என்ன பலன்?  

இந்திய பருத்தியை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்த பன்னாட்டு நிறுவனங்களும், இடைத்தரகர்களும் உண்டு கொழுத்து உச்சத்தில் இருந்தார்கள்.  16 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த பஞ்சின் விலை படிப்படியாக உயர்ந்து 30 ஆயிரம் ரூபாய்க்கு வந்தது.  இன்றைய பஞ்சுத் தட்டுப்பாடு வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  ஒழுங்காக உற்பத்தி செய்து கொண்டுருந்த நூற்பாலைகள் மூட பல லட்சம் தொழிலாளர்கள் தெருவுக்கு வந்தனர்.  முதலாளிகள் வேறு என்ன செய்ய முடியும்.  தமிழ்நாட்டில் உள்ள மின்வெட்டு மீறி எப்படி தொழிலை நடத்த முடியும்?  எத்தனை நாளைக்குத் தான் நட்டத்துக்கு நிறுவனத்தை நடத்த முடியும்? அவர்களும் முடிந்த வரைக்கும் காசு பார்க்க கிடைத்த வரை லாபம் என்று பஞ்சாக நூலாக ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.

தொடக்கத்தில் பஞ்சு ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தவர்களுக்கு ஒரு காசு.  இப்போது நூலை ஏற்றுமதி செய்ய தூண்டுபவர்களும் மற்றொரு காசு.  வாழும் மக்களுக்கு சன் டிவி தரும் தங்கக் காசுக்காக காத்து இருக்க வேண்டியது தான்.  தங்கம் விலை போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நூல் விலையும் கிடுகிடுவென்று ஏறத் தொடங்கியது.  கீற்றுக்கொட்டகையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அப்பாவி கைத்தறி தொழிலாளர்கள் முதல் ஆய்த்த ஆடை தொழிலாளர்கள் வரைக்கும் வெட்ட வெளிக்கு ஆடையின்றி அம்மணமாக வரத் தொடங்கினார்கள்.

ஒரு பொருளுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் போது, அல்லது இறக்குமதி செய்ய அவஸ்யம் என்று கருதும் போது உள்நாட்டில் உள்ள அத்தனை மாநிலங்களின் குறிப்பிட்ட தொழில் சார்ந்த சாதக பாதகங்களையும் அலசி காயப் போட்டு முடிவு எடுப்பது யார்? கடந்த ஆறு மாதமாக திருப்பூரில் சாயப்பட்டறை முதல் மூடுவிழா நடத்திக்கொண்டுருக்க பெரிய சிறிய ஏற்றுமதி நிறுவனங்கள் வரைக்கும் "உங்களுக்கு என்னப்பா பிரச்சனை"? என்று தமிழ்நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்?  

தமிழ்நாட்டில் ஜால்ரா சத்தத்தில் எதுவுமே வெளிவருவதில்லை.  டெல்லியில் ஜவுளி, வர்த்தகம்,விவசாயம்,நிதித்துறை அமைச்சகங்களுக்கிடையே நடக்கும் போட்டா போட்டியில் தாலியை அடகு வைத்து "நானும் ஜெயித்துக் காட்டுகிறேன்" என்று சிறிய அளவில் நிறுவனம் தொடங்கிய அந்த அப்பாவி திருவாளர் நடுத்தரவர்க்கம் இருப்பது ஆற்காட்டார் தந்த கும்மிருட்டில்.......

ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் சென்னை முதல் டெல்லி வரைக்கும் மிகுந்த ஒற்றுமையாய் இருப்பது தினசரி பத்திரிக்கைகளை படிப்பவர் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, கைகுலுக்கி, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்களே அவர்களுக்கு இந்திய சுதந்திரம் பெற்றால் நாடு சிறப்பாக இருக்கும் என்று பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸின் "நெஞ்சுக்குள் வைத்திருந்த நெருப்பு" புரியவா போகின்றது....?

அவர்களுக்கு புரியவைக்க முயற்சித்தால்  வருங்காலம் பிழைத்துக்கொள்ளும். மோடியை நம்புவதா?  அல்லது இந்த மஸ்தான்கள் காட்டிக் கொண்டுருக்கும் குரளி வித்தையை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டுருப்பதா? எப்படியோ இவர்கள் ஆடி விட்டு ஓயட்டும்.  ஜட்டி போடாமல் இப்போதே பழகிக் கொள்ளுங்கள். அது பின்னால் உங்களுக்கு உதவுக்கூடும். 

27 comments:

வாகை பிரபு said...

Ore varthail sonnan Sirauppu..

கோவி.கண்ணன் said...

//இரண்டு நாடுகளுக்குள் நடக்கும் போர் என்பதில் மனிதாபிமானம் என்பது தேடிப்பார்த்தாலும் கிடைக்காது என்பது போலவே தொழிலில் கூட அதுவே தான் உண்மையாக இருக்கிறது. ஒருவர் வசதியாக வளர்ந்த பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டு மானாலும் சொல்லலாம் எழுதலாம். வந்த பாதையைப் பார்த்தால் மொத்தமும் அதுதான் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும். வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் எடுத்து வைக்கும் எந்த வெட்டிப் பேச்சும், விதாண்டாவாதமும் எடுபடாது.//

எல்லாவரிகளும் பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன. ஆடையில்லாமல் ஆடை நெய்யும் பெரியவர் படமே பலவற்றைச் சொல்லுகின்றன.

துளசி கோபால் said...

அருமை. 'நிலை'யை அப்படியே படம்புடிச்சுக் காட்டும் இடுகை.

Unknown said...

திருப்பூர் என்றால் எனக்கு குமரன் பெயர்தான் நினைவுக்கு வரும் ..
இப்போது துணி நகர் ஆகிபோச்சு...
சென்னையை விட நெருக்கடி கூடிப்போய் மெல்ல வாழ தகுதியற்றதாய் மாறிக் கொண்டிருக்கிறது .

geethappriyan said...

ஜோதிஜி,
அருமையா ஏழை உழைப்பாளி மக்கள் படும் துயரங்களை சொல்லிட்டீங்க,நல்ல இடுகை.

ஆனால் எனக்கு சுபாஷிடம் ஈடுபாடு கிடையாதுங்க.
அவர் நாஜி ஜெர்மனியில் 3 வருடம் போய் தனியாய் படை துவங்கி அப்போது கான்செட்ரேஷன் கேம்ப் யூதர்களுக்கு எதிராய் போரிட்ட அமெரிக்க,ப்ரிடிஷ் படையினரை ஒரு பக்கத்திலிருந்து கொன்று குவித்தார்.அந்த படையில் இருந்த இந்திய சிப்பாய் களை வைத்து தான் இந்திய ப்ரிட்டிஷாருக்கு பல முனை தாக்குதலுக்கு திட்டமிட்டார்.அப்படி ஓர் சுதந்திரம் கிடைத்தால் நம்மையும் நாஜிக்கள் லிஸ்டில் வைத்திருப்பர்.
=====
சைனா நான்கிங் சைனாவில் ,பிலிப்பைன்ஸில்,அப்பாவி மக்களை போரின் பேரால் கொன்று குவித்த ஹிரோஹிட்டோவுக்கும் நெருக்கமாய் இருந்தாராம்.அதனால் எனக்கு மிகவும் வருத்தமும் காந்தியின் மீது ஈடுபாடும் ஏற்பட்டது.

தமிழ் உதயம் said...

நீங்கள் நாறி கொண்டிருக்கும்-திருப்பூர் மற்றும் உள்ளாடை உலகம் குறித்து சொல்லி விட்டீர்கள். இத்தனை இடர்ப்பாடுகளையும் இன்றைய சூழ்நிலையில் ஓவ்வொரு தொழிலும் சந்தித்து கொண்டிருக்கிறது. கூடவே இருக்கும் இன்னொரு மிக பெரிய வடவர்களின் ஆதிக்கம். மின் தடைகளும், அரசாங்கத்தின் சில நிலைப்பாடுகளும் மாறலாம். ஆனால் வடவர்களை எதிர் கொள்வது- நிச்சயம் தமிழர்களுக்கு கஷ்டமாகவே இருக்கும். பிராந்திய வெறியில் சொல்ல வில்லை. சாமானிய தமிழர்கள் மீதுள்ள அக்கறையால்.

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப தெளிவா , விவரமா, புரியறா மாதிரி இருக்கு... ஆனால் உறைக்க வேண்டிய இடத்தில் உறைக்க வேண்டுமே ..அந்த பெரியவர் என்னை பார்த்து அவர் சொல்வதை, என்னால் பார்க்க முடியவில்லை, இவ்வளவு சக்தி வாய்ந்த படத்தை ........ பதிவை விட தெளிவா சொல்லுது. மிகுந்த கோபமும் ... ஆற்றாமையுமாய் இருக்கு

ஜோதிஜி said...

வாருங்கள் வகை. முதல் விமர்சனத்திற்கு நன்றி,

செந்தில் எனக்கும் படிக்கும் காலத்தில் கொடி காத்த குமரன் தவிர திருப்பூர் பற்றி வேறு எதுவும் தெரியாது. இனி வரும் காலத்தில் அந்த கொடிக்கே துணி கிடைக்குமா?

வணக்கம் டீச்சர். ஒவ்வொரு நிலையும் இதைச் சார்ந்து இருப்பதால் மன ஆறுதலுக்கு உங்கள் இடுகை உதவியாய் இருக்கிறது.

வணக்கம் கோவியாரே. ஆய்த்த ஆடை தொழிலாளர்கள் கூட எவன் செத்தால் எனக்கென்ன என்று அவர்களின் வருமானம் குறையுமே தவிர முழுமையாக நின்று போகவில்லை. ஆனால் கைத்தறி மக்கள் பாடு ? பணக்கட்டுகளை வைத்து பிணத்தில் எறிக்க சேர்த்துக்கொண்டுருப்பவர்களுக்கு புரிய வேண்டும்.

ரமேஷ்........வடவர்களின் ஆதிக்கம். டெல்லி லாபியை நீங்கள் குறிப்பாகச் சொன்னாலும் ஈழம் போலவே நம்மவர்கள் தனக்கு என்ன ஆதாயம் என்று இதில் பார்ப்பதால் அவர்களை முழுமையாக குறை சொல்ல முடியுமா?

கார்த்திகேயன் ........ நன்றி உங்களுக்கு. சுபாஷ் பற்றி நீங்கள் சொல்லியுள்ள விசயங்கள் எனக்கு புதிது. இன்னும் நிறைய நான் கற்றுக்கொள்ள வேண்டும்.........

சுந்தர்......... ஒரு படமே இத்தனை வருத்தங்களை உங்களுக்குத் தருகிறது என்றால் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை மொத்தத்தையும் பார்க்கும் சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு, யோசிப்பவகளுக்கு எதிர்காலம் எத்தனை அச்சத்தை தரக்கூடும்.

க.பாலாசி said...

//எடுத்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார். கோட்டை விட்டவர்கள் குடிசையே போதுமென்று புறநகர் பகுதிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள்.//

உண்மையான கூற்று...

என்ன சொல்றதுன்னு புரியலைங்க... கோவணத்துடன் துணிநெய்யும் அந்த தொழிலாளிய பார்த்தாவே தெரியுதுங்க நம்ம நாடுபோகிற போக்கு.... நீங்கசொல்றது சரிதான்... இனிமே உள்ளாடையில்லாமல் பழவேண்டும்....

ஜோதிஜி said...

நன்றி பாலாசி

உள்ளூர் துணி சந்தை நிலவரம் இவ்வாறு இருக்க இப்போது புதிதாக வேறொரு பூதம் இப்போது திருப்பூரை ஆட்டிப் படைத்துக்கொண்டுருக்கிறது. தைவான் சீனா கொரியாவில் இருந்து செயற்கை இழை துணிகள் மிக மிக குறைவான விலைக்கு இறக்குமதி ஆகிக் கொண்டுருப்பதால் எல்லோருமே அதாவது மிகச் சிறிய உற்பத்தியாளர்கள் அதற்கு மாறிக்கொண்டுருக்கிறார்கள். விற்கும் சேட் ஒரு கிலோ துணிக்கு வைத்துருககும் லாபம் பாதிக்கு பாதி.

துளசி கோபால் said...

அடிவிலைக்கு சீனர்கள் யாவாரம் செஞ்சு மார்கெட்டைப் பிடிக்கிறாங்க. அங்கே அரசு அவுங்களோட நஷ்டத்தை ஈடு கட்டிருதாம். முதல்லே உலகம் முழுக்க பிடிக்கணும் என்பதுதான் அவுங்க கொள்கை.

ஜோதிஜி said...

பின்னூட்டத்திற்கு பின்னால் பயணிக்கும் உங்களுக்கு நன்றி டீச்சர்.

நிகழ்காலத்தில் சிவா சொன்னது போல் ஒவ்வொன்றையும் வரிசையாக சொல்லும் போது மொத்தமாக சீனர்களைப் பற்றியும், சீன அரசாங்கம் கொடுக்கும் ஒத்துழைப்பு மற்றும் அவர்களின் அபாரமான எதிர்கால திட்டமிடுதலும் மிகுந்த ஆச்சரியமாக அயர்ச்சியாகவும் இருக்கிறது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் கடந்த காலங்களில் பல வித மூலப்பொருட்களுக்காக குறிப்பாக பஞ்சுக்கு சார்ந்து இருப்பது அமெரிக்கா அடுத்து இந்தியா. ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆப்பு முக்கியமாக இந்தியாவுக்கே.

Saminathan said...

இன்னும் விரிவாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...

ஜோதிஜி said...

நன்றி சுவாமிநாதன். நமக்கானது அல்ல. அடுத்து வருபவர்களுக்காவது ஏதாவது நல்ல நடக்க.

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

\\ஒருவர் வசதியாக வளர்ந்த பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டு மானாலும் சொல்லலாம் எழுதலாம். வந்த பாதையைப் பார்த்தால் மொத்தமும் அதுதான் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும்.\\

\\உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை பம்பாயில் இருந்து வந்தவர்கள் ஸ்ட்ரா இல்லாமல் உறிஞ்சு கொழுத்து வாழ்ந்து கொண்டுருந்தார்கள்.\\

இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தானே, முன்பு பாம்பாய் வாலா உறிந்தான், இப்போழுது மண்ணின் மைந்தர்கள்

\\"உள்நாட்டில் வாழும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார டெல்லி லாபியை பிரதமர் முதலில் துடைத்தொழிக்க வேண்டும்.\\

அதெல்லாம் நாம் கேட்க கூடாது நமக்கான வேலை என்பது தொ.கா யில் குத்தாட்டம் பார்த்துக்கொண்டும் காமடி பார்த்து சிரித்துக்கொண்டும்தான் இருக்கவேண்டும்

\\எங்கள் நிதி உதவி என்பது நிறுவன அனுபவம் இல்லாமல், எந்த தொழிலும் இதுவரையிலும் தொடங்காமல், இப்போது தொடங்க முற்படுபவர்களுக்கு மட்டுமே\\

நம் கவர்மன்ட் மாப்பிள்ளைகள் எப்படி வேலை செய்யாமல் இருப்பது என்பதில் Phd வாங்கியவர்கள்

இருந்தாலும் அந்த கோவணான்டி தறியோடுபவர் பார்க்கும் பார்வை என்னை கொல்கின்றது.

\\நெஞ்சுக்குள் வைத்திருந்த நெருப்பு \\

இதற்கு நான் தனியுரிமை கோரலாம் என நிணைக்கிறேன்

இராஜராஜன்

வனம் said...

வணக்கம் ஜோதிஜி

\\ஒருவர் வசதியாக வளர்ந்த பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டு மானாலும் சொல்லலாம் எழுதலாம். வந்த பாதையைப் பார்த்தால் மொத்தமும் அதுதான் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும்.\\

\\உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை பம்பாயில் இருந்து வந்தவர்கள் ஸ்ட்ரா இல்லாமல் உறிஞ்சு கொழுத்து வாழ்ந்து கொண்டுருந்தார்கள்.\\

இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தானே, முன்பு பாம்பாய் வாலா உறிந்தான், இப்போழுது மண்ணின் மைந்தர்கள்

\\"உள்நாட்டில் வாழும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார டெல்லி லாபியை பிரதமர் முதலில் துடைத்தொழிக்க வேண்டும்.\\

அதெல்லாம் நாம் கேட்க கூடாது நமக்கான வேலை என்பது தொ.கா யில் குத்தாட்டம் பார்த்துக்கொண்டும் காமடி பார்த்து சிரித்துக்கொண்டும்தான் இருக்கவேண்டும்

\\எங்கள் நிதி உதவி என்பது நிறுவன அனுபவம் இல்லாமல், எந்த தொழிலும் இதுவரையிலும் தொடங்காமல், இப்போது தொடங்க முற்படுபவர்களுக்கு மட்டுமே\\

நம் கவர்மன்ட் மாப்பிள்ளைகள் எப்படி வேலை செய்யாமல் இருப்பது என்பதில் Phd வாங்கியவர்கள்

இருந்தாலும் அந்த கோவணான்டி தறியோடுபவரின் பார்வை கொல்கின்றது

\\நெஞ்சுக்குள் வைத்திருந்த நெருப்பு \\
இதற்கு நான் தனியுரிமை கோரலாம் என நிணைக்கின்றேன்

இராஜராஜன்

ஹேமா said...

//பணம் என்பது விரும்புவர்களை விட வெறியாக இருப்பவர்களிடம் தான் வந்து சேரும்.//

நிறைவான பதிவு ஜோதிஜி.

ஜோதிஜி said...

அதெல்லாம் நாம் கேட்க கூடாது நமக்கான வேலை என்பது தொ.கா யில் குத்தாட்டம் பார்த்துக்கொண்டும் காமடி பார்த்து சிரித்துக்கொண்டும்தான் இருக்கவேண்டும்

நிதர்சனம் சிரிக்க வைக்கின்றது இராஜராஜன். காப்புரிமை என்பது உங்களுடையது தானே???


நன்றி ஹேமா. அந்த வெறி இன்னமும் வராத காரணத்தால் தான் என்னவோ எழுதமுடிகிறது.

தமிழ் உதயன் said...

மெல்ல இந்த தொழில் இனி சாகும்
வலியது வாழும்
தகுதியுள்ளது இனிதப்பி பிழைக்கும்

இது குறித்து ஒரு தனி பதிவிடலாம் என்று உள்ளேன்.. அதுவரை மேற்கண்ட கருத்தே என்பதில்....

ஒன்று சேர் said...

கைத்தறி ஆடையில் எத்தனை வரிசை நூல் வரும்- அதற்கு ஊடு பாவாக கலர் நூல் வரிசை மாற்றி மாற்றி வரும் என கணித்துவிட முடியும். ஆனால் பின்னலாடை எனப்படும் பனியனில் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என எண்ண முடியா விந்தை இழை அது. அந்த தொழிலில் புரண்டு வளர்வதால் சுடும் யதார்த்தத்தை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில் மறு காலனியாதிக்கம் உள் நுழைவதோடு இழைத்து மிக அற்புதமாக இடுகை நெய்திருக்கிறீர்கள். அந்த தொழிலில் 25 வருடங்களாக எனது உடன் பிறப்புக்களும் உழண்டு வருவதால் என்னால் எளிதாக இந்த இடுகையை உணர முடிந்தது. வாழ்த்துக்கள் / தோழமையுடன் சித்திரகுப்தன்

ரோஸ்விக் said...

ஜோதிஜி உங்கள் கட்டுரைகளில் பல என்னைக் கவர்ந்தவை. அதில் இதற்கும் நிச்சயம் பங்கு உண்டு. எவ்வளவு பொறுமையாக இவற்றை கருத்துடனும், போதிய விபரங்களுடனும் எழுதுகிறீர்கள்... வியக்கிறேன்.
ஒவ்வொரு கட்டுரைகளிலும் உங்கள் வர்களில் நான் மூழ்கித்தான் போகிறேன். அவற்றின் வெளியே வந்து பாராட்டவோ, வழமையான பின்னூட்டமிடவோ முடியாமலே சென்று விடுகிறேன்.

அற்புதமாக இந்த கட்டுரையை பின்னியிருக்கிறீர்கள். நமது அரசு... ஏழை, பணக்காரர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை வேண்டுமென்றே அதிகரித்துக் கொண்டு செல்வதுபோலே இருக்கிறது. என்று இந்த மாற்றம் வரும்? எப்படி இதைக் கொணரமுடியும் என்று அவ்வப்போது நினைத்துவிட்டு, வாழ்கையின் வழமைகளில் முடங்கித்தான் போகின்றேன்... பலரும்போல.

உங்கள் கட்டுரை அருமை... அருமை... அருமை... வாழ்த்துகள் ஜோதிஜி

ஜோதிஜி said...

விமர்சனத்தின் தாக்கத்தை உணர வைத்த தோழர் சித்ரகுப்தனுக்கு நன்றி.

ரோஸ்விக். புரிந்துணர்வுடன் நட்புடன் கூடிய உங்கள் அக்கறைக்கு நன்றி.

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

Anonymous said...

ம் அருமையான பதிவு.நானும் திருப்பூர்காரன்தானுங்கோ...இதை படித்தவுடன் நான் ஜந்தாவது படிக்கும் போது ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து கல்விக் கட்டணம் செலுத்தியது நினைவுக்கு வருகிறது.

ஜோதிஜி said...

வாங்க விஷ்ணு உங்கள் வருகைக்கு பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

CS. Mohan Kumar said...

நீண்ட பதிவானாலும் விளக்கமாக பல்வேறு விஷயங்களை அலசியுள்ளீர்கள்.

Unknown said...
This comment has been removed by the author.