அஸ்திவாரம்

Thursday, January 11, 2018

சில ரகசிய குறிப்புகள் -- விமர்சனம்


நான் ரசித்த "சில ரகசிய குறிப்புகள்" எனும் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் புத்தகம் குறித்தொரு பார்வை... 

யார் ஒருவர் மட்டையுடன் களத்தில் இறங்கி வந்தாலும் அதில் ஒரு ரசனை இருக்கும். சச்சின் களத்தில் இறங்கி வரும் போது மட்டும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்... 

அது போலவே புத்தகங்கள் வாசிப்பது பிடிக்குமெனக்கு. ஆனால் ஜோதிஜி சார் புத்தகம் கையிலெடுக்கும் தருணம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறையும் அப்படியே இப்புத்தகத்தையும் கையிலெடுத்தேன் "வாடா தம்பி உனக்காகத் தான் இதை நான் எழுதியிருக்கிறேன் என்பது போல் எனை வரவேற்றது இப்புத்தகம்" காரணம் வழக்கமாக வரவேற்கும் கட்டுரையல்ல இம்முறை எனை வரவேற்றது... 

இது ஒரு கதை நாகமணி என்ற சக ரயில்பயணி பகிர்ந்து கொண்ட தன் கதை. 
கதையென்றால் நமக்குக் கொள்ளை பிரியம் அதுவும் சொல்ல போகிறது நமக்குப் பிடித்த எழுத்தாளர் ஜோதிஜி சார் அவர்கள். பாலாசுழையைத் தேனில் முக்கியெடுத்துச் சுவைக்கப் போகும் மனநிலையோடே புத்தகத்தினுள் மூழ்கினேன்... 

நாகமணி எனும் எதிர்பாலினத்தவரிடையேயான தனது உரையாடலை சொல்லும் ஆசிரியர் நமது ஆழ்மனதுடனும் பேசுகிறார். எதிர்பாலினத்தவரிடம் எப்படிப் பழக வேண்டும், எந்தளவு முன்னெச்சரிக்கையாய் நடந்து கொள்வது அவசியம் என எதோ ஒரு வகையில் நம்மிடம் அளவளாவுகிறார். வாசகனுக்கும் தன் சிறந்த பழக்கவழக்கத்தின் மூலம் பாடமெடுக்கிறார்... 

எனது அம்மா பாலியல் தொழிலாளி; என்று நிமிர்ந்த பார்வையும் கலங்கிய கண்களுடன் நாகமணி சொல்லும் இடம் ஒரு நிமிடம் நம்மையும் அவ்விடம் விட்டு நகர விடாமல் தான் செய்கிறாள்... 

தன் அம்மாவைப் பிரிந்து வந்து ஜெயித்த நாகமணி தன் அம்மாவைப் புரிந்து கொள்ளும் தருணம் அம்மா உலகில் இல்லை என்பது வேதனை... 

ஜெயித்த ஒரு பெண்ணின் வாழ்வின் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை அறுதியிட்டுக் கூறுவது அரிது... 

ஆனால் தோற்றுப்போன ஒரு பெண்ணின் பின்னால் நிச்சயம் ஒரு ஆண் தலைகுனிந்தபடியே நிற்கிறான்... 

அதையே நாகமணி மற்றும் அவள் அம்மாவின் கதை ஆண்சமூகத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறது... 

நாகமணிக்கு அவள் அம்மா எழுதிய நீண்ட கடிதம் கதையின் உயிர்; படிப்பவரை நெகிழச் செய்யும் உரை அது... 

www.freetamilebooks.com எனும் இத்தளத்திலிருந்து இப்புத்தகத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வாய்ப்பு கிடைத்தாலல்ல வாய்ப்பை உருவாக்கிப் படியுங்கள்... 

நிச்சயமாகச் சொல்லலாம் நாகமணி மற்றும் அவள் அம்மா வாழ்க்கை... 

சிலரது நெஞ்சைத் தொடும் 
சிலரது நெஞ்சைச் சுடும்... 

ஒரு எழுத்தாளனால் மட்டுமே தான் கண்டது, தான் ரசித்தது, தன் கற்பனை, தன்னைக் கவர்ந்தது என எதையோ ஒன்றை அடுத்தவருக்குப் பயன்படும்படியாக அடுத்தவர்கள் தன்னை மறந்து, தன் கவலை மறந்து, அதை ரசிக்கும் படியாக, அதை உணரும்படியாக, அதிலிருந்து தன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினையை எடுத்துக்கொள்ளும் படியாகச் செய்ய வைக்க முடியும். அப்படிப்பட்ட ஆச்சரியமூட்டும் எழுத்தாளராக உங்களுக்கென் சிரம்தாழ்ந்த நன்றிகள்... 

ஒவ்வொரு புத்தகமும் படித்து முடிக்கும் தருணம் நெஞ்சு இனிக்க வைக்கும் அல்லது நெஞ்சு கனக்க வைக்கும். இப்புத்தகமோ வேகமாக வாகனத்தில் சாலையில் செல்கையில் கோரவிபத்தொன்றை கண்டு கை கால் நடுங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடர்வோமே அப்படியொரு அனுபவத்தை ஒத்து இருந்தது நாகமணியின் கதையைத் தொடர்ந்து அடுத்தப் பகுதியாக "போதிமரத்தை" படிக்கத் துவங்குகையில்... 

ஒரு கதையோ, கட்டுரையோ, கற்பனையே என எதுவாக இருந்தாலும் அங்கே அதைச் சொல்லும் எழுத்தாளன் மறைந்து அக்கதாப்பாத்திரங்களோ, அக்காட்சிகளோ அல்லது சொல்லும் விசயமோ மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுமாயின் அங்கே அந்த எழுத்தாளன் ஜெயிக்கிறான். ஜோதிஜி சாரும் ஜெயித்துகொண்டே இருக்கிறார் ஒவ்வொரு முறையும்... 

"போதிமரம்" இந்தத் தலைப்பே எத்தனை வலிது. புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போலத் தனக்கு ஞானமும் தன் தேவதைகளான தேவியரிடமிருந்தே கிடைக்கிறது என்பதைச் சொல்லும் தலையாயத் தலைப்பு... 

தன் இயல்பு மாறாத எளியக் குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய மூன்று தேவதைகளான தேவியரிடையே தான் படும் பாட்டையும் அவர்களிடமிருந்து கிடைக்கும் அள்ள அள்ளக் குறையா அன்பையும் எளிய மொழியில் அழகு நடையில் சொல்கிறார். தலைமுறை இடைவெளியைச் சொல்ல தன் அப்பாவுடன் தனது நினைவலைகளையும் தனது மகள்களுடன் தனது சுகமான அனுபவத்தை நம்மிடம் சுவையாகப் பகிர்ந்து கொள்கிறார்... 

வாசகர்கள் சிலர் இவரைப் பார்த்துப் பொறாமைப் படக்கூடும்; சிலர் எப்படிக் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதைப் படிக்கக் கூடும். தன் எழுத்தினூடே தன் அனுபவத்தில் கிடைத்ததைத் தன் வாசகனுக்குச் சொல்வது தானே எழுத்தாளனின் கடமை. ஒரு எழுத்தாளனாய் தன் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் ஜோதிஜி திருப்பூர்... 

சில புத்தகங்களைப் படிக்கையில் மட்டும் இதை எழுதினவரை ஒருமுறையேனும் பார்த்துவிடும் ஆசைவருவதுண்டு இந்தப் போதிமர தொடரைப் படித்து முடிக்கையில் இக்கதையில் நமை கொள்ளை கொள்ளும் அப்பாவுக்குப் பாடம் சொல்லும் தேவியர்களையும் பார்த்துவிடும் ஆசை வந்ததை மறுப்பதற்கில்லை... 

"என்னைப் பற்றி" என்ற தலைப்பின் கீழ் தனது சொந்த குடும்ப வரலாற்றுத் தேடலை மிக அழகாகத் தனக்கே உரிய பாணியில் சுவைப்படச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இதைப் படித்தவர் மனதில் தங்களது குடும்ப வரலாற்றையும் தேடும் எண்ணம் துளிர்விடும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் இப்புத்தகத்தைப் படித்த பலர் தேடியிருக்கக்கூடும்... 

கையிலெடுத்த புத்தகத்தை ஒற்றை மூச்சில் படித்து முடிக்க வைப்பது தானே ஒரு எழுத்தாளனின் வெற்றி. ஒரு எழுத்தாளராய் வாசகனான எனை நீங்கள் வென்றிருக்கிறீர்கள். எப்போதும் உங்களுக்கெனப் பிரியமும் நன்றியும்... 

இப்புத்தகம் என் கைக்குவர காரணமான ebook மின்னூல் குழுமத்திற்குமென் சிரம் தாழ்ந்த நன்றிகள். கடல் கடந்த தேசத்தில் இருந்துகொண்டும் சிறந்த இப்படிப்பட்ட படைப்பை படித்து ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு உங்கள் தன்னலமற்ற சேவையே காரணம். நீங்கள் சத்தமின்றித் தமிழுக்குச் சிறந்தவொரு தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள். தலைமுறை தாண்டியும் உங்கள் உழைப்பு நிலைத்து நிற்கும். பிரதிபலன் பாரா உங்கள் உழைப்பு அப்போதும் பேசப்படும். 

நீங்கள் சேர்த்து வைப்பது வெறும் புத்தகங்களையல்ல, உங்கள் சந்ததிகளுக்குப் புண்ணியத்தையும் தான்... 

புத்தக ஆசிரியரான ஜோதிஜி சாருக்கும், இக்குழுமத்திற்கும் என் நன்றியும் வணக்கமும்... 

நேரம் இருப்பவர்கள் படியுங்கள் சிறந்தவொரு படைப்பை ரசித்ததாய் நீங்களும் உணர்வீர்கள்... 

அன்புடன், 

H. ஜோஸ்... 

No comments:

Post a Comment

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.