Thursday, July 19, 2018

நாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே? - 13



நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். 

எமர்ஜென்சி என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னைப் போல அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கு முதல் முறையாக உள்ளே நுழைந்தவர்கள் முதல் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் வரைக்கும் இதன் ஆழமும் வீரியமும் புரிந்து இருக்காது. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி உருவாக்கிய நிகழ்வுகளைப் பற்றி ஒருவர் எழுதியிருக்கும் புத்தகம் இன்னமும் வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது. 

ஆனால் இதனை அனுப்பிய நண்பர் எனக்குச் சொல்ல விரும்பியது குன்ஹாவின் கதையை. அவர் சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். 

ஆனால் என் நெருக்கமான தொடர்பில் இருக்கும் என் மதிப்புக்குரிய நண்பர் ஏற்கனவே பெங்களூரில் நடந்த ஏ1 குற்றவாளியின் சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடந்த போது பலவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  இந்தக் காட்சியைப் பார்த்த போது அவர் சொன்ன பல விசயங்கள் என் நினைவுக்கு வந்து போனது.

ஜெ. விற்கு ஏ1 குற்றவாளி என்ற மரியாதையைக் கொடுத்து நீ நினைப்பது போல என்னை உன்னால் விலைக்கு வாங்க முடியாது என்ற நிரூபித்த மைக்கேல் டி குன்ஹா குறித்து அவர் சொன்ன ஆச்சரியமான பல நிகழ்வுகள் இன்று வரையிலும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உள்ள பலருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது.  

பத்திரிக்கைத்துறையில், எதிர்க்கட்சிகள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது. ஆனாலும் எவரும் எதையும் பொதுவெளியில் இன்று வரையிலும் பகிர்வதில்லை. ஒவ்வொன்றும் செவி வழிப் பேச்சாகக் கிசுகிசு ரீதியாகவே உள்ளது. 

நண்பர் சிரித்துக் கொண்டே சுவராசியமாகக் கதை போலத்தான் என்னிடம் சொன்னார். 

ஆனால் அவர் பேசிய அடுத்த இரண்டு நாட்கள் குன்ஹா வின் மனோதிடத்தைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்.  இவரைப் போன்ற ஒருவருடன் தான் அருகே நின்று புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளுணர்வு இன்று வரையிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

ஜெ. வின் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது அவருக்குப் பெரிய பாறாங்கல்லைத் தலையில் எப்போதும் வைத்திருக்கும் சுமை போலவே அழுத்திக் கொண்டேயிருந்தது. இந்த வழக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அது சார்ந்து ஒவ்வொரு இடத்திலும் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள். தமிழ்நாடு, கர்நாடகா தொடங்கி டெல்லி வரைக்கும் சட்ட ரீதியாக, நிர்வாக ரீதியாக, லாபி ரீதியாக என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக ஆட்கள் இருந்தார்கள். 

இவர்களை ஒருங்கிணைக்க நிதி ஆதாரத்திற்கென்று தனி நபர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இது அரசியல் களத்தில் உள்ளவர்களுக்குக் குறிப்பாக ஊடக உலகத்தில் உள்ள முக்கிய அனைத்து நபர்களுக்கும் நன்றாகவே தெரியும். 

உன் விலை என்ன? என்று தான் தொடங்குவார்கள். உன் தேவை எங்கள் பொறுப்பு? என்று முடிப்பார்கள். 

இப்படித்தான் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே வந்தது.

மறைந்த ஏ1 குற்றவாளி ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, தமிழக அரசாங்க எந்திரத்தில் உள்ள எல்லாத்துறைகளுமே இந்த வழக்கு நல்ல விதமாக முடியவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

ஆனால் திமுக அடித்த மாஸ்டர் ஸ்ரோக் பால் என்பது தமிழகத்தில் இந்த வழக்கு நடக்கக்கூடாது என்று கர்நாடக மாநிலத்திற்கு நகர்த்தியது. ஆனால் அதைவிடச் சிக்ஸர் பால் என்பது மைக்கேல் டி குன்ஹா என்பவர் இந்த வழக்குக்காக நீதிபதியாக உள்ளே வந்தது. தன் வாழ்நாள் முழுக்க தனக்காகவே, தன் சுகத்துக்காகவே வாழ்ந்த ஏ1 குற்றவாளியின் உடல் நலம் இப்போது தான் எல்லையைத் தாண்டி விதியின் வளையத்திற்குள் செல்லத் துவங்கியது.

காரணம் கர்நாடகாவில் உள்ள பலரும் இந்த வழக்கு எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிய சூழலில் குன்ஹா விடம் கேட்கப்பட்டது. அவர் இயல்பாகவே இந்த வழக்கை எடுத்துக் கொண்டு களம்புகத் தொடங்கினார். 

வீம்பு, ஆணவம், அகம்பாவம், உச்சகட்ட அயோக்கியத்தனத்திற்கு அஞ்சாத குணம் என்று பெயர் பெற்றிருந்த ஜெ. வின் பார்வை குன்ஹா வின் மேல் பட்டது. 

அதுவரையிலும் ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கியே பழக்கப்பட்ட ஜெ. வுக்குக் குன்ஹா என்பவர் அதற்கு அப்பாற்பட்டவர் என்பதனை முதலில் உணரக்கூடத் தயாராக இல்லை. எப்போதும் போலக் களம் இறக்கப்பட்டவர்கள் முதலில் கர்நாடக அரசின் உயர் மட்ட பதவிகளில் இருந்தவர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நடக்கவில்லை. அதன் பிறகு அங்கிருக்கும் காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் சில நகர்வுகள் நடத்தப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. 

பிறகு நீதிமன்றத்தில் பணியில் இருந்த ஓய்வு பெற்று இருந்த பலரின் மூலம் குன்ஹா வை வட்டத்திற்குள் கொண்டு வர முடியுமா? என்று முயற்சிக்கப்பட்டது. 

இந்த இடத்தில் ஒரு சுவராசியம் என்னவென்றால் குன்ஹா தான் தங்கியிருந்த வீட்டை சில முறை மாற்றியுள்ளார். வெவ்வேறு இடத்தில் தங்கியுள்ளார். ஆனால் காலை நடைபயிற்சிக்குச் செல்லும் போது சொல்லிவைத்தாற் போல நீதித்துறையில் உள்ள சில கணவான்கள், அதிகாரிகள், உயர்பதவியில் உள்ளவர்கள் திடீரென்று அங்கே தோன்றுவார்கள். அவருடன் நடைபயிற்சியைத் தொடங்குவார்கள். குன்ஹா ஆச்சரியமாகப் பார்த்து விட்டு எப்போதும் போல இயல்பாக உரையாடுவார். அவர்கள் வலை வீசுவார்கள். பாதி நிலையிலே நடைபயிற்சியை முடித்து விட்டு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பி விடுவாராம். 

தொடர்ந்து செல்லும் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் வெறுத்து விடுவார்கள். 

காரணம் அதுவரையிலும் பல்வேறு காரணங்கள் சொல்லி இழுத்துக் கொண்டே வந்த இந்த வழக்குக் குன்ஹா கையாளத் தொடங்கியதும் சூடு பிடித்து விரைவாக நகரத் தொடங்கியதும் முக்கியக் காரணமாக இருந்தது. 

இந்த வழக்குக்கு முக்கியச் சாட்சியாக இருந்த ஜெ. பயன்படுத்திய பொருட்கள் அப்போது சென்னையில் ஒரு இடத்தில் அரசு பாதுகாப்பில் இருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் அவையெல்லாம் முக்கியச் சாட்சிப் பொருட்கள். பெங்களூர் கொண்டு வருவதற்கு ஆணையிட்டும் அது நகர்ந்து வந்தபாடில்லை. 

இறுதியாக இந்த நாளைக்குள் அவையெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்தாக வேண்டும் என்று சொன்ன குன்ஹா எவரிடமும் சொல்லாமல் சென்னைக்கு வந்துள்ளார். இங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சி. அங்கேயே அவருடைய பணியும் தொடங்கியுள்ளது. 

குன்ஹா கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த இறைபக்தி கொண்டவர். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே சர்ச் இருந்தால் கட்டாயம் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் சென்று விடுவார். சென்னைக்கு வந்த போது சாந்தோம் தேவாலயத்திற்குச் சென்று உள்ளார். அந்தத் தேவாலய ஃபாதர் இவருக்காகக் காத்திருந்தவர் போல இவரை வரவேற்று உபசரித்துள்ளார். இவர் என்னை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டுள்ளார்.

மேடம் கேஸ் நீங்க தானே பார்க்குறீங்க? தெரியாமல் இருக்குமா? என்று சொல்லி விட்டு நீங்க போகும் போது என் அறைக்கு வந்து விட்டுப் போங்க என்று அன்போடு பேசியுள்ளார். 

ஆனால் சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து ஃபாதர் அழைப்பைப் புறக்கணித்து நகர்ந்து சென்று விட்டார். தான் வந்த வேலையை முடித்து விட்டு பெங்களூர் சென்று விட்டார். காரணம் இவரின் ஒவ்வொரு அசைவும் தமிழக உளவுத்துறையினர் கண்காணிக்கப்பட்டு இவரை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். குன்ஹா எந்த இடத்திற்குச் செல்கின்றாரோ அந்த இடத்தில் இருப்பவர்களை வைத்து வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். 

இவர் தினசரி அலுவலக வேலையின் பொருட்டு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு வந்து திரும்பும் போது பல வித இடைஞ்சல்கள், அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள் நடந்து கொண்டேயிருக்கத் தான் வருகின்ற வழியை, செல்கின்ற வழியை மாற்றிக் கொண்டேயிருந்துள்ளார். 

இவருக்கு இரண்டு மகள்கள். தீர்ப்புக்குப் பின்னால் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனது. ஒரு பெண் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றார். 

இவர் நீதிமன்ற பணி முடிந்து வீட்டுக்கு மாலை திரும்பி வரும் போது இவரின் ஒரு மகள் வெவ்வேறு இடங்களில் இருந்து இவரை அழைத்துச் செல்வது வரைக்கும் எவரையும் நம்பாமல் தனி நபராகவே தன் பிரச்சனைகளைச் சமாளித்துள்ளார். 

உச்ச நீதிமன்றம் முதல் உள்ளுர் பிரமுகர்கள் வரைக்கும் இவருக்குக் கொடுத்த அழுத்தங்கள், மிரட்டல்கள் தாண்டி தன் தீர்ப்பை வழங்கிய இவரின் மனோதிடத்தை ஒவ்வொரு நாளும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. 

ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் நான் பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்புச் சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் என் தோல் தடிமனானது என்ற பொன்னான வாசகத்தை உதிர்த்தார். ஊடகங்களைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பரிட்சயமாக இருந்து இருக்கும். 

அப்போதே சமூக வலைதளங்களில் வந்த செய்தி 600 கோடி என்றார்கள். 

குன்ஹா விற்கு எந்த அளவுக்கு விலை பேசப்பட்டு இருக்கும்? என்பதனை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. 

தீர்ப்பு வந்த நாள் முதல் அவரைப் பற்றித் தேடித் தேடி படித்த செய்திகளின் வாயிலாக அவர் வணங்கும் கர்த்தர் மேல் எனக்கு அளவு கடந்த மரியாதை உருவானது. 

கிறிஸ்துவம் சொல்லும் சத்தியமும் ஜீவனும் நானே என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து போனது. 



6 comments:

G.M Balasubramaniam said...

எமர்ஜென்சி குற்ப்பிட்டு பதிவைஆரம்பித்துஇருந்தீர்கள்அந்த கால கட்டத்தில் எமர் ஜென்சி தேவைதான் என்று நினைத்திருந்தேன் ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியாக இந்திரா காந்தி தோன்றினார் என்னதான் நல்லவராகைருந்தாலும் சுய சுதந்திரத்தைம்விட்டுக் கொடுக்க மக்கள்முன்வருவதில்லைஎன்னும் பாட்ம்கற்றேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என் தோல் தடிமனானது...பணிக்காலத்தில் இச்சொல்லை என் குணத்தை வெளிப்படுத்த முக்கியமான இடத்தில் நான் பயன்படுத்தினேன். என்னைக் கண்டு உயர் அலுவலர்கள் சிலர் மிரண்டனர். அப்போதுதான் நேர்மையின் பலத்தை உணர்ந்தேன்.

Rathnavel Natarajan said...

நாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே? - 13 - பத்திரிக்கைத்துறையில், எதிர்க்கட்சிகள் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் தெரிந்த கதையாகவே உள்ளது. ஆனாலும் எவரும் எதையும் பொதுவெளியில் இன்று வரையிலும் பகிர்வதில்லை. ஒவ்வொன்றும் செவி வழிப் பேச்சாகக் கிசுகிசு ரீதியாகவே உள்ளது.
- அற்புதம் திரு ஜோதிஜி. தீர்ப்பை ப்ரின்ட் அவுட் போட்டு வைத்து படிக்கிறேன். - எனது பக்கத்தில் பகிர்கிறேன். உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துகள் திரு ஜோதிஜி

ஜோதிஜி said...

உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியமும் இதுவே.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

சுயமரியாதை என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக பார்க்கப்படுகின்றது.