அஸ்திவாரம்

Friday, April 08, 2011

அன்னா ஹசாரே -- ப்ளாக்மெயில் பேர்வழி

அன்னா ஹசாரே - 'இவர் ஒரு ப்ளாக்மெயில் பேர்வழி. '

இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களைப் பற்றி கடைசியாக பார்ககலாம். 

அதற்கு முன்னால் சில விசயங்கள்.

நம்மால் இன்றைய சூழ்நிலையில் எந்த அளவிற்கு நேர்மையாக வாழ முடியும்? அன்றாட வாழ்க்கையில் லஞ்சம் கொடுக்காமல் நம் தேவைகளை நிறைவேற்றிட முடியுமா? 

முடியாது என்று சொன்னால் நீங்க எதார்த்தவாதி. 

முடியும்..... ஆனால் என்று இழுத்துக் கொண்டு தொடர்ந்து வார்த்தையாக சொல்ல நினைத்தால் மாற்றத்திற்கான ஒரு ஏக்கம் உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது என்று அர்த்தம். 

இந்த முடியும் என்ற வார்த்தைக்கு இப்போது சற்று நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் இந்த அனனா ஹசாரே. 72 வயது நிரம்பிய இந்த தாத்தாவை விட அதிகமான வயது உள்ள அரசியல்வாதிகள் இந்தியாவில் நிறைய உண்டு. பதவியை விட முடியாதவர்கள், வார்த்தை ஜாலத்தில் வாழ்க்கை கடத்திக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கைக்குப் பிறகும் தேவைப்படும் இறவா புகழுக்காக ஆசைப்பட்டு மற்றவர்களை அவஸ்த்தை படுத்திக் கொண்டிருப்பவர்கள் என்ற இந்த பட்டியல் நீளும்.

தயை கூர்ந்து நம்முடைய அரசியல்வாதிகளை தலைவர்கள் என்று எவரும் அழைக்காதீர்கள். தலைவன் என்பவன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாய் திகழ்பவர்கள். இப்போதுள்ளவர்கள் அரசியல்வியாதிகள். இந்த வியாதிகளுக்கு ஏராளமான ஆசைகள் உண்டு. காரணம் வியாதிகளுக்கு மட்டுமே ஓய்வு உறக்கம் இருக்காது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அதுபாட்டுக்கு பரவிக் கொண்டேயிருக்கும். கொள்ளுப் பேரனுக்கு தொடங்கி அதன் நீட்சியாக எள்ளுப் பேரன் வரைக்கும் தேவைப்படும் பணத்துக்காக அலையும் பிசாசுகள். கடைசியில் இறக்கும் தருவாயில் வாயில் போடும் எள்ளுகூட என்ன சுவை என்று தெரியாது முடிந்து போகும் கதைக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். தேவைப்படும் பணத்தை சம்பாரித்து வைத்தாலும் இவர்களின் ஆசைகள் அடங்குவதில்லை. இது ஒரு விதமான மனோவியாதி. 

நம்முடைய ஜனநாயக அமைப்பில் பரம்பரை பரம்பரையாக இயல்பாகவே பணக்காரர்களாக இருந்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.  பத்து காசுக்கு லாட்டரி அடித்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்தவர்களும் இன்று அரசியல் தலைகளாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இந்த இருவரும் ஒரே முனையில் சேர்ந்து விடுகிறார்கள். அது தான் தன்னம்பிக்கை முனை. இந்த முனைக்கு மற்றொரு பெயரும் உண்டு. பணப்பேய் என்று பெயரிட்டும் அழைக்கலாம். 

அடுத்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து எழவு விழுந்தால் கூட கவலையில்லை. ஒரு மாவட்டமே பஞ்சத்தில் மடிந்து மொத்த மக்களும் இறந்தால் கூட அது குறித்து அக்கறைபட வேண்டியதில்லை. நம் நாட்டு பணம் வெளிநாட்டில் கேட்பாராற்று கிடக்கும் லட்சம், கோடி பணத்தை கொண்டு வர இந்த கேடிகளுக்கு தோன்றாது.  ஒவ்வொரு வருடமும் அரசாங்க கஜானாவிற்கு வராத வராக்கடன்கள் குறித்து மூச்சு விட வேண்டியதில்லை. ஒவ்வொரு தாலி அறும் சப்தத்தில் இவர்களின் தலைமுறைகளின் வளர்ச்சி என்பது மேலேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளின் தேவைகளை விட அன்னா ஹாசரேவின் தனிப்பட்ட ஆசைகள் மிக மிகக் குறைவு. இவருடைய சிந்தனைகள் செயல்பாடுகள் அத்தனையும் இந்தியா என்ற பெரிய நாட்டின் நலன் குறித்தே இருப்பதால் இவரைச் சுற்றிய கூட்டமும் குறைவு. இவருக்கு வங்கி கணக்கு இல்லை. தங்க உருப்படியான வீடு கூட இல்லை.  தன்னுடைய உணவுத் தேவைக்கு கூட தன்னுடைய ஜோல்னா பையில் யாராவது போடும் காசு தான் உதவுகின்றது. முக்கியமாக குடும்பம் என்பது இல்லவே இல்லை. 

இவர் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது ஏன் பெரிசு உனக்கு தேவையில்லாத வேலை? என்று எவராவது நாலு சாத்து சாத்தினால் இறந்து போகக்கூட தயாராய் இருப்பதால் எவரும் இவர் அருகிலும் வந்து தொலைப்பதில்லை. ஒரு வேளை அடித்து தொலைத்தால் நம்முடைய மொத்த வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றித் தொலைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் அரசியல் தலைகள் அதிகம்.  

இது தான் அன்னா ஹாசரேவின் முக்கிய பலம்.  இந்த பலம் தான் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியா முழுக்க இவர் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. 

இவரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த சிவசேனா பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இரண்டு அமைச்சர்களையே நீக்க வேண்டியதாகி விட்டது.  2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டியதாகி விட்டது. இவரின் அஹிம்சை போராட்டங்களைப் பார்த்து வெறுத்துப் போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்ய உச்சகட்டமாக இன்றைய விவசாய அமைச்சரான சரத்பவார் பால்தாக்ரே கூட்டணி தான் இவரை ப்ளாக்மெயில் பேர்வழி என்று கூறினார்கள். 

பால் தாக்கரே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இறுதிப்பால் ஊற்றியவர். இவரைப் பற்றி இங்கே அறிமுகமே தேவையில்லை. ஆனால் சரத்பவார் பற்றி அவஸ்யம் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். 

இந்தியா என்ற நாடு பெற்ற பல பாவங்களில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருக்கும் சரத்பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட செத்துப் போன (விதர்பா) விவசாய குடும்பங்களின் ஆத்மா சரத்பவாரின் குடும்ப வாரிசுகளை இன்னும் எத்தனை தலைமுறைக்கு கொண்டு செல்லுமோ?  


இந்தியாவில் விளைந்த பஞ்சு பொதிகளை அப்படியே பொத்துனாப்ல லவட்டி கடல் கடக்க வைத்ததில் முக்கிய பங்கி வகித்தவர். ஏற்றுமதிக்கான காலக்கெடுவை வ்வொரு முறையும் நீடிக்க வைத்து லட்சக்கணக்கான குடும்பங்களை இன்று நடுத்தெருவில் நிறுத்திய பெருமை அன்னாரையேச் சேரும். காரணம் நாம் ஏற்றுமதி செய்தால் தான் அந்நியச் செலவாணி இந்தியாவிற்ககு கிடைக்கும். அதன் மூலம் தான் இந்த வியாதிகள் நிறைய களவாணித்தனம் செய்ய முடியும்.  

அன்னா ஹசாரே வலியுறுத்தும் உழலற்ற லஞ்சமற்ற அரசாங்கம் என்பதை நாம் ஒரு கனவாக எடுத்துக் கொண்டு விடலாம்.  ஆனால் இதற்கு முன்னால் சில கேள்விகள் நம் முன்னால் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த லஞ்சம், ஊழல் என்ற வார்த்தைகள் எங்கிருந்து தோன்றுகிறது?

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படி இந்தியாவை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அதைப்போல தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் தான் நமக்கு அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இது தான் மூலகாரணம். நம்முடைய இந்தியாவில் பல ஆச்சரியங்கள் உண்டு.  இவற்றில் முக்கியமானது, எவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே தெரியாமல் அவருக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி. 

காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்த கூட்டணியின் காரணமாக இதன் தலைவரான சரத்பவாருக்கு விவசாயத்துறை அமைச்சர் பதவி.. விவசாயத்தை அதிக அளவு நம்பி வாழும் இந்தியாவிற்கு மன்மோகன் சிங் கொடுத்த அன்புப் பரிசு தான் விவசாய அமைச்சரான சரத்பவார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆத்மாக்களோ, இவரால் வெளிச்சந்தை ஏற்றுமதி மூலம் கொண்டு செல்லப்பட்ட பருத்தி மற்றும் ஏனைய பொருட்களோ நமக்கு முக்கியமில்லாமல் போகலாம்.  ஆனால் இவரைப் போன்றவர்களின் கோபம் தான் இந்த தாத்தாவிற்கு மறைமுக ஆதரவை பல்முனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.  

ஏன் இவர்கள் இருவருக்கும் இந்த அன்னா ஹசாரே மேல் இத்தனை கோபம்?  காரணம் இவர்கள் மட்டுமல்ல. அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னாலும் ஹாசரே கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் அடிவயிற்றில் அமிலம் போல சுரக்க வைக்கின்றது.
  

அப்படி என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார்?

இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மக்களாட்சி என்றால் அதற்கு மறைமுகமான அர்த்தம் ஒன்று உண்டு. ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அவர்கள் நினைப்பதை எளிதாக சாதித்துக் கொள்ள வேண்டும். எவரும் கேள்வி எதுவும் கேட்கவும் கூடாது.  கொள்ளுப் பேரன் வரைக்கும் இருக்கும் அத்தனை உருப்படிகளையும் ஒன்று சேர்த்து நிற்க வைத்து சேர்த்த பணத்தை தலையில் கொட்டி தீயை வைத்து கொளுத்தினால் கூட இன்னும் பணம் சேர்க்கும் ஆசை இவர்களை விட்டு போய்விடாது.  மக்களும் கொடுக்கும் இலவச எலும்புத்துண்டுகளை சுவைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

தற்போதை அரசியல் என்பது ஒரு பெரும் தொழிலுக்கான முதலீடு. சம்பாரித்தே ஆகவேண்டும். அது தான் இப்போது இந்திய அரசியல்வாதிகளால் செயலில் காட்டிக் கொண்டிருக்கும் விசயமாகும். எண்ண முடியாத அளவில் எல்லாத் துறையிலும் லஞ்சம். எல்லாவற்றிலும் ஊழல். 

ஊழல் துறைக்கு தலைமைப் பொறுப்புக்கு வருபவரே கேவலமான நபராக இருந்தால் மொத்த துறையும் எப்படியிருக்கும்?  அவரையும் நான் பரிந்துரை செய்தேன்.  அதன் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஒரு பிரதமரே சொன்னால் மொத்த நிர்வாக லட்சணம் எப்படியிருக்கும்?

நம் இந்தியாவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் இந்திய தண்டணைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்பது 1860 மற்றும் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிகாரவர்க்கத்தில் உள்ள ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் இன்றைய சிபிஜ (மத்திய புலனாய்வு துறை) போன்றவர்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றது.  இவர்கள் மூலம் நாம் கேள்வி கேட்க முடியும். இவர்கள் பதில் தருவதற்குள் அல்லது தீர்ப்பு வருவதற்கள் நமக்கு ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். இல்லை இவர்கள் திருப்பி தரும் ஆப்பை வாங்கிக் கொள்ள நாம் தகுதியான நபராக இருக்க வேண்டும். 

இந்தியா பார்க்காத ஊழலும் இல்லை.  இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பெயர்கள் கூட பலருக்கும் மறந்து போயிருக்கும்.  


காரணம் பன்றிகள் வாழும் சாக்கடையில் இருக்கும் ஜீவன்களுக்கு சராசரி மனிதர்களை விட மணம் திடம் குணம் நிரம்ப இருப்பதால் எதுவும் தாக்குவதில்லை.  தாக்க தயாராய் இருப்பவர்களும் நீடீத்து இருப்பதும் இல்லை. ஏன் சாதிக் பாட்சா இறந்தார் என்றால் அதன் முனை திஹார் சிறைச்சாலை வரை போய் நிற்கும். எவராவது இத்தனை தூரம் தொடர்ந்து போய் கேள்வி கேட்க தெம்பு இருக்குமா?  

இது போன்ற ஊழல்களை தடுக்கத்தான் அன்னா ஹாசரே உருவாக்க நினைக்கும் லோக்பால் என்ற விதை உருவாகின்றது. நம்முடைய அரசியல்வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மேல் கொண்டுவரப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனியாக ஒரு ஆணையம் தேவை.  அது எவரும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பாக இருக்க வேண்டும். 

பிரதமர், முதல் நீதிபதிகள் என்று எல்லோருமே இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள்.  அடிப்படை குடிமகன்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்க கடமைப்பட்டது.  இதையெல்லாம் மீறி வழக்கு என்று வரும்பட்சத்தில் ஒரு வருடத்திற்கும் முடிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் இருந்து மொத்த இழப்பீடுகளை பெற்று அரசாங்கத்திடம் சேர்க்க வேண்டும்.


எந்த அரசியல்வியாதிகளும் தங்களுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா? 1968 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் என்பது தேவையில்லை என்பதாக தள்ளிப் போய் இன்று 2011 ல் வந்து நிற்கின்றது.  

இந்தியாவில் இப்போது தான் அன்னா ஹாசரே என்ற பெயர் இப்போது தான் மெதுவாக மேலேறி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவரைப் பற்றி முழுமையாக தமிழ்நாட்டில் தெரியாமல் இருப்பது தமிழர்கள் செய்துள்ள மகா புண்ணியம்.  

காரணம் இது தேர்தல் சமயம். 

வாக்காளப் பெருமக்களுக்கு வேறு சில முக்கிய வேலைகள் இருக்கிறது.  எவர் பணம் தர வருவார்?  எப்போது வருவார்?  அல்லது தர வருபவர்களை தடுக்க நினைப்பவர்களை எப்படி தாக்கலாம்? போன்ற பல்வேறு எண்ணங்களில் குழப்பிப் போய் இருப்பவர்களிடம் போய் அன்னா ஹசாரே என்றால் அடிக்க வந்து விட மாட்டார்களா?  சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோனி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் இளையர்களுக்குத் தேவையில்லாத பெயர் அன்னா ஹாசரே. 

இன்றைய வாழ்க்கையின் சந்தோஷங்களை திகட்ட திகட்ட அனுபவிக்க விரும்புவர்களுக்கு எப்போதும் நாளைய குறித்த கவலை ஏதும் இருப்பதில்லை. சமூக அக்கறை என்றாலே சாக்கடையை தாண்டி வருவது போல கடந்து விந்து விடுவதால் இந்நாள் இனிய நாளே. எல்லோருக்கும் என்ன நடக்குமோ அதுவே நமக்கும் வந்து சேரும். நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இளைய சமுதாயமும் ஒதுங்கிக் கொண்டேயிருக்க இவரைப் போன்ற 72 வயது இளைஞர் தான் இந்தியாவிற்கு தேவைப்படும் மாற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்.


நம்முடைய தேவைகளும், ஆசைகளும் மிக குறைவாக இருந்தால் நம்மாலும் இந்த அன்னா ஹசாரே போலவே மாற்றத்தை உருவாக்க முடியும்.

52 comments:

  1. .....மாறுதல்கள், விரைவில் வந்தே தீரும்.

    ReplyDelete
  2. Wow. I liked your article. What strikes most is the clarity of thought.

    ReplyDelete
  3. அன்னா ஹஜாரே கடவுள் நமக்கு கொடுத்த வரம். ஊழலுக்கேதிரான ஒரே ஆயுதம். துனிசியா, எகிப்து போன்ற புரட்சியின் இந்திய வெர்ஷன்! இதை சரியாக பயன்படுத்துவதில் தான் ஒவ்வொரு இந்தியரின் எதிர் காலமும் இருக்கிறது. இந்த அறிய சந்தர்பத்தை நாம் நழுவ விடவே கூடாது!

    இன்று கேள்விப்பட்ட செய்திகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. தமிழ் நாடு இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளாமல், எங்கோ எதுவோ நடக்கிறது என்று 'எருமை மாட்டின் மேல் மழை' போல இருப்பது கவலை பட வைக்கிறது. இதை தமிழகத்தில் எடுத்து செல்ல ஒரு ரீஜனல் ரெப்ரேசெண்டடிவ் தேவை!

    நல்லதையே நினைப்போம்! நிச்சயம் நடக்கும்!

    ReplyDelete
  4. "அடிப்படை குடிமகன்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் "

    Who are these kudimagankal?

    The jobless youth in the crowd gathered arond AH or in other cities?

    The school girls carrying the candles ?

    The housewives ?

    Please tell me.

    ReplyDelete
  5. //நம்முடைய தேவைகளும், ஆசைகளும் மிக குறைவாக இருந்தால் நம்மாலும் இந்த அன்னா ஹசாரே போலவே மாற்றத்தை உருவாக்க முடியும்//

    இந்த வரிகளுக்காக மட்டுமே ஒரு ராயல் சல்யூட்...

    ReplyDelete
  6. ஒரு 71 வயது கிழவருக்கு இருக்கும் நேர்மையை சந்தேகிப்பவர்களை என்ன செய்வது..

    ReplyDelete
  7. லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் தினப்படி நாம் சோற்றில் சேர்த்துக் கொள்ளும் உப்பு போன்று ஆகிவிட்டது.

    அது போன்ற விசயங்களை கேள்விப்படும் பொழுதெல்லாம் அது எத்தனை பெரிய எண்களில் பேசிக் கொண்டாலும் இயல்பாக கேட்டு கேட்டு பழகி போனதால் நாம் இம்யூன் ஆகிக் கொண்டோம்.

    ஆனால், ஒரு தேசம் அழிவை நோக்கி செல்வதற்கான முதல் அடி பாதையே இங்கேதான் ஊற்று எடுக்கிறது.

    இந்த கொந்தளிப்பை பயன் படுத்தி ஏதாவது பெரியளவில் அரசியல் வியாதிகளை அடித்து விரட்டிவிட்டு புதிதாக இரத்தம் பாய்ச்சிக் கொண்டால்தான் உண்டு.

    எழுத்து அமிலம் மாதிரி அந்த கிழப் பிணங்களின் மீது பொழிந்திருக்கிறது. ஆனால் தோல் கெட்டி உள்ளர இறங்காது.

    ReplyDelete
  8. அருமையான பதிவு..காந்தி மீதே இத்தகைய அவதூறுகலும் வசைகளும் அவர் காலத்தில் பொழியப்பட்டன. இப்போதும் அதுவே நடக்கிறது.

    ReplyDelete
  9. //அன்னா ஹசாரே - 'இவர் ஒரு ப்ளாக்மெயில் பேர்வழி. '

    இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர்கள் இரண்டு பேர்கள். //

    ஒரு திருடனைப் பிடித்து விட்டேன்.இன்னொருத்தன் எங்கே?

    ReplyDelete
  10. இன்னொரு திருடன் பால்தாக்கரேவா?

    சரத்பவார திருடன் என்பதால் சரி...

    பால்தாக்கரேவுக்கு மராட்டிய மாநிலம் சார்ந்த அரசியல் நிலைப்பாடு என நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.இவரது பாதிப்பு வரும் நாட்களில் இந்தியாவில் ஒலிக்குமா?அல்லது ஊறப்போட்டு அடுத்த கட்டத்துக்கு தாண்டி விடுவோமா?

    ReplyDelete
  12. அல்லது ஊறப்போட்டு அடுத்த கட்டத்துக்கு தாண்டி விடுவோமா?//

    தாத்தா உண்ணாவிரதத்தை முடிச்சிக்கிட்டாரில்ல... இனிமே என்ன பழைய குருடி கதவை திறடி கேசுதான்!

    ReplyDelete
  13. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. காந்தியையே குறை சொன்ன தேசம் இது

    ReplyDelete
  15. http://timesofindia.indiatimes.com/india/India-wins-again-Anna-Hazare-to-call-off-fast-today/articleshow/7921304.cms

    http://in.news.yahoo.com/live--anna-hazare-s-fast-enters-4th-day.html

    ReplyDelete
  16. //சி.பி.செந்தில்குமார் said...

    காந்தியையே குறை சொன்ன தேசம் இது
    //

    அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்தான் இப்பொது இந்த அணியில் இருக்கிறார்கள்

    ReplyDelete
  17. மிகவும் போற்றப் பட வேண்டிய மனிதர்!

    ReplyDelete
  18. காங்கிரஸை பற்றி உங்களுக்கு தெரியும் தானே. பிரச்சனையை முடிக்க வேண்டிய விதமாக முடித்து விடுவார்கள். இவரை போல எத்தனை பேரை பார்த்திருப்பார்கள்.

    ReplyDelete
  19. அன்புடன் வணக்கம்
    எங்கள் தமிழ் நாட்டுக்கு இது போன்ற நூறு அன்ன ஹஜாரே வந்தாலும் எல்லோரையும் ""பாட்ச!"" வுக்கு கொடுத்தமாதிரி மோட்சம் கொடுத்துற மாட்டோம் .. ???நாங்க எப்பிடி சம்பாதிக்கிறது ??இருக்கிறவரைக்கும் நல்ல நிம்மதியா சாப்பிட முடயுதா??செத்தால் காதறுந்த"" ஊசி"" கூட கிடையாது ?? ஏன்தான் இப்பிடி பணம் அலைஞ்சு ஊழல் செய்றீங்க??..கொடுங்கோலன் செங்கிஸ்கான் தனக்கு எதிராக புரட்சி செய்த மகனின் அந்தரங்க படை வீரர் ..1000.. பேரை ஈட்டில் குத்தி மகனுக்கு பரிசாக அளித்தான் அவனே இறக்கும் பொது என் கைகளை வெளி வைத்து கொண்டு பொய் சமாதி வையுங்கள் என்றானாம் ??(( வெறும் கையாக ))இன்று எப்பிடியாவது என்ன வேலையாவது பார்த்து துட்டு கொடுத்து தலைவனாக வந்துரனும் வந்துட்டா?? போட்ட காசை எடுத்துரலாம் ????யாரவது ஒரு அரசியல்வியாதி.. மக்கள்!!! உங்களுக்கு சேவை செய என்னை தேர்ந்தெடுங்கள் இல்லேன போங்க ???..துட்டேல்லாம் செலவழிக்க மாட்டேன்.. ?/ இப்பிடி ஒரு சேவை மனதுடன் யார் என்று வருகிறார்களோ அன்று நம் நாடு உருப்படும் உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  20. அன்னா ஹசாரே பற்றி இட்லி-வடையில் வாசித்தேன் அப்பொழுதே நினைத்தேன் இவரைப்பற்றி அன்பின் எழுத வேண்டுமே என்று ...
    இணையத்தின் உதவியால் நேற்று உங்கள் பக்கத்திற்கு வருகை தடைப்பட இன்று காலை வருகையில் அன்னா பதிவாக இருந்ததார்.

    எதிர்பார்ப்புடன் உள்நுழைந்தால் கல்வெட்டின் பின்னூட்டங்களை வாசிக்கின்றோமா என்கிற பிரமை..அவ்வளவு கோபம் எழுத்துகளில்...அதனால் அன்னா ஹசாரே மறைந்தது உண்மை.

    ReplyDelete
  21. நமக்கு கொஞ்சம் பேராசைதான் .. இருந்தும் ஒருசின்ன நம்பிக்கை... அவரது போராட்டம் வெல்ல வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. அன்னா ஹசாரே என்ற தனிமனிதனின் முயற்சியில் எந்த விமர்சனமுமில்லை.. ஆனால் இதற்காக வெளிச்சம் தரும் ஊடகமும் , ஆளுங்கட்சியுமே சந்தேகத்தை தந்துவிடுதே..

    இங்கே ஊழல் என்பதற்கான அர்த்தமே மாறியாச்சு என்பதே நம்மில் பலருக்கு விளங்காமல் இருக்கும் பொதுபுத்தியை , ஆட்டு மந்தைக்கூட்டமாக மாற்ற மீடியாக்களும் முயற்சிக்கின்றன..

    லாபியிங் கு துணை போன NDTV பர்கா தத் ஆவேசப்படுகிறார் ஊழல் ஒழிய..:))

    சிரிப்பாத்தான் இருக்கு..

    அரசை மட்டுமே ஊழல் என சுட்டிக்காட்ட பழக்கப்பட்டுள்ளோம்.. நாட்டின் முக்கிய ஊழல் ( சுரண்டல் )பேர்வழிகளான டாடா வோ , அம்பானியோ வெளியே தெரியாமல் அரசும், மீடியாக்களும் , ஏன் அண்ணாவுமே பத்திரமாக பாதுகாப்பது ஏன் என சிந்தித்தோமானால் இந்த நாடகமும் கொஞ்சம் நமக்கு விளங்கும்..

    மேலும் புரிய இங்கே படிப்போம்..

    http://www.vinavu.com/2011/04/08/anna-hazare-fast/


    அன்ணா ஹசாராவை மதிக்கிறேன் அவருக்கு வணக்கம் செலுத்த நாம் என்ன செய்யணும் ??


    http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_09.html

    அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?

    ReplyDelete
  23. நீங்க எழுதனும்னு நினைச்சேன் எழுதிட்டீங்க, என்ன செய்வது நாட்டுக்காக எதாவது உண்மையா செய்யனும்னா இன்னும் காந்தியவாதிகளத்தான் நம்ப வேணும் போல இருக்கு,அஹிம்சைங்கற காந்தியோட ஆயுதம் இன்னும் முனைமழுங்கி போகலைன்னு நல்லாவே தெரியுது, இவரோட வெற்றியிலதான் பின்னாடி வர அரசியல்வாதிகளுக்கு ஊழல் பன்ணுற தையரியம் வராம தடுக்கும், நம்மள மாதிரி சாதாரணங்க குடும்பம் குழந்தை குட்டிக்கு பயந்து பேசாம இருக்குறோம், துணிந்து செயல்ல இறங்குன ஹசாரே அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வணக்கங்களும்

    ReplyDelete
  24. உங்கள் நாட்டிற்க்கு நன்மை தரும் அருமையான உங்களுடையது பதிவு.

    பால் தாக்கரே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இறுதிப்பால் ஊற்றியவர். இவரைப் பற்றி இங்கே அறிமுகமே தேவையில்லை.-ஜோதிஜி

    பால் தாக்கரேயால் ஆதரிக்கபடும் பிரபாகரனை தலைவராக கொண்ட புலிகள் பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களுக்கும் வேறு மதங்களை பின்பற்றும் தமிழர்களுக்கும் வேறு இனத்தவர்களுக்கும் இறுதிப்பால் ஊற்றினார்கள். தமிழகத்தில் எந்த விதமான எதிர்ப்பும் கிடையாது. கொடுமையை எங்கள் இனத்தை சேர்ந்தவன் செய்தால் அது பற்றி அக்கறைபட வேண்டியதில்லை என்ற நிலை பாடா?
    நன்றி.

    ReplyDelete
  25. baleno said...


    இது இந்திய நாட்டிற்கும் மட்டுமல்ல நண்பரே. வளர்ந்து வரும் நாடுகள் அத்தனைக்கும் பொதுவான விசயம் தான் லஞ்சம் ஊழல் மற்றும் அதிகாரதுஷ்பிரயோகம். ஒரு வகையில் பார்த்தால் இந்தியாவை விட வேகமான முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கும் சீனாவில் எங்கு திரும்பினாலும் லஞ்சம் ஊழல் தான். ஆனால் அது சர்வாதிகாரம் போல அடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்தியா போல வெளியே தெரிவதில்லை.

    இந்தஇடுகைக்கும் பிரபாகரனுக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் பால் தாக்கரே வைத்து நீங்கள் எதையோ சொல்லி எங்கோயோ கொண்டு வந்து நிறுத்துறீங்க. உரையாட விருப்பம் இருந்தால் சொல்லுங்க. நான் தயார்?

    ReplyDelete
  26. இந்த தலைப்பு எழுத காரணம் நண்பர்கள் சுரேஷ் மற்றும் கிரி. உரிமையுடன் நீங்க எழுத வேண்டும் என்று அவர்கள் சொல்லாமல் இருந்தால் எப்போதும் போல தேர்தல் முடிந்தவுடன் தான் தொடர்ந்து எழுதியிருப்பேன். நண்பர் தவறு அவர்களே இவர்கள் இருவருக்கும் தான் நீங்க நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  27. தருமி அய்யா கடந்த இரண்டு பதிவுகளாக முதன் முறையாக தொடர்ந்து வருகை தந்து இருக்கீங்க. மிக்க நன்றி.

    நன்றி விஜயராஜ்.

    சாந்தி தனியாக என் புரிதலை தெரியப்படுத்துக்கின்றேன்.

    ReplyDelete
  28. hamaragana said...

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது. இப்போது போல இந்த தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலுக்கும் நடந்து கொள்ளும் பட்சத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி வாயிலாக மட்டும் பிரச்சாரம் செய்யலாம் என்று இன்னும் கெடுபிடி உருவாக்கினால் பாதி பேர்கள் பீதியடைந்து விடக்கூடும். அப்போது உங்கள் ஆசையின் தொடக்கப்பாதை உருவாக்க்கூடும்.

    ReplyDelete
  29. தமிழ்உதயம்

    காங்கிரஸ் ஒத்துக் கொண்டது என்ற செய்தி வந்ததும் நீங்க நினைத்துள்ளபடி தான் நானும் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

    பட்டாபட்டி எப்போதும் ஒரே வார்த்தையில் முடித்து விடுறீங்க. சிலம்பாட்டம் எப்போது?

    ஷர்புதீன்

    நான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு கொடுப்பவன் என்பது போல உங்கள் வார்த்தை உணர்த்துகின்றது? சரியா?

    ReplyDelete
  30. வேடந்தாங்கல்

    இன்னும் சில மாதங்களில் இவரைப் பற்றிய நினைப்புகளை அரசியல்வியாதிகள் அரும்பாடுபட்டு மக்கள் மத்தியில் இருந்து போக்கிவிடுவார்கள்.

    வருக வீராங்கன், செந்தில்குமார். ரத்னவேல்.

    ReplyDelete
  31. உண்மைதான் சித்ரா.

    பந்து

    இங்குள்ள சார்பாளர்கள் அத்தனை பேர்களும் எதற்காக எப்போது சார்பாக இருப்பார்கள் என்பதை நடந்து முடிந்த ஈழப் பிரச்சனையை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும்????

    ReplyDelete
  32. அமலன் இதில் விமர்சனம் செய்துள்ள தெகா, நடராஜன், செந்தில், செங்கோவி போன்றோர்கள் தனித்தனியாக கொடுத்துள்ள விசயங்களை என் பார்வையில் உங்கள் கேள்விக்கு பதிலாக தர முயற்சிக்கின்றேன். காரணம் பதிவின் நீளம் கருதி சுருக்கிய பல விசயங்களை உங்கள் கேள்வி இப்போது என்னை எழுத வைத்துள்ளது.

    ReplyDelete
  33. அமலன்

    இந்தியாவில் எந்தவொரு இயல்பான போராட்டங்களுக்கும் ஆதரவு என்பது எளிதில் வந்து விடுவதில்லை. அதுவும் சாத்வீகம் என்றால் அது கிண்டலுக்கும் கேலிக்கும் உரியதாகவே ஆகிவிட்டது துரதிஷ்டமான ஒன்று.
    காந்தி சிறையில் இருந்த போது எப்போது இந்த கிழம் சாவார்? என்று ஆங்கிலேயர்கள் விறகு மற்றும் அவரை எரிக்க என்று ஒரு ஆளை தயார் செய்து வைத்திருந்தார்கள் என்று சரித்திரம் சொல்கின்றது. காரணம் அந்த அளவிற்கு ஆங்கிலேயர்கள் காந்திஜியின் அஹிம்சை போராட்டங்கள் உண்டு இல்லையென்று படாய் படுத்தி எடுத்தது. அதே வழியில் இந்த அன்னா ஹாசரே அவர்களும் காந்திய வழியில் தொடக்கம் முதல் போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை இவர் மட்டும் மக்களை திரட்டி மற்ற வழியில் போராடியிருக்கும்பட்சத்தில் நம் அரசாங்கம் பொடா, தடா போன்ற தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளி எளிதாக முடித்து விடுவார்கள். இவர் மேல் எந்த குறை மற்றும் கறை இல்லாத காரணமே அரசாங்கத்திற்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கு மேல் இவர் அக்கடா என்று உண்ணாவிரதம் என்று இறங்க இதை எப்படி தடுக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

    நீங்க சொன்ன மாதிரி இந்தியாவில் குடிமக்கள் என்பவர்கள் தனியாக என்றொரு ஜாதியில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், செல்லாதவர்கள், வீட்டு மனைவியர் எல்லாருக்குமே அவரவர் பெற்ற அனுபவங்களின் மூலம் ஏதோவொரு ஆதங்கம் இந்த நாட்டைக்குறித்து இருக்கத்தான் செய்கின்றது. ஒரே ஒரு மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டு சாலையில் வந்து நின்றுவிட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விடுமா? என்று யோசிக்கக்கூடும். ஆனால் ஒவ்வொருமாவட்டத்திலும் என்று தொடங்கி மொத்த இந்தியாவிலும் இது போன்ற ஒவ்வொரு போராட்டத்திற்கும் நம் குடிமக்கள் அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பை காட்டும் பட்சத்தில் ஆள்பவர்கள் மனதில் பயம் உருவாகாதா? இந்த அஹிம்சை வழி வேறு மாறி விடடால்? என்று யோசிக்க மாட்டார்களா?

    செந்தில் சொன்னது போல இந்த கிழவரை சந்தேகிக்க நபர்கள் யார்? ஊழலில் திளைத்து ஊழலிலே வாழ்ந்த கேடு கெட்ட ஜென்மங்கள் தானே? அவரவர்களுக்கு உள்ளே பொங்கும் ஆத்திரம் ஆயிரம் உண்டு. ஒரு வடிகால் அல்லது தொடக்கம் போல இந்த தாத்தாவின் போராட்டம் இப்போது மக்களால் பார்க்கப்படுகின்றது. இன்னும் இரண்டு மூன்று அங்கங்கே நடக்கட்டும். விரைவில் மத்திய அரசாங்கம் இதற்கும் தடைபோட்டு விடும்.

    காரணம் வியாபாரிகள் எப்போதும் லாபத்தை மட்டும் தான் பார்ப்பார்கள். சேவையை அல்ல. அரசியல் என்பது இந்தியாவில் வியாபாரம்.

    ReplyDelete
  34. எழுத்து அமிலம் மாதிரி அந்த கிழப் பிணங்களின் மீது பொழிந்திருக்கிறது. ஆனால் தோல் கெட்டி உள்ளர இறங்காது.

    தெகா இதை வேறு விதமாக சொல்ல முடியும்.

    அரசியல்வியாதிகளுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. நியூரான்களில் உள்ள வெட்கம், மானம், சூடு, சொரணைகளை தூண்டும் நரம்பு மண்டலம் இருக்காதமே? உண்மையா?

    ReplyDelete
  35. அண்ணே ..,க்ளாஸ்

    ReplyDelete
  36. லோக்பால் என்ற விதை உருவாகின்றது.//விதை விருட்சமாகப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  37. Excellent write-up!

    ReplyDelete
  38. இந்தஇடுகைக்கும் பிரபாகரனுக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் பால் தாக்கரே வைத்து நீங்கள் எதையோ சொல்லி எங்கோயோ கொண்டு வந்து நிறுத்துறீங்க.
    உண்மையாகவா ஜோதிஜி!! பிரபாகரன் புலிகள் செய்யாத விடயத்தையா நான் இங்கு குறிப்பிட்டேன்? உங்களுக்கு பிடிக்காத உண்மை விடயங்களை குறிப்பிட்டதிற்க்காகவும் உங்களுக்கு இடையுறு செய்ததிற்காகவும் என்னை மன்னியுங்கள்.

    ReplyDelete
  39. இளங்கோApril 9, 2011 at 9:25 PM

    அன்னா ஹசாரே இத்தனை நாட்கள் எங்கிருந்தார்? அவருடைய பின்னணி என்ன? எப்படியோ வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ரெடி.

    ReplyDelete
  40. இளங்கோ இந்த பதிவே மூன்று பதிவாக எழுதினால் முழுமை பெறும். கூகுளில் தேடிப்பாருங்க.

    பலினோ

    என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? ஏற்கனவே சில விமர்சனங்கள் தந்து இருக்கீங்கன்னு நினைக்கின்றேன்.
    உங்களுக்கு ஒரு கேள்வி? உங்களுக்கு பிடித்த அல்லது மதிக்கக்கூடிய ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்க. அடுத்து வருபவர் அவர் குறித்த மாற்றுக் கருத்துகளை தயங்காமல் எடுத்து வைப்பார். காந்தி முதல் அன்னா ஹாசரே வரைக்கும் இப்படித்தான் நிறையும் குறையுமாய். நீங்க சொன்னது போல விடுதலைப்புலிகள் மூலம் கொன்றழிக்க்ப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் அது சார்ந்த விசயங்கள் அத்தனையும் எனக்கும் தெரியும். ஆனால் ஒரு தலைவரை வெறுக்க இது போன்ற பல காரணங்கள் இருப்பது எத்தனை உண்மையோ அதை விட பல மடஙகு நல்ல விசயங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களிடம் உண்டு என்பது உங்கள் மனம் அறியும். ஆனால் பல காரணங்களால் உங்கள் வார்த்தைகள் இங்கே வெளிப்படுத்தாது. இப்போது தான் பிரபாகரன் இல்லை என்று சொல்கிறார்களோ(?) ஈழத்தில் நீங்க விரும்பிய அத்தனையும் கிடைத்து விட்டதா? ஏன்? அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  41. நீண்டதொரு ஆய்வு. ஆயிரம் அண்ணா ஹசாரேக்கள் வந்தாலும் நூறு லோக்பால் மசோதாக்கள் இயற்றப்பட்டாலும் ஊழலின் ஊற்றுக்கண் எதுவெனத் தெரியாத போது ஊழலை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.

    ஏற்கனவே இருக்கிற ஊழல் ஒழிப்பு சட்டங்களால் எத்தனை பேர் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்? தண்டனையிலிருந்து ஊழல் பேர்வழிகளால் எப்படி தப்ப முடிகிறது?

    ஒருவரின் நேர்மையான செயல்பாட்டால் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஊழலை ஒழிக்க முடியும். அங்கே ஊழல் தற்காலிகமாக ஒழிக்கப்படும். அதே நேரத்தில் ஊழலை ஒழிக்கப் பாடுபட்டவரும் ஒழிக்கப்படுவார். யாராலும் அவரைக் காப்பாற்ற முடிவதில்லையெ ஏன்?

    நல்லவர்கள் மற்றும் சிறந்த சட்டங்களால் மட்டுமே ஊழல் ஒழிந்து விடாது. மாறாக ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிற அதிகார வர்க்கம் மற்றும் தரகு முதலாளிகள், அவர்களை பாதுகாக்கும் இச்சமூகக் கட்டபை்பை ஒழித்துவிட்டு புதிய சமூகக் கட்டமைப்பை உருவாக்காமல் ஊழலை நிரந்தரமாக ஒழித்துவிட முடியாது.

    எனினும் ஊழல் ஒழிய வேண்டும் என்கிற தங்களின் ஆய்வு பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  42. அருமையான பதிவு.. உண்மையான ஒரு குறிக்கோளுக்காக போராடுவோம்..இதில் எந்த விதப் பலன் இல்லை என்றாலும் கூட, இந்த மக்கள் சக்தியைப் பற்றி இந்த அரசியல்வியாதிகளுக்குப் புரிய வைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கட்டும்..

    ReplyDelete
  43. எனக்கு 72 வயது ஆவதற்குள் ஒரு நல்ல மாற்றம் வராதா என்ற ஏக்கத்துடன்..

    ReplyDelete
  44. ஊரான் மிகச் சிறந்த விமர்சனம்.

    சாமக்கோடங்கி நீங்க சொல்லியிருப்பதைப் போல இது போன்ற விசயங்கள் ஒரு வரலாற்று பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் எண்ணமும். அடுத்து வருபவர்களுக்கு இந்த சமயத்தில் இது போன்று ஒன்று நடந்துள்ளது என்பதை தெரியப்படுத்தும்.

    அமுதா எனக்கும் இதே ஆசை தான்.

    ReplyDelete
  45. ஹண்ணா ஹசாரேவால் திருவாளர்கள் மோடியும் நிதிஷ்குமாரும் மட்டுமே பாராட்டப் பட்டிருக்கிறார்கள். இதற்கும் மேலே விளக்க வேண்டுமா ஹண்ணா ஹசாரேவின் நோக்கம் என்னவென்று? அவர் யார் பக்கம் என்று?

    ReplyDelete
  46. அழகன்,
    அன்னாவால் நடத்தப்படும் போராட்டம் சாத்வீகப் போராட்டம் என்பதை வைத்துமட்டுமோ அல்லது அவர் ஊழலை ஒழிக்க நல்ல மனம் படைத்தவர் என்று மட்டுமோ வைத்து இந்த இயக்கத்தை மதிப்பிட்டீர்கள் என்றால் நாம் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் சந்திக்கப்போவதில்லை.
    ஊழலில் மேல் மட்டத்திலிருந்து ஒழிப்பதா அல்லது கீழ் மட்டத்திலிருந்து ஒழிப்பதா என்பதோ, அல்லது நாம் சுத்தமாயிட்டு ஒழிப்பதா என்பதல்ல இங்கு விவாதம்.
    மக்கள் மனங்களில் இந்த நாற்றமெடுத்த, புறையோடிப்போன சமூகத்தை மாற்ற வேண்டும் என்று இந்தியா முழுவதும் எண்ணுக்கிறார்கள். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுதான். அதுமட்டுமல்ல சரியான எதிரியை எவ்வாறு இனம் காண்பது என்பதில்தான் வெற்றியும் அடங்கியிருக்கிறது. இல்லையென்றால் நிழலோடு, அட்டைக் கத்தியில் சண்டையிட்டதுதான் நடக்கும். அவ்வளவு முட்டாளாக நாம் இருக்கப்போகிறோமா என்பதும் நாம் சிந்திக்க வேண்டும். நல்ல எண்ணங்களே சமூக மாற்றத்தை உருவாக்கிவிடுவதில்லை.

    ReplyDelete
  47. அழகன்,
    ஊழல் இன்று தனியார்மயம், தாராளமயம் வந்தபிறகு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விசயமாக ஆகிவிட்டதை நீங்கள் கவனிக்க தவறிவிட்டவர்களாகவிட்டீர்கள்.
    அதற்கான சில விசயங்கள்
    பல்வேறு வெளிநாட்டு, உள்நாடு பெரிய கம்பெனிகள் இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு அரசு கொடுத்த பெயர் சிறப்பு பொருளாதார மண்டலங்கள். ஆனால் அதற்கு நிலத்தினை விவசாயிகளிடமிருந்து 5 லட்சத்துக்கு பிடுங்கினால் அதை அந்த கம்பெனிகளுக்கு 20 லட்சத்துக்கு விற்கிறார்கள் இடைதரகர்கள் அரசுகள். ஆனால் அந்த கம்பெனியே அதை வாங்கவேண்டும் என்றால் அதன் மார்க்கெட் மதிப்பு என்ன தெரியுமா 50 லட்சத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். இதில் அந்த கம்பெனிக்கு 30 லட்சம் லாபம் இடைதரகர்களுக்கு 15 லட்சம் லாபம். இதற்குப் பிறகு அவர்களுக்கு நமது வரிப் பணத்தில் 50 பைசா யூனிட்டில் கரண்ட், இலவச குடிநீர் வசதி, 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது. இவ்வளவும் நம் பணத்தில். பொருளாதாரநெருக்கடி என்கிறார்கள், அப்படியென்றால் கம்பெனி வருவாய் குறைந்து போவதைத்தான் அப்படி கூறுகிறார்கள். அதற்கு நமது மன்மோகனும், பிரனப் முகர்ஜியும், என்ன கூறுகிறார்கள் தெரியுமா, எல்லா விலையேற்றங்களையும், எல்லா மக்கள் மீதான வரிகளையும் பொருத்துகொள்ளுங்கள் என்கிறார். அதன் பொருள் எந்த நிலையிலும் கம்பெனிகளுடைய வருமானம் குறையக் கூடாது, அவர்கள் லாபத்தை குவித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறார்கள்.
    2ஜி யை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் 1,75,000 கோடி நட்டம் என்றார்கள். அதில் கமிசன் அல்லது லஞ்சம் அரசியல் வாதிகளுக்கு 10 முதல் 30 சதவீதம் மீதி 70 சதவீதம் கம்பெனிகள்தானே அனுபவிக்கிறது.
    கனிம ஊழலை எடுத்துக்கொள்ளுங்கள் இந்தியா முழுக்க 27,00,000 கோடி (27லட்சம் கோடி)கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது, அதாவது அரசுக்கு நஷ்டம் என்று கூறுகிறது. இதற்கு கட்சி வித்தியாசம் பார்க்காமல் எல்லா மாநிலங்களிலும் கமிசன் அல்லது லஞ்சம் அல்லது ஊழல் 10 முதல் 30 சதவீதம் அரசியல்வாதிகளுக்கு, மீதி கம்பெனிகள்தான் கொள்ளையடித்தது.
    நம் பூமியில் கிடைக்கும் தாதுக்கள், பெட்ரோல் போன்ற எண்ணை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலையில் எந்த முதலீடும் இல்லாமல் நமது பேங்கிலேயே லோன் எடுத்துக்கொண்டு அதை வாங்கி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் இந்த கம்பெனிகள்.
    இறுதியாக நான் கூறுவது, இந்த லஞ்சம் யாருக்காக உருவாக்கப்பட்டது. இது போன்ற கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக. எப்பொழுது (1992 ஆம் ஆண்டு) தனியார்மயம், தாராளமயம் எடுத்து வந்தார்களோ அப்போதுதான் இந்த லஞ்சத்தின் பரிணாமம் சைபர்களை கணக்கிடமுடியாத அளவுக்கு பெருகியது. காரணம் இந்த கம்பெனிகளின் லாபத்தை கொள்ளையை பெருக்குவதற்காக அவர்களாக ஒரு பங்கை வாங்கிக்கொண்டு சேவை செய்தார்கள். அவர்கள் அதாவது கம்பெனிகள் அதற்காக ஆட்சியையே கூட மாற்றி அமைத்தார்கள். ஆட்சியில் யார் உட்காரவைப்பது என்பதையும், யார் தேர்தலிலே நிற்பது என்பதையும் கூட அந்த கம்பெனிகளுக்கிடையே நடக்கும் போட்டியே தவிர, நாம் யாரும் இவர்கள் தான் நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை, வெறும் நிற்பவர்களை வேறு வழியில்லாமல் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று எடுத்து சொரிந்து கொண்டதைத் தவிர.
    அதனால்தான் கூறுகிறோம் லஞ்சத்தை ஒழிப்பது என்பதின் முதல் படி இந்த தாரளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளை எப்போது ஒழிக்கிறோமோ அப்போதுதான் சாத்தியமாகும். அதிலும் இதில் வரும் பணம் நம் நாட்டில் கூட உலாவது இல்லை. இவையெல்லாம்தான் வெளிநாட்டில் கருப்புப் பணமாக பதுக்கிவைப்பதாகும்.
    ஆனால் நாம் அன்றாடம் சந்திக்கும் அரசு அலுவலகங்களில் வாங்கும் லஞ்சம் இங்கேயே தான் நடமாடுகிறது. தாசில்தாரருக்கு கீழேயும், இன்ஸ்பெக்டருக்கு கீழேயும், சாதாரண இடங்களிலேயும் வாங்கும் லஞ்சம் உள்நாட்டிலேதான் சுற்றுகிறது. ஆனால் பெரிய கம்பெனிகளிடம் வாங்கும் லஞ்சம் கருப்புப் பணம், அது நாட்டை காட்டிக்கொடுக்கும் பணம், அதை ஒழிக்காமல் உள்நாட்டில் இருக்கும் லஞ்சத்தை ஒழிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டை காட்டிக்கொடுப்பதை, கொள்ளையடிப்பதை, கூட்டிக்கொடுப்பதை தடுக்கப்போகிறாமா என்பதே. இதுதான் சுதந்திரப்போராட்டம் என்பது. இதை எதையுமே அன்னா ஹசாரே கூறினாரா. உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். எய்தவன் இருக்க அம்பை தடுத்து பயனென்ன, ஆக்கியவன் இருக்க பொம்மையை உடைத்து பயனென்ன. ஆகையால் பிரதமரையும், நீதிபதிகளையும், கொண்டுவருவதைவிட முதன்மையான பணி பலனடைந்த கம்பெனிகளை முடக்கினால் அதற்கு அவர்களுக்கான தண்டனையை பற்றிக் கூறாமல் வெறுமென பேசுவது நிழலோடு மோதுவதே. வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் சேர்த்தேதான் தண்டனைதரவேண்டும். அதுதான் முதல் படி. அதிலும் இன்று உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை ஒழிக்காமல் இதை ஒரு இம்மியளவும் ஒழிக்கமுடியாது. பாம்பின் பல்லை பிடுங்க இதுதான் வழி.விவாதம் தொடரும்....

    ReplyDelete
  48. வேடவன்,
    அகிம்சை என்பது வடிவம் தானே தவிர உள்ளடக்கம் அல்ல. எதை எதிர்த்து போராடுகிறோம், எதற்காக போராடுகிறோம் என்பதே முதன்மையானது. இப்போது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறுகிறார்களே. ஏன் அவ்வாறு கூறும் நிலைக்கு வந்தது. முதல் சுதந்திரமே அரைகுறையானது என்பதுதானே பொருள். நாம் எல்லா அநியாயங்களையும் எதிர்த்துப் போராடவே நினைக்கிறோம். ஆனால் அது ஒரு பொழுதுபோக்கான நிகழ்வாகவோ அல்லது மாலை நேர விருந்தாகவோ போராடவே விரும்புகிறோம். எந்த இழப்புக்கும் தயாராகுவதில்லை. கருப்புப் பணத்தை எதிர்த்தபோது போலீசை வைத்து தாக்கியது இப்போது லோக்பால் மசோதாவை மட்டும் எதிர்க்கும்போது அவ்வளவாக இல்லை. ஒரு வேளை இது பேப்பரிலே எழுதும் விசயமாக மட்டுமே பார்க்கப்படுவதுதானோ. கருப்புப் பணத்தை எடுக்கும் நடவடிக்கை என்பது அடிமடியிலேயே கைவைப்பதோ. எல்லா அரசியல் வாதிகளுமே லஞ்சப் பேர்வழிகள்தான். ஏனென்றால் அவர்கள் தேர்தலில் நிற்கும்போதே ஏதோ ஒரு கம்பெனியின் ஸ்பான்சர் இல்லாமல் நிற்க முடியாது. அப்போதே அவருக்கான கோரிக்கை நிறைவேற்ற அந்த அரசியல்வாதி சபதம் ஏற்றுவிடுகிறார். இதற்குமேல் என்ன எதிர்பார்க்க முடியும். சரி மிகவும் தூய்மையான அன்னா ஹசேரா என்று நீங்கள் சொல்லிக் கொள்பவரே வந்தால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால், அரசு, சட்டம் எல்லாமே மக்களுக்கு சாதகமாக இல்லை. சாதி, மதம், இனம் என்று எத்தனையோ முரண்பாடுகளை தூண்டிவிட்டு நம்மை அடக்கி ஒடுக்கி பிரிந்தாண்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊழலை மட்டும் எதிர்க்கும் இந்த அன்னா ஹசாரே தனியார்மயத்தை எதிர்ப்பதில்லை. இப்போது பாராளுமன்றத்தில் விதை பாதுகாப்பு மசோதா ஒன்று கொண்டுவந்திருக்கிறார்கள். நம் விவசாயிகள் மலட்டு விதைகளை பி.டி.விதைகளை விமர்சனம் செய்தால் அவர்களுக்கு இரண்டாண்டு தண்டனை இரண்டு லட்சம் அபராதம் என்று. இது யாருக்கானது. வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருக்கிற கம்பெனிகளின் விதைக்கானது. இந்த அந்நிய ஆக்கிரமிப்பினை எதிர்ப்பதிலை. இதையெல்லாம் எதிர்க்காமல் லோக்பால் மசோதவை மட்டும் எதிர்ப்பதில் ஒன்றும் இல்லை. அதுவும் கூட அது அரைகுறையானது. கொடுப்பவர்களை பற்றி ஒரு வரியும் பேசாத மசோதாவை பற்றி யாரும் கவலைப்படவில்லை. விழித்தெழுவோம். போராடுவோம். அடிப்படை மாற்றத்திற்கு.

    ReplyDelete
  49. அழகன் வேடவன்

    ரெண்டு பேரும் ஒரே ஆளா?

    தாமதமாக வந்தாலும் உங்கள் விமர்சனத்தை மிக மிக ரசித்து படித்தேன்.

    என் வணக்கம் நண்பரே.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.