அஸ்திவாரம்

Wednesday, July 03, 2013

நாலும் புரிந்த நாய் வயசு

ஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக் கூட வில்லாக வளைத்து விட முடியும் என்று நம்ப வைக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கை ததும்பி வழியும். ஏறக்குறைய கடலை கரையோராம் நின்று ரசிக்கும் மனப்பாங்கு. 

ஆனால் கடலில் இறங்கி உள்ளே நுழைவதற்குள் முப்பது வயது டக்கென்று வந்து விடும். வானம், கடல், அலைகள் என்று ரசிப்பதற்காக இருந்த அத்தனையும் அப்படியே மாறி கணக்குகளின் வழியே ஒவ்வொன்றையும் யோசிக்கத் தோன்றும். நாம் சம்பாரிக்க என்ன வழி? என்ற அலை தான் மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும். .

அப்போது நம்மிடமிருந்த ரசனைகளை ஒரு அலை இழுத்துச் செல்லும்.  மிச்சம் மீதியிருந்த ஆர்வத்தை மற்றொரு அலை அலைகழிக்கும்.  கொஞ்ச கொஞ்சமாக நம்முடைய குழந்தைதனம் மாறியிருப்பதை அப்போது தான் உணரத் தொடங்குவோம்.  ஆனாலும் இரவு பகலாக ஏதொவொன்றுக்காக மனம் கெஞ்சிக் கொண்டேயிருக்கும்.

அந்த அலை மட்டும் இடைவிடாமல்  நம்மை தாக்கிக் கொண்டேயிருக்கும். . 

இந்த சமயத்தில் தான் கணக்கில்லா கணக்கு அலை நம்மை இழுத்துச் செல்லும். அந்த அலை காட்டும் வழியில் நம் பயணம் தொடங்கும்.  அந்த பாலபடங்களே நம்மை வழிநடத்தும். கலையார்வம், கலாரசனை அத்தனையும் அகன்று "இனி நம் தலையை காப்பாற்றிக் கொண்டால் போதும் " என்ற நிலையில் திருமணம் என்றொரு படகு கிடைக்கின்றது.  

மூச்சு வாங்கி, மூச்சடைந்து இனி நாம் மூழ்கி விடுவோமோ என்ற சூழ்நிலையில் இது நமக்கு ஆசுவாசத்தை கொடுக்கும்.  பல சமயம் தள்ளு காற்று இழுத்துக்கொண்டு செல்ல பயணம் சுகமாகவே இருக்கும்.  எதிர்காற்றில் பயணம் தொடங்கும் போது உள்ளூற இருக்கும் சக்தியின் ரூபமே நமக்கு புரிபடத் தொடங்கும். படகில் குழந்தைகளும் வந்தமர "பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்" என்ற புலம்பல் அலை நமக்கு அறிமுகமாகின்றது.

ரசனையான விசயங்களும், ரசிக்க வேண்டிய தருணங்களும் நம்மை விட்டுச் முழுமையாக சென்ற பிறகே கணக்குள் இப்போது துடுப்பாக மாறுகின்றது. வலிகளே வாழ்க்கையாக மாறும்.

நாற்பது வயதை கடந்தவர்களும், கடந்து அதற்கு மேலே வந்தவர்களும் இதனை உணர்ந்தே இருப்பார்கள்.  

நாற்பது வயது தொடங்கும் போது மூச்சு முட்டும். பலருக்கும் இந்த வாழ்க்கை போராட்டங்கள் பழகிப் போயிருக்கும்.

 "விதி வலியது" என்ற அசரிரீ குரல் வானத்தில் இருந்து ஒலிக்கும்.  செக்கு மாட்டுத்தனமாக மாறியிருப்போம். ஆனாலும் நாற்பது வயதை கடந்து சாதித்தவர்களும்  இங்கே அதிகம். 

சாதனைகள் என்றதும் இது வெறுமனே பணம் சார்ந்ததாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம்.  எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பவர்கள் மறு பக்கம். 

விரும்பியபடி வாழ்கின்றேன் என்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் போன்றவர்களால் இந்த வலையுலகம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. மண்டைச்சூடு நிறைய உள்ளவர்களால் மட்டும் வலையில் ஏதோவொன்றை எழுத முடிகின்றது..

இங்கே ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் வழித்தடங்கள்.

எது சரி? எது தவறு? என்று இன்னமும் எவராலும் அறுதியிட்டு கூறமுடிவதில்லை.

பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும், மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும், குழந்தைகளை உயிராக நேசித்தாலும் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது.

இதுவே தான் எழுதுவதற்கான காரணங்களையும் உருவாக்கின்றது.  வாய்ப்பு கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது ஆச்சரியமான திறமைகள் வெளியே தெரிய வருகின்றது. தங்கள் ரசனைகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்பவர்கள் சுகவாசியாகவும் மாறிவிடுகின்றனர்..

காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரை செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டும் வருகின்றது.

பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தை காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை.

நாற்பது வயதில் தன் விருப்பங்களை விட தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்கு சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது.  இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மை கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

அதைத்தவிர வேறொன்றை பேசுவதும் நினைப்பதும் வேலையத்த வெட்டி வேலை என்று அடையாளம் காட்டப்படுகின்றது.

இது இந்திய சூழல் மட்டுமல்ல. வளரும் நாடுகளில் போராடித்தான் தங்கள் இடத்தை வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கை என்பது சுற்றியுள்ள ரசனைகளை  ரசிப்பதற்கல்ல. பிழைத்திருப்பதற்கு மட்டுமே.. 

இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு நாம் அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம். இந்த சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வாழ்கின்றோம்.  இந்தியாவில் வேலைகேத்தத படிப்பில்லை. படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் பிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடு போல மாறி விடுகின்றோம்.

அவரவர் சார்ந்த துறையில் எத்தனை பேர்களுக்கு என்னவிதமான திருப்தி கிடைத்தது? என்பதை யோசிக்கும் போது இறுதியில் ஒவ்வொருவருக்கும் மிஞ்சுவது "நாமும் இந்த உலகில் வாழ்ந்துள்ளோம்" என்பதே. நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு போட்டிகளும் பூதாகரமாக நமக்குத் தெரிய காலப் போக்கில் பந்தயக் குதிரையாக மாறி விடுகின்றோம்.

நமக்கான விருப்பங்கள் அத்தனையும் பின்னுக்குப் போய் விடுகின்றது. இலக்கில்லா பயணம் போல இந்த வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது.

எத்தனை பேசினாலும் ஒவ்வொருவரும் "பொருள்வாதி"களாகவே வாழ்கின்றோம். அதுவே சரியென்று சமூகம் உணர்த்துவதால் அவ்வாறே வாழ ஆசைப்படுகின்றோம்.  நம் விருப்பங்கள், மனைவி,, மகள் மகன் என்று தொடங்கி இந்த ஆசைகள் விரிவடைந்து கொண்டே போகின்றது. இன்று பேரன் பேத்திகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்று விரிவடைந்து வந்து விட்டதால் பறக்கும் மனிதர்களாகவே மாறிவிடுகின்றோம். 

ரசிக்க நேரமில்லாமல் ருசிக்க விருப்பமில்லாது இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏக்கத்தை சுமந்து ஏக்கத்தோடு வாழ்ந்து "ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்" என்கிற ரீதியில் இந்த வாழ்க்கை முடிந்தும் போய் விடுகின்றது.

மனிதர்களின் நாற்பது வயதை நாய் வயது என்கிறார்கள். கவ்வியிருப்பது எலும்பென்றும் தெரிந்தும் அதையே தான் தூக்கிக் கொண்டு அலைகின்றோம். கவலைகள் நம்மை அழைத்துச் செல்கின்றது. அதுவே நம்மை உருக்குலைக்கவும் செய்கின்றது.

அறுபது வயதை மற்றொரு குழந்தை பருவத்தின் தொடக்கம் என்கிறார்கள். அறுபது வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழும் பாக்கியம் அமையப் பெற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். இயற்கை கொடுத்த வரம் அல்லது இயல்பில் உருவாக்கிக் கொண்ட பழக்கவழக்கம் தந்த பரிசு.

மனிதனுக்கு ரசனை எந்த அளவுக்கு முக்கியமோ அதை அனுபவிக்க ஆரோக்கியம் அதை விட முக்கியம்.  ஆனால் தற்போது கண்களை விற்றே சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

லாபமோ? நட்டமோ? தேவையோ? தேவையில்லையோ

நானும் எனது தடங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வலைபதிவில் எழுதி வந்துள்ளேன்.

இதற்கு என்ன தேவை? என்ற நினைப்பு இல்லாமலேயே கற்றதையும் பெற்றதையும் கணக்கில்லாமல் எழுதியுள்ளேன்.

இந்த பயணத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரும் என்னை நகர்த்தி அழைத்து வந்துள்ளார்கள். சொல்ல முடியாத அன்பை ஏதோவொரு வழியில் எனக்கு காட்டியிருக்கின்றார்கள்.  "பொறுத்தாள்வார் இவன் எழுத்தை படிப்பார்"என்று புலம்பியிருக்கின்றார்கள்.என்னை வழி நடத்தி கற்றுத் தந்தும் இருக்கின்றார்கள்.

திரட்டிகள், மற்ற சமூகவலைதளங்கள் என் எழுத்துக்களை பலரின் பார்வைக்கும் கொண்டு சேர்க்க உதவியது. இதைப் போல தொடக்கம் முதல் தனது தளங்களில் எனது தளத்தை இணைத்து வைத்து பலரின் பார்வைக்கும் கொண்டு சேர்த்த நட்புகளுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். என் பார்வையில் பட்ட சில தளங்களை இங்கே எழுதி வைக்கின்றேன்.

வலைபதிவுகளில் எழுபவனுக்கு திரட்டிகள் பாலமாக இருந்தாலும் மகுடம் சூட்டிய பலரும் காலப்போக்கில் காணாமல் போய் விடுகின்றார்கள். நன்றாக எழுதத் தெரிந்தவர்களும் அவரவர் சூழல் காரணமாக எழுதுவதை நிறுத்திவிடவும் செய்கின்றார்கள். ஆனால் "இவன் கொஞ்சம் ஒழுங்காக எழுதுகின்றான். படித்துப் பாருங்கள்" என்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பவர்களும், இவன் எழுத்தை நாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பி தனது தளத்தில் இணைத்து வைத்திருப்பவர்கள் மூலமே இங்கு பலருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது. 

இங்கு அத்தனை பேர்களுக்கும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்கின்றது.  ஆனால் அடையாளம் காணப்படாமல் ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம். அவரவர் உழைப்பை மீறி சில சமயங்கள் இங்கே அதிசயங்கள் நிகழ்வதுண்டு. அதில் நானும் ஒருவனாக இன்று வரையிலும் தாக்குப்பிடித்து நிற்பதற்கு காரணம் நண்பர்களே.

நான் எழுதத் தொடங்கிய முதல் வாரம் முதல் இன்று வரையிலும் விமர்சனத்தின் வாயிலாக தொடர்ந்து என்னைத் தொடரும் ஒரு நட்பு  துளசிதளம்.

ஆதரித்த, ஆதரிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது. 

எழுத்தும் வாசிப்பு கலையும் நம்மை நமக்கே உணர்த்தும்.

பல சமயம் நம் ஆயுளையும் அதிகப்படுத்தும்.

இடைவெளி விட்டு மீண்டும் பேசுவோம்.

                                                           -----------0000---------------------
பதிவுலகிற்கு புதிதாக வருகைதருபவர்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் ஒரே சமயத்தில் பயனளிக்கும் வகையில் நான் படித்த, ரசித்த, பார்த்த,சில வலைபதிவுகளுக்கு இங்கே இணைப்பு தந்திருக்கிறேன் என்று சொல்லியுள்ள பதிவர்கள்

இந்த தளத்தை மட்டும் சேமித்து வைத்துக் கொளுங்கள். ஒவ்வொருவர் எழுதிய கடைசி மூன்று தலைப்புகளும் தெரியும். நேரம் மிச்சம்.

மனம் சார்ந்த எண்ணங்களை தொடர்ந்து எழுதி வரும் அறிவே தெய்வம்

திருப்பூரிலிருந்து எழுதி வரும் அனைவருக்கும் உள்ள பாலம் சேர்தளம்

சிறுகதை வடிவத்தில் அதிக கவனம் செலுத்தும் மனசு

தன்னைப்பற்றி இந்த அளவுக்கு ஒருவரால் வெளிப்படையாக எழுதமுடியுமா என்று என்னை ஆச்சரியப்படுத்திய ரா.சிவானந்தம்

எழுதுவதை விட அதிகம் வாசிப்பதன் ருசி அறிந்தவர் நாக இந்து

காலஞ்சென்ற பட்டாபட்டி தான் வாசிப்பதற்காக உருவாக்கிய தளம்

வலைபதிவுகள் படிக்க அறிமுகமாகி குறுகிய காலத்தில் எழுதவும் கற்றுக் கொண்ட  வண்ணத்துப்பூச்சி

நானும் மதுரைக்காரி தான் என்று சொல்லும் ஆனந்தி

திருப்பூரில் உருவான உறவோடு என்ற தளம்

வழக்குரைஞர் தொழிலில் இருந்து கொண்டு திருந்து (அ) கத்துக்க என்று சொல்லும் நண்டு @ நொரண்டு

தான் வாசிப்பதற்காகவே உருவாக்கிய சாமிகண்ணன் தளம். 

சூர்யா தான் வாசிப்பதற்காக உருவாக்கி வைத்துள்ள தளம்

எழுதுவதை விட வாசிக்க சந்துரு உருவாக்கிய தளம்

மறக்க முடியாத நினைவலைகளுக்காக கவிப்ரியன் உருவாக்கிய தளம்

வாசிப்பின் பலதரப்பட்ட எண்ணங்கள் கொண்ட விக்கியின் அகடவிகடங்கள்

எழுதுவதை விட வாசிப்பின் ருசி அறிந்தவர். பிறமொழிபடங்கள் தமிழிலில்

ஈழம் சார்ந்து எழுதுபவர்களின் சங்கமம்

வரலாறு, அரசியல் மற்றும் அறியாத புத்தகங்கள் குறித்து திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒலி நாடா சேமிப்பதற்காக இந்த தொகுப்பு

தான் விரும்பும் பதிவுகளை படிக்க சந்தோஷ் உருவாகியுள்ள தளம்

34 comments:

  1. சென்று வாருங்கள்..... நீங்கள் என்னைத் தொடர்கிறீர்களோ இல்லையோ நான் தொடர்ந்து வருகிறேன் இந்தியா வந்தால் எனது பள்ளி மற்றும் கல்லூரி நண்பனை சந்திக்க திருப்பூர் வருவேன், முடிந்தால் நாம் சந்திப்போம்... வாழ்க வளமுடன்..

    கூடியச் சீக்கிரத்தில் நானும் பதிவிடுவதை நிறுத்திவிடுவேன் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவுகளை ஒவ்வொரு முறையும் படிக்கும் போது நான் நினைத்துக் கொள்வதுண்டு. வரைபடக்கலையில் நல்ல திறமை உள்ளவர் ஏன் படக்கதை போல ஒரு சிறுகதை பாணியில் படங்களின் வாயிலாக நகைச்சுவையாக படைக்கலாமே என்று? அந்த திறமை உங்களிடம் நிறைய உள்ளது. டைம் பாஸ் இதழில் ஆனந்த விகடன் இதழில் இது போன்ற கதைகள் கடைசி பக்கத்தில் வருகின்றது. முயற்சித்துப் பாருங்கள். பதிவுலகில் எவரும் இதுவரை இதை முயற்சிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

      Delete
  2. இடுகையை வாசித்துக்கொண்டே வந்தவளுக்கு ஒரு ஷாக்:-)

    புரிகிறது. மற்ற வேலைச்சுமைகள் அழுத்தும்போது கைகளால் எழுத நேரம் வாய்ப்பது அரிது. அப்படி நேரம் கிடைத்தாலும் உடலும் ஒத்துழைக்கணுமே!

    ஆனால் ஒன்னு மனசு மாத்திரம் நாளுக்கு 24 மணி நேரம் என்று எழுதிக்கொண்டேதான் இருக்கும், கனவிலும் கூட!

    நானும் கொஞ்சநாள் 'வனவாசம்' செய்யலாமான்னு நினைச்சுக்கிட்டுத் தானிருக்கேன்.

    குட் லக்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எந்த பிரச்சனையிலும் சிக்காமல் தன் பெயரோடு இயல்பாக எல்லா இடங்களிலும் புழங்கிக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்து வகையில் நீங்க தான். அளவீடுகளை மிகச் சரியாக கடைபிடித்துக் கொண்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்ற எடுத்துக் கொண்டால் நீங்கள் இரண்டாவது தலைமுறையோடு பயணித்துக் கொண்டு இருக்குறீங்க. ஆனால் வலையுலகில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை காணாமல் போய்விடுகின்றார்கள். அல்லது புதிய நபர்கள் அந்த இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஆரோக்கியம் ஒத்துழைக்கும் வரைக்கும் தொடர்ந்து எழுதுங்க. உங்களைப் போன்றவர்களுக்கு எழுதுவது முக்கியம். அதுவும் புதியவர்களை எந்த மனமாச்சரியம் இன்றி வாழ்த்தி வரவேற்பதும் தொடர்ந்து ஊக்குவிப்பதும் என் பார்வையில் நீங்க ஒருவர் தான் இருக்குறீங்க. நான் இந்த அளவுக்கு வந்துருப்பதே உங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதமாகக்கூட இருக்கலாம்.

      Delete
  3. முப்பது வயதுக்குள்ளும், திருமணம் ஆவதற்கு முன்னும் ஏதாவது என்னால் முடிந்த விஷயங்களை சாதிக்க விரும்பி உழைக்கிறேன், எழுதி வருகிறேன். எதுவரை வலைகள் அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சரியான வார்த்தை கார்த்திக். ஏன் எழுதுகின்றோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் நாம் எழுதித்தான் பார்ப்போமே என்று மனதில் வைத்துக் கொண்டு நேரம்கிடைக்கும் போது எழுதிக் கொண்டே இருங்க. பலருக்கும் நேரம் இருந்தாலும் இது போன்ற முயற்சிகளில் இறங்காமல் தேவையில்லாத பழக்கங்களிலும், வம்புகளிலும் சிக்குவதை தவிர்க்க இது உதவும். வாழ்த்துகள்.

      Delete
  4. பல தளங்கள் புதியவை... அறிமுகத்திற்கு நன்றி...

    நாற்பது வயது - நன்றி எனும் சொல்லை உணர்ந்த வயது...!

    நன்றி.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வகையில் பார்த்தால் நம் பெற்றோர்களைப் பற்றி யோசிக்க வைக்கும் வயது. நாம் எந்த பாதையில் போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய வயதும் கூட. உங்களுக்குத் தெரியாத வலைபதிவுகளையா நான் அறிமுகம் செய்துள்ளேன்? ஆச்சரியம் தான் தனபால்.

      Delete
  5. முன்னுரையின் ஆழமும்
    அருமையான பதிவர்களை அறிமுகம் செய்த விதமும்
    மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் தளத்தின் தொடர்வாசிப்பாளர் என்ற முறையில் உங்கள் மேல் எப்போதும் எனக்கு பெரிய மரியாதை உண்டு. ஞானாலயா தளத்தில் தங்களை இணைத்துக் கொண்டமைக்கு நன்றி.

      Delete
  6. //இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு நாம் அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம்.//

    அருமை அண்ணா...

    ரசித்து வாழ்க்கையோடு ஒன்றி வாசித்துக் கொண்டே வருகிறேன்...

    உங்கள் ரசனையில் என் தளமும்...

    நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் குமார். தொடர்ந்து எழுதுங்க.

      Delete
  7. //இடைவெளி விட்டு மீண்டும் பேசுவோம்// மற்றும் அந்த bye bye காட்டிய கையும்...

    எல்லாவற்றிற்கும் ஓய்வு தேவைதான் ஒத்துக்கொள்கிறேன்.
    பலர் ஓய்வினாலேயே ஓய்ந்து போய்விடுகின்றனர்.
    உங்களின் ஓய்வு உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கட்டும், ஜோதிஜி.
    கண்டிப்பாக மீண்டும் பேசுவோம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுதலாம். பெரிய ஓய்வெல்லாம் நமக்குத் தேவையில்லை அஜிஸ். என்ன இதுக்கு ராத்திரி நேரம் இரண்டு மணி நேரம் ஒதுக்குறோம். இல்லைன்னா போய்த் தூங்க முயற்சித்துக் கொண்டிருக்கின்ற குழந்தைகளுடன் ஒரண்டை இழுத்து அவங்க தூக்கத்தை கெடுத்து வம்பிழுத்து பூசாரியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை. இப்போது அவர்கள் எதிர்பார்க்கும் கதையின் தன்மை வெகுவாக மாறிவிட்டால் உங்களுக்கு கதை சொல்ல தெரியல்லபா என்கிறார்கள். இடைவெளி விடுவதற்கு முக்கிய காரணம் சிலர் மெதுவாக ஒவ்வொரு பதிவாக படித்துக் கொண்டு வருவார்கள். இந்த இடைவெளியில் பெரும்பாலான தலைப்புகளை படித்து முடித்து விடுவார்கள்.இது நான் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை. மற்றபடி ராத்திரி பகலாக உழைக்க பயிற்சி எடுத்தவனுக்கு ஓய்வென்பது 60 வயதுக்கு மேல தான்.
      அப்போது எழுத ஆரோக்கியம் இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் அறிமுகமாகி என் எழுத்துக்களை வரிக்கு வரி வாசிக்கும் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் அஜிஸ்.

      Delete
  8. //பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தை காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை.// மிகவும் அருமை..நல்லதொரு பதிவு..வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பெயரே ஒரு ரைமிங்காக இருக்கின்றதே. நன்றி காயத்ரி.

      Delete
  9. ##ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரை செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டும் வருகின்றது.## மனிதனின் வாழ்க்கையை சொல்லி விட்டீர்கள் இந்த வரிகளில்.

    ReplyDelete
  10. அறிமுகத்திற்கு நன்றி

    இந்த பதிவில் பல வசனங்கள் எதார்த்தத்தை பிரிதிபலிக்கின்றன. வாழ்கை அனுபவங்களை பாடமாக படித்திருப்பது தெரிகிறது.

    நீங்கள் தொடர்ந்து எழுதிவருவது எனக்கும் ஆச்சர்யமளித்தது. அது உங்களின் திறமையாக உழைப்பாக இருந்தாலும், தேவையான உடல், மன ஓய்வு கிடைப்பதன் மூலம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வரலாம். வருவீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிலருடைய விருப்பங்கள் இயல்பாக இருக்கும் போது அது பலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். அந்த வகையில் என் வலையுலக தொடர் எழுத்துக்கள் உங்களுக்கு ஒரு வேளை அதிசியமாக இருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன். மற்றபடி இதில்திறமையெல்லாம் பெரியஅளவில் இல்லை. சிலரால் அற்புதமாக பேச முடியும். சிலரால் எழுத முடியும். ஆனால் சிலர் பல பதிவுகளில் எழுதும் ஆதாரப்பூர்வமான பின்னூட்டங்களைத் தான் நான் இன்னமும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு வருகின்றேன். இவர்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

      நன்றி சிவானந்தம்.

      Delete
  11. சினிமா மாதிரி இடைவேளை...வரவேற்கிறேன்.:)

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா...
      இடைவேளை விட்டான்யா...

      சிவா வரவேற்பதை பார்த்தால் அவரது மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருக்கும்போல!

      Delete
    2. நீங்க என்ன சொன்னாலும் சிவா தப்பாக எடுத்துக் கொளள்மாட்டார்.

      சிவா

      இடை வேளை இடை வெளி இரண்டுமே நல்லது தானே.

      Delete
  12. ஓய்வு நல்லது. இன்னும் மெருகூட்டும். காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. உங்கள் தளத்தை எனது பட்டியலில் வைத்துள்ளேன். வருகின்றேன்.

      Delete
  13. "நீங்கள் தொடர்ந்து எழுதிவருவது எனக்கும் ஆச்சர்யமளித்தது. அது உங்களின் திறமையாக உழைப்பாக இருந்தாலும், தேவையான உடல், மன ஓய்வு கிடைப்பதன் மூலம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வரலாம். வருவீர்கள்." Agree with Sivanandham.

    மிகக்குறுகிய நாட்க்களாகத்தான் தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவற்றில் பிடித்த தலைப்புகளை மட்டுமே வாசித்துவிட்டு சென்றுவிடுவேன். யாருக்கும் பின்னூட்டம் இட்டதில்லை உங்களுக்குத் தவிர. நாற்பதைக் கடந்தவன் என்றதினாலும் ஒரே துறையில் தங்களைப்போலவே
    இருக்கிறவன் என்பதாலும் டாலர் நகரத்தைப் படித்துக்கொண்டிருப்பதாலும் ஓரளவு தங்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன், ஆழமான பகிர்வுக்கு நன்றி. வாழ்கவளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பூரில் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் உங்கள் பார்வையில் டாலர் நகரம் விமர்சனத்தை மின் அஞ்சலில் அவசியம் எதிர்பார்க்கின்றேன். நன்றி விஸ்வா,

      Delete
  14. முதல் பகுதியில் என் போன்றவர்களின் மனநிலையையே அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    //பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும், மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும், குழந்தைகளை உயிராக நேசித்தாலும் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது \\
    // காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரை செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டும் வருகின்றது.

    பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தை காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை.

    நாற்பது வயதில் தன் விருப்பங்களை விட தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்கு சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மை கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. \\

    இடைவெளி விட்டு மீண்டும் நீங்கள் வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். மீண்டும் ஒரு முறை என்னுடைய வலைப்பதிவை உங்களுக்கு பிடித்த பதிவாக அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி ஜோதிஜி!

    ReplyDelete
    Replies
    1. என் போன்றவர்கள் அல்ல. நம்மைப் போன்றவர்களின் பொதுவான வாழ்க்கை அது தானே. தொடர்ந்து எழுதுங்க. நான் சொன்ன கோரிக்கையை மறந்து விட வேண்டாம்.

      Delete
  15. முதன் முதலில் டாலர் நகரம் இணையத்தில் வாசித்தபோது எந்தமாதிரி உணர்ந்தேனோ அதே உணர்வு இப்பொழுதும் .இடைவெளி இனிதாக இருக்கட்டும் .

    ReplyDelete
  16. Nice article, good information and write about more articles about it.
    Keep it up

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.